செந்தமிழ் இரவு இல்லத்திற்குள் நுழையும் பொழுது, நிசப்த போர்வை போர்த்தி இருந்தது.
பொதுவாகவே வீட்டில் தந்தையையும் மகளையும் தவிர எவரும் கலகலவென்று சிரித்துப் பேச மாட்டார்கள். சவிதாவின் மகிழ்ச்சி எல்லாம், இதழோரம் விரியும் மௌனப் புன்னகையிலேயே உறைந்து விடும். பெரியவர்களும் அப்படியே!
அதனால் பெரும்பாலும் சற்று அமைதியாகத்தான் இருக்கும் வீடு. அதுவும் கடந்த மூன்று ஆண்டுகளாய், மௌனத்திற்கு மறுபெயராய் மாறிவிட்டது அவ்விடம்.
ஜெயராம் இருக்கும் பொழுது, எப்பொழுதுமே பேச்சொலி தான். தந்தையும் மகளும் இணைந்து விட்டால், ஒருசில தருணங்களில் சுவரில் பட்டு எதிரொலிக்கும் அளவிற்குச் சிரிப்புச் சத்தம் கேட்கும்.
இன்று மின்விசிறி, சமையலறை சத்தம், தொலைக்காட்சி என எல்லாமுமே இருப்பை வெளிப்படுத்தாத.. மூச்சடைக்க வைக்கும் அளவிற்கான அமைதியை உணர்ந்த தமிழிற்கு, எதுவோ சரியில்லை என மனம் எடுத்துரைத்தது.
“அம்மா..” என்றவளின் குரலிற்கு வெளியே வந்த சவிதா, “கைக்கால் கழுவிட்டு வா, சாப்பாடு எடுத்து வைக்கிறேன்!” எனச் செல்ல, சிந்தனையுடனே பின் தொடர்ந்தாள்.
செந்தமிழ் இளஞ்சேரலை மணந்து கொள்ளச் சம்மதித்த மகிழ்ச்சியில்.. தன்னை அறியாமலேயே உண்மையை உடைத்து விட்ட முட்டாள் தனத்தை எண்ணி சவிதா பாவமாய்ப் பார்க்க, அவள் முறைத்து விட்டுச் சென்றாள்.
அதன் பின்னர் அன்னையானவர் பேச முயற்சித்தது எல்லாம்.. விழலுக்கு இறைத்த நீராய் வீணாய்ப் போக, இளையவள் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.
மறுநாள் வேணுகோபாலனிடம் தமிழ் சம்மதித்ததைத் தெரிவிக்க, அவரிற்குமே வியப்பு தான்.
“என்னமா சொல்லுற.?”
“ஆமா மாமா.”
“ஆச்சரியமா இருக்கு. இவ, அவ்வளவு சீக்கிரம் ஒத்துக்கிற ஆள் இல்லயே.?”
சவிதா சிரித்து, “எனக்கும் அதே சந்தேகம் தான் மாமா. இருந்தாலும் அவ சரினு சொன்னதே பெரிசு. அதான், மேல எதுவும் கேட்டுக்கல நானு. கல்யாணத்தை நடத்தி வைப்போம், மத்ததைச் சேரல் பார்த்துப்பான்.”
“ம்ம்..” என அவர் பெருமூச்சு ஒன்றை வெளிவிட, “நேத்துச் சாயங்காலம் பேசினதுக்கு அப்புறம், அத்தை எதுவும் சொன்னாங்களா மாமா.?”
“ரெண்டு பேரும், ஒரே குணம் மாமா. ஒரு முடிவு எடுத்தா, எடுத்தது தான். பிடிவாதம் பிடிச்சா, பிடிச்சது தான்!”
“அது பிறப்பால வந்த குணம், மாத்துறது சிரமம். சரி, அடுத்துச் செய்ய வேண்டியத பார்க்கலாம்.”
“அத்தையோட சம்மதம், மாமா?”
“நானு பேசிக்கிறேன்!”
“சரி!” என்ற சவிதா, சேரலிடம் உரைப்பதற்காக நகர்ந்தார்.
* * *
சட்.. சட்.. என்ற தொடர்ந்த ஒலியில்.. வெள்ளிக் கடைக்குச் சென்று கொண்டிருந்த கீதா, அவ்விடம் நோக்கி நகர்ந்தாள்.
“அண்ணே.. வலிக்கிதுண்ணே.. விடுண்ணே..” எனக் குமார் தெருவில் உருண்டு கெஞ்சிக் கொண்டிருக்க, இளஞ்சேரலின் கையில் இருந்த கம்போ இடைவெளி இன்றி அவனது தேகத்தைப் பதம் பார்த்தது.
கீதா, “டேய்.. டேய்.. என்னத்துக்குடா இந்த அடி அடிக்கிற? கல்யாணம் நிச்சயம் ஆகியிருக்குடா அவனுக்கு, இப்பப் போயி அடிச்சிக்கிட்டு இருக்க.? ஊர்க்காரவங்களோ, அந்தப் பிள்ள வீட்டுலயோ யாரும் பார்த்தா.. என்ன நினைப்பாங்க? நாளப்பிள்ள பொண்டாட்டிக்காரி மதிப்பாளா.?”
“பொண்டாட்டி மதிக்கணும்னா, அதுக்குத் தகுந்த மாதிரி நடந்துக்கணும் அக்கா.”
“அதுசரி! இப்ப என்னத்துக்கு இந்த அடி?”
“கல்யாண மிதப்புல திரியிறான் போல? சொன்ன, ஒத்த வேலையைக் கூடச் செய்யல. அதை என்கிட்டயும் சொல்லல.”
கூலி வேலைக்குச் சென்றிருந்த குமாரின் அன்னை.. மகனிற்குச் சமைத்து வைப்பதற்காக இல்லத்திற்கு வந்த போது, அக்கம் பக்கம் வீட்டார் உரைத்ததைக் கேட்டு, பதறியபடி வந்தார்.
“ஐயோ என்பிள்ள! உன் கையி கட்டையா போக! விளங்குவியா நீயி?” என்றபடி மகனைத் தூக்க, “நானு விளங்குறது இருக்கட்டும். நீயி, என்ன சொல்லி என்கிட்டக்க இவனை வேலைக்கு அனுப்புன?”
கருவிழிகளை அங்கும் இங்குமாய் உருட்டியவர் அமைதிக் காக்க, “ஆத்தாளும் மகனும் கூட்டுக் களவாணிங்க. இனிமேலு, இவன் கடைப் பக்கம் வந்தியான் துணிய கழட்டிட்டு ஓட விட்டுடுவேன். ஒழுங்கா, வாங்குன காசு பத்தாயிரத்தை இன்னும் ஒரு வாரத்துல கொண்டு வந்து தந்துடணும். இல்ல, மறுநாளு வீட்டு வாசல்ல வந்து நிப்பேன்.”
“அண்ணே.. வேலை இல்லேனா, கல்யாணம் நின்னுப் போவும்..” என அவன் பாவமாய் உரைக்க, “நிக்கட்டும். உருப்படியா வேலை செஞ்சு சம்பாதிக்கத் துப்பு இல்லாதவனுக்கு, கல்யாணம் ஒண்ணுதான் குறை! நானே அந்தப் பொண்ணோட அப்பனை பார்த்து, ஆகாத பயலுக்கு என்னத்துக்குப் பொண்ணைக் கொடுக்குறீங்க? வேற நல்ல மாப்பிள்ளையா பாருங்கனு சொல்லீட்டு வந்திடுறேன்!” என்று விட்டு நகர,