“இன்னைக்கு துளசி வரா விஜய்..!” என்றான் பிரவீன்.
“என்னடா திடீர்ன்னு..?” என்றான் விஜய் புரியாமல்.
‘நீயென்ன லூசா..?’ என்பதைப் போல் பிரவீன் அவனைப் பார்த்து வைக்க,
“இப்ப எதுக்குடா இப்படி பார்க்குற..?” என்றான் விஜய்.
“நீ எந்த உலகத்துல இருக்க விஜய். துளசிக்கு நாளைக்கு பர்த்டே..! அதுமட்டுமில்லாம, நாளை மறுநாள் அம்மா,அப்பா துளசி எல்லாம் சுவிஸ் போறாங்க. மேடம் காலேஜ்க்கு டிமிக்கி குடுத்தாச்சு..!” என்றான் பிரவீன்.
“இப்படி லீவ் போட்டா, உன் தங்கச்சி படிச்ச மாதிரி தான். ஏன்? அப்படி உடனே வெளிநாடு போயாகணுமா..?” என்றான் விஜய் எரிச்சலுடன்.
“அது தான் எனக்கும் தெரியலை விஜய். எப்பவும் அவங்க கூப்பிட்டா மாட்டேன்னு தான் சொல்லுவா. ஆனா, இந்த தடவை அவளே போகலாம்ன்னு சொல்லியிருக்கா. அம்மா சொன்னாங்க. சரி போய் சுத்தி பார்த்துட்டு வரட்டும்..!” என்றான் பிரவீன்.
“இப்படி எல்லாரும் சேர்ந்து அவளுக்கு வால் வளர்த்து விடுங்கடா. இப்பவே ஒருத்தர் பேச்சையும் கேட்கிறது கிடையாது. நாளுக்கு நாள் உன் தங்கச்சிக்கு திமிர் கூடிட்டு தான் போகுதே தவிர குறைஞ்ச பாடில்லை..!” என்றான் விஜய்.
“எப்பா சாமி..! அதை விடு முதல்ல. துளசிக்கு ஏதாவது கிப்ட் வாங்கணும். அவளுக்கு கேக் வேற ஆர்டர் பண்ணணும். நீ வேலையை முடிச்சுட்டு வந்தா போகலாம்..!” என்றான்.
“போகலாம் பிரவீன். வேலையா முக்கியம்… உன் தங்கச்சிக்கு கேக் தான் முக்கியம்..” என்று நக்கலுடன் விஜய் சொல்ல, அவனை முறைத்தான் பிரவீன்.
வாய் வார்த்தையாக தான் துளசியை கிண்டல் செய்தானே தவிர, அவளுக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து வாங்கினான். பிரவீன் இதையெல்லாம் கண்டும் காணாதவன் போல் இருக்க,
“என்ன பிரவீன்..? மரம் மாதிரி நிக்கிற..? என்ன கிப்ட் வாங்க போற..?” என்றான்.
“தெரியலைடா..!” என்றான் பிரவீன்.
“இதுக்குத்தான் அம்புட்டு சீன் போட்டியா…? பேசாம ஜுவல்ஸ் வாங்கிறேன்..!” என்றான்.
“அதுவும் சரிதான்..!” என்ற பிரவீன், அவளுக்கு ஒரு அழகான செயினை வாங்க, அந்த கடையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான் விஜய். அவன் கண்களில் அங்கே இருந்த ஒரு ஜிமிக்கி கம்மல் கண்ணைக் கவர,
“அதை எடுங்க..?” என்றான்.
அவர்கள் எடுத்துக் கொடுத்த பிறகு தான் தெரிந்தது, அது பிளாட்டினம் என்று. விலையைக் கேட்டவனுக்கு கொஞ்சம் யோசனை தான். இருந்தாலும் யோசனையை பின்னுக்குத் தள்ளி அதை வாங்கி விட்டான்.
“இதை பில் போடுங்க..!” என்றவன், பிரவீனுக்கு அருகில் வந்து நிற்க, அதுவரை விஜய்யை பார்த்துக் கொண்டிருந்த பிரவீன், அவன் வந்தவுடன் திரும்பிக் கொண்டான்.
“என்னடா வாங்கிட்டியா..?” என்றான்.
“எல்லாம் ஓகே..! போகலாமா..?” என்றான் பிரவீன்.
“நீ போய் காரை ஸ்டார்ட் பண்ணு, நான் பேக்கிங்க வாங்கிட்டு வரேன்..!” என்று அவனை அனுப்ப, சின்ன சிரிப்புடன் நகர்ந்து விட்டான் பிரவீன்.
“கோல்ட்ல கொலுசு காட்டுங்க..!” என்றவன், அவனுக்கு பிடித்த மாதிரி இருந்த ஒரு ஜோடி கொலுசையும் வாங்கிக் கொண்டு தான் சென்றான்.
“என்னடா இதை வாங்கிட்டு வர இவ்வளவு நேரமா..?” என்றான் பிரவீன்.
“கண்டிப்பா சொல்லனுமா..? எடுடா வண்டியை..!” என்ற விஜய் அவனை முறைக்க, அந்த நிமிடம் விஜய்யின் மனதில் எந்த பாரமும் இல்லாமல் அமைதியாக இருந்தது. விரைவில் அவன் மொத்த நிம்மதியும் போகப் போவதை அறியாமல்.
மறுநாள் துளசியின் பிறந்த நாளுக்காக, சுரேஷ் வீட்டையே அமர்க்களப்படுத்தியிருந்தார். அன்று வரலட்சுமி பூஜை என்பதால், வீட்டில் சுமங்கலி பூஜையும் நடந்து கொண்டிருந்தது.
“இன்னைக்கு என்னடா விசேஷம். நாளைக்கு தான இவ பிறந்த நாள். இதெல்லாம் ஓவரா தெரியலை..?” என்றான் விஜய்.
“இன்னைக்கு வரலட்சுமி பூஜைடா. காலையிலையே அம்மா சொன்னாங்க…! இந்நேரம் முடிஞ்சிருக்கும்..!” என்று பேசிக் கொண்டே இருவரும் உள்ளே நுழைய,
“இவ்வளவு நேரமா பிரவீன்.. இன்னைக்கு சீக்கிரம் வர சொன்னேன் தான..?” என்று அவனை கடிந்து கொண்ட வித்யா, போய் ரெண்டு பேரும் குளிச்சுட்டு வாங்க..!” என்றார்.
“பத்து நிமிஷம் அத்தை..!” என்று விஜய் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பிரவீன் அவன் அறைக்கு சென்றிருந்தான்.
“இருந்தாலும் உங்க பிள்ளைக்கு இவ்வளவு வேகம் ஆகாது..!” என்ற விஜய், சிரித்துக் கொண்டே இரண்டு இரண்டு படிகளாகத் தாவி மேலே ஏறினான்.
அவன் அறைக்கு செல்ல முற்படும் முன், துளசியின் அறைக்கதவு லேசாக திறந்திருக்க,
“ராங்கி வந்துட்டா போல..! அட்வான்சா, ஒரு பர்த்டே விஷ் பண்ணிட்டு போய்டுவோம்..!” என்று அவளைத் தேடித் போனவன், அவள் அறையின் கதவருகிலேயே நின்று விட்டான்.
“எதுக்கு பாட்டி இவ்வளவு பூவை வைக்கிறிங்க..?” என்று துளாசி எரிச்சலுடன் சொல்லிக் கொண்டிருக்க,
“கொஞ்ச நேரம் வாயை மூடிட்டு இரு துளசி. பொண்ணுங்க பூவை வேண்டாம்ன்னு சொல்ல கூடாது..!” என்று அதட்டிய வள்ளி, பூவை வைத்து ஹேர்பின்னை சொருகிக் கொண்டிருந்தார்.
அவள் அணிந்திருந்த புடவை அவளுக்கு கொஞ்சம் ஏதோ மாதிரி இருந்தது. நிக்கவும் முடியாமல் நடக்கவும் முடியாமல், அவள் மனதில் இருந்த எரிச்சல் அவள் முகத்தில் நன்றாகத் தெரிந்தது.
“இப்ப எதுக்கு இப்படி பண்ணிட்டு இருக்கீங்க..? இந்த புடைவையை கட்டி, நான் எப்படி நடப்பேன்..?” என்றாள்.
“அதெல்லாம் ஒன்னும் செய்யாது. கொஞ்ச நேரத்துக்கு இப்படியே இரு..!” என்றார் வள்ளி.
அவளைப் புடவையில் பார்த்து மோன நிலையில் இருந்தான் விஜய். அதிலும் அவளின் இடுப்பு பகுதி இவன் பார்வை படும் பக்கமாக இருக்க, வேண்டாம் என்றாலும் கண்கள் அங்கே தான் சென்றது விஜய்க்கு.
“என்ன பண்ணிட்டு இருக்க விஜய்..? இதை மட்டும் அவ பார்த்தா என்ன ஆகுறது..?” என்று அவனின் உள் மனம் அவனை அதட்ட, பட்டென்று அருகில் இருந்த அவனின் அறைக்குள் நுழைந்து கொண்டான் விஜய்.
உள்ளே நுழைந்த விஜய்க்கு, வேறு எதிலும் கவனம் போகாமல், எங்கு பார்த்தாலும் துளசியே தெரிந்தாள்.
“என்ன இவ…எனக்கு ரொம்ப ஹாட் பிகரா தெரியறா..? செம்மையா இருக்காளே..? இத்தனை நாள் இவளைப் பார்க்குறேன். அப்ப எல்லாம் அப்படித் தோணலையே..?” என்று அவன் யோசித்துக் கொண்டிருக்க, மீண்டும் அவனின் கவனித்திற்கு வந்தது அவளின் இடுப்பு பகுதி.
“விஜய் வேண்டாம்..! இதெல்லாம் ரொம்ப தப்பு. நீ அவளைப் பார்த்தது மட்டும் அவளுக்குத் தெரிஞ்சது… உன்னை உண்டு இல்லைன்னு ஆக்கிடுவா..!” என்று தலையை உலுக்கிக் கொண்டவன், வேகமாய் குளித்து வெளியே வந்தான்.
“சீக்கிரம் வா விஜய்..!” என்று வித்யா சொல்ல, ஒரு மந்தார மனநிலையில் தான் கீழே இறங்கி சென்றாள். அதற்குள் துளசியும் அங்கு வந்திருந்தாள். ஓரத்தில் பார்த்த அவளை இப்போது நேரடியாக பார்த்த விஜய்க்கு உள்ளே குப்பென்று என்னவோ செய்தது.
“என்ன இந்த ராங்கி இன்னைக்கு அநியாயத்துக்கு அழகா தெரியறா..? எனக்கு மட்டும் தான் அப்படித் தெரியறாளா..?” என்று அவன் ஓரக்கண்ணால் பார்க்க,
“அம்புட்டு அழகா இருக்கா என் பேத்தி..! சுத்தி வைக்கணும் வித்யா..!” என்று வள்ளி சொல்வது அவனுக்கு காதில் கேட்டது.
‘எல்லாருக்கும் அழகாத்தான் தெரியறா..? நம்ம கண்ணுல கோளாறு இல்லை..!’ என்று மனதில் நினைத்தவனுக்கு அப்போது தான் நிம்மதியாக இருந்தது.
“சுந்தர் மாமாவையும், நீலா அத்தையும் இன்னமும் காணோம் பாட்டி..!” என்றாள் துளசி.
“இப்ப வந்திருவாங்க துளசி. பெங்களூரு கம்பெனியே வேண்டாம்ன்னு சொல்லி, அதை குடுக்க சொல்லியாச்சு. இனி இங்க தான் இருக்கனும்ன்னு சொல்லிட்டேன். பவித்ராவும் பத்தாவது முடிச்சுட்டா. இனி இங்க தான் ஸ்கூல் பார்க்கணும்…!” என்று வள்ளி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவர்களும் வந்து சேர்ந்தனர். தொழில் வளர்ச்சிக்கு யாராவது ஒருத்தர் அங்கிருந்தாக வேண்டிய கட்டாயம். அதனால் சுந்தரை குடும்பத்துடன் அங்கு குடி வைத்திருந்தனர். இப்போது அவர்களும் வந்து விட்டிருந்தனர்.
“துளசி செம்மையா இருக்க..!” என்றான் அருண்.
“ரொம்ப தேங்க்ஸ் அருண்..!” என்று துளசி சொல்ல, விஜய்யின் காதில் புகை வந்தது.
‘உனக்கும் மனசுல தோணுச்சு தான. நீயும் அருணை மாதிரி சொல்லியிருக்க வேண்டியது தான..?’ என்ற மனசாட்சியின் கேள்வியை அப்படியே ஒதுக்கி வைத்து விட்டு, எப்பவும் போல் முகத்தை இறுக்கமாகவே வைத்துக் கொண்டான் விஜய்.
“எப்படி இருக்க பவி..?” என்றாள் துளசி.
“நல்லா இருக்கேன் துளசி..!” என்று பவி சொல்ல,
“வயசுக்கு மூத்தவ..பேர் சொல்லி சொல்லக் கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். அண்ணின்னு சொல்லு..!” என்றார் வள்ளி.
“நான் சின்ன பிள்ளையில் இருந்து அப்படியே கூப்பிட்டு பழகிட்டேன் பாட்டி. இனி அதையெல்லாம் மாத்த முடியாது. எங்க அண்ணனைக் கல்யாணம் பண்றவங்க தான் அண்ணி..!” என்றாள் பவி.
“உங்க அண்ணன் அவளைக் கட்டாம… வேற யாரைக் கட்ட போறான்..?” என்று வள்ளி எதார்த்தமாய் சொல்ல,
“பாட்டி..! பேச்சுக்கு கூட அதையெல்லாம் பேசாதிங்க…! எனக்கு இந்த பேச்சு பிடிக்கலை..!” என்று முகத்தில் அடித்த மாதிரி சொல்லிவிட்டாள் துளசி.
துளசியின் வார்த்தை, விஜய்யை கன்னத்தில் அறைந்ததைப் போல் இருந்தது. அவ்வளவு நேரம் இருந்த அந்த மயக்கம், ஒரே நிமிடத்தில் தெளிந்திருந்தது. அதற்கடுத்து நடந்த எந்த நிகழ்விலும் அவனால் முழுமனதுடன் ஒன்ற முடியவில்லை.
“இப்பவாவது நான் போய் இந்த சேலையை மாத்திக்கவா பாட்டி..?” என்றாள் பரிதாபமாய்.
“இப்ப போய் மாத்திக்க துளசி..!” என்று சொல்ல, தட்டுத் தடுமாறி சென்றாள்.விஜய்யும் பிரவீனும் சாப்பிட்டுக் கொண்டிருக்க, துளசி அறைக்குள் செல்ல முற்படும் முன்..அங்கு விஜய்யின் அறையில் போன் விடாமல் ஒலித்துக் கொண்டே இருந்தது.
“போன் அடிச்சுட்டே இருக்கு. இவன் போனை ரூம்ல வச்சுட்டு போயிட்டானா..?” என்று எண்ணிய துளசி, அதை எடுத்துக் கொடுக்கும் பொருட்டு, உள்ளே சென்று போனை எடுக்க, மீண்டும் மீண்டும் அடித்துக் கொண்டிருந்தது.
“யார் இது..? விடாம போன் பண்றது..?” என்று திரையைப் பார்க்க, அதில் ‘சிம்ரன் காலிங்..’ என்று வந்து கொண்டிருந்தது.
“சிம்ரனா..?” என்று யோசித்தவளுக்கு அப்போது தான் அது வந்தனா என்று நியாபகத்திற்கு வந்தது.
‘எதுக்கு இப்படி விடாம கூப்பிடுறா..? இவனைப் பார்க்காம இருக்க முடியலை போல..!’ என்று நக்கலுடன் நினைத்துக் கொண்டவள், போனை அட்டென் செய்து,கொஞ்ச நேரம் கழிச்சு கூப்பிடுங்க.. என்று சொல்ல அவள் வாயை எடுக்கும் முன், எதிர்பக்கத்தில் இருந்து பட்டாசாய் வந்தது வார்த்தைகள்.
“விஜய்..! உங்ககிட்ட இருந்து நான் இதை சுத்தமா எதிர்பார்க்கலை..! என்னமோ வந்தனாகிட்ட சொன்னிங்களாமே..? அவளை கழட்டி விட பிளான் பண்ணிங்க சரி. அதோட விட வேண்டியது தான..? அதோட முடிஞ்சதுன்னு அவளும் நிம்மதியா இருப்பாளே..? அதை விட்டுட்டு இப்போ போன் பண்ணி இன்னும் ரெண்டு நாள்ல கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு சொன்னிங்களாமே..? கல்யாணம் பண்ணதுக்கு அப்பறம் விட்டுட்டு போக மாட்டிங்கன்னு என்ன நிச்சயம்..? அவளுக்கு கேட்க யாருமில்லைன்னு நினைச்சிங்களா..? நான் இருக்கேன்..!” என்று ப்ரீத்தி கத்திக் கொண்டிருக்க, இந்த பக்கம் போனை வைத்து விட்டாள் துளசி.
‘விஜய் வீட்டுக் தெரியாம கல்யாணமே பண்ண போறானா..? இவனுக்கு அப்படி என்ன அவசரம் வந்தது..? அந்த பொண்ணு வேற என்னென்னவோ சொல்லுதே..?’ என்று யோசித்த துளசிக்கு விஜய்யை நினைத்து கோபமாக வந்தது. இதை அறியாத விஜய் அங்கு கீழே நிம்மதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
அங்கே வந்தனாவிற்கும் இதே சந்தேகம் தான். முடியாது என்று சொன்னவன், மீண்டும் போன் செய்து, இரண்டு நாளில் கல்யாணம் என்று சொன்னவுடன் அவளால் முதலில் நம்ப முடியவில்லை. அதே சமயம் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. காரணமே இல்லாமல் அவளுக்கு அழுகையாய் வர, அதைப் பார்த்த ப்ரீத்தி கோபமாகி தான், விஜய்க்கு போன் செய்தது.
ஆனால் இதையெல்லாம் செய்து முடித்த விமல், அங்கே அடுத்து செய்ய வேண்டிய வேலைகளை திட்டமிட்டுக் கொண்டிருந்தான்.
“சார் நான் பேசுனது வொர்க் அவுட் ஆச்சா..?” என்று கேட்டுக் கொண்டிருந்தான் விஜய் போல் பேசியவன்.
“இன்னும் ரிசல்ட் தெரியலை. என் மாமன் மக எப்படியும் இப்ப கூப்பிடுவா..! அப்போ கன்பார்ம் ஆகிடும்..!” என்று சொன்னவன்,
“விஷயம் வெளிய தெரிய கூடாது..!” என்று சொல்லி அனுப்பினான்.
“யோவ் மாமா..! பேசாம உன் பொண்ணை எனக்குக் கட்டிக் கொடுத்திருந்தா, இப்போ இவ்வளவு பித்தலாட்டமெல்லாம் செய்ய வேண்டி வந்திருக்காது. நானும் காலத்துக்கும் உனக்கு துணையா உன் கூடவே இருந்திருப்பேன். இப்ப பாரு..!” என்று தனக்குத் தானே நினைத்துக் கொண்டு பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தான் விமல்.
“என்ன சொன்னார் ப்ரீத்தி ..?” என்றாள் வந்தனா.
“என்ன சொல்லுவார்..? வாயையே திறக்கலை..!” என்று ப்ரீத்தி சொல்ல, ஏதோ ஒன்று தப்பாக இருப்பதாக வந்தனாவிற்கு உரைத்துக் கொண்டே இருந்தது.
“விஜய்யோட நம்பர்ல இருந்து போன் வரலை. வேற புது நம்பர்ல இருந்து தான் போன் வந்தது..!” என்றாள் வந்தனா.
“எந்த நம்பர்ல இருந்து வந்தா என்ன..? பேசுனது விஜய் தான..?” என்று ப்ரீத்தி கேட்க,
“ஆமாம்..!” என்றாள் வந்தனா.
“இதை உன் மாமாகிட்ட சொல்லிட்டியா..?” என்றாள் ப்ரீத்தி.
“இன்னும் இல்லை ப்ரீத்தி..”
“ரொம்ப நல்லது..! இனியும் சொல்லிடாத. எனக்கென்னவோ அவர் மேல நம்பிக்கை வரலை..!” என்றாள் ப்ரீத்தி.
அங்கே மறுநாள் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போதும், துளசி அமைதியாகவே இருந்தாள். அவளுக்கு கேட்ட விஷயத்தை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை.
“ஹேப்பி பர்த்டே துளசி..!” என்றான் விஜய்.
“தேங்க்ஸ்..!” என்றவள் அவனிடம் இருந்து முகத்தைத் திருப்ப, விஜய்க்கு கோபமாகிப் போனது.
“இப்ப எதுக்கு மூஞ்சிய தூக்குற..? நானும் கொஞ்ச நாளா பார்த்துட்டு தான் இருக்கேன். நீ ரொம்ப ஓவரா போயிட்டு இருக்க..!” என்றான் விஜய்.
“அப்படித்தான் போவேன். இப்ப என்னாங்குற..? என்னமோ நீ பெரிய யோக்கியன் மாதிரி, வந்துட்டான்..!” என்றாள் கோபமாக.
“என்னோட யோக்கியத்தில் என்ன குறையை கண்ட நீ ?” என்றான் அவளைக் கூர்ந்து பார்த்தபடி.
“நீ பெரிய இவன்னு இங்க இருக்கவங்க தான் உன்னை தலையில தூக்கி வச்சு கொண்டாடுறாங்க. அவங்களை எல்லாம் விட்டுட்டு, அவளை கல்யாணம் பண்ண போறியே இதுல இருந்து தெரியலை உன்னோட லட்சனம். இது மட்டும் தாத்தாவுக்கு தெரிஞ்சது அவ்வளவு தான். லவ் பண்றவனுக்கு, வீட்ல சொல்லி கல்யாணம் பண்ற அளவுக்கு பொறுமை இல்லையோ..?” என்று பொரிந்து தள்ளிவிட்டாள்.
“ஏய்..!!!” என்ற விஜய்யின் முகம் அநியாயத்துக்கு சிவந்திருந்தது.
“உண்மை எனக்குத் தெரிஞ்சுடுச்சேன்னு வருத்தமா இருக்கா..? கவலைப் படாத, நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்.” என்றாள்.
“உன்னோட கற்பனைக்கு என்னால விளக்கம் கொடுக்க முடியாது..!” என்றான்.
“இதப்பாருடா..! என்னோட கற்பனையா..? உன்னோட திரைக்கதை, வசனம்ன்னு சொல்லு..! அதான் நேத்து போன்ல தெளிவா சொன்னாலே.. இன்னும் எதுக்கு நடிக்கிற விஜய்..!” என்ற துளசி அங்கிருந்து நகல, விஜய்க்கு ஒன்றும் புரியவில்லை.
“யார் போன் பண்ணா..? எப்ப போன் பண்ணாங்க..?” என்று யோசித்தவன், தன்னுடைய மொபைலில் கால் கிஸ்ட்ரியை பார்க்க, அதில் முதல் நாள் இரவு சிம்ரன் என்ற நம்பரில் இருந்து அழைப்பு வந்திருந்தது.
“இவ எதுக்கு போன் பண்ணியிருக்கா..? அதுவும் கல்யாணம் அது இதுன்னு சொல்லியிருக்கா..? இவளுக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரியாது போல. நேர்ல போய் நாலு குடு குடுத்தாத்தான் சரிப்பட்டு வருவா போல..!” என்று எண்ணியவன், அப்போதைக்கு அதை தள்ளி வைத்தான். துளசிக்காக அவன் வாங்கிய பரிசு பொருள் வேறு அவளிடம் கொடுக்கப்படாமல் அப்படியே இருந்தது அவனிடம்.
அவள் கேக் வெட்டி, முடித்த பிறகு.. அனைவரும் அவரவர் பரிசுகளைத் தர, பிரவீனும் தங்கைக்கு தான் வாங்கிய செயினை போட்டு விட்டான்.
“சூப்பரா இருக்கு பிரவீன்..!” என்ற துளசியின் முகத்தில் அப்படி ஒரு சந்தோசம்.
“நீ எதுவும் குடுக்கலையா விஜய்..?” என்று வள்ளியம்மை கேட்க, பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டான் விஜய். பிரவீன் அவனையே பார்த்துக் கொண்டிருக்க,
“விஜய்கிட்ட இருந்து எதுவும் எனக்குத் தேவையில்லை. குடுத்தாலும் நான் வாங்க மாட்டேன்..!” என்று பட்டென்று சொல்லி விட்டாள் துளசி.
“என்ன துளசி இதெல்லாம்..?” என்று பிரவீன் அதட்ட,
“அண்ணா..! நீ இதுல தலையிடாத..!” என்றவள், மறந்தும் விஜய்யை பார்க்கவில்லை.
விஜய்யின் முகத்தில் கோபம் கோரதாண்டவம் ஆட, அங்கிருந்து அறைக்கு வந்தவன், அவளுக்கு வாங்கியதை கோபமாக தரையில் விட்டெறிந்தான். அந்த கம்மலும், கொலுசும் ஆளுக்கொரு இடத்தில் சிதறிக் கிடந்தது விஜய்யின் மனசைப் போல்.
“எல்லாம் இந்த வந்தனானால வந்தது..! உனக்கு இருக்குடி..!” என்று பொரிந்து தள்ளியவன், அப்போதே கிளம்பிவிட்டான்.
“என்ன விஜய்..?எங்க கிளம்பிட்ட..?” என்றனர் அனைவரும்.
“சென்னைக்கு..!” என்ற ஒற்றை வார்த்தை தான் வந்தது அவன் வாயில் இருந்து.
“என்ன திடீர்ன்னு..? நாளைக்கு சேர்ந்து போகலாம் விஜய்..!” என்றான் பிரவீன்.
“இல்ல பிரவீன்..! முக்கியமான வேலை இருக்கு. எப்படியும் இவங்க நாளைக்கு சென்னை வந்து தான பிளைட் ஏறுவாங்க. நீ அவங்க கூட வந்திடு..! வரேன் தாத்தா, வரேன் பாட்டி..!” என்றபடி கிளம்பி விட்டான்.
“என்னாச்சு விஜய்க்கு? யார் என்ன சொன்னா..?” என்றார் ரத்னவேல்.
“ம்ம்க்கும்..! இவர் செல்லப் பேரனை மட்டும் யாரும் எதுவும் சொல்லிடக் கூடாது. உடனே வரிஞ்சு கட்டிட்டு வந்திடுவார்..!” என்று துளசி வாய்க்குள் முனக, அவளின் அந்த முனகல் பிரவீனுக்கு தெளிவாய் கேட்டது.
துளசி தான் ஏதோ பேசியிருக்கிறாள் என்பதும் பிரவீனுக்கு புரிந்து போனது. துளசியை தனியாக அழைத்தவன்,
“என்ன சொன்ன விஜய்கிட்ட..? ஏன் அவனோட கிப்ட்ட வேண்டாம்ன்னு சொன்ன..?” என்றான் பிரவீன்.
“அவன் யாரு எனக்கு கிப்ட் குடுக்க..? அதான் இன்னும் ரெண்டு நாள்ல கல்யாணம் பண்ண போறான்ல. அவன் பொண்டாட்டிக்கு போய் குடுக்க சொல்லு..!” என்று எறிந்து விழுந்தாள்.
“நீ என்ன சொல்ற துளசி..?” என்றான் பிரவீன் அதிர்ந்து.
“அதான் அந்த சிம்ரனை கல்யாணம் பண்ண போறானாம். இவன்தான் இந்த ஐடியாவே குடுத்திருக்கான். நம்ம இவனை லவ் பண்ண வேண்டம்ன்னா சொன்னோம். நம்ம கிட்ட கூட சொல்லாம அப்படி என்ன திருட்டு கல்யாணம் பண்ண வேண்டி இருக்கு இவனுக்கு..?” என்று அவளின் ஆதங்கம் எல்லாம் வார்த்தை வடிவம் பெற்றுக் கொண்டிருந்தது.
“வாய்ப்பே இல்லை..!” உறுதியாக மறுத்தான் பிரவீன்.
“அந்த ப்ரீத்தி, விஜய்ன்னு நினைச்சு என்கிட்டே தான் பேசுனா.. நான் முழுசா கேட்டேன். இந்த விளக்கம் உனக்கு போதுமா..?” என்றவள் சுரேஷின் அருகில் சென்று விட, பிரவீனுக்கு தான் குழப்பமாக இருந்தது.
யோசனையுடன் விஜய்யின் அறைக்கு செல்ல, அங்கே அவன் எறிந்து விட்டு சென்ற பொருட்கள் அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது. அதை எல்லாம் எடுத்த பிரவீன், அதை விஜய்யின் அறையிலேயே பத்திரப்படுத்தினான்.
விஜய்க்கு அவன் போன் செய்ய, அது சுவிட்ச் ஆப் என்று வந்தது. நாளைக்கு போன உடனே என்ன எதுன்னு விசாரிக்கணும்… என்று முடிவு செய்து கொண்டான் பிரவீன்.
அங்கே கனகவேல் வீட்டில்…
“மாமா..! அந்த பையனும் துளசியும் கோவில்ல வச்சு கல்யாணம் பண்ணப் போறதா தகவல் வருது..!” என்றான் விமல்.
“என்னடா சொல்ற..? வெட்டி பொலி போட்றுவேன். அவ காலேஜ் ஹாஸ்டல்லயே இருக்கக் கூடாது. சென்னை வீட்ல நம்ம கஸ்ட்டடியில் வைக்க சொல்லு..! நான் டெல்லி போயிட்டு வந்ததுக்கு அப்பறமா இருக்கு அவளுக்கு கச்சேரி. அவ என்னோட பொண்ணா இருக்குற வரைக்கும் தான் அவளுக்கு நல்லது. இந்த விஷயம் நம்மளத் தவிர வேற யாருக்கும் தெரிய கூடாது..!” என்றார் கனகவேல்.
“நீங்க என்ன சொல்றிங்களோ அப்படியே செய்றேன் மாமா..! நீங்க கவலைப் படாம போயிட்டு வாங்க..!” என்றவன்,
“மாமா..! அந்த பையன் ஏதாவது பிரச்சனை பண்ணா..?” என்றான்.
“யோசிக்கவே வேணாம் கதைய முடிச்சுடு. இதையெல்லாம் என்கிட்டே கேட்டு செய்யனுமா விமல்..?” என்ற கனகவேல் கோபத்துடன் கிளம்பி செல்ல, அதை கேட்ட ராதிகாவிற்கு பக்கென்று இருந்தது.
என்ன செய்வதென்று தெரியாமல், அவர் திவ்யாவுக்கு அழைத்து விபரத்தை சொல்ல,
“என்னம்மா சொல்ற..? வந்தனா லவ் பண்றாளா..?” என்றாள் திவ்யா.
“ஆமா திவ்யா..! எனக்கென்னவோ பயமா இருக்கு. உங்கப்பா அவளை எதுவும் செஞ்சாலும் செஞ்சிடுவார்..!” என்றார் ராதிகா.
“அப்பா அப்படியெல்லாம் பண்ண மாட்டார்..! வந்தனாகிட்ட நான் பேசுறேன்..!” என்றாள் திவ்யா.
விஜய்யின் கோபம் ஒரு புறம், விமலின் தந்திரமான நரித்தனம் ஒரு புறம், கனகவேலின் அரசியல் ஒரு புறம் இவை எல்லாம் வந்தனா என்னும் மையப் புள்ளியை சுற்றி வந்தது. பலியாகும் ஆட்டின் கடைசி நிமிஷ சந்தோஷத்தில் இருந்தாள் வந்தனா.