மேற்கு வானில் சூரியன் முழுவதுமாக மறைந்து இருள் படர்ந்த நேரமது. வானத்தில் ஒளிரும் நிலவும் அதோடு சேர்ந்து நட்சத்திரங்களும் உலகையே தன் வசப்படுத்திக் கொண்டிருந்த வேளையில் சூரிய ஆனந்தன் மொட்டைமாடியில் வெட்ட வெளியை பார்த்தப்படி படுத்திருந்தான். அவனது மனயோசனைகள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுக்க அவன் கண்களும் குளமானது. திடீரென, ‘தேவிகா’ ‘சாரா குட்டி’ என்று கூறிக்கொண்டே விம்மி அழத்தொடங்கினான். ஏன்? என்னவாயிற்று அவனுக்கு? ஏன் இந்த இயற்கை வருடும் தென்றலை கூட ரசிக்காமல் அழுகிறான் என்றால் அவனுக்கு நாளைய தினம் விவாகரத்து உறுதியாகிவிடும். காதல் மனைவியையும் மகளையும் பிரியும் நிலை. இந்த நிலையில் அவனால் இயற்கையை ரசிக்கவா முடியும்? “எல்லாம் என் தவறு தான். நான் செய்த முட்டாள்தனம் தான் காரணம்,” என்று புலம்பிக் கொண்டே இருந்தான். அவனுடைய தவறுதான் என்ன? செய்த தப்பை உணர்ந்தும் அவனுடைய மனைவி அவனை மன்னித்து ஏற்றுக் கொள்ளவில்லையா? அவன் கண்களில் பொங்கும் காதல் துளிகளின் ஆழத்தை அவள் புரிந்துகொள்ளவில்லையா? அவர்களுக்குள்ளே அப்படி என்னதான் நடந்தது?
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு….
வீட்டின் முன்னால் பெரிய பந்தலிட்டு, வாசலில் வாழைக் குலை நாட்டி, சினிமா பாட்டு ஒலிக்க, வீடு முழுவதும் உற்றார் உறவினர்களால் நிரம்பியிருந்தது அந்த கல்யாண வீடு. மாப்பிள்ளையான சூரிய ஆனந்தனின்(சூரியா) முகம் மட்டும் மலர்ச்சி இல்லாமல் காணப்பட்டது. அவனுக்கு இந்த திருமணத்தில் துளி கூட விருப்பமில்லை. அதுமட்டுமின்றி அவன் பெண்ணை நேரில் பார்த்ததுகூட இல்லை. பெற்றோர்களின் வற்புறுத்தலால் நடைபெறும் திருமணம் இது. அவன் நேற்றுதான் பட்டணத்தில் இருந்து வீட்டிற்கே வந்தான்.
திருமணக்கோலத்தில் பட்டு வேஷ்டியும், சட்டையும் அணிந்திருந்த சூரியா தன் அறையிலிருந்து வெளியே வரவேயில்லை. அதை கவனித்த அவனுடைய அண்ணன் கௌதம் அறைக்குள் நுழைந்தான். சூர்யா கௌதமை பார்த்தும் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தான். கௌதம் அவனருகில் சென்று, “எதற்கும் கவலைப்படாதே! எல்லாம் சரியாகும். நீ நல்லா இருக்கணும்னு தான் அப்பா எங்கே எல்லாமோ தேடி கடைசியில அவருடைய நண்பனின் மகளை உனக்கு திருமணம் செய்ய முடிவு செய்தார்,”
பார்வையில் கோபத்தை வீசிய சூர்யா, “இன்றோடு என் வாழ்க்கையே முடிய போகுது நீ என்னன்னா வாழ்க்கை சரியாகும்னு சொல்கிறாய். அப்பா, யாரைக் கேட்டு இந்த திருமணத்தை முடிவு செய்தார்?”
“உனக்கே தெரியும், அப்பாவின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே வருகிறது. அவருக்கு, அவர் இருக்கும்போதே உன்னுடைய திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்பது ஆசை அதையும் நீ அறிவாய். முன்பு, உன் விருப்பத்திற்கும் அப்பா எந்த தடங்கலும் சொல்லவில்லை தானே ஆனால் எல்லாம் கைவிட்டு போனது. இப்போது அவர் விருப்பத்திற்கு நீ இருக்க வேண்டும் என்று நினைக்கிறார் அதில் என்ன தவறு இருக்கிறது?” என்றான் கௌதம்.
“எல்லாம் என்னோட விதி,” என்று நெற்றியில் தட்டி கொண்டான், சூரியா. ஒரு சில பழைய நினைவுகளை எண்ணியவாறே.
“சரி விடு டா. எனக்கும் தான் உன் அண்ணியை முதலில் பிடிக்கவில்லை அதுக்கப்புறம் நாங்க இப்போது சந்தோஷமாக இல்லையா. அதே போல் உன் வாழ்வும் கண்டிப்பாக மாறும் ” என்று சூரியா அருகில் நின்று மெல்லிய குரலில் கூறினான். அப்போது ஐந்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண் குழந்தை ஓடி வந்து சூர்யாவிடம் “சித்தப்பா, நீங்க சீக்கிரம் ரெடியாகி வாங்க, உங்களுக்காக சித்தி அங்கே காத்துக் கொண்டிருப்பாங்க என்று அம்மா சொன்னாங்க,” என்று மழலை மாறாத குரலில் அந்தக் குழந்தை பேசினாள். அந்த குழந்தை வேறு யாருமில்லை கௌதமியின் மகள் ஆதிரா தான். சூர்யாவிற்கு ஆதிரா என்றால் உயிர். ஆதிராவை பார்த்த அடுத்த நொடியே அவளை தூக்கி தன் மடியில் இருத்திக்கொண்டான்.
நேற்று பட்டணத்திலிருந்து சூரியா வரும்போது ஆதிரா பள்ளியிலிருந்து வீடு திரும்பவில்லை. அதன் பின் சூரியாவும் அவன் அறையை விட்டு வெளியே வந்த பாடில்லை. நேற்றைய தினம் சூர்யாவின் தந்தையைத் தவிர அவனது தாயாரும், அண்ணியும் வந்து பேசி சென்றனர். அவனுக்கு சாப்பாடு கொடுக்க நேற்றிலிருந்து அவ்வப்போது கௌதம் வந்து சென்றான்.
நல்ல நேரம் ஆரம்பமானது, மேள சத்தங்கள் ஒலிக்க நாதஸ்வரம் முழங்க கல்யாண வீடே களைகட்ட ஆரம்பித்தது. போட்டோகாரர்களும் வீடியோகாரர்களும் அங்கே வந்திருக்கும் மக்களை தங்களது கேமராவில் சுத்தி சுத்தி படம் எடுக்க ஆரம்பித்தனர். கௌதம் சூர்யாவை கூட்டி வெளியே வந்தான். அப்போது எல்லோருடைய கண்ணும் மாப்பிள்ளை மேல் பாய, சூர்யாவின் தந்தை சூர்யாவிற்கு மாலை அணிவித்து ஆசி வழங்கினார். ஆயிரம் கோபம் இருந்தாலும் அதைப் உற்றார் உறவினர் முன்பு காட்டாது தன் தாய் தந்தையர் காலில் விழுந்து வணங்கினான். அவனது தாய் கௌரி அவனின் கன்னத்தில் அன்பு முத்தம் பதித்தாள். அவர்களை தொடர்ந்து, சூர்யா தனது அண்ணன் அண்ணியிடம் ஆசி பெற்றான். பின் அவனது தாய் மாமா அவனுக்கு செய்ய வேண்டிய சடங்கு சம்பரதாயங்களை முறைப்படி செய்து முடித்தார்.
அப்போது அவனது மாமன் மகள் கௌசல்யா, “மச்சான்! என்னை கழற்றிவிட்டுடீயே! எப்படியோ போ,” என்று எப்போதும் போல் கூற, “இந்தா பாரு கௌசி, நானே செம கடுப்புல இருக்கேன். நீ வேற!” அவனது பதிலை கேட்டதும் கௌசல்யாவிற்கு சிரிப்பு பொங்கியது.
பின் குடும்பம் குடும்பமாக போட்டி போட்டுக் கொண்டு மாப்பிள்ளையுடன் போட்டா எடுத்தனர். சற்று நேரத்தில் மாப்பிள்ளை காருக்கு பின்னால் மூன்று பெரிய வேன்கள் உறவினர்களை ஏற்றிக்கொண்டு மண்டபத்தை நோக்கி விரைந்தது.
மண்டப்பத்தில்…..
மண்டபம் அலங்காரத்தில் ஜெகஜோதியாக ஜொலிக்க, பெருசுகள் நாதஸ்வர சங்கீதத்தில் அவர்களேயே மறக்க, இளசுகள் தங்களைத் தாங்களே போட்டோ எடுத்துக்கொள்ள, மண்டபத்தில் அவளது பெற்றோர் (சிவநேசன் & லட்சுமி) மற்றும் அண்ணன் (தீபக்) நெருங்கிய உறவினர்களையும் மற்றும் விருந்தினர்களையும் உபசரிக்க எந்தவித குறைவும் இல்லாது இயங்கி கொண்டிருந்தனர். பெண் வீட்டார் அனைவரும் மண்டபத்தில் மாப்பிள்ளையின் வருகையை எதிர்நோக்கி காத்திருந்தனர்.
மங்களகரமான மஞ்சள் நிற பட்டுப் புடைவையில் திருத்தமான அழகுடன் காணப்பட்டாள் மணப்பெண் தேவிகா. தன் நீண்ட கூந்தலை ஜடை பின்னி மல்லிகைப்பூ சூடியிருந்தாள். அவளின் வட்டம் முகத்திற்கு தகுந்தாற்போல் ஒப்பனை போடப்பட்டிருந்தது. அந்த அறையில் அவளுடன் அவளது தோழிகளும், நெருங்கிய உறவினர்களும் இருக்கையில் தேவிகாவை கலாய்க்க தலைப்புக்கா பஞ்சமாக இருக்கக் கூடும். அதில்வேறு அவள் மாப்பிள்ளையை போட்டோவில் பார்த்ததோடு சரி. தோழிகள் கலாய்க்க இவளும் அவ்வப்போது புன்னகையை பரிசாக அளித்த படி இருந்தாள். அவளுடைய அழகு முழுவதும் சிரிக்கும் போது கன்னத்தில் விழும் கன்னக்குழியில் தான் அடங்கி இருந்தது போலும்.
“தேவி! மாப்பிள்ளையை நேரில் பார்க்காம எப்படி டி சம்மதிச்சே? போட்டோல கலர கூட்டியும், முடியில்லாதவனுக்கு முடி வைத்து இப்போது பல விதமான எடுக்கலாம் தெரியும் தானே,” என்றாள் கண்மணி. அவளுக்கு பள்ளி படிக்கும்போதிலிருந்தே தேவிகானா கொஞ்சம் பொறாமை தான். தேவிகா அவளை விட படிப்பிலும், அழகிலும் கொஞ்சம் அதிகம் அதனால இருக்கலாம்.
“எல்லாம் தெரிந்தது தானே! நம்ம தேவி அவளுடைய அண்ணன் பேச்சை எப்போது மீறினாள்,” என்றாள் இன்னொருத்தி. ஆமா! உண்மை தான், தேவிகாவிற்கு அவள் அண்ணன் என்றால் கொள்ளை பிரியம்.
தேவிகா பெருமூச்சு விட, மாப்பிள்ளை வீட்டார் மண்டபத்தை எட்டவும் சரியாக இருந்தது. மேளம், நாதஸ்வரத்தின் ஒலி ஒருபுறம் களைகட்ட மறுபுறம் பட்டாசும், வெடியும் வெடித்து இளசுகள் ஆர்ப்பரித்து கொண்டிருந்தனர்.
அப்போது மணப்பெண் அறையிலிருந்த உறவினர்கள், மணபெண்ணின் அறையிலிருந்த ஜன்னல் கண்ணாடி வழியே மாப்பிள்ளையை பார்க்க முயற்சித்தனர். பெண் வீட்டார் ஆரத்தி முதலிய சடங்கு சம்பரதாயங்களை முழுவீச்சில் செய்ய மாப்பிள்ளையின் முகம் பாதி பாதியாகவே தெரிந்தது. ஒருவழியாக தேவிகாவின் சித்தி மகள் திவ்யா பார்த்துவிட அவள் பேச்சாலே அந்த அறையிலிருந்த அனைவரையும் திரும்பி பார்க்க செய்தாள்.
“தேவி அக்கா, நான் மாப்பிள்ளை…….!!! இல்லை இல்லை! அத்தானை பார்த்துவிட்டேன். போட்டோவை விட நேரில் சூப்பராக இருக்கிறார், அக்கா. ஓகே கண்மணி படத்தில வர கூடிய துல்கர் சல்மான் போல தான் இருக்கிறார்,” அதை கேட்டதுமே கண்மணி வாயை பிளந்தாள். தேவிகா எந்த ஒரு ஆர்பரிப்பும் இல்லாமல் காணப்பட்டாள். அவளுக்கு பதற்றமும் படப்படப்பும் தான் அதிகமாக இருந்தது.
சற்று நேரத்தில் மணப்பெண்ணை மேடைக்கு அழைத்தனர். மாப்பிள்ளையும் பொண்ணும் சந்தர்ப்பம் கிடைத்தும் ஒருவருக்கொருவர் பார்க்கவில்லை. தேவிகாவின் தாய்மாமன் அவளுக்கு செய்யவேண்டிய கடமைகளை ஆற்றிய பின், மறுபடியும் பெண்ணை அழைத்துக்கொண்டு மணப்பெண் அறைக்கே சென்றனர். பின் மாப்பிள்ளை வீட்டார் முகூர்த்த பட்டு கொடுக்கவே அதை உடுத்திக்கொண்டு மணவறைக்கு செல்லும் முன் தன் அப்பாவியான முகத்தை ஒருமுறை கண்ணாடியில் பார்த்துக்கொண்டாள்.
மணவறையில் சூரியாவின் பக்கத்தில் தேவிகா அமர ஒருவருக்கொருவர் முகத்தை பார்க்காது ஐயர் சொல்லும் மந்திரங்களை இவர்களும் உளரிகொட்டினர். இருமனமும் ஒருசேர அந்த நொடியும் நெருங்க, காதை கிழிக்கும் வெடி சத்தம் ஒருபுறமும், மேளம் இன்னொரு புறமுமாக, ஐயர் மந்திரங்களை சொல்ல, பெரியோர்களின் ஆசியோடு மூன்று முடிச்சு தேவிகாவின் கழுத்தில் வெறுப்போடே போட்டான், சூரியா. சுற்றி நின்றவர்கள் மலர்களாலும், ஆனந்த கண்ணீர் துளிகளாலும், சிரிப்பினாலும் மணமக்களை ஆசிர்வதித்தனர்.
திருமணம் முடிந்தவுடன் மணக்க மணக்க ருசிக்க ருசிக்க மதிய உணவை வயிறார உண்டபின் உற்றார் உறவினர்கள் கலைந்தனர். திருமணச் சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்தும் ஒன்று ஒன்றாக நடந்தது. சூர்யாவும் தேவியும் திருமணம் முடிந்தபின்பும் ஒருத்தரை ஒருத்தர் பார்க்கவும் இல்லை, பேசவும் இல்லை ஏதோ கடமைக்காக பெரியவர்கள் சொல்வதைக் கேட்டு இருவருமே நடந்தனர். அப்படி இவர்கள் மனதில் என்னதான் இருக்கிறது? திருமணத்திற்கு முன் ஒரு முறை கூட பார்க்காதது தான் பிரச்சனையா? அல்லது இருவர் வீட்டின் கட்டாயத்தின் பெயரில் நடந்த திருமணமா? அல்லது இருவர் மனதிலும் வேறு யாராவது இருக்கிறாரா? திருமண சடங்குகள் முடிந்த கையோடு மாப்பிள்ளை வீட்டார் மணப்பெண்ணை அவர்களுடன் வீட்டுக்கு அன்போடு அழைக்க, அவளும் தன் பெற்றோர் மற்றும் அண்ணணிடம் கண்ணீர் சிந்தி பிரியாவிடை பெற்று மாப்பிள்ளையுடன் கிளம்பினாள்.
சூர்யாவின் வீட்டில் மணமக்களை ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அங்கேயும் ஒரு சில சடங்கு சம்பிரதாயங்கள் நடத்தப்பட்டது. பின்னர் மணமக்கள் மாலை வரவேற்பு நிகழ்ச்சிக்காக தயாராக, சூர்யாவிற்கு அவனது அண்ணன் உதவிட தேவிகாவிற்கு சௌந்தர்யா (கௌதமின் மனைவி) உதவினாள். சூர்யாவின் மனதில் ஏகப்பட்ட குழப்பம், ஒரு பெண்ணின் வாழ்க்கையை அழித்து விட்டதாக தோன்றியது. அவனுடன் தேவிகா இவ்வளவு நேரம் இருந்ததை வைத்து அவள் இந்தக் காலத்துப் பெண்கள் போல இல்லாமல் அடக்கமும் அமைதியும் உடையவளாக இருப்பாள் என்று யூகித்தான். அவனுக்கு அவளை ஏமாற்ற ஏனோ மனம் வரவில்லை. எப்படியாவது உண்மையை சொல்லிவிட வேண்டும் அப்புறம் அவளுடைய முடிவு என்று எண்ணிக்கொண்டான்.
நிகழ்ச்சிகள் அனைத்தும் இனிதே நிறைவு பெற, அன்று இரவு அவனது அறையை அவனுடைய அண்ணன் கௌதம் மற்றும் அவனுடைய நண்பர்கள் மலர்களால் அலங்கரித்த வண்ணம் இருந்தனர். அப்போது சூர்யாவும் அதே அறையில் ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்திருந்தான். அவனுடைய உள்மனம் மறுபடியும் குற்ற உணர்ச்சியால் வாட்ட, ‘எப்படியாவது அவளிடம் சொல்லிவிட வேண்டும். இந்த விஷயத்தை அண்ணனிடம் கேட்டு தெளிவு பெறலாமா?’ என்று நினைத்தான். இல்லை! வேண்டாம்! அண்ணனுக்கு தெரிந்தால், ‘எல்லாம் சரியாகும். நீ ஒன்றும் உளறிக் கொட்டி விடாதே,’ என்று வாயை அடைத்து விடுவான்,’
அவள் எவ்வளவு திருமண கனவோடு வருவாளோ? அவளுக்கு இந்த திருமணம் ஏமாற்றத்தை அளிக்கப் போகிறது. நான் என்ன பண்ண முடியும்? என்னால் யாரையும் போலியாக நேசிக்க முடியாது,’ என்றும் நினைத்துக்கொண்டான்.
சற்று நேரத்திலேயே, அவனது அண்ணனும் நண்பர்களும் கிளம்பினார்கள். நல்ல நேரம் பார்த்து தேவிகாவை அவனது அறைக்கு அனுப்பி வைத்தனர். தேவிகா பதற்றமும் பயமும் நிறைந்தே உள்ளே வந்தாள். அவள் குனிந்த தலை நிமிராது கையில் பாலுடன் அறையினுள் நுழைந்தாள். அவளைப் பார்த்த சூர்யா, “நீ கேஷுவலாவே இரு,” என்று கூறி அவளை இருக்கையில் இருக்க வைத்தான்.
அவளும் குனிந்த தலை நிமிராது ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தாள். அவளின் மனதிலும் சஞ்சலம் இருப்பதாகவே தோன்றியது. அது என்னவாக இருக்கும்? அவனுக்கு எப்படியாவது அவளிடம் சொல்லிவிட வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது. வாய் குளற அவன் தன் தொண்டையை சரி செய்தபின், “எனக்கு உன்கிட்ட ஒன்னு சொல்லணும்,”என்று தொடங்கினான். அவள் ஒருவேளை பிரச்சினை செய்ய கூடும் என்றும் அவனுக்கு தோன்றியது. என்ன நடந்தாலும் பரவாயில்லை பார்த்துக்கலாம் என்று துணிச்சலை வரவழைத்துக் கொண்டான்.
அவளுக்கு அவன் ஏதோ சொல்லபோகிறான் என்று முதலிலேயே அவனுடைய தவிப்பை பார்த்ததும் தோன்றியது. தலையை கீழே குனிந்தவாறு, “என்ன சொல்லுங்கள்?” என்று கேட்டாள்.
“உனக்கு இந்த திருமணம் ஏமாற்றத்தை அளிக்கலாம். எனக்கு இந்த திருமணத்தில் துளிகூட விருப்பம் இல்லை,” என்று பட்டென்று கூறியவன் பாதியில் நிறுத்திக்கொண்டான். அவள், அவனை ஏறெடுத்து பார்க்கையில்.
அவள் ஏன் என்று கேள்வி கேட்க, “எனக்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் காதல் இருந்தது. அது கல்யாணம் வரை கைக்கூடியும் நடக்கவில்லை,” என்றான் மனதில் காயங்களோடு. இப்படி முதல் நாள் இரவு அன்று கணவன் சொன்னால் எந்த பெண்ணால் தாங்கி கொள்ள முடியும்?
“அப்படியா! என்னவாயிற்று? கொஞ்சம் விவரமாக கூறுங்கள்,” என்று அவன் முகம் பார்த்து அவள் கேட்க, அவளிடம் கோபத்தையும், ஆத்திரம் மற்றும் மனகவலையும் எதிர்ப்பார்த்தவனுக்கு அவளின் திடீர் மலர்ச்சி அவனுக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் உண்டாக்கியது. ‘என்னடா! இவ்வளவு நேரம் குனிந்த தலை நிமிராது இருந்தவள் இப்போது ஏதோ முகத்தில் தெளிவு ஏற்பட்டது போல் உற்சாகமாக கேட்கிறாளே. அவளுக்கும் இந்த திருமணத்தில் விருப்பமில்லையா? தப்பித்தோம்! பிழைத்தோம் என்று எண்ணுகிறாளா?’ என்று எண்ணங்கள் அவன் மனகதவை தட்ட இருப்பினும் பராவாயில்லை அவளுக்கும் இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்றால் அவளுக்கு கட்டாயம் உதவி செய்ய வேண்டும் என்று எண்ணிக்கொண்டு, “விவரமாக கூறும் அளவுக்கு என் மனம் இன்னும் பக்குவபடவில்லை. அவள் என் கல்லூரி தோழி, கல்லூரி வழியாவே கேம்பஸ் இன்டர்வியூல வேலை கிடைத்தது இருவருக்கும். ஒரு கட்டத்தில் நட்பு காதலாக மலர, இருவரும் உயிருக்கு உயிராக காதலித்தோம். இருவீட்டிலேயும் சம்மதமும் பெற்றுக்கொண்டோம். கல்யாணமும் முடிவாயிற்று. மகிழ்ச்சி என்னுள் ஆர்பறிக்க அவளுக்கோ வேறு ஒருவனோடு காதல் மலர்ந்திருக்கிறது. என்னுடன் பேசுவதை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தியவள் இறுதியில் திருமணத்தேயே நிறுத்திவிட்டு அவனுடன் சென்றுவிட்டாள்,” என்று அவன் கூறி முடிப்பதற்குள் ஒரு சொட்டு கண்ணீர் துளி அவன் சட்டையில் விழுந்தது.
தேவிகாவிற்கோ மனதில் மகிழ்ச்சி குத்தாட்டம் போட்டது. அவளுக்கு கல்லூரி படிக்கும் காலத்திலிருந்தே காதல் தோல்வியுற்றவனேயே காதலித்து திருமணம் செய்து கொள்ள ஆசை. அது நிறைவேறாத ஆசையாக போயிவிடுமோ என்று எண்ணியவளுக்கு சூரியா இன்ப அதிர்ச்சி கொடுத்தான். அவளை பொருத்தவரை, ‘காதல் தோல்வியுற்ற ஒருவரை திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை இனிதே இருக்கும் என்று எண்ணினாள் ஏன்னென்றால் அவனுக்கு தான் அந்த வலியும் வேதனையும் தெரியும் அதனால் அவன் இன்னொரு பெண்ணை தேவையில்லாமல் வேதனைப்படுத்த எண்ணமாட்டான். வாழ்க்கையும் நல்லா இருக்கும் என்று அவள் எண்ணம் போலவே அவளுக்கு அவ்வாறே ஒருத்தன் அமைந்தான்,’
ஆனால், அவள் அதை வெளிக்காட்டாது அவன் கூறியதை உற்று கவனித்துக் கொண்டே இருந்தாள். அவனது கண்ணீர் துளிகள் அவனது காதலின் ஆழத்தை உணர்த்தியது. அவள் பிரிந்து சென்ற போதிலும் இவனால் அவளை மறக்கமுடியவில்லை அப்போது ஒருவேளை தேவிகாவின் மேல் அன்பு வைத்தால் அவளை எப்படியெல்லாம் பார்த்துகொள்வான்.
சூர்யா மீண்டும் தொடர, “என்னை நீ மன்னித்து விடவேண்டும். என்னால் உன்னை நேசிக்க முடியாது ஒருநாளும் அதனால் நான் உண்மையை கூறி விட்டேன். இனி உன்னுடைய முடிவு. என்னோடு வாழ விருப்பம் இல்லையென்றாலும் இந்த பந்தத்தில் இருந்து செல்ல நான் நிச்சயமாக உதவுவேன்,” என்று கூறினான்.
இந்த காலத்தில் கட்டின மனைவிக்கு துரோகம் பண்ணினாலும் கொஞ்சம் கூட அசராத ஆண்களுக்கு மத்தியில் சூரியா எவ்வளவு நல்லவனாக இருக்கிறான். முதல் நாளே மனைவிடம் கூறவேண்டும் என்ற நல்லெண்ணம் இவையெல்லாம் தேவிகா மனதிலும் தோன்றவே அவளும், “சரி பரவாயில்லை,” என்று ஒருவார்த்தையை அவனுக்கு ஆறுதலாக கூறிக்கொண்டு.
மேலும் தொடர்ந்தாள், “நான் கீழே படுத்துக்கிறேன் எனக்கு ஒன்னும் பிரச்சனையில்லை. உங்கள் மனது மாறும் வரையில் நான் பொறுமையோடே காத்துக் கொண்டிருப்பேன்,” என்று அவள் கூறிய வார்த்தை மேலும் அவனுக்கு ஆச்சரியத்தை உண்டாக்கியது.
அவனோ அவள் இந்த திருமண பந்தத்தையே அறுத்துவிடுவாள் என்று நினைத்தவனுக்கு மறுபடியும் குழப்பம் உதிக்க, ‘ஒருவேளை அவள் மனதில் காதல் கீதல் ஏதாவது இருக்குமோ? அவளிடம் கேட்டுவிடலாமா? சீ சீ வேண்டாம், அவளுக்கு இருந்திருந்தால் என்னை காரணம் காட்டி அவளுக்கு செல்ல எவ்வளவு நேரம் தான் ஆகும்?” என்று உணர்ந்துக்கொண்டான்.
அதோடு விட்டுவிடாமல் இன்னொரு உண்மையையும் போட்டு உடைத்தான் அதாவது “என்னால் அவளை மறக்க முடியாத நேரத்தில், எனக்கு என்ன செய்வதென்று தெரியாமல் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி விட்டேன். அதற்காக என்னை பெரும் குடிகாரன் என்று எண்ணிவிடாதே! அவளது நினைவு வரும் போது அப்பப்ப குடிப்பேன்” என்றான் சூரியா. ‘குடிபழக்கம் வேறையா? சரி நாமதானே ஆசைப்பட்டோம் காதல் தோல்வியடைந்தவனை திருமணம் செய்ய வேண்டும் என்று இவ்வாறான கெட்ட பழக்கங்கள் இருப்பது சாத்தியமே. சரி சூரியாவை எப்படியாவது மூன்று அல்லது நான்கு மாதத்திற்குள் திருத்திவிட வேண்டும்,’ என்று மனதுக்குள் சபதம் எடுத்துக் கொண்டாள். அந்த மூன்று மாதங்களுக்குள் அவளுக்கு அவனைபற்றின புரிதல் நன்கு அமையும் அதன் பின் வாழ்க்கையை தொடங்கலாம் என்ற உறுதிமேற்கொண்டாள்.
“இப்படி ஒரு பெண்ணா? காதல் தோல்வி மற்றும் குடிபழக்கத்தையும் சொல்லியும் சற்றும் மனம் நோகாமல் எப்படி இவளால் இருக்கமுடிகிறது?” என்ற சிந்தனை எழுந்தது. அவன் மெத்தையிலும் அவள் கீழேயும் படுத்தனர். இருவருக்கும் ஆச்சரியத்தால் வெகு நேரம் தூக்கம் வராமல் பின் ஒருவழியாக கண் அசந்தனர்.