‘அங்கு என்ன தெரிகிறது’ என நந்தா உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த வாய்க்கால் நீரை தானும் உற்றுப் பார்த்தான் ஸ்பாட் என அழைக்கப்படும் பால முருகன்.
நேரம் அதிகாலை.. இடம் வாய்க்கால் ஏரி.. எழுஞாயிறு மலையவன் தோள்களில் ஏறி அகிலத்தைக் காண விழைய.. அதன் பொற்கதிர்கள் பூமியோடு விளையாடினாலும்.. வாய்க்கால் நீரின் குளிர்ச்சி சுற்றி வரும் தென்றலோடு கதை பேச.. பூம்பொழிலின் பொழுது அழகாகப் புலர்ந்து கொண்டிருந்தது.
‘அப்படி ஒன்னும் தெரியலை.. ஆனாலும் இந்தப் பயபுள்ளை எதை இப்படி பாக்குது’ என எண்ணியவன் நந்தாவை உலுக்கி “ஏன்டா எவனாவது மந்திரிச்சு விட்டுட்டானா.. அரை மணி நேரமா வாய்க்காத் தண்ணியை உத்து உத்து பாத்துட்டு இருக்க.. இந்நேரம் நான் வீட்ல இருந்திருந்தா நிம்மி பால் வாங்கப் போகும் போது சைட் அடிச்சிருப்பேன்” என்றவனை முறைத்தான் நந்தா.
“ஏன்டா நானே இங்க உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணான்னு உட்கார்ந்துட்டு இருக்கேன்.. நீ மட்டும் நல்லா வாழ்ந்துடுவியோ” என விஷ்வாமித்திரர் பார்வை பார்த்தான்.
அவனைக் கை எடுத்துக் கும்பிட்ட ஸ்பாட் “அடேய்.. அடேய்.. உன் வாய்ல வசம்பு வச்சு தேய்க்க.. என் முட்டாள் மாமனே இப்பத்தான் பொண்ணு தர ஓகேன்ற மாதிரி ஏதோ சொல்லியிருக்கான்.. அதுக்குள்ள நீ போட்டிக்கு வந்துட்டியா.. விளங்கின மாதிரி தான்” என புலம்ப..
அதில் சிரித்து “இந்த மாமனுங்களே இப்படித்தான் டா.. எங்க இருந்து தான் வந்து நமக்குன்னு ஆப்பு வைக்கறான்களோ” என்றான் பதிலுக்கு.
அவனைக் மேலிருந்து கீழாகப் பார்த்த ஸ்பாட் “டேய்.. உன்னையத் தான் பந்திக்கே வேண்டாம்னு சொல்றாங்க.. நீ என்னடா இலை ஓட்டைனு சொல்லிட்டு இருக்க” என கலாய்க்க.. புரியாத பார்வை பார்த்த நந்தாவிடம் “இல்லைடா.. மகிழே உன்னை நீ யார்டா கோமாளின்னு தான் பாக்கறா.. இதுல இந்த மாமனுங்களே இப்படித்தான் புலம்பல் வேற.. இதெல்லாம் நியாயமாடா” என்றான் விளையாட்டாக.
அவன் விளையாட்டாகக் கேட்டாலும் உண்மை அது தான்.. வேறொருவராக இருந்திருந்தால் மகிழை அவன் பள்ளிக்கு அனுப்பியிருக்க மாட்டார்கள்.. ஆனால் ராகவன் மகிழ் வெளியே காட்டிக் கொள்ளாத அவளின் மனது உணர்ந்து.. அவளை பணிக்கு அனுப்பினர்.
அவன் யோசனையாக “நீ சரியாத்தான் சொல்றடா.. அவ திரும்பி வந்ததுல இருந்து என்னென்னவோ பண்ணிட்டேன்.. ஆனா நான் என்ன பண்ணாலும் அது தப்பாவே போகுது.. அவளும் என்னை கழுவி ஊத்திட்டே இருக்கா” என்றான் நந்தா.
அவன் இப்படி மனதுவிட்டு பேசியே பல நாட்கள் ஆகயிருந்தது.. மகிழ் சென்ற பின்னர்.. குடும்பமே அவனை ஒதுக்கி வைக்க.. தனிமை உணர்வும் அவன் குற்ற உணர்ச்சியும் சேர்ந்து அவன் இயல்பையே மொத்தமாக மாற்றியிருந்தது.. அனைவரிடமும் அவனாகவே ஒரு இடைவெளியை ஏற்படுத்திக் கொண்டான்.
வெகு நாட்கள் கழித்து இன்று தான் பேச வந்திருக்க.. எதையும் சொல்லிக் காட்டி அவன் மனதை வருத்தாமல் “அவ கழுவி ஊத்தற அளவு துரை என்ன பண்ணிங்க” எனக் கேட்க.. பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு அவள் திரும்பி வந்ததில் இருந்து கோவிலில் பார்த்தது.. பள்ளியில் வெறுப்பேற்றியது.. ரகுவை சீண்டியது.. பள்ளியில் அவளை ஒருவர் பேசியது.. அப்பத்தா இவள் முன்னிலையிலே அவனுக்கு வைட் கேர்ளா.. ஹைட் கேர்ளா பெண் பார்க்கச் சொல்லியது.. இறுதியாக ரகுவை டீஸ் பண்ணி வில்லன் பட்டம் வாங்கியது வரை அனைத்தையும் கூறி முடித்தான்.
“உனக்கு பொண்டாட்டி யோகமே இல்லை போலடா.. கண் முன்னாடி நிக்காதே போய்த் தொலை” என திருக்குறள் போல இரண்டு வரியில் அவனைக் காறித் துப்பினான் ஸ்பாட்.
அதற்கு மேலும் முகத்தை தூக்கிய நந்தா “ஏன்டா” என்கவும்.. “என்ன ஏன்டா.. பழைய கோவமே உன் மேல அப்படியே இருக்கும்.. அவ கோவமா இருக்கான்னு தெரிஞ்சும்.. இப்படியா ஆப்பு மேல தேடித் தேடிப் போய் உட்காருவாங்க” என கேள்வி எழுப்ப..
“அதுக்கு ஒரு நல்ல வழி கேட்கத்தான் உன்னைக் கூப்பிட்டேன்.. சொல்லுடா” என்றான் நந்தா.. நந்தாவிடம் ஸ்பாட்டிற்கு பிடித்ததே இந்தக் குணம் தான்.. அனைவரும் சரிசமம் என்பதாய்த் தான் நடப்பான்.. வேற்றுமை என்பதே பாராட்டத் தெரியாது.. ஆனால் அத்தனை நல்ல விஷயங்களையும் முன் கோபம் என்ற ஒன்று அழித்து விடுகிறதே.. என எண்ணியவன் அவனிடம்
“வழி என்ன வழி.. உனக்கு வாய்ல வாஸ்து சரி இல்லை.. அதுக்கு ஒரு பெரிய பூட்டு வாங்கிப் போட்டாலே உன் பிரச்சனை ஆட்டோமேட்டிக்கா சரி ஆகிடும்” என்றான்.
“பூட்டுக்கு ஆர்டர் கொடுக்கலாம்.. நீ உடனே சரி ஆகற மாதிரி எதாவது வழி சொல்லு” என மீண்டும் நந்தா நச்சரிக்கவும்.. “யோசிக்காம.. உன் பொண்டாட்டி கால்ல விழுந்து மன்னிப்பு கேளு” என்றான் ஸ்பாட்.
“மன்னிப்பா” என இழுத்த நந்தாவிடம் “ஏன் உங்களுக்கு உருதுல பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பா” என ஸ்பாட் கேட்க.. அவனைப் பார்த்து சிரித்தவன் “டேய்.. க்ரூப் எக்ஸாம் பரிதாபங்களா.. வெளுத்துப் போடுவேன் ராஸ்கல்” என மிரட்ட
அவனை விட்டு நான்கு அடி தள்ளிச் சென்றவன் “புது செருப்பை நாய் குதறின மாதிரி பிரச்சனை மேல பிரச்சனையா பண்ணிட்டு.. பொண்டாட்டி கிட்ட மன்னிப்பு கேட்க மட்டும் வலிக்குதோ” என ஏகத்துக்கும்
கலாய்க்க “டேய்.. மரியாதை இங்க வாடா” என அவனைத் துரத்தினான் நந்தா.
ஊருக்கு வெளிப்புறமாக இருக்க.. ஆட்கள் யாரும் இல்லாததால் ஏழு கழுதை வயசாகியும் இரண்டும் ஓடி விளையாட.. ஓடிய ஸ்பாட் திடீரென நிற்கவும்.. அவனைத் துரத்தியபடி வந்த நந்தாவும் யோசனையாகப் பார்த்தான்.
அங்கே சற்று முன் நந்தா எப்படி அமர்ந்திருந்தானோ அதே போஸில் முகில் அமர்ந்திருக்க.. ‘இந்த நல்லவன் என்னத்தை இழுத்துட்டு வந்துருக்கான்னே தெரியலையே.. ரெண்டும் முட்டிக்குமோ’ என இருவரையும் பயந்தபடியே பார்த்தான் ஸ்பாட்.
இவர்கள் அரவம் உணர்ந்து திரும்பிய முகில் நந்தாவைக் கண்டதும் கோவமாக அவனை நெருங்க.. அவனைத் தடுக்கப் பார்த்தான் ஸ்பாட்டை விலக்கி.. “உன்னை.. திருந்தவே மாட்டியா டா நீ.. மறுபடியும் என்ன பண்ண.. ரெண்டு நாளா என்னை ஏமாத்திட்டு எங்கடா போன” என அவன் சட்டையைப் பிடித்துக் கேட்கவும்..
“அது வந்து மச்சி.. உன் தங்கச்சி அழுதப்பவே நீ வந்து சவுண்ட் குடுப்பேன்னு எனக்குத் தெரியும்.. அதான் உன் கண்ல படலை.. இப்ப மாட்டிகிட்டேன்” என்றான் அவனும் புன்னகை முகமாக..
இருவரும் சண்டை போல கொஞ்சிக் கொண்டிருக்க ‘என்னடா நடக்குது இங்க’ என இருவரையும் பார்த்த ஸ்பாட்டைப் பார்த்த முகிலும் நந்தாவும்.. சத்தம் போட்டு சிரிக்க ஆரம்பித்தனர்.
அதில் கோவம் கொண்ட ஸ்பாட் “ஆயிரம் அடிச்சிக்கிட்டாலும் மாமனும் மச்சானும் ஒன்னாகிட்டிங்க.. இனி நாங்க எதுக்கு.. நான் கோவமா போறேன்” என நடையைக் கட்ட.. இருவரும் அவனைப் பார்த்தது பார்த்தபடி நின்றனரே தவிர ஒன்றும் சொல்லுவில்லை.
இரண்டெட்டு வைத்தவன் “நீங்க கூப்டாலும் வர மாட்டேன்டா.. நான் போறேன்” என்றான் திரும்பி.. முகில் “நாங்க கூப்டவே இல்லையே.. ஏன் மச்சி நீ கூப்ட” என நந்தாவிடம் சந்தேகம் கேட்க..
“என்னடா படக்குன்னு சொல்லிட்ட.. யோசிச்சு சொல்லுங்க” என அப்போதும் போகாமல் நின்றவனை இருவரும் ஓடி வந்து கட்டிக் கொள்ள.. மூவருக்குமே நெடுநாட்கள் கழித்து மனம் மிக லேசாய் இருந்தது.
சற்று நேரம் அவர்களது அணைப்பில் பேசாமல் இருந்த ஸ்பாட்.. இருவரையும் உதறிவிட்டு முறைக்கவும் “அப்பா.. முருகப்பா நீ முறைச்சா சிரிப்பு சிரிப்பா வருது” என முகில் கலாய்க்கவும்.. நந்தாவும் “மூக்குக்கு மேல கோவம்றாங்களே அது இது தானோ… கோவம் எல்லாம் சரி.. ஆனா மூக்கு எங்க” என முகிலுக்கு ஒத்து ஊத.. கடுப்பானவன்.. இருவரையும் விரட்டி விரட்டி அடிக்க ஆரம்பித்தான்.
ஒரு கட்டத்தில் முடியாமல் நின்றவன் இருவரையும் முறைத்து “ஏன்டா எண்ணெயும் தண்ணியுமா இருந்தவனுங்க.. எப்படிடா பாலுந் தண்ணியுமா ஆனிங்க” எனக் கேட்க
நந்தா சிரித்தவாறே “நாங்க சேர்ந்ததுக்கு காரணம் நமக்குள்ள இருந்த நட்பு தான்.. சாதாரண நட்பா அது.. பாரியும் கபிலரும்.. மாதிரி.. நட்புக்காக படத்துல வர” என்றவனை இடை மறித்த முகில் “டேய் ஓவரா பிளேடு போடாத.. ஒரு வருஷம் முன்னாடி.. ஏன்டா என் தங்கச்சியை கட்டாய கல்யாணம் மட்டும் பண்ணத் தெரியுதுல்ல.. இப்ப ஏன்டா அவளைப் பாக்காம இருக்கன்னு நாலு மிதி வைக்க வந்தேன்டா.. அதுல இருந்து பேசுறோம்” என்க.. நந்தா ஈஈஈ என இளித்தான்.
“ஆனா எங்கிட்ட கூட சொல்லலை.. போங்கடா” என ஸ்பாட் நிஜமாகவே வருந்த.. நந்தா “சொல்லக் கூடாதுன்னு எல்லாம் இல்லைடா.. ஆரம்பத்தில அவசியத்துக்கு பேச ஆரம்பிச்சோம்.. இப்பத்தான் நல்லா பேசறோம்.. அதுக்கு தான் இன்னைக்கு உன்னையும் இழுத்துட்டு வந்தேன்” என்றான்.
அதில் முழுமையாக இல்லாவிடினும் ஓரளவு சமநிலை அடைந்த ஸ்பாட் “ஏன்டா இவன் தாடி வச்சு சுத்துறான்னா.. ஒரு நியாயம்.. இவன் பொண்டாட்டி சுத்தல்ல விடறா.. நீ ஏன்டா இப்படி என்னத்தையோ பறி கொடுத்த மாதிரி இருக்க” என முகிலிடம் வினவ
முகில் தடுமாற நந்தா “மொட்டுக்கள் மெல்ல மலரும் போதும் முத்து முத்து என்கிறதே.. இல்ல மச்சி” என சிரிக்க.. முகில் இளித்தபடியே “கண்டுபிடிச்சுட்டியா மச்சி” என வெட்கப்பட.. ஸ்பாட் தலையில் அடித்தபடி “அடேய்களா.. க்ரூப் எக்ஸாம் பஸிள்ஸ் மாதிரி விளங்காம பேசாம.. ஒழுங்கா புரியராப்ல பேசுங்கடா வெளக்கெண்ணெய்களா” என காயவும்..
நந்தா முத்தமிழின் முகிலின் மீதான முப்பொழுதும் கற்பனைகளை விளக்க.. ஸ்பாட் அதிர்ந்து “யார்டா அந்த கண்ணாடி போட்டுட்டு பவ்யமா போகுமே உன் சித்தப்பா பொண்ணு.. அதுவா” என நம்ப மாட்டாமல் கேட்டவன்
நந்தாவிடம் திரும்பி “டேய் சாமியார் இவனே இப்படி.. உண்மையை சொல்லு உனக்கு எத்தனை குழந்தைங்க” என கேட்க.. அவனை மொத்திய முகில் “டேய்.. அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை.. அவ என்னோட நொறுக்கு.. அவ்வளவு தான்” என்க..
மற்ற இருவரும் குழம்பி “என்ன” எனக் கேட்கவும் “அதான் இங்லிஷ்ல சொல்வாங்களே க்ரஷ்” என பல்லைக் காட்ட.. நந்தா கொலைவெறியாகி “அடிங்.. ஏன்டா அந்தப் புள்ளை பாக்க ஆரம்பிச்சப்பவோ ஒரு பால் ஐஸ் வாங்கி அது கையில கொடுத்து.. அவளுக்கு புத்தி சொல்லாம விட்டுட்டு.. நல்லா நாலு வருஷம் சைட்டை என்ஜாய் பண்ணிட்டு இப்ப க்ரஷ்னு சொல்ற.. கட்டித் தொங்க விட்ருவேன் பாத்துக்கோ” என ஏகத்துக்கும் எகிறினான்.
ஸ்பாட்டும் “ஏன்டா க்ரஷ்க்கு தான் இப்படி சீன் போட்டுட்டு வாய்க்காலை முறைச்சியா.. ஒழுங்கா உண்மையை சொல்லு” என மிரட்ட..
முகில் முகத்தை பாவமாக வைத்தபடி தங்கை என்ற பெயரில் தன் வீட்டில் உலவும் தனிப்பெரும் வில்லி தனக்கு பெண் பார்ப்பதைச் சொல்ல.. நந்தா தலையிலேயே அடித்துக் கொண்டான்.
“அது கூட பரவால்லடா.. என் அவ்வா அவ தாளத்துக்கு தகுந்த மாதிரி இவனது எதாவது பாக்கற மாதிரி நல்லா ஃபோட்டா இருக்கா.. சட்டியில இருந்தா தானே அகப்பையில வரும்னு என்னையே கலாய்க்குது” என்றான் முகில் மேலும் வருந்தி
“நினைச்சேன்.. எல்லாம் இந்தக் குட்டக் கலப்பை பண்ண வேலை தானா.. அவளை” என பல்லைக் கடிக்க.. முகில் “டேய் ரொம்ப பொங்குற மாதிரி நடிச்சு.. மறுபடியும் பல்ப் வாங்காதே.. ஒழுங்கா அவளை சமாதானம் பண்ணுற வழியைப் பாரு.. நாலு நாளா முகமே சரியில்லை.. இது ஒரு பிரச்சனை இல்லை.. நான் பாத்துக்கறேன்” என்கவும்.. நந்தா யோசிக்கத் துவங்கினான்.
அதற்கு மேலும் மூவரும் சிறிது நேரம் பேசிவிட்டு சங்கத்தை கலைத்தனர்.