அன்று நல்ல நாள் என்பதால் கல்யாண உடைகள் எடுக்க இரண்டு குடும்பமும் சேர்ந்தே வந்திருந்தது. ஏற்கெனவே நகைகள் வேலை முடிந்து இருந்தனர்.
இதன் இடையே கார்த்திக்கின் பெற்றோரோடு சக்தி நன்றாக பழகிவிட அவளோடு அன்பாகவே நடந்துக்கொண்டனர். அதுவும் கார்த்திக் ஆரியனையும் சக்தியையும் காணும்போது எல்லாம் வம்பிழுக்காமல் போக மாட்டான்.
இன்றும் அதே போல்,
“பார் தங்கச்சி.. மச்சான் மட்டும் நல்லா சினிமாவில் வர மாறி ஹீரோயிசம் எல்லாம் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டார்.. நாங்களும் ஹீரோ ஆகலாம்னு நினைச்சால் அவர் தங்கச்சிக்கு மட்டும் வெளிய போக 144 போட்டு வைச்சு இருக்காங்க.. இதெல்லாம் எந்த ஊர் நியாயம்..”
என்று ஆரியனை வைத்துக் கொண்டே சக்தியிடம் குற்றம் படிக்க மேக்னாவோ,
‘ஏன் இப்படி.. ‘ வெட்கம் எட்டி பார்க்க தன்னவனை முறைத்தாள்.
“யோசிக்க வேண்டிய விஷயம் தான்..
எங்க அண்ணாவும் ஹீரோ ஆக வேண்டாமா..?? அவங்க வுட்பீயை தானே அழைச்சுட்டு போக நினைக்கிறாங்க.. இதில் என்ன தப்பு.. ஏன்ப்பா இப்படி பண்றீங்க..”
என சக்தியும் சொல்ல , “அப்படி கேளுமா..” என்றான் சப்போர்ட் கிடைத்த சந்தோஷ்த்தில்..!!
” 144 போட்டது இரண்டு பேரோட அம்மாக்கள் தான்.. மேலிடத்தை மீறி என்னால என்ன பண்ண முடியும் சொல்லு.. நான் எதாவது சொல்ல போனால் அம்மா என்னை லெஃப்ட் ரைட் வாங்கிடுவாங்க.. உனக்கே தெரியும் தானே.. “
என்று ஆரியன் அப்பாவியாய் சொல்லவும்,
“ம்ம்ம்.. உண்மை தான்.. போங்க ண்ணா.. அவர் என்ன பண்ணுவார்.. பாவம்.. நீங்க பேசுற இடத்தில் பேசணும்.. உங்களுக்கு சாமர்த்தியம் பத்தலை..”
என உடனே கட்சி மாறிவிட கார்த்திக் அடப்பாவி என பார்த்தான் என்றால் மேக்னாவோ வாய்விட்டு சிரித்து,
என்று சொல்ல, “சரி தான்..” என்றான் தலையை அசைத்து..!!
“ஆமா.. எல்லாம் சரியா தான் இருக்கும்.. இதோ இந்த கடைக்குள் மேக்னா உங்க பொறுப்பில் தான்.. தாராளமா அழைச்சுட்டு போய் சேர்ந்தே செலக்ட் பண்ணுங்க..”
என்று சக்தி சொல்ல,
“ரொம்ப பெரிய மனசு ம்மா..” என்று கார்த்திக் சொல்லவும்,
“என்ன ண்ணா.. வேணாமா.. அப்போ நாங்களே பார்த்துக்கட்ட..”
என்று வம்பிழுக்க ‘வா சுருதி போலாம்..’ என்று மேக்னாவை இழுத்துக் கொண்டு போய்விட இவர்கள் சிரிப்போடு மற்றவர்களை சேர்ந்துக் கொண்டனர்.
முன்பு சொன்னது போலவே வரவேற்பிற்கு சக்தி மேக்னா இருவரும் ஒரே மாதிரியான டிசைனின் வெவ்வேறு லெஹெங்காவை தான் தேர்ந்தெடுத்தனர். மணமகன்களுக்கும் அவ்வாறே எடுக்கப்பட்டது. மற்ற ஆடைகள் எல்லாம் ஜோடி ஜோடியாய் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப எடுத்துக் கொண்டனர். ஷாப்பிங் முடிந்ததும் நேரே ஹோட்டல் சென்று அனைவரும் உணவருந்த சக்தி எப்படி பேசி சம்மதிக்க வைத்தாளோ அங்கிருந்து கிளம்பும் முன்,
“சக்தி சொன்னுச்சு.. சரிங்க மாப்ள.. மேக்னாவை அழைசுட்டு போங்க.. ஆனால் எட்டு மணிக்குள்ள வந்துடுங்க… என்ன..”
என்று திருவே தானாய் கார்த்திக்கிடம் அனுமதி கொடுக்க அவனுக்கு அத்தனை சந்தோஷம்..!!
பெரியவர்கள் முன்னால் சென்றதும்,
‘எப்படி..’ என்று சக்தி கண்களால் சிரிக்க,
“தங்கச்சி நீ தான் ம்மா மாஸ்ஸு.. இதுக்காகவே இந்த அண்ணன் உனக்கு ஸ்பெஷலா எதாவது செய்றேன் பார்..”
என்று கார்த்திக் மனதார புகழ்ந்தான் என்றால் மேக்னாவோ அவளை அணைத்துக் கொண்டு “தேங்க்ஸ் அண்ணி..” என்றாள் குதூகலமாய்…!! எல்லாவற்றையும் சிரிப்போடு பார்த்து நின்ற ஆரியன்,
அவர்கள் சென்றதும் சக்தியின் தோளை இடித்து,
“நாமளும் அப்படியே ஒரு ரவுண்ட் போகலாம் வரீயா..”
என்று ஆர்யன் கேட்க,
“நாம அடிச்ச ரவுண்ட் எல்லாம் போதும்.. போ.. போ.. போய் வேலை பார்..”
என்று அவனிடம் அலட்டலாய் சொல்லிவிட்டு அவன் பிடிக்கும் முன் ரம்யாவோடு சென்று நின்றுக் கொள்ள, “என்கிட்ட தானே வருவ.. உன்னை அப்புறம் கவனிச்சுக்கிறேன்..” என்று முறைத்ததற்கு நாக்கை துருத்தி அழகு காட்டினாள்.
அடுத்து அழைப்பிதழ் கொடுக்க தொடங்க விஷாகன் யாமினிக்கு முதலில் வைக்க வேண்டி மேக்னா தவிர அனைவரும் சென்னை பயணமாகினர்.
விடியும் முன்பே கிளம்பி இருந்ததால் முன்பகல் பொழுதிலே சென்னையை அடைந்து இருக்க வந்தவர்களை இன்முகமாய் வரவேற்றனர் விஷாகனும் யாமினியும்..!!!
அன்று சக்தி கோபமாய் வைத்த பிறகு அவளிடம் பேசவில்லை என்றாலும் விஷாகன் திருவோடு அலைபேசி வழியே உறவை பேணி வந்தார். இளமையில் அவரின் சிந்தனைகளும் செயல்களும் எப்படி இருந்ததோ ஆனால் முதுமை நெருங்க நெருங்க குடும்பமும் உறவுகளையும் தேட ஆரம்பித்தார். அவர் மகளை நெருங்க நினைத்த சமயம் அவள் எங்கோ தொலைதூரமாய் ஆகியிருக்க விடாமல் தொடர்ந்தார் நிழலாய்..!!
அதனாலே ஆரியன் சக்திக்கும் வரவேற்பு நிகழ்வு வைக்கலாம் என்று தோன்றிய உடனே விஷாகனிடம் பகிர அவரும் மகிழ்ச்சியாய் ஆதரிக்கவும் செய்திடலாம் என்று உறுதி தோன்றியது.
அதே சந்தோஷத்தோடு எல்லோரையும் வரவேற்க,
‘தங்கள் வருகை அறிந்து இங்கே வந்திருக்க வேண்டும்..’ என விஷாகன் குறித்து எண்ணியவளுக்கு
‘இந்த வயதில் இவர் புத்தி ஏன் இப்படி போக வேண்டும்..’ என்ற ஆதங்கம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. ஆனால் முன்பு போல் அதை நினைத்து எல்லாம் வாடாமல் மகிழ்ச்சியாகவே அவர்களோடு பேசினாள்.
அனைத்தையும் விட அவள் வீடு..!!! உள்ளே நுழைந்த கணத்தில் இருந்தே மனதில் அத்தனை இதமளிக்க உற்சாகமாய் தானும் பெற்றோரோடு சேர்ந்து உபசரித்து அவர்களுக்கு வேண்டியதை செய்துக் கொடுத்தாள்.
யாமினியிடம் உணவிற்கு என்னென்ன ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்று விசாரித்தாள்.. மேலும் என்னென்ன செய்யலாம் என்று திட்டமிடுவதும்,
“வெளியே வேணாம்.. நாமளே செய்யலாம்.. பார்வதி அக்காவை வர சொல்லுங்க.. உதவியா இருக்கும்.. நான் வருவேன்னு தெரிஞ்சு இருந்தால் முன்கூட்டியே அவங்களே வந்திருப்பாங்க.. நீங்க அவங்க கிட்ட எல்லாம் எங்க சொல்லி இருப்பீங்க.. இப்பவாவது சொல்லுங்க..”
என கடகடவென பேசிவிட்டு அடுத்து அடுத்து என்று அவள் நகர யாமினி தான் அவளை அதிசயத்து பார்த்திருந்தார்.
அவர் அறிந்த சக்திக்கு ஓரிரு வார்த்தைகளுக்கு மேல் தன் முன்னால் நின்று பேச தெரியாது.. தான் இப்படி வந்தால் அவள் அப்படி சுற்றிக் கொண்டு போய்விடும் குணம் கொண்டவள்..!!!
அன்று அலைபேசியில் தான் பேசிய பேச்சுக்கு தன் முகத்தை பார்க்க கூட தயங்கி ஒதுங்கியே நிற்பாள் என்று தான் நினைத்தார்.
ஆனால் அதற்கெல்லாம் மாறாய் அப்படி ஒரு விஷயமே நடவாதது போல் மிக இயல்பாய் பேசி திரிந்த சக்தி மிகவும் புதிதாய் தெரிந்தாள். இங்கிருந்து சென்றபோது இருந்த சக்தி அல்ல இவள் என்பது மெல்ல அவருக்கு புரிய தொடங்கியது.
காலை உணவு உண்டதும் திரு ரம்யாவிற்கு ஓய்வெடுக்க ஒரு அறையை ஏற்பாடு செய்தபின் ஆரியனுக்கு வீட்டை சுற்றிக் காட்டினாள்.
தனிமையில் சில காலம் வாழ்ந்தவளுக்கு அந்த வீடு உணர்வுகளோடு பிணைந்திருந்தது.
இறுதியாய் தன் அறைக்கு வந்ததும் கட்டிலில் விழுந்தவள் கைகளை விரித்து நீட்டி,
“ஐ மிஸ் திஸ் ஸோ மச்..” என இரசித்து சொல்ல சிரிப்போடு அவள் அருகில் அமர்ந்து,
“அழகா இருக்கு உன் ரூம்.. இந்த டேபிள் கிட்ட தானே வீடியோ கால் பேசுவ..”
என்று அவன் யூகித்து சொல்ல கேட்க தலையை கையில் ஊன்றி அவன் பக்கம் ஒருக்களித்து படுத்தவள்,
“எஸ்.. அதே.. என் ஸ்டடி டேபிள்.. காலேஜ் வொர்க் இருக்கும் போது உன்கிட்ட பேசிகிட்டே அதையும் முடிச்சுடுவேன்..”
என்று சொல்லிவிட்டு, “இந்த பக்கம் என் கீபோர்ட் இருக்கும்.. இங்க.. பால்கனி டோர் பக்கத்துல காலைல தினமும் யோகா.. ஒவ்வொன்னும் அப்படியே என் கண் முன்னால விஷ்வலைஸ் ஆகுது..”
என சிறுபிள்ளையின் ஆர்வத்தோடு அவள் சொல்லும் கதைகள் அனைத்தையும் உம் கொட்டி வந்தவன் ஒரு கட்டத்தில் தூங்கிவிட,
“இங்க ஒருத்தி பேசிட்டு இருக்கேன்.. கண்டுக்காம தூங்கிறதை பாரேன்..”
என வலிக்காமல் அவன் கன்னத்தில் ஒரு குத்து வைத்தவள் அவன் தூங்கட்டும் என கதவை சாற்றிவிட்டு வெளியே வர,
“சக்தி பாப்பா.. எப்படி இருக்க..”
என ஆர்வமாய் கேட்டப்படி வீட்டிற்குள் வந்த பார்வதியை கண்டதும் மலர்ந்து சிரித்தாள்.
“நல்லா இருக்கேன் க்கா.. நீங்க எப்படி இருக்கீங்க..”
“எனக்கென்ன பாப்பா நான் நல்லா இருக்கேன்.. உங்க அம்மா சொன்னதும் உன்னை பார்க்கணும்னே ஓடி வந்தேன்.. உன் வீட்டுகாரர் வந்து இருக்காரா..?”
“ஹான்.. இப்ப தான் தூங்கினாங்க.. அத்தை மாமா எல்லாரும் வந்து இருக்காங்க.. உங்களுக்கு காட்டுறேன்..”
என மகிழ்ச்சியாய் சொல்லியவள் மதியம் என்னென்ன செய்யலாம் என முடிவு செய்து அதற்கு வேண்டியதை பார்வதியையே வாங்கி வர கூற வேலைகள் மலமலவென நடந்தது.
வெளியே வேண்டாம் என்று சக்தி சொல்லியதால் அவளை நகர்த்திவிட்டு யாமினியே சமைக்க கூட தேவையான அனைத்தும் செய்து கொடுத்தாள் பார்வதி.
இவ்வாறு மதிய விருந்தும் தடபுடலாய் முடிய மேக்னா தனியே இருப்பதால் திருவும் ரம்யாவும் மட்டும் மாலையே மீண்டும் கிளம்புவதாகவும் சக்தியும் ஆரியனும் மறுநாள் செல்வதாகவும் முடிவில் இருந்தனர்.
கிளம்பும் முன் தாம்பூல சீர்வைத்து முறையாய் சம்பந்தி குடும்பத்தை அழைக்க யாமினியும் விஷாகனும் தம்பதி சகிதம் பெற்றுக் கொண்டனர்.
“உங்க மனசுல என்ன இருக்குன்னு தெரியல சம்மந்தி.. ஆனால் பிள்ளைங்க சந்தோஷத்திற்கு மேல வேற என்ன வேணும் நமக்கு.. ஆரியன் சக்தி சந்தோஷமா இருக்காங்க.. இது காலத்துக்கும் நிலைக்கணும்.. அவங்க கல்யாணத்து அப்போ ரொம்ப வருத்ததில் இருந்தீங்க.. உங்களை புரிஞ்சுக்க முடிஞ்சுது.. ஆனால் இந்த தடவை எந்த மனகஷ்டமும் இல்லாம நீங்க மனசார அவங்களை ஆசீர்வதிக்கணும்..”
என்று யாமினியிடம் தனியே பேசிய ரம்யாவின் மேல் மரியாதை கூடியது.
யாரையும் கஷ்டப்படுத்தி தங்கள் மகனின் வாழ்க்கை தொடங்க கூடாது. அதன் வினை தன் பிள்ளைகளின் வாழ்க்கையை பாதிக்கும் என கருதி அதற்காக வேண்டி வந்து பேசும் அப்பெண்மணியின் அன்பு எல்லாம் எல்லைகள் இல்லாதது என்று புரிய விஷாகனுடைய குடும்பம் ஒரு நிமிடம் அவர் எண்ணத்தில் வந்து போனது..!!
எல்லோருக்கும் கல்யாணம் என்பது புதைக்குழி அல்ல என அக்கணம் தோன்ற,
“கண்டிப்பா.. நான் சந்தோஷமா தான் வருவேன்..” என புன்னகைத்தவர் சற்று தள்ளி திருவிடம் ஏதோ சொல்லி கொண்டிருந்த மகளை பார்த்தபடி,
“அவளை.. அவளை நீங்க பார்த்துக்கணும்.. உங்க பொண்ணு மாதிரியே.. அதை தவிர அவளும் வேற எதிர்பார்க்க மாட்டாள்..”
என்பதை உணர்ந்து சொல்ல,
“இதை நீங்க சொல்லணுமா..”
என்ற ரம்யாவும் புன்னகைத்து விடைபெற்றார். இரு வேறு குணம் கொண்ட தாய்மார்கள் தான். ஆனால் அவர்கள் கொண்ட தாயன்பில் வித்தியாசம் இல்லை.
சக்தி வந்திருப்பது தெரிந்ததும் அவளிடம் டியூஷன் படித்த அக்கம் பக்கத்து பிள்ளைகள் எல்லாம் ஒன்று கூடி வந்துவிட,
‘இந்த கூட்டத்தை பார்த்தால் அம்மா கோபப்படுவாங்களே..’
என சக்தி ஓரவிழியால் பார்க்க யாமினி கண்டுக் கொள்ளவில்லை என்றதும் நிம்மதியாக ஆரியனை அவர்களுக்கும் சந்தோஷமாய் அறிமுகப்படுத்தி வைத்தாள்.