“மித்ரா…எங்க போன…மித்ரா..நீ நினைக்கிறா மாதிரி இல்ல..”
காற்றில் கலந்து கரைந்தவளை காணாது பதறி தேடியபடி நகர முற்பட்டவளை தடுக்க தன்னையும் மீறி அவள் கையை பற்றினான் ஆரியன்.
“ஏ..சக்தி..நில்லு..என்ன பண்ற..அது போயிடுச்சா..??”
என்றான் சுற்றும் முற்றும் பார்த்தபடி சந்தேகமாய்.பெரிதாய் பேசிவிட்டாலும் அதற்கு மித்ராவின் எதிரொலி எப்படி இருக்குமோ என்ற பயம் லேசாய் அவனிடம் இருக்க தான் செய்தது.சும்மாவா..? ஏற்கெனவே அடிவாங்கியவன் ஆகிற்றே..!
ஆதலால் பேசிவிட்டு அது என்ன செய்யுமோ என்ற அச்சத்தோடு தான் பார்த்தான்.ஆனால் சக்தியின் தேடலில் அது மறைந்துவிட்டது என்பது புரிய அவனுக்கே ஆச்சரியம் தான்.
“நான் ஏமாத்திட்டதா நினைச்சுட்டா மித்ரா….நான் உதவுவேன்னு ரொம்ப நம்பினாள் சீனியர்..சொந்த அப்பா அம்மாவாலே ஒதுக்கி வைக்கப்பட்டால் எவ்வளவு கொடுமையா இருக்கும்னு எனக்கு தெரியும்…அவ பாவம் சீனியர்”
என்று கவலையாய் கூறி, “மித்ரா..”
என்று மீண்டும் அழைத்தவளை இழுத்து நிறுத்தியவன்,
“சக்தி..புரிஞ்சு தான் பேசுறீயா..அதுவே பெரிய மனசு பண்ணி போயிருக்கு..நீ மறுபடியும் இழுத்து தலையில கட்டிக்க பார்க்காதே..நீ யாரையும் ஏமாற்றல…உன் சக்திக்கு மீறிய விஷயத்தை உன்னிடம் எதிர்பார்த்தால் உன்னால எப்படி செய்ய முடியும்..அந்த மித்ரா பழிவாங்க நீ உதவ நினைப்பதும் உன் சக்திக்கு மீறிய ஒரு விஷயம் தான்…அதுவா போனவரை பெரிய விஷயம்..இனி இந்த பேய் பிசாசு பின்னாடி சுத்தாம படிக்கிற வழிய மட்டும் பாரு..”
சிறுபிள்ளைக்கு சொல்வது போல் அவன் கூற அவன் கூறுவதில் உள்ள நிதர்சனமும் அவளுக்கு புரியவே செய்தது.அவன் தொடர்ந்து அறிவுரையை அருவியாய் பொழிய அமைதியாய் நின்றாள்.
இவர்கள் இருவரும் பேசுவதை சற்று தொலைவில் வந்துக் கொண்டிருந்த மனோஜ் பார்த்துவிட்டான்.
ஏதேனும் பிரச்சனை செய்கிறானோ என்று எண்ணி அவர்களை நோக்கி விரைய அப்பொழுது போக முனைந்தவளை அவன் இழுத்து நிற்க வைப்பதும் அவன் ஏதோ பேச இவள் அமைதியாய் கேட்டுக்கொள்வதும் ஊமைபடம் பார்ப்பது போல் ஒன்றும் புரியவில்லை என்றாலும் அவன் பிடியில் அவள் அமைதியாய் நிற்பது அவனை வேறு கோணத்தில் சிந்திக்க வைத்தது.
அவன் அருகில் வந்ததும் மனோஜை அப்போது தான் கவனித்த சக்தி,
“மனோஜ் அண்ணா..”
என்று கூற ஆரியனும் அப்பொழுது தான் அவனை பார்த்தான்.பார்தததும் ‘இவனா..’ என்ற எரிச்சல் ஒரு பக்கமும் ‘அண்ணனா..?’ என்ற குழப்பமும் சேர அவர்களை பார்த்தான்.
மனோஜின் பார்வை தங்கள் கையை பார்க்கவும் தான் ஆரியன் தன் கையை பிடித்திருப்பதை உணர்ந்த சக்தி வேகமாய் விடுத்துக் கொண்டாள்.
“அன்னைக்கு நீ கோபப்பட இது தான் காரணமா சக்தி…முன்னமே சொல்லியிருக்க வேண்டியது தானே…நீ இப்படி பண்ணுவேன்னு நினைக்கல..”
என்று அவன் அதிருப்தியாய் பேச,
“இல்லண்ணா..நீங்க நினைக்கிறா மாதிரி எதுவும் இல்ல…”
என்று அவள் தொடங்கும் போதே,
“வேற எப்படி..வேற என்ன இவனுட்ட நின்னு பேசிட்டு இருக்க..”
என்று அவன் இடைமறித்து கேள்வி கேட்க என்னவென்று சொல்வது என்று தெரியாமல் விழித்தாள்.
அதற்குள் கடுப்பான ஆரியன்,
“இப்ப என்னாத்துக்கு நீ கெஞ்சிட்டு இருக்க சக்தி….ஹே..நாங்க என்னவேனாலும் பேசுவோம்.. அதெல்லாம் உனக்கு எதுக்கு..உன்னை யாராச்சும் இப்ப கூப்பிடாங்களா..சம்மன்னே இல்லாம எதுக்கு இங்க ஆஜர் ஆகுற…”
என்று சக்தியிடம் ஆரம்பித்து மனோஜிடம் பட்டென்று எரிச்சலாய் பேச இருவருக்கும் சண்டை வெடிக்கும் அபாயத்தை உணர்ந்த சக்தி அதை தவிர்க்க எண்ணி,
“நான் தானே பேசிட்டு இருக்கேன்..நீங்க இதுல நுழையாதீங்க சீனியர்..ப்ளீஸ் முதல்ல இங்கிருந்து கிளம்புங்க..”
என்று கூறிவிட அவள் அவ்வாறு மனோஜின் முன் கூறியது ஆரியனிற்கு அவமானமாய் போனது.
அவளை உறுத்து விழித்தவன் ஒற்றை விரலை நீட்டி,
“உனக்காக நின்னு யோசித்தேன் பார்..என்னை சொல்லனும்…தப்பி தவறிக்கூட என் கண்ணு முன்னால வந்திடாத…அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன்…”
என்று கோபமாய் கூறி அவள் பதிலை எதிர்பார்க்காது விறுவிறுவென அங்கிருந்து செல்ல சட்டென்று அவள் கண்கள் கலங்கிவிட்டன.அவனது கோபம் அவளை என்னவோ செய்ய, போகும் அவனையே பார்த்தபடி நின்றாள்.
“போயும் போயும் இவனையா சக்தி நம்புற..இவன் எவ்வளவு கேடுக்கெட்டவன்னு உனக்கு தெரியாது..இதுக்கு முன்னாடி தர்ஷனோட ஒரு பிரச்சனை வந்துச்சு..ஏன்னு தெரியுமா..”
என்று அவன் சொல்ல தொடங்கும் போதே, “தெரியும் ண்ணா..”
என்று அவனை நிறுத்தியவள்,
“அதை பற்றி ஏஞ்சல் சொன்னாள்..ஆனால் நீங்க தான் அதை தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்கீங்க..கண்டிப்பா தப்பு ஆரியன் மேல இருக்காது.தர்ஷன் தான் தப்பு பண்ணிருப்பான்..”
என்றாள் தீர்க்கமாய்..
“ஹோ..சர் அந்த அளவுக்கு உங்களுக்கு முக்கியமானவறா போய்டாரா..இவனுக்காக என் பிரெண்ட் மேல பழி சொல்ற..”
என்று அவன் ஒரு மாதிரி குரலில் சொல்ல,
“நான் உண்மையை தான் சொல்றேன் ண்ணா..உங்க கூட இருக்கான்..உங்க பிரெண்டுங்குறதால தர்ஷன் மேல தப்பு இல்லேனும் உங்களுக்கு ஆகாதுங்குறதால ஆரியன் தான் தப்பு பண்ணினதுனும் நீங்க எப்படி டிஸைட் பண்ணுவீங்க…நடந்தது என்னானு விசாரிச்சீங்களா முதல்ல..!!!தர்ஷன் நல்லவன் கிடையாதுண்ணா…அதை நானே உணர்ந்திருக்கேன்..வேணுனா
ஏன் உங்க க்ளாஸ் பொண்ணுங்களுட்டே விசாரிச்சு பாருங்க..உண்மை தெரியும்…”
என்று அழுத்தமாய் கூறியவள் அவன் யோசிக்கிறான் என்பது புரிந்ததும்,
“நான் வரேன் அண்ணா..”
என்று கூறி நகர்ந்தவளுக்கு மனம் பாரமானது. ஒவ்வொரு முறையும் ஆரியனோடு சமாதானம் ஆக முயலும்போது மீண்டும் ஒரு பிரச்சனை வந்துவிடுகிறது.இதற்கு முடிவே வராதா..?? என்று மலைத்தவள்
‘கண்ணு முன்னாலே வரக்கூடாதாமே..வந்து நின்னால் என்ன செய்வாராம்..’
என்று மானசீகமாய் நொடித்துக் கொண்டாள்.
இவனை பற்றிய சிந்தனையில் அக்னிமித்ராவை பற்றிய கவலை அவளையும் அறியாமல் பின்னுக்கு சென்றது.
“அடிக்கடி ஏதோ யோசனைக்கு போயிடுறா…இல்ல எங்கேயாவது வெறிச்சு பார்த்துட்டு உட்கார்ந்திடுறா..இன்னைக்கு மத்தியானம் எங்கேயோ போனாள்.எங்க போனேனு கேட்டால் அதையும் இதையும் சொல்லி சமாளிக்கிறா..இவ நடவடிக்கையை பார்த்தாலே பயமா இருக்குடி..நமக்கு தெரியாமல் ஏதோ செய்யுறா..”
மாலை வகுப்பு முடிந்து அனைவரும் கிளம்பும் சமயம் சந்தியா ஏஞ்சலிடம் முணுமுணுத்தது சக்திக்கு நன்றாகவே கேட்டது.
திறந்திருந்த நோட்டில் கையில் வைத்திருந்த பேனாவால் அழுத்தியவள் கண்ணா பின்னால் என்று கோடு கிழிக்க பேக்கை எடுத்துக் கொண்டு கிளம்ப ஆயத்தமான சந்தியாவும் ஏஞ்சலினும் அவளை கவனிக்கவே இல்லை.
கிட்டத்தட்ட முழுவகுப்பறையும் காலியாகி இருக்க அப்பொழுது தான் சக்தி இன்னும் எழுதிக் கொண்டே இருப்பதை பார்த்த ஏஞ்சலின் அவளை பார்த்து,
“உன் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா..போதும் வாடி…”
என்று அழைக்க சக்தியோ பதில் சொல்லாமல் அவள் நோட்டையே வெறித்து பார்த்தபடி பேனாவை இன்னும் அதில் ஆழமாய் குத்தினாள்.
“ஏஞ்சல்..அவ நோட்ட பாரு..”
என்று பதட்டமான குரலில் சந்தியா கூற அவள் இலக்கின்றி கிறுக்குவதை கண்டு ஏஞ்சலுக்கும் அது தொற்றிக் கொண்டது.
திறந்திருந்த ஜன்னல்கள் வழி காற்று அசுரனாய் வீச
காதோர கூந்தல் முகத்தில் வந்து விழுக கண்கள் வழக்கத்தை விட பெரியதாய் விரிந்திருக்க பல்லை அழுத்த கடித்து உதடுகள் துடிக்க முகம் சிவக்க மூச்சை இழுத்துவிட்டபடி பேனாவை உடைத்து விடுபவள் போல் இறுக்க பற்றி பேப்பர் கிழியும் அளவு கிறுக்கியவளின் கோலத்தைக் கண்டு தோழிகளுக்கு வயிற்றில் பயபந்து உருள கிட்டவர பயந்து,
“சக்தி…சக்தி..இங்க பாருடி..சக்தி..”
என்று மாறி மாறி கூப்பிட்டனர்.ஆனால் அவள் விழியை கூட அசைக்காதது சந்தியாவின் கனவை நியாபகப்படுத்த,
‘அவளுக்கு என்னவோ ஆயிடுச்சுடி..’
விட்டால் அழுதுவிடுபவள் போல் முணுமுணுத்தாள் சந்தியா.
ஏஞ்சலின் தைரியத்தை வரவைத்துக் கொண்டு அவள் தோளை பற்றி,
“சக்தி..”
என்றழைக்க சட்டென்று அவள் கிறுக்கல் தடைப்பெற்றது.
“கையை எடுடி…”
அழுத்த கடித்த பற்களோடு அவள் உச்சரித்த தொனியே இருவரையும் சிலிர்க்க செய்ய அதையும் மீறி,
“சக்தி… இப்படி பண்ணாதடி… எழுந்து வா…”
என்று நலிந்தக் குரலில் அவள் ஏறக்குறைய கெஞ்ச,
“கைய.எடுனு சொல்றேன்ல…கையை எடுடி..”
அடித்தொண்டையில் இருந்து இடமே அதிர கத்தியவள் சட்டென்று பேனாவை கத்திப்போல் ஓங்கி அவள் முகத்தருகே கொண்டுவந்து நிறுத்த மொத்தமாய் பயந்துபோன இருவரும் ‘அம்மாஆஆஆஆஆ…!!!’ என்று அலறினர்.
சந்தியாவோ பட்டென்று தடுமாறி கீழேயே விழுந்துவிட கண்ணை இறுக்கி முடிக்கொண்டு கத்திய இருவரும் சில நொடிகள் சென்றே தாங்கள் தாக்கப்படாததை உணர்ந்து கண்களை திறக்க பின்இருக்கையில் இருமுழங்கையையும் ஊன்றி பேனாவை ஸ்டைலாக ஆட்டியபடி தங்களை குறும்பாய் பார்த்து சிரித்துக் கொண்டே புருவம் உயர்த்திய சக்தியை கண்டதும் விசயம் விளங்க கொலவெறியானர்.
“பக்கி…பண்ணாட..எருமை.. பிசாசு…”
என்று தொடங்கி வாய்க்கு வந்ததெல்லாம் திட்டிக்கொண்டே பாய்ந்து அவளை அடிக்க வர சடுதியில் தப்பித்த சக்தி சட்டென்று தன் பேக்கை எடுத்து மாட்டிக் கொண்டு சிரிப்புடன்,
“வேணாம்டி..நீங்க தான் என்னை ஒரு மார்க்கமா பார்த்தீங்க..உங்க சந்தேகத்தை ஏன் கெடுப்பானேன்னு நானும் அதுக்கு தகுந்தா மாதிரி நடிச்சேன்.. அவ்வளவு தான்..பேச்சு பேச்சா தான் இருக்கணும்..”
என்று அவர்களிடம் இருந்து தப்பி ஓடியப்படி கூற,
“அதுக்கு இப்படி தான் பயம் புடுத்துவியா..உசுரே போச்சு..நாயே..சும்மா விடுவோமா பாரு..”
என்று மிரட்டியபடி ஆளுக்கு ஒருபக்கமாய் வந்து பிடிக்க முயல சிரிப்புடன் இருவரையும் தாண்டிக்கொண்டு வகுப்பை விட்டு ஓடியவள்,
“தப்புச்சு ஓடிடுடா கைப்புள்ள…”
என்று சத்தமாய் சொல்லிக்கொண்டே வராண்டாவில் வேகமாய் ஓட சந்தியாவும் ஏஞ்சலுமும் விடவில்லை.
அவர்கள் கையில் சிக்காமல் வராண்டாவில் ஓடிய சக்திக்கு அவர்கள் பயத்தை எண்ணி மேலும் மேலும் சிரிப்பு பொங்க மான்குட்டியாய் துள்ளி ஓடியவள்,
“நான் போனதும் எவ்வளவு சந்தோஷமா இருக்க சக்தி..என்னை பத்தி கொஞ்சங்கூட உறுத்தலே உனக்கு இல்லேல..”
என்று அசரீரியாக ஒலித்தக் குரலில் சடென் ப்ரேக் போட்டதுபோல் நின்றவள் மூச்சிரைக்க சுற்றும் முற்றும் பார்த்தாள்.
“மித்ரா வந்துட்டியா…”
என்று அவளை தேட அவள் கண்ணில் படவில்லை.
“ஆமா..மித்ரா தான்..ஒரேடியாய் போயிடுவேன்னு நினைச்சியோ…ம்ஹூம்…அது இப்போ நடக்காது சக்தி..”
என்று நக்கலாய் வந்தது பதில்..
“நீ என்மேல அக்கறை வைச்சிருக்கேன்னு உன்னை என் ப்ரெண்டாக நம்பினேன்..ஆனால் நீயும் மத்தவங்க மாதிரி தான்னு நிரூபிச்சிட்டே சக்தி..நீயும் என் முதுகுல குத்திட்டேல..!!எப்படி சக்தி…?நான் உன் நிழல்போல தானே சுத்திட்டு இருந்தேன்..ஆனால் நான் போனது கொஞ்சம் கூட உனக்கு கஷ்டமாவே இல்லைல.. எவ்வளவு சந்தோஷமா உன் பிரெண்ட்ஸோட விளையாட்டிட்டு இருக்க..நீ இவ்வளவு சுயநலமா இருப்பேன்னு நினைக்கல..”
என்று வெறுப்பாய் ஓங்கி ஒலித்துக் குரல் அவள் முதுகுத் தண்டை சில்லிடச் செய்தது.
“அப்படிலாம் இல்ல மித்ரா..”
என்று கலங்கிய வார்த்தையில் ஏளனமாய் சிரிப்பு ஒலி இடியென முழங்க நடுங்கிப் போனாள்.
“நீயே என்னை ஒழிக்க நினைச்சாலும் அது நடக்காது சக்தி..எனக்கான காலம் முடியப்போது அதுக்குள்ள நான் நினைச்சது எனக்கு நடக்கணும்…அதை நிறைவேற்ற எனக்கு நீ வேணும்..என் ஆட்டத்தை இனிமே தான் பார்ப்ப..என்னை பற்றி கவலைப்படாத உன்னை பற்றியும் நான் இனி யோசிக்கிறதா இல்ல..என்னோட ஆட்டத்துக்கு கைப்பாவையாய் ஆட தயாரா இரு சக்தி..”
என்று அழுத்தமும் உக்கிரமுமாய் அவள் செவிப்பறையை கிழித்த குரலை கேட்டு மெல்ல மெல்ல தலைச்சுற்ற மயங்கி சரிந்தாள்.
“ஏய்..எரும.. எங்க ஒழிச்சு இருந்தாலும் நீயா வந்தீட்டா சேதாரம் கம்மி..”
என்று அவளை மிரட்டிக் கொண்டே தேடிய சந்தியாவும் ஏஞ்சலும் அவள் தரையில் மயங்கி கிடந்த கோலத்தைக் கண்டு அதிர்ந்து விட்டனர்.
“அய்யோ..சக்தி…”
என்று பதறிவந்து அவளருகில் மண்டியிட்டு அவள் கன்னத்தை தட்ட எந்த அசைவும் இல்லை.
ஏற்கெனவே நடந்ததுப்போல் மீண்டும் ஏதும் ஆகிவிட்டதோ என்று பயந்த இருவரும் கடவுளை வேண்டிக்கொண்டே தண்ணீரை எடுத்து அவள் முகத்தில் தெளிக்க இரண்டு முறைக்குப்பின் அவள் விழிகளில் அசைவு தெரிந்தது.
“சக்தி…கண்ணை தொறந்து பாருடி..”
என்று சந்தியா கன்னத்தைத் தட்ட மெல்ல கண்களை திறந்தாள்.தோழிகளை மாறி மாறி பார்த்தவள் சட்டென்று எழுந்து உட்கார்ந்து சுற்றும் முற்றும் பார்க்க மித்ரா இருப்பதற்கான அடையாளமே இல்லை.
“ஏய்…என்னடி ஆச்சு..ஏன் மயங்கி கிடந்த..உடம்புக்கு எதுவும் பண்ணுதா….பதில் சொல்லு சக்தி..”
என்று கலவையாய் கேட்ட தோழிகளுக்கு உண்மையை சொல்ல தோன்றினாலும் மறுபக்கம் அவர்களையும் இதில் இழுத்துவிட மனம் வரவில்லை.சொன்னாலும் அவர்கள் நம்புவது கடினம் தான்.
மித்ராவின் வார்த்தைகள் இன்னும் இன்னும் காதில் ஒலித்துக்கொண்டே இருக்க நடுங்கிய உடலை ஏஞ்சலின் கையை இறுக்க பற்றி கட்டுப்படுத்த முயல,
“என்னடி பண்ணுது…”
என்று பயத்தோடு அவள் தோளை தட்டிக்கொடுக்க சில நிமிடங்களில் தன்னை சமாளித்துக் கொண்டு,
“ஏன் தெரியலடி..திடீர்னு தலை சுத்திடுச்சு…”
என்று மெல்ல எழுந்திருக்க,
“உனக்கு ஏன் திடீர் திடீர்னு இப்படி பண்ணுது..வார்டனிடம் சொல்லிட்டு டாக்டரிடம் போலாமா..”
என்ற சந்தியாவை பார்த்து புன்னகைத்த,
“எனக்கு ஒன்னுமில்ல லூசு..ஏதோ டயர்ட்ல விழுந்துட்டேன்.. இதுக்கெல்லாம் டாக்டரிடம் போவாங்களா.. ரெஸ்ட் எடுத்தாலே போதும்..”
என்று அவள் சமாதானம் சொல்ல அவளை அமோதித்த ஏஞ்சலும்,
“நீங்க ரூம்முக்கு போங்க..நான் கிளம்புறேன்..போனதுமே எதாவது சாப்பிடு சக்தி..”
என்று கூறி இருவரிடமும் விடைப்பெற்று அவள் செல்ல மற்ற இருவரும் ஹாஸ்டலை நோக்கி சென்றனர்.
அமைதியாய் நடந்து வந்த சக்தியின் மனதில் பூகம்பமே வீச மித்ராவின் கோபம் அவளை மிகவும் அச்சுறுத்தியது.
மித்ராவிடம் இப்படி ஒரு பரிமாணத்தை அவள் எதிர்பார்க்காததால் அவள் என்ன செய்வாளோ என்ற பயம் அப்பட்டமாய் தெரிய அந்நேரத்தில் அவள் மனம் தேடியது ஆரியனை தான்.
அவனிடம் சொல்லிவிட்டால் போதும் அவன் தன்னை காப்பான் என்று உள்ளம் சொல்ல தன் எண்ணப்போக்கை கண்டு திடுக்கிட்டு போனாள்.
‘எங்கிருந்து வந்தது இத்தனை நம்பிக்கை அவன் மீது..’
என்று வியந்தாலும்,
‘ம்க்கும்.. ஏற்கெனவே என்மேல காண்டுல இருக்காங்க… மறுபடியும் எந்த முகத்தை வைத்துக் கொண்டு போய் நிப்ப..’
என்று மனம் சோர்ந்து போக, ‘இனி என்ன நடக்குமோ..ஆண்டவா..’
என்று இறுதியில் கடவுளிடம் சரணடைந்தாள்.