‘இந்தப் பென்சிலை எடுத்து அவன் மூஞ்சியில பூரான் விட்ருவோமா‘ என தன் முன் அழுத்தமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்த நந்தாவைப் பார்க்காமல்.. பென்சிலின் மேல் பார்வையைப் பதித்திருந்தவளைக் கண்டு பல்லைக் கடித்ததான் நந்தா.
அவன் பேசிய எதுவும் காதில் விழவில்லை என்ற பாவனையில் நின்றிருந்தாள்.. நேற்று அவன் தன் சித்தப்பாவை என்ன வார்த்தை சொல்லிவிட்டான்.. இன்னுமா இதை எல்லாம் தூக்கி சுமந்து கொண்டு இருக்கிறான்.. தன் பிரிவு இவனுக்கு எதையுமே உணர்த்தவில்லை போலும்.. ஆனால் பாவம் நம் வீட்டில் இருப்பவர்கள்.. என்னென்னவோ கனவில் உள்ளார்களே என அவர்களை நினைத்தும் வேதனையாக இருந்தது.
“இப்படியே இன்னும் எத்தனை நேரத்துக்கு நிக்கப் போற.. ஏதாவது பதில் பேசு” என நந்தா கோவத்தில் கேட்க
“என்ன சொல்லட்டும் சார்” என்றாள் அவனுக்கு நேர்மாறாய்.. அமைதியாய்.. இருவரும் பேசியே நான்கு வருடங்கள் ஓடிவிட்டது.. அன்று நேர்முகத் தேர்வில் அவன் கேள்விக்கு அவள் விடையளித்ததோடு சரி.
மனதை அரிக்கும் குற்றவுணர்வோ என்னவோ.. ஏனோ அவனாகப் பேச முன் வரவில்லை.. மகிழுக்கு அவனிடம் பேச வேண்டிய அவசியமே இல்லை.. நேற்று அவளை மீண்டும் ரகுவோடு கண்டதும்.. அவனது பழைய கோவம் தலை தூக்கிக் கொண்டது.. அதன் விளைவே.. இன்று காலை பள்ளிக்கு வந்ததுமே முதல் வேலையாக மகிழை அழைத்துப் பேசினான்.. இத்தனை நாள் இருந்த தயக்கத்தை உடைத்து..
ஆனால் மகிழோ.. அவன் பேச்சை மட்டுமல்ல அவனையே ஒரு கணக்கில் சேர்க்காமல் ‘நீ யார்டா கோமாளி‘ என்பது போல் இருக்க.. இதே மகிழ் சில வருடங்கள் முன்பு வரையில் அவனை பிரம்மிப்பாக.. காதலாகப் பார்த்தது நினைவில் ஆட.. அவனுக்கு அதுவே ஒருவித எரிச்சலைக் கொடுத்தது..
அதே எரிச்சலுடன் “என்ன சொல்றதுன்னு உனக்குத் தெரியலையா.. நல்லா இருந்த ரெண்டு குடும்பமும் சண்டை போட்டுக்கிட்டதுக்கும்.. என் அத்தை இன்னைக்கு இப்படி இருக்கவும்.. எல்லாத்துக்கும் மேல நீயும் நானும் பிரிஞ்சு போகவும்.. உன் சித்தப்பன் தான் முதல் காரணம்.. இன்னமும் அவனுக்கு நல்லது பண்ணியே ஆகனுமா நீ” என கர்ஜிக்க
அவன் குரல் அவளை மிரட்டினாலும்.. அதான் சாராம்சம் அவனை விட அவளுக்கு கோவத்தை அளித்தது.. “தெரிஞ்சு தப்பு பண்ண நீங்க என் சித்தப்பாவைப் பத்தி பேச அவசியம் இல்லை சரியா.. அப்புறம் நீயும் நானும் பிரிஞ்சு இருக்க காரணம் நீ தான் மாமா.. ஒரே ஒரு செகண்ட் தான் ஆனாலும் உனக்கு வந்த பழி வெறி தான் காரணம்.. அதுக்கு நீ செஞ்ச மட்டமான காரியம் தான் காரணம்” என்றாள் அவளும் பதிலுக்கு.
“அவன் மட்டும் ஒழுங்கா இருந்திருந்தா நானும் அப்படிப் பண்ணியிருக்க வேண்டிய அவசியம் வந்துருக்காதுடி.. புருஞ்சுக்கோ” அவன் பேசியதில் இருந்த தவறு அவனுக்கே உரைத்தது போலும்.. குரல் தாழ்ந்து ஒலித்தது.
அதைக் கண்ட மகிழ் ஒரு ஏளனப் புன்னகையுடன் “உனக்கே தெரியுது நீ பண்ணது தப்புத்தான்னு.. அதுக்கு யாரையும் காரணம் சொல்லாதே.. நான் அவ்வளவு ஏமாந்தவளா இருந்திருக்கேன்.. உன்னைச் சொல்லி என்ன பண்றது.. இப்பக் கூட வீட்ல சொன்னாங்கன்னு உன் முன்னாடி நிக்கறேன்ல.. உங்க இஷ்டத்துக்குப் பண்ணுங்க” என தன் மனக் குமுறலைக் கொட்டினாள்.
எவ்வளவு அடக்கியும் அன்றைய நாளின் நினைவுகளில் கண்ணீர் வழிந்துவிட.. தன் இடத்தில் இருந்து எழுந்து அவளை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தவனை தடுத்து நிறுத்தியவள் “இனி இதைப் பத்தி பேசாம இருக்கறது தான் நமக்கு நல்லது மாமா.. ஏதோ என் வீட்ல சொன்னாங்க.. நான் இங்க வரேன்.. பாவம் அவங்க நம்பிக்கையை ஏன் கெடுக்கனும்னு.. அவ்வளவு தான்.. நிச்சயம் இங்க இருந்தும் நான் போய்டுவேன் மாமா.. சோ நீ மறுபடியும் என்கிட்ட பேச முயற்சி பண்ணாதே” என்றவள் கண்களைத் துடைத்துவாறே திரும்பி கதவை நோக்கி நடக்க..
“ஏன் மயிலு எப்பையும் என்னை விட்டுப் போறதுலையே நீ குறியா இருக்க.. மறுபடியும் போய்டுவியாடி” என்ற அவனது வலியை உள்ளடக்கிய குரல் அவளுக்கும் அதே வேதனையை அளித்தது தான்.. ஆனால்……………………
அவனைப் பார்த்துத் திரும்பியவள் “ஏற்கெனவே நான் உன்னை விட்டு விலகி தான் இருக்கேன் மாமா.. சீக்கிரமா நீயும் இதை ஏத்துக்கோ.. அது தான் எல்லாருக்கும் நல்லது” என்றவள் மீண்டும் நடக்க எத்தனிக்க.. இம்முறையும் “ஆனா.. ஏன்டி” என்ற நந்தாவின் குரல் இடையிட்டது.
[the_ad id=”6605″]
அவனைப் பார்த்து கசப்பாய் சிரித்தவள்.. அங்கிருந்த வைட் போர்டில் ஏற்கெனவே அவள் எழுதியிருந்த ‘கேடில் விழுச்செல்வம் கல்வி‘ என்பதை அழித்து.. ‘ட்ரெஸ்ட் நெவர் ரிகெய்ன்ட் ஈஸிலி‘ என எழுதியவள்.. மார்க்கரை அதன் இடத்தில் வைத்துவிட்டு அவனை நிமிர்ந்தும் பாராமல் வெளியேறிவிட்டாள்.
அதைக் கண்டதும் நந்தா தொய்து போய் தன் இருக்கையில் அமர்ந்து கொண்டான்.. ‘மாமா.. மாமா‘ என தன்னையே சுற்றி வந்த பத்தொன்பது வயது மகிழின் பூமுகம் நியாபகம் வந்தது.. தான் தொலைத்தது எவ்வளவு பெரிய விஷயம் என்று கைவிட்டுப் போனது பிறகு தானே.. இந்தப் பாழும் மனம் கூறுகிறது.
நேரம் போவது கூட உணராமல் அப்படியே அமர்ந்திருந்தவனை.. அவன் ஃபோனின் ரிங்டோன் கலைக்க.. எழுந்து கட்டிடப் பணிகள் நடக்கும் இடத்திற்குச் சென்றான்.. இறுதிக்கட்ட வேலைகள் மட்டுமே இன்னுமும் மீதம் இருக்க.. எப்படியும் ஒரு மூன்று மாதங்களில் முடிவடைந்துவிடும்.. என எண்ணிக் கொண்டவன் அடுத்தடுத்த வேலைகளில் தன்னை மூழ்கடித்துக் கொண்டான்.
வெளியே வந்த மகிழுக்குத் தான் மனம் ஒருநிலையில் இல்லாமல் போனது.. இத்தனை கஷ்டம் எதுக்கு எல்லாருக்கும்.. என நினைத்தாலும்.. நந்தா செய்ததை அவளால் மன்னிக்கவே முடியவில்லை.. இனி அவனிடம் பேசவே கூடாது என முடிவெடுத்துக் கொண்டாள்.
அதன்பின் மகிழை அவனால் பார்க்கவே முடியவில்லை.. அவள் ரோஷத்தைப் பற்றி நன்கு தெரிந்திருந்தும்.. அவசரப்பட்டு கத்திவிட்டோமே.. இந்த கொஞ்ச நாளும் தூரமா நின்னாவது வேடிக்கை பாத்துட்டு இருந்தேன்.. இப்ப அதுவும் போச்சா.. என அவனை அவனே காறித் துப்பிக் கொண்டான்.
[the_ad id=”6605″]
முதல் போகத்திற்கு ஆற்றில் தண்ணீர் வருவதாகச் சொல்லியிருக்க.. அதற்கான விதை நெல் வாங்கவும், உழவுப் பணிகளை மேற்பார்வை இடவே அவனுக்கு நேரம் சரியாக இருக்க.. போதாக்குறைக்கு மகிழும் அவனுக்கு நன்றாகவே தண்ணீர் காட்டினாள்.
நந்தாவைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் பள்ளி அவளுக்கு மிகவும் பிடித்துப் போனது.. சொந்த ஊரில் வேலை செய்வதும் ஒரு தனி சுகம் தான் போலும்.. ‘செமி கண்டக்டரையும், பேரலல் சர்க்யூட் அன்ட் சீரியல் சர்க்யூட்டையும்‘ கூட எளிதாகப் புரியும்படி சொல்லித் தந்து எப்போதும் சிரிப்புடன் வலம் வரும் மகிழ் மிஸ்ஸை அனைவருக்கும் பிடித்தது.
ஆனால் இந்த வினிதா மட்டும் எப்போதும் தன்னை ஒரு ஏளனப் பார்வையுடன் பார்ப்பதை அறிந்து குழம்பித் தான் போனாள் மகிழ்.. அவர் அனைவரையுமே சற்று இளக்காரமாகப் பார்த்தாலும்.. தன்னை இன்னும் கொஞ்சம் சேர்த்துப் பார்ப்பது போல தெரியும்..
சரி வேலையிடம் என்றால் இது போல ஆயிரம் அரசியல் இருக்கக் கூடும்.. அனைத்தையும் கண்டும் காணாமல் ஒதுங்கி இருப்பதே நன்று என எண்ணிக் கொண்டாள்.. மற்றபடி வீட்டில் பாட்டியோடு சண்டைப் போடுவதும்.. வெளியே முத்துவைக் கலாய்ப்பதுமாக அவள் நாட்கள் எவ்விதக் கவலையுமின்றிக் கழிந்தன.
மகிழ் பள்ளிக்கு வர ஆரம்பித்து ஒன்றரை மாதங்கள் முழுமையாக கடந்திருக்க.. அன்று தான் முதல் பிரச்சனை வந்தது.
நந்தாவின் பள்ளியில் படிப்பில் சற்றே பின்தங்கிய மாணவர்களுக்கு.. மாலை சிறப்பு கவனிப்புகள் கொடுக்கப்படும்.. இதில் பாரபட்சம் என்பது இல்லை.. குழந்தைகளுக்கு சற்று எளிதாக இருக்கவே.. கொடுக்கப்படும் ஹோம்வொர்க்கில் பாதி ஆசிரியரே பயிற்சி கொடுத்து செய்ய வைத்துவிடுவார்.
அதன்படி அன்று மாலை முத்துவிற்கு சிறப்பு வகுப்பு இருந்தது.. அது முடிய ஐந்தரை மணி ஆகும்.. எனவே மகிழும் அவளுக்காகக் காத்திருந்தாள்.. நாளைய வகுப்பிற்கென அவள் குறிப்பெடுத்துக் கொண்டிருக்க.. அவளின் செல்ஃபோன் அலறியது.
எடுத்துப் பார்க்க.. அவள் அம்மா அழைத்திருந்தார்.. இவள் ஹலோ சொல்வதற்கு முன்னமே “இன்னும் ஸ்கூல்ல தான் இருக்கியா” என்றார்.. ஏதோ அவசர கதியில்.. மகிழ் “ஆமாங்மா.. என்ன ஆச்சு.. ஏன் ஒரு..” அவளை பேசவே விடாமல் “தமிழரசிக்கு பிரசவ வலி வந்திடுச்சு.. இப்ப ஸ்கூல் முடியற நேரம் தானே.. நாங்க முன்னாடி ஹாஸ்பிட்டல் போறோம்.. நீ முத்து கூட அவங்க வீட்டுக்குப் போய் நான் சொல்றதை எடுத்து அவகிட்ட கொடுத்து அனுப்பு” என்றவர்.. முடிந்தளவு சீக்கிரம் எனச் சொல்லி வைத்துவிட.. மகிழ் முத்துவைத் தேடிச் சென்றாள்.
அவளை வெளியே அழைத்தவள் விஷயத்தைச் சொல்ல.. முத்து பதறியபடி “என்னடி சொல்ற.. இன்னும் பத்து நாள் இருக்கே.. ஒன்னும் ஆகாதுல்ல” என கலங்கியபடி கேட்க.. அதற்குள் மீண்டும் ஃபோன் வந்தது மகிழின் அம்மாவிடமிருந்து..
முத்துவிடம் ஃபோனைக் கொடுத்த மகிழ் அவளை அனுப்பிவிட்டு.. தான் வகுப்பறையில் நுழைந்தாள்.. வகுப்பில் மொபைல் யூஸ் பண்ணக் கூடாது என்ற விதிமுறையை மறந்து போய்.. முத்துவும் பதட்டத்தில் அவள் அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தாள்.
[the_ad id=”6605″]
சரியாக அந்த நேரம் வந்த வினிதா மேம் முத்து காரிடாரில் ஃபோன் பேசுவதையும்.. மகிழ் அவள் வகுப்பில் இருப்பதையும் கண்டு மகிழை விசாரித்து.. திட்டத் துவங்கிவிட்டார்.
அவரது சத்தத்தில் ஃபோன் பேசி முடித்துவிட்டு.. அருகில் வந்த முத்துவை முறைத்தவர் “இத்தனை நாள் இருக்கற இடம் தெரியாம இருந்துட்டு.. இப்போ கொஞ்சம் ஓவரா ஆடறியோ.. ரூல்ஸ் மறந்து போச்சா” என அவளையும் திட்டினார்.
ஏற்கெனவே பதட்டத்தில் இருந்தவள் “ஐயோ இல்லை மேம்.. அக்காக்கு லேபர் பெய்ன்.. அதான் அம்மா ஃபோன் பண்ணாங்க” என அவரிடம் விளக்கம் சொல்ல.. மகிழுக்கு கோவமாக வந்தது.
இதைத்தானே அவளும் இத்தனை நேரம் சொன்னாள்.. ஆனாலும் காதில் வாங்காமல்.. தன் ஆதிக்கத்தை அவர் இந்த நேரத்தில் நிலைநிறுத்த முயற்சிக்க “என்ன எமெர்ஜென்ஸின்னு ரீசனோட சொல்லிட்டு இருக்கோம்.. திரும்பத் திரும்ப பேசினதையே பேசினா எப்படி மேம்.. இனி இது மாதிரி நடக்காது” என அப்போதும் மகிழ் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவரிடம் பணிவாகவே சொன்னாள்.
“இங்க பாரு.. ரூல் எல்லாத்துக்கும் தான்.. உங்க சௌகரியத்துக்கு எல்லாம் இங்க நடக்கக் கூடாது.. இனி நடக்கறதை அப்புறம் பாப்போம்.. இப்ப பண்ண தப்புக்கு உங்களை என்ன பண்றது” என தன்னிலை இறங்காமல் பேசினார்.
இவர்கள் பேசும்போதே மணி ஐந்தரை ஆகியிருக்க.. பள்ளியும் முடிந்தது.. “என்ன வந்தாலும் நான் பாத்துக்கறேன்.. இப்ப நீ வா” என்றவள்.. அவரைக் கண்டு கொள்ளாமல் முத்துவைக் கை பிடித்து அழைத்துக் கொண்டு வெளியே வர முகிலன் நின்றிருந்தான்.