மறுநாள் காலை நான்கு மணியளவில் அவன் நித்திரை கலைய, அவனுக்கு நேற்றைய தினம் திருமணம் முடிந்தது நினைவுக்கு வர, அந்த பெண்ணிடன் நேற்றிரவு அவன் கூறியதும் அதற்கு அவள் எதையுமே வெளிக்காட்டாது இருந்தது அவனுக்கு குழப்பத்தை சற்று அதிகரித்தது. எப்படியும் அவள் இன்று இந்த விஷயமாக பெரியவர்களிடம் சொல்லி பிரச்சினை பண்ணக்கூடும் என்று சிந்தித்தவன் கண்களை பட்டென்று திறந்து பார்த்தான். அவ்வளவு வெளிச்சம் இல்லாவிட்டாலும் ஜன்னல் கண்ணாடியின் வழியே நிலா வெளிச்சம் தன்னால் முடிந்தவரை ஓளியை ஊடுருவ செய்தது.
அவன் திரும்பியபோது அவள் கீழே படுத்திருப்பதை பார்த்தவன், ‘ஐயோ! இவள் நேற்றிரவு கீழே படுக்கையில் நான் போர்த்த போர்வை வேண்டுமானு கூட கேட்கவில்லையே குளிரில் இப்படி ஒடுங்கி போயி படுத்திருக்காளே. அவள் வீட்டில் மெத்தையில் ராஜகுமாரியாட்டும் படுத்திருப்பாள். சரி, இனி இவ்வாறு நடக்கவேண்டாம். இனி அவள் இங்கிருந்து செல்லும் வரையில் அவளே மெத்தையில் படுக்கட்டும். நான் செய்த தவறுக்கு இந்த பேதை என்ன செய்வாள்,” என்று நினைத்தவன் ஒரு போர்வையை எடுத்து அவளை போர்த்தினான். கூந்தல் அவள் கன்னத்தை மறைக்க காற்று பட்டு அவ்வப்போது அசைந்தது. அவள் முகத்தை பார்த்தவன், “இவளை எப்படியாவது என் வாழ்விலிருந்து விடுதலை செய்து விடவேண்டும் என்னை கட்டிக் கொண்டு எந்த சுகத்தையும் இவள் அடையபோவதில்லை. இவள் பார்ப்பதற்கு நல்ல பெண் போல் தெரிகிறாள்,” என்று நினைத்துக்கொண்டு மீண்டும் மெத்தையில் வந்து படுத்தவன் ஐந்து மணியளவில் அவனுக்கு உறக்கம் எட்டிப்பார்த்திருக்க கூடும்.
சூரியன் தன் கதிர்களை எத்திசையிலும் வீச, தேவிகா மெல்ல கண்விழிக்க, தன் மீது போர்த்தப்பட்டிருக்கும் போர்வையை பார்க்க, சற்றே யோசித்தவளை வெட்கப் புன்னகை ஆட்கொண்டது. “ஐயோ! சூர்யா எழும்பி விட்டாரா? வெளியே போயிவிட்டாரா?” என்று சட்டென்று எழுந்து மெத்தையில் பார்த்தாள்.
அவன் நன்கு அசந்து தூங்கிக்கொண்டு இருந்தான். இவள் எழுந்து, அவன் பக்கத்தில் மெத்தையின் ஓரமாக இருந்து அவனை ரசிக்கலானாள். ‘கள்ளம் கபடமற்ற ஆணவன்! என் அன்பு கணவன், சூரிய ஆனந்தன்,’ என்று உள்ளுற சொல்லிக் கொண்டாள். காதல் பார்த்த முதல் நாளே சாத்தியமா என்றால் அது இவள் வாழ்வில் சாத்தியமே. நேற்றிரவு அவளது மனதை அவனிடம் பறிக்கொடுத்து விட்டாள். அவள் கண்ட கனவிலும் மேலான கணவனை தன் தந்தையும், அண்ணனும் அவளுக்கு மணமுடித்து வைத்ததை எண்ணிப் பெருமிதம் கொண்டாள்.
சூரியன் தன் கதிர்களை இன்னும் பலமாக வீச சுவற்றில் மாட்டப்பட்ட கடிகாரம் அவள் கண்ணுக்குள் விழ, “ஐயோ ரொம்ப நேரமாகி விட்டதே,” என்று பட படவென போர்வையை எடுத்து மடித்து ஒரு கரையாக வைத்தாள். சற்று நேரத்தில், குளித்து முடித்து வெளியே வந்தவள் மனதில் தன் குலதெய்வத்தை நினைத்து கொண்டு வேண்டியபடியே குங்குமத்தை எடுத்து தன் நெற்றியின் வகிடில் இட்டுக்கொண்டாள், ‘திருமதி தேவிகா சூரிய ஆனந்தன்,’ என்று புன்சிரித்தப்படியே, சோர்வுற்று தூங்கிக் கொண்டிருக்கும் தன் கணவன் மீது அந்த அறையிலிருந்து கிளம்புவதற்கு முன் தன் பார்வையை வீசி சென்றாள்.
சூர்யாவின் அறையை ஒட்டி அடுத்து ஒரு பெரிய ரூம் இருந்தது அதில் தான் டிவியும், சற்றே தள்ளி இருக்கைகளும் இருந்தன. அவள் பார்வை மாமா சிதம்பரத்தின் மேல் விழ அவர் எட்டு மணி செய்தியை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். வெளியில் அத்தான் கௌதமும் யாரிடமோ போனில் பேசிக் கொண்டிருந்தார். சமையலறையிலிருந்து மாமி கௌரி மற்றும் அக்கா சௌந்தர்யாவின் குரல் கேட்க, ‘எட்டு மணி ஆகுது! என்னை என்ன நினைப்பார்களோ? மாமாவிடம் பேசி விட்டு செல்வோம்,’ என்று முடிவு பண்ணி அவர் அருகாமையில் வந்தாள்.
சிதம்பரம் அவளை பார்த்த உடனே, “தேவிகா வா மா. உனக்கு இங்கே சீக்கிரமா பழகிவிடும். பதட்டம் தேவை இல்லை,” என்று பேசிய முதல் வார்த்தையிலேயே அவளது பதட்டத்தை கண்டறிந்து பேசிவிட்டார்.
“சரி, மாமா” என்று புன்னகைத்தாள். கவுதம் உள்ளே வருவதைப் பார்த்த அவள் தன் புன்னகையை நிறுத்தாது அவனை பார்த்து சின்னதாக சிரித்தாள். அவனும் சிறுபுன்னகையுடன் தலையசைக்க, முக்கியமான கால் என்பதுபோல் கையசைத்து சென்றான்.
சமையல் அறையை எட்டியவள் தன் மாமியார் கௌரி நாற்காலியிலிருந்து வெங்காயம் உரித்தவாரு மூத்த மருமகள் சௌந்தரியாவுடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தாள். சௌந்தர்யா, கீரையை ஓரளவு நறுக்கி முடித்துவிட்டாள்.
வாசலில் தேவிகாவை பார்த்த இருவருமே, “வா மா, தேவி,” என்று அன்போடு சேர்த்துக்கொண்டனர். தேவிகா சிரித்தப்படியே, “தாங்க மாமி, நான் வெங்காயத்தை தோல் எடுக்கிறேன்,” என்றாள்.
“இன்னும் ஒன்று தான் இருக்கு இப்போது முடிஞ்சிரும், தேவி” என்றாள் கௌரி.
சௌந்தர்யாவோ அவளை கண்டதுமே போட்டு வைத்திருந்த டீயை சூடு செய்ய ஆரம்பித்தாள்.
“தேவி, இந்தா டீ,” என்றாவாறு நீட்டினாள் சௌந்தர்யா. பின் கௌரி நறுக்கி வைத்திருந்த வெங்காயத்தை எடுத்துக்கொண்டு அவசர அவசரமாக கீரை தொக்கு செய்ய ஆரம்பித்தாள்.
தேவிகாவிற்கு, தான் வேலையே செய்யாமல் இப்படி இருக்க கொஞ்சம் வருத்தமளிக்க, “அக்கா, நான் நாளைக்கு சீக்கிரமே எழும்பி உங்களுக்கு உதவி செய்கிறேன்,” என்றாள்.
“அது எல்லாம் நாங்க பாத்துக்கிறாம். முதல்ல நீ டீயை குடி தேவி ஆறிர போகுது,” என்றாள் சௌந்தர்யா.
“ஆமா தேவி. நீயே இன்னும் பதினைந்து நாளுல சூரியா கூட பட்டணத்திற்கு கிளம்பிருவ, இங்கே இருக்கும் போதாவது நீ சும்மா இரு. நாங்க எதுவுமே நினைக்கமாட்டோம்,” என்றாள் கௌரி. இந்த வார்த்தைகளை கேட்டதுமே தேவிகாவிற்கு புல்லரித்தது. எத்தனையோ மாமியார்கள் மருமகள்கள் என்று கூட பார்க்காமல் வேலைகாரிக்கு சமமாக வேலை வாங்குவதை கேள்வி பட்டிருக்கிறாள் ஆனால் அவளுக்கு கிடைத்திருக்கும் மாமியார் நிஜமாகவே பொக்கிஷமாக தான் இருக்கக்கூடும் ஏனென்றால் அவள் மூத்த மருமகளிடமும் இத்தனை வருடமாகியும் இன்னும் அன்பாக தான் இருக்கிறாள்.
“நீங்கள் எல்லோரும் குடிச்சிட்டிங்களா?” என்று வினவினாள். “ஆமா நாங்கள் எல்லோரும் குடிச்சாச்சு. நீயும், சூரியாவும் தான் பாக்கி,” என்றாள் சௌந்தர்யா.
அவர்கள் இருவரையும் பார்த்து அன்பு புன்னகை வீசியபின் கைலிருந்த டீயை மெல்ல குடிக்க ஆரம்பித்தாள். கௌரியை சிதம்பரம் அழைக்க, கௌரி அங்கிருந்து சென்றாள்.
சௌந்தர்யா, இரு பாத்திரங்களில் மதிய உணவு எடுத்து வைத்தாள். ஒன்று கௌதமிற்கும் மற்றொன்று ஆதிராவுக்கு.
“தேவி, ஆதிரா பள்ளி செல்ல அவளை இனிதான் எழுப்பி புறப்பட வைக்கனும். பால் அடுப்பில இருக்கு. நான் இஞ்சி தல்லி இந்த டப்பாவுல வைத்திருக்கேன். நீ அதை சேர்த்து சூரியாவிற்கு டீ போட்டு கொடு அவனுக்கு இஞ்சி டீனா தான் விரும்பி குடிப்பான்,” என்று கூறியவள் மின்னல் வேகத்தில் சென்றாள்.
*****
தேவிகா, இஞ்சி டீ எடுத்துக்கொண்டு அவன் அறைக்குள் நுழைந்தாள். அப்போது, குளித்து முடித்து விட்டு சூரியா கண்ணாடி முன் நின்றுக்கொண்டிருந்தான். ‘அதற்குள்ள எழும்பி குளிக்கவும் செஞ்சாச்சு,’ என்று நினைத்தவாறே நின்றுக்கொண்டிருந்தாள். அவன் அவளை பார்த்தபாடில்லை. அவள் தொண்டையை சரிசெய்தது போல் கறகறக்க, சூரியா திரும்பி பார்த்தான்.
“இந்தாங்க டீ,” என்று நீட்டினாள்.
“நான் வெறும் டீ குடிக்கமாட்டேன்,” என்றான்.
“இது இஞ்சி டீ தான். உங்களுக்கு இதுதான் பிடிக்கும்னு அக்கா சொன்னாங்க,” என்று மீண்டும் நீட்டினாள். அவனும் அலட்டாமல் வாங்கி கொண்டான்.
“ம்ம்ம். நீ குடிச்சியா?” என்று ஒரு வாய் குடித்ததும் கேட்டான். அவளும் சிரித்தவாறே ஆமாம் என்றவாறு தலையசைத்தாள். ஒரே நாளுக்குள் இருவருமே ஏதோ ரொம்ப நாள் பழகியவர்வள் போல முகபாவனைகளும், பேச்சுக்களும் இருந்தது.
தீடிரென, ஆதிரா உள்ளே ஒடிவந்து சூரியாவின் காலை பிடித்துக்கொண்டாள். கண்ணில் ஒரு துளி கண்ணீரும் காணப்பட்டது. உடனே சூரியா அவளை தூக்கினான், “சித்தப்பா……நான்……இன்னைக்கு ஸுகூலுக்கு போகமாட்டேன்… ” என்று செல்லக் கட்டளையிட்டாள்.
“ஏன் குட்டிமா,” என்று கொஞ்சினான். தேவிகா இருவரையும் கண் இமைக்காமல் பார்த்தவாறு நின்றாள். வெளியே சௌந்தர்யா நின்றுக்கொண்டிருந்தாள்.
“எனக்கு உங்ககிட்ட பேச நிறைய இருக்கு சித்தப்பா. நீங்க ரொம்ப பிஸினு அம்மா சொன்னாங்க. எனக்கு பேசனும்,” என்று சிணுங்கினாள். அவள் கன்னத்தில் அன்பு முத்தம் பதித்தவன் சௌந்தர்யா நின்றுக்கொண்டிருப்பதை பார்த்தான்.
“அண்ணி, ஏன் வெளியே நிக்குறீங்க? உள்ள வாங்க எப்போதும் போல,” என்று கட்டாயப்படுத்தி கூப்பிட்டான். அவளும் தயக்கத்தோடே உள்ளே வந்தாள்.
“இன்று ஒரு நாள் பாப்பா லீவு போடட்டும் அண்ணி. நானே சொல்லனும்னு தான் நினைத்தேன், பாப்பாட்ட நான் சரியாகவே பேசல மனவுளச்சல் காரணமாக,” என்றதும் சௌந்தர்யா தேவிகாவின் மீது பார்வையை பதித்தாள். தேவிகாவோ சூரியாவை பற்றி எல்லாம் தெரிந்தது போல முகத்தில் பாவனைகாட்டியது, சௌந்தர்யாவுக்கு ஏனோ நிம்மதி ஆயிற்று. பின், சௌந்தர்யாவின் கண்கள் மடித்து வைத்திருந்த போர்வை மற்றும் பாயின் மேலே விழ, இருவரும் சேர்ந்து படுக்கவில்லை என்பதை உறுதி படுத்திக்கொண்டாள். சூரியா கண்டிப்பாக தேவியிடம் அவன் காதல் பற்றி கூறியிருப்பான் என்று யூகித்துக்கொண்டாள்.
“அம்மா ப்ளீஸ்,” என்று ஆதிரா கெஞ்சினாள். தன் நினைவுகளை ஒதிக்கி வைத்துக்கொண்டு, “சரி, இன்று ஒருநாள் மட்டும் தான்,” என்று சொல்லிக்கொண்டு வெளியே திரும்பினாள். அவளை தொடர்ந்து சூரியா ஆதிராவுடன் சென்றான். அக்காளின் பார்வையை புரிந்து கொண்ட தேவிகா பாயையும், போர்வையும் எடுத்துக்கொண்டு யாருக்கும் கண்ணில்படாதவாறு ஒதிக்கி வைத்துவிட்டு வெளியே சென்றாள்.
“சூரியாவும் வந்துட்டானா? சரி எல்லாரும் ஒன்னா உட்கார்ந்து சாப்பிடுவோம்,” என்று சகஜமாக பேசியது போல் சூரியாவையும், சிதம்பரத்தையும் தன் மூக்கு கண்ணாடியின் வழியே நோட்டமிட்டாள், கௌரி. தந்தையும் மகனும் இன்னும் சகஜ நிலைக்கு திரும்பியபாடில்லை.
“எனக்கு சாப்பாடு வேணாம். சித்தப்பா நீங்க சாக்லேட் வாங்கிட்டு வரலியா?” என்று அடம்பிடித்தாள்.
“இந்தவாட்டி சித்தப்பா வாங்கிட்டு வரல. அடுத்த தடவை கண்டிப்பாக வாங்கிட்டு வருவேன். என் செல்ல குட்டி!” என்று கொஞ்சினான்.
“சூரியா, நீ தான் அவளுக்கு செல்லம் கொடுத்து இப்படி ஆக்கிட்ட. நீ இங்கு இல்லாத நேரம் அவ உண்டு அவ வேலை உண்டுனு இருப்பா,” என்றாள் கௌரி.
“போ பாட்டி..உங்க கூட நான் டூ டூ….சித்தப்பாவ ஒன்னும் சொல்லாதீங்க,” என்று மழலை குரலில் பேசியதும் அனைவரும் ஒன்றாக புன்னகைத்தனர்.
“சரி மா. உன் சித்தப்பாவ ஒன்னும் சொல்லல,” என்று சிரித்துக்கொண்டே கௌதம் அவன் அறையிலிருந்து வெளியே வந்தான்.
“சரி, சரி.. எனக்கு சாக்லேட் தாங்க,” என்றாள் மறுபடியும்.
“ஆதிரா, அடி வாங்குவ. வந்து ஒழுங்கா சாப்பிடு,” என்று சௌந்தர்யா சாப்பாட்டு மேஜையில் சாப்பாடு எடுத்து வைத்துக்கொண்டே சின்னதாக அதட்டினாள். அவளுக்கு உதவியாக தேவியும் இருந்தாள்.
“ம்ம்ம்ம்ம்…….” என்று சிணுங்கினாள்.
“அவ இருக்கட்டும், சூரியா நீ வா..வந்து சாப்பிடு,” என்றான் கௌதம். ஆதிராவால் தான் சூரியா ஏதோ கேஸுவலாக இருக்கிறான் போலும். அவளுக்காக அவன் சாப்பாட்டு மேஜையில் அனைவரோடும் அமர்ந்தான். ‘அம்மாடி! எப்படியோ சூரியா எல்லார்கூடயும் சேர்ந்து சாப்பிட வந்துட்டான். அவன் என்னென்ன பண்ணப்போறானோனு பயந்துட்டேயிருந்தேன்,’ என்று தன்னுள்ளே கூறிக்கொண்டு நிம்மதி பெருமூச்சு விட்டாள், கௌரி. பெரியவர்களின் வற்புறுத்தலால் தேவி, சூரியா அருகில் அமர, சௌந்தர்யா நிறைந்த மனதோடு பறிமாறினாள்.
“அண்ணி, நீங்களும் இருந்து சாப்பிடுங்க,” எனறான். சூரியா ஒருபோதும் தன் அண்ணி தனியாக சாப்பிடுவதை அனுமதிக்கமாட்டான் எனவே சௌந்தர்யா வீண் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் அவளும் ஒரு தட்டில் உணவு எடுத்து வைத்துக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள்.
இரண்டே வாய் மட்டும் சாப்பிட்டு விட்டு ஆதிரா எழும்பிவிட்டாள். அவளை தொடர்ந்து சூரியாவும், தேவியும் எழுந்தனர்.
“சித்தி, நீங்களாவது எனக்கு சாக்லேட் தாங்க,” என்று பாவமான முக பாவனையோடு கேட்டாள் ஆதிரா. சூரியா கையை சுத்தம் செய்து விட்டு மீண்டும் அவன் அறையினுள் நுழைந்தான்.
“சரி.. உனக்கு கேக் பிடிக்குமா பாப்பா?” என்று அவள் அளவுக்கு குனிந்து கேட்டாள், தேவிகா. அவளிடமும் சாக்லேட் இல்லை. முதல்முறையாக ஆதிரா கேட்பதற்கு இல்லை என்று சொல்ல மனம்வரவில்லை தேவிகாவிற்கு.
“ஆமா, ரொம்ப பிடிக்கும் சித்தி,” என்றாள் பெரிய புன்னகையோடு.
“சரி, கொஞ்சம் நேரத்தில் உனக்கு செய்து தருகிறேன்,” என்று தேவி கூறியவள். சாப்பாட்டு மேஜையை சுத்தம் செய்துக்கொண்டிருக்கும் சௌந்தர்யாவிடம் கேக் செய்வதற்கு தேவையான பொருட்கள் இருப்பதை உறுதி செய்து கொண்டாள்.
முக்கால் மணி நேரத்தில், சாக்லேட் கோதுமை கேக் செய்து அசத்தி அனைவருடைய பாராட்டையும் பெற்றாள். சூரியா வெளியே வந்தபாடில்லை.
சூரியாவிற்காக, ஒரு தட்டில் கொஞ்சமாக கேக் எடுத்துக்கொண்டு அவன் அறைக்கு சென்றாள். மெத்தையில் படுத்திருந்த சூரியா, தேவிகா வருவதை பார்த்ததும் தன் கண்களில் பெருகிய நீரை துடைத்தான்.
“கேக்,” என்றபடி பம்மி நின்றாள் தேவி.
படுத்தவன் எழும்பி இருந்தபடி, “நீ எனக்கு இது வேணுமா அது வேணுமானு கேட்க தேவையில்லை. தேவைபட்டால் நானே சாப்பிடுவேன். கேக் அது இதுனு என்ன இம்ப்ரஸ் பண்ண டிரை பண்ணுறியா?” என்று எரிச்சலோடு வினவினான்.
‘காலையில நல்ல தானே இருந்தாங்க இப்போது என்ன ஆச்சு ஒருவேளை அந்த பெண்ணின் நியாபகம் வந்திருக்குமோ’ என்று எண்ணிக்கொண்டு நின்றாள்.
“நான் சொல்றது உன் காதில விழவில்லையா?”
“விழுந்திருச்சு ஆனால் நான் உங்களை இம்ப்ரஸ் பண்ண கேக் பண்ணல, ஆதிரா குட்டிக்காக தான் பண்ணுனேன். சரி, நான் தான் கேக் பண்ணுனேன்னு எப்படி கண்டுபிடிச்சிங்க?” என்று வினவினாள்.
‘நேற்று எதுவுமே தெரியாத பாப்பா போல இருந்தா இன்னைக்கு நல்ல பேசுறாளே!’ என்று எண்ணியவன் “இங்கே அண்ணி கேக் செய்யமாட்டாங்க,” என்றான்.
“சரி,” என்றாள்.
“எனக்கு உன்கிட்ட ஒன்னு சொல்லனும்,” என்று மெல்லிய குரலில் கூறினான்.
“என்ன சொல்லுங்க,”
“என்னால அவள மறக்கமுடியவில்லை. அவள் கூட வாழவேண்டும் என்று பெரிய மன கோட்டையே கட்டி வைத்திருந்தேன். என்னால அதுலயிருந்து எளிதாக வெளிய வரமுடியவில்லை. என் மனதை என்னால கொஞ்சம் கூட மாத்திக்கமுடியல. அவள் இருக்க வேண்டிய இடத்தில் உன்னை வச்சி பார்க்க முடியல. என்னால உனக்கு அன்பு தரமுடியாது. இதுலவேற, உன்னை கஷ்டப்பட்டுத்துகிறேனு எனக்கு ரொம்ப கடினமாக இருக்கு. என்னை நம்பி உன் மனசையும் வாழ்க்கையும் தொலைக்காதே,” என்று தன் மனதை வெளிப்படுத்தினான்.
இந்த வார்த்தைகள் அவளை கண்டிப்பாக காயப்படுத்தும் என்று அறிந்தவன் அவள் முகத்தை ஒருமுறை அலசினான். அவன் நினைத்ததற்கு எதிர்மறையான பிம்பம் அவளது முகத்தில் பிரதிபலித்தது. அவனுக்கு, ‘என்னடா இவ! இவ மனசு என்ன பாராங்கல்லா? ஒரு ரியாக்ஷன் கூட காட்டாம நிக்கிறா. ஒருவேளை எல்லாம் சேர்த்து வைத்து வெடிப்பாளோ? இதே இது வேற பொண்ணுணா உண்டு இல்லனு பண்ணிட்டு போயிருவா நமக்கும் எந்த குற்றவுணர்ச்சியும் இருக்காது’ என்று குழம்பினான்.
அவளோ, ‘ஏமாற்றிய காதலி மீது என்னும் எவ்வளவு பாசம்..பாவம் சூரியா எவ்வளவு உண்மையா இருந்திருக்காங்க. நிஜமாகவே அந்த பொண்ணு அன்லக்கி. எனக்கு இவர் கிடைச்சதுனால நான் தான் ரொம்ப லக்கி. சூரியாவை போக போக கண்டிப்பாக மாத்திருவேன் ஏனென்றால் என் மனது வலிக்கும்னு அவருக்கு புரியுது. சூரியா சுயநலவாதி அல்ல இவர் எனக்கு கிடைச்சதுக்கு என் அப்பா, அண்ணணுக்கு தான் நன்றி சொல்லனும்,’ என்று நினைக்கவே அவளது அண்ணனிடமிருந்து அழைப்பு.
அவள் போனை எடுக்க, சூரியா கண் இமைக்காமல் தேவிகாவை பார்த்து குழப்பம் தெளியாதவனாய் காணப்பட்டான்.
அண்ணனின் குரல் கேட்டதுமே ஒரு துளி கண்ணீர் அவள் கண்களில் பெருகிட அது கீழே விழாதவாறு கண்களை இமைத்தாள். சூரியா அவனது செவிகளை கூர்மையாகி கொண்டான் கண்டிப்பாக அவளது அண்ணனிடம் கூறபோகிறாளென்று.
தேவிகாவும் அவளது அண்ணணும் மாறி மாறி நலம் விசாரித்த பின் இவள் கூறியதாவது, “அண்ணா! இங்கு எனக்கு எந்த குறையும் இல்லை அனைவரும் அன்போடு இருக்கிறாங்க அதுலேயும் குறிப்பாக என் கணவன் மிகவும் நல்லவர் ரொம்ப பாசமாக இருப்பாரு என்கிட்டே,” என்று கூறியபடியே சூரியாவை நோக்க, இதை சற்றும் எதிர்பார்க்காத சூரியா புருவங்களை சுருக்க, ‘இவள் வேணும்னே இப்படி என்ன வச்சு செய்றாளோ!’ என்று சிந்தித்தவன் வெளியே நகர்ந்தான். தேவிகாவும் இதே பதிலை தான் தன் பெற்றோரிடமும் கூறி மகிழ்ந்தாள்.
வெளியே வந்து சூரியாவை பார்த்த ஆதிரா அவனை மறுபடியும் ஒட்டிக்கொள்ள, போனில் பேசி முடித்துவிட்ட தேவிகா, கையில் சூரியாவிற்கு கொண்டுபோன கேக்குடனே வெளியே வர, அதை கவனித்த கௌரியும் சௌந்தர்யாவும் முணுமுணுக்க, “மாமி இந்த சூரியா ஏன் இப்படி இருக்கான்? அவ தான் போயி இரண்டு வருடம் ஆகபோகுது இவனுக்கு இன்னும் ஏன் அவ சிந்தனை? பாவம், தேவிகா மனசுல எவ்வளவு அசைகள், கனவோட வந்திருப்பா ஆனால் அவ கொஞ்சம் கூட வெளியே காட்டல மாமி,”
“ஆமா, சௌந்தர்யா நானும் கவனித்தேன். அவள் அன்புக்கு இவன் எப்படி மாறுகிறான்னு பாரு. சீக்கிரமே மாறிருவானு எனக்கு நம்பிக்கை இருக்கு,” என்றாள் கௌரி.
“அதை தான் நானும் எதிர்ப்பார்க்கிறேன், மாமி,” என்றாள் சௌந்தர்யா.
தேவி வெளியே வருவதை பார்த்த ஆதிரா,
“சித்தி, கேக் வேணும்,” என்றாள். அவளும் அருகில் சென்று கொடுக்க, “சித்தி நீங்க இதுல இருங்க,” என்றபடியே சூரியாவின் மடியிலிருந்தவள் தேவிகாவை பார்த்து திரும்பி உட்கார்ந்து கொண்டாள்.
தேவிகா சூரியாவை பார்க்க, அவன் டிவியை பார்த்தபடி இருக்க, எல்லாரும் அவர்களையே பார்க்க சுதாரித்து கொண்ட தேவியோ, ஆதிரா கூறியபடியே சூரியாவின் பக்கத்தில் அமர்ந்தாள்.
“சித்தப்பா, சித்தி ரொம்ப குட் உங்கள போல. எனக்கு கேக் செய்து கொடுத்தாங்க,” என்று சொல்லியபடியே சின்ன துண்டு கேக் எடுத்து சாப்பிட்டாள். சிதம்பரமும், கௌதமும் எதுவுமே கண்டுக்கொள்ளதாபடி டிவியை பார்த்தவாறு பாவனை காண்பித்தனர்.
சூரியாவிடம் பதில் இல்லை.
“சித்தப்பா……ஆஆஆ…….” என்று அவன் வாயின் அருகில் கேக் எடுத்து நீட்ட.
“எனக்கு வேண்டாம் பாப்பா,” என்று மறுத்தான். ஆதிராவிடமிருந்து தப்பமுடியுமா? அவனுக்கு வலுக்கட்டாயமாக கொடுத்தவள். பின் அதில் எஞ்சி இருந்ததை தேவியிடம் நீட்டினாள். சூரியாவின் கண்கள் தேவிகாவின் கண்களை பார்க்க, தேவிக்கு சற்று நெஞ்சு துடிப்பு அதிகமாக, மனதில் எண்ணற்ற மகிழ்ச்சி வெள்ளம் பெருக்கெடுக்க அவன் கண்களை பார்த்தவாறே ஆதிராவிடமிருந்து பெற்றுக்கொண்டாள். அதை கவனித்த கௌரியும், சௌந்தர்யாவும் புன்சிரித்தபடியே அவர்கள் வேலையை தொடர்ந்தனர்.
“ஆதிரா, என் செல்ல குட்டி. இனி சித்தாப்பாவுக்கும் சித்திக்கும் கொஞ்சம் வேலை இருக்கு அப்புறமா பேசலாம்,” என கௌதம் ஆதிராவை தூக்கி கொண்டான். சிதம்பரமும் இடத்தை விட்டு நகர்ந்தார்.
சூரியாவின் வெறுப்பு பார்வை அவள் மீது வீச அவள் எதையுமே கண்டுகொள்ளாதவளாய் இருந்தாள். இருவரும் பேசிக்கவும் இல்லை. அன்று மீண்டும் மதிய உணவு, இரவு உணவு என்று கழிந்தது.
அன்று இரவு,
அவள் அறைக்குள் நுழைந்தாள். அவனோ அவளிடம் கேள்வி கணைகளை தொடுக்க ஆயத்தமாக இருப்பவன் போல தோன்றினான்.
அவள் ஒன்றும் அறியாதவளாய் ஒழித்து வைத்திருந்த பாயையும், போர்வையும் எடுத்துக்கொண்டு தரையில் விரிக்கலானாள்.
“உனக்கு இப்படி கஷ்டப்படனும்னு என்ன தலையெழுத்தா?” என்று ஆரம்பித்தான்.
“இதில் என்ன இருக்கிறது?” என்றாள்.
“உனக்கு, நான் இன்னொரு பெண்ணை விரும்புகிறது கவலை அளிக்கவில்லையா? நீ என்ன தீர்மானத்தில் இருக்கிறாய் என்று நான் அறியவேண்டும்?” என்று தன் மனதில் குழம்பி கொண்டிருந்த கேள்வியை கேட்டான்.
“நாம் எல்லாரையும் போல மகிழ்ச்சியாக வாழ்வோம் என்ற நம்பிக்கை,” என்றாள் அவன் கண்களை நோக்கி.
“அது நடக்காது என்று தெளிவாக கூறிவிட்டேனே. நீ வீணாக மனசை போட்டுக் குழப்பிக்கொள்ளதே,” என்றான் சூரியா. பாவம்! அவனுக்கு தெரியவில்லை இவள் தான் விரைவில் அவன் உலகமே என்று. உண்மையான காதலுக்கு அர்த்தம் தரபோகிறவளென்று.
“நான் எப்போதும் போல தான் இருக்கிறேன் ஆனால் நீங்கள் தான் மன சஞ்சலமோடு காணப்படுகிறீர்கள்,” என்றாள் உதட்டோரம் சின்ன புன்னகையுடன்.
“நானா?”
“ஆமா நீங்களே தான். உங்கள் கண்களில் பயம்தென்படுகிறது. எங்கே என்னை காதலித்து விடுவோமோ என்ற பயம்,” என்ற கூறியவாறு படுக்கலானாள்.
“நீ மெத்தையில் படு,” என்று கூறியவன் அந்த பக்கம் திரும்பி படுத்துக்கொண்டான்.
அவளும் சூரியாவின் வாழ்வில் முதல் படி எடுத்துவைத்ததாக மகிழ்ச்சியில் திளைத்துகொண்டு மெத்தையின் ஓரமாக படுத்தாள். தேவிகா கொஞ்ச நேரத்தில் அசந்து தூங்கிவிட்டாள். சூரியாவிற்கோ தூக்கம் வரவில்லை. அவள் கூறிய வார்த்தை தன்னுள் மீண்டும் மீண்டும் ஒலித்தது. ஒருவேளை இவள் கூறியது உண்மையா? ஏன் என் மனது இவளை பற்றியே சிந்திக்கிறது. அவள் சொன்னது போல அவளின் காதல் வலையில் விழுவேனா?