Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

ஜன கண மன -2

அத்தியாயம் 2

ஜமைக்கா நாட்டை சேர்ந்த உசேன் போல்ட் உலகின் மின்னல் வேக மனிதன் என்று பெயர் பெற்றவர்.

அப்படின்னா சார்? பத்து வயது நிரம்பிய சிறுவன் விழி விரிய கேட்டான்.

வறுமையான ஆப்பிரிக்க கண்டத்தில் பிறந்த உசேன் போல்ட் உலகின் சிறந்த ஓட்ட பந்தைய வீரர்.



Advertisement

தொடர்ந்து மூன்று முறை ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர்.

ஆசிரியரின் விளக்கத்தில் மெய் மறந்து நின்றவன் ஒலிம்பிக்னா என்ன ஸார்?  சிறுவனுக்கே உரிய ஆர்வத்துடன் கேள்வி மேல் கேள்வியாய் கேட்டான்.

ஒலிம்பிக் என்பது விளையாட்டு போட்டி… உலகில் உள்ள எல்லா நாடும் இதில் கலந்துக்கும்.

Advertisement

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது ஒவ்வொரு விளையாட்டு வீரரின் கனவு, லட்சியம், ஏக்கம்,வெறி எப்படி வேணும்னா சொல்லலாம்.

Advertisement

ஒரு ஒலிம்பிக் பதக்கம் வாங்கிட்டா உலகமே உன்னை திரும்பி பார்க்கும். ஒட்டு மொத்த பாரதமே உன்னை கொண்டாடும்.

அப்போ நானும் உசேன் போல்ட்டா ஸார்? சிறுவன் விழியில் அத்துனை ஆனந்தம்.

Advertisement

கண்டிப்பா தினேஷ்…. நீயும் உசேன் போல்ட்டா வரலாம். ஏன் அதை விட பெரிய அளவில் கூட வரலாம்.

அதுக்கு நான் என்ன ஸார் பண்ணனும்? இந்த கணமே உசேன் போல்டாகி விட வேண்டும் என்ற பேரவா அவன் கண்ணில்.

அதுக்கு நீ நிறைய பயிற்சி பண்ணனும், உடம்பை சரியா ஃபிட்டா வச்சிக்கனும்.

நான் தினமும் பயிற்சி பண்றேன் ஸார்! கண்களில் ஒளி மின்ன சொன்னான்.

வெரிகுட்!ஆசிரியர் அவன் முதுகில் தட்டிக் கொடுத்தார்.

விடாமுயற்சி தான் விஸ்வரூப வெற்றியை கொடுக்கும். அவனை வாழ்த்தினார்.

“———“

தினமும் நடந்து கொண்டிருந்த தினேஷ் இப்போது ஓட தொடங்கினான்.

தனியே தான் மட்டுமாய் ஓட தொடங்கினான்.

மலைகாடுகளில் வேலை செய்யும் மக்கள் இவனை வினோதமாய் பார்த்தனர்.

“நல்லாதானே இருந்தான் மூக்கையா பேரன்?” என்னாச்சு இந்த பயலுக்கு? அவர்களுக்குள் பேசிக் கொண்டனர்.

ரேஷன் அரிசி சோறு காரக்குழம்பு, ராகி கூழு, காட்டுக்கீரை என்பதே அவனுக்கு கிடைக்கும் ஆக சிறந்த ஆரோக்கிய உணவு.

“எதுக்குடா தினமும் மூச்சிரைக்க ஓடற?” பவளம் தாயற்ற குழந்தையின் தலை கோதி வருத்தமாய் கேட்டார்.

பயிற்சி பண்றேன் பாட்டி…! அப்போ தான் உலகமே திரும்பி பார்க்கிற ஓட்டப்பந்தய வீரன் ஆகலாம். எங்க ஸார் சொன்னாரு! அதெல்லாம் உனக்கு சொன்னா புரியாது. பெரிய மனிதன் போல் பேசினான்.

எனக்கு புரியாமலே போகட்டும்… நீ இப்படி வெறுங்காலோட  ஓடி காலெல்லாம் கல்லு பொத்து வச்சிருக்கே… கலங்கிய விழிகளுடன் அவன் பாதம் வருடினார்.

அதெல்லாம் ஒன்னுமில்லை பாட்டி… கொஞ்ச நாளில் பழகிடும் என்று கபடமற்று சிரித்தான்.

அவனுக்கு வேப்பிலையும் மஞ்சளும் அரைத்து பத்து போடு என்றார் மூக்கையா.

இரவில் உறக்கமின்றி வலியில் முணங்குவான். ஆனால் மீண்டும் அடுத்த நாள் ஓடத் தொடங்குவான்.

“————“

பள்ளியில் எப்போது விளையாட்டு போட்டி என்றாலும் ஓட்ட பந்தயத்தில் முதல் பரிசு தினேஷுக்கு தான்.

தினேஷின் திறமை கண்டபி டி ஆசிரியர் அவனுக்கு ஷூ வாங்கி பரிசளித்தார்.

பள்ளி நூலகத்தில் தினத்தந்தி பத்திரிகையில் வரும் துணை இதழ் வெள்ளிமலரில் உசேன் போல்ட் வாழ்க்கை வரலாறு பிரசுரமாகி இருக்க தங்கப்பன் ஆசிரியர் அதை கொண்டு வந்து தினேஷ் கையில் கொடுத்தார்.

தினேஷ் இந்தா பாரு!இதுதான் உசேன் போல்ட்.

சாதாரண குடும்பத்தில் பிறந்து சரித்திரம் படைத்த உசேன் போல்ட்டின் வாழ்க்கை வரலாறு  அச்சிறுவனை சிலிர்த்து எழ செய்தது.

தன் தாய் கோகிலாவின் புடவை,மயிலறகு, ஹீரோபேனா, டோரா புஜ்ஜி படங்கள் சேமித்து வைத்திருக்கும் தகர பெட்டிக்குள் பொக்கிஷமாய் உசேன் போல்ட்டையும் வைத்து பூட்டிக் கொண்டான்.

அது காமன்வெல்த் போட்டி நடைபெற்று கொண்டிருந்த நேரம்  2018, ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அந்த ஊர் தலைவர் மகன் பிரசன்னா என்ஜீனியரிங் மாணவன். அவர்கள் வீட்டில் பெரிய கலர் டிவி இருக்கும். தினேஷ் எப்போதாவது போவான் டிவி பார்க்க. பிரசன்னாவிற்கு தினேஷை ரொம்ப பிடிக்கும்.

தாயில்லா சிறுவன் என்று தலைவர் வீட்டிலும் அவனை வாஞ்சையுடனே வரவேற்பார்கள். உண்பதற்கு ஏதாவது கொடுப்பார்கள் விசேஷ தினங்களில் அவனுக்கு ஓரிரு முறை புது துணி கூட வாங்கி கொடுத்ததுண்டு அவர்கள்.

இருவருமாய் சேர்ந்து டிவி பார்ப்பார்கள்… அப்போது பிரசன்னா அவனுக்கு நொறுக்கு தீனி ஏதாவது கொடுப்பான்.

பிரசன்னா கிரிக்கெட் வெறியன்… டெஸ்ட், ஒன்டே, T20 எதுவானாலும் பார்ப்பான்.

அப்படி என்ன இந்த விளையாட்டில் இருக்கிறது? என்று தினேஷ் எண்ணுவதுண்டு.

அணியின் வெற்றியோ தோல்வியோ பொதுவானது. ஒருவருக்கு மட்டுமே சொந்தமானது அல்ல…. இப்படி கூட்டத்தோடு கூட்டமாய் விளையாடுவதை பார்க்க தினேஷ்க்கு விருப்பம் இல்லை.

வெற்றியோ தோல்வியோ அதில் கூட்டு இருக்க கூடாது.தனிபட்டதாக இருக்க வேண்டும்… அந்த எண்ணம் இன்னும் வலுப்பெற்றது தினேஷூக்கு.

சற்று நேரத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சானல் மாற்றப்பட… காமன்வெல்த் விளையாட்டு நேரலையாகி கொண்டிருந்தது.

ஒரு புறம் பரிசு வழங்கும் நிகழ்வு நடைபெற்று கொண்டிருந்தது.

இந்தியாவின் நவஜீத் கவுர் வட்டு ஏறிதலில்(Discus throw) மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றார்.

வெற்றியாளர்கள் சிறு மேடை  மீது ஏறி நின்று மெடலை ஏற்றனர்.

அவர்கள் முன்னே அவர்கள் நாட்டின் தேசியக் கொடி ஏற்றப்பட்டு தங்கம் வென்றவர்களின் தேசிய கீதம் இசைக்க பட்டது.

“———“

மறு நாள் பள்ளியில்…ஸார் விளையாட்டு போட்டியில் தேசியக்கொடி ஏத்துறாங்க ஸார்… ஆர்வமாய் கேட்டான்.

ஆமா தினேஷ்… தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கம் வாங்கும் வீரர்களை கௌரவப்படுத்த அந்த நாட்டு தேசியக் கொடி ஏற்றுவாங்க.

தங்கம் வாங்கும் நாட்டோட கொடி மேலே பறக்கும் வெள்ளி வாங்கினா அதுக்கு கொஞ்சம் கீழே… வெண்கலம் வாங்கினா அதுக்கும் கீழே…

ஸார் நேத்து இந்தியா வெண்கலம் வாங்குச்சு…! ஆனா “தேசிய கீதம் பாடலை ஸார்….” மெய் வருத்தத்துடன் கூறினான் தினேஷ்.

இல்ல தினேஷ் தங்கப் பதக்கம் வாங்கும் நாட்டோட தேசிய கீதம் மட்டுமே இசைப்பாங்க. ஆசிரியர் ஐயம் திரியுற எடுத்து கூறினார்.

தினேஷ் முகம் வாடிப் போனது. பள்ளியில் தேசிய கீதம் பாடும்போதே நெஞ்சம் நிமிர்த்தி விறைப்பாய் நிற்பான்.

“————–“

இரவெல்லாம் தினேஷ் உறங்கவே இல்லை

அது எப்படி என் மூவர்ணக்கொடி கீழே பறக்கலாம்? ” பதக்கம் வழங்கும் நிகழ்வில் என் தேசிய கீதம் இசைக்கப்படாமல்  போய் விட்டதே… அவன் கண்கள் கலங்கியது.

அவன் காதில் ” ஜன கண மன அதி ” மெலிதாய் ரீங்காரம் இட்டு கொண்டே இருந்தது.அவன் இதய அறைகள் நான்கிலும் தேசிய கீதம் முரசு கொட்டி முழங்கியது.

—–தொடரும் ——

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!