காதருகே கேட்ட ‘ஹாய் பேபி’ என்ற குரலில் சுவாசம் அப்படியே நிற்க, திரும்பிக்கூட பாராமல் அசைவற்று மூச்சற்று நின்றாள் கோகிலா.
அவன் முன்னே வந்து நின்றவன், “எதிர்ப்பார்க்கலல… நான் திரும்பி வருவேன்னு எதிர்ப்பார்க்கலல…!!” என படபாணியில் சொல்லிவிட்டு “நல்லா மிமிக்கிரி பண்றேனா பேபி?” என்றான் அவளிடமே!
“கி…ஷோ..ர்” நடுங்கிக்கொண்டே அவள் கூற, “ஹோ! உனக்கு என்னை நியாபகம் கூட இருக்கா?” என்றவனின் குரலில் வெளிப்பட்ட வன்மத்தில், கண்களில் தெரிந்த குரூரத்தில் அவள் ரத்தம் உறைய தொடங்கியது. வெளியே சிரிப்பதை போல காட்டிக்கொண்டாலும், அவன் தன் சுயத்தில் இல்லை என்பதை அவளால் உணர முடிந்தது.
“ப்ளீஸ் கிஷோர், என்னை விட்டுடு! ப்ளீஸ்” தன்னை மீறி அவள் கண்கள் கண்ணீரை சிந்த, அது அவன் வெறிக்கு தூபம் போட்டது.
“அன்னைக்கு நான் கட்டுன… சாரி… சாரி… மாட்டுன தாலியை கழட்டி என் மூஞ்சில வீசுனியே! அப்போ இந்த கண்ணீர் உன்கிட்ட வரலையே? எங்க போச்சு அப்போ அது?” அவளை அவன் நெருங்க, அவள் கால்கள் பின்னோக்கி சென்றது.
“மனசுக்கு பிடிக்காதவன் கட்டுனா இது தாலி இல்ல, ஜஸ்ட் எ செயின்னு டைலாக் பேசிட்டு திமிரா போன? இப்போ போடி பாக்கலாம்!!!” அவன் குரலில் சுருதி ஏறியது.
“கிஷோர்… ப்ளீஸ் கிஷோர்…” அவன் முன் கைகூப்பியவள் இறைஞ்ச, “ஐ ஜஸ்ட் லவ் திஸ் சவுன்ட்…” என சிரித்தவன், “ப்ளீஸ் கிஷோர், ப்ளீஸ் கிஷோர்” என்றான் அவளைப்போலவே.
சுற்றும் முற்றும் அவள் கண்கள் அலைந்தது. தன்னை காக்க ஒருவராவது வரக்கூடாதா? என மனம் தவித்தது. வாழைகளும் கரும்புகளும் செழித்து நின்ற அவ்விடம் சாலையை முற்றிலும் மறைத்திருக்க, இவள் உதவிக்கு குரல் கொடுத்தால் கூட, பாய்ந்து வர ஒருவருமில்லை.
தன்னை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கும் கிஷோரை பார்த்தவள், ‘பிறரது உதவியை எதிர்பார்த்தால், காரியம் நடக்காது’ என உணர்ந்து தன் மனதை சமனப்படுத்த முயன்றாள். அவள் கால்கள் பின்னோக்கி செல்வதை நிறுத்தவில்லை.
‘இன்பனுக்கு தெரிவிக்க வேண்டும்’ என மூளை அறிவுறுத்த, வீட்டுக்குள் தன் அலைபேசி கிடப்பதை நினைவுப்படுத்திக்கொண்டாள்.
மெலிதாக, “ப்ளீஸ் கிஷோர், விட்டுடு” என சொல்லிக்கொண்டே இருந்தவள் வீட்டிற்கு சமீபத்தில் தான் இருப்பதை உறுதி செய்துக்கொண்டு, திடீரென ஓட்டம் எடுக்க, அவள் இப்படி ஓடுவாள் என எதிர்ப்பாராதவன் சற்று தயங்கி அவள் பின்னூடே ஓடினான்.
[the_ad id=”6605″]
அதற்குள் வீட்டிற்க்குள் சென்றிருந்தவள், முன்கதவை அடைத்து தாழ்பாள் இட்டு, அதே வேகத்துடன் பின்ப்பக்க கதவையும் அடைத்து தாழிட்டுக்கொண்டாள்.
அவன் கதவை படபடவென தட்டுவது அவள் இதயத்துடிப்பை அதிகரித்தாலும், முயன்று தன்னை ஒருநிலைப்படுத்தி, தன் அலைபேசியை எடுத்தவள், இன்பனுக்கு தொடர்புக்கொள்ள முயல, விரல்கள் போனில் அங்கும் இங்கும் அலைப்பாய்ந்தது.
இன்பனுக்கு அழைத்து அலைபேசியை காதில் வைக்கும்போது நடுங்கிய கையை மறுக்கை கொண்டு அழுத்திப்பிடித்துக்கொண்டாள். அந்த பிடியில் அவள் உயிரும் தேங்கி நின்றதை போன்றதொரு பிரம்மை.
கதவை தட்டும் ஓசை நின்றுவிட, இருப்பக்க கதவுகளும் அடைத்திருக்கிறதா என வேகமாய் சரிப்பார்த்தாள்.
அழைப்பு ஒலி கேட்க்காது, மெல்லிய, ‘டொய்… டொய்’ என்ற ஒலி மட்டுமே வர, “மாமா… எடுங்க மாமா… பிக் அப்… பிக் அப்….” என அவள் உதடுகள் இறைஞ்சிக்கொண்டிருந்தது.
இருபது நொடிகள், இருநூறு ஆண்டுகள் போல மலைப்பை அவளுக்கு கொடுக்க, வெளிப்புறம் நிலவிய நிசப்தம் வேறு, அவள் அடிவயிற்றில் பயபந்தை உருட்டியது.
இன்பனுக்கு பேசிக்கு தொடர்பு உண்டாகி ரிங் போக ஆரம்பிக்க, பிரகாசித்த அவள் முகம், “பேபி!! ஐயம் ஹியர் பார் யூ” என கேட்ட சத்தத்தில், அதில் உண்டான நடுக்கத்தில் வியர்த்து வழிந்த கரங்களில் இருந்து அலைபேசி சட்டென விலகி தரையில் விழுந்து தெரித்துப்போனது.
கோகிலாவின் தலைக்கு மேல் பிரிந்துக்கிடந்த ஓடுகளுக்கு நடுவே, உள்ளே குதிப்பதற்கு தயாராய் மனித மிருகமாய் சிரித்துக்கொண்டிருந்தான் கிஷோர்.
இன்பனின் கரம் காண்டீபனின் கன்னத்தில் சூடாய் பதிந்திருக்க, ஆக்ரோஷமாய் நின்றிருந்தான் இன்பன்.
“என்ன பேச்சு இது? அந்தாளு இந்தாளுன்னு” என்றான் பல்லைக்கடித்துக்கொண்டு.
அவன் அடித்ததை தூசியென தட்டிவிட்டவன், “பின், அவருக்கெல்லாம் எதுக்கு மரியாதை? அவர் செஞ்ச காரியத்துக்கு நீ வேணுன்னா எதையும் வெளில சொல்லிக்காம இருக்கலாம்! ஆனா என்னால முடியாது” என்றான் கோவமாய்.
காண்டீபனிடம் எப்போதுமே ‘நிதானம்’ என்பது இருந்ததே இல்லை! எதையும் யோசித்து செய்வதோ, காரணம் ஆராய்வதோ அவனுக்கு வரவே வராத ஒன்று! அதை நன்றாய் அறிந்திருந்த இன்பனுக்கு என்ன நடந்திருக்க கூடும் என கணிக்க சில நிமிடங்களே ஆனது.
[the_ad id=”6605″]
“அப்போ தாத்தாவும் அம்மாயியும் இப்படி படுத்துக்கிடக்க நீதான் காரணம்… இல்லையா?” என்றான் இன்பன் சூடாக.
“நான் காரணமா? நான் எப்படி காரணமாவேன்? எல்லாம் அந்தாளு செஞ்சது” என காண்டீபன் சொல்ல இன்பனின் கை மீண்டும் அவனை நோக்கி உயர்ந்தது.
“இன்னொரு முறை அப்பாவை மரியாதை இல்லாம பேசுன பல்லை பேத்துடுவேன்” என்று கர்ஜிக்க, காண்டீபன் தன்னால் அடங்கினான்.
“எனக்கென்ன பேசத்தெரியாம அமைதியா இருக்கேன்னு நினைச்சியா? மூணு நாளா எங்கடா போனன்னு எல்லாரும் மாத்தி மாத்தி கேட்டப்போ, கோகிலாவோட நிலைக்கு நான் தான் காரணம்ன்னு தூற்றுனப்போ, ‘இதுக்கெல்லாம் அப்பா தான் காரணம்ன்னு’ அவரை நான் கைக்காட்ட எனக்கு எவ்வளோ நேரம் ஆகிருக்கும்ன்னு நினைக்குற? நான் ஏன் செய்யல?” என்றான் இன்பன் அழுத்தமாய்.
“நான் அப்படி செஞ்சுருந்தா இப்போ இருக்க இதே நிலைமை தான் அப்பவும் நடந்துருக்கும்! நம்ம குடும்பம் சிதறக்கூடாதுன்னு நினைச்சேன்! தாத்தாக்கும் பாட்டிக்கும் ஒன்னும் ஆகக்கூடாதுன்னு பயந்தேன். இதோ நீ, நம்ம அப்பா மேல வச்சுருக்க பாசம் போய்டக்கூடான்னு விரும்புனேன்! அப்பா தனக்கு யாரும் இல்லன்னு வருத்தப்படக்கூடாதுன்னு ஆசைப்பட்டேன்! நான் ஒருத்தன் வாயை மூடுறதால இதெல்லாம் நடக்கும்ன்னா எனக்கு என் குடும்பம் ஒற்றுமையா இருக்கிறது போதும்ன்னு நினைச்சு, என்னை திட்டுனா கூட பொறுத்துக்கிட்டு அமைதியா இருந்தேன்…
ஆனா, நீ! ஒரு நிமிஷத்துல எல்லாத்தையும் உடைச்சுட்டல்ல? ஒருத்தன் ஒரு விஷயத்தை சொல்லாம இருக்கான்னா, அதுக்கு என்ன காரணமா இருக்கும்ன்னு யோசிக்க கூட மாட்டியா? எடுத்தோம் கவுத்தோம்ன்னு போட்டு உடைச்சு, இப்படி பெரியவங்களை படுக்க வச்சுட்டியே? எப்பதான்டா நிதானமா யோசிக்க கத்துக்க போற நீ?” என்றான் ஆற்றாமையாய்.
காண்டீபன் கோவத்துடன், “உன்னைமாறி நல்லவனா எல்லாம் என்னால இருக்க முடியாதுடா! நீ மட்டுமே எல்லாருக்காகவும் யோசிச்சு தியாகி பட்டம் வாங்கி கட்டிக்கோ! என்னை விட்டுடு” என்றான்.
இன்பன், “இப்போ நீ உண்மையை சொல்லிட்டதால உனக்கு என்ன கிடைச்சுருச்சு? சொல்லு பாப்போம்”
“….”
“சொல்லுடா?”
“….”
“ஒரு ம*** இல்லல? அப்பறம் எதுக்கு இந்த அக்கப்போரு?” என சீறிய இன்பன், “அப்பாக்கு நான் கோகிலாவை கல்யாணம் பண்றதுல இஷ்டம் இல்லன்னு எனக்கு தெரிஞ்சுது, அதனால தான் அடிப்பட்டதோட அங்கிருந்து கிளம்பிட்டேன்! ‘பவானி’ல என் நண்பனோட கிளீனிக்ல தான் எனக்கு ட்ரீட்மென்ட் நடந்துச்சு! போலிஸ்க்கோ, என் வீட்டுக்கோ விஷயம் போகக்கூடாதுன்னு அவனை ரொம்ப வேண்டி கேட்டுக்கிட்டேன்! சந்தேகம் வரக்கூடாதுன்னு கிளிங்களை கூட நான் பக்கத்துல வச்சுக்கலை! மூணாவது நாள் நான் மயக்கம் தெளிஞ்சு கண்ணு துறந்ததும் கிளிங்க சொல்லிதான் கோகிலா எனக்காக எப்படியாப்பட்ட காரியத்தை செஞ்சுருக்கான்னு தெரிஞ்சுச்சு! உடனே என் உடல்நிலையை கூட யோசிக்காம கிளம்பி வந்துட்டேன்! இப்போவரைக்கும் என் கோகிலா, ஒரு வார்த்தை கேக்கலடா என்ன நடந்துச்சுன்னு! அது என்மேல இருக்க நம்பிக்கை!!” என்றவனுக்கு ‘என் கோகிலா’ எனும்போது கர்வம் எழுந்தது.
“என்னை அடிக்க வந்த ஆளுங்களை அனுப்புனது அப்பான்னு தெரிஞ்சப்போ, என் மனசு கலங்கிப்போனது உண்மைத்தான்! ஆனா, என்னை கொல்ல சொல்ற அளவுக்கு அவர் போயிருக்க மாட்டாருன்னு எனக்கு தெரியும்! இப்போவரைக்கும் நான் அவர்க்கிட்ட ஒரு வார்த்தை கேட்கலையே அதைப்பத்தி! ஏன்னா, எனக்கு தெரியும் ‘என் அப்பா’வ பத்தி! அவர் எதை செய்வர், செய்ய மாட்டாருன்னு எனக்கு தெரியும்டா” என்றவன்,
“உன்மேல உயிரையே வச்சுருந்த அப்பா இப்படி ஒரு காரியத்தை செஞ்சுருக்காருன்னு தெரிஞ்சா, நீ என்ன செஞ்சுருக்கணும்? அவரை தனியா கூப்பிட்டு உன் சந்தேகத்தை கேட்டுருக்க வேண்டாமா? அவர் தரப்பு நியாயத்தை சொல்ல விட்டுருக்க வேண்டாமா?” என்றான்.
“டேய், அவர் தப்பே பண்ணிருக்கட்டும்டா! உன்னை பொறுத்தவரைக்கும் அவர் நல்ல அப்பா தானே? உனக்கு ஒரு அப்பாவா அவர் எந்த குறையும் வைக்கலல?
நானே அவரை மரியாதை இல்லாம பேசுனது இல்லை, உனக்கென்னடா வந்துச்சு? அவர் என்னை ஒதுக்கி வச்சாருன்னா ஏதோ ஒரு காரணம் இருந்துச்சு! ஆனா, நீ என்னை ஒதுக்கி வச்சதுக்கு என்னடா காரணம் இருக்கு?
எனக்கு அப்புறம் ஆறு வருஷம் கழிச்சு பொறந்த பய, நீ எனக்கு குடுக்காத வலியவா, என் அப்பா எனக்கு குடுத்துட்டாரு?” இன்பன் கேட்கும் கேள்விகளுக்கு அவன் முகத்தை கூட நிமிர்ந்து பார்க்க முடியாது போனது காண்டீபனால்.
“சொன்னியே? நான் நல்லவன், தியாகின்னு…! அப்படி இருக்குறதால தான் நீ செஞ்சதெல்லாம் மறந்துட்டு, இப்போ நீ ‘அண்ணே’ன்னு என்னை கட்டிப்புடிச்சு அழுததுக்கு பொறுமையா நின்னுட்டு இருக்கேன்!
நான் இளிச்சவாயனா இருக்குறதால, என் சொந்தமெல்லாம் என் சுத்தி இருக்கும்ன்னா, நான் அப்படியே இருந்துட்டு போறேன்டா… நீ எல்லாரையும் இழந்துட்டு என்னத்தை கட்டிட்டு போறன்னு பாக்குறேன்” என கத்தி முடித்தவன், அங்கிருந்த கதிரையில் அமர்ந்து, கரங்களால் சிரத்தை தாங்கிக்கொண்டான்.
நிமிடங்கள் கரைந்தது….
காண்டீபன் குனிந்த தலை நிமிராது அப்படியே நிற்க, சில முறை ஆழ மூச்செடுத்த இன்பன், தன்னை நேர்ப்படுத்திக்கொண்டு, “என்னடா இவன், நம்மளை போய் திட்டிட்டு இருக்கானேன்னு யோசிக்குறியா?” என்றான் மென்மையாய்.
காண்டீபன், ‘இல்லை’ என்பதை போல தலையாட்ட, ஒரு கரம் நீட்டி அவனை, ‘வா’ என்றான்.
கீழுதட்டை கடித்துக்கொண்டு முகத்தை சுருக்கியபடி காண்டீபன் அவன் அருகே வர, இருபத்தியாறு வயது ஆண்மகனாய் இன்பனின் கண்களுக்கு அவன் தெரியவே இல்லை. மாறாய், தவறு செய்த சிறுகுழந்தை ஆறுதல் தேடும் தோரணையில் அவன் இருக்க, முகம் கனிந்து போனது இன்பனுக்கு.
அருகே அமர்ந்தவனிடம், “ஏதாவது ஒன்னு செய்யுறதுக்கு முன்னாடி அதோட தொடர்விளைவுகள் என்னவா இருக்கும்ன்னு யோசி! சரியா? அதுக்கு நல்லவனாவோ, தியாகியாவோ இருக்கனும்ன்னு அவசியம் இல்லை” என அவன் சிறு கேலியுடன் சொல்ல, கசங்கிய முகத்துடன், “சாரிண்ணா…” என்றான் காண்டீபன். அழுகையில் துடித்தன அவன் அதரங்கள்.
[the_ad id=”6605″]
“ச்சீ! சின்னப்புள்ள மாறி அழுதுக்கிட்டு! உன்னை இப்படியே ஒரு போட்டோ எடுத்து சுசீலாக்கிட்ட காட்டனும்! பாரும்மா உன் புருஷனன்னு” என மென்னகை புரிந்த இன்பன், “ஆமா, சுசீ எங்க?” என்றான்.
“அம்மா வீட்ல இருக்கா!!”
“ஹும்! சரி… நான் அப்பா எங்கன்னு பார்க்குறேன்! நீ இங்க டாக்டர் என்ன சொல்றாங்கன்னு கேட்டு எனக்கு கால் பண்ணு! தாத்தாக்கும் அம்மாயிக்கும் ஒன்னும் ஆகாது. அடுத்த வருஷ பாரியூர் நோம்பில அவங்களுக்கு என்பதாம் கல்யாணம் சும்மா ஜாம் ஜாம்ன்னு பண்றோம்! என்னடா?” என்றான் தேற்றுதலாய்.
சற்று தெளிவோடு எழுந்து நின்ற காண்டீபன், “ஆமா, செஞ்சுடலாம்!!” என்றுவிட்டு, “அப்பா போன் கூட கொண்டு போகல, வீட்ல தான் கிடந்துச்சு! எங்க போனாரோ? நானும் கூட வரட்டுமா?” என்றான்.
“எல்லாரும் வந்துட்டா இங்க யாருடா இருக்கிறது? தங்கம் அத்தே ஏற்கனவே பயந்து போயிருக்காங்க” என இன்பன் சொல்லும்போது அவன் அலைபேசி அதிர்ந்தது.
‘கோகிலா கூப்புடுறா!’ என இன்பன் சொல்லிமுடிப்பதற்குள் அழைப்பு நின்றுவிட, அவளுக்கு மீண்டும் அவன் முயன்றபோது, ‘இந்த நம்பரை தொடர்ப்புக்கொள்ள இயலாது’ என்ற பதிவு குரல் கேட்க, ‘இப்போதானே கால் வந்துச்சு, அதுக்குள்ள என்ன?’ என சிந்தித்தவனின் அலைபேசி மீண்டும் அதிர, புது எண்ணில் இருந்து வந்த அழைப்பை உடனே ஏற்றான்.
எதிர்முனையில் பதற்றத்துடன், “ஹலோ இன்பா?” என்ற பரிட்சயமான குரல்.
“இன்பா, நான் ஷங்கர் பேசுறேன்ப்பா… கோகிலாவோட அப்பா”
பேச விருப்பமில்லை என்றாலும், அவர் குரலில் இருந்த பதட்டம் அவனை “சொல்லுங்க” என கேட்க வைத்தது.
“நேத்து காலைல மறுவாழ்வு மையத்துல இருந்து கிஷோர் தப்பிச்சுட்டானாம்ப்பா”
‘மறுவாழ்வு மையமா?’ இன்பனுக்கு புதிய செய்தி இது!
“அவங்க அப்பா அம்மாக்கிட்ட போகல! எனக்கென்னவோ அவன் உங்களைத்தேடி தான் வருவான்னு தோணுது! அவன் முன்னமாறி இல்லை! பைத்தியம் பிடிச்சவன் மாறி நடந்துக்குறான்… எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்கப்பா!” என அவர் சொல்ல, “நான் பாத்துக்குறேன்” என சொல்லி அழைப்பை துண்டித்தான் இன்பன்.
“என்னாச்சு ண்ணா?” பேசிய விவரங்களை காண்டீபனிடம் இன்பன் சொன்னபோது, அவன் மனக்கண்ணில், அதீத படபடப்புடனும், பயத்துடனும் கோகிலா கலங்கி நின்ற தோற்றம் வந்துப்போக, இன்பனின் மூளை துணுக்குற்றது.
[the_ad id=”6605″]
சத்தியராஜன் மண்டபத்தில் இருந்து வெளிவந்து கால்போன திக்கில் நடக்கத்தொடங்கினார். அவர் மனம் ஆழ்கடலின் அமைதியை ஒத்திருந்தது. ‘இனி இழக்க உயிரைத்தாண்டி ஒன்றும் இல்லை’ என்ற எண்ணம் வலுப்பெற இலக்கின்றி அந்த சாலையில் நடந்துக்கொண்டிருந்தார்.
சிறிது தூர நடையில், அவர் கால்கள் மெதுவாய் தன் வேகத்தை குறைக்க திரும்பிப்பார்த்தவர் கண்களில் பட்டது… ‘சோளக்காடு’
வீட்டின் நடுவே நாற்காலியில் கால்மேல் கால் போட்டபடி அமர்ந்திருந்தான் கிஷோர். அவன் எதிரே தரையில் வாடிய மலரென சுருண்டுக்கிடந்தாள் கோகிலா.
“உன்னை கொஞ்ச கொஞ்சமா கொல்லப்போறேன்” என கிஷோர் நெருங்கி வந்தபோது, “வேணாம் கிஷோர், என்னை எதுவும் செய்யாத! நான் இப்போ கன்சீவா இருக்கேன்! ப்ளீஸ் விட்டுடு” என கெஞ்சிய கோகிலாவை கண்டு இரக்கம் கொள்ள சிறிதேனும் அவனிடம் மனிதத்தன்மை வேண்டுமல்லவா? அவன்தான் மூர்கனிலும் மோசமாய் திரும்பி வந்திருக்கிறானே?
அவள் கெஞ்சலில் அவன் மூர்க்கம் கூட, அவள் பின்னந்தலையை அழுத்திப்பிடித்தவன், மாறி மாறி அறைந்தான் அவள் கன்னங்களில். அவள் வலியில் துடிக்க, இவன் மகிழ்ச்சி நரம்புகள் முறுக்கேறிக்கொண்டிருந்தன. தொடர்ந்த அவன் முரட்டித்தனத்தில் தள்ளாடி துவண்டு அவள் கீழே விழ, அதை திருப்தியாய் பார்த்தபடி, நாற்க்காலியிட்டு அமர்ந்திருந்தான் கிஷோர்.
“அடிச்சதுக்கே விழுந்துட்டா எப்படி பேபி? இன்னும் என்னென்னவோ செய்யணும்ன்னு வந்தேனே?”
துவண்டு கிடந்தவளின் உதடுகள், ‘மாமா…மாமா…’ என ஜபித்தது.
“உன்னை கொன்னுட்டு நானும் சாகப்போறேன் தெரியுமா? நம்ம ரெண்டு பேரும் சொர்கத்துல போய் கல்யாணம் செஞ்சுக்கலாம்… என்ன சொல்ற?” கேட்டுக்கொண்டே அவள் அருகே சென்றவன், “ஜஸ்ட் வாக் அவுட் பேபி! இங்க ஒரே புழுக்கமா இருக்கு” என சொன்னபடி அவள் கரம் பிடித்து அவன் இழுக்க, எழுந்து நடக்க முடியாது தரையில் தேய்ந்தபடி அவன் இழுவைக்கு உடன்பட்டாள் கோகிலா.
பின்வாசலை திறந்துக்கொண்டு வெளியே சென்றவன், “வாவ் நைஸ் பிளேஸ்” என்றான்.
கோகிலா உதடுகள் அவளையறியாது, “அத்தே, காப்பாத்துங்க” என வைதேகியை அழைத்திருந்தது.
அவளை அப்படியே போட்டுவிட்டு அவ்விடத்தை ஆராய்ந்தவன், இறுதியாய் கிணற்றின் அருகே சென்று எட்டிப்பார்க்க, அதன் ஆழத்தை கண்டு மிரண்டவன், “பர்பெக்ட் பிளேஸ் பேபி” என கூவினான்.
இன்பன் அதன் மீது போட்டு மூடிவைத்திருந்த பலகையை மொத்தமாய் கழட்டி வீசினான்.
“திஸ் இஸ் த பர்பெக்ட் பிளேஸ் பார் அவர் டெத்” என அவன் கூவ, தன் ஆற்றலை திரட்டி, “உனக்கென்ன பைத்தியமாடா?” என கத்தினாள் கோகிலா.
“சாகனும்ன்னா நீ விழுந்து சாவு… என் உயிரை ஏன் எடுக்குற?” என அவள் கத்த, “நான் உன்னை கொல்லுவேன்னு என் டேட்க்கிட்ட ப்ராமிஸ் பண்ணிருக்கேன் பேப்! ஐ ஷுட் கீப் அப் மை ப்ராமிஸ்! இல்லன்னா நான் சும்மா வேஸ்ட் பெலோன்னு நீங்க நினைச்சுடுவீங்களே?” என அவன் பேச,
‘சத்தியமாய் அவன் புத்திப்பிசகி தான் போயிருக்கிறது’ என எண்ணிக்கொண்டாள் கோகிலா.
‘அதிகபட்சம் ஒருமணி நேரத்துல வந்துடுறேன்’ என இன்பன் சொன்னதை மனதில் கொண்டு நேரத்தை நீட்டிக்கப் பார்த்தாள்.
[the_ad id=”6605″]
“நம்ம செத்துப்போறதால என்ன யூஸ் இருக்கு கிஷோர்? நீ உன்னோட பனிஷ்மென்ட் பீரியட் முடிஞ்சு நல்லவிதமா வெளில வந்துட்டா அங்கிள் அண்ட் ஆன்ட்டி எவ்வளோ சந்தோசப்படுவாங்க! அவங்களுக்காக யோசி” என்றாள்.
கிஷோரின் புருவங்கள் நெரிந்தது.
“உன்னை எவ்வளோ செல்லமா வளர்த்தாங்க… நீ செத்துப்போய்ட்டா அவங்க அதை தாங்கிக்கவே மாட்டாங்க கிஷோர்! கொஞ்சம் அவங்களுக்காக யோசிச்சு பாரேன்!!” மீண்டும் பேசினாள்.
இம்முறை அவன் அமைதி அவளுக்கு சிறு தைரியத்தைக்கொடுக்க, மெல்ல எழுந்து நின்றாள்.
“நீ இங்கதான் இருக்கன்னு சிவகுரு அங்கிளுக்கு சொல்றேன்! ரொம்ப சந்தோசப்படுவாரு” என கீழே விழுந்துக்கிடக்கும் போனை பார்த்துக்கொண்டே அவள் சொல்ல, “எதுக்கு என் அப்பாக்கிட்ட சொல்லணும் கோகிலா, நீ இன்பனுக்கே சொல்லிடேன்! அப்போதான் அவன் போலீஸ்க்கு சொல்லி, எல்லாரும் இங்க வந்து என்னை அடிச்சு வண்டில போட்டு ஏத்திட்டு போக முடியும்” என தணிவாய் சொல்ல, ‘திக்’கென நின்றாள் அவள்.
அவன் குரல் சட்டென ஆக்ரோஷமாய் மாறியது. “என்னை பார்த்தா கேனையன் மாறி தெரியுதா? நீ சொல்றதெல்லாம் கேட்டுட்டு தலையாட்ட நான் ஒன்னும் உன் புருஷன் இல்ல” என அலறியவன், முழு வேகத்துடன் அவள் கரம் பிடித்து இழுத்து “வாடி, உன் புருஷன் வரப்போ நீ பொணமா தான் இருக்கணும்” என சொல்லிக்கொண்டே திமிறியவளை பொருட்ப்படுத்தாது, வெறிக்கொண்டவன் போல அவளைத்தூக்கி கிணற்றுக்குள் இறக்கினான்.
ஓரடி அகல உள்திட்டில் காலை அழுந்த ஊனி நின்றவள், “வேணாம் கிஷோர், என்னை விட்டுடு… ப்ளீஸ்” என இறைஞ்ச, அவளை பிடித்துக்கொண்டே தானும் உள்ளே குதித்தான் கிஷோர்.
அருகே நின்றவளை இறுக்கப்பிடித்துக்கொண்டு, “இப்போ எனக்கு எப்படி இருக்கு தெரியுமா? அப்படியே ஜிவ்வுன்னு வானத்துல பறக்குற மாறி!!” என்றவன், தன் பாக்கெட்டில் இருந்த வஸ்துவை எடுத்து மூக்கில் தேய்த்துக்கொண்டு அவனுக்கான ஏகாந்த நிலைக்கு சென்றான்.
“ஐயம் பிளையிங் நவ்…” என உல்லாசமாய் சொன்னவன், “கெட் ரெடி டு ஜம்ப் பேபி” என சொல்லிக்கொண்டே, “ஜஸ்ட் மேக் அ கவுன்ட்… வன்… டூ…” என ஆரம்பிக்க, “வேணாம் கிஷோர், ப்ளீஸ்… ப்ளீஸ்….” என்றவளின் வேண்டுதல் பலிக்க ஆபத்தாண்டவராய் அங்கே வந்தார் சத்தியராஜன்.
மூன்றாம் கவுண்டில் குதிக்க போனவன் தன்னோடு கோகிலா வராமல் திடமாய் நிற்ப்பதை கண்டு திகைக்க, அங்கே அவள் தோளை இறுகப்பற்றிக்கொண்டு நின்றிருந்தார் சத்தியராஜன்.
‘தன்னைக்காக்க ஒருவர் வந்துவிட்ட மகிழ்வில்’ “மாமா!!!” என்றாள் தவிப்புடன் ஆதரவுத்தேடி.
“டேய் பொறுக்கி! என் புள்ளையை கொல்றதுக்கு என்னை வச்சே ஆள் புக் பண்ணவன் தானே நீ? இப்போ என் மருமகளையும் கொல்லப்பார்க்குறியா?” என சீற்றமாய் கேட்டுக்கொண்டே அவனிடம் இருந்து கோகிலாவை விலக்கி அவளை வெளியே கொண்டு வர அவர் முயல, போதை வஸ்துவின் வீரியத்தில் பத்தாள் திடத்துடன் நின்றவனிடம் இருந்து அத்தனை சுலபத்தில் அவளை பிரிக்க முடியவில்லை அவரால்.
மேற்கொண்டு வலுப்போட்டு இழுத்தால், எங்கே கோகிலா தவறி உள்ளே விழுந்துவிடுவாலோ என்ற அச்சம் வேறு அவரை நிதானிக்க செய்ய, “ஒழுங்கா இவளை விட்டுட்டு ஓடிடு! இல்லன்னா நீயும் எங்களோட செத்துடுவ” என்றான் கிஷோர்.
“போடா பைத்தியம்” என்றவர் “என் கையை இறுக்கமா பிடிச்சுக்கிட்டு மேல ஏறுமா” என்றார் அவளிடம்.
ஒரு கை சத்தியனிடம், மறுக்கையோ வலுவாய் கிஷோரிடம் என சிக்கித்தவித்த கோக்கிலா, “முடில மாமா, என்னை காப்பாத்துங்க!” என கெஞ்ச, அவளை விடாது, கிணற்றின் இரும்பு வாளிக்கொண்டு ஒருக்கையால் கிஷோரை தாக்க முயன்றார் சத்தியராஜன்.
போதையின் தயவால் அவர் அடிகள் அவனை வலிக்க செய்யவில்லை என்றாலும், தன் காரியத்துக்கு குறுக்கே நிற்ப்பவரைக்கண்டு எரிச்சல் கூட, கோகிலாவின் பிடியை விட்டவன், ஒரே தாவலில் கிணற்றை விட்டு வெளியே வந்தான்.
[the_ad id=”6605″]
கிஷோரின் பிடி நீங்கியதும், இருகரம் கொண்டு கோகிலாவை வெளியே தூக்க முயன்ற சத்தியன், வெளியே வந்தவன் என்ன செய்கிறான் என்பதை கவனிக்க தவறிப்போனார்.
வெளியே குதித்தவன் கண்களில் சிக்கியது குழவியோடு இருந்த அம்மிக்கல். வெறிக்கொண்டவனாய் குழவிக்கல்லை கையில் எடுத்தவன், ஆவேசம் குறையாது, கிணற்று மேல் திட்டில் ஏறி நின்று கல்லை தலைக்கு மேல் ஓங்கினான்.
“உன்னை கொல்லாம விட மாட்டேன்” என கத்தியவன் கல்லை கீழே விட, கோகிலாவை நோக்கி வந்த கல்லைத் தடுக்க, நொடியும் தாமதிக்காது, அவளுக்கு அரண் போல் மாறி சத்தியன் குனிந்ததில், அவர் வலப்பக்க தோள்ப்பட்டையில் வெகு அழுத்தமாய் விழுந்தது குழவிக்கல்.
“மாமாஆஆஆஆ….”
உயிர்ப்போகும் வலியில் அவர் பிடித்திருந்த பிடி கோகிலாவை விட்டு விலக, மீண்டும் உள்ளே இறங்கிய கிஷோர், எளிதில் அவளை தன் கைக்குள் கொண்டு வந்து “இனி நமக்கு எந்த தொந்தரவும் இல்ல” என சொல்லிக்கொண்டே குதிக்க எத்தனிக்க, கோகிலா அவன் எதிர்ப்பாராத தருணம், சட்டென அவன் கையை விட்டு விலகினாள்.
சுதாரித்து அவன் திரும்ப, நெருப்பிலிட்ட இரும்பென தகித்துக்கொண்டு நின்றிருந்தான் பேரின்பன்.
“டேய்… உன்ன……” வெறியோடு கிஷோர் வெளியே வர முயல, “நீயெல்லாம் பொறந்துருக்கவே கூடாது… சாவுடா” என்ற இன்பன், முழு பலம் கூட்டி கைகளால் எட்டித்தள்ளினான் அவனை.
[the_ad id=”6605″]
அந்த ஓரடி திட்டில் தன்னை சமன் செய்துக்கொள்ள முடியாதவன், பெரும் அலறலோடு விழுந்தான் அக்கிணற்றில்…! இனி அதிலிருந்து மீண்டு அவன் பிழைப்பதென்பது கடவுளின் கிருபையால் மட்டுமே!!!
கீழே ரத்த வெள்ளத்தில் கிடந்த தன் தந்தையை அள்ளி மடியில் தாங்கியவன், “ப்பா, ஹாஸ்பிடல் போலாம்ப்பா” என்றான் பதட்டமாய்.
சூழ்நிலையை உணர்ந்த கோகிலா, தன் படபடப்பையும் உடல்வலியையும் மறைத்து அவசர ஊர்தியை அழைக்க,
அங்கிருந்து ‘வரமாட்டேன்’ என்பதை போல தலையசைத்தார் சத்தியராஜன்.
“ஹாஸ்பிடல் போலாம்ப்பா… வாங்க” என இன்பன் கெஞ்ச, மீண்டும் மறுப்பாய் தலையசைத்தவர், அவன் சட்டையை கொத்தாய் பற்றி அருகே இழுத்து, மிக மெல்லிய குரலில், “அப்…பாவ… மன்…னி..ச்சு…ரு..டா…” என்றார். மறுநொடி அவர் கண்கள் மௌனமாய் மூடிக்கொண்டன.
****************