எது நடக்க கூடாது என்று நினைத்தேனோ அது நடந்து விட்டதே…
என் பொண்ணை ஒழுக்கமா வளர்க்காம கோட்டை விட்டுட்டேனே… அக்கம் பக்கம் விஷயம் தெரிஞ்சா புழு பூச்சை பார்க்கிற மாதிரி பார்ப்பாங்களே… கடவுளே இந்த நிமிஷம் என் உயிர் பிரிஞ்சுடக் கூடாதா… மான அவமானத்துக்கு கட்டுப்பட்டு வாழாத வாழ்க்கை என்ன வாழ்க்கை….? இந்த பாவி மக ஏன் இப்படி புத்திக்கெட்டு திரியுறா… எந்த இடத்தில் தவறினோம் என்ற வேதனை அவருக்கு. எண்ணி எண்ணி அழுது மாய்ந்தார் தமயந்தி.
மணி பனிரெண்டை நெருங்கியும் யாரும் உண்ணாமல் காலையில் செய்த இட்லியும் சட்னியும் கேட்பாரற்று ஆறி போய் கிடந்தது.
Advertisement
தமயா எழுந்திரு…! வெறும் தரையில் புடவை முந்தானையை விரித்து சுருண்டு படுத்திருக்கும் தங்கையை கண்டு வேதனை கொண்டார் மணவாளன்.
அண்ணனின் குரல் காதில் கேட்டாலும் சிந்தையில் பதியவில்லை.
அவருக்குள் பலதரப்பட்ட உணர்வுகள். அவரவர் நியாயம் அவரவருக்கு.
Advertisement
கிராமத்தில் ஒழுக்கம், கட்டுப்பாடு,சாதி குலம், கோத்திரம் என்று கட்டுப்பெட்டியாக வளர்ந்தவர் அப்படி இருப்பது இயல்பு தானே…?
சாப்பாடு ஒன்னு தானா எனக்கு கேடு… கொஞ்சம் அடங்கி போயிருந்த கண்ணீர் மீண்டும் எட்டிப் பார்த்தது.
இப்போ என்ன நடந்து போச்சு? எவ்வளவு முயன்றும் எரிச்சலை அப்பட்டமாய் காட்டிவிட்டார்.
என்ன நடந்துச்சா? இனி என்ன நடக்கணும்? என் குடும்ப மானமே போச்சு. இருக்குற இடம் தெரியாம கௌரதையா வாழ்ந்தோம் இப்படி எல்லார் வாயிக்கும் அவலாகி போச்சே என் குடும்பம்…. அவரால் தாள முடியவில்லை.
ஆரம்பத்தில் இருந்தே நீ மனசளவில் பயந்து பயந்து பவித்ராவை ரொம்ப ரணப்படுத்ததிட்ட… அவ விஷயத்தை அதிக கற்பனையோட யோசிக்கிற….
அப்படி கண் கொத்தி பாம்பா வளர்த்தும் பாவி மக இப்படி என் தலையில் இடியை இறக்கிட்டாளே.
ஒன்னும் இடியை இறக்கல…. அவளுக்கு ஒரு பையனை பிடிச்சிருக்கு அவ்வளவு தானே…?
ரொம்ப சுலுவா சொல்லிட்டண்ணே… இந்த விஷயம் உன் பொண்டாட்டிக்கு தெரியுமா?
ம்ம்ம்ம்கூம் என்று உதட்டை பிதுக்கினார்.
தெரிஞ்சா அண்ணி என்ன சொல்லும்?
அது… அது… அவர் தடுமாறினார்.
தெரியுதில்ல…அண்ணியே அவ்வளவு பேசும்… அவரின் அகமும் புறமும் நடுங்கியது.
இந்த பாவி மகளுக்கு தெலுங்குகாரன் தான் கிடைச்சானா?
அவங்க சடங்கு சம்பிரதாயம் வேற… முறை வேற… நினைக்க நினைக்க என் நெஞ்சே வெடிச்சுடும் போலிருக்கே…. மார்பில் அறைந்து கொண்டு அழுதார்.
தமயந்தி… கர்ஜிக்கும் அண்ணனின் அதட்டலில் அழுகை அதுவாய் நின்று விட்டது.
அப்புறம் பேசிக்கலாம்… இப்போ போய் சாப்பிடு!
டேய் யுவா என்னடா பண்ற? உன் அம்மா அழுது அரட்டுறா வேடிக்கை பார்த்துட்டு இருக்க… கோபமாய் குரல் உயர்த்தியவர் காயத்ரி சாப்பிட எடுத்து வை என்றார் கட்டளையாய்.
சுசிலா பேத்தியை சாப்பிட வைக்க போராடிக் கொண்டிருந்தார்.
பவி கண்ணு இப்போ என்ன கை மீறி போயிடுச்சுன்னு இப்படி கலங்கி உட்கார்ந்திருக்க…?
பாட்டி அவங்க நம்மளவங்க இல்லை அது மட்டும் தான். அவங்க குடும்பமே ரொம்ப நல்ல மாதிரி.
பாட்டிக்கு புரியுது பவிம்மா ! உங்கப்பன் தமயந்தியை தான் கட்டிக்குவேன்னு ஒத்த காலுல நின்னப்போ அவ்வளவு கோவப்பட்டவ தான் நானு, இப்போ காலம் மாறி நிதர்சனம் புரிஞ்சு நான் உன் காதலை ஏத்துக்கலையா?
அதே மாதிரி உங்காத்தாவும் யதார்த்தம் புரிஞ்சுக்குவா. இப்போ முரண்டு பிடிக்கிறான்னு வருத்தப்படாத கண்ணு.
பாட்டி உனக்கு சப்போர்ட்டா இருப்பேன்…. சாப்பிடு தங்கம்… கெஞ்சி கொஞ்சி மூன்று இட்லியை ஊட்டி விட்டார்.
“——————“
அக்கா மாமா சூப்பர் டைப்…! ISO சான்றிதழ் கொடுத்தான் யுவராஜ்.
என்னடா சொல்ற? புரியாமல் பார்த்தாள் பவித்ரா.
நான் மாமாட்ட பேசினேன். ரொம்ப எளிமையா பழகுறாரு.
உனக்கு என்மேல வருத்தம் இல்லையே யுவி….? சங்கடத்துடன் தம்பியை பார்த்தாள். அவனை பார்க்கவே ஒரு மாதிரி இருந்தது.
இதுல என்னக்கா வருத்தம்? நீ எல்லா பக்கமும் யோசித்து தான் முடிவு பண்ணியிருப்ப..!
அம்மா கொஞ்ச நாளைக்கு புலம்புவாங்க…. அப்புறம் மனசு மாறி ஒத்துக்குவாங்க.
அம்மா அழறதை பார்த்தால் என் மனசை பிசையுது யுவி. தப்பு பண்ணிட்டோமோன்னு மனசாட்சி குடையுது.
நம்ம குடும்ப சூழ்நிலை, அம்மாவோட குணம் எல்லாம் தெரிஞ்சு தான் நான் கவனமா இருந்தேன். எவ்வளவு முயற்சி பண்ணியும் ஹரியை தவிர்க்க முடியல.
உண்மையை சொல்லணும்னா அவரை மறுக்க காரணமே இல்லை. தொண்டையை அடைத்தது வேதனை.
விடுக்கா பார்த்துக்கலாம். மாமா இருக்காரு எந்த பிரச்சனை வந்தாலும் அவர் பார்த்துப்பார்….!
உனக்காக இவ்வளவு தூரம் தூக்கம் கெட்டு அறுநூறு கிலோ மீட்டர் டிரைவ் பண்ணி வந்திருக்காரே… சான்ஸ்லெஸ் அக்கா… மாமா செம்ம தெலுங்கு ஹீரோ…. பிரம்மித்தான்.
உனக்கு எப்போதும் எல்லாமுமா அவர் இருப்பார்.அவ்வளவு அழகாய் அழுத்தமாய் ஆதரவுடன் பேசினான் யுவி.
தேங்க்ஸ் யுவி… நிம்மதி பெருமூச்சுடன் அவன் தோளில் சாய்ந்தாள்.
அக்கா இதே மாதிரி நான் ஏதாவது பாரின் கேர்ளை லவ் பண்ணிட்டு வந்து நின்னா நீ எனக்கு சப்போர்ட் பண்ணனும் சொல்லிட்டேன்! அவன் தீவிரமாய் சொல்ல பொங்கிய சிரிப்புடன் அவன் காதை திருகினாள்.
காயத்ரிக்கு ஏன் யுவி என் மேல இவ்வளவு கொலை வெறி? அவ்வளவு வருத்தம் பவித்ராவிற்கு.
விடுக்கா காயத்ரி சுபாவம் அது தான். நீ அப்பா செல்லமா வளர்ந்தல்ல அது தான் காயுக்கு எப்போமே உன் மேல கோபம். கோபமுன்னு கூட சொல்ல முடியாது பொறாமை.
எல்லாரும் உன்னை தூக்கி வச்சு கொண்டாடாடுறாங்கல்ல அவங்க முன்னாடி நீ தலை குனியனும்னு ஒரு குரூரம்.
காலையில் இத்தனை களேபரத்திலும் கூட மாமாவை அப்படி அளவெடுத்து பார்த்தா தெரியுமா?
தம்பி இவ்வளவு விபரமும் பக்குவமுமாய் இருப்பது கண்டு அளவற்ற ஆனந்தம் பவித்ராவிற்கு.
இவன் குடும்பத்தை தூக்கி நிறுத்திவிடுவான் என்ற நம்பிக்கை அவளுக்கு.
“——————–“
தமயந்தி நீ பவித்ராக்கு மட்டும் அம்மா இல்லை. உன்னை நம்பி இன்னும் ரெண்டு பிள்ளைங்க இருக்காங்க அவங்களுக்காக உன் உடம்பை கவனிச்சுக்கோ… ஏற்கனவே Bp, சுகர் வந்தாச்சு இதுல சாப்பிடாம வீம்பு பிடிச்சு உட்கார்ந்து இருக்க…
தமயா ரொம்ப குழப்பிக்காம இரு! அதிக குழப்பத்தில் சிந்தனை தாறுமாறா தரிக்கெட்டு ஓடும்.
எனக்கென்னவோ பயமா இருக்குண்ணே… வற்றி இருந்த கண்ணீர் குளத்தில் மீண்டும் நீர் சுரக்க ஆரம்பித்தது.
என்ன ஆறுதல் வார்த்தை சொல்லிவிட முடியும்? ஹரிசரண் செல்வாக்கை அவர் அறிவாறே…
ஹரிசரண் பற்றி தமயந்திக்கு தெரியாமல் இருக்கலாம் அவருக்கு நன்றாக தெரியுமே…
அவனுக்கு எத்தனை மினிஸ்டர்கள் உறவினர்கள்… எத்தனை நடிகர்கள் அவன் நெருங்கிய சொந்தங்கள், இந்திய அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் அவனுக்கு பங்காளி வழி பெரியப்பா மகன். அவனுக்கு எல்லா தரப்பிலும் செல்வாக்கு உண்டு. அவனை எப்படி எதிர்க்க முடியும்?
கோயிலுக்கு வந்த ஆடு அருள்வந்து உதறினாலும் சரி உதறாவிட்டாலும் சரி வெட்டுபட போவது உறுதி.
எப்படியும் ஹரி பின் வாங்க போவதில்லை. இந்த ஜென்மத்தில் ஹரிக்கு பவித்ரா தான். அவன் பவித்ராவிற்காக பார்க்கிறான்… அவள் ஆசைக்காக அவள் தரப்பு சம்மதம் வேண்டுகிறான் இல்லை என்றால் அவன் அதிரடி வேறு மாதிரி இருக்கும்.
இப்போதைக்கு எதையும் பேச வேண்டாம் தமையா
கண்டதையும் யோசிக்காம கொஞ்ச நேரம் தூங்கி எழுந்திரு. நான் வீடு வரைக்கும் போய் வரேன். அத்தை பார்த்துக்கோங்க என்று சுசிலாவிடம் கூறிவிட்டு வெளியில் வர…
புழுதி கிளப்பிக் கொண்டு கறுப்பு நிற ஆடிக்கார் கார் ஒன்று வந்து நின்றது.
யாரது என்று அவர் யோசனையுடன் பார்க்க
காரில் இருந்து மூன்று ஆண்கள் இறங்கினார்கள்.
யார் இவர்கள்? யோசிக்கும் போதே அவர்களுக்குள் பேசிக் கொள்ளும் மொழியை வைத்தே புரிந்து கொண்டார்.
பவித்ரா இல்லு இதேனா? பஞ்சகச்சம் போல் வேட்டி கட்டியிருந்த அந்த மனிதர் கேட்க…