ஒரு வார இறுதியில் தன் குடும்பத்தோடு பீச்சிற்கு வந்திருந்த சக்தி அடிக்கும் வெயிலை தாங்கி கொண்டு அங்கே முக்காடணிந்து காதல் என்ற பெயரில் ஏதோ செய்துக் கொண்டிருந்த ஜோடிகளை தன் தம்பியுடம் சேர்ந்து கலாய்த்துக் கொண்டிருந்த சக்தி அதில் ஒன்றாக அஸ்வதனை பார்த்து அதிர்ந்து விட்டாள்.
வேறு யாரோவாய் இருக்காதா என்ற எதிர்ப்பார்ப்போடு உற்று நோக்கிய சக்தி அவன் எல்லை மீறவும் ச்சீ.. என்ற அருவெருப்போடு தலையை திருப்பிக் கொண்டாள்.
அவள் உடல் விறைக்க உள்ளம் கொதிக்க அந்த சூழலை அவளால் தாங்கவே முடியவில்லை.அக்னிமித்ராவை ஏமாற்ற இவனுக்கு எப்படி தைரியம் வந்தது.அதே இடத்தில் அவனை அடித்துப்போடும் கோபம் வந்தாலும் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு இதனை உடனே அக்னிமித்ராவிடம் சொல்ல அழைப்பேசியை எடுத்தவள் பின் நிதானித்து நேரில் சொன்னால் தான் சரிவரும் என்று கருதி அவர்களை ஒரு புகைப்படம் மட்டும் எடுத்துக் கொண்டாள்.
மறுநாள் கல்லூரியில் எப்படி ஆரம்பிப்பது என்று தட்டி தடுமாறியவள் ஒருவழியாய் விஷயத்தை கூற அதுவரை சாதாரணமாய் இருந்த மித்ராவின் முகம் இறுகியது.
பேசிக்கொண்டிருந்த சக்தியை கைநீட்டி தடுத்த மித்ரா,
“சொல்லாத..இன்னோர் வார்த்தை இப்படி பேசாத..”
பல்லைக்கடித்து கொண்டு அவள் சொன்ன தொனியே மாறி இருக்க,
“மித்து..உனக்கு நம்ப கஷ்டமா இருக்கும்னு புரியுது..பட் நான் சொல்வது தான் உண்மை ஃபோட்டோ கூட எடுத்தேன்.. அவன் உன்னை ஏமாத்துறான்..”
என்று வலித்தாலும் உண்மையை உடைக்க நீண்ட நாட்களுக்கு பின் மீண்டும் கோபம் அக்னிமித் நாளங்களில் சீறி பாய்ந்தது.சக்தி கூறுவதை ஏற்க முடியாமல் உடல் நடுங்க சிவப்பேறியே கண்களோடு,
“அப்படி சொல்லாத சக்தி..அப்படி நடக்காது..என்னை ஏமாற்ற யாராலும் முடியாது..நான்..நான் ஒத்துக்க மாட்டேன்..அவன் என்னை மட்டும் தான் காதலிக்கிறான்..அது உண்மையா மட்டும் தான் இருக்கணும் இருக்க வைப்பேன்..”
என்று கத்திய மித்ராவை அதிர்ச்சியுடம் நோக்கிய சக்தி,
“நீ உணர்ச்சி வசப்படாத மித்ரா..என்னால உன் கோபம் புரிந்துக்கொள்ள முடியுது..ஆனால் இதான் உண்மை இங்க பாரு..”
என்று ஃபோனை காட்ட அவ்வளவு தான்.பட்டென்று அதனை தட்டிவிட்டவள் பாய்ந்து சக்தியின் கழுத்தை பற்றி,
“சொல்லாத சொல்லாதனு சொல்றேன்ல…என்னை யாராலும் ஏமாற்ற முடியாது..என்னை என்ன சாதரண பொண்ணுனு நினைச்சியா..நான் அக்னிமித்ரா..என்னுட்ட எனக்கு பிடிக்காததை பேச நினைச்சே கொன்றுவேன் உன்னை..”
என்று கத்தியபடி அவள் கழுத்தை நெறிக்க மூச்சு முட்டியது சக்திக்கு..அவள் கையில் இருந்து முயன்று தன்னை பிரித்துக் கொண்டவள் இறுமலோடு அழுகையும் சேர,
“இப்படி எல்லாம் பண்ணாத மித்ரா..உனக்கு என்னாச்சு.?”
என்று பேச தொடங்கியவளை, “நான் இப்படி தான் பண்ணுவேன்..நான் என்ன பண்ணனும் கூடாதும்னு நீ சொல்ல தேவை இல்லை..போ..இங்கேந்து முதல்ல போ”
என்று மீண்டும் கத்த மித்ராவிற்கு இப்படி எல்லாம் பேச தெரியுமா என்ற அதிர்ச்சியிலே உழன்றவள் பின் நேராய் சென்றது விஜயிடம் தான்.அவனிடம் எல்லாமும் சொல்ல,
“இதை ஏன் முதலிலே என்னிடம் சொல்லல…”என்று சத்தம் போட்டான் அவன்.
“மித்ரா யாருக்கும் தெரியக்கூடாதுனு நினைச்சால்..அதான் அவளே விருப்ப படும்போது சொல்வான்னு..”
என்று நிறுத்தியவளை பார்த்து தலையில் கைவைத்தபடி அமர்ந்து விட்டான்.
“நீ சொல்லி இருக்கணும் சக்தி..இப்போ இது எங்க போய் நிற்குமோ பயமா இருக்கு..யாரு அந்த நாய் அஸ்வதன்..எனக்கு சொல்லு..அவனை பொலிப்போடாம விடமாட்டேன்..”
“அவனை நீங்க பிறவு கூட பார்த்துக்கலாம்..முதலில் உங்க தங்கச்சியை சமாதானப்படுத்துங்க…அவள் இவ்வளவு கோப்படுவான்னு எனக்கு இன்னைக்கு தான் தெரியும்..கோபத்தில் எதாவது பண்ணிக்கிட்டால்? நீங்க முதலில் அவளுட்ட பேசுங்க விஜய்..”
“இல்ல சக்தி..நான் இப்போ பேசினால் அவள் இன்னும் வைலெண்டா தான் ஆவாள்..அவளுக்கு கோபம் வந்தால் என்ன செய்வான்னே தெரியாது.ம்ச்..இப்ப தான் நார்மலாக தொடங்கினாள் அதற்குள்…”
“என்ன சொல்ல வறீங்க விஜய்..”
என்று புரியாமல் கேட்டவளிடம் அக்னிமித்ராவை பற்றி அனைத்தையும் கூற பதில் பேசும் திறனின்றி அதிர்ந்து அமர்ந்தாள்.
“சக்தி..சக்தி..இங்க பாரு..ஏன் எதுவும் பேச மாட்டேங்குற..”
என்ற அழைத்த விஜயை நிமிர்ந்து பார்த்த சக்தி,
“ஏன் இதெல்லாம் என்னிடம் மறைச்சீங்க..?”
என்ற போது தயக்கமாய் பார்த்த விஜய்,
“நீ..நீ..மித்ராவை பற்றி தப்பா நினைச்சிடுவேன்னு தான்..”
என்று மேலும் சொல்ல முடியாமல் அமைதியாகிவிட,
“அவ்வளவு தானா விஜய் நீங்க என்னை புரிஞ்சிக்கிட்டது..முதலில் நம்பலை..என்னை லவ் பண்ணறதா சொன்னீங்களே அப்புறம்கூடவா நம்பிக்கை வரல..”
என்று அடிப்பட்ட குரலில் அவள் சொல்ல, “இல்லடா..ஏன் பழசை பேச..”
என்று விளக்கம் கொடுக்க முனைந்தவனை, “ஆமா..தப்பா தான் நினைப்பேன்..ஆனா மித்ராவை இல்ல..உங்களை தான்..நீங்க தான் விஜய் அவளை கெடுக்கிறதே..”
என்று அழுத்தமாய் கூறினாள்.
“வாட்..?”
“ஆமா..நீங்க தான் அவளோட இந்த குணத்தை வளர்த்து விட்டு இருக்கீங்க..அவள் கோபத்தில் இப்படி பிஹேவ் பண்ணினால் ஒன்னு நீங்க கண்டிச்சு இருக்கணும் இல்ல யார் கண்டித்தால் சரியா இருக்குமோ அவங்களுட்ட சொல்லி இருக்கணும்..அதை விட்டுட்டு அவ செய்றதை எல்லாம் மறைச்சு அமைதியா அவளை ஆதரிச்சு இருக்கீங்க..அப்புறம் அந்த பழக்கம் வளராமல் என்ன செய்யும்..”
“அவளை என்னால எதுக்கும் திட்ட முடியாது சக்தி..அவளை யாரும் குத்தம் சொல்வதையும் ஏத்துக்க முடியாது…அவ லேசாய் சுணங்கினால் கூட என்னால..என்னால அதை தாங்கவும் முடியாது”
“லூசா நீங்க..ஏன் இப்படி இருக்கீங்க..இதுக்கு பேரு என்ன பாசமா..?பைத்தியகாரதனம்..என்று கோபமாய் அவள் சொல்ல அவனுக்கும் கோபம் வந்து விட்டது..”
“ரொம்ப பேசாத சக்தி..தட்ஸ் யுவர் லிமிட்..”
என்று கூறியவனை,
“நான் உள்ளதை தான் பேசுறேன்..”
என்று சொல்லி,
“சரி..இதை விடுங்க நடந்ததை மாற்ற முடியாது..நீங்க சொன்னதை வைத்து பார்க்கும்போது..சின்ன விஷயத்திற்கே அவ்வளவு கோப்பபடும் போது இந்த விஷயத்தில் அவளோட ரியாக்ஷன் எப்படி இருக்கும்ணு சொல்ல முடியாது.ஏற்கெனவே அவ எவ்வளவு ஹைப்பரா இருந்தால் தெரியுமா..இன்னும் எதாவது செய்யும் முன்னாடி அவளை அந்த டாக்டர் அவரிடமே அழைச்சிட்டு போங்க..”
என்க “கண்டிப்பா மாட்டேன்.. “என்றான் அழுத்தந்திருத்தமாய்..
“மாட்டீங்களா…ஏன்..”
“இப்ப தான் அம்மா-அப்பா அவளை நினைச்சு கவலை இல்லாமல் இருக்காங்க.. மறுபடியும் இப்படினு தெரிந்தால் ரொம்ப மனசு உடைஞ்சு போயிடுவாங்க.. அத்தோட சந்தானம் அங்கிங் லிடம் சொன்னால் நிச்சயம் மறுபடியும் அவளை தன்கூட வைத்து ட்ரீட்மெண்ட் கொடுக்க தான் சொல்வார்..அது வேணாம் சக்தி..அது மித்ராவிற்கு பிடிக்காது..முந்தி எவ்வளவு கெஞ்சுவா தெரியுமா..என்னை கூட்டிட்டு போன்னு… அவ அங்கேந்து வந்ததில் அவளைவிட நான் தான் ரொம்ப சந்தோஷப்பட்டேன்.. மறுபடியும் அவளை அந்த சூழ்நிலையில் தள்ள விரும்பலை..இதை நான் வேறு விதமாக டாக்கில் பண்ணிப்பேன்..”
என்ற விஜயை நம்ப முடியாமல் பார்த்த சக்திப்ரியா,
“ஏன் விஜய் இப்படி இருக்கீங்க..நான் இப்போ தானே சொன்னேன்..ஆனால் நீங்க மறுபடியும் அதே தான் செய்ய நினைக்கிறீங்க..தப்பு விஜய் இது..பாசன்னு கண்மூடி தனமா இருக்கீங்க..ஊசி போட்டால் வலிக்கும்னு காய்ச்சலை வளர விடுறா மாதிரி இருக்கு நீங்க பண்றது..”
என்று புரியவைக்க சொல்ல அவனோ தன் பிடியிலே நின்றான்.
“எனக்கு என்ன செய்யனும்..எது சரின்னு தெரியும்…நீ எனக்கு அட்வெய்ஸ் செய்யாத..”
என்றவனை அதிருப்தியோடு பார்த்து தலையசைத்த சக்தி,
“யூ அர் அன்பிலிவபுள் விஜய்..எப்பவும் நீங்க நினைக்கிறதை மட்டும் தான் செய்வீங்க..அது சரியா தப்பா உணர்வது இல்ல..போங்க..இப்படியே பண்ணிட்டு இருங்க..நாளைக்கு மித்ரா கொலப்பண்ணிட்டு வந்து நிற்ப்பாள் அதையும் மறைத்து உங்க தலையிலே எடுத்துப் போட்டுக்கோங்க..எனக்கென்ன..”
என்று வெடுக்கென கோபமாய் கத்திவிட்டு திரும்பி செல்ல சோர்வோடு நெற்றியை தேய்த்தான்.
சக்தியை பிடித்து சண்டைப்போட்டு சமாதானப்படுத்த மனம் விழைந்தாலும் அதைவிட முக்கியமான வேலை ஒன்று இருப்பதால் நாளை இவளிடம் பேசிக்கொள்ளாம் என்று எண்ணிக் கொண்டவனுக்கு தெரியவில்லை நாளைய பொழுது எல்லாம் தலைகீழாய் மாறி இருக்கும் என்று..!!
இவர்கள் சம்பாஷணை அத்தனையையும் சக்தியை தேடி வந்த மித்ரா கேட்டுவிட ருத்ரகாளியாய் அவதரித்தாள்.
எல்லாராலும் தான் முட்டாள் ஆக்கப்பட்டது போல் ஒரு உணர்வு..காதலித்தவனும் போலியாய் தன்னோடு இருந்திருக்க தோழியும் போலியாய் இருந்திருக்க யாரை அவமானப்படுத்த நினைத்தாளோ மீண்டும் அவன் முன்பே தான் சிறுத்து போனதாய் தோன்ற ஆத்திரம் எல்லையை கடந்தது.மூளை கண்டபடி சிந்திக்க புயலாய் அங்கிருந்து நகர்ந்தவளை கவனிக்காது அஸ்வதனை பற்றி விசாரித்து அவனை வகுந்து போட ஆத்திரமாய் கிளம்பினான் விஜய் வரதன்.
ஆனால் அவனிற்கு முன் அஸ்வதனை அடைந்து விட்டாள் அக்னிமித்ரா.
“ஹே..யாரோ சொல்வதை நம்பி என்னை சந்தேகமா கேட்பியா மித்ரா..”
என்று போலியான கோபத்தை முகத்தில் தேக்கி கூறியவனை சீரான பாவனையில் கேட்டுக் கொண்டிருந்த மித்ரா பதில் சொல்லவில்லை.வழக்கமாக அவர்கள் சந்திக்கும் கல்லூரிக்கு பக்கதில் உள்ள அந்த காலி பரப்பில் தான் நிற்கின்றனர்.
அவள் முகத்தில் எதையும் கண்டறிய முடியாமல் மீண்டும் அவனே,
“ம்ம்ம்..நேத்தி என் ஃப்ரெண்ட் நித்யாயை பீச்சில் மீட் பண்ணினேன்..அவ ஸ்கூல் ப்ரெண்ட்..எங்க பழைய கதையெல்லாம் பேசிட்டு இருந்ததால் நேரம் போனதே தெரியலை..ஐ திங்க் அவக்கூட சேர்ந்து உட்கார்ந்து பேசிட்டு இருந்ததை தான் யாரோ உனக்கு தப்பா கன்வே பண்ணிருக்காங்க..”
என்று சரளமாய் பொய் சொன்னவனிடம்,
“அவளை இங்க வரச்சொல்லு..”
என்றாள் அதே அமைதியான குரலில்..
“யாரை..?”
“அந்த பொண்ணு நித்யா….அவளை வந்து சொல்ல சொல்லு நம்புறேன்!”
“அவ எதுக்கு..என் வார்த்தையில் நம்பிக்கையில்லையா..மித்ரா..”
“வர சொல்லு நம்புறேன்..”
என்று அவள் ஆணையிடும் போது சரிதான் போடி என்று கத்திவிட துடித்த நாவை கட்டுப்படுத்தி, ‘இவ கத்தி சண்டைபோட்டால் பரவாயில்லை..சதாரணமா தானே பேசுறா..இன்னும் ஆகவேண்டியது நிறைய இருக்கு..என் நித்யா தானே..வந்து சொல்ல சொன்னால் சொல்ல போகிறாள்..பிரச்சனை சால்வ்ட்..’
என்று யோசித்தபடி ஃபோனை எடுத்த அஸ்வதன் நித்யாயிடம் விபரம் சொல்லி வரச்சொல்ல, “என்னடா..” என்று சலித்தவளிடம்,
“வாடி..கொஞ்ச நாள் தானே இதெல்லாம்..நாம செட்டில் ஆக பணம் வேண்டாமா..வா..”
என்று கூறி அழைப்பை துண்டித்தவன் மீண்டும் அக்னிமித்ரா அருகில் வந்து,
“ஆனால் நீ என்னை நம்பாதது எனக்கு ரொம்ப ஹர்டிங் ஆ இருக்கு மித்ரா..”
என்று முகத்தை திருப்பியவனை குரோதத்தோடு நோக்கிய அக்னிமித்ரா கை தன் காலேஜ் பேக்கின் உள் இருந்த கூரிய கத்தியை வருடியது.
சற்று நேரத்தில் வந்த நித்யா அஸ்வதன் கூறியதுப்போல் சொல்ல கையை கட்டிக்கொண்டு அவளை தலைமுதல் கால் வரை ஆராய்ச்சியாய் ஒரு பார்வைப் பார்த்த மித்ரா,
“இவளுட்ட என்ன இருக்குனு என்னை ஏமாற்றிட்டு இவளை தொங்குற நீ?”
என்று நிதானமாய் கேட்டாள்.
“ஹே..இவ்வளவு நேரம் என்ன உளறிட்டு இருந்தேனா..அவளே வந்து சொல்லுறா இன்னும் என்ன உனக்கு?”
என்று கோபமாய் கேட்ட அஸ்வதனை,
“என்னை பார்த்தால் உனக்கு கேனச்சி மாதிரி இருக்கா..நீ என்ன சொன்னாலும் பூம்பூம் மாடு மாதிரி தலையாட்ட..என்னையே முட்டாள் ஆகிட்டேல்ல நீ..அதுவும்..இவ..இவெல்லாம் என் காலு தூசிக்குகூட பேர மாட்டாள்..இந்த மூஞ்சி எனக்கு இணையா..??த்தூ..”
என்று ஆத்திரமாய் உமிழ்ந்தாள்.
“ஏய்..என்னடி ஓவரா பேசுற..என்ன அஸ்வா பேசவிட்டு வேடிக்கை பார்க்கிற..இந்த மகாராணியையே வைச்சுக்கோ நான் போறேன்..”
என்று கிளம்ப எத்தனித்த நித்யாயை கைப்பிடித்து தடுத்த அஸ்வதன்,
“நித்து..நீ இரு.. “என்று கூற அவர்கள் இணைந்திருந்த கையை அழுத்தமாய் பார்த்தாள்.அந்த மாலை மங்கி இருளத் தொடங்கிய வேளையில் சிவந்திருந்த அவள் முகமே அச்சுறுத்தியது.
“உனக்கென்ன பெரிய உலக அழகின்னு நினைப்பா..என் முன்னாலே என் நித்யாவை பேசுற..ஆமாடி..நான் அவளை தான் லவ் பண்றேன் உன்னிடம் சும்மா டைம்பாஸிற்கு தான் பழகினேன்..என்ன இப்போ..?உன்னால என்ன பண்ண முடியும்..போய் அண்ணனிடம் சொல்லுவியா..சொல்லிக்கோ..எனக்கும் அடிக்க பசங்க இருக்காங்க..எவனுக்கும் பயமில்லை..போடி..”
என்று அலட்சியமாய் கூறி நித்யாவோடு திரும்பியது தான் தெரியும் முதுகு தண்டில் சுள்ளென்று ஒரு வலி!!!!
கண்கள் பிதுங்கி தொண்டை அடைக்க நித்யாமீது இருந்த பிடியை இன்னும் இறுக்கிய அஸ்வதனை,” என்னடா.. ”
என்று வேகமாய் பிடித்துக் கொண்ட நித்யா அவன் இடுப்பில் இருந்த இரத்த கரையை கண்டு அதிர்ந்து திரும்ப இரத்தம் படிந்த கத்திக்கு ஈடாய் கண்கள் சிவக்க நின்றிருந்தாள் அக்னிமித்ரா..
வார்த்தை வராமல் “ஏய்..ஏய்.. “என்று பயத்தில் தடுமாறிய நித்யாவை பார்த்து ஏளனமாய் ஒரு புன்னகை அவள் உதட்டில்..
“பயமா இருக்கா..இப்போ..இப்போ..”
என்று கூறி மீண்டும் மீண்டும் அவனை குத்த மடங்கி விழிந்தவனை கண்டு வீச்சென்று கத்தினாள் நித்யா.அதில் ஒரு குரூர சந்தோஷத்தை கண்டாள் மித்ரா,
“எங்க..எங்க இப்போ அதே திமிறா பேசு..அதே மாதிரி பேசு பேசுடி..”
என்று வார்த்தைக்கு வார்த்தை குரலை உயர்த்த நடுங்கி போன நித்யா கண்ணில் கண்ணீர் ஆறாய் பெருக அங்கிருந்து ஓட எத்தனித்தவளின் கையை பற்றிக் கொண்டு,
“ஆஹான் எங்க ஓடுற..எனக்கு இப்பவும் ஆத்திரம் அடங்கல..எவ்வளவு துணிச்சல் இருந்தால் இந்த மித்ராவை ஏமாற்ற நினைச்சிருப்பீங்க..இப்பவும் என்னால ஏத்துக்க முடியல..வலிக்குதுடி..வலிக்குது..”
என்று ஆங்காரமாய் கத்தி தன் பிடியில் கெஞ்சலோடு தவித்துக்கொண்டிருந்த நித்யாவின் வயிற்றில் ஓங்கி சொருக்க கீழே விழுந்தவளை மீண்டும் மீண்டும் பதம் பார்த்தது மித்ராவின் கத்தி..
இருவர் உயிரும் பிரிந்து நிமிடங்கள் சென்றிருக்க இன்னமும் ஆத்திரம் அடங்காமல் மாற்றி மாற்றி இருவரையும் குத்தி இரத்த வெள்ளத்தில் அமர்ந்திருந்த மித்ராவிற்கு ஏனோ ஆத்திரம் மட்டும் இன்னும் மட்டுப்படவில்லை.
விஜய், சக்தி, அப்பா, அம்மா என்று எல்லாரையும் கொன்னுப்போடும் கோபம் அடைக்க அறிவு அரவே வேலைசெய்யாமல் மூர்க்கம் மட்டுமே மூளையை நிறைத்திருக்க மொத்தமாய் ஒரு சைக்கோ போல் அமர்ந்திருந்தாள் அக்னிமித்ரா.
இன்னும் வீடு வந்து சேராத அக்னிமித்ராவை காணாது விஜயும் சிவகுமாரும் ஊரெல்லாம் தேடி அலைய இறுதியில் மீண்டும் கல்லூரியையே சுற்றி தேட அங்கே அவர்கள் கண்ட காட்சி ஈரக்குலையை நடுங்க செய்தது.
சிவகுமார் நெஞ்சை பிடித்தபடி நின்றுவிட விஜயோ,
“மித்ராஆஆஆ “என்று அலறிவிட்டான்.
மெல்ல தலையை மட்டும் திருப்பிய அக்னிமித்ரா இருவரின் பயந்த தோற்றத்தில் சிரிப்புவர காதுவரை நீண்ட உதடுகளோடு சிரித்த மித்ரா கைகள் கத்தியில் இறுக்கியது.
நடந்த நிகழ்வின் உண்மையை ஏற்க முடியாமல், “என்ன..என்ன மித்ரா இது..” என்று கூறுவதற்கு கூட குரல் எழும்பவில்லை.
அவனையே பார்த்துக் கொண்டிருந்த மித்ரா திடீரென்று அவன்மீது கத்தியுடம் பாய, “மித்ரா..வேணாம்..மித்ரா.. “என்று கத்தியப்படி அவள் கைகளை பற்றி தடுக்க சிவகுமாரும் அவளை பிரித்து எடுக்க போராட அவளோ வெறிக்கொண்டவள் போல்,
“சாவுடா..நீ சாவணும்..உன்னால தான்..உன்னால தான் எல்லாம்..நீ இருக்க கூடாது..நீ இருந்தால் என்னால நிம்மதியாவே இருக்க முடியாது..செத்துப்போ..”
என்று கத்தியை அவன் கழுத்தில் இறக்க முயல இருவரும் பெரிய போராட்டத்திற்கு பின் அவளை பிரித்தனர்.
“ஏம்மா..ஏம்மா இப்படி ஆகிட்ட..உன்ன இப்படி பார்க்க முடியலம்மா..ஆசை ஆசையா வளர்த்தது இப்படி நிலமையில உன்ன பார்க்க தானா..”
என்று சிவகுமார் தாங்கமுடியாமல் கதற அவருக்கு ஆறுதல் சொல்ல கூட வார்த்தையின்றி மித்ராவையே பார்த்தவன் பின் அவளை அப்படியே தூக்கிக் கொண்டு,
“வாங்க ப்பா..” என்றான் அவசரமாக..திமிறி இறங்க முயன்ற அவள் முயற்சிகள் எல்லாம் தோற்க கத்தியும் கீழே விழுந்து விட்டதால் கையாலே அவனை சரமாறியாய் தாக்க அதனை பொருட்ப்படுத்தாது,
“அப்பா..அந்த வாச்மென் ஆ..இங்கிருந்து அனுப்புங்க..அழாதீங்க ப்பா..இன்னும் விபரீதமாய் எதுவும் நடக்கும் முன்னாடி நாம எதாவது செஞ்சாகணும்..”
என்று சொல்ல உணர்ச்சி பெருக்கில் உலகமே அவருக்கு புரியவில்லை.அவன் சொன்னதை இயந்திரமாய் அவர் செய்ய காவலன் அங்கே நகர்ந்ததும் மித்ராவோடு கல்லூரியில் நுழைந்த விஜய் முதலில் இருந்த சி ப்ளாக்கில் ஒரு அறையை சிவகுமாரை திறக்க சொல்லி அவளை உள்ளே ஜன்னலோடு கட்டிப்போட்டான்.அதுவரை அவள் வாய் ஓயாமல் கத்திக்கொண்டே இருந்தாலும் அவனை சற்றும் அசைக்கவில்லை.இரும்பாய் இறுகிப்போயிருந்தான் விஜய்.
அவளை உள்ளே வைத்து பூட்டிவிட்டு மீண்டும் அந்த இடத்திற்கு விரைய கொடூரமான அந்த காட்டியை கண்கொண்டு பார்க்க முடியவில்லை.பார்க்கவே இத்தனை பயங்கரமாய் இருந்தால் இதை செய்ய அவளுக்கு எவ்வள்வு துணிவு இருந்திருக்க வேண்டும். கொலை செய்யும் அளவு இவள் போவாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.சக்தியின் வார்த்தைகள் அசரீயாய் காதில் ஒலிக்க அவள் பேச்சை கேட்டு இருக்க வேண்டுமோ என்று தோன்றியது.
அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் திக்கு தெரியாத காட்டில் மாட்டியது போல் திகைத்து அங்கேயே நின்றனர் இருவரும்.
யாரிடம் உதவி கேட்பது என்று தெரியவில்லை.மித்ராவை பற்றி யாருக்கும் தெரியாது.என்ன செய்வது என்று யோசித்தவன் இறுதியில் சந்தானத்திற்கே அழைக்க அவரும் சில நிமிடங்களில் வந்து சேர்ந்தார்.
“இனி நம்ப கையில் எதுவும் இல்லை..போலீஸிடம் சொல்லுவோம்..கொலைகுற்றத்திற்காக கேஸ் நடந்தாலும் மனநிலை பாதிக்கப்பட்ட இவளை மனநல மருத்துவமனையில் தான் சேர்ப்பாங்க..அது தான் இனி அவளுக்கு நல்லது..வெளியில் இருந்தால் இன்னும் ஆபத்து தான்..முதலில் எங்க அவ காட்டுங்க..”
என்று கேட்ட சந்தானத்தோடு அவளை கட்டிவைத்திருந்த அறைக்கு செல்ல அதோ அங்கே மற்றோர் அதிர்ச்சியாய் கையறுக்க பட்டு கண்கள் சொருகிய நிலையில் உயிரற்று கிடந்தாள் அக்னிமித்ரா.