தனது அலுவக அறையில் அமர்ந்து வேலைகளை கவனித்துக்கொண்டிருந்தான் வீரா. கவனம் செய்யும் வேலையில் இருந்தாலும், மனதில்…
‘விசாரிச்சுட்டு போன் பண்ணுங்கன்னு சொன்னோம் தான், அதுக்காக இத்தனை நாளாவா விசாரிக்குறாங்க! ச்ச! இந்த அம்மாவை சொல்லணும்… ஒழுங்கா சரி’ன்னு சொல்ல வந்தவங்களை ‘விசாரிங்க, யோசிங்க’ன்னு குழப்பி விட்டு… இப்போ என்னை மண்டை காய விடுறாங்க’ என்று புலம்பிக்கொண்டிருந்தான்.
தினமும் விஜயாவிடம் ‘போன் வந்ததா? போன் வந்ததா?’ என கேட்கவே அவனுக்கு சங்கோஜமாய் இருந்தது.
‘நானா இது?’ என்று கூட பலமுறை நினைத்து வியந்துக்கொண்டான்.
‘இந்த திருமணத்தை தன் மனம் அத்தனை விரும்புகிறதா?’ என்று கூட ஆச்சர்யமாய் இருந்தது.
‘அவர்கள் சொல்லும்போது சொல்லட்டும்!’ என்று விட்டேத்தியாய் நினைக்க எண்ணினாலும், இதோ இப்போது போல மனம் அதன் போக்கில் புலம்ப ஆரம்பித்தது.
அவன் புலம்பலை தடுக்கவே அவன் அறை கதவை தட்டினார் சிதம்பரம்.
அவரை அங்கே எதிர்ப்பாராதவன் திடுக்கிட்டு எழுந்து, “வாங்க… வாங்க” என்றான் வேகமாய்.
அவன் வரவேற்ப்பை ஏற்று, அவனுக்கு எதிரே இருந்த கதிரையில் வந்து அமர்ந்த சிதம்பரம், “எப்படி இருக்கீங்க வீரா?” என்றார் இன்முகமாய்.
அவர் திடீரென தன்னைத்தேடி வந்திருப்பதில் முதலில் பதட்டமானாலும், சில நிமிடங்களில் தன்னை சமன் செய்திருந்தவனுக்கு, ‘கல்யாணத்துக்கு ஓகே சொல்ல வந்துருப்பாரோ?’ என ஆவல் தோன்ற ஆரம்பித்தது.
மறுநொடியே, ‘ஒருவேளை இந்த சம்பந்தம் சரிவராது, சாரி’ன்னு சொல்ல வந்துருக்காரோ?’ என்று வேறு தோன்ற, ‘அய்யயோ!!’ என அவன் அடிவயிறு கலங்கியது.
அதே கலக்கத்துடன், “என்ன சாப்புடுறீங்க ண்ணா? காபி சொல்லவா?” என்று கேட்க,
தன் மணிக்கட்டை திருப்பி நேரம் பார்த்தவர், “இது லஞ்ச் டைம்’ன்னு நினைச்சேனே!?” என்றார்.
அவர் சொல்ல வருவது சில நொடிகளுக்கு பிறகே புரிய, “சாரி சாரி ண்ணா! டக்குன்னு புரியல! வாங்க, பக்கத்துல தான் ஹோட்டல் இருக்கு, சாப்பிட்டுட்டே பேசுவோம்” என எழுந்துக்கொண்டான்.
அவன் பதட்டம் வெளிப்படையாய் தெரிய, “நீங்க ஏதோ டென்சன்ல இருக்கீங்க போல!” என்று நட்பாய் சிரித்த சிதம்பரம்,
“நான் இந்த பக்கம் ஒரு வேலையா வந்தேன்! சரி நம்ம மாப்பிள்ளை ‘பங்க்’ இங்கதானே இருக்குன்னு சும்மா பார்த்துட்டு போலாம்ன்னு வந்தேன்!” என்றவர்,
“அக்கா வீட்டுல எதுவும் பேசுனாங்களா? ஏதோ நல்ல நாள் பார்த்து முடிவு சொல்லனும்ன்னு பேசிக்கிட்டு இருந்தாங்க” என்று சொல்ல,
அதுவரை இழுத்துப்பிடித்து வைத்திருந்த மூச்சை அப்போது தான் நிம்மதியாய் விடுதலை செய்தான் வீரா.
‘அப்போ நெகடிவ்’வா எந்த முடிவும் சொல்ல இவர் வரலை போலருக்கே’ என தோன்றிய பின்பே, அவனால் இயல்பாய் இருக்க முடிந்தது.
மலர்ந்த முகத்துடன் ஹோட்டலுக்குள் நுழைந்து, “உட்காருங்க அண்ணா” என்றான் சிதம்பரத்திடம்.
அவன் மலர்ச்சியை கண்டுக்கொண்ட சிதம்பரத்திற்கு தான் சொல்ல வந்ததை சொல்வதா? வேண்டாமா? என்ற தயக்கம் உண்டாக, அந்த உணவகத்தில் பார்வை ஓட்டியபடி நேரத்தை கடத்தினார்.
சர்வர் வந்து சாப்பாடு வைக்க, அதை எடுத்து இருவருக்குமாய் பரிமாறிய வீரா, “சாப்பிடுங்கண்ணா, இங்க மீல்ஸ் ரொம்ப நல்லா இருக்கும்” என்றான்.
ஆமோதிப்பாய் தலையசைத்து உண்ண ஆரம்பித்த சிதம்பரத்திற்கு, தன் அக்கா சொல்ல சொல்லி அனுப்பிய சேதியை எங்கு ஆரம்பித்து, எங்கு முடிப்பது என்று தெரியாது வார்த்தைகள் வர மறுத்து திணறியது.
உணவை ருசித்தாலும், சிதம்பரத்தின் அவஸ்தையை லேசாக உணர்ந்தவன் போல, “என்கிட்ட எதாவது சொல்லனும்ன்னு நினைக்குறீங்களா ண்ணா?” என்றான் வீரா.
அவன் நேரடியாய் கேட்டுவிட்ட பின்பும் அந்த வாய்ப்பை விட மனமில்லாது, “ஆமா வீரா” என்றுவிட்டார் சிதம்பரம்.
“அப்ப சொல்லுங்க! பேசிக்கிட்டே சாப்பிடுவோமே” என்றான்.
அவனிடம் தனியாக பேச வேண்டும் என்றுதான் அவனை ‘பங்க்’கில் இருந்து இங்கு அழைத்து வந்ததே!!!
அதை வீணடிக்காமல் பேச வந்ததை ஆரம்பித்தார் அவர்.
“நான் சொல்ல வரதை நீங்க எப்படி எடுத்துப்பீங்கன்னு எனக்கு தெரியல” என சிறு பீடிகையுடன் ஆரம்பிக்க, அதற்கு அவசியமே இல்லை என்பதை போல,
“நீங்க கொஞ்சமும் தயங்காம சொல்ல வந்ததை சொல்லி முடிங்கண்ணா… நான் நீங்க எப்படி சொல்றீங்களோ, அதை அப்படியே புரிஞ்சுக்க முயற்சி பண்ணுறேன்! புரியலன்னா உங்ககிட்டேயே விளக்கம் கூட கேட்குறேன்! அதனால நான் எப்படி புரிஞ்சுப்பேனோன்னு தயங்காதீங்க!” என்றுவிட்டான் வீரா.
அவனது இலகுவான அணுகுமுறையில் அவர் தயக்கம் கூட தகர்ந்தது போலும். முன்புபோல் தயங்காமல் சொல்ல வந்ததை ஆரம்பித்தார்.
“அஷ்டா எங்க அக்காக்கு முதல் பொண்ணு கிடையாது!” விஷயத்தின் மூலத்தை போட்டுடைத்தார் சிதம்பரம்.
வீராவின் புருவங்கள் உயர்ந்தன.
“அக்காக்கு கல்யாணம் முடிச்ச மறுவருஷமே ஒரு பொண்ணு பொறந்துச்சு! ‘தனலட்சுமி’ ன்னு பேர் வச்சோம்!
இரண்டு வயசு வரைக்கும் நல்லா தான் இருந்தா! அதுக்கு பிறகு இதயத்துல ஏதோ கோளாறு இருக்குன்னு சொன்னாங்க! ட்ரீட்மென்ட் எடுத்துக்கூட உயிர் பிழைக்கல!”
வீரா சாப்பிடுவதை நிறுத்திவிட்டு சிதம்பரத்தை கவனிக்க ஆரம்பித்தான்.
“அடுத்து ஒரு பொண்ணு பொறந்தா! ‘விஜயலட்சுமி’ன்னு பேர் வச்சோம்! அவளும் பொறந்து ஒரு வயசுக்குள்ளயே தவறிட்டா!” என்றார்.
“அக்காவும் மாமாவும் ரொம்ப மனசொடிஞ்சு இருந்த காலம் அது! என்னென்னவோ வேண்டுதல் பரிகாரம் எல்லாம் செஞ்சாங்க!! எங்க நமக்கு குழந்தையே தங்காம போய்டுமோன்னு பயந்து போய் இருந்த நேரம், அக்கா மறுபடி உண்டானாங்க!
அவங்களை கண்ணுக்குள்ள வச்சு தாங்காத குறையா மாமாவும் அவங்க அம்மாவும் அப்படி பார்த்துக்கிட்டாங்க! அப்படி இருந்தும் எட்டாவது மாச தொடக்கத்துலயே அக்காவுக்கு வலி வந்துடுச்சு! அதோட அவ கர்பப்பை இனி ஒரு குழந்தையை தாங்குற சக்தியை இழந்துடுச்சுன்னு டாக்டர் சொன்னப்போ, கைல இருந்த இந்த குழந்தையவாது தவற விட்டுட கூடாதுன்னு ரொம்ப தீவிரமா இருந்தாரு மாமா!!!
“பாப்பாக்கு எந்த குறையும் இருக்க கூடாதுன்னு ‘அஷ்டலட்சுமி’ன்னு பேர் வச்சாங்க! அவ தும்முனா கூட மாமா பயந்துடுவாரு… அந்த அளவுக்கு பயம், தவிப்பு! அஷ்டாவை பொத்தி பொத்தி வளர்த்தாங்க! அவளுக்கு நாங்க எல்லோரும் குடுத்த செல்லம் ரொம்பவே அதிகம்” என்று முடித்தார் சிதம்பரம்.
அவர் சொன்னதை கேட்டுக்கொண்டிருந்தவனுக்கு, சண்முகம், நீலாவின் அப்போதைய வலி எப்படி இருந்திருக்கும் என உணர்ந்துக்கொள்ள முடிந்தது.
ஆனால், இதை தன்னைத்தேடி வந்து சிதம்பரம் சொல்ல வேண்டிய காரணம் என்ன? என்று புரியாமல் சுருங்கிய புருவங்களுடன் அவர் முகம் பார்த்தபடி அமர்ந்திருந்தான் வீரா.
நிமிர்ந்து அவனைப்பார்த்த சிதம்பரம், “அஷ்டா எங்க அக்கா வீட்டுக்கு ஒரே பொண்ணு! அதோட ரொம்பவே செல்லம்! அவளுக்கு பிடிக்காத எதையும் மாமா செஞ்சது இல்ல இதுவரை! எல்லாமே அவ இஷ்டம் தான்!” என்றவர்,
“காலைல லேட்டா தான் எழுந்துரிப்பா! கோலம் போட தெரியாது! குனிஞ்சு நிமிர்ந்து வேலை செஞ்சது இல்லை! சமையல் கட்டுப்பக்கம் அஞ்சு நிமிஷத்துக்கு மேல நிக்க மாட்டா! அந்த அஞ்சு நிமிஷம் கூட ‘பிரிட்ஜ்’ல திங்க என்ன இருக்குன்னு பார்க்குறதுக்கா தான் இருக்கும்! அவ துணியை கூட துவைச்சது இல்லை!!! தண்ணில ரொம்ப நேரம் கையை வச்சா ‘நெயில் பாலிஷ்’ பாழாயிடும்ன்னு நினைக்குறவ!
படிப்பு என்னவோ ‘எம்.பி.ஏ’ தான்… ஆனா, வேலைக்கு போற எண்ணம் கிடையாது! படிப்பு முடிஞ்சு ஆறு வருஷமா சும்மாதான் இருக்கா! இதுக்குமேலையும் எங்கயும் போக வாய்ப்பில்லைன்னு தான் நினைக்குறேன்” என்று நிறுத்தினார்.
இப்படி பேசியவரிடம் என்ன சொல்வதென வீராவுக்கு விளங்கவில்லை.
அதையே அவன் வார்த்தைகளில், “எனக்கு என்ன சொல்ல வரீங்கன்னு புரியலையே” என்று வெளிப்படுத்த,
“நீங்க பொண்ணு பார்க்க வந்தப்போ உங்களையும், உங்க அம்மாவையும் எங்க எல்லாருக்குமே ரொம்ப பிடிச்சு போச்சு! ஒரு பையனா இருந்து வீட்டுப்பொறுப்பு எல்லாத்தையும் எடுத்துக்கட்டி நீங்க செய்யுறப்போ உங்க வீட்டுக்கு வர பொண்ணு உங்களுக்கு உறுதுணையா இருக்கனும்ன்னு எதிர்ப்பார்ப்பீங்க தானே?” என்றவர்,
“அம்மாக்கூட அன்னைக்கு பேசுனப்போ ஒரு வார்த்தை சொன்னாங்க! கல்யாணத்துக்கு பிறகு மருமக வந்து தான் வீட்டுப்பொறுப்பை வாங்கிகிட்டு என் மகனுக்கு ரெஸ்ட் குடுக்கணும்ன்னு” என்றார் அவனுக்கு நியாபகப்படுத்துவதைப்போல!
அவனும் நினைவாய், “ஆமா! அது அவங்களோட ஆசை” என்றான்.
“ம்ம்ம்… அதை கேட்டதுல இருந்து என் அக்காவுக்கு உறுத்தலாவே இருந்துருக்கும் போல! நம்ம பொண்ணு எதுக்குமே லாயக்கு இல்லன்னு அவ எண்ணம்! பாப்பாக்கு கல்யாணம் பேச ஆரம்பிச்சதுல இருந்தே அவளுக்கு கொஞ்ச கொஞ்ச வேலையை பழக்கிவிடனும்ன்னு அக்கா எவ்வளவோ முயற்சி செஞ்சா! எல்லாம் மாமாவும், அவங்க அம்மாவும் சேர்ந்து குடுத்த செல்லத்துல நடக்காம போச்சு!!!
ஒரு ஆம்பளை நீங்களே இத்தனை பொறுப்பா இருக்குறதா உங்க அம்மா சொல்றப்போ, நாளைக்கு அஷ்டா உங்க வீட்டுக்கு வந்து ‘என்ன இந்த பொண்ணு இவ்ளோ தண்டமா இருக்கு’ன்னு நீங்க நினைச்சுட கூடாதுல? எல்லாம் முடிஞ்ச பிறகு வருந்தி பிரயோஜனம் இல்லையே!? அதான் நம்ம வீட்டு பொண்ணை பத்தி தெளிவா சொல்லிட்டு வான்னு அக்கா அனுப்பினாங்க!!!” என்றார்.
சிதம்பரம் பேசி முடிக்க, அதை கேட்டுக்கொண்டே உணவை உண்டு முடித்த வீரா மௌனமாய் எழுந்து கையை சுத்தம் செய்ய சென்றான்.
அவன் பதிலே சொல்லாது போக, ஒரு பெருமூச்சுடன், தானும் தட்டில் இருந்ததை கொறித்துவிட்டு கை கழுவ செல்ல, அதற்குள் திரும்ப வந்திருந்த வீரா கர்சீஃபால் கையை துடைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.
சிதம்பரம் வந்ததும், “ஜூஸ் எதாவது சொல்லவா ண்ணா?” என்று வீரா கேட்க, அவர் வேண்டாம் என்றுவிட்டார்.
சிறு இடைவெளி விழ, “தம்பி, நான் சொன்னது?” என தயங்கினார் சிதம்பரம்.
“புரிஞ்சுது ண்ணா எனக்கு! ரொம்ப செல்லம் குடுத்து வளர்த்ததால பெருசா எந்த வேலையும் செய்ய தெரியாது… அவ்ளோதானே?” என்றான் வீரா.
சிதம்பரத்துக்கு, ‘நம்ம நாலு பக்கத்துக்கு பேசுனதை இவரு நாலு வரில முடிச்சுட்டாரே!!’ என்றிருந்தது. அதையே அவர் முகமும் பிரதிபலிக்க,
“இது இத்துனூண்டு விஷயம் தான்ண்ணா… நீங்க தான் அதை பெருசுப்படுத்தி சொல்றீங்க!” என்றவன்,
“வீட்டு வேலை காலம் பூரா செஞ்சுட்டே தான் இருக்க போறாங்க! அவங்க அம்மா வீட்டுலயாவது எந்த வேலையும் இல்லாம இஷ்டப்படி இருந்துட்டு போட்டுமே! என்ன தப்பு இதுல?” என்றான்.
அவன் சொன்னதை தான் நீலாவிடம் சொல்லியிருந்தார் சிதம்பரம். ஆனாலும், இதைப்பற்றி பேசிவிடும்படி நீலா வற்புறுத்தவே இங்கு வீராவை சந்திக்க வந்தவருக்கு, அவர் எண்ணத்தையே அவனும் பிரதிபலிக்க, லேசாக சிரித்தார்.
“எனக்கு ஒரு தங்கட்சியோ இல்ல அக்காவோ இருந்துருந்தா நாங்களும் இப்படி தான் அவங்களை வச்சுருந்துருப்போமோ என்னவோ?!” என சிரித்த வீரா, “எங்க வீட்டு பொண்ணு எல்லாம் தெரிஞ்சவ’ன்னு பில்டப் பண்ணாம ‘இவ்ளோதான் அவ’ன்னு வெளிப்படையா சொல்ற மனசு யாருக்கும் வராது!” என்றான் அவரிடம்.
இன்னமும் அவர் முகம் தெளியாது இருக்க,
“நீங்க கவலைப்படாம போங்க! உங்க வீட்டு பொண்ணை எங்க வீட்டு பொண்ணா மாத்தி… அவங்களுக்கு எல்லாமே சொல்லிக்குடுத்து, நான் வளர்த்துக்குறேன்” என்றான் முகத்தில் புன்னகை தவழ…!
அவன் சொன்ன விதத்தில் சொக்கிப்போனார் அவர்.
‘நான் வளர்த்துக்குறேன்’ என சிரித்துக்கொண்டு அவன் சொன்ன விதத்தில், ‘ஒரு குழந்தையையை கையாளும் ஆசிரியை போல’ அவன் தோன்ற, அஷ்டாவுக்கு இதை விட நல்ல இடம் அமையவே அமையாது என்ற உறுதியான எண்ணத்தோடு, வீராவின் மீது அதிகளவு மரியாதையுடன் நிறை மனதாய் அங்கிருந்து விடைபெற எழுந்தார் சிதம்பரம்.
அவர் வண்டி இருந்த இடம் வரைக்கும் கூடவே சென்ற வீரா, அவர் வண்டியில் ஏறியதும், “நான் ஒன்னு சொல்லுவேன், கோச்சுக்க மாட்டீங்களே?” என்று கேட்க,
“சொல்லுங்க வீரா” என்றார் அவர் உற்சாகமாய்.
“என்னதான் சின்ன சின்ன குறை இருந்தாலும், உங்க வீட்டு பொண்ணை இப்படி அடுத்தவங்க கிட்ட விட்டுக்குடுத்து பேசுனது எனக்கு பிடிக்கல! நீங்க இப்படி சொன்னது அவங்களுக்கு தெரிஞ்சா அவங்களுக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கும்?” அஷ்டாவின் சார்பாக கண்டனம் தெரிவித்தவனை மேலும் மலர்ந்து போன முகத்துடன் எதிர்க்கொண்டார் சிதம்பரம்.
அதே மலர்ச்சியுடன், “தப்புதான்! என் அக்காக்கிட்டையும் சொல்றேன்” என்றவர் சொல்ல,
“கண்டிப்பா சொல்லுங்க! கூடவே கல்யாணம் முடியுற வரை அவங்களை எந்த வேலையும் வாங்கக்கூடாதுன்னு சொன்னேன்னும் சொல்லுங்க” என்றான் லேசான வெட்க சாயலுடன்.
அவனிடம் தலையாட்டிவிட்டு கிளம்பிய சிதம்பரத்துக்கு ‘இப்போதே… இந்த நொடியே… அஷ்டாவை அவன் வீட்டிற்கு அனுப்ப வேண்டும்’ என்றால் கூட கண்ணை மூடிக்கொண்டு அனுப்பிவிடுவார். அந்த அளவுக்கு அவன் மீது அதீத நம்பிக்கை வந்திருந்தது.
சிதம்பரம் வந்து மூச்சுப்போக ‘தம்’க்கட்டி பேசியதெல்லாம் கேட்டும், ‘அந்த பெட்டர்மாக்ஸ் லைட்டே தான் வேணும்’ என ஒற்றை காலில் நின்று அவருக்கு ‘டாட்டா’ காட்டிக்கொண்டிருக்கும் வீரா, அடுத்த இரண்டே மாதத்தில்,
‘யம்மா தாயே, முதல்ல இங்கிருந்து கிளம்புமா’ என கும்பிடுப்போட்டு அஷ்டாவை அவன் வீட்டில் இருந்து வெளியேற்றப்போவது இப்போதே அவனுக்கு தெரிந்திருந்தால், ‘அவரு சொன்னபோவே யோசிச்சுருக்கலாம்!’ என காலம் தாழ்ந்து வருந்துவானோ!?