படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தான் வீரா. மணி நள்ளிரவு பன்னிரண்டை தாண்டி சென்றுக்கொண்டிருந்தது.
அருகே எவ்வித சலனமும் இன்றி நிம்மதியாய் உறங்கிக்கொண்டிருந்த அஷ்டாவை நொடிக்கொருதரம் பார்வை தழுவ, அவளது நித்தரை அவனை சலிப்படைய வைத்தது.
இரவு படுக்கைக்கு வந்தது முதல் ஒருவித எதிர்ப்பார்ப்புடனே காத்திருந்தான். பன்னிரண்டு மணியடிக்க, தன்னை எழுப்பி ‘பிறந்தநாள் வாழ்த்து’ சொல்வாள் என, அவன் காத்திருக்க, பகல் பன்னிரண்டு அடித்தாலும் இவள் எழுந்து வாழ்த்த போவதில்லை என புரிந்து போனது அவனுக்கு.
முதலில் கூட, தூங்குவதாக நடித்து உண்மையிலும் அசந்து தூங்கிவிட்டாளோ? அல்லது பன்னிரெண்டுக்கு வைத்த அலாரம் வேலை செய்யவில்லையோ என அல்ப்பாசையில் அவன் அவனை சமாதானம் செய்துக்கொண்டு காத்திருந்தான் தான்…
நேரம் செல்ல செல்ல தான் அவனுக்கு விளங்கியது. அவளுக்கு அவனை வாழ்த்தும் எண்ணமே இல்லையென! அதைவிட, அவனுக்கு அன்று ‘பிறந்தநாள்’ என்றுக்கூட அவள் அறிந்திருக்கவில்லை என்பது அவன் ஏமாற்றத்தை கிளறிவிட்டிருந்தது.
இருப்பினும், ‘இத்தனை வருஷம் நடுராத்திரி ‘விஷ்’ எல்லாம் நீ எதிர்ப்பார்த்தியா என்ன? இப்ப மட்டும் என்ன? காலைல எழுந்ததும் வாழ்த்து சொல்லுவாங்க… பேசாம படு’ என தன்னைத்தானே சமன் செய்துக்கொண்டு உறங்க முயன்றான்.
திருமணத்திற்கு பின் வரும் முதல் பிறந்தநாள்.
கடந்த வருடம் வரை அவனது பிறந்தநாள், ஒரு கோவில் அர்ச்சனையிலும், அன்னையின் கையால் கிடைக்கும் பால் பாயாசத்திலும் திருப்தியாய் முடிந்து விடும். இப்போதோ மனைவி ஒருத்தி வந்த பிறகு அவன் மனம் விதவிதமாய் எதிர்ப்பார்த்து ஆசை வளர்த்திருந்தது.
ஏக்கத்துடனே இரவும் கழிய, பொழுது புலர்ந்து அன்றைய நாளை துவங்கி வைத்தது.
சமையலை முடித்துவிட்டு பூஜையறையில் விளக்கேற்றி கண்மூடி நின்றிருந்தான் வீரா.
மனைவி பரிசளிப்பாள் என்ற குருட்டு நம்பிக்கையில் புது துணி கூட எடுத்திருக்கவில்லை அவன்.
எப்போதும் வாங்கி வைக்கும் விஜயா கூட, இனி அது மனைவி வேலை என ஒதுங்கிவிட்டதால், எப்போதும் அணியும் உடையிலேயே இருந்தான் வீரா.
அஷ்டா… குளித்து முடித்தவள், “ஐயோ செம்ம பசி!” என சொல்லிக்கொண்டே வர, மெல்லிதாய் திருநீரை நெற்றியில் கோடிழுத்தவன், “சாப்பிடலாம் வாங்க” என்றான்.
அவன் வரும்முன்னே அங்கு இருந்ததை எல்லாம் தட்டில் எடுத்து போட்டுக்கொண்டு அமர்ந்துவிட்டாள் அஷ்டா.
அவனும் தனக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு அமர, ‘கருமமே கண்; சோறே சொர்க்கம்’ என தலைநிமிர்த்தாது அவள் உண்ண,
“பாயாசம் இருக்கு! தரவா?” என்றான் வீரா.
“பாயாசமா? எனக்கு ரொம்ப பிடிக்கும்!” என வாங்கிக்கொண்டவள், ஒரு மிடறு குடித்துவிட்டு, “ஷப்பா! செம்ம டேஸ்ட்டு!!!” என சப்புக்கொட்டினாள்.
“எதுக்கு பாயாசம் செஞ்சீங்க? சும்மாவா? இல்ல எதுவும் விசேஷமா?”
அவளை நிமிர்ந்துப்பார்த்தவன், “நீங்க தான் கண்டுப்பிடிக்கனும்!” என்றதோடு எழுந்து சென்றுவிட, “அட, அப்போ என்னவோ விசேஷம் தான்! என்னனு சொல்லுங்களேன்” என பின்னோடு சென்றாள் அஷ்டா.
தட்டை கழுவி வைத்தவன், “நான் சொல்லல! நீங்களே கெஸ் பண்ணுங்க” என்றுவிட்டு செல்ல,
“அச்சோ! என்னன்னு சொல்லிடுங்க! இல்லன்னா எனக்கு தலையே வெடிச்சுடும்” என்றாள்.
மிதமான புன்னகையை மட்டுமே பதிலாய் கொடுத்தவன் நகர்ந்துவிட, “அப்போ சொல்ல மாட்டீங்க?” என்றாள் உர்ரென!
‘மாட்டேன்’ என்பது போல அசைந்தது அவன் சிரம்.
“ஹும்! நானே கண்டுப்பிடிச்சுக்குறேன்” வீராப்பாய் சொன்னாள். அதற்கும் அவனிடம் சிரிப்பு மட்டுமே!!!
சற்று நேரத்திலேயே, “வீட்டுல பத்திரமா இருங்க! நான் பேங்க் வரைக்கும் போறேன்! எப்போ வருவேன்னு தெரியாது… அதனால எனக்காக வெயிட் பண்ணாதீங்க!” என்றுவிட்டு கிளம்பிவிட்டான்.
ஆடிட்டரிடம் பணம் தொடர்பாக பேசியதற்கு, வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து பணம் பெற்றுக்கொள்ளலாம் என சொல்லியிருக்க, அதை அன்னையிடம் தெரிவித்துவிட்டு, அதுதொடர்பாக வங்கிக்கு சென்றிருந்தான்.
அவனுக்கு முன்னே அங்கு காத்திருந்த அவனது ஆடிட்டர், அவருக்கு தெரிந்தவரை வைத்து கிட்டத்தட்ட அனைத்து வேலைகளையும் முடித்திருந்தார்.
வீரா சென்று விண்ணப்பத்தில் கையெழுத்திட்டால் போதும் எனுமளவுக்கு அவர் முடித்திருக்க, இறுதியாய் வீராவின் ‘பேன் கார்ட்’ நகல் அதில் கட்டாயம் இணைப்பட வேண்டும் என சொன்னனர்.
அன்று என பார்த்து அவன் தன் பர்சை வீட்டிலேயே வைத்துவிட்டு வந்திருக்க, அஷ்டாவுக்கு அழைத்தான்.
“என்னோட பர்ஸ் டேபிள்ள வச்சுட்டே வந்துட்டேன்! அவசரமா ‘பேன் கார்ட்’ தேவைப்படுது! நீங்க அதை ஒரு போட்டோ எடுத்து அனுப்புறீங்களா? நான் இங்க செராக்ஸ் எடுத்துக்குறேன்” என்றான் அவளிடம்.
உடனே சரியென்றவள், அவன் கேட்டதை செய்ய, ‘நன்றி’ என்ற குறுஞ்செய்தியோடு முடித்துக்கொண்டான்.
கையில் இருந்த கார்டை மீண்டும் பர்சில் வைக்கப்போன அஷ்டா, அதில் இருந்த அவன் புகைப்படத்தை பார்த்து சோபையாய் நகைத்தாள்.
அது அவனது இருபதுகளின் தொடக்கத்தில் எடுக்கப்பட்டது போலும். மெல்லிசான மீசையும், ஒட்டியிருந்த கன்னமும், நெற்றி மூடிய சிகையும் என பார்க்கவே வித்தியாசமாய் இருந்தான்.
‘வீ…ர…கேசரி!!!’ அதிலிருந்த அவன் பெயரை உச்சரித்து பார்த்தாள். தானாய் ஒரு நாணம் கன்னங்களில் ஏறிக்கொள்ள, அப்படியே அதை முழுதாய் பார்த்தவளுக்கு, அதில் போட்டிருந்த தேதியை கண்டதும் மனம் ‘சுருக்’கென்றானது.
“அச்சோ! இன்னைக்கு அவர் பர்த்டே’வா?” மீண்டும் ஒருமுறை உற்று பார்த்தாள்.
அதே தான்!!!
இன்று அவருக்கு பிறந்தநாள் தான்!!!
‘ஓ! அதனால் தான் இன்று பாயாசமா?’
‘ப்ச்! ஒரு வார்த்தை கூட சொல்லல பாரேன்?’
‘இன்னைக்கு வரட்டும்! நானே கண்டுப்பிடிச்சதை சொல்லி அவர் மூக்கை உடைக்குறேன்!!!’
அப்போதிருந்தே உற்சாகமாய் அவன் வருகைக்காக காத்திருக்க துவங்கினாள்.
வங்கியில் எதிர்ப்பார்த்த வேலை முடிந்தது என்றாலும், கடன் தொகை கைக்கு வர எப்படியும் காலம் எடுக்கும் என்று சொல்லியிருந்தனர்.
பரசுராம் அங்கிளிடம் பணம் கிடைக்கும் வரை காத்திருக்க சொல்ல அவனுக்கு விருப்பமில்லை. அதனால், வட்டி அதிகம் போனாலும் சரி என்று வெளியிடத்தில் கடன் வாங்கித்தர தெரிந்தவர்களிடம் கேட்டிருந்தான் வீரா.
தொகை பெரிது என்பதால் கேட்டதும் சட்டென எடுத்து தர இயலாது, பணம் கிடைக்க நேரம் எடுத்தது.
எப்படியேனும் பணத்தை பெற்றுக்கொண்டு வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற முடிவோடு, ‘சிறிது நேரம் காத்திருக்க சொன்ன ஏஜென்சி’ ஒன்றில் அமர்ந்திருந்தான் வீரா.
மாலை நேரம் தொட்டதும், அவசரமாய் ஒரு குளியலை போட்டவள், இளம்பச்சை நிற நெட் சாரீ ஒன்றை எடுத்து உடுத்திக்கொண்டாள்.
‘உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி’ என அந்த புடவை இருக்க, கட்டியபின்னே கண்ணாடியில் அவளை காண, அவளுக்கே வெட்கம் வந்தது.
கல்லூரியில் படிக்கும்போது தோழிகளுடன் வெளியே சென்றிருக்கையில் ‘இதையெல்லாம் வாங்கி கட்டுறதுக்கு எவளுக்குடி தைரியம் இருக்கு?’ என அவர்கள் பேசிக்கொள்ள, அவர்களிடம் ‘கெத்து’ காட்ட வேண்டி வீம்புக்காய்,
‘நான் கட்டுவேனே!’ என சவால் விட்டு வாங்கியது.
வாங்கியது மட்டுமே உண்மை! அதன்பின்னே அதை தொட்டுக்கூட பார்த்ததில்லை. தூக்கி எறியவும் மனமில்லை.
இன்று எதை கட்டலாம் என பீரோ திறந்தபோது, அடியில் இருந்த புடவை தலைநீட்டி பார்க்க, ஒரு வேகத்தில் எடுத்து கட்டிவிட்டாள்.
‘இதில் என்னை பார்த்தால் அவர் என்ன நினைப்பார்?’
‘பார்ப்போம்! இன்னைக்காவது ரெண்டுல ஒன்னு முடிவாகட்டும்!’ என நினைத்துக்கொண்டு, லேசான அலங்காரத்துடன் காத்திருந்தாள்.
இரவு மணி ஒன்பதை நெருங்கும் நேரம் அலுத்துப்போய் களைப்புடன் வீட்டிற்குள் நுழைந்தான் வீரா. கண்ணை கட்டிக்கொண்டு வந்தது அவனுக்கு.
நிதானமாக பேசக்கூட தெம்பின்றி, “கோச்சுக்காம ஒரு கிளாஸ் பால் மட்டும் சூடா தரீங்களா? நான் குளிச்சுட்டு வந்துடுறேன்” என்றவன், நேரே குளியறைக்குள் நுழைந்துக்கொண்டான்.
அவன் வருவான், தன்னை கண்டதும் வாயை பிளப்பான் என கனவு கண்டுக்கொண்டிருந்தவளுக்கு ‘ச்சை’ என்றானது.
‘நிஜமாவே இவருக்கு பிரச்சனை தான் போல! நானும் ஒரு வாரமா எப்படி எப்படியோ இருந்து பாக்குறேன்! இவர்க்கிட்ட எந்த மாற்றமும் தெரியலையே!? இன்னைக்கு என்னை பார்த்துக்கூட கண்டுக்காம போறாருன்னா….? கண்டிப்பா ஜோதி சொன்னமாதிரி தான் போல! ச்சை நான் இப்படி ஏமாந்துபோய்ட்டேனே!’
குளித்துமுடித்ததும் தான் கொஞ்சமாய் தெளிந்தது வீராவுக்கு. ஆசுவாசமாய் வந்து அமர்ந்தபடி, “ஏங்க?” என அவன் குரல் கொடுக்க, “வரேன்” என்றவள் அவன் கேட்டதை கொண்டு வந்து கொடுக்க,
ஆர்வமாய் டம்ப்ளரை கையில் வாங்கிக்கொண்டு, “எங்க இன்னைக்கும் பாலை கால்ல கொட்டி ‘பெருங்காயம்’ பண்ணிடுவீங்களோன்னு நினைச்சேங்க” என கிண்டல் செய்தபடி பாலை தொண்டையில் சரித்தான்.
பால் உள்ளே சென்றதும் தான் அவனுக்கு கண் தெளிவாய் தெரிவதை போல இருந்தது.
கண்ணை மூடி சாய்ந்தவன், “ஹப்பா!!! செம்ம டென்சன் இன்னைக்கு! பணம் கைக்கு வந்து சேருறதுக்குள்ள……ஷ்…. முடியலங்க!” என்றவன்,
“கட்டில்ல ஒரு பை இருக்கும்! அதுல காசு இருக்கு! எடுத்து பீரோ’ல வச்சுடுறீங்களா?” என்றான் கண்ணை திறவாமலே!
அவள், ‘நொட்டு நொட்டென’ நடந்து செல்வது காதில் விழ, இதழ்கள் முறுவலாய் வளைந்தது.
சற்று நேரம் ஆசுவாசமாய் அமர்ந்தான். நேரம் ஓடியது. உள்ளே சென்ற அஷ்டா வெளியே வரவேயில்லை. அவனாகவே எழுந்து கிச்சனுக்கு சென்று மீதம் என்ன இருக்கிறது என பார்த்து, கொஞ்சமாய் சாதமிட்டு உண்டான்.
அங்கிருந்தே, “சாப்பிட்டீங்களா?” என கேட்க, முனகலாய், ‘ம்ம்ம்’ வந்தது அவளிடம் இருந்து.
எல்லாம் எடுத்து வைத்து ஒதுங்க செய்துவிட்டு, கதவை தாழிட்டு, அறைக்குள் நுழைந்தபோது மணி பதினொன்றை தாண்டி சென்றிருந்தது.
கழுத்துவரை போர்த்தியபடி ஒருக்களித்து படுத்திருந்தாள் அஷ்டா.
இலகு உடைக்கு மாறியவன், விடிவிளக்கை போட்டுவிட்டு கட்டிலின் மறுப்பக்கம் வந்து படுத்துக்கொண்டான்.
அருகே இருந்தவள் இங்கும் அங்குமாய் புரண்டு புரண்டு படுக்க,
“நீங்க தூங்கலையா இன்னும்!?” வியப்புடன் கேட்டான் வீரா.
அவளிடம் பதிலே இல்லை.
சற்றே நெருங்கி, “ஏங்க?” என்று அழைக்க, அவள் கட்டில் ஓரமாய் ஒதுங்குவது தெரிந்தது.
“ஏங்க? முழிச்சு தானே இருக்கீங்க? அப்பறம் ஏன் பேச மாட்டேங்குறீங்க?”
போர்வையை இன்னும் நன்றாய் இழுத்து மூடிக்கொண்டாள்.
‘அட கோவமோ?’ அப்போது தான் அவனுக்கு ‘பல்ப்’ எரிந்தது. சுவாரஸ்யமாய் கூட இருந்தது. இதுபோல ஊடல் எல்லாம் இதுவரை வந்ததில்லையே!
கொஞ்சம் நெருங்கியதற்கே கட்டிலின் ஓரத்திற்கு போனவளை மேலும் சீண்டிப்பார்க்க, “ஷ்…ஷ்…” என அவன் அருகே செல்ல, இன்னுமாய் ஓரத்திற்கு ஒண்டினாள் அவள்.
“நான் கிட்ட வரப்போறேன்!!!”
“வரப்போறேன்…”
“வரப்போறேன்” அறிக்கை விட்டபடி அவன் இன்ச் இன்ச்’சாய் நகர, வெடுக்கென எழுந்து அமர்ந்தாள் அஷ்டா.
எழுந்த வேகத்தில், “தள்ளிப்போங்க நீங்க! போங்க” என அவன் வயிற்றில் கைவைத்து தள்ளினாள்.
அதை விளையாட்டாய் நினைத்து சிரித்துக்கொண்டிருந்தான் வீரா. அவன் சிரிக்க சிரிக்க இவளுக்கு கோபம் அதிகமாக, வேகமாய் அவனை தள்ள ஆரம்பிக்க, அதை நிறுத்தும் பொருட்டு, அவள் கரத்தை வெடுக்கென பிடித்து இழுத்தான் வீரா. அவன் இழுத்த வேகத்தில் படுத்திருந்த அவன் மார்பில் ‘பொத்’தென வந்து விழுந்தாள் அவள்.
மேலே விழுந்தும் திமிறிக்கொண்டிருந்தவளை சிரிப்பு அடங்காமல் அணைத்தவன், அப்படியே உருள, அவன் மேலிருந்தவள் கீழே வந்திருக்க, இவன் அவள் மேல் பாதி படர்ந்திருந்தான். அவன் கைகள் இரண்டும் அவள் உடலுக்கு கீழே சிறைப்பட்டிருந்தது.
‘விடுங்க… விடுங்க’ என கண்ணை மூடிக்கொண்டு அவள் திமிற,
“ஷ்…ஷ்… ஒரு நிமிஷம் இருங்க! இருங்கன்னு சொல்றேன்ல! கண்ணை திறந்து தான் பாருங்களேன்” அவள் செய்கையை ரசித்தபடி அவன் சொல்ல, அதையெல்லாம் கேட்டாள் தானே அடங்க!?
‘விடுங்க விடுங்க’ என்ற அலறல் மட்டும் அடங்கவில்லை.
பார்த்தான், இது அடங்காது என தோன்றிய மறுகணம், அழுத்தமாய் ஈரம் செய்தான் அவள் கன்னத்தை.
அவனது திடீர் தாக்குதலில் ஷாக் அடித்தார் போன்ற அதிர்வில் அப்படியே உறைந்தாள் அஷ்டா.
அவளை நிதானப்படுத்த வேண்டி அவன் கொடுத்த முத்தம், அவர்களது முதல் முத்தம், முதல் நெருக்கம் என்பது அவளது உறைந்த முகத்தை பார்த்த பின்னர் தான் அவனுக்கு உரைக்க, அவனையே வெறிக்கும் அசையாத விழிகளும், லேசாய் பிளந்த இதழ்களும் அவனை வசீகரிக்க ஆரம்பித்தது.
எச்சில் கூட்டி விழுங்கினான்.
அவள் இதழ்கள் அவனை ‘அருகே வா’ என சொல்வதை போன்றதொரு பிரம்மை! தட்டாமல் அருகே சென்றான்.
ஒரு நொடி விட்டால் அதரங்களை அள்ளியிருப்பான்! நூலிழை இடைவெளியில் அவன் இருக்க, “ஹேப்பி பர்த்டே” என்றாள் அஷ்டா.
இதழ்களை விடுத்து அவள் விழிகளை நோக்கின அவன் கண்கள். அதில் மின்னல் போல ஒரு வெளிச்சம்!
அவன் பார்த்துக்கொண்டே இருக்க, மீண்டுமாய், “ஹேப்பி பர்த்டே” என்றாள் அவள்.
கடிகாரம் ஒருமுறை ‘டங்’கென ஒலித்து மணி பன்னிரண்டு என்பதை சொல்ல,
“நேத்து நைட் எதிர்ப்பார்த்தேன்! இன்னைக்கு நைட் கிடைக்குது” என்றான் வீரா.
“சாரி! எனக்கு தெரியல”
“இப்போ மட்டும் எப்டி தெரிஞ்சுதாம்”
“அது… ‘பேன்’ கார்ட்…”
“ஓஓ….” ரசனையாய் இழுத்தான்.
“சரி, கிப்ட் எங்க?”
“ஹும்” என உதட்டை சுளித்து முகத்தை திருப்பினாள். திரும்பும் முகத்தை சட்டென அவன் புறம் இழுத்தவன், “கிப்ட் எங்க?” என்றான் உதட்டை குறிவைத்து.
தாடையில் அழுந்திய அவன் விரல்களை எடுத்து விட முயன்றபடி, “கிப்டும் இல்ல… ஒன்னும் இல்ல” என்றாள்.
“ப்ச்! எனக்கு வேணுமே!!!”
“கிடையாது!”
“ஏன்?” இதழ்களை விட்டு கண் நகர்வேனா என்றது.
“அது… கோவம்!”
“என்ன கோவம்?” என்னவென்று சொல்வாள்? என் அலங்காரத்தை நீ ரசிக்கவில்லை என்றா?!
“ப்ச்! விடுங்க…” மீண்டும் அவனிடம் இருந்து விடுபட திமிற ஆரம்பித்தாள்.
அவன் பிடி இறுகிக்கொண்டே சென்றது.
“நான் கேட்டு மறுக்கக்கூடாதுன்னு சொன்னேன்ல? நியாபகம் இல்லையா? எனக்கு வேணும்!” என்றவன், மறுநொடி அவள் கழுத்தடியில் முகம் புதைக்க, ஜிவ்வென மயிர்க்கால்கள் சிலிர்த்து நின்றது அவளுக்கு.
அவன் மீசை முடி உரச உரச, உடல் தகிக்கும் உணர்வு!
கழுத்தில் இருந்து முன்னேறியவன், காது மடலில் வந்து மூச்சு வாங்க, அவளுக்கு தான் ஏக அவஸ்தை.
அப்படியும் இப்படியுமாய் ஊர்வலம் வந்து, அவளை சூடாக்கி, அத்தீயில் தானும் வெந்து இறுதியில் அவள் இதழில் வந்து இளைப்பாறினான் அவ்வேடன்.
நிதானமான அம்முத்தம், சீராக வேகத்தில் நிமிடங்களை நொடிகளாக்கி பயணித்துக்கொண்டிருக்க, திடீரென அவனை தள்ளிவிட்டு, எழுந்துக்கொள்ள பார்த்தாள் அஷ்டா.
அதை எளிதாய் தடுத்தவன் மீண்டும் அவளிடமே வர, அவளது இடக்கை விரல்கள் அவன் வலக்கன்னத்தை சுள்ளென தீண்டிவிட்டிருந்தது.
மோகத்தின் பிடியில் இருந்தவன், அஷ்டா தன்னை அடித்துவிட்டாள் என்பதை உணரவே முழுதாய் ஒரு நிமிடம் பிடித்தது. இது தெரியாமல் நடந்ததல்ல என்பதை அவளது சுளித்த முகம் காட்டிக்கொடுக்க, தீயில் விரல் வைத்ததை போல வெடுக்கென்று அவள் மீதிருந்து எழுந்து நின்றான் வீரா.