“நீ சொன்னியே என் மாமியாருக்கு என் மேலே அக்கறைனு… அது எங்க நான் ஹெல்மெட் போடாமல் சென்று டிராபிக் போலீசில் மாட்டி வெட்டியா சில ஆயிரங்களை பிணையா கட்டிடுவேனோனு வந்த அச்சம் அப்படினு வேணும்னா சொல்லலாம்… அதற்காக அவங்களுக்கு என் மேல பாசம் இல்லைனு இல்லை… அவங்களுக்குள்ள ஒரு வட்டம் போட்டுக்கிட்டு அதற்குள் மட்டுமே அவரின் அக்கறையை வெளிப்படுத்துவாங்க… ஆனால் அதைவிட அதிகமா வசை பேசுவாங்க… அவங்களுக்கே தெரியும் யார் மேல பிசகுனு ஆனாலும் தன் மாமியார் கெத்தை விடமுடியாமல் அப்பப்போ வளவளத்துட்டு இருப்பாங்க… சிலர் அப்படித்தான் மங்கை நிதர்சனம் அவங்களுக்கு புரிஞ்சாலும் தன் நிலைவிட்டு கீழே வரமாட்டாங்க… தான் நினைச்சது தான் சரினு இருப்பாங்க…” என்று எதார்த்தமாய் பேச,
மங்கைக்கு சுருக்கென்று குத்தியது. அவளும் அதைத் தானே செய்து கொண்டிருக்கிறாள்.
“வேடிக்கையை பாரேன்… இருப்பவர்களுக்கு இல்லாமல் இருந்திருக்கலாமோ என்ற எண்ணம், இல்லாதவர்களுக்கு இது நம் வாழ்வில் இருந்திருக்கலாமோ என்ற ஏக்கம். இப்படி ஏங்கி ஏங்கி கரைந்தே போகிறோம்.” என்று உணர்ந்து கூற மங்கை சிந்தையில் மூழ்கிப் போனாள்.
ஸ்வேதா சொல்வதும் சரிதானே… மணமாகிய புதிதில் மாமியாரின் இருப்பு கனமாய் தெரிய, குடும்பம் விரிவானதும் அவர் அருகில் இல்லாதபோது அவரின் இருப்பை, உதவியை தேடுகிறது மனது. இத்தனைக்கும் குத்தல் பேச்சுக்கள் எல்லாம் அவளுக்கும் மாமியாருக்கும் இடையில் இருந்ததே இல்லை. அவ்வப்போது சிறு சிறு முணுமுணுப்புகள் தான்…
கண நேர எரிச்சல், தவிப்பு, இயலாமை என்று எல்லாம் சேர்ந்துகொண்டு தன்னைத் தானே தாழ்த்தி அதை விவேக்கிடமும் சரியாக வெளிப்படுத்தாமல் தன் மனநிம்மதியை தானே குலைத்துக் கொண்டது தெளிவாக விளங்கியது இப்போது. உணர்ந்தபின்னோ பாரம் நீங்கியது போன்றதொரு உணர்வு. தேவையற்றது வெளியேறி தேவையான தெளிவான எண்ணங்கள் குடிபுகுந்தது.
“நீங்க தீர்க்கதரிசி அக்கா… உங்ககிட்ட நிதானம், நல்ல புரிதல் எல்லாமே இருக்கு அக்கா… உங்க வாழ்க்கை சிறப்பா இருக்கும்…”
வறண்ட மென்னைகையே மொழிக்கு முன் வந்து நின்றது ஸ்வேதாவின் அதரங்களில், “சில நேரங்களில் நிதானம் கூட துரோகம் செய்திடும் மங்கை.” அனுபவத்தால் வந்த வலிமிக்க வார்த்தைகளை புரிந்துகொள்ளும் அளவுக்கு தெளிவானவள் அல்லவே மங்கை.
[the_ad id=”6605″]“புரியல அக்கா… ஆனால் உங்ககிட்ட பேசினதிலிருந்து ஏதோ தெளிவு வந்திருக்கு எனக்குள். அதை வைத்து சொல்றேன், இவ்வளவு தெளிவா, தீர்க்கமான சிந்திக்கிற நீங்க உங்க வாழ்க்கையோட எந்தவொரு பிசக்கையும் எடுத்தோம், கவிழ்த்தோம்னு இல்லாமல் எளிமையா கையாண்டு தீர்வு கண்டுபிடிச்சிடுவீங்க அக்கா…”
“ஹாஹா… நீ இன்னமும் ஒன்றை புரிஞ்சிக்கல மங்கை. என்வரை என் கட்டுக்குள் இருக்கும் பிரச்சனைகளை தான் என்னால் சுலபமா சரிசெய்ய முடியும் மங்கை. என்று வேறொருவர், அதுவும் நாம் அன்பு செலுத்தும் ஒருவர் அந்த சிக்கலில் இணைகிறாரா அதன் பிறகு அந்த அன்பு நம் முடிவை செயல்படுத்தவிடாமல் பல நேரங்களில் நம்மை கட்டிப்போட்டுவிடும்.”
“ஏதோ ஒரு நெருடலை மனசுல வச்சிக்கிட்டு பேசுறது போலவே இருக்குகா உங்க வார்த்தைகள்… உங்களுக்கு தெரியாதது இல்லை, உங்க வாழ்க்கை உங்கள் கையில் தான் பார்த்துக்கோங்க… எவ்வளவோ பெண்கள் வேறு வழியின்றி கணவனின் கட்டுப்பாட்டில் இருந்து வெளிவர முடியாமல் சிக்கி தவித்து வாழ்க்கையே வெறுத்து சமுதாயத்திற்கு பயந்து வாழறாங்க. நம்ம வாழ்க்கையெல்லாம் அவ்வளவு மோசம் இல்லைக்கா…” என்க, ஸ்வேதா ஆமோதிப்பாய் தலை அசைக்க, மங்கை மடியில் இருந்த க்ரிஷ் உறக்கத்தில் சிணுங்கினான்.
“பேச்சு சுவாரசியத்தில் இவனை மறந்துட்டோம்…” என்று க்ரிஷை தட்டிக்கொடுத்துக் கொண்டே அசட்டையாய் மொழிந்தாள் மங்கை. க்ரிஷ் சிணுங்களை விடுவேனா என்றிருக்க ஸ்வேதா அவனை தூக்கிக் கொண்டு வேடிக்கை காண்பிக்க நகர, அவள் கால்களை கட்டிக் கொண்டு அவளை நகரவிடவில்லை ஒரு ஜோடி பிஞ்சு கரங்கள்.
மங்கை அதற்குள் அசைவற்று மரத்துப் போயிருந்த கால்களை நீட்டி, மடக்கி எழுந்து ஸ்வேதாவின் கால்களை கட்டிக்கொண்டு ஸ்வேதா கையில் இருக்கும் க்ரிஷை ஆர்வமாய் நிமிர்ந்து பார்க்கும் அகிலை அலேக்காக தூக்கினாள்.
“என்ன சார் இந்த பக்கம் வந்திருக்காரு? சீக்கிரமே எழுந்துட்டீங்களா?” கொஞ்சிப் பேசியவள் அவன் குண்டு கன்னத்தில் ஒரு முத்தத்தை வைக்க,
“எல்லோருக்கும் லீவுனு இன்னைக்கு ஒருநாள் தான் காலை நேரத்தில் வீட்டில் தூங்குவாங்க ஆனால் இந்த வாண்டு மட்டும் ஞாயிற்றுக்கிழமை வந்தால் சீக்கிரம் எழுந்துடுவான்.” என்று அகிலின் தாத்தா பதில் கூறி அவர்களை நோக்கி வந்து, “அகில் வா வீட்டுக்கு போகலாம்… ஜூஸ் குடிக்க நேரமாகிடிச்சு…” என்று அழைக்க அவனோ ஸ்வேதா புறம் தாவி க்ரிஷை தொட முயற்சித்துக் கொண்டிருந்தான்.
“அகில்…” குரலை சற்று உயர்த்தி அவர் அதட்ட,
“க்ரிஷோட விளையாட ஆசைப்படுறான் அங்கிள்… விளையாடட்டும் நானே இன்னும் கொஞ்ச நேரத்தில் கொண்டுவந்து விடுறேன்…” என்று மங்கை அனுமதி வேண்ட அவளை சிரமப்படுத்த விருப்பமில்லாமல் அகிலை தூக்க முயற்சிக்க அவன் மங்கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.
“எனக்கு சிரமம் இல்லை அங்கிள். நாங்க ரெண்டு பேர் இருக்கோம் பார்த்துக்குறோம்,”
“நான் சக்தியை வரச்சொல்றேன். அகில் சேட்டை பண்ணாம இருக்கனும்,” என்க புரிந்துகொண்டது போல் தலையை ஆடியது அந்த சில்வண்டு.
அவர் சென்ற ஐந்தாவது நிமிடத்திலேயே வேகநடையிட்டு வந்த சக்தி, “உங்களை எதுவும் தொல்லை செய்யலையே?” என்று சற்று பதட்டமாய் கேட்டு அகிலை வாங்கிக் கொண்டாள்.
மங்கை மறுப்பாய் தலையசைத்து, “எங்க க்ரிஷ் மாதிரி இல்லை உங்க பையன்… ரொம்ப சமத்து.” என்று பதில் கூறி ஸ்வேதாவின் முறைப்பை வாங்கிக் கொண்டாள். அந்த முறைப்பு தந்த செய்தியில் அசட்டையாய் சிரித்து வைத்தாள் மங்கை.
அதற்குள் ஸ்வேதாவை கவனித்த சக்தி முறுவல் ஒன்றை உதிர்க்க, ஸ்வேதா, “ரெஸ்ட்டா இன்னைக்கு?”
“அதெல்லாம் ஒன்னும் இல்லக்கா… எங்க வீட்ல ஓய்வெல்லாம் எதிர்பார்க்க முடியுமா… இன்னைக்கு கூட அகில் அப்பாவோட மாமா குடும்பத்தோட வரார்…” ஓரிரு முறையே ஸ்வேதாவுடன் பேசி பழகினும் தயக்கமின்றி இயல்பாய் பேசினாள் சக்தி.
“நீ எப்படி தான் இதெல்லாம் சமாளிக்கிறேன்னு தெரில சக்தி. யூ ஆர் க்ரேட்.” சக்தியின் நிலைமையை நினைக்கும் போதே ஆயாசமாய் வந்தது மங்கைக்கு.
அங்கிருக்கும் மொத்த வீடுகளும் அரவமற்று இருக்க, சக்தி வீட்டில் மட்டும் எந்நேரமும் அரவம் எழும்ப அங்கிருந்தவர்களுக்கு இவர்களின் பெரிய குடும்பம் பற்றி தெரிந்திருந்தது.
“எனக்கு இதெல்லாம் பழக்கம் தான்…” என்று இழுத்தாள் சக்தி.
“அது என்னவோ நிதர்சனம் தான். என்னால இரெண்டரை டிக்கெட்டையே சமாளிக்க முடியல…” என்றது மங்கையே.
“நீங்க வேலைக்கும் போய்கிட்டு இங்கேயும் எல்லா வேலையும் பார்க்குறீங்கல்ல அதனால் உங்களுக்கு என் வேலை எல்லாம் பெருசா தெரியுது. நான் வீட்லயே தானே இருக்கேன்…”
ஓரளவு மனங்களை பற்றிய புரிதல் கொண்ட ஸ்வேதா சக்தியின் மொழியில் தட்டுப்பட்ட பேதத்தை கண்டுகொண்டு புருவம் முடிச்சிட சிந்தனையுடன், “ஏன் அப்படி சொல்ற சக்தி? மங்கை இரண்டு இடத்தில் செய்கிற வேலையை விட நீ அதிகமாகத் தான் செய்கிறாய்.”
பதிலுக்கு ஓரிரு நிமிடம் அமைதியை கடைபிடித்தவள் பின் மென்குரலில், “இரண்டும் ஒன்றாகாதுகா…”
“எல்லாம் ஒன்னு தான் சக்தி.” அழுத்திச் சொன்னாள் ஸ்வேதா.
யாரையும் நிமிர்ந்து பாராமல் தான் கையோடு எடுத்துவந்திருந்த பாட்டிலில் அடைக்கப்பட்டிருந்த பழச்சாறை அகிலின் வாயில் சொருகிவிட்டு, “இல்லை உங்களுக்கு புரியலகா…”
இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த மங்கை முன்வந்து, “அக்கா சரியா தான் சொல்றாங்க சக்தி. விருப்பத்தோடு நான் வேலைக்கு சென்றாலும் அதே ஒன்பது டூ ஐந்து மணி வேலையில் சில சமயம் எனக்கு அலுப்பு தட்டிடுது… தொய்வு வந்துடுது… ஆனால் நீ என்ன செய்தாலும் விரும்பி செய்ற. நாங்க பணத்தை சம்பாதித்து சேமிக்கிற நேரத்தில் நீ உறவை சம்பாதித்து சேமிக்கிற… ரெண்டுமே வாழ்க்கைக்கு முக்கியமானது சக்தி.”
சக்தி அமைதி காக்க மூவருமே ஓரிடத்தில் அமர்ந்து திக்கின்றி வெற்றிடத்தை வெறித்தனர். மாறாக அவர்களின் உள்ளம் எல்லா திக்கிலும் சுழன்று அடித்தது.
“என்னை மாதிரி எப்போவாவது அப்பா, அம்மாவுடனே செல்வியாகவே இருந்திருக்கலாமோனு உங்களுக்கு தோன்றிருக்கா?” ஸ்வேதா எழுப்பிய கேள்வியில் மற்ற இருவருமே வியப்பாய் அவளை ஏறிட்டனர்.
மங்கையை பொறுத்தவரை ஸ்வேதாவிடம் தனக்கேற்றபடி தன் வாழ்க்கையை செதுக்கிக் கொள்ளும் பக்குவம் உள்ளது.
யார் துணையுமின்றி துணிச்சலுடன் வாழ்க்கையை எதிர்நீச்சலிட்டு சாதிக்க தேவையான அனைத்தும் ஸ்வேதாவிடம் இருக்கிறது என்பதே சக்தியின் விழிமொழி கண்டுகொண்ட செய்தி.
“என் தலையில் என்ன கொம்பா முளைச்சிருக்கு ரெண்டு பேரும் இப்படி பார்க்குறீங்க?” ஸ்வேதா கேட்ட நொடி க்ரிஷ் தன் இருப்பை தெரியப்படுத்த அகிலும் அவனுடன் சேர்ந்து கொண்டான்.
தீவிரமாக பேசிக் கொண்டிருக்கும் போது இவ்விருவரும் எழுப்பிய ஓசையில் சற்று சுணக்கம் ஏற்பட்டாலும் மங்கையும், சக்தியும் தத்தம் மகன்களை ஒருவாறு சரிசெய்ய, க்ரிஷ் உறக்கத்திற்கும், அவனது விளையாட்டு பொம்மைகள் அகிலின் கவனத்தையும் ஈர்த்தன.
“எப்படியோ ஒருவழியா அமைதியாகிட்டாங்க? சரி சொல்லுங்க என்னைக்காவது உங்க திருமண வாழ்க்கையில் சுணக்கம் வந்திருக்கா?” ஸ்வேதாவே மீண்டும் துவங்கினாள்.
ஆம் என்று இருவருமே தலையசைக்க, ஸ்வேதா, “என் வாழ்க்கையிலும் வந்திருக்கு. அதன் பிறகு தான் நிறைய யோசித்தேன். என் பார்லருக்கு வரும் ஒரு உளவியல் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு தெளிவானபின் பல விஷயங்கள் புரிந்தது. அது என்னை இன்னும் பக்குவப்படுத்தியது.” என்று கூறிய ஸ்வேதாவின் நினைவு அடுக்கிலிருந்து குமரனிடன் அடிவாங்கிய பின்னான அவளின் உளவுப்பூர்வமான தேடலும் அதன் விடையும் கண்முன் வந்து பின் வார்த்தைகளாய் வெளிவந்தது.
[the_ad id=”6605″]“சுணக்கம் வருவது வழக்கமான ஒன்று தான். ஆனால் அந்த சலிப்பிலும் தன் இணைக்கான அன்பு குறையாமல் இருந்தால் பிரச்சனை இல்லைனு சொன்னாங்க… அந்த அன்பே நம் வாழ்க்கையை சீர்படுத்திடும்னு சொன்னாங்க…”
ஸ்வேதா விட்ட இடைவெளியில் சக்தி புகுந்து, “என் மாமியார் அடிக்கடி சொல்லுவாங்க…
அன்பு பலமான ஆயுதம், பிரம்மாஸ்திரம் போல.
அதை கொண்டு யாரையும் வீழ்த்தலாம். வேண்டியதை சாதித்துக் கொள்ளலாம்.
ஆனால் அந்த அன்பை யார் மீது ஏவுகிறோம் என்பதில் தான் இருக்கிறது சூட்சுமம்.
நம் அன்பை சுமக்க தகுதியானவர் மீது செலுத்தணும்… மதிக்காதவர் மீது செலுத்திவிட்டு அவர்கள் நம் மீது அதே அன்பை செலுத்தவில்லை என்று வருந்துவது அடிமுட்டாள்தனம்.”
“சரியாத்தான் சொல்லியிருக்காங்க. பெரிய குடும்பத்தை கட்டுக்கோப்பாக வைத்து காப்பாத்துறது சுலபமான காரியம் இல்லையே…” சக்தி கூறிய வார்த்தைகளின் ஆழத்தை உணர்ந்து கூறினாள் ஸ்வேதா.
“அதுவும் சரிதான். அவர்களுக்கு முந்திய தலைமுறையின் கட்டுப்பாடுகளை எப்படி மதித்து மனம் கோணாமல் நடந்து கொள்கிறார்களோ அதே போல நம்ம தலைமுறையையும் புரிஞ்சிகிட்டு எங்களுக்கு எல்லா சுதந்திரமும் கொடுத்து இருக்காங்க.” சக்தி அறியாமலேயே வார்த்தைகள் வர அவளுக்கே அது ஒரு தெளிவை ஏற்படுத்தியது.
“இதே போன்றதொரு எடுத்துக்காட்டு தான் அந்த உளவியல் நிபுணரும் சொன்னாங்க. இப்போ இருக்கிற ஆகாயத்திற்கு இணையான இணைய உலகில் கொட்டிக் கிடக்கின்றவற்றில் மூழ்கி எது உண்மை, எது பொய், எது நமக்கானது என்று பிரித்து கையாள முடியாமல் அது தரும் ஒருவித போதையில் உண்மையான உறவை கண்டுகொள்ளாமல் நமக்குள்ளே உணர்ச்சிகளை, சந்தேகங்களை பூட்டி வாழ்க்கையை சிக்கலாக்கிக் கொள்கிறோம்.
அடுத்தவர்கள் வெளிப்படுத்தும் மகிழ்ச்சியை அளவுகோலாக வைத்து நம்முடைய மகிழ்ச்சியை அளவிட்டு நம்மை நாமே புண்படுத்தி நம்முடைய உண்மையான மகிழ்ச்சி எதில் இருக்கிறது என்றுகூட உணராமல் ஒருவித மாய உலகில் சுற்றிக் கொண்டிருக்கிறோம்.” என்று ஸ்வேதா கூற சக்திக்கு இருந்த சஞ்சலங்கள் குறைந்தது. அதை வெளிப்படுத்தவும் செய்தாள்.
“நிதர்சனமான வார்த்தைகள் அக்கா. என் தோழிகள் எல்லாம் நீ சீக்கிரமே திருமணம் செய்துகிட்டு வாழ்க்கையை அனுபவிக்காமல் உன் குடும்பத்தாரின் கையை எதிர்பார்த்துட்டு பர்போஸ் இல்லாமல் வாழறனு சொல்லுவாங்க… ஏன் இப்போது கூட நீங்கள் வேலையை பற்றி சொல்லும் போது தாழ்வா தான் உணர்ந்திருக்கேன்… அதை நினைத்து வருந்திருக்கேன். ஏன் ஒருமுறை என் கணவரிடம் கூட இதை மனதில் வைத்து சண்டை போட்டிருக்கிறேன்.
ஆனால்… இப்போ உங்க வார்த்தைகளை கேட்டப் பிறகு யோசிச்சா, என்னோட மகிழ்ச்சி என் குடும்பம் தான். அவர்களோட அந்த அன்பு தான் என்னோட மூலதனம். மற்றவர்கள் போல நிலையான ஒரு வேலைக்கு சென்று பொருளாதார ரீதியா தனித்து இல்லாமல் என் கணவரை சார்ந்து இருந்தாலும் எனக்கென்று… எனக்கு பிடித்த உலகில்,
ஒரு அடையாளம் இருக்கிறது. பெரிதாக இல்லையென்றாலும் எனக்கென்று சிறு வருமானம் இருக்கிறது… எழுத்துலகில் புனைப்பெயரில் என் எழுத்துக்கள் தன் சுவடை பதித்திருக்கின்றன. என் வீட்டில் உள்ளவர்கள் தாண்டி அந்த அடையாளம் இந்த சக்தியோடதுனு யாருக்கும் தெரியாது. நான் சார்ந்திருக்கேன்னு எங்க வீட்டில் யாரும் என்னை உணரவைத்தது கிடையாது. எனக்கு எல்லா விஷயத்திலும் உறுதுணையா இருந்திருக்காங்க… எனக்கான மரியாதையை யாரும் குறைச்சதும் இல்லை. இதெல்லாம் வைத்து பார்க்கும் போது என் அளவில் நிறைவான, மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தான் வாழ்கிறேன். என்னால் மற்றவர்கள் போல் சிறிய குடும்பத்தில் வாழ முடியுமா என்று கூட சந்தேகம் தான்…”
“இப்போ தான் சரியா பேசுற சக்தி. நம்முடைய மகிழ்ச்சியை அடுத்தவர்கள் அங்கீகரிக்கணும்னு ஒன்னும் அவசியம் இல்லை. என்னோட வாழ்க்கை முறையை நீ பின்பற்றினா தான் நீ ஆனந்தமா இருக்கலாம் அப்படினு அர்த்தம் இல்லை… சக்தி இப்படி கூட்டுகுடும்பத்து கிளியாய் இருப்பது தான் அழகு. இன்னொன்னு சொல்லவா இந்த உலகில் பிறந்த அனைத்து உயிரினங்களும் ஏதோ ஒன்றை சார்ந்து இருப்பது போலத் தான் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. தேவைகள் தான் வேறு வேறாய் இருக்குமே ஒழிய நீ உன் கணவனை சார்ந்திருப்பது போலவே உன் கணவரும் உன்னை சார்ந்து தான் இருப்பார்…” என்று ஸ்வேதா கூற ஆமோதிப்பாய் புன்முறுவல் பூத்தாள் சக்தி.
“மகிழ்ச்சினா இதுதான் அப்படினு வரையறுக்க முடியாதில்லை… மனிதருக்கு மனிதர், சூழ்நிலைக்கு தக்கபடி என்று மாறுதுல்ல!…” என்று மங்கை முடிக்க, ஸ்வேதா லேசாக அவள் கன்னம் தட்டி எழுந்தாள், “உங்களோட டைம் ஸ்பென்ட் பண்ணதுல என்னோட சலனங்களும் கொஞ்சம் மட்டுப்பட்டிருக்கு. என்னோட தேவையும் புரிஞ்சிருச்சு… உங்களை மாதிரியே என்னோட மகிழ்ச்சியை நிலைநாட்டிட்டு வரேன்…” என்றவள் திரும்பி பாராமல் தன் இல்லம் நோக்கி விரைந்தாள்.
அவனிடம் குழந்தைக்காக சண்டையிட்டு ஒரு மாதம் ஓடியிருக்க, அதற்கு பிறகு அவனிடம் பேசவே இல்லை அவள். அவன் அடித்ததில் உண்டான கோபம் குறையவே சில நாட்கள் பிடிக்க, அதன் பிறகு தான் குமரனின் நடவடிக்கையில் ஏற்பட்டிருந்த மாற்றங்களை கவனித்தாள். குளித்து உடை மாற்ற மட்டுமே வீட்டிற்கு வருபவன் இப்போதெல்லாம் இரவு ஏழு மணிக்கு வீட்டிற்கு வந்து, மறுநாள் காலை இவள் பார்லர் செல்லும் வரை இருப்பான். முதலில் பேச முயற்சித்தவன் இவளின் உதாசீனத்தை கண்டு அமைதியாகி தன் இருப்பை உணர்த்திக் கொண்டே இருந்தான். இவளுக்கு சிறு சிறு உதவிகள் செய்தான். தன் அன்னை அவள் மனம் கோணும்படி பேசினால் இவள் சார்பாய் பேசி அவர் வாயடைத்தான்.
இருப்பினும் அந்த கண நேர பிசக்கு மிகப்பெரிய சலனத்தில் முடிந்திருக்க அவளை நெருங்க முயற்சித்த அவனின் முயற்சிகளுக்கு தடா போட்டிருந்தாள்.
[the_ad id=”6605″]இப்போதோ இந்த இரண்டு பெண்களுடன் பேசிய பிறகு அவளது வார்த்தைகள் அவளுக்கே உதவி புரிந்தன. தான் அன்பு செலுத்திய இடம் அத்தனை ஒன்றும் மோசமில்லை… அதை மீட்டெடுக்கும் வழிகள் உள்ளது என்பது புரிய அவள் நடை வேகமாகியது. அவளது எண்ணங்களை பொய்யாக்காமல் குமரன் வாசலிலேயே அவளுக்காக கதவை திறந்து வைத்து பக்கத்தில் நின்றிருந்தான்.
“உன்னை நீயே ஏன் வருத்திக்கிற? கிவ் மீ எ சான்ஸ் ஸ்வேதா…” என்று வேண்ட, அவன் கரங்களில் தன்னுடையதை கோர்த்து மனநிறைவுடன் தன் இல்லம் நோக்கி நடந்தாள் ஸ்வேதா.
தெளிந்த நீரோடையாக அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த மற்ற இருவரும் புரிதலாய் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்து தத்தம் வீடுகளுக்குச் சென்றனர் தத்தம் இல்லத்தை அழகாக்க…
வீட்டிற்குள் நுழைந்த மங்கை நேரே விவேக் எதிரில் சென்று நின்று, அவன் கையில் இருந்த வாக்கம் க்ளீனர் பைப்பை பிடுங்கி கீழே போட்டு அவனின் அலறலை பொருட்படுத்தாது தன் ஒரு கையால் அவனை அணைத்தாள். மறுகையிலோ க்ரிஷ் இருந்தான்.
“ஏய் க்ரிஷ் நசுங்குறான்டி… என்னாச்சு உனக்கு?” ஆனந்த கூச்சலிட்டான் விவேக்.
“அவனோட அம்மா அவன் அப்பா மேல எவ்வளவு பாசம் வச்சிருக்கானு அவனுக்கும் தெரியணும்ல…” என்றவள் வாகாய் அவன் நெஞ்சில் சாய்ந்து அவன் சட்டையை பிடிமானத்திற்கு கெட்டியாய் பிடித்துக் கொண்டாள்.
“அவனோட அப்பாவும் அவங்க அம்மாவை ரொம்ப… விரும்புறான்… அதனால இப்போ ரெண்டு பேரும் சமத்தா வாசலில் மர நிழலில் இருப்பீங்களாம் நான் சுத்தம் செய்ததும் உள்ளே வரலாம்…” என்க, அங்கு அன்பு மீகி அழகிய மாற்றம் ஏற்பட்டது.
காட்சிகள் மட்டுமே மாறியிருக்க அடுத்த வீட்டிலும் அதற்கு குறையாத அன்பு தன் ஆதிக்கத்தை செலுத்திக் கொண்டிருந்தது.
“ஞாயிற்றுக்கிழமை அதுவுமா என்னடா ஆச்சு என் பொண்டாட்டிக்கு… அன்பு மழை பொழியிருளாலே…” ஈஸ்வர் சிரிப்புக்கிடையில் சக்தியை இடைவெளியின்றி அணைக்க, சக்தி அவன் மீது நன்றாக ஏறி சுகமாய் அவன் நெஞ்சில் தலை சாய்த்து அவன் மேலே படுத்துக் கொண்டாள்.
“உங்க பொண்டாட்டி ரொம்ப சந்தோஷமா இருக்கா இன்னைக்கு…” சலனம் நீங்கி தெளிவாய் வந்து விழுந்தது அவளது வார்த்தைகள். வார்த்தைகளில் இருந்த தெளிவு அவள் முகத்திலும் தெரிய, மாசற்ற பெளர்ணமி நிலவாய் ஒளிருந்தாள் சக்தி…
மகிழ்ச்சியை தீட்டும் தூரிகை நம்மிடம் இருக்க அதை அடுத்தவரிடம் கொடுப்பானேன்?…
கணநேர சலனம் மற்றும் கவனச்சிதறல் விபத்து மட்டுமல்ல, மனநிம்மதியையும் குலைக்கும் வல்லமை படைக்கும்.
காலங்கள் மாறும்;
காட்சிகள் மாறும்;
அன்பு ஒன்றே மாறாதது…
அந்த அன்பை தூரிகையாக்கி ஆனந்தத்தை வரைவோமே…
★★★