திருமதீஸ்: ஈ
“இன்னும் கிளம்பாம என்ன பண்ணிட்டு இருக்க சக்தி?” தன் செவிகளில் திடுமென விழுந்த ஒலியில் ஒரு கணம் பதறி பின் நிமிர்ந்தாள் சக்தி. அங்கு பாகற்காயை மென்ற கணக்காய் நின்றிருந்தான் ஈஸ்வர். தோளில் மடிக்கணினி பை தொங்க, கழுத்தில் டை மற்றும் சட்டையில் இரு பொத்தான்கள் அவிழ்த்து விடப்பட்டு ஓய்ந்த நிலையில் இருப்பவனை கண்டதும் கையும், காலும் பரபரவென அவனுக்கு தேவையானதை செய்யத் துடித்தாலும் மனம் காலையில் நடந்த பிணக்கை நினைவுபடுத்த நங்கூரமிட்டது போல் அங்குமிங்கும் அசையாமல் அமர்ந்திருந்ததாள்.
அவன் கேள்வி காற்றுக்கு இரையானதை கண்டு சினம் துளிர்விட்டாலும் காலையில் பேசியதே அதிகம் என்று வாயை அடக்கிக்கொண்ட ஈஸ்வர், “உன்கிட்ட தான் கேக்குறேன் சக்தி. உன் பிரென்ட் ரிசெப்ஷன்கு போகணும்னு சொன்ன. போகலாம் கிளம்பு.” தன் நிலையிலிருந்து ஆசை மனைவிக்காக இறங்கி வந்து கூற,
நீ வேண்டாம் என்று சொன்னால் போகக்கூடாது, தயாராகு போகலாம் என்று சொன்னவுடன் கிளம்பிவிட வேண்டுமா என்ன? என்றதொரு தொனியில் இறுக்கம் குறையாது தன் மடியில் இருந்த மடிக்கணினியில் பார்வையை நுழைத்து அன்று டைப் செய்ய வேண்டியதை டைப் செய்து சேமித்தாள்.
“சக்தீ…”
“நான் போகல…” போனால் போகிறது என்று சொல்வது போல சொல்லிவிட்டு மடிக்கணியை அணைத்துவிட்டு உணவு மேசையிலிருந்து நகர முற்பட, அவள் கைப் பற்றி நிறுத்தினான் ஈஸ்வர்.
[the_ad id=”6605″]“உனக்காக தான் இருக்குற வேலையெல்லாம் ஒதுக்கி வச்சிட்டு பர்மிஷன் போட்டு சீக்கிரமே வந்திருக்கேன். ஒழுங்கா கிளம்பு.” என்று தணிந்த குரலிலே மொழிய,
“நான் யாரையும் வரச்சொல்லல… எனக்காக யாரும் எதுவும் செய்ய வேண்டாம்.”
“லூசாடி நீ… உனக்காக செய்யாம வேற யாருக்கு செய்யப்போறேன்? என் கோபத்தை கிளறாத சக்தி. ஒழுங்கா நீயும், அகிலும் கிளம்பி இருங்க… சதீஸ் வீட்டில் இருக்கட்டும், நாம போயிட்டு வரலாம்.” என்க,
ம்கூம்… பதிலே இல்லை அவளிடம்.
மிஞ்சினால் கெஞ்சலாம்; கெஞ்சினால் மிஞ்சலாம் என்று அவன் இறங்கி வரவும், இவள் முரடு பிடித்தாள்.
அவள் அமைதியாய் அவனை தவிர்த்து வேறு எங்கோ பார்வை பதித்திருப்பதை கண்டவன் அவள் கரத்தை விடுவித்து, “என்னவோ பண்ணு… ஆனால் இனி அங்க போகணும் இங்க போகணும்னு என்கிட்ட வந்துடாத…” என்று அவன் கடுப்புடன் மொழிந்துவிட்டு தங்கள் அறைக்குச் செல்ல, அன்று அதிகாலை எழும் போது இருந்த மனநிலை இரவை நெருங்கும் வேளையில் இல்லை, இருவருக்குமே! சொல்லப்போனால் அவர்களுக்குள் வந்த பெரிய பிணக்கே இது தான். அதற்காக இருவருக்கும் எப்போதும் கருத்து ஒத்துப்போகும் என்றும் அறுதியிட முடியாது. சிறு சிறு வேறுபாடு அவ்வப்போது தோன்றினும், அவற்றை பரந்த மனப்பான்மையுடன் கலந்து பேசி கசப்பு வரமால் முடித்து விடுவர். அப்படிப்பட்டவர்கள் இடையில் சாத்தான் புகுந்த கதையாய் சக்தியின் மனம் கணப்பொழுதில் சஞ்சலமடைந்து விட்டது.
முள்ளின் மீது சேலை விழுந்தாலும், சேலை முள்ளின் மீது விழுந்தாலும் சேதாரம் என்னவோ சேலைக்கு தான் என்ற பழங்கால மொழி மெய்யாகப்போவது அறியாமல் மனதில் தேவையற்ற குழப்பங்களுக்கு இடம் கொடுத்து அதற்கு கோபச் சாயம் பூசி தன்னிலை இழக்கத் தயாரானாள் பேதை.
அவன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் மறைந்ததும் அடக்கிவைத்திருந்த கை, கால்களை அவிழ்த்துவிட, அது நேராக சமையலறையில் தான் சென்று நின்றது. மனம் செலுத்திய போக்கில் அவனுக்கு தேவையான அனைத்தையும் செய்து எடுத்து வந்தவள் அமைதியாய் அவர்கள் அறைக்குள் வைத்துவிட்டு முன்பிருந்த இடத்திலேயே வந்து அமர்ந்து கொண்டாள்.
காலை சண்டைக்கு பின் சக்தி எல்லோருடனும் இருக்க சங்கடப்படுவதை உணர்ந்து அவளுக்கு வேண்டிய தனிமையை அளித்த மாமியார் இவளின் இந்த செய்கையை தூரத்திலிருந்தே கவனித்து, உள்ளுக்குள்ளேயே சிரித்துக் கொண்டு இனி எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையோடு அங்கிருந்து நகர்ந்துவிட்டார்.
அறையில் இருந்தவனோ சக்தியை முற்றிலும் மறந்தவனாய் சக்தி வைத்திருந்ததை உண்டுவிட்டு அலுவலகத்தில் அவன் செய்யாமல் விட்ட வேலையைத் தொடர்ந்தான்.
எப்போதும் அகிலுடன் மல்லுக்கட்டி உரக்க ஒலிக்கும் சக்தியின் குரல் இருந்த தடம் தெரியாமல் துடைத்து விட்டது போல அமைதியாக இருந்தது இல்லம். மற்றவர்களும் அவளை நோண்டாமல் கண்டும்காணாமல் இருந்து கொண்டனர். இப்படியே இரவு வேளை உணவு நேரமும் வந்துவிட மாமியாரிடமும், நாத்தனாரிடமும் உணவு பரிமாறும் பொறுப்பை கொடுத்துவிட்டு அகிலுக்கு சாப்பாடு ஊட்டும் சாக்கில் நழுவிக் கொண்டாள் பெண்.
சிறிய தட்டில் ஒரு இட்லியுடன் காரம் குறைவான காய்கறி சட்னியுடன் வெளியே வந்தவள், வேடிக்கை காட்டிக்கொண்டே அகிலுக்கு ஊட்டினாள். அவனோ போக்கு காட்டிக் கொண்டு கொஞ்சமே கொஞ்சம் உட்கொண்டான்.
“இன்னும் கொஞ்சம் தான் இருக்கு குட்டி. சமத்தா சாப்பிடுவீங்களாம்…”
“ம்மா… னேணான்…” என்று தன் பிஞ்சுக் கையை ஆட்டி மறுக்க,
அவன் கன்னத்தில் மூக்கை வைத்து உரசி, “என் அகில் சமத்து பையன்தானே… இதை மட்டும் சாப்பிட்டுடுவானாம்,” என்று செல்லம் கொஞ்ச அகில் முகத்தை திருப்பிக்கொண்டு வீல் என தன் அழுகையை ஆரம்பித்தான்.
சக்தி அவனை சமாதானம் செய்வதற்குள்ளாகவே அகிலுக்கு போட்டியாய் இன்னொரு சின்னஞ்சிறிய குரல் விசும்பியது. அதை கேட்ட அகில் தன் சத்தத்தை இன்னும் கூட்டினான்.
“அகில்.” சக்தி அதட்ட அருகிலேயே ‘க்ரிஷ்’ என்ற அதட்டலும் எதிர்ப்பாட்டாய் கேட்டது. இப்போது சக்தியின் பார்வை அழுகை மற்றும் அதட்டல் வந்த திசையில்… மூக்கு விடைக்க குட்டி கிருஷ்ணனைப் போல் அழுது கொண்டிருந்த க்ரிஷை கண்டதுமே கால்கள் தன்னாலே காம்பௌண்ட் சுவர் புறம் சென்றது.
சக்தி தன்னை நோக்கி வருவதை கவனித்த மங்கை, வரவேற்பாய் அவளைப் பார்த்து புன்னகைத்து அவளும் சுற்றுச்சுவரை நெருங்கினாள்.
க்ரிஷை பார்த்ததுமே அகில் தன் அழுகையை நிறுத்தி க்ரிஷை தொட முயற்சிக்க, க்ரிஷும் தேம்பலுடன் அகிலை தான் பார்த்தான்.
“வணக்கம் சொல்லுங்க அகில்…” சக்தி அகிலை உந்த, அகில் சமத்தாய் தன் குட்டிக் கரங்களை குவித்தான். ஹலோ ஹாய் என்று சொல்ல வந்த மங்கையோ சுதாரித்து அகிலின் பஞ்சு கன்னத்தை வாஞ்சையுடன் கிள்ளி, “வணக்கம் குட்டி பாஸ்…” என்றாள். அவளுக்கு ஒரு வெட்கச் சிரிப்பை உதிர்த்தவன் தன் ஒற்றை விரலால் அந்தப் பக்கம் மங்கையின் இடையில் இருந்த க்ரிஷை தொட முயன்றான்.
ஆனால் க்ரிஷ் முறுக்கிக் கொண்டு முகத்தை திருப்பி தன் அன்னையோடு ஒட்டிக்கொண்டான்.
“ம்மா பாப்பா…” க்ரிஷ் அவனை காணாது இருக்க குறை படித்தான் அகில்.
சக்தி மங்கையுடன் பேச்சை துவங்கும் முன்னே அவளின் மாமியார் குரல் அருகில் கேட்டது.
“சக்தி… ஏன்மா புள்ள அழறான்?” என்றபடியே அவளை நோக்கி உள்ளிருந்து வந்தார்.
“இட்லி வேண்டாமா அத்தை. ஒன்னு கூட முழுதா சாப்பிடல…”
“வேண்டாம்னா விடு. நீ தூங்க போவதற்கும் முன்னே ஒரு இட்லி குடுத்துடு. நான் எடுத்து வைக்கிறேன்.” என்று சொல்லிவிட்டு அவள் கையில் இருந்த தட்டை வாங்கி மங்கை புறம் சிரிப்பை உதிர்த்துவிட்டு க்ரிஷ் பெயர் கேட்டுவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.
“உங்க மாமியார் ரொம்ப ஸ்வீட்…” என்றுரைத்த மங்கையுனுள் எதிர்பார்ப்புகள் எகிறன.
சக்தி அதை ஏற்றுக்கொண்ட விதமாய் உதட்டை வளைத்து, “உங்க பையன் யார்கிட்டயும் போக மாட்டானா?”
“பழகுனா வந்துடுவான். நேற்று தான் இங்கே வந்தீங்களா? பொருளெல்லாம் செட் பண்ணியாச்சா?”
“கொஞ்ச கொஞ்சமா ஒரு வாரமா எல்லாவற்றையும் எடுத்துவந்து செட் பண்ணிட்டோம்.”
நட்பின் தொடக்கமான பேச்சுக்கள் இருவருக்குள்ளும்.
“அழுதுட்டே இருந்ததான்னு வெளில வந்தேன்… பையனுக்கு கஞ்சு கொடுக்குற நேரமாச்சு. நாளைக்கு பார்க்கலாம்…” என்று மங்கை விடைபெறுவதற்கு முன் க்ரிஷின் கையை அசைத்து, “க்ரிஷ் ஆன்ட்டிக்கும், அண்ணனுக்கும் பை சொல்லு…” என்க புதைந்திருந்த தோழியின் வார்த்தை நினைவு வந்தது சக்திக்கு.
[the_ad id=”6605″]அகில் அவர்களுக்கு கை அசைத்து விடைபெற, மங்கை வீட்டின் மறுபுறம் இருக்கும் வீட்டிலிருந்த பெண்மணி இந்த குழந்தைகளின் இருப்பை வாயிலில் நின்று கண்டுகொண்ட உவப்புடன் உள்ளே சென்றார்.
இங்கு வீட்டினுள் நுழைந்த சக்தி அகிலை சுத்தப்படுத்தி உண்டு முடித்திருந்த ரவியிடம் ஒப்படைத்துவிட்டு தன் அறைக்கு நடையை செலுத்தினாள். உள்ளே அறைக்குள் நுழைந்தவள் ஈஸ்வர் முன் சென்று நின்றாள். அப்போது தான் மடிக்கணனியை எடுத்தவன் பார்வையை அதன் திரையிலிருந்து விடுவதாய் இல்லை.
“ம்கூம்… நான் வந்தது தெரியாத மாதிரி நடிக்காதீங்க.” தன் வரவை தெரிவித்து கணைத்தாள் சக்தி.
அவளே பேசட்டும் என்று காத்திருந்தவன் நிமிர்ந்து, “இப்போ என்ன வேணும் உனக்கு?”
“பதில் வேணும்?”
“கேள்வி என்னனு சொல்லவே இல்லையே?”
துளிர் விட்ட தயக்கத்துடன், “நான் ஆன்ட்டி மாதிரி இருக்கேனா?”
அவளை மேலிருந்து கீழ் பார்வையால் ஆராய்ந்தவன், “அதிலென்ன சந்தேகம்?” என்றதுமே அவள் முகம் வெளுத்து கூம்பிவிட அவள் கை பிடித்து தன் எதிரே அமர வைத்தவன்,
“சதீஸ் பிரின்ட்ஸ்க்கு நீ ஆன்ட்டி தான். ஆனால் எனக்கு பெண்டாட்டி.” என்று ரைமிங்காய் பேச, அவள் கண்டுகொண்டாள் இல்லை. அவளுக்கு தேவையான பதில் கிடைத்ததும் அவனிடமிருந்து நகர்ந்து விட்டாள்.
அவன் தான் ஏன் வந்தாள்? எதற்கு இந்த கேள்வியை கேட்டாள்? கோபம் போய்விட்டதா? என்று தலையும் புரியாமல் வாலும் புரியாமல் விழித்தான்.
…
“நான் சொன்னேன்ல பக்கத்தில் ஏதோ குழந்தை சத்தம் கேக்குதுனு… நமக்கு அடுத்தடுத்து இருக்கும் வீட்டில் குழந்தைகள் இருக்காங்க… இங்க வந்ததும் நல்லதா போச்சு… முன்பு இருந்த அடுக்குமாடி குடியிருப்பு போல இல்லாமல் இங்கு அருகில் இருக்கும் வீடுகளில் பழகலாம் போலிருக்கு…” ஏதோ பத்து வயது குறைந்தது போல வேகமாக உள்ளே வந்து தன் மகனிடமும், மருமகளிடமும் தான் கண்டதை தெரிவித்தார்.
தொலைக்காட்சியில் இருந்து தலை நிமிர்த்திய இருவரும் அவரின் துள்ளலை கண்டு புருவம் உயர்த்தினர்.
“நீ பக்கத்து வீட்டு குழந்தையை பார்க்குறேனு ஏதாவது வம்பை விலைக்கு வாங்காதமா…” கடிந்துகொண்டான் மகன்.
“எனக்கு ஒரு பேர பிள்ளை இருந்தா நான் ஏன்டா அடுத்து வீட்டு பிள்ளையெல்லாம் போய் பார்க்கப் போறேன். நீ காலை பத்து பதினோரு மணிக்கு மேல் கிளம்பி போனால் மறுநாள் காலை தான் வர… உன் பெண்டாட்டி காலையில் நீ வந்தவுடன் வீடியோ எடுக்க அவள் ரூமிற்குள் போய் பூட்டிக்குறா… அப்புறம் மெதுவா நேரத்திற்கு தகுந்தாற்போல் அவ கடைக்கு போறா… அதிலும் கல்யாண தேதி வந்துட்டா போதும் எப்போ வர்ரா எப்போ போறான்னு ஒன்னுமே தெரியல. ஒண்டி கட்டையா நான் தான் வீட்டில உட்கார்ந்து காவல் காத்திட்டு இருக்கேன்…” தள்ளாத காலத்தில் தனிமை தந்த கசப்பு வார்த்தைகளாய் வந்தது.
“குழந்தை குழந்தைனு உயிரை எடுக்காதமா… ஸ்வேதாவையும் இனிமே இது சம்மந்தமாக கேள்வி கேக்காத…” என்று கடுப்படித்த குமரன் எழுந்து அறைக்கு சென்று விட்டான்.
“நில்லு குமரா… அச்சோ இன்னைக்கு தான் வீட்டில இருக்கான் நான் ஏதேதோ புலம்பி அவனை வருத்திட்டேன்…” என்று அதற்கும் ஒரு புலம்பு புலம்பினார் ஸ்வேதாவின் மாமியார்.
ஸ்வேதா இவ்வனைத்தையும் மெளன மொழி தாங்கி கவனித்துக் கொண்டிருந்தாள். காலை நடந்த களேபரமும் மனதில் இருந்து அகலவில்லை; அதற்கான மன்னிப்போ, மறுமொழியோ வரவுமில்லை. அவள் விடுப்பு எடுத்து அந்த நிகழ்வை நினைத்து வருந்தியது தான் மிச்சம்.
★★★