எரிந்து கருகியிருந்த அந்த ஐந்தடி இடத்தையே பார்த்தபடி அமர்ந்திருந்தான் இன்பன். துக்கமோ, வருத்தமோ எதையும் அவன் முகத்தில் இருந்து கண்டுப்பிடிக்க இயலவில்லை.
நடுநிசியில் அவன் வீட்டு ஆவினங்கள் பெருங்குரலில் அலற, விருட்டென எழுந்த பேரின்பன், அறுவடை செய்த சோளப்பயிர் கட்டுகள் நெருப்பில் குளிப்பதை கண்டு பதறி, துரிதமாய் தண்ணீர் மோட்டரை ஆன் செய்தான். குழாய் வழியே தண்ணீரை அவன் பாய்ச்சி அடிக்க, எரிந்துக்கொண்டிருந்த நெருப்பு கொஞ்சம் கொஞ்சமாய் மட்டுப்பட ஆரம்பித்தது.
ஆரம்பக்கட்டதிலேயே கவனித்து துரிதமாய் வேலை செய்ததால், பெரும் சேதத்தில் இருந்து தப்பித்தாலும், நான்கைந்து கட்டுகளுக்கு மேல் கருகிப்போயிருந்தது. பெரிதான நட்டம் இல்லை என்றாலும் இன்பன் மனதளவில் சோர்ந்து போனான்.
‘எப்படி தீப்பிடித்தது? நெருப்பு வர எந்த வாய்ப்புமே இல்லையே?’ என சிந்தனையில் ஆழ்ந்தவன் அப்படியே அமர்ந்துவிட, பொழுதும் விடிந்து போனது.
கோகிலாவும் தங்கமும் தூக்கம் தொலைந்து அமர்ந்திருந்தனர்.
தங்கம், “உன் மேல கண் திருஷ்டி அதிகமா இருக்கு போல இன்பா! வீட்டோரமா இருந்த பயிருல எப்படி தீ பிடிச்சுருக்கும்? நல்ல வேளை உன் கண்ணுல உடனே பட்டுச்சு… இல்லன்னா என்ன ஆகிருக்கும்?”
இன்பன், “ஹும்ம்! என்னவோ மனசுக்கு வருத்தமா இருக்கத்தை! படபடன்னு அடிச்சுக்குது! ஒன்னும் சரியாப்படல!” என சொன்னவன், “வெளில யாருக்கும் இது தெரிய வேண்டாம்” என்றான் மெதுவாய்.
[the_ad id=”6605″]
“இன்னைக்கு தான் வேலைக்கு யாரும் வர மாட்டாங்களே இன்பா! நீ கண்டதையும் மனசுல போட்டு குழப்பிக்காம இரு!” என்ற தங்கம், “ராத்திரில இருந்து இந்த புள்ளை வெறிக்க வெறிக்க உட்காந்துருக்கு! பயந்து போச்சுன்னு நினைக்குறேன்! நான் சாப்புட ஏதாவது எடுத்துட்டு வரேன், நீ சாயங்காலம் இவளை நம்ம பாய்-க்கிட்ட அழைச்சுட்டு போய் பாடம்(திருஷ்டி கழித்தல்) போட்டுடு!” எழுந்து வீட்டுக்குள் சென்றார்.
கோகிலாவுக்கு நெருப்பின் பின்னணியில் தெரிந்த அந்த உருவம் அவள் கண்ணை விட்டு அகலாது தொல்லை செய்ய, அவன் பேசிய வார்த்தைகள் ரீங்காரம் போல காதை வட்டமடித்துக்கொண்டிருந்தன.
‘ஐ ஹேவ் கம் பார் யூ பேபி…’
‘டுமாரோ வில் பி த லாஸ்ட் டே ஆஃப் யுவர்ஸ்’
மீண்டும் மீண்டும் இதே வார்த்தைகளே அவளை வட்டமடிக்க, ‘அவனை மறுவாழ்வு மையத்துல சேர்த்துட்டதா சொன்னாங்களே அம்மா, அங்கிருந்து தப்பிச்சு வந்துருக்கானா? எனக்காகவா? அப்போ என்னை கொன்னுடுவானா? நான் செத்துடுவேனா? என் மாமாவை விட்டு போய்டுவேனா? அப்போ என் குழந்தை? என் வாழ்கை…?’ அவன் மூளைக்குள் பலவித கேள்விகள்.
தெளிவான பெண் தான் எனினும், கர்பக்கால மன உளைச்சலும், இரவு கண்ட அவன் வன்மமுகமும், அவன் எண்ணத்திற்கு சான்றாய் அவன் வைத்து விட்டு சென்ற நெருப்பும், அவளை ஒரு நிலையில் யோசிக்க விடவில்லை.
அவள் தோளை பிடித்து இன்பன் உலுக்கியபோது தூக்கத்தில் இருந்து விழிப்பவள் போல துள்ளியவளைக்கண்டு, “ரொம்ப பயந்துட்டியாடா?” என்றான் இன்பன்.
‘அவன் எதை நினைத்து கேட்கிறான்?’ என்பதை கூட உணராதவள், கிஷோரின் மீதுள்ள அச்சத்தில், ‘ஆம்’ என தலையாட்ட, அவளை தன் தோளோடு இருத்திக்கொண்டான் இன்பன்.
“ஒன்னும் பெருசா இல்லடா! பாதிக்கு மேல நெருப்புப்படாம காப்பாத்திட்டோம்! நஷ்டம் ஒன்னும் பெருசா இல்லை! பேங்க் லோன் தான் வந்துடுச்சே! தாத்தாக்கிட்ட வாங்குன பணத்தை திருப்பிக்கொடுத்துட்டு, மீதி இருக்க, கரும்பு வாழை எல்லாம் அறுவடை முடிச்சு வித்துட்டா கைல லாபமே நிக்கும்! அதை வச்சு அடுத்த வெள்ளாமை ஆரம்பிக்கலாம்” என்றான் அவளுக்கு சொல்வதை போலவே தனக்கும் சேர்த்து தைரியமாய்!!!
மேற்கொண்டு, “எனக்கு மனசு தான் என்னவோ பண்ணுது கோக்கி! இதே மாறி முன்னொருதரம் இந்த காட்டுல நெருப்பு வந்தப்போ, அடுத்த ஒருவாரத்துல என் அம்மா என்னை விட்டு போய்ட்டாங்க! இப்போ மறுபடி நெருப்பு வந்துருக்கு… என்னவோ இது எனக்கு எச்சரிக்கை செய்யுற மாறி தோணுது! மனசு ஒரு நிலைல நிக்க மாட்டுதுடா” என தன் வேதனையை அவன் சொல்ல, கோகிலாவுக்கு ‘பகீர்’ என்றது.
‘அவன் உள்ளுணர்வின் படி, அவனை விட்டு தான் செல்ல போகிறோமோ? அதற்க்கான அறிகுறியா இது?’ என அவள் வெடவெடக்க, ‘மாமாக்கிட்ட சொல்லிட்டா அவர் நம்மளை காப்பாத்திடுவாரு’ என்ற எண்ணம் வந்ததுமே அவள் முகம் பிரகாசமானது.
இருட்டில் சுற்றியவளுக்கு மின்மினி பூச்சி கண்ணில் பட்டதை போல சிறு தெளிவு பெற்றவள் இரவு தான் கேட்ட, பார்த்த விடயங்களை அவனிடம் சொல்ல வாயெடுக்க, கையில் கம்மங்கூழுடன் அங்கே வந்த தங்கம், “உனக்கு புள்ள வந்த நேரம் வராம இழுத்துக்கிட்டு இருந்த பேங்கு லோன் கிடைச்சுடுச்சு… இப்ப ஏதோ சின்ன சுணக்கம்…! இனி எல்லாம் நல்லதாவே போகும் பாரு! மனச குழப்பிக்காத” என்றார்.
அவர் பேச்சில் தீயிலிட்ட பயிரென சுருங்கியது அவன் முகம்.
“வேணாம் சித்தி! இந்த பேச்சு வேண்டவே வேண்டாம்” என்றான் திண்ணமாய்.
“என்னதுடா? நல்லதா தானே பேசுனேன்?” என தங்கம் யோசிக்க,
“இல்ல சித்தி! நடக்குற எந்த காரியத்துக்கும் புள்ளையை காரணம் காட்டாதீங்க! அது நல்லதோ கெட்டதோ… அதுக்கான பொறுப்பு நம்மலோடதா மட்டும் இருக்கட்டும்! இந்த ‘வலி’ எல்லாம் என்னோடயே போகட்டும். என் புள்ளைக்கும் வேண்டாம்! நல்லதாவே சொன்னாலும் வேண்டாம்” என்றவன் முகம் ஏகத்துக்கும் வாடியிருந்தது.
[the_ad id=”6605″]
அவன் பேச்சில் இருந்த உண்மை சுட, வாய் மூடினார் தங்கம். அவர் மனதும் அவனுக்காய் வருந்தியது.
கோகிலா எச்சில் கூட்டி விழுங்கி, “மாமா…. உங்ககிட்ட நான் ஒன்னு சொல்லணும்” என ஆரம்பிக்க, “சொல்லுடா” என்றான் இன்பன்.
“அம்மா நேத்து பேசுனப்போ அந்த கிஷோர்….” அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே இன்பனின் அலைபேசி கத்தியது.
எடுத்து பார்த்தவன் புருவம் சுருக்கினான்.
தங்கம், “யாரு இன்பா?”
“காண்டீபன் நம்பர்ல இருந்து வருது” என சொல்ல ஆச்சர்யமானவர், “உனக்கு போன் பண்றானா அவன்? எடுத்து என்னனு பேசு” என்றார் ஆவல் கலந்த ஆர்வத்தில்.
கோகிலா பேச வந்தது தடைப்பட, அவஸ்தையாய் அவன் முகம் பார்த்திருக்க, அழைப்பை ஏற்று காதில் வைத்தான் இன்பன்.
“அ…ண்…ணே….!!!” அழுகையுடன் கேட்ட அந்த குரலும், வெளிவந்த வார்த்தையும் இன்பனை பேச்சிழக்க செய்தது. பேசுவது ‘காண்டீபன்’ தானா? என்றே யோசிக்க வேண்டி இருந்தது. கம்பீரமாய் ஒலிக்கும் அவன் குரல் பிசிறடித்து, அழுகையில் கரைந்து சிறு குழந்தை போல ஆதரவு வேண்டி அழைக்கும் தொனியில் இருக்க, திகைத்துப்போனான் அவன்.
அதற்குள், “அண்ணே… பேசுண்ணே…” என அழைத்தான் காண்டீபன்.
“காண்டீபா? என்ன ஆச்சு?” இன்பனின் குரலில் பதட்டம் ஒட்டிக்கொண்டது.
“அண்ணே! தாத்தாவை ஹாஸ்பிடல்ல சேர்த்துருக்கேன். அம்மாயி மயங்கி விழுந்தது, கண்ணே தொறக்கல… எனக்கு பயமா இருக்குண்ணே! நீ வரியா இங்க?” என கதற, இன்பனுக்கு சொல்லிலடங்கா அதிர்ச்சி!
“ரெண்டு பேருக்கும் என்னடா ஆச்சு? என்ன நடந்துச்சு?” என இன்பன் கத்த, இப்புறம் தங்கம் பயந்தார் என்றால், கோகிலாவுக்கு பயத்தில் கண்ணீரே சுரந்தது. ‘கிஷோரின் வேலையாக இருக்குமோ?’ என எண்ணத் தொடங்கினாள்.
“ஐயோ! நீ நேர்ல வாயேன்! எனக்கு அழுகையா வருது!” என்பவனை என்ன சொல்ல என தெரியாமல், இடத்தை கேட்டுக்கொண்டு உடனே கிளம்பினான் பேரின்பன்.
“காண்டீபன் அழுகுறான் அத்தே! எனக்கு ஒன்னும் புரியல… நான் போய் பார்த்துட்டு வரேன்” என விவரம் சொல்லி அவன் கிளம்ப, “ரெண்டு பேருக்கும் முடியலங்குற… பாத்துக்க ஆள் இல்லாம எப்படி இன்பா? எனக்கு இங்க இருப்பே கொள்ளாது! என்னையும் கூட்டிட்டு போ!” என்றார் தங்கம்.
‘அதுவும் சரிதான்’ என நினைத்தவன் பைக்கை கிளப்ப, “மாமா…?” என்றாள் கோகிலா தவிப்புடன்.
“ஒன்னும் பயப்படாதடா! அங்க என்னனு பார்த்துட்டு உனக்கு கால் பண்றேன்! நீ இங்கயே இரு… என்ன?” என அவன் கேட்க, “தனியாவா?” என அதிர்ந்த கோகிலாவை விநோதமாய் பார்த்தான் இன்பன்.
“பகல் நேரம் தானேமா? நம்ம வீட்ல இருக்க என்ன பயம் உனக்கு?” என அவன் கேட்க, “நானும் உன்னோட வரேன் மாமா” என்றாள் அவனிடம் நெருங்கி.
“மூணு பேரு எப்படிடா பைக்ல போறது? முதல்ல அத்தையை அங்க கொண்டு போய் விட்டுடு என்ன விவரம்ன்னு பார்த்துட்டு உடனே வந்து உன்னை கூட்டிட்டு போறேன்! அதிகப்பட்சம் ஒரு மணி நேரம்!!! சரியா?” என்றான் இன்பன்.
“இல்ல மாமா! எ…னக்..கு பய…மா இருக்கு! அ..ந்த கி…ஷோர்…” ஒவ்வொரு வார்த்தையும் திக்கி திக்கி அவள் வாயில் இருந்து வெளிவர, தங்கம், “போலாம் இன்பா! அங்க அப்பா அம்மா எப்டி இருக்காங்களோன்னு என் மனசு அடிச்சுக்குது!!” என்றவர், “நீ கொஞ்ச நேரம் இரு கண்ணு! என்னை அங்க விட்டுட்டு இன்பன் வந்துடுவான்!” என்றார் அவர்.
அதற்குமேல் தாமதிக்க முடியாமல், தெளிவின்றி பயமப்பிக்கிடந்த மனையாளின் வதனத்தை மனதில் கொண்ட படியே சோளக்காட்டை விட்டு வெளியேறினான் இன்பன்.
அவன் கண்ணை விட்டு மறையும் வரை அழுகையை அடக்கிக்கொண்டு பார்த்திருந்தவளின் காதோரம் ஒலித்தது, “ஹாய் பேபி!” என்ற குரல்…!!!
மருத்துவனை வராண்டாவில் இன்பன் வேகமாய் நடந்து வர, தூரத்தில் அவன் வருவதை கண்டதுமே, அமர்ந்திருந்த காண்டீபன் எழுந்து வேகமாய் (கிட்டத்தட்ட ஓடி) வந்தான் இன்பனிடம்.
வந்த வேகத்தில் அவனை அணைத்துக்கொண்டவன், இன்பனின் தோளில் சாய்ந்து கதற, தங்கம் பயத்தின் உச்சத்தை தொட்டார்.
காண்டீபனே கதறி அழும் அளவிற்கு என்றால், தன் தாய் தந்தை இனி தனக்கில்லையோ? எனுமளவு அவர் பயந்து போக, அவர் அளவுக்கு இல்லை என்றாலும், காண்டீபனின் செயலால் இன்பனும் அச்சத்தில் தான் நின்றான்.
தன் தோளை விட்டு நகர மாட்டேன் என இறுக்கமாய் கட்டிக்கொண்டு அழுபவனை என்ன செய்ய? அதையும் மீறி, இத்தனை வருடங்களுக்கு பிறகு, கிடைக்கவே போவதில்லை என்றெண்ணி இருந்த தம்பியின் பாசம், ஒற்றுதல் கிடைக்கையில் அவனால் அத்தனை எளிதில் காண்டீபனை தன்னிடம் இருந்து தள்ளி நிறுத்த முடியவில்லை.
[the_ad id=”6605″]
“காண்டீபா என்னன்னு சொல்லுடா?” அவன் முதுகை ஆதூரமாய் வருடிக்கொடுத்தபடி இன்பன் கேட்க, அதையே தங்கமும் கேட்டு இறைஞ்ச, எதற்கு அழுகிறோம் என்றே தெரியாது, தொலைத்த அத்தனை வருடங்களுக்கும் சேர்த்து மன்னிப்பு கேட்பவன் போல இன்பன் தோளில் கதறிக்கொண்டிருந்தான் காண்டீபன்.
அங்கு வந்துப்போக இருந்த ஒருசிலர் இவர்களை பார்ப்பதைக்கண்டு அவஸ்தையாய் போனது இன்பனுக்கு. ஊரில் பெரும்பான்மையானவர்களுக்கு பரிச்சயமானவர்கள் என்பதால், மற்றவரின் ‘கேள்வி பார்வை’யில் அசௌகர்யமாய் உணர்ந்தான் அவன்.
அதைவிட, பெரியவர்களின் உடல்நிலை வேறு திகிலை கொடுக்க, “என்னனு சொல்லிட்டு தான் அழேன்டா” என்ற இன்பனின் குரலில் கட்டுப்படுத்தியும் சிறு எரிச்சல் எட்டிப்பார்க்க, தன்னை கொஞ்சமாய் சமாளித்துக்கொண்டு நிமிர்ந்த காண்டீபனுக்கு அவன் முகம் காணவே வெட்கமாய் போனது.
போனில் எப்படியோ ‘அண்ணன்’ என விழித்துவிட்டான். நேரில் கண்டதும் ஏதோ உந்துதலில் அவனை சென்று அணைத்துக்கொண்டாலும் இத்தனை நாள் அவன் முகம் கூட பாராமல் அலட்சியப்படுத்தியவனுக்கு, இன்று அவன் முகம் காண அத்தனை அவமானமாய் இருந்தது.
அவன் தவிப்பை ஒருவாறாய் உணர்ந்த இன்பன், “தாத்தாக்கு என்ன?” என்றான்.
காண்டீபன் மௌனமாய், அங்கிருந்த தீவிர சிகிச்சை பிரிவை விரல் கொண்டு சுட்டிக்காட்ட, பாய்ந்து சென்று அதன் கதவில் வழியே தன் தந்தையை பார்க்க முயன்றார் தங்கம்.
பல குழாய்களுக்கும் ஓயர்களுக்கும் நடுவே படுத்திருந்த ஒண்டிவீரரை சுற்றி சிலர் நின்று சிகிச்சை அளித்துக்கொண்டிருக்க, அதை பார்த்த இன்பனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ‘நல்லா இருந்த மனுஷனுக்கு திடீர்ன்னு எப்டி?’ என்ற திகைப்பு அவனை வறுக்க, “ரெண்டு நாள் முன்னாடி தானே கடைல பாத்தேன்! எனக்கு லோன் கிடைச்சுருச்சுன்னு சொன்னபோ கூட அவ்வளோ சந்தோசப்பட்டாரே! திடீர்னு உடம்புக்கு என்ன?” என அவன் கேட்க,
தங்கம், “அம்மா எங்கடா?” என்றார் அழுகையுடன். சற்று தள்ளி இருந்த அறையை காண்டீபன் காட்ட, இன்பனும் தங்கமும் அதற்குள் சென்றனர். ஒரு செவிலியர் அவர் அருகே நிற்க, நிர்மலமாய் கட்டிலில் படுத்திருந்தார் சிவகாமி.
நர்சிடம், “என்னாச்சு?” என இன்பன் விசாரிக்க, “பிபி அதிகமாகி மயங்கிட்டாங்க சார்! இப்போ வரைக்கும் பிபி நார்மல் ஆகலை! அவங்க மனசு ரிலேக்ஸ் ஆனாதான் பிபி நார்மல் ஆகி, அவங்களால கண்ணு முழிக்க முடியும்! ரொம்ப நேரம் இப்படியே இருக்கிறது நல்லதில்லை!” என்றார் சிறு கவலையுடன்.
தங்கம் சிவகாமியின் கரம் பிடித்துக்கொண்டு, அழுகையை அடக்கியபடி பேச ஆரம்பித்தார்.
‘அம்மா, எழுந்திரிங்கம்மா!!!’
[the_ad id=”6605″]
இன்பன் மௌனமாய் வெளியே வந்தான். இருவருக்கும் ஒரே சேர உடல்நிலை மோசமடைகிறதென்றால் என்னவோ நடந்திருக்கும்? என சிந்தித்தவன் கண்கள் சட்டென அங்குமிங்கும் அலைப்பாய, காண்டீபனிடம், “அப்பா எங்க?” என்றான் சந்தேகமாய்.
காண்டீபன் பதில் சொல்லும்முன், ஐசியூ-வை விட்டு வெளியே வந்த மருத்துவர், இன்பனை அடையாளம் கண்டதும் உரிமையுடன், “என்ன இன்பன் இது? லாஸ்ட் டைம் உங்ககிட்ட சொல்லிதானே அனுப்புனேன்? அவர் டென்ஷன் ஆகுறமாறியோ, இல்ல மனசு வருத்தப்படுற மாறியோ எதையும் பேசாதீங்கன்னு!?” என்றார்.
“என்னாச்சு டாக்டர் அவருக்கு?”
“ப்ச்! ப்ர்ஸ்ட் அட்டாக்!” என்றதும், ‘திக்’கென ஆனது அவனுக்கு.
“முதல் அட்டாக்கு அவ்வளவு பயப்பட வேண்டியதில்லைன்னாலும், அவர் வயசுக்கு இது அதிகம்! குடுக்குற வைத்தியத்தை அவர் உடம்பு ஏத்துக்கணும், அதுக்கு அவர் ஒத்துழைக்கனும்! ஹும்ம்!” என்ற டாக்டர், “வீ வில் ட்ரை அவர் லெவல் பெஸ்ட்” என்றதோடு நகர்ந்து செல்ல, சிலையாய் நின்றான் இன்பன்.
காண்டீபன் அருகே வந்து, “தாத்தாக்கு ஒன்னும் ஆகாது” என ஆறுதல் சொல்ல விழைய, “அப்பா எங்கே?” என்றான் இன்பன் கடினமாய்.
“அந்த ஆளு எங்க போனான்னு யாருக்கு தெரியும்! அவரால தான் எல்லாருக்கும் பிரச்சனை!” என சொல்லி முடிப்பதற்குள் இன்பனின் கரம் காண்டீபனின் கன்னத்தில் சூடாய் பதிந்திருந்தது.
‘எனக்கு உங்களை பார்க்கக்கூட பிடிக்கல! உங்கமேல இருக்க கோவத்துல என்னை நானே ஏதாவது செஞ்சுக்குவேனோன்னு பயமா இருக்கு!’ என காண்டீபன் சொன்னதும், மனமுடைந்து வீட்டை விட்டு வெளியேறிய சத்தியராஜன், கால் போன போக்கில் நடக்கத்தொடங்கினார்.
மனம் கடந்து வந்த பாதையெல்லாம் அவர் அனுமதியின்றியே அசைப்போட்டது. முதன்முதலாய் வைதேகி அவர் கருவை தன் மணிவயிற்றில் தாங்கியிருப்பதை அவரிடம் சொன்னபோது, எத்தனை மகிழ்ந்து போனார். தன்னை ‘அப்பா’ என்றழைக்க ஓர் உயிர் வர போகிறதே என்ற விம்மிதம், தனக்கு ‘தந்தை’ என்ற ஸ்தானத்தை தர போகிறவனை பார்க்க அத்தனை ஆர்வம், ஆவல்!
வைதேகி வயிற்றில் காதை வைத்து முதல் நாளில் இருந்தே மகனிடம் பேசியபோது, ‘இப்போ பேசுனா குழந்தைக்கு கேக்காதுங்க’ என சிறு வெட்கத்தோடு தன்னை கேலி செய்த மனைவியிடம், “அதெல்லாம் என் புள்ளைக்கு இந்த அப்பன் குரல் நல்லா கேக்கும்” என கர்வமாய் சடைத்துக்கொண்டு கொஞ்சியதும்,
‘இன்னும் பத்து மாசம் ஆகுமா என் செல்லத்தை பார்க்க? நாளைக்கே பெத்துக்குடேன்’ என அபத்தமாய் மனைவியிடம் கெஞ்சியதும்,
ஒரு பெரிய டப்பாவில் அடைத்திருந்த குங்குமப்பூவை வாங்கிவந்து அவரிடம் கொடுத்து, “இதை தினமும் சாப்பிட்டா குழந்தை சிவப்பா பொறக்குமாம்! என் மகன் உன்னைமாறி அழகா இருக்கணும்! என் நிறம் வேணாம் அவனுக்கு” என சொன்னபோது, ‘மகன்னே முடிவு செஞ்சாச்சா?’ என வைதேகி கேட்டதற்கு, “எனக்கு பையன் தான் பொறப்பான் பாரு” என அவர் ஆரூடம் சொன்னதும்,
“அவனுக்கு இந்த ஊருலயே யாருக்கும் வைக்காத பேரா வைக்கனும்டி! என்ன பேரு வைக்கலாம்!?” என பிறக்காத பிள்ளைக்கு பேர் தேடியதும்,
“அவனை என் கண்ணு முன்னுக்கவே வச்சுக்குவேன்! வளர்ந்து வந்து வெளியூர் போறேன், வெளிநாடு போறேன்னு எல்லாம் சொன்னான்னா அவ்வளவு தான் பார்த்துக்க” என வயிற்றில் இருந்த பிள்ளைக்கு அப்போதே கண்டிஷன் போட்டதும்,
[the_ad id=”6605″]
“கடைசி காலத்துல என் புள்ளை சம்பாத்தியத்துல ஜம்முன்னு உட்காந்து காலாட்டிக்கிட்டே சாப்புடனும்டி!” என கனவு கண்டவரை, ஏகத்துக்கும் வைதேகி கிண்டல் அடித்ததும்…..
எல்லாம் நன்றாய் தானே போய்க்கொண்டிருந்தது மூன்று மாதங்கள் வரை!!!
‘எது வந்து என்னை பைத்தியமாக்கியது? கேட்பார் பேச்சில் மதியிழந்தேனா? என் மகனையே தள்ளி வைக்கும் அளவுக்கு ஜோசியமும் கால நேரமும் என்னை பித்தனாக்கியதா?’ அவர் மனம் புலம்பியது.
‘வைதேகி சொல்லிக்கூட நான் மனசிறங்கலையே? என்னை முதன்முதல்ல ‘அப்பா’ன்னு சொன்னவனை துரத்தி அடிச்சேனே!? அந்த பாவம் தான் என்னை இப்போ நடு ரோட்ல நிறுத்தியிருக்கா?’
‘சின்னவன் சொன்னதுபோல அவனும் கெட்ட நேரத்துல பொறந்துருந்தா அவனையும் நான் அப்படிதான் ஒதுக்கிருப்பேனா? அந்த அளவுக்கு மோசமானவனா நான்?’
‘இன்பன் மேல இருந்த பிடித்தமின்மை, என் வைதேகி என்னைவிட்டு போனதும், ‘இவனால தானே’ன்னு அதிகமாகி வெறுப்பா மாறிடுச்சு! ஒரு நிமிஷம் வைதேகி அவன் மேல வச்சுருந்த பாசத்தை, அவன் பையங்குற உண்மையை நான் உணர்ந்துருந்தா இந்த அளவுக்கு அவனை நான் வதைச்சுருப்பேனா?’
‘இன்பனை தன்னோட உயிரை கொடுத்து காப்பாத்தி விட்டுட்டு போயிருக்கா என் வைதேகி! அப்போ அவனை நான் என் உயிரா பார்த்துருக்க வேண்டாமா? அவ மேல வச்ச காதலை நான் அப்டிதானே காட்டிருக்கணும்? தப்பு செஞ்சுட்டேனே?!’
‘இன்பனோட பேரு கெட்டுடக்கூடாது, அவனால குடும்ப கெளரவம் போய்டக்கூடாதுன்னு நினைச்சு தானே அந்த ****ப்பய ஆள் வச்சு கடத்த சொன்னப்போ யோசிக்காம செஞ்சேன்! பேசிருக்கனுமோ? என் புள்ளைக்கிட்ட ஒன்ன செய்யாதன்னு நேரிடையா சொல்லிருந்தா, என்னை மீறியா அவன் செஞ்சுருக்க போறான்? அவன்கிட்ட பேச எனக்கு ஈகோ! அதுக்காக அவனையே காவு வாங்க துணை போயிட்டேனே!!’
‘இப்போ ரெண்டு புள்ளையும் இல்லாம நிக்குறேன்? அண்ணன் தம்பியை உறவாட விடாம பிரிச்ச பாவம்… கடைசி காலத்துல என்னை அநாதரவா நிக்க வைக்கப்போகுது’
‘யம்மா, வைதேகி! என் புள்ளைங்களை என்கிட்ட சேர்த்துடும்மா! எனக்கு ரெண்டு பேரும் வேணும்’ தன்னை மீறி அவர் வான்நோக்கி கரம் குவிக்க, “ஐயா, என்ன இந்த பக்கம்? நடந்தேவா வந்தீங்க?” என்ற குரலில் விழிநீர் பார்வை மறைக்க, அதை துடைத்துக்கொண்டு எதிரே பார்த்தவர், தங்கள் பச்சைமலை கோவில் அடிவாரத்தில் இருக்கும் மண்டபத்தின் அருகே நிற்ப்பதை கண்டுக்கொண்டார்.
“ஐயா?” என்றவரை, “இன்னைக்கு ஒரு நாள் இங்க தங்கிக்குறேன்! யார்க்கிட்டயும் நான் இங்க இருக்கேன்னு சொல்ல வேண்டாம்” என்றார் சத்தியராஜன்.
அவரின் தோற்றத்திலும் அசதியிலும் என்ன கண்டாரோ, “இது உங்க மண்டபம், தாராளமா தங்குங்க” என மண்டபத்தின் ஒரு அறையை சத்தியனுக்கு ஒதுக்கிக்கொடுத்து, அவர் மறுக்க மறுக்க கேட்காது, இரவு உணவையும் வாங்கிக்கொடுத்தே அங்கிருந்து சென்றார்.