மேடையிலிருந்து கீழிறங்கி வந்தவளின் நடையில் சின்ன துள்ளல் இருந்தது. அதுமட்டுமல்ல வாய் நிறையத் தேன் மிட்டாயும், கைகளில் நாலைந்து தேன் மிட்டாயும் இருந்தது. ‘தேன் பூச்சி தேன் மிட்டாய் சாப்பிடுது… ஹிம்ம்…” என நினைத்தபடியே அவளையே இமைக்காது பார்த்தான். இப்போதும் மாயோளை ரசிக்கவில்லை என்று மனதிற்கு ஒருமுறை அழுத்திச் சொல்லியபடியே ஆரியை பார்த்தான்..
தற்போதைய ஆரிக்கும், இதுநாள் வரையிலும் இருந்த ஆரிக்கும் எத்தனை எத்தனை வித்தியாசங்கள். கண்களில் உயிர்ப்பே இல்லாமல் ஏதோ மனித உருவில் நடமாடும் பாவை (பொம்மை) போலல்லவா சுற்றித் திரிந்தாள். ஆனால் இன்று இதழ்களோடு சேர்ந்து முகம் முழுக்க புன்னகையைச் சிந்துகிறது. அதுவும் மங்கையின் கண்களில் மின்னிடும் புன்னகையை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை என்று தான் தோன்றியது.
பைக்கில் சாய்ந்தபடி நின்றிருந்தவனின் மனம் காரிகையைச் சுற்றியே வளம் வந்த படியிருக்க ஆரியோ இவனைப் பார்த்தும் பார்க்காதவள் போலக் கடந்து சென்றாள்.
“கண்டுக்காம போறதை பாரேன்…” என முனகிக் கொண்டே ஒரே எட்டில் அவளை அடைந்தவன் ஆரியை மறைத்து நின்றான். சட்டென தன் முன்ற நின்ற ஆடவனை நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் தற்போது வரையிருந்த புன்னகை மறைந்திருந்தது. ஆடவனைக் கடுகடுவென முகத்தை வைத்தபடி என்ன என்பதைப் போல் புருவத்தை உயர்த்தி கேள்வியாகப் பார்த்தாள்.
“உங்களுக்கு டிவின் சிஸ்டர் யாராவது இருக்காங்களா…” அவளைப் போலவே புருவத்தை உயர்த்தி கேட்டான். ஆரியோ பதில் பேசாமல் குறுகுறுவென பார்த்தாள்.
அவளின் பார்வையில் கேலியாகச் சிரித்தவன் “ஓ இல்லையா. அப்ப உங்களுக்கு இந்த மல்டி பேசாலிட்டி டிஸாடர் மாதிரி ஏதாவது நோய் இருக்கா?…” என்றான் பார்வையை மாற்றாமல். கலையின் கேள்வியில் கோபம் வர அவனுக்குப் பதில் சொல்லாமல் முக்கு விடைக்கப் பார்த்தாள்.
“இங்க பாருங்க தமிழ்ல மொத்தம் ஆறு வகை வினா இருக்கும்… அதுல ஒருவகை வினாவைத் தான் நான் கேள்வியா கேட்கிறேன். இதுல என்ன ஸ்பெஷலுன்னா கேள்விக் கேட்கிற எனக்குக் கூட ஜஸ்ட் சிக்ஸ் டைப் ஆப் வினா தான் இருக்குங்க. ஆனா அன்சேர் சொல்ற உங்களுக்கு எயிட் டைப்ஸ் ஆப் விடையிருக்கு… அதுல ஒன் டைப் ஆப் விடையை என் வினாக்கான விடையா சொல்லலாம்…” எனத் தீவிரமாக முகத்தை வைத்தபடி கூறியவனை வெட்டவா குத்தவா என்பதைப் போல் பார்த்தவள்
“ஒன்ஸ் ரீப்பிட் பண்ணுங்க உங்க வினாவை…”என அதிகார குரலில் கேட்கவும்
எப்போதும் போல அவளின் அதிகார குரல் இவனுக்குக் கடுப்பை கிளப்பியது. அதே கடுப்போடு சீரியஸான குரலில் “ஆபிஸ்ல என்னவோ வெந்தண்ணி மாதிரி மூஞ்சியை வைச்சுட்டு சுத்திட்டு இருப்பீங்கஇன்னைக்கு என்ன ஆட்டம் பாட்டம் எல்லாம்…” எனக் கைக்கட்டி கேள்வி கேட்டவனை எரிச்சலாகப் பார்த்தவள்
“உங்க கேள்விக்கு நான் பதில் சொல்லுவேன்னு நீங்க எப்படி நினைக்கலாம் மிஸ்டர் ஏகலைவன்…” கைக்கட்டி அழுத்தமாகப் பார்த்தபடி கேட்டாள்.
“ஏன் சொல்லாம இருப்பீங்க… கண்டிப்பா நீங்க இதுக்கு பதில் சொல்லித் தான் ஆகணும்… உங்களால பாதிக்கப்பட்டவனில் நானும் ஒருத்தன்..” எனக் கோபமாக வாதாடியவனைப் பார்த்துச் சிரிப்பு தான் வந்தது ஆரிக்கு. கண்களை எட்டிய சிரிப்போடு இதழ்களை இறுக மூடிக் கொண்டு எதிரில் நின்றவனைப் பார்த்தாள்.
“பதில் சொல்லுங்க, ஆபிஸ்ல ஆப்பாயில் மாதிரி மூஞ்சியை வைச்சுட்டே சுத்திட்டு இருப்பீங்க… இங்க என்னடான்னா இப்படி தேனீ வேசமெல்லாம் போட்டுட்டு வாய் நிறையா தேன் மிட்டாயை அடக்கிட்டு சின்ன புள்ளை மாதிரி சுத்திட்டு இருக்கீங்க… ஸ்பிலிட் பர்சானலிட்டியா நீங்க… ” என்றவனுக்குப் பதில் சொல்லாமல் நகர்ந்தாள். மீண்டும் அவளின் முன் வழி மறைத்து நின்றான்.
கலையின் செய்கையில் கோபம் வர
“வழியை விடுங்க மிஸ்டர் ஏகலைவன்…” எனப் பல்லைக் கடித்தாள்.
“மாட்டேன், நான் கேட்கிறதுக்குப் பதில் சொல்லுங்க…” விடாமல் கேட்டவனை இப்போது எரிச்சலுடன் பார்த்தாள்.
“அப்ப உங்களுக்கும் சிரிப்புக்கு என்ன ஸ்பெல்லிங்குன்னு தெரியும் அப்படித்தானே…” எனக் கேட்டதும்
“வாட்…” கோபத்தில் சிவந்த நாசியின் நுனி துடிக்க இதழ்களை அழுத்திக் கடித்துக் கொண்டு கேசத்தை ஒரு கையால் கோதியபடி கேட்டாள்.
“அப்ப மத்தவங்களோட சிரிச்சு பேசறதுல என்ன பிரச்சனை உங்களுக்கு… எல்லாரும் உங்களுக்குக் கீழே வேலை பார்க்கிறோங்கற எண்ணமா…” எனக் கேட்டவனை தன் மூச்சுக் காற்றால் பொசுக்க மட்டுமே இல்லை அத்தனை சூடாக வந்தது காரிகையின் மூச்சுக் காற்று. அதை மங்கையின் அருகில் நின்றிருந்தவனும் நன்றாகவே உணர்ந்தான்.
“நீங்க எனக்கு கீழே தான் வேலை பார்க்கணுன்னு ஒரு அவசியமும் இல்லை மிஸ்டர் ஏகலைவன்… உங்களுக்கு பிடிக்கலைன்னா இப்பவே கூட வேலையை விட்டு நின்னுக்கலாம்…இங்க யாரும் உங்களைத் தடுக்க போறதில்லை” என்றவள் அவன் பதிலைக் கூட எதிர்பாராது பார்க்கிங் நோக்கி நடக்க
“போங்க போங்க… தேன் மிட்டாய் விஷயத்தை ஆபிஸ் முழுக்க சொல்லி வைக்கிறேன்…” எனக் கத்தினான். அவளோ அதனைக் காதில் கூட வாங்கிக் கொள்ளாமல் சென்று விட்டாள்.
“மண்டை மூக்கி பதில் சொல்லிட்டு
போறாளா பாரு…” என முனகிக் கொண்டே வாகனத்தை உயிர்ப்பித்தான்.
அடுத்த நாள் மீட்டிங் முடிந்து கேண்டீனில் கூடியிருந்தனர் அனைவரும். சின்ன பார்ட்டி போல ஏற்பாடு செய்திருந்தாள் ஆரி. கலை தங்களின் டீமுடன் தான் அமர்ந்திருந்தான் மற்றவர்களை விட அவனின் டீம் அவனுக்கு நன்கு பரிச்சயம் என்பதால் அவர்களுடனே அமர்ந்து விட்டான்.
“நீ கவனிச்சியா, அவங்க பின்னாடி திரும்பி இருக்கும் போது பேசனா அதை அவங்க கண்டுக்கவே இல்லை…” என தினேஷ் என்பவன் யோகேஷ் என்பவனிடம் கேட்டான்.
“நோட் பண்ணேன் டா ஆனா சாதாரணமா நம்மாலும் அப்படி தானே பண்ணுவோம். சோ என்னால அவங்களுக்குக் காது கேட்காதுன்னு சொல்றதை நம்ப முடியல…” என்றான் யோகேஷ்.
“இங்க ஒர்க் பண்ற சீனியர் புராஜெக்ட் மேனேஜர் எல்லாருக்கும் தெரியும் டா.. அவங்கதான் பேச்சு வாக்கில சொன்னாங்க…”என தினேஷ் சொல்ல யோகேஷ் யோசிப்பது போல் சரியெனத் தலையாட்டினான்.
“என்னாச்சு யாரைப் பாத்தி பேசிட்டு இருக்கீங்க…” என இடைப்புகுந்தான் கலை
“நம்ம மேடத்தைப் பத்தி தான் புரளி பேசிட்டு இருக்காங்க சார்…” அருகிலிருந்த பெண் கௌசிகா சொல்ல மற்ற இருவரையும் கேள்வியாகப் பார்த்தான்.
“நாங்க புரளி எல்லாம் பேசலை… இருக்கறத சொல்றோம்…” மூக்குவிடைக்க சொன்னவன் கலையிடம் திரும்பி “மேமுக்கு காது கேட்காது சார்…” என்றான் மெல்ல
“சரி அதுல என்ன இருக்கு…” அவன் அதிர்ச்சியாகக் கேட்பான் என நினைக்க அவனோ சாதாரணமாக எடுத்துக் கொண்டதில் மற்ற மூவருக்கும் ஆச்சரியமாக இருந்தது. ஆனால் கலையின் மனமோ பெண்ணவளை சந்தித்ததிலிருந்து தற்போது வரை நடந்த நிகழ்வுகளை அலசிப் பார்த்தது. ‘ ச்ச அவளுக்கு இப்படின்னு தெரிஞ்சு இருந்தா அவ ஃபேஸ் பார்த்தே பேசி இருக்கலாம்…’ என நினைத்தவனுக்குத் தெரியவில்லை இனியும் அதை அவன் செய்யப் போவதில்லை என்று.
“ஆமாம் எதுக்கு இந்த பார்ட்டியாம்…” என்ற கௌசியின் கேள்வி கலையை நடப்பிற்கு இழுத்து வந்தது…
“எனக்கு தெரிஞ்ச வரை மேமோட ஆளுக்கு பர்த்டேவா இருக்கும். அவரும் இன்னைக்கு ஆபிஸ் வந்திருக்கிறார். நீங்களும் பார்த்திங்க தானே…” தினேஷ் கூற சாப்பிட்டுக் கொண்டிருந்த சாமோசா புரையேறியது கலைக்கு.
“வாட்…” ஒருபுறம் அதிர்ச்சியாக இருந்தாலும் மறு புறம் முகம் இறுகுவதைத் தடுக்க முடியவில்லை அவனால்.
“ஆமாம் சார் நான் கேள்விப்பட்ட வரைக்கும் மேமோட அப்பா, அம்மா இருக்கும் போதே மேடத்துக்கும், அசோக் சாருக்கும் நிச்சியமாகிடுச்சாம். அதுக்கு அப்பறம் தான் மேம் போன கார் ஆக்சிடென்ட்டாகி அவங்களுக்கு ஸ்பீக்கர் அவுட் ஆயிடுச்சின்னு சொன்னாங்க… சோ இவங்க கல்யாணம் நின்னு போச்சாம். இப்பவும் இரண்டு பேரும் லவ் பண்ணிட்டு தான் இருக்காங்க நினைக்கிறேன். அசோக் சார் மேமை பார்க்க அடிக்கடி இங்க வந்துடுவார்…” என தினேஷ் சொல்லச் சொல்ல கலையின் முகம் இறுகிக் கொண்டே போனது.
“ஹேய் அசோக் சாருக்கு கல்யாணம் ஆயிடுச்சு…” என்றபடி ஜீவா கலையின் அருகிலிருந்த மற்றொரு நாற்காலியில் அமர ஜீவாவின் அருகில் சூர்யா அமர்ந்தான்.
“கல்யாணம் ஆனவர் எதுக்கு டா அடிக்கடி இங்க வரனும்…” என சூர்யா விசமமாக சிரித்தபடி கேட்டான்.
ஜீவாவும், சூர்யாவும் பேச மற்றவர்கள் பேசவில்லை அமைதியாக அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு ஜீவாவை பற்றியும், சூர்யாவைப் பற்றியும் தெரியும் என்பதால் அமைதியாக இருந்திருக்கலாமோ என்னவோ.
“ஏன் உனக்குத் தெரியாத சூர்யா.. காதுமாவை கீப்பா மெயினடெய்ன் பண்ணிட்டு இருக்காரு தலைவரு. அவருக்கு இருக்கிற சொத்துக்கு கீப்பா இருந்தாலே மாசம் லட்சம் பாக்கலான்னு மேடம் நினைச்சுட்டாங்க போல, அப்பா, அம்மாவும் இல்லை நல்லா ஊர் மேய…” என அவன் சொல்லி முடிக்கவில்லை ஜீவாவின் சட்டையைப் பிடித்து இருந்தான் கலை.
கலை சாதாரணமாகவே நல்ல உயரம் அவன் உயரத்திற்கு ஜீவா சிறியதாகத் தெரிந்தான் ஒரு விரல் நீட்டி ” இனிமே ஒரு வார்த்தை வெளியே வந்துச்சு பொழந்துடுவேன்…” எனச் சீறிவிட்டு அங்கிருந்து வெளியேறி இருந்தான். ஜீவாவிற்கு இது பெரும் அவமானமாக இருந்தது. இதுநாள் வரையிலும் அனைவரும் அவனிடம் ஒதுங்கியே இருக்கக் கலை இப்படிச் செய்தது கோபம் வந்தது… சட்டென அவ்விடத்தை விட்டு நகர்ந்தான் ஜீவா
இங்கு வெளியில் வந்த கலையின் மனமோ ‘ அவ மேல லவ் இல்லாமையா ஜீவா அப்படிச் சொன்னதும் சட்டையை பிடிச்ச அப்ப அவ மேல உனக்கு ஏதோ இருக்கு தானே அது ஏன் லவ்வா இருக்கக் கூடாது…’ என ஈர்ப்பிலிருந்து அடுத்த கட்டத்திற்கு அடிபோட்டது அவனின் மனம்.
“வாயை மூடு…அந்த இடத்தில யாரை பேசி இருந்தாலும் என் ரியாக்சன் இதுவா தான் இருக்கும்…” என்று அதனை அடக்கியவன் அண்டர் கிரவுண்ட்டிலிருந்த பார்க்கிங் ஏரியாவை நோக்கி நடந்தான். சில நிமிடங்கள் மட்டுமே அலுவலகத்தில் வேலை இருக்கும் என்பதால் பைக்கை அலுவலக வாசலிலேயே நிறுத்தி விடுவான். இனி முழு நேரமும் அலுவலகத்தில் தான் குப்பை கொட்ட வேண்டும் என்பதால் பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தி இருந்தான்…
தன் வழமையான நடையை விட வேகமாக பார்க்கிங் ஏரியாவை நோக்கி நடந்தான். அவன் உள்ளே செல்ல செல்லவே அசோக் என்பவனின் கார் அவனைத் தாண்டி சென்றது அவனுடன் ஆரியும் தான் இருந்தாள். நன்றாக உற்றுப் பார்த்தாள் தான் ஆரி அமர்ந்திருப்பது தெரியும். ஏனோ கலை உற்றுப் பார்க்காமலேயே அவன் கண்களுக்குத் தெரிந்தாள் ஆரியா தெரிந்தாள். செல்லும் இருவரையும் பார்த்தவனின் மனதெல்லாம் தகதகவென எரிந்தது.
கலையின் பின்னால் வந்த ஜீவா இதனைக் கண்டு சத்தமாகச் சிரித்தான்.
பின் என்ன நினைத்தானோ திரும்பி ஜீவாவை பார்த்தவன் “அவங்க ஃப்ரெண்ட்ஷா கூட இருக்கலாம். நீங்களா ஏதாவது கதைகட்டி பேசாதீங்க மீறி பேசனா வேற கலையை பார்க்க வேண்டி வரும்…” என்றவனின் குரல் அமைதியாக ஒலித்தாலும் வார்த்தையில் அனல் பறந்தது.
***
முடிந்தளவுக்கு கதையை முடிக்க முயற்சித்து கொண்டே இருக்கிறேன்.. பார்ப்போம்… இதுவரை எனக்கு ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் நன்றி