விஜய் போகும் திசையிலே பார்வை வைத்தபடி எழுந்த சக்தி இரண்டடி எடுத்து வைத்தபோது கால் எதிலோ இடறிவிட அனிச்சையாய் பிடிமானத்திற்கு கையை அருகில் இருந்த ஆரியனின் தோளில் ஊன்றமுனையும் போது அவன் சட்டென்று நகர்ந்துக் கொள்ள சுதாரிக்கும்முன் தடுமாறி கீழே விழுந்தாள்.
“ஏய் சக்தி..”
“சக்தி..”
சந்தியாவும் அவளை அழைக்கவந்த சித்ராவும் பதறி அருகில் வர ஆரியனோ வெளியே நீட்டியிருந்த தன் காலை மீண்டும் உள்யிழுத்துக் கொண்டு எரிச்சலாய் தன் முகத்தை வைத்துக் கொண்டான்.
லேசாக வலியில் முனகியபடி அவர்கள் கையை பிடித்துக் கொண்டு எழும்பிய சக்தி சுற்றியிருந்த சிலரின் கவனம் தன்மீது தான் இருப்பதை உணர்ந்து சங்கடமடைந்தாள்.
“பார்த்து நடக்கமாட்டியா சக்தி..”
என்று சந்தியா கூறும்போதே ஆரியன்,
“இதுக்கு தான் முன்னால் பாதையை பார்த்து நடக்கணும்..கண்ணு அங்கையும் இங்கையும் அலைஞ்சா இப்படி தான் குப்புற விழனும்..”
என்று எகத்தாளமாய் கூற ஏற்கெனவே சங்கடத்திலும் வலியும் இருந்தவள் கண்கள் கலங்கிவிட அவன் சொன்னது காதில் விழாததுபோல் நகர முற்பட்ட போது,
“ஓய்..நில்லு..பேசிட்டு இருக்கேன்..நீ பாட்டுக்கு போற..”
என்று அதட்டவும் மிரண்டு விழித்தாள்.
‘டேய்..என்ன பண்ற..”
என்று கையை சுரண்டிய அனித்தை சும்மாயிரு என்று அடக்கியவன் மீண்டும் அவளிடம் திரும்பினான்.
நடுங்கும் விரல்களால் சந்தியாவை பிடித்துக் கொள்ள அவள் பயத்தை உணர்ந்து,
“கீழே தானே விழுந்தால்..உங்க மேல விழுகவில்லைல..உங்களுக்கு பேச என்ன இருக்கு..”
என்று சந்தியா எதிர்த்துக் கேட்க “அடிங்க..சீனியரை எதிர்த்து பேசுற.பல்லை கலட்டிருவேன்….நான் உன்னையா நிக்க சொன்னேன்..உனக்கென்ன இங்க வேடிக்கை..வாய மூடிட்டு நிக்கிறதா இருந்தா நில்லு..இல்ல ஓடிறு..”
என்று குரல் உயர்த்த அவன் தொனியில் கப்சிப் என்றானாள் சந்தியா.
மீண்டும் பார்வையை சக்திபுறம் திருப்ப பயத்தில் முகம் வேர்த்திருந்தது அவளுக்கு..
“இவ்வளவு நேரம் அந்த சவுண்ட் விட்ட..இப்போ என்ன இந்த பம்மு பம்முற.சரி…அப்போ என்ன என்னலாம் கத்தி சொன்னியோ..இப்போ மறுபடியும் சொல்லு..விட்டுறேன்..”
என்று அவன் சொல்லவும் மேடையில் நடக்கும் பர்ஃபாமன்ஸைவிட இது நல்லாயிருக்கே.. என்று சிலர் இவர்களை கவனிக்க தொடங்க
அவனை இறைஞ்சலாய் பார்த்தவள்,
“ப்ளீஸ் சீனியர்..நா…நா..நான் போறேன்..”
என்றாள் தட்டுத்தடுமாறி..
“போமா..யாரு வேண்டாம்னா..நான் சொன்னதை செஞ்சிட்டு போயிட்டே இரு..”
என்று அசால்ட்டாய் கூற அவளுக்கு வார்த்தையே வராமல் கையை பிசைந்தபடி பாவமாய் அவனை பார்க்க,
“என்ன அப்பாவி மாதிரி ஆக்டிங்போட்டால் நம்பிடுவேனா..”
என்றவனுக்கு தெரியாது சக்திக்கு வாய் எல்லாம் அவள் தோழிகளிடம் மட்டும் தான் என்றும் மத்தபடி அவள் ஒரு பாவப்பட்ட ஜீவன் என்றும்…
எனவே அவன் பேச பேச திரண்டிருந்த கண்ணீர் அருவியாய் கொட்ட மெல்ல விசும்ப ஆரம்பித்தாள்.
அதுவரை சும்மா ரேகிங் தானே என்று விளையாட்டாய் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அனித் அவள் அழுகவும், “அய்யோ..டேய்..அழுகுதுடா..ஏன்டா இப்படி பண்ற..”
என்றான் பதற்றமாய்..
இதை அவனும் எதிர்பார்க்கவில்லை.
“ஏய்..ஏய் இப்போ எதுக்கு அழுக்குற..டேம்ம க்ளோஸ் பண்ணு..”
என்று அவன் கூற சந்தியா “சீனியர்..அவ கொஞ்சம் பயந்த சுபாவம்.. விட்ருங்க ப்ளீஸ்..”
என்று தவிப்போடு கூறியவள் அவன் ஒரு முறை முறைக்கவும் வாய்யை மீண்டும் மூடிக்கொண்டாள்.
இம்முறை சக்தியே,
“எல்லாம் பாக்குறாங்க சீனியர்..ப்ளீஸ்..”
என்று அழுகை ஊடே சொல்லவும் அதே சமயம் மேடையில்,
“த நெக்ஸ்ட் ஓன் ஈஸ்ஸ மியூசிக்கல் பர்ஃபாமன்ஸ் பை அவர் செக்கென்ட் பயோ-கெமிஸ்ட்ரீ ஸ்டுடென்ட்_ஸ்ரீசக்தி”
என்று மைக்கில் அழைக்க,
“உன்னை கூப்பிட்டாங்க சக்தி..”
தன்னையும் மீறி சந்தியா கூற அவள் தவிப்போடு மீண்டும் ஆரியனை பார்த்தாள்.
“சரி போ..”
என்று அவன் கூறியதும் விட்டால் போதும் என்று இருவரும் நகர்ந்துவிட்டனர்.
“என்ன மச்சான்..புதுசா..ரேகிங் எல்லாம் பண்ற..”
ஜெய் புருவம் உயர்த்த
“சும்மா..டைம் பாஸ்க்குடா..”
என்று கண்சிமிட்டி பதிலளிக்க,
“ம்ம்..நீ நடத்து மச்சி..”
என்று அவனையே வம்பிழுக்கவும்,
“உடனே..ஆரம்பிச்சிடாதீங்கடா..”
என்று கடிந்தான்.
சற்று தூரம் சென்ற சக்தி திரும்பி அவனை பார்க்க சிரிப்போடு நண்பனோடு பேசிக்கொண்டிருந்த ஆரியனை கண்டு அவளுள் கோபம் கனன்றது.
“எல்லாரும் பார்க்க என்னை நிக்க வைச்சு அவமானப்படுத்திடானே..”
என்று அவள் உள்ளம் பொரும அவனை பார்த்தபடி,
“பொறுக்கி..ராஸ்கல்..”
என்று அவள் கூற அதே சமயம் யதார்த்தமாய் திரும்பிய ஆரியன் அவள் உதட்டசைவை கவனித்துவிட சிரிப்பு மறைந்து சுர்ரென்று கோபம் பொங்க,
“ஏய்..”
என்று எழுந்தே விட “அய்யையோ..பாத்துட்டான்..பாத்துட்டான்..’
பயந்தவள் படபடவென்று மேடையை நோக்கி ஓடிவிட்டாள்.
“என்னாச்சு ஆரியா..”
திடீரென்று எழுந்து கத்துபவனை இழுத்தபடி அனித் குழப்பமாய் கேட்க பதில் சொல்லாமல் மேடையேறும் சக்தியையே உறுத்து நோக்கினான்.
மைக் அதற்கான தாங்கியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்க கையில் புல்லாங்குழலுடன் சென்று நின்றுவிட்டாலும் அவளுக்கு படபடப்பு அடங்கவில்லை.தன்னையே கண்களில் கனல்காந்த முறைக்கும் ஆரியனின் பார்வை அவளை அச்சுறுத்த காலை மாற்றி மாற்றி ஊன்றியபடி நின்றாள்.
“எம்மா..என்ன யோசிக்கிற..வாசி..”
என்று தொகுப்பாளன் கையால் சைகை காட்ட அவனை தொடர்ந்து அமர்ந்திருப்பவர்களிலும் கமெண்ட் அடிக்க தொடங்கிவிடவும் மூச்சை இழுத்துவிட்டவள் ஆரியனின் பார்வையை தவிர்த்து வாசிக்க
தொடங்கினாள்.
முதல்வன் படத்திலிருந்து ‘குருக்கு சிறுத்தவளே..’ பாடலின் சரணத்தை அழகாய் நேர்த்தியாய் வாசிக்க சிலர் அப்பாடல் என்ன என்று யோசித்தபடியும் தெரிந்தவர்கள் இசையோடே பாடலை முணுமுணுத்தபடியும் அனைவரும் அவள் இசையை அமைதியாய் இரசித்துக் கேட்க அவள் முதல்வரிக்கு வாசிக்கும்போது “ஹோஓஓஓஓ..”
என்று மெச்சுதாலாய் கத்தினர்.
கண்மூடி வாசித்தவள் அவர்கள் சத்தம் அடங்கியதும் இன்னும் இரண்டு பாடல்களின் இசையை தொடர்ச்சியாய் வாசிக்க முடித்ததும் அரங்கமே கைத்தட்டலால் நிறைய நன்றிக்கூறி இறங்கியவள் பார்வையை ஆரியன் இருந்த திசையில் திரும்ப அவன் அங்கு இல்லை என்றதும் உதட்டை குவித்து நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
“அந்த சக்தி நல்லா தானே வாசிச்சுசு.முழுசா கேட்க விடாமல் ஏன்டா..இழுத்துட்டு வர..”
என்ற ஜெய்யின் தலையில் தட்டி,
“அவ என்னையே பொறுக்கினு சொல்லுவா..நான் இளிச்சிட்டே அவ வாசிக்கிறத கேட்டுகிட்டு உட்கார்ந்து இருக்கணுமா…”
என்றான் ஆரியன் கடுப்போடு..
“பொறுக்கினு சொன்னாளா..??எப்போடா..?”
“கேடி…நம்மகிட்ட நிக்கும்போது பம்மிட்டு..தள்ளிபோனதும்..சொல்றா…”
“நிஜமாவா..என்ன தைரியம்..!?”
“அப்பவே சொல்லியிருந்தால் நாலு காட்டு காட்டிருக்கலாம்..”
“ம்ச்…விடுங்கடா… மறுபடியும் மாட்டாமளா போயிருவா..அப்போ இருக்கு..”
பேசியபடி காரிடாரில் நடந்தவர்களை விரல் சொடக்கிடும் சத்தம் நிறுத்தியது.
“ம்க்கும்..என்னடா.. இவ்வளவு தூரம் வந்துட்டு பங்காளிங்கள பார்க்காமல் போறோமேனு நினைச்சேன்..வந்துட்டானுங்க..”
என்று நெற்றியை தடவிய ஜெய் கூற மற்ற இருவரும் ஒரு அலட்சிய பாவனையோடு தங்களை நோக்கிவரும் மனோஜ் & கோ-வை எதிர்க்கொண்டனர்.
“என்ன தம்பிங்களா..காத்து இந்த பக்கம் வீசுது..உங்களை இன்வைட் பண்ணதா எனக்கு நியாபகம் இல்லையே..” என்ற மனோஜ் அருகில் இருந்த தர்ஷனிடம்,
“மச்சி..கூப்டோம்..?!?!”
கிண்டலாய் கேட்க அவன் தோளை உலுக்கி இல்லை என்று சொல்லவும்,
“அப்புறம் இங்க என்ன வேலை..??ஓஓஓஓ வேடிக்கை பார்க்க வந்தீங்களா..ரைட்..ரைட்…கூப்பிட்டால் தான் வரவேண்டும் என்ற மேனர்ஸெல்லாம் உங்களிடம் எதிர்பார்க்க முடியாது தான்..சரி எப்படி இருந்தது..!?!என்ன தம்பி பேச மாட்டேங்குறீங்க..வாயடைச்சு போட்டீங்களோ..”
ஏற்று இறக்கத்துடன் குத்தலாய் சொல்லி காட்டியவனை ஆனமட்டும் ஜெய்யும் அனித்தும் முறைக்க ஆரியன் எந்த பாவனையும் காட்டவில்லை.
“ம்ச்..ம்ச்..என்ன பண்றது மனோஜ்…இங்க வந்து பார்த்ததுக்கப்புறம் தான் புத்திக்கு உறைச்சுது..இந்த மொக்கைக்கு எங்க ப்ரோஃபஸர் போடும் மொக்கை சால சிறந்ததுனு..பத்து நிமித்துக்கு மேலே கேட்க சகிக்காமல் பாதியிலே ஓடவிட்டீங்க..ஆமாம் நீங்களும் ஃபைனல்யிர் வந்துட்டீங்க ஒரு விஷயத்திலாவது உருப்பட்டு இருப்பீங்கனு பார்த்தால்.. ச்சே..ச்சே..எப்பவுமே அரைகுறை தானா…வேஸ்ட் சீனியர் நீங்க..”
ஏளனசிரிப்போடு ஆரியன் சொன்ன விதத்தில் மனோஜ் கேங்,
“டேய்..” என்று சட்டையை பிடிக்க பதிலுக்கு இவர்களும் பிடிக்க தன் நண்பர்களை தடுத்து விளங்கிய மனோஜ்,
“நாம நடத்தும் நிகழ்ச்சி..இங்க பிரச்சனை வேண்டாம்டா..இவனுங்க புள்ள பூச்சி..அப்புறம் பார்த்துக்கலாம்..”
என்று கூற அதற்கு மேலும் கேலியாய் சிரித்த ஆரியன்,
“எப்படி..எப்படி…புள்ளப்பூச்சியா…போன மாசம் இந்த புள்ளப்பூச்சிங்களுட்ட அடிவாங்கி கட்டுப்போட்டு..கடைசியா அந்த டீன் பின்னாடி போய் ஒழிஞ்சுக்கிட்டீங்களே…மறந்துட்டீங்களா சீனியர்…”
கண்களை வேண்டும் என்றே படபடவென சிமிட்டி பாவனையாய்
ஆரியன் கேட்டதும் மீண்டும் அவர்கள் கையோங்கி கொண்டுவர,
“இப்போ வேண்டாம்னு சொல்றேன..” என்று குரலுயர்த்தி மனோஜ் போட்ட ஓர் அதட்டலில் அடங்கிவிட்டனர்.
பார்வையில் நிதானத்தோடு மனோஜ்,
“ஏன் மறந்தேன்..அதுவும் நியாபகம் இருக்கு..நீ பண்ணின கேவலமான வேலைக்கு எல்லார் முன்னாடியும் அசிங்கப்பட்டு நின்னியே அதுவும் நியாபகம் இருக்கு…அரைகுறையா கூட இருக்கலாம்…பட் உன்னை மாதிரி அற்ப ஜென்மமா இல்லையே..அதுவே போதும்..”
என்று வார்த்தைகளால் குத்திவிட்டு நகர்ந்துவிட அன்றைய நினைவில் ஆரியனின் முகம் கறுத்தது.
“ஆரியா..”
என்று தோளை பற்றிய அனித்தின் கரத்தை தள்ளிவிட்டவன்,
“ப்ளீஸ்டா.. கொஞ்சம் நேரம் எனக்கு தனிமை வேண்டும்..”
என்று அமைதியாய் கூறி அவர்களை விட்டு தனியே சென்றுவிட,
“இங்க வராமலே இருந்திருக்கலாம்..”
என்று ஒரேகருத்து அனித்,ஜெய் இருவருக்கும் தோன்றியது.
அன்று நடந்ததை நினைத்தபடி கால்போன போக்கில் நடந்த ஆரியன் விளையாட்டு மைதானத்திற்கு எதிரில் உள்ள C ப்ளாக் படிக்கட்டில் மைதானத்தை வெறித்தப்படி அமர்ந்தான்.
அன்று…
எப்பொழுதும் போல் நண்பர்களுடன் அரட்டை அடித்து விளையாடிக் கொண்டிருந்த ஆரியனின் கண்களில் எதேர்ச்சயாய் அச்சம்பவம்பட்டது.
சில பெண்கள் கேம்பஸில் உள்ள கல் இருக்கையில் அமர்ந்து கதையடித்துக் கொண்டிருக்க அவர்களுக்கு சற்று தள்ளி நின்ற தர்ஷன் கையில் இருந்த செல்ஃபோனில் படம்பிடிப்பதும் பட்டது.
அவன் அமர்ந்திருந்த நிலையும் அவன் மற்றும் அவனது நண்பர்களின் முகபாவனையுமே அவர்களது நோக்கத்தை பிரதிபலிக்க கண்மண் தெரியாமல் கோபம் பொங்கியது ஆரியனுக்கு..
ஆத்திரத்தோடு கையில் கிடைத்த கிரிக்கெட் மட்டையை எடுத்தவன் வேகமாய் அவனருகில் சென்று ஒரே போடாய் போட அத்திடீர் தாக்குதலில் அதிர்ச்சியுடன் சரிந்தான் தர்ஷன்.
அவன் ஃபோனை பிடுங்கி பார்த்த ஆரியன் அவன் நினைத்ததுபோலவே அதில் படங்கள் அப்பெண்களை ஆபாசமான கோணலில் எடுத்திருக்க பல்லை கடித்தப்படி தூக்கி எறிந்ததில் அது சிதறு தேங்காவானது.
அதற்குள் சற்று சுதாரித்த தர்ஷனின் நண்பர்கள் பதிலுக்கு ஆரியனை தாக்க விசயம் புரியவில்லை எனினும் ஆரியரின் நண்பர்களும் சேர்ந்து அடிக்க அங்கே களேபரம் ஆனது.
தர்ஷன் மனோஜின் வகுப்பு என்பதால் இங்கே நடக்கும் களேபரம் அவனை எட்ட அவனும் வந்து சேரவும் பிரச்சனை பெரியதாகி பிரின்ஸ்பலை தாண்டி விசயம் விஜய் காதுக்கு சென்றடைந்தது.
விஜய் பொறுப்பேற்று அப்பொழுது தான் ஒரு மாதம் ஆகியிருந்த நிலையில் முதல் முறை இத்தகைய பிரச்சனை அவனிடம் வந்தது.
மறுநாள் இதில் ஈடுபட்டிருந்த அனைத்து மாணவர்களும் அவன்முன் ஆஜராக தர்ஷனையும் ஆரியனையும் மட்டும் முன்னால் அழைத்தவன் கையிலும் தலையிலும் கட்டோடும் கண்களில் வெறியோடு நின்ற தர்ஷனை நோக்கி என்ன நடந்தது என்று வினவினான்.
“நேற்று இவன் ஃபோனில் அங்கிருந்த பொண்ணுங்கல தப்பா ஃபோட்டோ எடுத்தான் சார்..அதை வாங்கி நான் டெலிட் பண்ணிட்டு அவனை கண்டிக்கவும்..”
என்று அவன் பிளேட்டையே திருப்பிபோடவும் ஆரியனிற்கு கோபம் தலைக்கேற,
“சார்…அவன்..”
என்று குறுக்கே பேச முற்படும்போது
“ஐ ஆம் ஆஸ்கிங் ஹிம்..”
என்று அழுத்தமாய் கூறிய விஜய் மீண்டும் தர்ஷனை பார்க்க,
“அதான் சார்..நான் கண்டிக்கவும் நீ யாருடா அதை கேட்கனு பேட்டால் என்னை அடிச்சு…பிரச்சனையை ஆரம்பிச்சதே இவன் தான் சார்..”
சொன்னதும் ஆரியனை திரும்பி பார்த்த விஜய்,
“நீயென்ன சொல்ல போற..இப்ப சொல்லு..”
என்று கையை கட்டி டேபிளில் சாய்ந்து நின்று கேட்க,
“அவன் பண்ணியதெல்லாம் நான் பண்ணினதா சொல்றான் சார்..”
என்று அடக்கிய கோபத்தோடு ஆரியன் கூறினான்.
“சரி..நீ சொல்றது சரியாவே இருக்கட்டும்..போய் ஸ்டாஃப்ட கம்பலைன்ட் செய்ய வேண்டியது தானே..நீ யாரு முதலில் அவன் மேல் கை வைக்க..என்ன ஹிரோயிசம் காட்றீயா..”
விஜயின் கேள்வியில் மறுமொழியின்றி கை முஷ்டி இறுக தலை குனிந்து ஆரியன் நிற்க இப்பொழுது தர்ஷன் இடையில் புகுந்தான்.
“சார்..அந்த பொண்ணுங்க..என் பிரண்ட்ஸ் சார்..நான் ஏன் இப்படி சீப்பா பிஹேவ் பண்ணனும்..இவன் செய்வதெல்லாம் செஞ்சிட்டு என்மேல் பழிய போட பார்க்கிறான்..”
“டேய்…பொய் சொல்லாதடா..ஃப்ராடு நாயே..”
விஜய் இருப்பதையும் மறந்து ஆரியன் சண்டைக்குவர,
“ஷெட்டப் யூ இடியட்..”
என்ற விஜய் குரலுயர்த்தியதில் அவ்விடமே நிசப்ததில் நிறைந்தது.
“இப்போ கூட பாருங்க சார்..சண்டைக்கு நிற்பது அவன் தான்..”
என்ற தர்ஷனின் குரலில் இருந்த தன்மை பார்வையில் இல்லை கோபமும் வெறியும் மின்ன ஆரியனை உறுத்து விழித்தான்.
“ஸ்டாப் ப்ளேமிங் ஒன் அனதர்..ஆர் யூ கிட்ஸ்..ஃபைனல் இயர் வந்துடீங்க..அடுத்து உங்க கேரீயர் நோக்கி முன்னேறனும்..வெளியுலகை ஃபேஸ் பண்ணனும்..பட் நீங்க இன்னும் அடிச்சிக்கிட்டு ‘அவன் தான் அடிச்சான்..’ ‘இவன் தான் கிள்ளினான்னு ஸ்கூல் பசங்க மாதிரி கம்ப்லைன்ட் பண்றீங்க..ஹா..த க்ரேட் கே.வி.எஸ் இன்டிடியூட் ஸ்டூடென்ஸ்..நாளைக்கு ரொம்ப நல்ல பெயர் வாங்கி கொடுப்பீங்கனு இதுலே தெரியுது..”
என்று அவன் கர்ஜித்ததில் சுற்றியிருந்த யாருக்கும் குரலே எழும்பவில்லை.
“அன்ட் யூ…”
என்று ஒற்றை விரலை ஆரியனை நோக்கி நீட்டியவன்,
“ஒருத்தன் எவ்வளவு திறமைசாலியா இருந்தாலும் ஃபஸட் டிஸிப்லீன் தான் முக்கியம்.. அதற்கப்புறம் தான் எல்லாமே…இந்த உன்னோட இந்த சீப் பிஹேவியர் எல்லாம் வெளியே வைச்சுக்க…”
என்று விஜய் பேசும்போதே “சார்..தப்பு பண்ணினது அவன்..”
என்று ஆரியன் குறுக்கே பேச,
“நான் பேசும்போது கேட்க மட்டும் தான் செய்யனும்…எதிர்த்துபேசுகிற வேலையெல்லாம் என்னிடம் வேண்டாம்..”
என்று அழுத்தமாய் கூறியவன்,
“காலேஜில் மறுபடியும் உன்னோடு இந்த கீழ்தனமான வேலையெல்லாம் வைச்சுக்கிடே..ஃபைனல் இயர்னு கூட பார்க்காமல் டீசி கிழிச்சு கொடுத்திருவேன்..அன்டர்ஸ்டென்..?”
என்று அவன் உறுமியதில் ஆரியன் சரி என்பதுபோல் தலையாட்டினான்.ஆனால் செய்யாத தப்பிற்கு பழி விழுந்ததில் தேகமெங்கும் கோபத்தில் துடித்தது.
“ஸ்போட்ஸ் கோட்டாவில் ஈஸியா நுழைந்துவிட்டதால் இந்த காலேஜோடு வேல்யு இவனை மாதிரி லோக்கலுக்கெல்லாம் எங்கே புரியப் போது..”
என்று வாய்குள்ளே முணுமுணுத்த விஜய்,
“திஸ் இஸ் த லாஸ்ட் வார்னிங் ஃபார் ஆல்..கோ பேக் டு யுவர் க்ளாஸஸ்..”
என்று எச்சரித்து அனுப்ப ஆரியனை வெற்றியின் கர்வத்தோடு பார்த்தபடி அங்கிருந்து சென்றான் தர்ஷன்.
இந்நிகழ்வு ஆரியனிற்கு வாழ்வில் மறக்க முடியாத ஒர் அவமானமாய் அமைந்துவிட்டது.சரியாக விசாரிக்காமல் ஒர் முடிவுக்கு வந்ததோடு இல்லாமல் அவனது சுயமரியாதை பாதிக்கும்படியும் பேசிய விஜயின் மீது தீராத வெறுப்பு அவனுள் படிந்தது.
வேகமாய் வீசிய மாலை நேரக்காற்றில் அன்றைய நினைவிலிருந்து மீண்டான் ஆரியன்.
அப்பொழுது தான் அது நிகழ்ந்தது.
வேகமாய் வீசிய காற்றில் தரையில் இருந்த துகள்கள் மெல்ல நகர்ந்து நகர்ந்து ஓர் உருவமாய் வடிவம் பெற்று ஒயிலாய் ஆரியனின் பின்னால் நேரெதிரே உள்ள கதவில் சாய்ந்து நின்றது.அதன் தீப்பிழம்பு பார்வையோ ஆரியனைவிட்டு அசையவில்லை.
தன்னை யாரோ பார்ப்பதுபோல் ஆரியனிற்கு குறுகுறுக்க திரும்பி சுற்றும் முற்றும் பார்த்தான் யாருமில்லை.அவனையே
நிலைக்குத்திய பார்வையோடு பார்த்தபடி நின்ற அந்த உருவம் அவன் கண்களுக்கு தெரியவில்லை.
அடுத்தடுத்து நடந்த சம்பவங்களால் அவனுக்கு தலையே பிளப்பது போல் வழிக்க படிக்கட்டிலே சாய்ந்து தலையை பிடித்துக் கொண்டான்.
அந்த உருவத்தின் கைகள் நீண்டு அவன் தலையை தீண்டும் வேளையில்,
“ஆரியா…”
என்று சத்தம் வந்த நொடி துகளுருவம் தூசியாய் மறைந்தது.
“உன்னை எங்கெல்லாம் தேடுவது…வீட்டிற்கு கிளம்பும் ஐடியாவே இல்லையா…”
என்றபடி அனித்தும் ஜெய்யும் வந்து ஆளுக்கு ஒருபக்கமாய் ஆரியனின் பக்கத்தில் அமர்ந்தனர்.
“மூஞ்ச அடிக்கடி இப்படி தூக்கி வைச்சிக்காத மாப்ள..அப்புறம் பார்க்குற நாலு பொண்ணுங்களும் கண்டுக்காதுங்க..”
சொன்ன ஜெயுக்கும்,
“நம்மளால எல்லாரும் தலைய பிச்சுகனுமே தவிர..நாம் யாராலும் வருத்தபட்டு உட்கார கூடாது மச்சான்…”
என்று சொன்ன அனித்திற்கும் அவன் பதில் சொல்லாமல் போகவும் இருவருக்கும் பொறுமை பறந்துவிட,
“அடிங்க..நாங்களும் பார்த்துட்டே இருக்கும்..சொம்மா சீனா போட்டுட்டு இருக்க..இப்போ என்ன****_”
அதற்குமேலான ‘பாசமான’ வார்த்தைகளை பொழிந்ததோடு அவனை கீழே தள்ளி இருவரும் மாறி மாறி மொத்தியதில் உருண்டு பிரண்டு ஒருவழியாய் ஆரியனை இயல்பிற்கு கொணர்ந்தபின்பே அங்கிருந்து புறப்பட்டனர்.