இப்படியாகவே நாட்கள் கடக்க.. ஸ்பாட்டின் ஷெட்டிலும்.. மாலை டியூசனிலும் இருவரும் நேரடியாக இல்லை என்றாலும் மறைமுகமாக ஒருவர் கேள்விக்கு ஒருவர் பதில் சொல்லத் துவங்கியிருந்தனர்.. நந்தாவிற்கு அதுவே பெரிய முன்னேற்றமாய்த் தெரிய.. இதையே தொடர்ந்தான்.
மகிழுக்கும் ஒரு வழியாய் செமஸ்டர் முடிந்துவிட.. ‘வேலை பழகலாம்ல’ என்ற அமிர்து அவ்வாவின் புலம்பலை அலட்சியம் செய்து வாய்க்கால், சோளக்கொல்லை என முத்துவுடன் சேர்ந்து ஊரைச் சுற்றிக் கொண்டிருந்தாள்.
தன் கைட் அழைத்திருந்ததால்.. அவரைப் பார்க்க பெங்களூர் சென்றிருந்த நந்தா.. அன்று காலை தான் ஊர் திரும்பியிருந்தான்.. சீசர் தோட்டத்து வீட்டில் இருப்பதால்.. மூன்று நாட்களாக அதைப் பார்க்காமல் இருந்ததால்.. இன்று பார்க்கச் சென்றான்.
எப்பொழுதுமே இவன் புல்லட் சத்தம் கேட்டவுடன் பாய்ந்து ஓடி வருபவனைக் காணாமல் ஆச்சரியப்பட்ட நந்தா.. அவன் கட்டப்பட்டு இருக்கும் இடத்தை நோக்கி நடந்தான்.
மாமரத்தைப் பார்த்துக் குரைத்துக் கொண்டிருந்த சீசர் இவன் வந்ததும் வாலாட்டி அவனை அழைத்து ஏதோ சொன்னது.. அதன் அருகே அமர்ந்தவன் “என்னடா.. மூனு நாளா சாப்டியா இல்லையா” என செல்லம் கொஞ்சிக் கொண்டிருக்க
அதுவே ‘அடேய்.. மேல பாருடா’ என்பதாய் மரத்தைப் பார்த்தே குரைத்தது.. அதில் குழம்பியவன் அருகே சென்று.. மறுபுறம் பார்க்க.. அங்கே ஒருவரும் இருப்பது போலத் தெரியவில்லை.. மரத்தை அண்ணாந்து பார்க்க.. அங்கே மெல்லிய கொலுசு அணிந்த பாதங்கள் தென்பட்டது..
அது யாரென யூகித்தவன் “நீ கீழ வரியா.. இல்ல நான் மேல வரட்டுமா” என குரலை கடுமையாக வைத்துக் கொண்டு அதட்ட.. ‘ஐயோ இவன்கிட்டப் போய் மாட்டிகிட்டனே’ என தன்னை நொந்தவள்.. சரசரவென கிளையில் கால் வைத்து மறுபுறம் குதிக்க.. அவன் தான் அதிர்ந்து “ஏன்டி.. ஆண்டவன் வால் வைக்க மறந்துட்டானா.. இல்ல வைக்கற வரை பொறுமையில்லாம வந்து பொறந்துட்டியா.. (Xanax) கை கால் போனா என்ன ஆகறது” என மீண்டும் மிரட்டினான்.
அவன் கைக்குழந்தை போல அவளை அதட்டுவது அவளுக்கு எரிச்சலைத் தர “அது என்ன டி.. ஒழுங்காப் பேசுங்க.. நான் ஒன்னும் குழந்தை இல்லை.. உங்க வேலையப் பாருங்க” என முகத்தை வெட்டியவள்.. அங்கிருந்த சிமெண்ட் தொட்டியில் மாங்காயைக் கழுவ..
நந்தா “நீ குழந்தைன்னு கண்ணு உள்ளவன் எவனாவது சொல்லுவானா.. வாலில்லாத வானரம்.. எங்கண்ணு முன்னாடியே மாங்கா திருடுற.. உனக்கு ஏத்தம் தான்.. அதைக் கொடு டி” என அவள் பேசியதை கண்டு கொள்ளாமல் அவளை அதிகாரம் செய்தான்.
அவனின் அத்தகைய பேச்சு அவளுக்கு சுத்தமாய்ப் பிடிக்கவில்லை.. “அதெல்லாம் மரத்துக்கு சொந்தக்காரங்களுக்கு நல்லாத் தெரியும்.. நீ ஒன்னும் என்னை அதிகாரம் பண்ணாதே சரியா” என்றவள்.. திண்ணையில் அமர்ந்து அதை பக்குவமாய் அரிந்து உப்பு மிளகாய்த்தூளுடன் உண்ணத் துவங்கினாள்.
‘எருமை மேல மழை பேஞ்ச மாதிரி’ அவ வேலையை மட்டுமே பாக்கறாளே.. இங்க ஒருத்தன் நிக்கறது இவளுக்குத் தெரியலையா என மனதில் அவளை வசை பாட.. அதை உணர்ந்தோ என்னவோ.. “வேணும்னா கேளுங்க.. இப்படி பச்சப்பிள்ளை சாப்பிடறதை கண்ணு வைக்காதிங்க” என சொன்னது தான் தாமதம்.. அவனும் மாமரக் கிளையில் கால் வைத்து அவள் புறம் செல்ல.. சீசர் தான் இருவரையும் பாவமாகப் பார்த்து வைத்தது.
திண்ணையில் கத்தி, உப்பு என அனைத்தும் இருக்க.. ‘கேடி’ என எண்ணியவன் அவளை நெருங்க.. அவளும் விகல்பம் எதுவும் இல்லாமல் கையில் இருந்த மாங்காயைத் தர.. அதை வாங்கியவன் அங்கேயே அமர்ந்து அவள் பாதி படித்து வைத்திருந்த கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் ‘உன்னையே நீ அறிவாய்’ புத்தகத்தை எடுத்துப் பிரித்து அதில் கண்களை ஓட்ட.. மகிழ் திகைத்துப் போனாள்.
‘அவனிடம் நடந்து சென்று மாங்காய் கொடுக்கின்ற வேலை மிச்சம்’ என அவள் எண்ணியிருக்க.. அவன் இங்கேயே கடை விரிக்க மிரண்டு போனவள் “நீங்க கிளம்புங்க.. யாராவது பாத்தா வம்பாகிடும்.. முதல்ல போங்க” என அவனை யோசிக்காமல் விரட்டினாள்.
புத்தகத்தில் இருந்து பார்வையை மட்டும் உயர்த்தி அவளை ஆழந்து பார்த்துவிட்டு.. அவள் அருகில் இருந்த வாட்டர் பாட்டிலில் இருந்து தண்ணீரைக் குடித்தவன்.. விஷமச் சிரிப்புடன் அங்கிருந்து நகர்ந்தான்.
மரத்தில் ஏறி மறுபுறம் அமர்ந்தவன் “ஆமா.. இந்த மாங்கா ஆர்டினரியாத்தான் இருக்கு.. இதுக்கு ஏன் ரிஸ்க் எடுக்குற” என வினவ
தோளைக் குலுக்கியவள் “மாமந்தோட்டத்து மாங்கா நல்லாத்தான் இருக்கும்.. அதோட திருடி சாப்பிடற டேஸ்டே வேற” என ரசனையுடன் சொன்னாள்.
“நான்தானே அந்த மாமன்” என ஆர்வமுடன் கேட்டவனைப் பார்த்து ஒரு நிமிடம் திகைத்து விழித்தவள் “ம்ப்ச்.. உன்மூஞ்சி.. உங்கப்பா” என உதட்டைச் சுழித்துவிட்டு ஓடி மறைந்துவிட்டாள்.. அவளுடன் இவ்வளவு இணக்கமாகப் பேசிட முடியும் என்பதை அனுபவப் பூர்வமாக உணர்ந்த நந்தாவும் இதழில் உறைந்த புன்னகையுடன் வீடு நோக்கிச் சென்றான்.
மகிழோ தன்னைக் குறித்த சுய அலசலில் இருந்தாள்.. அவன் நினைக்கலாம் அவள் பார்க்க குழந்தை போல இருக்கிறாள் என.. ஆனால் முதிர்வு மனம் சம்பந்தப்பட்டது அல்லவா.. சில நாட்களிலேயே நந்தாவின் ரசனைப் பார்வைகளை உணர்ந்து கொண்டவள்.. விலகி இருந்தால் தான்.. இது தொல்லையாகும்.. முடிந்தவரை நாசுக்காக முகம் முறித்து அனுப்பிவிட வேண்டும் என எண்ணியிருந்தாள்.
ஆனால் நந்தாவும் எதுவும் கண்ணியக் குறைவாக நடந்து கொள்ளவில்லை.. இப்போது வந்த போது கூட அவள் முகத்தை விட்டு அவன் பார்வை நகர்ந்திருக்கவில்லை.. ஆனால் எதற்கு சும்மா இருக்கும் சேவலை சீண்ட வேண்டும்.. அது நம்மைக் கொத்த வேண்டும் என நினைத்தாள்.
இருந்த பொழுதும் அவனிடம் இவ்வளவு இயல்பாக எப்படிப் பேச முடிந்தது என இப்போது வரை அவளுக்கு விடை தெரியவில்லை.. ஒருவேளை சிறுவயது பிடித்தம் இன்றும் தொடர்கிறது போல என தன்னைத் தானே சமாளித்துக் கொண்டவள்.. அவனோடு பகிர்ந்துண்ட அந்த மாங்காயின் விதையை வீட்டின் வெளியே ஒரு மூலையில் தூக்கி வீசினாள்.. அவன் நினைவுகளையும் மனதின் ஒருபுறம் ஒதுக்கியபடி.
அதன்பிறகு முழுதாக அவனைத் தவிர்க்கத் தொடங்கிவிட்டாள்.. ஒருவழியாக விடுமுறை முடிந்து கல்லூரி தொடங்கியது.. மூன்றாமாண்டு வந்துவிட்ட குஷியில் ஜாலியாக கல்லூரியை அடைந்தவளுக்கு.. அங்கு பெரிய ஆப்பு ஒன்று காத்திருந்தது.
இறுதி வருடம் என்பதால் ‘மேஜர் ஆப்ஷனல்’ என்ற பேப்பர் அவர்களுக்கு இருந்தது.. அதில் மற்ற டிப்பார்ட்மெண்ட் பேப்பர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.. இவள் இயற்பியல் என்பதால் எவ்வித மாற்றுக் கருத்தும் இன்றி அவளுக்கு வேதியல் பிரிவு வழங்கப்பட்டிருந்தது.
முத்து வணிகவியல் பிரிவு எடுக்க அவளுடன் இந்த ஒருமணி நேரம் செலவளிக்கலாம் என மகிழ் எண்ணிய திட்டங்கள் அனைத்தும் தவிடுபொடியாகியது.. இதற்கு மேலும் அதிர்ச்சியாய் அங்கு வந்த புரொபசரிடம் வேறு போன செமஸ்டரில் வம்பிழுத்து வைத்திருந்தாள்.
போன செமஸ்டரில் ஒரு இன்டர்னல் எக்ஸாமில் சீக்கிரமாக அதை எழுதி முடித்திருந்த மகிழ்.. அவசரமாகக் கிறுக்கியிருந்த டயக்ராமை சற்றே நேரம் இருப்பதால் சரி செய்ய.. அவள் எரேசர் பின்புறம் துள்ளிவிழுந்தது.. அதை இவளும் எதேர்ச்சையாக எடுக்க அந்த இன்விஜிலேட்டர் “இன்டர்னல்க்கே காப்பி அடிக்கிறியா.. செமஸ்டர்க்கு ஃபைவ் யுனிட்டும் எப்படி படிச்சுக் கிழிப்ப” என வில்லுப்பாட்டே பாடியது.
அவள் சொல்வதை நம்பாமல் அவ்வளவு பெரிய ஹாலில் அனைவரும் திரும்பி பார்க்கும் படி திட்டிவிட.. இவளும் ஒரு முறை முறைத்துவிட்டாள்.. அதே இன்விஜிலேட்டர் இன்று பேப்பர் இன்சார்ஜாக வர ‘சுத்தம்’ என எண்ணிக் கொண்டாள் மனதில்.
அந்தம்மாவும் அவள் நினைத்தபடி தான் நடந்து கொண்டிருந்தது.. இவளையே டார்கெட் பண்ணி திட்டுவதும், கேள்வி கேட்டு குடைவதும் என ஒரே வாரத்தில் அந்த வகுப்பையே வெறுக்க வைத்திருந்தார்.
அன்றும் அதுபோலத்தான் ஒரு கேள்வி கேட்டு இவளுக்கு தெரியவில்லை என்றதும் “2030 வந்தாலும் நீயெல்லாம் இப்படியே தான் இருப்ப.. பாத்தா படிக்க வரது மாதிரியா இருக்கு” என சற்று அதிகப்படியாகவே கடிந்து கொண்டார்.
மகிழ் முகமே விழந்துவிட்டது.. அவள் அப்படி ஒன்றும் படிப்பில் மோசமில்லை.. வேறு மேஜர் பேப்பரில் அனைவருக்கும் முதலில் இருக்கும் தள்ளாட்டமே அது.. முத்து எவ்வளவு சொல்லியும் அவள் சமாதானமே ஆகவில்லை.
அவள் பேருந்தை விட்டு இறங்கிய அடுத்த நொடியே அவள் முகமாற்றத்தை உணர்ந்த நந்தா.. அவர்கள் இருவரும் தன்னைக் கடக்கும் நிமிடங்களுக்காக காத்திருக்க.. அதற்குள் முத்துக்குமரன் இவள் மேல் மோதுவது போல வந்து பயமுறுத்திச் செல்ல.. அவனை வாயில் அரைத்தபடியே வந்தாள் மகிழ்.
முத்து யாரோ தெரிந்த பெண்மணியிடம் பேச தனியாக நின்றிருந்த மகிழிடம் “இங்க என்ன பண்ற” என நந்தா பேச்சை ஆரம்பிக்க.. எல்லாக் கடுப்பையும் சேர்த்து “புண்ணாக்கு விக்கிறேன்” என அவன் மீது கொட்டினாள்.
அவனோ இளநகையுடன் “புது பிசினஸா.. ஏன் உங்கப்பன் அரிசி வியாபாரம் டல்லடிக்குதோ” என சீண்ட.. அதில் வெகுண்டவள் “என் நைனாவை மரியாதையில்லாம பேசாதே.. வீட்டுக்கு போகவே முடியலை.. எருமைகள் எல்லாம் குறுக்க வந்துட்டே இருக்கு.. அதான் அதுக்கும் யூஸ் ஆகட்டும்னு புண்ணாக்கு விக்கிறேன்” என சிரிக்காமல் கூற.. நந்தா தான் வாய்விட்டுச் சிரித்தான்.
அதில் இவள் கடுப்பு சொல்லாமல் மறைந்து போக.. சற்று லேசாக உணர்ந்தாள்.. இவள் பார்வையை உணர்ந்து அவளை கூர்ந்து நோக்க.. மகிழ் தன் பார்வையை விலக்கிக் கொண்டாள்.
“என்ன பிரச்சனை” என அவளிடம் விசாரிக்க.. அருகில் வந்த முத்து அன்று நடந்த அத்தனையும் கூறினாள்.. அவனோ “இவ்வளவு தானே.. என்ன பேப்பர்” எனக் கேட்டு அறிந்தவன்.. “இதெல்லாம் சப்பை.. நான் சொல்லித் தரேன் விடு” என அவளைத் தேற்றினான்.
அவள் மறுத்து கூற வரும்முன் முத்து “வேண்டாம்னு சொல்லாதடி.. அது எப்படியும் இன்டர்னல்ல மார்க் போடாது உனக்கு.. செமஸ்டர்ல எடுத்தாத்தான் உண்டு.. அண்ணாட்ட கேட்டுப் படி” என்க அவளுக்கும் அதே எண்ணம் தான்.. ஆனால் வீடு…
அவள் எண்ணப் போக்கை உணர்ந்தவன் “படிக்கறதுக்காக எதைப் பண்ணாலும் தப்பில்லை மயிலு.. உன்னை இந்தப் பேப்பர்ல நல்ல மார்க் எடுக்க வைக்கறது என் பொறுப்பு” என கூறிவிட்டு ஷெட்டிலிருந்து வெளியே சென்றான்.
நாயகன் வருவான்..