திருமதீஸ்: உ
அந்த புத்தம் புதிய நிசப்தமான காலை வேளையில் மனதை வருடும் மெல்லிய தென்றலில் வீட்டின் தோட்ட புல்வெளியில் வீட்டின் சுவரோரம் போடப்பட்டிருந்த நாற்காலியில் மடிக்கணினியுடன் அமர்ந்திருந்த மகனைத் தேடி வந்திருந்தார் ஈஸ்வரின் தாய், “டேய் இன்னும் சக்தியை சமாதானம் செய்யலையா… முகம் இன்னும் வாட்டமாவே இருக்கு…”
“ப்ச்… நீ விடுமா நான் பாத்துக்குறேன்.” அன்னையின் கேள்விக்கு தலையை நிமிர்த்தாமலே பதில் கூறினான் ஈஸ்வர்.
“என்ன பார்த்துக்குவ? தங்கமான பொண்ணை நல்லா வச்சி பார்த்துக்கணும்டா… கல்யாணமாகி வந்ததிலிருந்து நம்ம எல்லோர் மேலும் எவ்வளவு பாசமா இருக்கா, நமக்கெல்லாம் பார்த்து பார்த்து செய்யுறா. இந்த காலத்து பிள்ளைகளாம் அப்படியா இருக்காங்க? சண்டை போடாதடா…”
“மருமகளுக்கு நல்லா வக்காலத்து வாங்குற…”
“அதான் சொல்லிட்டியே மரு(று)மகள்னு. நீங்க எல்லாம் மகிழ்ச்சியா இருந்தா தான் எங்களுக்கு திருப்தியே.”
இதற்கு என்ன சொல்வது என்று ஈஸ்வர் அமைதி காக்க,
“என்னடா ஒன்னுமே சொல்ல மாட்டேங்குற?” அதற்கும் கேள்வியை அடுக்கினார்.
“அம்மா அவ கொஞ்சம் அப்சட்ல இருக்கா. சரியாகிடுவா விடு.”
அதற்கு மேல் கணவன், மனைவிக்கிடையில் இருக்கும் ஊடலில் நுழைய விரும்பாமல், “இன்னைக்கு ஆபிஸ் போகலையா?”
“முதலில் கேட்க வேண்டிய கேள்வியை கடைசியில் கேக்குற? வீடே பரபரப்பா இருக்கும் போது நான் மட்டும் இப்படி இருக்கேன்னா… ஒர்க் பிரம் ஹோம் போட்டிருக்கேன் உங்க மருமகள்ட்ட சொல்லிடுங்க… அவ தானே உங்களை கேட்க சொல்லி அனுப்பி வச்சா?” கேலியோடு கேள்வியாய் உண்மையை கண்டுகொண்டதை மொழிய, அவன் தாய் அசட்டு சிரிப்பை உதிர்த்து, “டேய் போக்கிரி… நீ அவள் கோபமா இருக்கானு தானே இன்னைக்கு வீட்டிலிருந்து வேலை செய்யுற?” என்று பாயிண்ட் பிடித்து கேட்க இப்போது மகனின் முறை அசட்டு சிரிப்பை உதிர்ப்பது.
[the_ad id=”6605″]“எப்படிம்மா?”
“நான் உனக்கு அம்மாவாக்கும்…” என்க,
இதை சன்னல் வழியே மறைந்து நின்று கேட்ட சக்திக்கு அவனின் ‘ஐ லவ் யூ’ சொல்லியிராத காதலில் கர்வமே.
…
“என்ன சொன்னாங்க உங்க அம்மா?” எப்போது பேசி முடிப்பான் எனக் காத்திருந்து அலைபேசியை வைத்த நொடி வினா எழுப்பினாள் மங்கை.
அலுப்புடன் அவளை பார்த்த விவேக், “நீ என்ன எதிர்பார்க்குறேனு சொன்னா அதற்கான பதிலை கொடுக்க எளிதாய் இருக்கும் மங்கை. காலையிலேயே வீண் விவாதம் வேண்டாம்.” என்று தெளிவாய் பிணக்கு வராமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க,
“இங்க வருவதை பற்றி?” என்று பிரச்சனைக்கு வித்திடும் கேள்வியை முன்வைத்தாள் மங்கை.
விவேக் ஆழ மூச்சிலித்து, “இப்போ உடனே எல்லாம் வரமுடியாதாம் மங்கை. அக்காக்கு இன்னும் அம்மை இறங்களையாம் பசங்க தனியா இருக்க முடியாது அக்காக்கு சரியானதும் வரேன்னு சொன்னாங்க.”
“அது தானே பார்த்தேன்… உடனே வந்துட்டாலும்…”
“ப்ச்… காலையிலேயே ஆரம்பிக்காத,”
“நான் தான் சண்டை போடுறதுக்கு காரணம் தேடி அலையுறேன் பாருங்க…”
பல நாள் பிணக்கு அவனுக்கு சோர்வை கொடுத்திருக்க, “உஃப்… உனக்கு என்ன தான் பிரச்சனை மங்கை. எதற்கெடுத்தாலும் ஏன் சண்டைக்கு நிக்கிற?”
“வாழ்க்கையே கடுப்பா இருக்கு. இங்க பக்கத்து வீட்டில் இருக்கிறவங்களோட மாமியார் எவ்ளோ அன்பா அவங்க மருமகளுக்கு உதவுறாங்க தெரியுமா… இங்க என்னனா பச்சபுள்ள வச்சிருக்கிற என்னை அம்போன்னு விட்டுட்டு போய்டாங்க…” என்று உரத்த ஓசையுடன் சீற,
அவனும் குரலில் கடுமையை கூட்டி, “மங்கை நீ அதிகமா பேசுற, அக்காக்கு அம்மைன்னு அப்போதிலிந்து சொல்றேன், நீ பிடிச்ச பிடிதான் சரினு நிக்கிற?”
“ஏன் அவங்களை பார்த்துக்க அவங்க மாமியார் இல்லையா? அம்மா தான் வேணுமா அவங்களுக்கு?” எரிச்சலில் வார்த்தைகள் தடித்தது.
[the_ad id=”6605″]“உன்னால உன் பையனை பார்த்துக்க முடியலன்னு எல்லோரையும் வம்புக்கு இழுக்காத மங்கை.” குரலில் மிரட்டல் இருந்ததோ?
உண்மை சுட, க்ரிஷும் அழுக, இது தான் சாக்கென்று நகர்ந்து க்ரிஷை தூக்கச் சென்று விட்டாள் மங்கை. விவேக் இதிலிருந்து எப்படி வெளிவருவது என்று புரியாமல் சோபாவில் அமர்ந்து தலை கவிழ்ந்து அமர்ந்துவிட்டான்.
உள்ளே போனவள் க்ரிஷை தூக்கிவந்து, “நேரமாகுது சீக்கிரம் கிளம்புங்க.” என்றுவிட்டு மறைந்து விட்டாள்.
…
நேரம் யாருக்கும் காத்திராமல் நகர, ஸ்வேதாவின் இல்லத்திலோ மயான அமைதி.
அனைவரும் ஒரே இடத்தில் தான் அமர்ந்து காலை சிற்றுண்டியை சுவைத்துக் கொண்டிருந்தனர் இருப்பினும் வார்த்தைகளுக்கு பஞ்சம்.
குமரன் நொடிக்கொருமுறை ஸ்வேதாவை பார்க்க அவள் தன் முன்னே இருக்கும் உணவு நிறைந்த தட்டிலேயே கவனத்தை பதித்திருந்தாள். அவ்வீட்டின் பெரியவரோ சிறியவர்கள் இருவருக்கும் ஏதோ பிணக்கு என்று புரிந்து கொண்டு தன் மகனை மேலும் வருத்த விரும்பாமல் உணவை துரிதமாக முடித்துக் கொண்டு வாயிலிருக்கு சென்று விட்டார். அவர் கண்ணை விட்டு மறைந்த நொடி,
“சாரி ஸ்வேதா… நேற்று நான் கை நீட்டியிருக்க கூடாது.” என்று குமரன் பவ்யமாய் மன்னிப்பு வேண்ட உணவை பாதியிலேயே நிறுத்தி எழுந்துவிட்டாள் ஸ்வேதா.
மனதில் படிந்த ரணம் ஆறாமல் சுவடை பதித்திருக்க, மாமியாரின் வசவுகளும், நச்சரிப்பும் எரிச்சலாய் உருவெடுத்து அவள் அகத்தில் மண்டிக்கிடக்க தான் உண்டு தன் வேலை உண்டு என்று வீட்டில் இருக்கும் மற்ற இருவரை கவனியாது தன் கடை திறக்க கிளம்பினாள் ஸ்வேதா.
ஓரிரு முறை மன்னிப்பை யாசித்த குமரன் அவள் கண்டுகொள்ளவில்லை எனவும் போடி என்றுவிட்டு தன் அலுவலுக்கு தயாராக சென்றுவிட்டான்.
அவனை ஒரு வெட்டும் பார்வை பார்த்தவள் வேறெதுவும் சொல்லாது தன் இரு சக்கர வாகனத்தின் சாவியை எடுத்துக்கொண்டு வெளியேறினாள்.
மனதில் ஒரு வெறுமை குடிகொண்டிருக்க, தனக்கு தேவையானவற்றை எடுத்துக்கொண்டோமா என்று கூட சரிபார்க்காமல் குமரனை தவிர்க்கவென விடுவிடுவென ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து வீட்டின் கேட்டை தாண்ட, அவளின் பெயரை கூவிக்கொண்டே வீட்டிலிருந்து வெளிவந்தார் அவள் மாமியார்.
அவர் தன்னை கூப்பிடுவதைக் கூட உணராமல் ஸ்வேதா வண்டியின் வேகத்தை அதிகரிக்க முயல,
“உங்களை தான் கூப்பிட்டுகிட்டே வராங்க பாருங்க,” என்ற குரல் அடுத்த வீட்டை கடக்க முயலும் போது அந்த வீட்டு வாயிலிருந்து ஒலித்தது.
யோசனையுடனே வண்டியை நிறுத்தியவள் திரும்பி பார்க்க அவள் மாமியார் தான் ஹெல்மெட்டை எடுத்துக் கொண்டு வந்தார்.
“இதை மறந்துட்ட…” என்று அதை அவளிடம் கொடுத்துவிட்டு ஸ்வேதாவிடம் தன் அறைகூவளை தெரிவித்தவளிடம் நன்றி தெரிவிக்கும் நோக்கில் திரும்ப அங்கு ஸ்வேதா போலவே இளம்தாய் இரு சக்கர வாகனத்தில் தன் குட்டியை முன்னால் சேப்டி பெல்ட் உதவியுடன் தன்னோடு தாங்கி இருந்தாள். அந்த குழந்தையை பார்த்ததும் அகமெங்கும் மகிழ்ச்சியே ஸ்வேதாவின் மாமியாருக்கு. ஏன் ஸ்வேதாவே அவனின் கொழு கொழு உருவத்தில் தன்னை துளைத்திருந்தாள்.
“அப்படியே குட்டி கிருஷ்ணன் போலவே இருக்கான்மா உன் பையன்.” தன்னையும் மீறி சொல்லியிருந்தார் ஸ்வேதாவின் மாமியார்.
“பெயர் கூட க்ரிஷ் தான்.” என்றது மங்கையே.
“ஏன்மா பையனை இப்படி வச்சு கூட்டிட்டு போற? அசவுகரியமா இருக்காதா?”
[the_ad id=”6605″]“க்ரீச் என் அலுவலகத்திலிருந்து பக்கம் அதான் நானே கூட்டிட்டு போறேன் ஆன்ட்டி.” என்று மங்கை கூறியதும் க்ரீச் பற்றிய புரிதலின்றி நெற்றி சுருங்க அவளையே நோக்க,
“அத்தை… அவங்களுக்கு நேரம் ஆகும். நீங்க வீட்டுக்கு போங்க.” என்று ஸ்வேதா குறுக்கிட்டு அவரின் உரையாடலை கத்தரிக்க முற்பட, மங்கை அவரின் சந்தேகத்தை தீர்த்துவைத்தாள்.
“அச்சோ… பாவமே… குழந்தையை பார்த்துக்கொண்டு குடும்பத்தை வழிநடத்த துணை தேவைப்படுபவருக்கு மாமியார் உடன் இல்லை ஆனால் எல்லாம் இருந்தும் குழந்தை தேவைப்படுபவருக்கு குழந்தை இல்லை.” என்று பொதுவெளியை கவனியாமல் தன் ஆதங்கத்தை கொட்ட ஸ்வேதாவிற்கு அவமானமாய் போய்விட்டது.
ஸ்வேதாவின் அகம் புரிந்த மங்கை நாசூக்காய் அங்கிருந்து கிளம்ப முற்பட ஸ்வேதா மெலிதாய் புன்னகைத்தாள். வார்த்தைகள் பகிரப்படாமலே புரிந்துணர்வு ஒன்று உருவானது. அந்த உணர்வு பலப்படும் விதமாய் க்ரிஷ் ஸ்வேதா வீட்டிற்கு அடிக்கடி செல்ல ஆரம்பித்தான். சில நேரம் ஸ்வேதா மாமியார் வெளியே தென்படும் போது அவரிடம் க்ரிஷை விட்டுவிட்டு வீட்டு வேலை செய்வாள் மங்கை. அந்த வகையில் ஸ்வேதாவும் மங்கையும் நெருங்கிய தோழிகளாக மாறினார். ஸ்வேதா அமைதிப் பேர்வழி என்பதால் அளவோடு தான் பேசுவாள். ஆனால் மங்கை அப்படியில்லை. அவள் புலம்பல்களின் உச்சம் சில நேரம் ஸ்வேதாவையே வாய் திறந்து பேச வைத்து விடும். அப்படிப்பட்ட ஒரு நாளாய் அமைந்தது அந்த ஞாயிறு.
வார கடைசி ஒருவித உற்சாகத்தையும், அலுப்பையும் சேர்த்தே அழைத்து வரும். வேலைக்கு செல்லுபவர்களுக்கு அந்த நாள் அலுவலகத்திற்கு மட்டுமேயான விடுப்பு ஆனால் வீட்டு வேலைகளை கவனிக்க அந்த ஒரு நாள் மட்டுமே வேலை நாள். வரப்போகிற வாரத்திற்கு தேவையானவற்றை செய்வதோடு சென்ற வாரம் செய்யாமல் விட்ட வேலையையும் செய்ய வேண்டும். இதில் ஆண் என்ன பெண் என்ன? இருவருக்குமே அன்று செய்ய வேண்டிய வேலை ஒவ்வொரு விதமாய் நிறைய இருக்கும் அதோடு ஓய்வும் எடுத்தாக வேண்டும்.
நிலை இப்படியிருக்க மாலை ஓய்வெடுக்க வசதியாக காலையிலேயே வீட்டை ஒட்டடை அடித்து சுத்தப்படுத்தும் வேலையை விவேக் செய்து கொண்டிருக்க, க்ரிஷ்க்கு தூசி சேராது என்று அவனை தூக்கிக்கொண்டு அந்த காலனிக்கென்றே கட்டிவைத்திருக்கும் பிளே ஏரியாவுக்கு வந்தாள் மங்கை. வரும் போதே அவனுக்கு தேவையான தண்ணீர், பால், கஞ்சி என்று அனைத்தையும் சிறிய கூடையில் எடுத்து வந்திருந்தாள். சிறார்கள் விளையாட சறுக்கு மரம், சீ சா என்று அனைத்தும் வரிசை கட்டி இருக்க மங்கை அதை சுற்றி இருந்த நடைபாதையில் மர நிழலில் அமர்ந்து கொண்டாள். க்ரிஷ் தன் போக்கை வாய் முழுதும் புன்னகையுடன் புதிதாக இருந்த இடத்தை ஆராய்ந்தான். ஞாயிறு காலை நேரம் என்பதால் அவ்விடம் யாருமின்றி அமைதியாகவே இருந்தது. அதனால் தான் அவள் அங்கு வந்ததே. மாலை நேரம் தான் குழந்தைகள் விளையாடுவார்கள். மற்றபடி ஓரிரு வயதானவர்கள் தங்கள் காலை நடையை தொடர மங்கை அமைதியாக சுற்றுசுவரில் சாய்ந்து கொண்டாள்.
“மங்கை இந்த நேரத்துல இங்க என்ன பண்ற? க்ரிஷ் ரூமை இங்க மாத்திட்டியா என்ன?” அவளுக்கு துணையாக வந்துவிட்டேன் என்று உணர்த்தியது அந்தக் குரல்.
“விவேக் வீட்டை சுத்தம் பண்ணிட்டு இருக்காரு. க்ரிஷ்க்கு தூசினா ஒத்துக்காது. அதனால் இங்க கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு போகலாம்னு வந்தேன் ஸ்வேதா அக்கா.”
“குடுத்து வச்சவ நீ… விவேக்கே பாதி வேலை செய்திடுறார்.” ஸ்வேதாவின் குரலில் ஏக்கத்திற்கான சாயல் இருந்ததோ?
“போங்க நீங்க வேற… வேலைக்கும் போயிக்கிட்டு, சேட்டை பண்ற க்ரிஷையும் பார்த்துக்கிட்டு, இப்போ இங்க புது வீட்டுக்கு வந்ததற்கு பிறகு வீட்டை சுத்தம் செய்வதே பெரிய வேலையாய் இருக்கு… யாராவது துணைக்கு இருந்தால் ஒத்தாசையா இருக்கும், நானும் என் மாமியாரை கூப்பிட்டுட்டே இருக்கேன். எங்க… அவங்க வர மாதிரி தெரியல அதான் விவேக் செய்யுறாரு… வீட்டு வேலை செய்ய இன்னும் ஆள் கிடைக்கல, கிடைச்சா கொஞ்சம் வேலையும் குறையும்.” என்று பெருமூச்சொன்றை இழுத்து விட்டாள்.
“ப்பா… நானே பறந்துடுவேன் போலிருக்கு… என்ன இவ்ளோ சலிச்சிகிற?”
“பின்ன என்னக்கா… அவங்களாம் யார் துணையும் இல்லாமல் அவங்க பசங்களை சுலபமா வளர்த்துட்டாங்கலாம் அதே மாதிரி என்னிடமும் எதிர்பார்க்குராங்க… விவேக் கூட வாய் மொழியா சொல்லவில்லை ஒழிய அவருக்கும் அதே எண்ணம் தான். சில நேரம் ஏன் என்னால செய்ய முடியல எனக்கே ஒருமாதிரி ஆகிடுது… எவ்வளவு சுறுசுறுப்பாக இருந்தாலும் என்னால் சில வேலைகளை சீக்கிரம் செய்ய முடியறது இல்லைகா… நான் ஆரம்பத்தில் இருந்தே கொஞ்சம் மெதுவாகத் தான் எல்லா வேலையும் செய்வேன். அதனாலோ என்னவோ குறிப்பிட்ட நேரத்திற்குள்ள செய்ய முடியலனா எரிச்சல் தான் வருது.”
“ரிலாக்ஸ் மங்கை… உங்க வீட்டில் இருந்து யாரும் துணைக்கு வர முடியாதா?”
“ஐந்து மாதம் முடிந்து அம்மா வீட்டிலிருந்து இங்கு வந்ததுமே அம்மா அண்ணன் கூட யூ.எஸ்ல போயிட்டாங்க… அண்ணிக்கு இப்போ ஒன்பதாவது மாதம் அதான் மருமகளுக்கு துணைக்கு அங்க போயிட்டாங்க. என் நாத்தனாருக்கும் உடல்நிலை சரியில்லாததால் என் மாமியாரும் நான் வந்த ஒரே வாரத்தில் மும்பைக்கு பறந்துட்டாங்க… ஆனால் உங்களுக்கு எல்லாம் பிரச்சனை இல்லைக்கா. உங்க வீட்டுக்காரர் ஒரே பையன், உங்க மாமியாரும் குழந்தைகள் மேல பாசமா இருக்காங்க… உங்களையும் நல்லா பார்த்துக்குவாங்க… நீங்க கவலைப்படவே தேவையில்லை.” தன் நிலையை தாழ்த்தி அவள் நிலையை உயர்வாய் எண்ணியதில் விளைந்த மங்கையின் வார்த்தைகள் ஸ்வேதாவின் புருவத்தை உயரச் செய்தன.
“எதை வைத்து என் மாமியார் என்னை நல்லா பார்த்துக்குறாங்கனு சொல்ற?”
“உங்க மேல உள்ள அக்கறையில் தானே ஹெல்மெட் எடுத்துட்டு பின்னாடியே ஓடி வந்தாங்க… என்ன குழந்தை விஷயத்தில் ஏங்கி போயிருக்காங்க… மற்றபடி உங்களுக்கு என்ன குறை அக்கா? பதற்றமற்ற, யாருக்கும் அடிபணியாத, உங்கள் விருப்பத்திற்கு ஏற்றபடியான நிறைவான வேலை, அளவான குடும்பம், அக்கறையான மாமியார், உங்க கணவரும் அமைதியாகத் தான் தெரிகிறார்… வேறென்ன வேண்டும் மகிழ்ச்சியான வாழ்விற்கு?
இதே என்னை எடுத்துக் கொள்ளுங்கள், நானும் விவேக்கும் ஸ்கூல் படித்த போதிலிருந்தே காதலித்து கரம் பிடித்தவர்கள். ஆனால் என்று கரம் பிடித்தோமோ அன்றிலிருந்து விழுந்தது எங்கள் காதலில் விரிசல், விலகல். இப்போதெல்லாம் காதல் இருக்கானு கூட தெரியல…” என்று மங்கை வருத்தத்துடன் சலிப்பாய் கூற ஸ்வேதாவின் இதழ்கள் ஏளனமாய் வளைந்தன.
“நான் ஒன்னு சொல்லவா மங்கை… மாமியார் தொந்தரவு இல்லாமல், க்ரிஷை பார்த்துக் கொள்வதில் இருக்கும் பிணக்குகளை தாண்டி விவேக் உனக்கு அனுசரனையா, தகவமைத்து நடந்துகொள்வதை பார்த்து நான் கூட உன்னைப் போல ஒரு வாழ்க்கை வாழனும்னு நினைச்சிருக்கேன் நீ என்னவென்றால் என்னுடையதை பெஸ்ட் என்பது போல் பேசுகிறாய்…
விழி எதிரில் விரிவதெல்லாம் மெய்ம்மை ஆகாது மங்கை.
மேம்போக்கா என் வாழ்க்கை முறையை பார்த்துட்டு நீ உனக்கு கிட்டியிருப்பதை தாழ்த்தி பேசுவது பொருத்தமா இல்லை மங்கை. என்னோட வேலைகளிலும் பல சவால்களை சந்திச்சு தான் இந்த நிலைமைக்கு வந்திருக்கேன்.” என்று ஸ்வேதா மென்குரலில் தன்மையாய் கூற,
“சும்மா என்னை சமாதானம் செய்ய சொல்லாதீங்க அக்கா… நீங்க ஒத்துக்கிட்டாலும் இல்லைனாலும் உங்க வாழ்க்கை சிறப்பு தான்…” மங்கை அழுத்தமாய் பேச ஸ்வேதாவால் அமைதியாக இருக்க முடியவில்லை.