மற்றவர் முகம் சின்னதாய் வாடினால் கூட தானும் வருந்தும் பூஞ்சை மனம் கொண்ட சக்திக்கு இதில் மட்டும் என்ன இத்தனை பிடிவாதம்..!!
“இதுக்கும் மேல நான் எப்படி புரிய வைக்கிறதுணு சத்தியமா தெரியல..”
என்று ஆரியன் அதிருப்தியோடு சொல்ல அவளும்,
“இதை தான் பேசணும்னா.. எனக்கு பேப்பர் கரெக்ஷன் வொர்க் இருக்கு ஆர்யா.. நாளைக்கு பேசலாம்.. பை..”
உம்மென்று கூற,
அவனும், “சரி பை..” என்று வைத்தே விடவும் திகைத்து விழித்தாள் சக்தி.
எதாவது பேசி சமாதானம் செய்வான் என்று எதிர்பார்த்தாலே அன்றி இப்படி பட்டென்று வைப்பான் என நினைக்கவில்லை.
லேசாய் முகம் சுணங்கினால் கூட தாங்காது பேசி பேசி சிரிக்க வைத்த தருணமெல்லாம் நினைவில் எழ அவள் கண்கள் கலங்கியது.
‘நானே சுத்தி சுத்தி வறேன்ல.. இப்படி தான் அலட்சியப் படுத்துவ டா… உனக்கு முன்ன மாதிரி என்மேல ஆர்வமே இல்ல.. ஒவ்வொரு விஷயத்திலும் என் மனசு அதை உணர்ந்து இரணமாறது உனக்கு புரியல..’
ஏதேதோ எண்ணி எண்ணி கலங்கி அமர்ந்திருந்தவளை காலிங் பெல் ஓசை அசைத்தது. யாமினியாக தான் இருக்கும்..
சோர்வோடு அவருக்கு கதவை திறந்து விட்டபின் அறைக்குள் செல்ல முற்பட்டவளை,
“உங்க அப்பா வந்தாரா சக்தி..”
என்று அவர் நிறுத்தி வினவ,
“இல்லையே ம்மா.. வரேன்னு சொல்லி இருந்தாங்களா..”
என்று குழப்பமாய் கேட்டவள் அவர் பதிலின்றி கை கடிகாரத்தில் நேரத்தை பார்த்து தனக்குள் ஏதோ சிந்தனையில் நிற்கவும் சலிப்போடு தலையசைத்து அங்கிருந்து நகர,
“இரு.. உன்கிட்ட ஒன்னு சொல்லணும்.. இங்கேயே இரு.. டூ மினிட்ஸ்ல வந்திடுறேன்..”
என்று அவளை இருத்திவிட்டு உள்ளே போகவும் ‘என்ன வேணும் இவங்களுக்கு.. இருக்கிற கடுப்புல இவங்க வேற..’
என எரிச்சலோடு காத்திருந்தாள்.
சில நிமிடங்களில் பிரெஷ்அப் ஆகி உடை மாற்றி வந்தவர் அவள் அருகில் அமர்ந்து,
“சாப்டியா நீ..”
என்று கேட்க ‘என்ன திடிர்னு..’ என பார்த்தாலும்,
‘ம்ம்..’ என்றாள் தலையசைப்போடு..
“ஓகே.. நீ கொடுத்த இல்லையா.. உங்க பேண்ட் ஓட யூடியூப் வீடியோஸ்.. அன்னைக்கே அது எல்லாமே நான் பார்த்தேன்.. எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது.. உனக்கு இதில் எல்லாம் ஆர்வம் இருக்கும்னு நான் எதிர் பார்க்கல.. இந்த சின்ன பசங்களோட டைம் வேஸ்ட் பண்ணாம மியூசிக்ல இன்னும் கவனம் வைச்சால்.. நல்ல ஹோப் இருக்கு..”
என்று அவர் தன் போக்கில் பேச இங்கே இவளுக்கோ அதிர்ச்சியில் ஒரு நொடி இதயத்தில் தாளம் தடுமாறியது. இதே விஷயத்தால் அவனோடு விவாதித்து அயர்ந்து அமர்ந்த கொஞ்ச நேரத்தில் அவரும் அதையே பேசும்போது அவளுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.
“கவர் சாங்ஸ்ஸை விட உங்க ஒவ்ன் சாங்ஸ் ரெண்டு இருந்ததுல அது இன்னும் நல்லா இருந்தது.. லிரிக்ஸ் எல்லாம் எப்படி எடுப்பீங்க..”
பதிலின்றி சக்தி விழி விரிய பார்த்தபடி இருக்கவும் அவள் கையை தட்டி,
“சக்தி.. என்னாச்சு.. பேசிட்டு இருக்கேன்.. என்ன யோசனைல இருக்க.. எனி ப்ராப்ளம்..”
என்று கேட்க,
“ஆங்.. ஒண்ணுமில்ல.. சாங் லிரிக்ஸ்.. யோகி எழுத்துவான்.. அவனுக்கு கவிதை நல்லா எழுத வரும்..”
என சுதாரித்து அவர் கேள்விக்கு விடையளித்தாள்.
“ஓஹ்.. டிரம்ஸ் வாசிக்கிற பையன் தானே யோகி.. நைஸ்.. எனக்கு பிடிச்சு இருந்தாலும் கன்டெஸ்டன்ட் செலேக்டினுக்கு ஒரு டீம் இருக்கு.. அவங்க ஒபினியன் கேட்காம உனக்கு எந்த நம்பிக்கையும் கொடுக்க விரும்பல.. அதான் இத்தனை நாள் உன்கிட்ட எதுவும் சொல்லல… இப்ப நான் பேசிட்டேன்.. அவங்களுக்கும் பிடிச்சிடுச்சு.. அக்சுவலீ நீ என் பொண்ணுன்னு நா யாருக்கும் சொல்லல.. உண்மையாவே உங்க டேலன்ட் பார்த்து ரொம்ப இம்ப்ரெஸ் ஆகிட்டாங்க..”
என புன்னகைத்து,
“இந்த சீசன் முடிய போகுது இல்லையா.. அதனால அடுத்த சீசன் காண தேடல் ஆரம்பிச்சாச்சு.. நான் கூப்பிடும் போது ஆபிஸ் வாங்க.. ஒரு ஆடிஷன் மாதிரி வைப்பாங்க.. அங்க ஷோ எப்போ என்ன என்ற எல்லா டீடெயில்ஸும் கிடைக்கும்..”
என்று சொல்ல சக்தியின் ஸ்தம்பித்த நிலை மாறவில்லை. காரணம் அவர் சொன்ன விஷயம் மட்டுமல்ல.. பேசிய விதமும் தான்.
யாமினி இத்தனை பரிவோடு விளக்கி பேசுவாரா என்று தான் பார்த்து
இருந்தாள். இப்படி அமர்ந்து அவளோடு அவர் பேசியதாய் ஞாபகம் நினைவடுக்கில் தேடியும் கிட்டவில்லை. இவ்வளவு நேரம் ஆரியனுடன் வீம்பாய் முரண்டிய அதே மனம் யாமினியின் இந்த அணுகுமுறையில் சற்று தடுமாறி தான் போனது.
‘நாம நினைக்கிற அளவுக்கு இவங்க கிடையாதோ..!! ஆரியன் சொல்ற மாதிரி நான் இறங்கி வந்து பேசி இருந்தால் எல்லாம் சரி ஆகி இருக்குமோ.. இவ்வளவு நேரம் கரிச்சு கொட்டினேன்.. இப்ப எனக்கு அவங்க ஃபேவர் பண்ணும்போது என்ன சொல்றதுன்னே தெரியலையே.. கில்ட்டியா இருக்கு.. “
என அவள் தன்னுள்ளே குழம்பி இருக்க,
பேசிய அவரோ அவள் பதில்களுக்கு எல்லாம் காத்திருக்கவில்லை. தன்னிடம் அளந்து பேசும் சக்தி இதற்கும் பெரிதாக எந்த எதிர்வினையும் காட்டமாட்டாள் என்று அவருக்கும் தான் தெரியுமே..!!
“ஆல் த பெஸ்ட்..” என்றத்தோடு அவர் எழுந்துக் கொள்ள தன் சிந்தனையில் இருந்து மீண்டு,
“தேங்க்ஸ் ம்மா.. இந்த வாய்ப்பு கிடைக்கும்ணு எதிர்பார்க்கவே இல்ல..”
என்று தயக்கமாய் கூற அவரோ,
“யூ கைஸ் ஒர்த் ஃபார் இட்.. அத்தோட இது வெறும் ஆரம்பம் தான்.. இதையே பெருசா பார்த்தால் அடுத்தடுத்ததுக்கு எல்லாம் மனசு துணியாது..” என புன்முறுவலோடு சொல்லி செல்லவும் ஆரியன் சொன்னது தான் மீண்டும் மீண்டும் அவளுள் ஒலித்தது. அதன் விளைவாய்,
“ம்மா..” என்று போனவரை அழைக்க என்னவென்று பார்த்தவரிடம்,
“அது வந்து.. ஏதோ முக்கியமான விஷயம் சொல்லணும்னு ரொம்ப நாளா சொல்றீங்க.. பட் மறந்துடுறீங்க.. அதான் ஞாபக படுத்தலாம்னு..”
என முதன்முறையாய் அவரோடு சுமூகமான பேச்சை வளர்க்க நினைத்து கேட்டாள். இதனை கேட்காமலே இருந்திருக்கலாம் என தானே நொந்துக்கொள்ள போவதை அறியாமல்…
அதுவரை இருந்த இலகு நிலை மறைந்து ஒருவித தவிப்பு அவரை சூழ,
“என்னைவிட உங்க அப்பா வந்து சொன்னால் சரியா இருக்கும்னு தான் வெயிட் பண்ணேன்.. ஆனால் அவரை நம்பி எப்பவும் பிரயோஜனம் இல்லையே..”
என சொல்ல அவளுக்கு எதுவோ சரியில்லை என உள்மனம் ஸைரன் அடிக்க காரணம் அறியும் முன்பே அவளுக்கும் பதட்டமாய் இருந்தது.
‘எதாவது சின்ன விஷயமா இருக்கும்.. இவங்க தான் பில்டப் கொடுக்கிறாங்கன்னு நினைச்சு இருந்தோமே.. ஆனால் இவங்க முகத்தை பார்த்தால் கண்டிப்பா நல்ல விஷயம் இல்லைன்னு தோணுது.. கடவுளே…’
ஏதேதோ குதர்க்கமாய் எண்ணியப்படி
அவள் பார்க்க ஒரு நெடுமூச்சோடு தன் உணர்ச்சிகளை எல்லாம் அப்புறப்படுத்தி,
“நானும் விஷாகனும் டிவோர்ஸ் பண்ணிக்கிற முடிவில் இருக்கோம் சக்தி..”
என அலுங்காமல் ஒரு இடியை இறக்கினார் யாமினி.
“என்னது.. புரியல..”
தான் கேட்டது சரிதானா என்ற அதிர்ச்சியோடு பார்க்க,
“உனக்கு சரியா தான் கேட்டுச்சு..”
என்று அவர் அமைதியாய் கூறவே என்ன சொல்வாள் அவள். பேச்சின்றி அப்படியே பார்த்தப்படி அமர்ந்திருந்தாள். சற்று முன் அவர் கொடுத்த மகிழ்ச்சியை அவரே மொத்தமாய் வீசி எறிந்தது போல் இருந்தது.
விவாகரத்து..??!!! அதுவும் இத்தனை வருடங்களுக்கு பின்னர்..!! பெரிதாய் இருவரும் இணக்கம் இல்லாமல் இருந்தது அவர்களின் இயல்பு என்ற கண்ணோட்டத்தில் இருந்தவளுக்கு இந்த செய்தி பேரதிர்ச்சியாய் இருந்தது.
பெற்றோர்கே உரிய இலக்கணம் இவர்களின் கோட்பாட்டில் வேறு மாதிரி இருந்தாலும் அவள் உலகம் அவர்களை மையப்படுத்தி தானே இத்தனை காலமும் இயங்கி வந்தது. பிடித்தாலும் பிடிக்கவில்லை என்றாலும் அவளின் உறவு என சொல்லி கொள்ள யாமினி, விஷாகன் தவிர யாருமில்லையே..!! அந்த அடித்தளமே ஆட்டம் காணும் வகையில் அவர்கள் எடுத்த முடிவு அவள் உயிர் வரை தாக்க,
“ஏன் ம்மா..” என்றாள் உடைந்த குரலில்.. கோபம் எல்லாம் தாண்டி அழுகை தான் வந்தது.
“உங்க அப்பா வேற கல்யாணம் பண்ண போறாராம்.. அவ்வளவு தான் என்னால சொல்ல முடியும்..இதை பத்தி வேற எதுவும் கேட்கணும்னா உங்க அப்பா வந்திடுவார்.. அவர் கிட்டயே கேளு..”
என தன் கைவிரல்களை பார்த்தபடி யாமினி சாதாரணமாய் சொல்ல தேங்கி இருந்த கண்ணீர் கன்னத்தில் வழிய சிலையாய் பார்த்து இருந்தாள் சக்தி. இந்த வயசில் தன் தாய் தந்தைக்கு விவாகரத்து, தந்தையின் மறுமணம் இதையெல்லாம் தாங்கி கொள்ளும் மன தைரியம் அவளிடம் இல்லை..
அவள் அழுகை அதிகம் ஆக,
“ஹே.. சக்தி.. ஏன் இப்ப அழுகுற.. இங்க பார்.. அழாத சக்தி.. காம் டவுன்..”
என்ற அவரின் சமாதானங்கள் எதுவும் எடுப்படவில்லை. அவளையும் மீறி கண்ணீர் பெருகியது.
“லுக்.. நீ சின்ன பொண்ணு கிடையாது.. நான் சொல்லி புரியவைக்க எதுவும் இல்ல.. உன் வாழ்க்கை எங்களை சார்ந்தும் இல்ல.. அப்புறம் எதை நினைச்சு அழுகிற.. சொசைட்டி நினைச்சா..?? இதுவரை எங்களை பற்றி பேசாத பேச்சா.. புதுசா பேச போறாங்க..
இதுவரை நானும் உன் அப்பாவும் அப்படி தான் வாழ்ந்து வந்து இருக்கோம்.. இப்போ அது அஃபிஸியல் ஆக போகுது அவ்வளவு தான் வித்தியாசம்.. அவர் வேற கல்யாணம் பண்றதால நம்ம லைப்ல எந்த மாற்றமும் வர போவது இல்ல சரியா.. டோன்ட் க்ரை..”
என சமாதானம் சொன்ன மணுஷியை விசித்திரமாய் தான் பார்க்க தோன்றியது..
‘இவருக்கு எல்லாம் ஃபீலிங்ஸே இருக்காதா.. இவரோட புருஷன் வேற கல்யாணம் பண்ணிக்க போற விஷயத்தை கூட எவ்வளவு சாதாரணமா சொல்றாங்க.. இத்தனை வருஷம் இவங்க வாழ்ந்த வாழ்க்கையோட அர்த்தம் தான் என்ன..’
தாள முடியாமல் தன் கையில் முகத்தை புதைத்து கொண்டு அழுதவளை எப்படி தேற்றுவது என புரியாமல் யாமினி நிற்க அதே சமயம் வீடு வந்து சேர்ந்தார் விஷாகன்.
சற்று அடர்ந்த தாடி மீசையும் முரடான தோற்றமும் அவரை முதல் பார்வையில் மருத்துவர் என்று யாராலும் கணிக்க முடியாது. ஆனால் இந்த வயதிலும் ஃபிட்டாக இருந்தார் மனிதர். விஷாகனையும் யாமினியையும் பார்த்தால் அழகான ஜோடி என்ற எண்ண தோன்றும். ஆனால் பொருத்தம் தோற்றத்தில் இருந்தால் போதாதே..!!
கதவு திறந்து இருந்ததால் தன் ட்ரோலியை தள்ளிக் கொண்டு உள்ளே வந்தவர் அம்மா – மகள் இருந்த நிலையை பார்த்த வினாடியில் ஏதோ நடந்திருக்கிறது என புரிய,
“ஹே சக்தி…”
என்று அழைத்துபடி அவள் அருகில் வர நிமிர்ந்து அவரை ஒரு பார்வை பார்த்தவள் வேகமாய் எழுந்து அறைக்குள் சென்று மறைந்தாள்.
“என்னாச்சு அவளுக்கு..”
என குழப்பமாய் பார்த்த விஷாகனுக்கு,
“டிவோர்ஸ் பத்தி சொன்னேன்.. அதனால தான்..”
என பதில் கொடுத்தார் யாமினி. அதில் அவர் முகம் மாற,
“உன்னை யார் சொல்ல சொன்னது.. நான் தான் பேசிக்கிறேன்னு சொன்னேன்ல..”
என எரிச்சலாய் கேட்டவரிடம்,
“நீங்க எப்போ வருவீங்கன்னு என்னால காத்திட்டு இருக்க முடியாது.. அவ கேட்டா நான் சொன்னேன்.. நீங்க சொன்னால் மட்டும் அவ அப்படியே சந்தோஷ பட போறா பாருங்க..”
என்றார் அவரும் குத்தலாய்..
“ம்ச்.. நீ எப்படி சொன்னியோ.. பார்.. என்னை ஏதோ வில்லன் மாதிரி பார்த்துட்டு போறா… ஒரு விஷயத்தை எப்படி பக்குவமா கையாளனும் உனக்கு தெரியாது.. செதறு தேங்காய் மாதிரி போட்டு ஒடைச்சு இருப்ப… காட்.. உன்னோட..”
“உள்ளதை உள்ளபடி தான் சொல்ல முடியும்… உங்களுக்கு குறுகுறுத்தா நான் ஒன்னும் பண்ண முடியாது..”
என சொல்லி அங்கிருந்து சென்றவரை வெறித்த பார்வையோடு நோக்கினார் விஷாகன்.