சண்முகம் தன்னால் முடிந்தவரை வீரகேசரியின் பின்புலத்தை ஆராய்ந்தார். இருவரும் உள்ளூர் தான் என்பதாலும், வீராவை அவன் இருக்கும் இடங்களில் பலருக்கும் தெரிந்ததாலும், அவருக்கு விசாரிக்க வசதியாய் இருந்தது.
விசாரித்த வரை ஒரு குற்றமும் சொல்லும்படியாக இல்லாமல் போனது சண்முகத்துக்கு அத்தனை திருப்தியாய் இருந்தது.
இத்தனை நாளாய் வந்த வரன் எல்லாம் தட்டிப்போனது ‘இப்படி ஒரு மாப்பிள்ளை அமையத்தானோ?’ என்றெல்லாம் எண்ணி பூரித்துப்போனார்.
அஷ்டாவுக்கு வீட்டில் நடக்கும் பேச்சுகளை வைத்து தனக்கு இந்த திருமணம் நடந்துவிடும் என தெரிந்துவிட்டது. அன்று தன் தோழிகள் தன்னை கிண்டலடித்ததெற்க்கெல்லாம் சேர்த்து நன்றாக திருப்பி கொடுக்க வேண்டும் போல் இருந்தது அவளுக்கு.
‘பார்த்தியா எனக்கு கல்யாணம் ஆகபோது!’ என சொல்லி வெறுப்பேற்ற வேண்டும் போல இருந்தது.
ஏற்கனவே கல்யாணம் செய்து அதன் பிக்கல்பிடுங்கல்களில் உழன்றுக்கொண்டிருக்கும் தோழிகளுக்கு ‘இவளுக்கு திருமணம்’ என்றதும் வெறுப்பாவதற்கு பதில் ‘ஹப்பா! நம்ம குடும்ப இஸ்திரி க்ரூப்ல இவளும் சேர்ந்துட்டா!’ என்று நிம்மதி தான் அடைவர் என இந்த அரைவேக்காட்டிற்கு தெரியாமல் போனது.
தன் அறைகதவை சாற்றிவிட்டு கட்டிலில் சொகுசாய் வந்து படுத்துக்கொண்டாள் அஷ்டா.
‘முதல்ல யாருக்கு கூப்பிடலாம்?’ என யோசித்தபடி ‘கான்டாக்ட் லிஸ்ட்டை’ அவள் ஸ்க்ரோல் செய்ய,
‘என்னை தண்டசோருன்னு’ சொன்ன ஷீலாவுக்கு பண்ணுவோம்’ என அவள் எண்ணை அழுத்தியவள், பிறகு வேகமாய் ‘கட்’ செய்து,
‘வேணாம்! வேணாம்! எனக்கு அறுபதாம் கல்யாணம் தான் நடக்கும்ன்னு சொன்ன கவிக்கு தான் முதல் கூப்பிட்டு அவ மூக்குடைக்கணும்!’ என்று எண்ணியவள்,
பின்னே, ‘இல்ல இல்ல! எனக்கு தொப்பை வச்சவனும், சொட்ட விழுந்தவனும் தான் கிடைப்பான்னு சொன்னால அந்த வர்ஷா அவளுக்கு தான் முதல்ல சொல்லணும்’ என்று மாற்றி மாற்றி எண்ணியவள் பிறகு வெகு நேர குழப்பத்தில், யாருக்கும் சொல்ல வேண்டாம் என முடிவெடுத்து, ஓய்ந்து படுத்தாள்.
ஆனாலும் மனது கேட்கவில்லை.
சொல்லணும், ஆனா சொல்லக்கூடாது! என விதவிதமாய் நினைத்து, பின்னே முடிவாய்,
‘Hello girls!!! Finally I’m Engaged’ என டைப் செய்து அவர்களது வாட்சப் க்ரூபில் அனுப்பி வைத்தாள்.
செய்தி சொல்லியாகிவிட்டது! அது போதும்!!! என்ற எண்ணத்தோடு கண்ணை மூடி படுத்தவளுக்கு, கண்முன்னே வீரனின் முகம் நிழலாடுவதை போல தோன்ற படக்கென விழிகளை திறந்தாள்.
‘இவர் ஏன் தினமும் வராரு?’ என யோசித்தவள், ‘ப்ச்!’ என்ற சலிப்போடு ஒருக்களித்து படுத்து தூங்க முயற்சிக்க, மீண்டுமாய் அவன் முகம்!!!
‘அய்யய்ய! இது என்ன எப்பப்பாரு தொல்லையா போச்சு!’ என எழுந்து அமர்ந்துவிட்டாள்.
‘தினமும் சும்மா சும்மா மூஞ்சி முன்ன வந்து சிரிச்சுக்கிட்டு! ஹும்ம்!’ என்ற அலுப்போடு,
‘சரி, கொஞ்ச நேரம் ஃபோன் நோண்டுவோம்’ என வாட்சப் ஸ்டேடஸ் எடுத்து பார்க்க ஆரம்பிக்க, அதில்
‘ஃபுல் அடிச்சும் போதையில்லை…
புல்லெட் பீர் அடிச்சும் கிக்கு இல்லை!
கள்ளுக்குடிச்சும் தூக்கமில்லை,
கண்ணமூடுனா… கனவுல நீதானே!
வேற யார் வருவா?’ என பருத்திவீரன் கார்த்தி ஏற்ற இறக்கங்களோடு வசனம் பேச, அதை ரசித்து சிரித்துக்கொண்டிருந்தவளுக்கு,
‘கண்ண மூடுனா கனவுல நீதானே!’ என்ற வரியில் பொறி தட்டியது.
வாய்விட்டு, “கண்ண மூடுனா கனவுல நீதானே’வா? அவரும் தான் சும்மா சும்மா என் கண்ணு முன்ன வராரு! அப்போ? அப்போ?” என யோசிக்க ஆரம்பிக்க, உன்னை நான் நல்வழியில் சிந்திக்க விடுவேனா? என சபதம் செய்ததை போல அவள் அலைபேசி ஒலித்தது.
‘ட்ரூகாலரில்’ ஜோதி என்று வரவே, ‘அட, நம்ம மெசேஜூ வேலை செய்யுது போலயே!!!’ என்றெண்ணி சந்தோஷமாய்,
“ஹாய் ஜோதி” என்றாள் அஷ்டா.
“என்னடி மெசேஜ் போட்டுருந்த! கல்யாணமாமே உனக்கு!” குரலில் சுரத்தே இன்றி கேட்டாள் ஜோதி.
“ஆமா ஜோதி! போன வாரம் தான் பார்க்க வந்தாங்க! என்னை பிடிச்சு போச்சாம்! அடுத்து கல்யாணம் தான்”
என சொன்னவளுக்கு கன்னங்கள் வெட்கத்தால் இறுகியது.
அவள் சொன்னதற்கு, ‘ஓ’ என்ற ஜோதி, “ஆல் த பெஸ்ட் டி’ என்றாள். அவள் சொன்ன வாழ்த்தில் வாழ்த்தியதற்க்கான சாயல் கொஞ்சமும் இல்லை.
அதை கண்டுக்கொண்டாளோ என்னவோ, “ஏன் ஜோதி என்னவோ டல்லா பேசுற மாதிரி இருக்கு?” என்றாள் அஷ்டா.
“ஹும்!” என்ற நீண்ட பெருமூச்சுடன், “நானும் உன்னமாறி தான்டி! கல்யாணம்ன்னு சொன்னதும் கனவுல மிதந்தேன்! ராஜேஷ் என்னை வந்து பார்த்துட்டு ‘ரொம்ப பிடிச்சுருக்கு, உடனே கல்யாணம் வைங்க’ன்னு சொன்னபோ எனக்கு அவரை தவிர யாருமே கண்ணுக்கு தெரியல! படுத்தா நடந்தா நின்னா எப்பவும் அவர் முகம் தான் தெரியும் எனக்கு! அந்த அளவுக்கு அவர் மேல ஆசை வச்சுருந்தேன்” என்று சொல்ல,
‘அட, அதான் நமக்கும் அவர் முகம் சும்மா சும்மா கண்ணு முன்ன வருதோ?’ என நினைத்தாள் அஷ்டா.
‘அப்ப நம்மளும் அவரை விரும்புறோமா?’ என அடுத்து அவள் யோசிக்க ஆரம்பித்தபோது,
“எல்லாம் ஃபிராடுங்கடி! ஏமாத்துக்காரனுங்க” என ஜோதி சொன்னதில் திடுக்கிட்டு,
“ஏன் ஜோதி, என்னாச்சு?” என்றாள் அஷ்டா.
“என்ன ஆகணும் இன்னும்! எல்லாம் முடிய போது! கல்யாணம் முடிஞ்சு மூணு வருஷம் கூட முழுசா ஆகல! ரெண்டு வயசு பிள்ளையோட அம்மா வீட்டுக்கு வந்து உட்காந்துருக்கேன்” என்றாள் ஜோதி.
ஏற்கனவே தோழிகளை சந்தித்தபோது அரைகுறையாய் தெரிந்தது தான் எனினும் அவள் வாயிட்டே வரும்போது என்ன? ஏது? என்று கேட்காமல் இருக்க முடியவில்லை.
“நல்லா தானே இருந்தீங்க ரெண்டு பேரும்?”
ஜோதி, “நல்லா தான் இருந்தோம், ரொம்ப நல்லா இருந்தோம்! எல்லாம் முதல் ஆறு மாசம் தான்! அதுக்கு பிறகு எல்லாம் மாறிடுச்சு! அவருக்கு நான் பழசாகிட்டேன்! எதுக்கு எடுத்தாலும் சண்டை, ஆர்ப்பாட்டம், போராட்டம்! ச்சை! என்னடா வாழ்க்கை இது!ன்னு நான் நொந்து போய் உட்காந்தப்போ எனக்கு பையனே பொறந்துட்டான்!
அதுக்கு பிறகாவது எல்லாம் பழையமாதிரி மாறும்ன்னு நினைச்சா…. இல்லை!! முன்ன விட மோசமா தான் போச்சு!
போடா நீயும் உன் வாழ்க்கையும்!ன்னு தூக்கி போடவும் முடியாம, இதான் என் வாழ்க்கைன்னு சகிச்சுக்கிட்டு வாழவும் முடியாம இப்போ கைல புள்ளையோட தவிச்சுக்கிட்டு இருக்கேன்!
ஒருவேளை எனக்கு இப்போ பிள்ளை இல்லன்னா நான் தெளிவா யோசிச்சுருப்பேனோ என்னவோ? அவரை எப்படி பட்ட ஆள்ன்னு தெரியும்ன்னு முன்னே இவன் பொறந்துட்டான்!” என அழுதுக்கொண்டே புலம்பினாள் ஜோதி.
இடைநிறுத்தாது கேட்டுக்கொண்டிருந்த அஷ்டாவுக்கு ஜோதியின் அழுகை அவளை கலங்க செய்தது.
ஜோதியின் திருமணத்திற்கு அஷ்டா சென்றிருந்தபோது, ஜோதியின் முகத்தில் இருந்த வெட்கம் கலந்து மகிழ்ச்சியும், அவளையே கண்களில் ஆசையுடன் சுற்றி சுற்றி வந்த அவள் கணவன் ராஜேஷும் இன்றும் நினைவில் இருந்தது.
தனக்கும் இதுபோல் ஒருநாள் நடக்கும் என்றுகூட எதிர்ப்பார்ப்போடு அவர்களை பார்த்திருந்தாள் அஷ்டா. ஆனால், இப்போது ஜோதி அழுகையில் பேச பேச, அவள் நிலையை நினைத்து பாவமாய் இருந்தது.
“எல்லாம் மாறிடும் ஜோதி, கொஞ்சம் வெயிட் பண்ணு”
“எதுவும் மாறாது அஷ்டா! நான் அவசரப்பட்டு அவருக்கு ஓகே சொல்லிட்டேன்! என் பேரெண்ட்ஸ் பார்த்து வச்சவன் எனக்கு பொருத்தமா இருப்பான்னு நினைச்சது என் தப்பு! அதான் அனுபவிக்குறேன்” என புலம்பிய ஜோதி,
“ப்ச்! சாரிடி! நீ உன் கல்யாணாம் விஷயம் பேசுறப்போ நான் என் கஷ்டத்தை சொல்லி புலம்பிக்கிட்டு இருக்கேன்!” என்றாள் வருத்தமாய்.
பின், “ஓகே அஷ்டா! டேட் பிக்ஸ் ஆனதும் சொல்லு, முடிஞ்சவரைக்கும் வர பார்க்குறேன்!” என்று சொல்லிவிட்டு அழைப்பை நிறுத்திவிட்டாள் ஜோதி.
பேசி முடித்த பின்னும் அவள் அழுகைக்குரல் தன் காதுகளில் ஒலித்துக்கொண்டிருப்பது போலவே தோன்றியது அவளுக்கு.
அதன்பின்னே வந்த அழைப்புகளுக்கெல்லாம் பதில் சொன்னாலும் மனத்தின் ஓரத்தில் ஜோதியின் வார்த்தைகள் விழுந்து அழுத்த ஆரம்பித்தன.
*****