நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கதிர்வேலனுக்கு அலுவலகத்தில் வேலையே ஓடவில்லை. எந்த வேலையிலும் அவனால் முழு கவனம் செலுத்த முடியவில்லை. வெண்மதிக்கு வேலை கிடைத்து சில மாத சம்பளமும் வாங்கி விட்டாள்.
லட்சுமியும் இனிப்பு செய்ய தொடங்கி, செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறார். நல்ல வருமானமும் கிடைத்துக் கொண்டிருக்கிறது. வெண்மதி வேலை
செய்துகொண்டிருந்த அலுவலகத்தை பற்றி விசாரித்து தெரிந்துகொண்ட கதிர்வேலன் அவளை அந்த வேலையில் இருந்து எடுப்பதற்கான வழியை தேடிக்கொண்டிருந்தான். ஆனால் அவனுக்கு எந்த வழியும் கிடைக்கவில்லை. அந்த அலுவலகத்தின் எம்.டி மிகவும் நேர்மையானவர். பாண்டிச்சேரியில் செல்வாக்கு மிக்கவர். அவரிடம் பணத்தைக் கொடுத்தோ அல்லது ஆட்களை வைத்து மிரட்டியோ காரியத்தை சாதிக்க முடியாது. எனவே என்ன செய்து அவளை வேலையிலிருந்து எடுப்பது என்று புரியாமல் குழம்பிக் கொண்டிருந்தான். எந்த வேலையிலும் மனதை செலுத்த முடியாமல் தலையில் கை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.
அவனது இன்டர்காம் அடித்தது. எடுத்துப் பேசினான்.
மேலாளார் தான் பேசினார்.
“கதிர் எனக்கு கொஞ்சம் டீடைல்ஸ் தெரியணும். என் கேபினுக்கு வாங்க.” என்றார்.
“ஓகே. வர்றேன்.” என்றவன் மேலாளரின் கேபினுக்கு சென்றான்.
கதிர்வேலன்
“ஹாய் ராஜேஷ்” என்றபடி உள்ளே நுழைந்தான்.
“ஹாய் கதிர். ஹௌ டு யூ டு?” என்றார் அவன் தெளிவற்ற முகத்தை பார்த்தபடி.
“ஐ அம் பைன் ராஜேஷ்.” என்றான் செயற்கையான புன்னகையுடன். “ரியலி?” என்றார் அவன் முகத்தை கூர்ந்து பார்த்து.
“எஸ் ஐ அம் பைன் ராஜேஷ்.” என்று பொய் சொன்னான்.
“ஆனா உங்களை பாத்தா அப்படி தெரியலையே. ஏதோ குழப்பத்துல இருக்கிற மாதிரி தெரியுது.” என்று மனதில் தோன்றியதை வெளிப்படையாக கேட்டார். “அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை ராஜேஷ். கொஞ்சம் தலைவலி அவ்வளவுதான்.” என்றான் சாதாரணமாக முகத்தை வைத்துக்கொண்டு.
“ஓகே கதிர். புது ப்ராஜெக்ட் டீடைல்ஸ் கலெக்ட் பண்ண சொல்லி இருந்தேன் கலெக்ட் பண்ணிட்டீங்களா?”
அவனுக்கு அப்போதுதான் அதைப் பற்றியே ஞாபகம் வந்தது. எனினும் அவர் முன்பு காட்டிக்கொள்ளாமல்
“அல்மோஸ்ட் முடிச்சாச்சு. இன்னும் 2 டேஸ் டைம் கொடுத்தீங்கன்னா, முடிச்சிடுவேன்.” என்றான்
“என்ன இன்னும் டுடேஸ் டைம் வேணுமா? என்ன கதிர்? இப்படி கேக்கறீங்க. டுடேஸ் முன்னாடியே முடிச்சு கொடுத்து இருக்கணும். இன்னும் கொடுக்கல இப்போலாம் நீங்க முன்ன மாதிரி ஆக்டிவா இல்ல.
“அப்புறம், உங்க டீம் முடிச்சுக் கொடுத்த ப்ராஜெக்ட்ல நிறைய
இஸ்யூஸ் இருக்குன்னு கிளையன்ட் கம்ப்ளைன்ட் பண்ணி இருக்காங்க. ஏன் இவ்ளோ கேரலசா வொர்க் பண்ணி இருக்கீங்க. எல்லாத்தையும் நீங்க செக் பண்ணி தானே அனுப்பி இருக்கணும். இப்படியா கிளையன்ட் கம்ப்ளைன்ட் பண்ற மாதிரி வொர்க் பண்ணுவீர்கள்?”
அவன் அதனை சரி பார்க்காமலேயே அனுப்பியிருந்தான். இதனை இவரிடம் எப்படி சொல்வது என்று தயங்கிக் கொண்டிருந்தான்.
“என்ன கதிர் பதிலையே காணோம்? இன்னும் ஒன் வீக்ல நெக்ஸ்ட் ப்ராஜெக்ட் ரிலீஸ் இருக்கு. ஆனா நீங்க ஆபீஸ்க்கு சரியா வருவது கிடையாது. அப்படியே வந்தாலும் ரொம்ப நேரமா போன் பேசிட்டு இருக்கீங்க. வேலையில போக்கஸ் பண்றது கிடையாது. அது உங்க வேலையை பார்த்தாலே தெரியுது. அப்புறம் ஒரு முக்கியமான விஷயம். நீங்க எனக்கு அடுத்த மேனேஜரா வர்றதுக்கு கூட சான்ஸ் இருந்தது. இப்போ அப்படி இல்லை. சில மாசமாக உங்க பர்பாமன்ஸ் டவுன் ஆயிருக்கு .ஆபீஸ்ல லே ஆப் போயிட்டு இருக்கு.
பார்த்து நடந்துக்கோங்க. இனிமேலும் நீங்க இப்படி இர்ரெஸ்பான்ஸ்பில்லா இருந்தீங்கன்னா மேனேஜ்மெண்ட் எந்த முடிவையும் எடுக்கலாம்.” என்றார் கறாராக.
கதிர்வேலனக்கு அவரது பேச்சு வருத்தத்தை அளித்தது.
எனினும் தாயின் ஆசைப்படி இந்த வீட்டை எப்படியும் நாம் அடைந்தே ஆகவேண்டும் என்ற எண்ணம் மேலோங்க. தாய்மாமனான ராகவனை சந்தித்து இதைப் பற்றி பேசலாம் என்று முடிவெடுத்தான்.
கதிர்வேலன், லலிதா, லலிதாவின் அண்ணன் ராகவன் மூவரும் அந்த அறையில் உட்கார்ந்து ஆலோசித்துக் கொண்டிருந்தனர்.
லலிதா அவரது அண்ணனிடம் புலம்பிக் கொண்டிருந்தார்
“பழையபடி எல்லாமே மாறி விடும் போல இருக்கு அண்ண. லட்சுமி, கோவிந்தன், வெண்மதி மூணு பேருமே சம்பாதிக்கிறார்கள். அவங்களுக்கு தேவையானதை அவங்க வாங்கிக்கறாங்க. எதுக்கும் எங்க கிட்ட வந்து நிற்கிறது கிடையாது. இப்படியே அவங்க இருந்துட்டா இந்த வீடு நமக்கு முழுசா கிடைக்காது. வெண்மதியின் பங்கை நாம கொடுத்துதான் ஆகணும். எனக்கு அதை நினைச்சாதான் ரொம்ப கவலையா இருக்கு அண்ண.”
“நீ கவலைப்படாதே. நான் யோசிச்சேன் ஏதாவது ஒரு வழி கண்டுபிடிக்கிறேன்.” என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார் ராகவன்.
“வெண்மதி வேலை செய்ற கம்பெனி டீடெயில்ஸ் உனக்கு தெரியுமா கதிர்?” என்று ராகவன் கேட்க
“தெரியும் மாமா. ஆனால் வெண்மதியை அந்த வேலையில் இருந்து எடுப்பதற்கான வழி தான் என்னால கண்டுபிடிக்க முடியல.”
“சரி நீ உனக்கு தெரிஞ்ச டீடைல்ஸ் எனக்கு சொல்லு. நான் ஏதாவது செய்ய முடியுமான்னு பார்க்கிறேன்.” என்று இராகவன் கேட்க கதிர்வேலன் சொல்ல ஆரம்பித்தான்.
“வெண்மதி வேலை செய்ற கம்பெனி ஓனர் தான் அங்கு மேனேஜராக இருக்கிறார். அவர் ரொம்ப நேர்மையான ஆள். அவருக்கு குழந்தைகள் கிடையாது. அவருடைய மனைவியும் அங்கே தான் வேலை செய்றாங்க . அது ஒரு சின்ன கம்பெனி தான் இருந்தாலும் புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும் சேர்ந்து அதை நல்லபடியாக நடத்திட்டு வர்றாங்க. இப்ப கூட ஏதோ புது ப்ராஜெக்ட் அவங்களுக்கு கிடைத்திருக்கு. இந்த பராஜெக்டை அவங்க முடிச்சிட்டா அந்த கம்பெனி அடுத்த கட்டத்திறகு முன்னேறும். அந்த ப்ராஜெக்ட் பண்றது கூட வெண்மதியும் மேரியும் தான். காசு பணத்தை விட அவங்க ஒழுக்கத்தை தான் பெருசா நினைப்பாங்க.” என்று கதிர்வேலன் கூறி முடித்தான்.
இதனை கேட்டுக்கொண்டிருந்த ராகவன்
“சரி லலிதா. நீ போய் சாப்பிடு. அண்ணி உனக்காக சாப்பாடு தயார் பண்ணி வெச்சுட்டா. வைஷ்ணவி உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கா. நாங்க ரெண்டு பெரும் கொஞ்ச நேரம் பேசிட்டு வருகிறோம். நீங்க எல்லாம் சாப்பிடுங்க.” என்று லலிதாவை அனுப்பிவிட்டு கதிர்வேலனிடம் வந்தார் ராகவன்.
“மாமா முதல்முறையா வெண்மதி கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆகிட்டேன்னு அவ அம்மா கிட்ட பேசிட்டு இருந்ததை நான் உங்ககிட்ட வந்த சொன்னேன். அதுக்கு அப்புறம் நீங்களும் நானும் சேர்ந்து போட்ட திட்டம் தான் எல்லாமே. அவளை ஃபாலோ பண்ணி விஜய் செல்வாவை பற்றி தெரிஞ்சுகிட்டது, செல்வாவின் அக்கா கல்யாணத்துக்கு கடன் தர்றதா சொல்லி அவனை விஜய் கிட்ட பேச வச்சு வெண்மதி கிட்ட இருந்து அவனை பிரித்து கரெக்டா எக்ஸாமுக்கு முன்னாடி நாள் வெண்மதியையும் விஜயையும் மீட் பண்ண வச்சு வெண்மதியை சைக்காலஜிக்கலா அட்டாக் பண்ணது எல்லாமே நம்ம பிளான் தான். அப்படியும் அவ எக்ஸாம்ல பாஸ் ஆயிட்டா. அதுக்கப்புறம் அவளுக்கு கிடைக்கவேண்டிய இரண்டு சென்னை வேலையையும் கிடைக்கவிடாம பண்ணினோம்.
சென்னை வேலை அவளுக்கு கிடைக்கலைன்னு ஆனதும், நானும் அவளை ஆள் வெச்சு ஃபாலோ பண்றதை விட்டுட்டேன். அதனால்தான் அவளுக்கு பாண்டிச்சேரி கம்பெனியில் இன்டர்வியூ கூப்பிட்டது தெரியாம போயிடுச்சு. தெரிஞ்சிருந்தா ஏதாவது செஞ்சு இவள அந்த இன்டர்வியூக்கு போகாம பண்ணியிருக்கலாம். இப்போ ட்ரெய்னிங் முடிஞ்சு வேலை பர்மனென்ட் ஆயிடுச்சு. அவளை வேலையிலிருந்து தூக்குறது கஷ்டம்.
அதுவும் நேர்மையான ஒழுக்கமான ஓனரோட கம்பெனி. நம்மளால இப்ப என்ன பண்ண முடியும்?” என்று தலையை பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான் கதிர்வேலன்.
இவனது பேச்சின் இறுதிப் பகுதியை கூர்ந்து கவனித்த ராகவன்
“ இப்போ என்ன சொன்ன?” என்று கேட்டார்.
அவன் “நம்மளால என்ன செய்யமுடியும் என்று கேட்டேன்.”
“இல்லை அதுக்கு முன்னாடி என்ன சொன்ன?”
“நேர்மையான……”
“அதுக்கப்புறம்”
“ஒழுக்கமான…….”
“கரெக்ட் ஒழுக்கம். அப்போ அவருக்கு ஒழுக்கம் ரொம்ப முக்கியம். அப்படித்தானே?”
“ஆமாம் மாமா.”
ராகவன் யோசித்தார். ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவராக
“கதிர் நீ ஆள் வச்சு அவளை ஃபாலோ பண்ணப்போ போட்டோஸ் ஏதாவது எடுத்தாங்களா?”
“ஆமாம் மாமா. நிறைய போட்டோ எடுத்துருக்காங்க. என்கிட்ட இருக்கு.”
“சரி அதை எல்லாம் எனக்கு அனுப்பு. நான் ஏதாவது பண்ண முடியுமான்னு பார்க்கிறேன்.” என்று ராகவன் கூறினார்.
“ஓகே மாமா. நீங்க வெண்மதியை எப்படி வேலையிலிருந்து எடுக்கிறதுன்னு யோசிங்க. நான் சித்தியோட வருமானத்தை எப்படி தடுக்கிறதுன்னு யோசிக்கிறேன்.”
“சரி கதிர். வா நாம ரெண்டு பேரும் போய் சாப்பிடலாம். ரொம்ப லேட் ஆயிடுச்சு. ” என்று மருமகனை அழைத்துக்கொண்டு மாமன் சாப்பிட சென்றார்.