வீடு முழுவதும் பூக்களாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு அதனை இன்னும் மெருக்கேற்றும் வண்ணம் சொந்த பந்தங்களால் நிறைந்து இருந்தது.
அன்றைய நாளின் நாயகியான மேக்னா எதிர்பார்ப்பும் படபடப்பும் சந்தோஷமும் என கலவையான உணர்வுகளோடு தோழிகளின் உதவியில் தயாராகி கொண்டிருக்க வெளியே அனைவரையும் வரவேற்று உபசரிப்பதில் திருவும் ரம்யாவும் பரபரப்பாய் திரிந்தனர். அதிலும் திருவின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி..!! அத்தனை பெருமிதம்..!!
காரணம் இந்த வீடு தான்.. வீட்டின் கிரஹப்பிரவேசம் பெரிதாய் செய்யவில்லை ஆதலால் இவர்களின் புதிய வீட்டிற்கு உறவினர்கள் கூடுவது இதுவே முதல் முறை..!! வந்திருந்த பலரும் பேசியது,
“வீடு ரொம்ப அழகா இருக்கு திரு.. சொந்த வீடே இல்லனு பேசியவன் வாயெல்லாம் அடைச்சு போறா மாதிரி
அட்டகாசமா கட்டி இருக்க.. நீ சின்ன வயசுல இருந்து எவ்வளவு கஷ்டப்பட்டு மேல வந்தன்னு தெரியும்.. உன்னை இப்படி பார்க்கவே சந்தோஷமா இருக்கு..”
என்பதை தான்..!!
நடுத்தரவர்க்க மக்களின் முதல் ஆசையும் கனவும் வீடாக தான் இருக்கும்..!!
கடனை உடனை வாங்கி கூட கட்டி இருக்கலாம் என்றாலும் பின்னர் அந்த கடனை சமாளிக்க வேண்டுமே என்ற தயக்கத்தில் வீட்டிற்கான அடியை எடுத்து வைக்காமல் இருந்த திருவை, தான் சம்பாதிக்க தொடங்கிய பின் பேசி தன் வழிக்கு கொண்டு வந்தான் ஆரியன். அதன்பின் எல்லாம் அவனின் திட்டமிடல் தான்.. எதிலும் குறைவின்றி நவீன வசதிகளோடு வீட்டை பார்த்து பார்த்து செதுக்கி இருக்க இன்று சொந்தங்கள் எல்லாம் பேசும் போது மகனை எண்ணி பெருமையாய் இருந்தது.
“எல்லாம் ஆரியனுடைய யோசனை தான்.. எல்லா கஷ்டமும் பிள்ளைங்களுக்காக தானே.. என் பசங்க ரெண்டுமே பொறுப்பான பிள்ளைங்க.. அதுவும் ஆரியன்.. எல்லா விஷயத்தையும் அப்படி புரிஞ்சு நடந்துப்பான்..அவன் இருக்கும் போது இனி எனக்கு எந்த கஷ்டம் வர போகுது..”
என அவரும் பதிலுக்கு சலிக்காமல் பெருமை பேச தவரவில்லை..
அவ்வாறு எங்கு திரும்பினும் மகிழ்ச்சியே நிறைந்திருக்க அதற்கு மாறாய் ஆரியன் மட்டும் எதிலும் முழுவதுமாய் கவனம் வைக்க முடியாமல் தடுமாறி டென்ஷனோட சுற்றினான்.
ஒரு வாரமாய் சக்தியிடம் எந்த அழைப்போ குறுந்செய்தியோ இல்லை. கடைசியாய் அன்று இரவு கடுப்போடு பேசி வைத்தது. அதன்பின் அவளின் அலைபேசியை தொடர்ப்பு கொள்ள முடியவில்லை. குறுஞ்செய்திகளும் ஒற்றை டிக்கோடு நின்றது. முதலில் கோபத்தில் தான் வேண்டுமென்றே செய்கிறாள் என்று எண்ணி இருந்தவன் அதுவே இரண்டு நாட்களாய் நீடிக்கவே ‘என்ன ஆனது..’ என்ற பயம் பிடிக்க தொடங்கியது.
எந்த சண்டைக்கும் இத்தனை நாள் எல்லாம் பேசாமல் இருந்ததே இல்லை. திட்டிக் கொண்டாவது அவனோடு பேசிவிட வேண்டும் அவளுக்கு.. எனவே வேறெதோ பிரச்சனை என்று தோன்ற எங்கே.. யாரிடம் விசாரிப்பது.. என புரியாமல் தவித்தான். அவளின் நண்பர்கள் யாரையும் கூட தெரியாது.
நேரில் செல்லவும் முடியாதப்படி மேக்னாவின் நிச்சயதார்த்தம் சில நாட்களில் இருக்க கிட்டத்தட்ட பைத்தியம் பிடிக்காத குறை தான்..
இந்த ஒரு வாரத்தில் அரைமணி நேரத்துக்கு ஒருமுறை அவள் எண்ணிற்கு முயன்று கொண்டே தான் இருந்தான். ஒரு முறையாவது எடுத்துவிட மாட்டாளா என்ற எதிர்பார்போடு..!!
ஒவ்வொரு தடவையும்,
‘ஒரு எமெர்ஜன்ஸிக்கு கூட யாரையும் தெரிந்து வைத்துக் கொள்ளாமல் இருந்து விட்டோமே.. என்னாச்சு அவளுக்கு.. கடவுளே என் சக்தி பத்திரமா இருக்கணும்..’
என மனம் தவிக்க அங்கே இங்கே விசாரித்து ஒரு வழியாய் காலையில் தான் கௌதமின் அலைபேசி எண் கிடைத்தது.
தான் யாரென்று அறிமுகப்படுத்தி கொண்டு சக்திஸ்ரீயை பற்றி கேட்க,
“என்னானு தெரியலையே ப்ரோ.. டியூஸ்டே ‘வாய்ஸ் எக்ஸ்பெர்ட்ஸ் ஆடிஷன்காக போய் இருந்தோம்.. அன்னைக்கே கொஞ்சம் மூட் அவுட்ல தான் இருந்தாள்.. என்னனு கேட்டதுக்கும் சரியா பதில் சொல்லல.. லாஸ்ட்டா அன்னைக்கு தான் பேசினது..”
என்று அவன் சொன்ன தகவலில்,
“ஆமா ப்ரோ.. அடுத்த சீசன்ல நாங்க கலந்துக்க போறோம்.. ஆல் கிரெடிட்ஸ் கோஸ் டு யாமினி ஆண்ட்டி.. அவங்க தான் எங்களுக்கு எல்லாமே கைட் பண்ணாங்க..”
என கெளதம் கூறியது இன்னும் அவனை குழப்பவே செய்தது. இதுவும் சுமூகமாய் போய்விட்டபின் வேறு என்ன பிரச்சனையாக இருக்கும் என்ற யோசனையோடு,
“எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா கெளதம்.. சக்தி வீட்டுக்கு போய் கொஞ்சம் என்னாச்சுன்னு பாக்கறீங்களா.. அவளை பார்த்ததும் உடனே எனக்கு கால் பண்ணுங்க.. ப்ளீஸ்..”
என்று சொல்ல,
“நான் போயிட்டு உங்களுக்கு கால் பண்றேன் ப்ரோ..”
என்று அவனும் கூறி சென்றிருக்க அவனின் அழைப்பிற்காக தான் காலையில் இருந்து காத்திருந்தான். ஆனால் இப்ப வரை எந்த தகவலும் இல்லாததால் மனம் சோர்ந்து போனது.
“மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்க…”
என யாரோ சொல்லும் குரல் கேட்டு தன் நினைவில் இருந்து மீண்டவன் வாசலுக்கு விரைந்தான்.
“எங்க டா போன.. எவ்வளவு நேரம் தேடுறது..”
என்ற அன்னையிடம்,
“கொஞ்சம் வேலையா இருந்தேன் ம்மா ..”
என்றவன் வேறு கேள்விகளுக்கு இடம் கொடுக்காமல்,
“வாங்க மாமா.. வாங்க அத்தை.. வாங்க.. வாங்க..”
என்று வரவேற்றபடி வெளியே வந்து அவர்களை அழைத்தான். சீரவரிசை தட்டுகள் சுமந்து உறவுகள் சூழ மாப்பிள்ளையின் குடும்பமும் வந்துவிட புதிய சொந்தங்களிடம் அறிமுகமும் தெரிந்தவர்களிடம் நலம் விசாரிப்பு என அங்கே இன்னும் பரபரப்பு அதிகரித்தது.
மாப்பிள்ளை ஆக போகும் கார்த்திக்கை தோளோடு அணைத்த ஆரியன்,
“வாங்க மாப்ள.. எப்படி இருக்கீங்க..”
என்று புன்னகையோடு பேச,
“கார்த்திக்ணு தானே கூப்பிடுவீங்க ஆரியன்.. திடீர்னு ஏன் இந்த மாப்ள.. வேப்பிள எல்லாம்…?”
என்றான் அவனும் சிரிப்போடு..
“இன்னைக்கு மாப்பிள்ளை தானே நீங்க.. அதான் ஸ்பெஷல் வரவேற்பு..”
“அட போங்க.. இதுல என்ன ஸ்பெஷல்.. உங்க தங்கச்சியும் வந்து வெல்கம் பண்ணி இருந்தால் ஒருவேள ஸ்பெஷலா இருந்திருக்கும்.. எங்க.. கண்லே காட்ட மாடடேங்கிறீங்களே…”
“ஆஹான்.. அப்படியே பேசாதவர் மாதிரி தான்.. ஆனால் அவ இப்ப இங்க எங்கயாவது நின்னு உங்கள தான் பார்த்துட்டு இருப்பா..”
“அப்படியா..” என ஷர்ட் காலரை சரி செய்தப்படி பார்வையை சுழலவிட ஆரியன் சொன்னது போலவே உள்அறையின் வாயிலில் மேக்னா நிற்பதை கண்டதும் அவன் இதழ்கள் சிரிப்பில் விரிந்தது.
“என்ன சிலை ஆகிட்டீங்க.. பார்த்தது போதும் கார்த்திக்.. அவளையும் இங்க தான் கூட்டிட்டு வர போறாங்க.. வாங்க..”
என்று சொல்ல சிரிப்போடு நகரந்தவன் அப்பொழுது தான் ஆரியனிடம் ஒருவித சோர்வாய் உணர்ந்து,
“நீங்க ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க ஆரியன்..”
என்று கேட்க,
“அதெல்லாம் ஒண்ணுமில்லயே..”
என அவன் வாய் சொன்னாலும் கண்களின் கலக்கம் அப்பட்டமாய் தெரிந்தது.
“ஆனா உங்களை பார்த்தால் அப்படி தெரியலையே.. எதுவும் பிரச்சனையா..?? எதுவா இருந்தாலும் மறைக்காமல் சொல்லுங்க..”
என அவனும் சீரியசாய் பேச,
“அட.. என்ன கார்த்திக்.. நீங்க வேற.. கொஞ்சம் டையர்ட்.. பொண்ணோட அண்ணன்னா இது கூட இல்லாமல் எப்படி…”
என்று ஆரியன் உறுதியாய் சொல்ல அதில் நம்பியவனாய்,
“ஓகே.. ஆனா எதுவா இருந்தாலும் ஒரு பிரென்ட்டா நினைச்சு ஓபனா சொல்லுங்க ஆரியன்.. நமக்குள்ள தேவையில்லாத பார்மலிட்டிஸ் எதுவும் வேண்டாம்..”
என்க கார்த்திக்கின் அந்த வார்த்தைகள் அந்நேரத்திலும் ஒரு மகிழ்வை தந்தது.
நல்ல நேரம் தொடங்கவும் நிச்சய சடங்குகள் ஆரம்பமாக ஆரியனின் மனதில் ஆயிரம் குழப்பமும் கவலையும் அழுத்தினாலும் அனைத்தையும் தன்னுள்ளே புதைத்து தங்கையின் முக்கிய தருணத்தில் கவனமானான். இறுதியாய் நிச்சயபத்திரிகை வாசித்து முடித்த பொழுது கௌதமிடம் இருந்து அழைப்பு வர அங்கிருந்து தள்ளி வந்தவனாய்,
“சொல்லுங்க கெளதம்.. என்னாச்சு.. பக்கத்துல சக்தி இருக்காளா..”
என பரபரக்க,
“இல்ல ஆரியன்..” என்றவன்
“நான் போனப்ப ஸ்ரீ வீடு பூட்டி இருந்துச்சு.. காலேஜ்ல இருப்பான்னு நினைச்சு அங்க போனேன்.. ஆனால் அங்க அவ ஒன் வீக்கா வரலைன்னு சொல்றாங்க..”
என்று சொல்ல திக்கென்று ஆனது.
“காலேஜே போகலையா..”
சக்தி அவ்வளவு எளிதில் விடுப்பு எடுக்க கூடியவள் அல்லவே..
“ஆமா ப்ரோ… நீங்க முதலில் சொன்னபோது கூட நான் சீரியஸா நினைக்கல.. பட் காலேஜ்ல பெர்மிஸ்ஸனும் எடுக்காமல் திடிர்னு லீவ் எடுத்து இருக்கிறது ஏதோ சரியில்லைனு தான் தோணுது..”
என அவனும் கவலையாக சொல்லவும்
ஏதேதோ நினைவில் எழுந்து ஆரியனை அச்சுறுத்த அவன் உலகமே செயலிழந்தது போல் இருந்தது.
“உங்க பிரண்ட்ஸ் யார்கிட்டயாவது எதாவது சொன்னாளா கேட்டு பாருங்க கெளதம்.. நான்.. நான்.. நாளைக்கு அங்க வந்திடுவேன்.. அதுவரை கொஞ்சம் அங்க இங்க விசாரிச்சு பாருங்க..”
என்று தைரியம் சொல்லி அழைப்பை வைக்க, ‘அவளுக்கு எந்த பிரச்சனையும் இருக்க கூடாது கடவுளே..’ என்பதை தான் அவன் மனம் விடாது வேண்டியது.
அவனின் தொடர் வேண்டுதலுக்கு ஒரு வழியாய் இறைவன் செவி சாய்த்து
விட்டார் என்பதற்கு சாட்சியாய் ஆரியனின் அலைபேசி மீண்டும் இசைக்க ‘கெளதம் தானோ..’ என்று வேகமாய் எடுத்தவன் அதில் அன்நோன் நம்பரை கண்டு சுரதேன்றி ஏற்று காதில் வைக்க,
“ஆர்யா..” என்ற சக்தியின் குரலை கேட்ட நொடி அவன் மனம் அடைந்த நிம்மதியும் உவகையையும் விவரிக்க வார்த்தைகள் போதவில்லை.
அதனை உள்வாங்கி கண்களை மூடியவன் விழியோரம் நீர்துளிக்க
ஒரு வாரமாய் அவனை ஆட்டி படைத்த வலியும் பயமும் ஒன்றாய் அழுத்த,
“என்னடி ஆச்சு உனக்கு..??? எங்க இருக்க இப்ப நீ..”
என்பதற்குள் மூச்சடைத்தது.
அவனை விட பல மடங்கு மனஉளைச்சலில் வதங்கிய பெண்ணவளுக்கும் இத்தனை நாள் சென்று கேட்கும் தன் மன்னவனின் குரலில் கட்டுக்கடங்காமல் உணர்வுகள் வெடிக்க வார்த்தைகள் நடுக்கத்தோடு வந்தது.
“ஆர்யா.. எனக்கு எதுவும் வேணாம்னு விட்டுட்டு உன்னை மட்டுமே நம்பி வந்தால் நீ.. நீ என்ன செய்வ.. என்ன முடிவு எடுப்ப..”
தலையும் இல்லாது வாலும் இல்லாது அவள் கேட்டதில் அவன் ஒரு நிமிடம் குழம்பினாலும் சட்டென்று மண்டையில் அலராம் அடிக்க,
“என்ன சக்தி.. ஏன் இப்படி சொல்ற.. என்ன நடந்துச்சு..”
என்றான் பதற்றமாய்..
ஏனெனில் சக்தி மிகவும் உணர்ச்சிவசப்படும் சமயங்களில் பின் விளைவுகளையோ சூழ்நிலைகளையோ யோசிக்காமல் சட்டென்று முடிவெடுத்து விட்டு அதனால் எழும் இன்னல்களை சமாளிக்க முடியாமல் திணறிய சம்பவங்கள் அடிப்படையில் இன்றும் அவ்வாறே ஏதோ செய்திருக்கிறாள் என்ற உண்மை புலப்பட அவனை பதற்றம் ஆட்கொண்டது.
மறுமுனையில் அவளிடமோ மெல்லிய விசும்பல் தான் பதிலாய் கிடைத்தது.
அழவே கூடாது என்று தான் நினைத்து இருந்தாள். ஆனால் அவன் குரலை கேட்டதும் அவனிடம் தான் ஆறுதல் தேடியது மனம்..!!
“சக்தி.. முதல்ல ரிலாக்ஸ் ஆகுடா.. அழாத.. எதுவா இருந்தாலும் நான் இருக்கேன்.. சரியா.. ப்ளீஸ் கண்ணம்மா.. கால்ம் டவுன்..”
என மென்மையாய் சமாதானம் செய்ய அது அவன் அணைத்து வருடி கொடுத்தது போல் அத்தனை இதமாய் இருந்தது அவளுக்கு..!!
அதில் சற்று தெளிவு பெற்றாலும் தான் கூறப்போவதை கேட்டு நிச்சயம் சாமியாடிவிடுவான் என தெரிந்தவளாய்,
“சாரி.. உன்னை ரொம்ப தவிக்க வைச்சுட்டேன்…”
என்று மெதுவாய் சொல்ல,
“அது முக்கியம் இல்ல.. ஒரு வாரமா காலேஜ்ஜும் போகாம இப்ப எங்க இருக்க நீ.. எதுக்கு அப்படி ஒரு கேள்வி கேட்ட சக்தி.. என் மனசு சொல்ற விஷயம் உண்மையா இருக்க கூடாதுனு நினைக்கிறேன்..”
அதட்டலின்றி அமைதியாய் அழுத்தமாய் அவன் பேசியது புயலுக்கு முன்னான அமைதியாய் தோன்றியது.
அவன் கேள்விக்கு பதில் சொல்ல இயலாமல் பதட்டதோடு தரையில் காலை தட்டியப்படி சுற்றம் நோக்க அவளுக்கு மாறாய் மிக இயல்பாய் இயங்கி கொண்டிருந்தது அந்த இரயில் நிலையம்..!!
அவளுக்கு ஃபோன் கொடுத்த பெண் மட்டும் அருகே இவளை பார்த்தப்படி நிற்க சீக்கிரம் பேச வேண்டிய அவசியத்தை உணர்ந்து,
“நான் காட்பாடி ஜங்ஷன்ல இருக்கேன்.. வேற எதுவும் இப்ப கேட்காத ப்ளீஸ்.. நீ நேர்ல வா ஆர்யா.. என்னை கூட்டிட்டு போ..”
என தவிப்பாய் அவள் கூறிக் கொண்டிருந்த அதே நேரம்,
“ஆர்யா .. மாப்ள உன்னை தான் கேட்டுட்டே இருக்கார்.. அங்க நிக்காம இப்ப யார்கிட்ட அப்படி பேசிட்டு இருக்க.. பந்தி வைக்க நேரம் ஆகிடுச்சு.. சீக்கிரம் வா..”
என்று யாரோ பின்னால் சொல்வதும் அதற்கு,
“இதோ.. இதோ வந்துட்டேன் ப்பா..” என்று அவன் பதில் சொல்வதும் கேட்க,
‘இன்னைக்கு என்ன..’ என்று யோசித்தவளுக்கு மேக்னாவின் நிச்சயம் நினைவில் வர வெளிப்படையாகவே நெற்றியில் படபடவென அடித்துக் கொண்டாள்.
‘அறிவே இல்லை டி உனக்கு.. உன்னை பத்தி மட்டும் யோசிச்சியே.. அவன் நிலைமையை யோசிச்சு பார்த்தியா..’
என்று எண்ணியவளுக்கு டென்ஷன் எல்லையை கடக்க அவன் எதுவும் கூறும் முன்னரே,
“ஹே.. சாரி.. சாரி.. சாரிடா.. எனக்கு சுத்தமா நியாபகம் இல்ல.. இல்லைனா இப்ப வந்திருக்கவே மாட்டேன்.. என்னோட சூழ்நிலை என்னை இப்படி செய்ய வைச்சது.. உன்கிட்ட சொல்லி இருக்கணும்.. ஆனால் எங்க நீ வேணாம்னு சொல்லி கனவின்ஸ் பண்ணுவியோன்னு தான் சொல்லாம கிளம்பிட்டேன்.. தப்பு தான்.. சாரி டா.. நீ இப்ப அங்க தான் இருக்கணும்.. நீ என்னை நினைச்சு டென்ஷன் ஆகாத.. நான் பார்த்துகிறேன்.. எனக்கு பிரச்சனை இல்ல ஆர்யா.. நான் கிளம்புறேன்..”
என படபடவென தானாய் விளக்கம் சொல்ல,
“என்ன பார்த்துப்ப நீ.. மறுபடியும் கிளம்பி வேற எங்கயாவது போகவா..”
என்று அடிக்குரலில் சீறினான். அவனுக்கும் அந்த சூழ்நிலையை கையாள முடியாமல் கோபம் வந்தது. அவன் கோபப்பட்டால் பதிலுக்கு பதில் சீறும் சக்தி இன்று தவறு தன் பக்கம் என்பதால் அமைதி காத்தாள்.
“முதல்ல இது யார் நம்பர்.. உன்னோட போன் எங்க..”
என மீண்டும் அவனே கேட்க,
“ட்ரைன்ல என் கூட வந்த பொண்னோடது.. என் மொபைல் இப்ப என்கிட்ட இல்ல..”
என்று சொல்லவும் மூச்சை இழுத்துவிட்டு தன் கோபத்தை கட்டுப்படுத்தியவனாய்,
“அங்கேயே வெயிட் பண்ணு.. வேற எங்கேயும் போகாத..”
என்று சொல்ல அவளோ,
“ஹே.. வேணாம்னு சொல்றேன்ல.. நான் என்ன குழந்தையா..? இங்க எவ்வளவோ தடவை தனியா வந்திருக்கேன்.. போயிருக்கேன்.. இந்த ஊர் எனக்கு ஒன்னும் புதுசு இல்ல.. நான் என்னை பார்த்துப்பேன்.. நீ இப்ப வர வேண்டாம்..”
என்றாள். உறுதியாய் சொன்னாலும் அடுத்து என்ன செய்வது என்பதை பற்றி எந்த சிந்தனையும் இல்லை. மூளை ஸ்தம்பித்த நிலையில் இருந்தது.
“இப்பவாவது என் பேச்சை கேளு டி.. எனக்கு மேல மேல ஸ்ட்ரெஸ் கொடுக்காத..”
என்பதை மட்டும் அழுத்தந்திருந்தமாய் கூறி வைக்க அலைபேசியை அந்த பெண்ணிடம் நன்றி கூறி திருப்பி கொடுத்துவிட்டு அப்படியே அந்த இருக்கையில் சாய்ந்து விட்டாள்.
அவளுக்கு மட்டும் எல்லாமே தப்பும் தவறுமாய் நடப்பது போல் தோன்றியது. எந்த முடிவிலும் ஒரு உறுதியாய் நிற்க முடியவில்லையே..!! நிமிஷத்திற்கு ஒன்றாய் தன் நிலைமை மாறிக்கொண்டே இருக்க எப்பொழுது தான் இதற்கெல்லாம் முடிவு வரும் என ஏங்கியது மனம்..
ஏனோ தானோ என்று வாழ்க்கை சென்றாலும் ஒரு நிம்மதியோடு தான் இருந்தாள். ஆனால் விஷாகன் – யாமினியின் விவாகரத்து பேச்சு வந்ததில் இருந்து அந்த கொஞ்ச நஞ்ச நிம்மதியும் பறிப்போனது.
தினமும் இருவராலும் சண்டை தான். இத்தனை வருடங்களில் அவர்கள் இப்படி சண்டையிட்டு பார்த்ததே இல்லை. ஒருவேளை அவள் எதிரே நடந்தது இல்லையோ என்னவோ..! இப்பொழுது எதற்கெடுத்தாலும் ஒருவரை ஒருவர் குறை சொல்லி விவாதம் வளர்ந்து கொண்டே போக வீடே நரகம் ஆனது சக்திக்கு..!!
*
தேனீயாய் அங்கே இங்கே ஓடிக் கொண்டிருந்த மக்களிடையே தன் சக்தியை பார்வையால் துழாவியபடி ஓட்டமும் நடையுமாய் வந்தான் ஆர்யன்.
அவன் மனம் உரைத்ததை மெய்பிப்பது போல் தான் அவளும் செய்து வைத்திருந்தாள்.
‘வீட்டை விட்டு வெளியேறும் அளவு என்ன நடந்து இருக்கும்.. இனி என்ன செய்வது..’
என சிந்தனை ஓட்டம் இருக்க கண்களோ அவளையே தேடி திரிய இறும்பு நாற்காலி வரிசைகளில் ஒன்றில் அமர்ந்திருந்தவள் மீது நிலைத்து நின்றது.
நாட்கள் அல்ல.. மாதங்கள் அல்ல.. சில வருடங்கள் சென்று அவளை நேரில் பார்க்கிறான்..!! நியாயமாய் மனம் மகிழ்ச்சி கடலில் மூழ்கி இருக்க வேண்டும்.. ஆனால் முகம் வெளுத்து கண்களில் கருவளையமும் சூழ்ந்து உடல் இளைத்து சோர்ந்த தோற்றத்தில் இருந்தவளை கண்டு மனம் துணுக்குற்றது.
அதுவரை இருந்த கோபம் கூட எங்கோ மறைந்திருக்க வேகமாய் அவளை நெருங்கியவன்,
“சக்தி…” என்று தோள் தொட படடென்று விழித்தவள் அவனை கண்டதும் கண்களில் குளம்கட்ட,
“ஆர்யா..” என்று எழுந்து அப்படியே அவன் தோளில் சாய்ந்துவிட்டாள். அவனின் மஞ்சத்தில் இளைப்பாற தான் இத்தனை தொலைவை கடந்து வந்தவள் போல் அழுகையோடு அவனில் புதைய அவளுக்கு குறையாத உணர்வோடு சக்தியை தன்னோடு தாங்கி கொண்டான் ஆரியன்.
யாருக்கு யார் ஆறுதல் என பிரித்தறிய முடியாமல் உலகம் மறந்து சில நிமிடங்கள் அணைப்பில் கரைய மெல்ல அவளை தன்னிடம் இருந்து பிரித்தவன்,
“என்ன கோலம் இது.. உடம்பு சரியில்லையா.. சாப்பிடுறியா இல்லையா.. கண்ணெல்லாம் உள்ள போய் ஒரு வாரத்தில் ஆளே மாறி இருக்க.. என்ன செய்யுது உனக்கு..”
என தவிப்போடு கேட்க விழி விரிய அப்படியே பார்த்து நின்றாள்.
அவள் இப்படி கிளம்பி வந்தது அதுவும் அவன் தங்கையின் நிச்சயத்தின் போது வந்து நின்றதால் அவன் எத்தகைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என அறிந்தவளாய் தன்னை கண்டதும் ‘திட்டுவானோ.. கத்துவானோ.. சண்டையிடுவானோ.. காரணம் கேட்டு துளைப்பானோ.. தன்னுடைய சூழ்நிலையை உணர்ந்து கொள்வானா’ என பல கேள்விகளோடு குழம்பி இருந்தவளுக்கு அவன் மற்ற எல்லாவற்றையும் விடுத்து அவள் உடல்நிலை அறிவது மட்டுமே முக்கியம் என்பதுபோல் பேசியது ஆயிரம் ‘ஐ லவ் யூ’க்களில் நிறையாத காதலை நொடியில் உணர்ந்த நெக்குறுகி போனாள்.