Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

நமக்காக💞18

பாவம் அந்த பொண்ணுக்கு ஏன் புத்தி இப்படி போச்சோ என்றாள் தேவிகா.

என்னத்த பாவம்…  பொட்ட கழுதைக்கு பொறுமை இல்லைன்னா இப்படி தான் போய் சேரணும் என்றார் பர்வதம்.

யாரும் எதுவும் பேசவில்லை.

இந்த காலத்துல பொண்ணுங்க கண்டதே காட்சி கொண்டதே கோலம்னு  நிற்குதுங்க…. எல்லாம் கலி காலம் என்றார் உதட்டை பிதுக்கி.



Advertisement

சுபிக்கு எரிச்சலாய் இருந்தது. பாவம் அக்கா,இந்த மாமியார் கிழவிகிட்ட எப்படி குப்பை கொட்டுதோ…?நல்ல வேளை நம்ம மாமியார் சூப்பர் என்று அவள் மூளை அறிவுறுத்தியது. ஆனாலும் அக்கா பாவம் என்று தமக்கைக்காய் பரிதாபம் கொண்டாள்.

சௌந்தர் ராஜன் ஒரே மகன். தேவிகாவிற்கு வேறு வழியே இல்லை மாமியாரோடு தான் வாழ்ந்தாக வேண்டும். பர்வதம் கொஞ்சம் அல்ல நிரம்பவே கர்வம் கொண்டவர். ஆண் மகனை பெற்ற ஆணவம் அவருக்கு.தேவிகா அவரை  சமாளித்து வாழ்ந்து கொண்டிருக்கிறாள். தேவிகாவிற்கு கணவணின் சப்போர்ட் உண்டு அது தான் அவளுக்கு மிகப்பெரிய ஆறுதல்.

Advertisement

எங்க காலத்துல கூட்டு குடும்பத்துல வாழ்ந்தோம். எவ்வளவு உழைச்சோம் தெரியுமா? அழுகுற

Advertisement

பிள்ளையை தூக்க கூட நேரம் இருக்காது, சோறு திங்க நேரம் இருக்காது. இன்னைக்கு பொண்ணுங்க மினுக்கி சிங்காரிச்சுகிட்டு ஊரு சுத்தணும்னு நினைக்குதுங்க.

நாலு சுவத்துக்குள்ள அடி உதை வாங்கிட்டு ஆனாலும் கௌரவமா வாழ்ந்தோமே தவிர

கோர்ட்டுக்கு போகலை…. தற்கொலையும் பண்ணிக்கல. கிடைத்தது சான்ஸ் என்று பர்வதம் விளாசினார்.

Advertisement

விடும்மா….காலம் மாறிட்டு வருதுல்ல… பேச்சை மாற்ற முயன்றார் சௌந்தர் ராஜன்.

பெரியம்மா சொல்றதும் சரிதானே…! வாழ்க்கையை சுகமா, சகல சௌகரியமா வாழணும்னு நினைத்துட்டு இருக்கிறதுனால தான் இன்னைக்கு நிறைய பேர் வாழ்க்கையில் பிரச்னை.

எல்லாவற்றிலும் அவசரம், பிடிவாதம்னு இருந்தா எப்படி? நிதர்சனம் புரிந்து ஒருத்தருக்காக ஒருத்தர் விட்டுக்கொடுத்து வாழலைன்னா வாழ்க்கை பயணம் திசை மாறி போயிடும் என்றான் சுப்ரஜாவை பார்த்தபடி.

எல்லாவற்றையும் கேட்டப்படி தலைகுனிந்து அமர்ந்திருந்தாள்.

அவளுக்குமே கொஞ்சம் புரிந்தது. தான் இன்னும் பக்குவப்பட வேண்டும் என்று உணர்ந்தாள்.

அந்த பையனை பிடிச்சு உள்ளே போட்டுட்டீங்களா? கவலையாய் கேட்டார் பர்வதம்.

ஆமா பெரியம்மா…. நல்ல பையனா இருக்கான். பொண்டாட்டியை பார்த்து கதறி அழுகுறான், அந்த பொண்ணு வலியில் துடிக்கிறதை பார்த்து இவன் அதை விட துடிக்கிறான்.

அந்த பொண்ணு மேல அவ்வளவு பாசம் வச்சிருக்கான். அந்த பொண்ணுக்கு அதை புரிஞ்சுக்க தெரியல. எடுத்தோம் கவிழ்த்தோம்னு அவன் வாழ்க்கையில் விளையாண்டிருக்கு.

ஆளுங்கட்சியில் முக்கிய பொறுப்பில் பொண்ணோட அப்பா இருக்கார். சும்மா விடுவாங்களா? கரை வேட்டி காரனுங்க கோஷம் போட்டுட்டு ஸ்டேஷன் வாசலில் உட்கார்ந்துட்டானுங்க. மீடியா தொல்லை வேற…. நாள் முழுக்க எவ்வளவு களேபரம்!

எவ்வளவு பேச்சு வார்த்தை நடத்தியும் உடன்பாடில்லை. பெரிய இடத்தில் இருந்து பிரஷர்.வேற வழி இல்லாம அந்த பையனை அரெஸ்ட் பண்ணி லாக்கப்பில் வைத்தாச்சு.

“—————————“

இரவு உணவு முடிந்து தங்களுக்கு கொடுத்த அறைக்கு சென்றார்கள்.

காலையில் டிபன் முடிச்சுட்டு கிளம்பிடலாமா என்றான்.

ம்ம்ம்ம்ம்ம் என்றாள்.

சரி என்று படுத்துவிட்டான்.

அருகில் படுத்தவள் உருள்வதும் புரள்வதும் விட்டத்தை வெறிப்பதுமாக இருந்தாள்.

கொஞ்சம் சிரிப்பு கூட வந்தது மன்னருக்கு ஆனாலும் கப்சிப் என்று படுத்திருந்தான். அவள் மனநிலை புரியாமல் இல்லை சரி என்னதான் செய்கிறாள் பார்ப்போமே என்ற குறுகுறுப்பு அவனுக்கு.

தனக்கு முதுகு காட்டி படுத்திருப்பவனை தட்டி பேச கை நீட்டியவள் சட்டென்று இழுத்துக் கொண்டாள்.

சட்டென்று இறங்கி பேச அவளுக்கு வரவில்லை.

அவனை கஷ்டப்படுத்துகிறோம் என்று புரியவும் செய்தது.

இரண்டொரு வார்த்தை அவனிடம் பேசி விட்டால் நிம்மதியாக தூக்கம் வருமோ என்னவோ…. ஆனாலும் தயக்கம் வந்து தொலைகிறதே…

நவமணி கூட அடிக்கடி சொல்வதுண்டு குணத்தால் குடி மூழ்கி போனதை விட கோபத்தால் குடி மூழ்கி போனது அதிகம் என்று.

தன் அர்த்தமற்ற கோபம் குடும்பத்தில் பிரச்சனைகளை உருவாக்கும் என்று அவளுக்கும்  புரிகிறது.

அவளது மன உணர்வுகளின் போராட்டம்  அவனை வெகுவாய் கரைத்தது. தன் மனைவி மருகி தவிப்பதை கண்டு உள்ளம் குதூகலிக்கும் குரூர புத்தி அவனுக்கு இல்லை.

வேண்டாம்… இதற்கு மேல் அவள் தவிக்க வேண்டாம்.  கட்டிய மனைவியிடம் ஈகோ என்ன வேண்டிகிடக்கிறது? இயல்பாய் திரும்பி படுப்பது போல் கையை நீட்டி அவள் மீது கை போட்டான்.

ஏற்கனவே தவித்துக் கொண்டிருந்தவள் சங்கோஜாமாய் தட்டிவிட்டு நெளிய… மாமாவை கட்டிக்கிட்டா தான் சுப்பம்மாக்கு தூக்கம் வருமா? கிசுகிசுத்துக் கொண்டே மெல்ல தன் கை வளைவிற்குள் இழுத்து அணைத்துக் கொண்டான்.

சுப்பம்மாவா? அவளுக்கு கோபம் தாறுமாறாய் எகிறியது.

ம்ம்ம்ம் ராங்கி ரங்கம்மா கோபக்கார சுப்பம்மா.

போய்யா மன்னாரு…. சிலிர்த்துக் கொண்டாள்.

எதை சொன்னால் அவள் இயல்பாவாள் என்று அவனுக்கு தெரியாதா?சிரித்துவிட்டவன் சேர்த்தணைத்து சே(சோ)ர்ந்த பின்னே விலகினான்.

இது வாத்ஸ்யாயன் எழுதாத விதி. பகல் பொழுதில் எவ்வளவு முட்டிக்கொண்டாலும் முரண்டுபிடித்தாலும் கட்டில் நெருக்கம் அனைத்தையும் தூரத்தில் தள்ளிவிடும்.

இணை சேர்ந்த பின்னே மன இறுக்கம் தளர்ந்த உணர்வு அவளுக்கு. அவனுக்கும் தான்.

ஸாரி என்றாள் அவன் வெற்று முதுகில் முகம் புதைத்து…

நானும் ஸாரி என்றவன் சொடுக்கி இழுத்து தன் மீது போட்டுக் கொண்டான்.

முதலில் இணைந்து கண்ட சுகத்தை விட இப்போது இழைந்து இளைப்பாறுவதில் தான் பேரின்பம் கண்டான் மன்னர் மன்னன்.

ஸாரி என்றாள் மறுபடியும்!

ஸாரி திரும்ப திரும்ப கேட்க வேண்டாம். ஸாரி கேட்க கூடாதபடி நம்ம ரெண்டுபேரும் சூழ்நிலை புரிந்து நடந்துக்கணும் என்றான் ஆழ்ந்த குரலில்.

உங்களுக்கு என் மேல கோபம் தானே? அவன் முகம் பாராமலே கேட்டாள்.

இல்லைன்னு பொய் சொல்ல மாட்டேன். நிறையலாம் இல்லை. கொஞ்சம் இருந்துச்சு இப்போ இல்லை…. இறுக்கி அணைத்துக்கொண்டான்.

எனக்கு உங்க மேல நிறைய இருந்துச்சு!

இன்னும் இருக்கு போல…. சிணுங்களுடன் கேட்டான்.

ம்ம்ம்ம்ம் என்றாள் கொஞ்சலாய்.

அப்படியே விடக்கூடாதே…. உடனே சரி பண்ணியாகணுமே… மீண்டும் முத்த மழை பொழிந்து அடுத்த ஒரு கூ(தே)டலை நிகழ்த்தி விட்டான் மன்னாதி மன்னன்.

“————————“

சுகமாய் உறங்கிக் கொண்டிருந்தான்.

சாருக்கு இன்னும் விடியலையோ என்றாள் முறைப்புடன்.

நைட் ஓவர் டைம் என்று அவன் கண்சிமிட்டி சிரித்தான்.

ச்சீ….காலங்காத்தால பேச்சை பாரு… பக்கி… தலையணையை எடுத்து மொத்தினாள்.

சகலை வீடு இது ரகளை வீடா மாத்திடாத சுப்பம்மா….. சிரித்துக்கொண்டே குளியலறைக்குள் ஓடினான்.

டவல்,சோப்,ஷாம்பு எல்லாம் இருக்கு. சீக்கிரம் தலைக்கு குளிங்க. ஸ்ரீரங்கம் போகலாம்னு அக்கா சொன்னாங்க.

வந்து ஹெல்ப் பண்ணலாமே என்றான் கதவை திறந்து வெளியே முகத்தை நீட்டி.

அடச்சீ…. என்று வெட்க சிரிப்புடன் வெளியே ஓடினாள்.

காலை உணவை முடித்துக் கொண்டனர்.

பூ, பழம், இனிப்பு,மன்னர், சுப்ரஜாவிற்கு புது துணி என்று தாம்பாள தட்டில் வைத்து மாமியாரிடம் கொடுத்து கொடுக்க சொன்னாள் தேவிகா.

பர்வதம் காலில் விழுந்து ஆசிப்பெற்று தாம்பூலம் பெற்றுக் கொண்டனர் விருந்துக்கு வந்த புதுமண தம்பதியர்.

அம்மா நீங்க ஸ்ரீரங்கம் வறீங்களா என்றான் சௌந்தர்.

நான் வரலை நீங்க போயிட்டு வாங்க என்றார் பெரிய குரலில்.

போர்ட்டிக்கோவில் நின்ற  Maruthi Ertiga  காரை எடுத்து வெளியில் நிறுத்தினான் சௌந்தர். அப்பா நான் பிரண்ட் சீட் என்று துள்ளி ஓடி ஏறிக்கொண்டாள் லக்க்ஷனா.

நீ சித்தி கூட பின்னாடி உட்காரு உங்க சித்தப்பா முன்னாடி உட்காரட்டும் என்றான் சௌந்தர்.

மாமியார் வீட்டு ஜனம் வந்தா என் மகன் வாயெல்லாம் பல்லா இளிச்சுட்டு கிளம்பிடுவான் என்று முனுமுனுத்தார் பர்வதம்.

சுப்ரஜா நின்று முறைத்து பார்க்க… அவள் கைபிடித்து அழுத்தினான் மன்னர். அவள் திரும்பி அவனை முறைக்க… கண்மூடி திறந்து அமைதியாக இரு என்று ஜாடை காட்டினான்.

தேவிகாவிற்கு கண்ணில் நீர் கோர்த்து விட்டது.  நல்ல வேளை தங்கைக்கோ அவள் கணவனுக்கோ கேட்கவில்லை என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

பர்வதம் அப்படி தான், தேவிகா வழி சொந்த பந்தம் என்று யார் வந்தாலும் அவருக்கு ஆகாது.

இத்தனைக்கும் தேவிகா சம்பாதிக்கும் மருமகள்.

தன் மாமியார் இப்படி இல்லை என்று மீண்டும் நிம்மதி அடைந்தாள் சுபி.

“————————“

ஞாயிற்று கிழமை என்பதால் கோயிலில் நல்ல கூட்டம். வரிசையில் காத்திருந்து ரங்கநாதரை சேவித்தனர்.

கோயிலுக்கு சென்றாலே ஒரு நேர்மறை எண்ணம் தோன்றும் என்பது உண்மை தான் போலும்.

சுபிக்கு மனசு இறகாய் இருந்தது.

மத்திய பேருந்து நிலையத்தில் கொண்டு வந்து விட்ட தேவிகா குடும்பத்தாரிடமிருந்து விடைபெற்றுக் கிளம்பினார்கள்.

சித்தி உன் பேச்சுக்கா…. இன்னைக்கே ஏன் போற? கண்ணை கசக்கி உதட்டை பிதுக்கினாள் லக்க்ஷனா.

சித்தப்பாக்கு லீவ் இல்லைடா ராசாத்தி என்றாள் தேவிகா.

அப்போ சித்தப்பா போகட்டும் என்றாள் குழந்தை.

சுபிக்கு சிரிப்பு வந்துவிட்டது.

அது சித்தப்பாக்கு சமைச்சு கொடுத்து வேலைக்கு அனுப்பி வைக்க ஆள் வேணுமில்ல என்றாள் பெற்றவள்.

என்னை மாதிரி சித்தப்பாவும் பேபியா? அனைத்து பற்களையும் காட்டி லக்க்ஷணமாய் சிரித்த குழந்தையை அள்ளி அணைத்து முத்தமிட்டாள் சுபி.

“————————–“

நாம் அப்படி இப்படி எப்படி இருந்தாலும் நாட்கள் அழகாய் நகர்ந்து கொண்டோ பறந்து கொண்டோ இருக்கும் அல்லவா?

திருமணம் முடிந்து ஒன்றரை மாதம் ஆகப்போகிறது.

நடுவில் ஒரு முறை சரவணன் அஞ்சலி வந்து போனார்கள். சுப்ரஜா ஒரு முறை அம்மா வீட்டுக்கு போய் வந்தாள்.

மன்னர் எவ்வளவு தான் பக்குவமாய் மனைவியிடம் நடந்து கொண்டாலும் அவள் சிலநேரம் பிடிவாதம் பிடிப்பதும் முதிர்ச்சி அற்ற நடத்தைகள் மூலம் அவனை அதிருப்திக்கு உள்ளாக்குவதுமாய் தான் இருந்தாள்.

மன்னர் விறைப்பான வேலை பார்க்கும் போலீசாக இருந்தாலும் அருமையான கணவனாக நடந்து கொண்டான்.

மூத்த மகள் தேவிகாவிற்கு அமைந்த மாமியார் போல் இளைய மகளுக்கு அமைந்துவிட்டால்? அல்லும் பகலும் அனத்திக் கொண்டிருந்தார் நவமணி.

மகளுக்கு எப்படிபட்ட மாமியார் அமைவாரோ…. இவள் எப்படி குடும்பம் நடத்துவாளோ என்று கவலைப்பட்டிருந்த நவமணி இப்போது அவ்வளவு நிம்மதியாக இருக்கிறார்.

கொண்டவன் ஸ்டராங்கா இருந்தா போதும் எங்கே வேண்டுமானாலும் கோலோச்சலாம்.

பாப்பாத்தி மருமகளை மகள் போல் நடத்தவில்லை, குழந்தை போல் நடத்தினார்.

எண்ணெய் வைத்து சிக்கு எடுத்து சடை பிண்ணி பூ வைத்துவிடுவார். அவர் காலத்து ஜடை எல்லாம் மருமகளுக்கு ஆசையாய் பிண்ணி விடுவார்.

அவளுக்கு அதிரடியாய் செய்யக்கூடிய ஸ்னாக்ஸ் செய்து கொடுப்பார்.

மாமனாரும் மருமகளை தாங்கினார். கள்ளக்குறிச்சி பக்கம் சென்று வந்தால் சுபிக்கு தின்பண்டம் வாங்கி வருவார்.

நாட்கள் சென்று கொண்டிருந்தது.

ஆவணி பிறந்தா மூனாம் மாசம் கணக்கு தொடங்குது சுபிக்கு தாலி பிரிச்சு போடணும் என்றார் பாப்பாத்தி.

அவங்க அம்மா வீட்டுக்கு சொல்லு என்றார் பூமாலை.

மூத்த மருமகளுங்களுக்கு சொல்ல வேணாமா என்றார் பாப்பாத்தி.

இது என்ன பெரிய விசேஷம் இதுக்கு போய் எல்லாரையும் தொந்தரவுபண்ணிக்கிட்டு….

இவ்வளவு தூரம் அவங்களை அலைய விடணுமா? நம்ம வீட்டோட சிம்பிளா பண்ணிக்கலாம் என்றான் மன்னர்.

“————————–“

ஏழு பவுனில் தாலி சங்கிலி வாங்கி விட்டார் பூமாலை. திருமணத்திற்கு முன்பே பேச்சு அது தானே….

நவமணி தாய் வீட்டு சார்பாக வாங்க வேண்டிய உரு எல்லாம் வாங்கி வந்திருந்தார். தேவிகா, கிருஷ்ணா அவன் மனைவி சுகன்யாவுடன் வந்திருந்தான்.

ஹைலைட் என்னவென்றால் கல்பாக்கத்தில் இருந்து அஞ்சலியும், கோவையில் இருந்து தீபாவும் வந்திருந்தனர்.

எதேச்சையாய் பேசும்போது சுபிக்கு தாலி பிரித்து போடும் சடங்கு செய்ய வேண்டும் என்று சொல்லியிருந்தார் பாப்பாத்தி.

அதற்கு மூத்த மருமகள்கள் வருவார்கள் என்று அவரே நினைக்கவில்லை.

நல்ல நேரத்தில் சுப்ரஜாவையும் மன்னர் மன்னனையும் மனையில் அமர்த்தி மஞ்சள் கயிறை பிரித்து தங்க  சங்கிலியில் மாங்கல்யத்தை கோர்த்தனர் சுமங்கலி பெண்கள்.

டப்பா நிறைய உருக்கள் இருந்தது. தேவிகா தன் முறைக்கு வாழைப்பூ, மாங்காய் என்று ஒவ்வொரு கிராமில் வாங்கி வந்திருந்தாள். நவமணி மகளுக்கு அரைக்காசு லட்சுமி பொட்டு, வாழை சீப்பு, நாணல் குழாய் என்று வாங்கி வந்திருந்தார். கடைசியாக  மன்னர் சிவப்பு பவழம் அடங்கிய டப்பாவை எடுத்து கொடுத்தான். அவர்கள் சாமிக்கு கறுப்பு ஆகாது என்பதால் சிவப்பு பவழம் அரைபவுனில் நான்கு வாங்கி இருந்தான்.

தீபாவும் அஞ்சலியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

இது என்னத்தை புதுசா இருக்கு?நம்ம வீடுகள்ள பவழம் எல்லாம் போடுவாங்களா? தீபாவிற்கு மனம் தீயாய் தகித்தது.

அவர்கள் யாரும் போட்டிருக்வில்லை அல்லவா? அந்த கடுப்பு அவளுக்கு.

பவழம் போட்டா உடம்புக்கு குளிர்ச்சியாம் அது தான் உன் கொழுந்தன் தங்கத்திலே செய்து கொண்டு வந்திருக்கான் என்றார் சிரிப்பாய்.

குரும்பூர்காரிக்கு வந்த வாழ்வை பார்த்தாயா என்று பொறாமையில் பொசுங்கிக் கொண்டிருந்தனர்.

அஞ்சலிக்கா ஆம்பள இதையெல்லாம் கூடவா கவனிப்பான்? தீபா ஆத்து போனாள்.

அதை சொல்லு…. நமக்கு வாய்ச்சதுங்களுக்கு திங்கவும் தூங்கவும் தான் தெரியும்.

எம ராக்ஷசனா இருக்கானே இவனுக்கு தெரியாததே இல்லையா….?

தன் தங்தை நித்யாவை இவனுக்கே கட்டிக் கொடுத்திருக்கலாம் என்று இப்போது எல்லாம் அடிக்கடி வருந்துகிறாள் தீபா.

பேராசை கொண்ட ஒரு குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு உழைத்துக் கொட்டும் எந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் அவள் தங்கை.

போயும் போயும் ஒரு கான்ஸ்டபிளுக்கா  என் தங்கையை கொடுப்பது என்று கெத்து காட்டிய தீபா இன்று மன்னர் மனைவியை தாங்கும் அழகை பார்த்து அய்யோ தங்கையை இவனுக்கு கொடுத்திருக்கலாமே பூவாய் தாங்கியிருப்பானே என்று உள்ளுக்குள் தகித்துக் கொண்டிருந்தாள்.

ஏங்கி வருந்த மட்டும்தான் முடியும். கறந்த பால் மடிபுகுமா? யாருக்கு யார் என்று விதிபோட்ட முடிச்சு அல்லவா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!