மங்கையின் விழிகளின் சிரிப்பா இல்லை சட்டையிலிருந்த ஈரமா ஏதோ ஒன்று மனதிற்குள் சில்லென்ற உணர்வைக் கொடுத்தது கலைக்கு. அந்த மனநிலையை ஏன் எதற்கு என்று ஆராய்ச்சி செய்யாமல் அனுபவித்தான்.
அதே மனநிலையுடன் அந்த நாளைக் கடத்தியவன் வீட்டிற்கு வரும் வழியில் பிரபலமான கபேக்கு வெளியில் நின்றிருந்த ஆரியையும், அசோக்கையும் பார்த்தான். தற்போது வரையிருந்த மொத்த மனநிலையும் மாறியிருந்தது.
இருவரும் ஏதோ தீவிரமாகப் பேசியபடி இருக்கிறார்கள் என்று தூரத்திலிருந்து பார்த்திருந்தவனுக்கு நன்றாகவே தெரிந்தது…அதுவும் அந்த அசோக், ஆரியின் கைப்பிடித்துப் பேசிக் கொண்டிருந்ததை பார்க்கப் பார்க்க பல நாள்களுக்கு முன் உச்சி மண்டைக்கு ஏறிய எரிச்சல் மீண்டும் கிடுகிடுவென ஏறுவது போலத் தோன்றியது.
அதே எரிச்சலுடன் வீட்டிற்கு வந்தவனின் மனநிலையை முற்றிலும் மாற்றியிருந்தாள் காசியின் மகள்.
அவள் பிறந்து இருபது நாட்களாகி விட்டது அல்லவா நாளை மருதமலை முருகன் கோவிலில் வைத்து பிள்ளைக்குப் பெயர் சூட்ட வேண்டும் என்று நால்வரும் கோவை வந்திருந்தனர்.
“என்னப்பா வந்தாலும் தான் வருவோம் சொன்னீங்க… தீடிர்ன்னு வந்து இருக்கீங்க ஒரு கால் பண்ணி இருக்கலாம் தானே… பாப்பாக்கு ஏதாவது வாங்கிட்டு வந்து இருப்பேன்…” உறங்கிக் கொண்டிருந்த குழந்தையின் கையைப் பிடித்தபடி தியாகுவிடம் கேட்டான்.
“ஏன் கேட்க மாட்ட, நீயும் இரண்டு வராம அந்த பக்கம் வரலை. வாடான்னு கூப்பிட்டா ஏதோ இங்க வெட்டி முறிக்கர மாதிரி வரலன்னு சொல்லிட்ட… எப்படியும் நாளைக்கு நீ அங்க வர மாட்டேன்னு தெரிஞ்சிடுச்சு. சோ மகாராஜா நீங்க இருக்கிற இடத்துக்கே நாங்க வந்துட்டோம்…” என முறைப்போடு கூறிய தாயை ஒரு பார்வை பார்த்தவன் தந்தையிடம் ‘அப்படியா…’என்பதைப் போல் கண்களால் கேட்டான்
“பாட்டி எப்படியெல்லாம் உருட்ரா பாரேன் செல்லம்…” என உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை கொஞ்சியபடி மனைவியை ஓரக் கண்ணால் பார்த்தார் தியாகு.
தந்தையின் பேச்சு சிரிப்பைக் கொடுக்க கீழே குனிந்தபடி சிரித்தான் கலை. கணவரையும், குனிந்து சிரித்தபடி அமர்ந்திருந்த மகனையும் மாறி மாறி பார்த்தவர் “ஹிம்ம்…” என உதட்டைச் சுழித்து அழகு காமித்தப்படி திரும்பிக் கொண்டார்.
எப்படியும் ஏதாவது திட்டுவார் என்று கலை நினைக்க சௌந்தர்யாவோ கணவனைக் கண்டுகொள்ளாமல் இருந்தது ஆச்சரியத்தைக் கொடுத்தது கலைக்கு. தந்தையிடம் “என்னாச்சு…” என்பதைப் போல் கேட்க
” வயசாகிடுச்சில்ல பேசறதுக்கு மூச்சு வாங்கும் போல…” எனச் சத்தமாகக் கூறி மனைவியை வம்புக்கு இழுத்தார் தியாகு. அவருக்கு மனைவியின் எண்ணம் என்றோ புரிந்து இருந்தது… அதனை வெளியில் தான் கூறவில்லை
“ஆமாமா இவருக்கு இளமை ஊஞ்சலாடுது…” என முனகிக் கொண்டே பேத்தியைத் தூக்கியவர் மகளின் அறைக்குள் கொண்டு செல்ல காசி வெளியில் வந்து கலையின் அருகில் அமர்ந்து கொண்டான். மீட்டிங் முடிந்ததுமே காசி வீட்டிற்கு வந்திருந்தான்.
“பேத்தி வந்ததில இருந்து அமைதியா இருக்கா நினைக்கிறேன். இல்லைன்னா புது பொண்டாட்டி மாதிரி மூஞ்சியைத் தூக்கி வைச்சிட்டு தான் சுத்துவா…” என தியாகு கூறவும் சௌந்தர்யா வெளியில் வரவும் சரியாக இருந்தது.
“போச்சுடா…” வெளிப்படையாகப் பதறிய கணவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு சமையலறையிற்குள் நுழைந்து விட்டார் சௌந்தர்யா…
அன்று மருத்துவமனையில் காசியும், மேகலையும் பேசுவதை சௌந்தர்யா கேட்க நேர்ந்தது. கணவனும், மகனும் காரை பார்க் செய்ய சென்றுவிட இவர் பேத்தியைக் காண முன்னே வந்துவிட்டார். அப்போது தான் மகளின் பேச்சையும், மருமகனின் பேச்சையும் கேட்டார்.
உண்மையைச் சொல்லப் போனால் சௌந்தர்யாவிற்கும், தியாகுவிற்கும் இடையில் பெரிய பிரச்சனை என்றெல்லாம் கிடையாது(?).
‘உன்னால் முடியாது அதைச் செய்யாதே என்பதை விட உன்னால் முடிந்தாலும் சரி முடியவில்லை என்றாலும் அதை செய் நான் உனக்குத் துணை நிற்பேன்…’ என்ற வார்த்தையைக் கணவரின் வாயால் கேட்க நினைத்தார் சௌந்தர்யா.
அதை தியாகு கூறியிருந்தால் நிச்சியம் கணவரின் அக்கறையான பேச்சிற்குச் செவி சாய்த்து இருப்பாரோ என்னவோ ஆனால் உன்னால் முடியாது அதைச் செய்யாதே. இந்த நிலைமையில் ஏன் செய்கிறாய். இதைச் செய்ய வேண்டும் என்ற வேண்டுதலா உனக்கு… என்ற கணவரின் நம்பிக்கையின்மையான வார்த்தைகள் தான் சௌந்தர்யாவின் பிடிவாதத்தை இன்னும் தூக்கிப் பிடித்தது.
அந்த பிடிவாதம் தான் இருவருக்குள்ளும் பிரிவை உண்டாக்கியது. அதற்கு பின்னனா கணவன், மனைவி பேச்சுகள் அனைத்தும் நீ ஆண் என்ற கர்வத்தில் பேசுகிறாயா? நீ பெண்ணியம் பேசுகிறாயா? என்ற ரீதியில் வந்து நின்றது…
நாட்போக்கில் சாதாரணமாக ஆரம்பிக்கும் பேச்சுகள் கூட சண்டையில் வந்து முடிய அது நிரந்தர பிரிவை இருவருக்கும் உருவாக்கியது.
ஆனால் சில மாதங்களிலேயே அந்த பிரிவைப் பாதியாகக் குறைத்து இருந்தார் தியாகு. என்னதான் கணவன் இறங்கி வந்து பேசினாலும், உரிமையாய் அனைத்தும் செய்தாலும் சௌந்தர்யாவிற்குத் தான் கோபம் போகவில்லை ‘என்னைத் தனியே தவிக்க விட்டுச் சென்றாய் அல்லவா அப்படியே போய் கொள்…’ என்ற வீண் பிடிவாதம் சௌந்தர்யாவிற்கு. அந்த பிடிவாதமும் தியாகு சௌந்தர்யாவைக் காணும் வரைக்கும் மட்டுமே நீடிக்கும் என்ற உண்மை சௌந்தர்யா மட்டுமே அறிந்தது.
அதேபோல் ஆயிரமாயினும் தியாகுவை சௌந்தர்யா திட்டினாலும் மற்றவர்கள் கணவரை பற்றிப் பேச விட்டதில்லை அது கலையாக இருந்தாலும் சரி மேகலையாக இருந்தாலும் சரி… அப்படியிருக்கக் காசி கணவரைப் பேசியது வருத்தத்தைக் கொடுத்தது. அவன் அப்படி பேசக் காரணமும் தான் தானே என்று நினைத்தவர் இனி கணவரைத் திட்ட வேண்டுமென்றால் தனியே திட்டிக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டார். இப்போதும் கூட கணவரிடம் செல்ல வேண்டும் என்ற எண்ணமில்லை அதற்கு அவரின் ஈகோ விடவும் இல்லை.
“என்ன டா அழகி செல்லம் ஊழை மூக்கி நம்மளை கண்டுக்கவே மாட்டீங்கிறாளா? விடு அடிச்சரலாம்…” என்ற கணவரின் குரலில் தன்னிலைக்கு வந்தவர் திரும்பி கணவரைப் பார்த்தார். அவரோ கலையின் கேசத்தை கோதிக் கொண்டே அவனிடம் பேசியபடி இருக்க ‘ரூமுக்குள்ள வாடி உனக்கு இருக்கு…’என்பதைப் போல் பார்க்க ‘இப்பவே போறேன் வாடி..’ என்பதைப் போல் அங்கிருந்த மற்றொரு அறைக்குள் நுழைந்து கொண்டார்.
கலை தான் தன் தந்தையின் செய்கையில் சிரிப்பை அடக்கியபடி அமர்ந்திருந்தான் என்றால் காசி இமைக்காமல் இருவரையும் பார்த்தான்.
“இந்தளவுக்கு இருக்காங்க… அப்பறம் என்னடா இவங்களுக்கு ஈகோ சேர்ந்து இருக்கலாம் தானே…” கிசுகிசுப்பான குரலில் கலையிடம் காசிக் கேட்க மெல்ல சிரித்தவன் அதே கிசுகிசுக் குரலில் “யார் சொன்னா இரண்டு பேரும் தனியா இருக்காங்கன்னு…” எனக் கேட்டு சிரித்தவனை முடிந்த மட்டும் முறைத்தவன்
“உங்க குடும்ப அரசியல் தெரியாம உள்ள வந்துட்டேன்… எதுவும் தெரியாத என்னை ஆளுக்கு ஆள் பந்தாடிட்டீங்க டா…” காசி பொரும வாயில் கைவைத்துச் சிரித்தபடி “நீ கேட்டு இருக்கணும்…” எனக் கூறியவனை முறைக்க மட்டுமே முடிந்தது காசியால்.
“கூல் மாமே…” என எழுந்து நின்றவனிடம் “எனக்கு இன்னும் உறுத்தல் தான் டா, நீ பேசன சில விசயம் அம்மானாலா தனியா எதையும் பார்த்துக்க முடியாதுன்னு சொன்னது எல்லாம் மனசுலயே இருக்கு ஏத்துக்க முடியல, அதே போல உங்கப்பா பேசினதும் ஏத்துக்க முடியல…” என மனதை மறைக்காது கூறினான் காசிநாதன்.
“இப்பவும் அதான் சொல்றேன். எங்கம்மானல தனிய இருக்க முடியாது. அதுவும் அப்பப் பாப்பா வேற மாசமா இருந்தா சோ நான் கூட இருந்தா தான் சரியா இருக்கும் தோணுச்சு அதான் சொன்னேன் இப்பவும் அதையே தான் சொல்றேன் நான், அப்பா இரண்டு பேருல யாராவது வீட்டுல இருந்தா தானே சரியா இருக்கும். பொண்ணுங்க இவங்கனால என்ன பண்ண முடியும் அவசரத்துல அதை மைண்ட்ல வைத்துத் தான் சொல்றேன். இதையே எங்கம்மாகிட்ட சொன்னா எங்கம்மா பெண்ணியம் அது இதுன்னு பேசிட்டு எரிச்சலைக் கிளப்பும்…” என்றவனை ஆவென பார்த்தான் காசி.
காசியின் தாடையில் கைவைத்து வாயை முடியவன் “சில விசயங்களை யாராலையும் மாத்திக்க முடியாது மாமே அதுல இதுவும் ஒன்னு… நான் சொல்றதை ஆணாதிக்கமா பார்த்தா ஆணாதிக்கம்.அக்கறையா பார்த்தா அக்கறை. அது நம்ம புரிஞ்சுக்கறது பொறுத்து மாறும். எக்ஸாம்பிலுக்கு நீ செஞ்சதையே சொல்றேன். பாப்பா பிறக்கிற வரைக்கும் அம்மா வீட்டிலயே இருந்துக்க என்னால தனியா உன்னை பார்த்துக்க முடியாதுன்னு நீ உன் பொண்டாட்டிக்கு சொன்னது ஒருவித அக்கறைன்னா உங்கனால பாப்பாவை தனியா பார்த்துக்க முடியாதுன்னு நான் சொல்றதும் ஒரு வித அக்கறை தானே…” எனக் கேட்டவனிடம் ஆமென தலையாட்ட மட்டுமே முடிந்தது காசியால்
சிலரின் பேச்சும், செயலும் வேறு வேறு போலத் தானே இருக்கும். அது போலத் தான் தியாகராஜனின் கலையின் பேச்சும், செயலும். ஆணாதிக்கம் வேறு, அக்கறை வேறு, அக்கறையில் கலந்த கண்டிப்பு வேறு, ஆண் கூறும் சிலதை பெண் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் ஆண்கள் எடுக்கும் சில முடிவுகள் பைத்தியக்கரத்தனமாக தான் இருக்கும் அன்று தியாகராஜன் எடுத்த முடிவு போல.
*******
அடுத்த நாள் அதிகாலையிலேயே பரபரப்பாக இருந்தது காசியின் வீடு… நல்ல நேரத்தில் பெயர் வைத்துவிட வேண்டும் என்று அலப்பறையைக் கூட்டிக் கொண்டிருந்தார் சௌந்தர்யா. அவரின் அலப்பறையிலேயே தியாகு உட்பட அனைவரும் கிளம்பி வெளியில் வந்துவிட்டனர் நம் நாயகனைத் தவிர..
“ஏகலைவா என்ன டா பண்ணிட்டு இருக்க… சீக்கரம் வா…” என வெளியிலிருந்தபடியே கத்திய தாயிற்கு “வந்துட்டேன் மா…” எனப் பதில் கொடுத்தபடியே வெளியில் வந்து நின்றவனைப் பார்த்த அனைவரின் கண்களும் நொடியில் இமைக்க மறைந்து விட்டது என்பது தான் உண்மை.
“போலாம் மா…” என வாட்சை பார்த்தபடி கூறியவனின் குரலில் அனைவரும் தன்னிலைக்கு வந்திருந்தனர். அடுத்த சில நிமிடங்களில் கலையின் கார் மருத மலை முருகன் கோவிலை நோக்கிப் பயணித்தது.
அடுத்து முப்பது நிமிடங்களில் மருத மலைக் கோவிலை அடைந்திருந்தனர் கலையின் குடும்பத்தினர். அதிகாலை துகினமும் சாம்பிராணி வாசமும் அங்கிருந்தவர்களின் மனநிலையை அமைதியடையச் செய்திருந்தது… பாப்பாவிற்குப் பெயர் வைக்க ஆக வேண்டிய ஏற்பாடுகளைக் காசியும், தியாகுவும் பார்த்துக் கொள்ளக் கலையோ வேட்டியுடன் அல்லாடிக் கொண்டிருந்தான்.
ஆம் என்றும் இல்லாத அதிசயமாக இன்று வெள்ளை வேட்டியும் அதற்குத் தகுந்தார் போல ராமர் வண்ண சட்டையும் அணிந்து இருந்தான். வேட்டி செய்த மாயமோ இல்லை மங்கை அவனுள் நுழைந்து செய்யும் மாயமோ ஏதோ ஒன்று இன்று அவனை அழகாய் காட்டியது அழகாய் தெரிந்தான் ஏகலைவன்.
“என்னாச்சு தம்பி, நான் வேணா ஹெல்ப் பண்ணவா..” என கேட்ட தந்தையிடம் “இல்லைப்பா வேண்டாம் நானே பாத்துகிறேன்..” என்றவனிடம் “அம்மா பேக்ல பெல்ட் இருக்கு போயி எடுத்துக்க…” என்றதும் தந்தையை சிரிப்போடு பார்த்தான்.
“நீ இன்னைக்கு வேட்டிக் கட்டரேன் சொல்லும் போதே எடுத்து வைச்சுட்டேன் தம்பி…” எனப் புன்னகையோடு கூற சரியென தலையாட்டியவன் பெல்ட்டை எடுத்துக் கொண்டு கோவில் வழகத்தல் இருந்த ரெஸ்ட் ரூமை நோக்கி நடந்தான்.
———————–
சில நிமிடங்களில் இடைவாரைக் கட்டிக் கொண்டு வந்தவன் கோவில் வளாகத்தை வேடிக்கை பார்த்தபடியே நடந்தான். அப்போது தான் ஆடவனும் எதிர்பார்க்காதவகையில் பாவையைக் கண்டாள். கோவில் தூண் அவளைப் பாதி மறைத்திருக்கப் பக்கவாட்டு தோற்றம் மட்டுமே தெரிந்தது கலைக்கு. கலையின் சட்டை நிறத்தில் புடவை அணிந்திருந்தாள் . முதன்முதலாக மங்கையைப் புடைவையில் காண்கிறான் அல்லவா அப்படியே நின்றுவிட்டான். அவளின் பக்கவாட்டு அழகே அவனைக் கொத்தித் தின்றது. இது அனைத்தும் சில வினாடிகள் மட்டுமே அதற்குப் பின் தான் கவனித்தான் மங்கையின் முக இறுக்கத்தையும் அவளின் உடல் மொழியும்… கண்களைச் சுருக்கி ஆரியை பார்த்தவன் நிமிடம் யோசிக்காது மங்கையை நோக்கி நடந்தான்.
“என் பையன் வாழ்க்கையை விட்டு போயிடுன்னு எத்தனை தடவை சொல்றது உனக்கு. ஏன் கேட்க மாட்டீங்கற… அவனுக்கு கல்யாணமாகி குழந்தையே பிறந்துருச்சு. ஏன் அடுத்தவளோடு எச்சிக்கு ஆசைப்படற. வெறும் சொத்துக்காக அடுத்தவ புருஷன்னு கூட பார்க்காம இப்படி கூட சுத்த வெட்கமா இல்லையா உனக்கு…” எனக் கோவில் என்றும் பாராமல் கத்திக் கொண்டிருந்த பெண்மணியிடம்
“இல்லை நான் சொல்கிறதை புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க அத்த…” கடைசி வார்த்தை எதிரில் நின்ற பெண்மணியின் முறைப்பில் நின்றது.
“இப்படி அடுத்தவன் குடும்பத்தை நாசமாக்கிற உன்னையெல்லாம் அந்த முருகன் சும்மாவே விட மாட்டான். மனசார சொல்றேன் நீ அனாதையா தான் சாவ…உன் குடும்பம் எப்படி அனாதையா போச்சோ அதை விட மோசமா தான் உனக்கு நடக்கும்…நல்ல இருக்க மாட்ட மண்ணோட மண்ணா போயிடுவ…” என சாபம் விட்டுத் திரும்பிச் சென்ற பெண்மணியையும் தளர்ந்து நின்ற ஆரியும் பார்த்தவன் அவளுக்கு முன்னால் சென்று நின்றான். இப்போதே விழவா என்பதைக் கண்களில் கண்ணீர் மின்னத் தாங்கி பிடிக்க நான் இருக்கிறேன் என்பதைப் போலக் கன்னங்களும் துடித்தது… எப்போதும் போல அழுகையை அடக்கி நின்றவள் அரவம் உணர்ந்து அண்ணாந்து பார்க்கக் கலை நின்றிருந்தான்.
“போகலாமா…” என்ற கலையின் கேள்விக்குப் பதில் சொல்லும் நிலையில் தான் அவள் இல்லை. ஆரியை நிமிடம் அழுத்தமாகப் பார்த்தவன் பின் எதைப் பற்றியும், எவரைப் பற்றியும் யோசிக்காமல் மங்கையின் கைகளை அழுத்தமாக பிடித்தபடி தன் வாகனம் இருக்குமிடத்தை நோக்கி நடந்தான்.
ஆரியை காரில் அமர வைத்தவன் தானும் டிரைவர் சீட்டில் அமர்ந்து கொண்டான். கண்களை இறுக மூடி திறந்தவன் “வீட்டுக்கு போகலாமா?..” என்று கேட்டான் அவள் முகத்தைப் பார்க்காது.
ஏதோ உள்ளுணர்வு அவனைப் பார் என்று கட்டளையிட்டது சட்டென நிமிர்ந்து ஆடவனின் முகத்தைப் பார்த்தாள். ஆனால் பேசவில்லை ஆரியின் அமைதியில் தான் கேட்டது புரியத் திரும்பி மங்கையின் கலங்கிய முகத்தைப் பார்த்து “வீட்டுக்குப் போகலாமா…” என்று அழுத்தமாகக் கேட்டான். எதுவும் பேசாமல் சரியெனத் தலையாட்டினாள்.
அந்த நிமிடம் எதைப் பற்றியும் யோசிக்காமல் ஆரியுடன் காரில் பயணித்தான். ஆரியின் நிலைமை நேரம் செல்ல செல்ல மோசமாவதைப் போல் உணர்ந்தான் ஏகலைவன். இருந்தும் அவளிடம் என்ன நடந்தது என்று விசாரிக்கவில்லை. ஆனால் அவள் அழுகையை தனக்குள்ளேயே அடக்குவது நன்றாகவே புரிந்தது.
உண்மையாகவே ஆரியும் அதைத் தான் செய்தான். எப்போதும் போல அழுகையை தனக்குள் அடக்கினாள். அதன் விளைவு தொண்டைக்குள் ஏதோ அடக்கும் உணர்வு… குரல்வளையை நீவிக் கொண்டும் நெஞ்சைத் தடவிக் கொடுத்தபடி வந்தவளை ஓரக்கண்ணால் பார்த்தான். தன்னாலேயே மங்கையின் தலையை வருடி ‘வாய்விட்டு அழுதிரு பெண்ணே..’ எனச் சொல்ல வேண்டுமென்று தோன்றியது கலைக்கு. ஆனாலும் ஒரு வார்த்தை அவளிடம் பேசவில்லை மருத மலை மலையடிவாரத்தைக் கடந்து சில தூரம் சென்றது ஓர் இடத்தில் காரை நிறுத்தியவன் உதடு துடிக்கக் குனிந்து அமர்ந்திருந்த ஆரியை பார்த்தான். நிமிடத்திற்கு மேல் வாகனம் செல்லாமல் இருப்பதை உணர்ந்தவள் சட்டென நிமிர்ந்து கலையைப் பார்த்தாள்
“அட்ரஸ்…” என்றதும் தன் வீட்டு முகவரியைக் கூறினாள். அரைமணி மணி நேரத்தில் அந்த பெரிய வீட்டில் நின்றது கலையின் கார். கலையின் காரை கண்டதும் செக்யூரிட்டி நிமிடம் யோசித்தாலும் அவனுக்கு அருகிலிருந்த ஆரியைப் பார்த்ததும் கேட்டை திறந்தான். முதல் முறை வீட்டைப் பார்க்கும் எவரும் ஆச்சரியம் கொள்ளாமல் இருக்க மாட்டார்கள் அந்தளவிற்கு இருந்தது ஆரியின் வீடு… கலையின் கண்களும் ஆச்சரியத்தில் விரியாமல் இல்லை இருந்தும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை போர்டிகோவில் காரை நிறுத்த இறங்கியவள் நடுங்கும் கால்களோடு வீட்டினுள் நுழைந்தாள்.
நிலைகுலைந்து செல்லும் பெண்ணை இமைக்காது பார்த்தவன் வாகனத்தைக் கிளப்பியிருந்தான் கோவிலுக்கு.
“உன் குடும்பம் அனாதையா போன மாதிரி தான் நீயும் போக போற… இப்படி அடுத்தவளோட எச்சீக்கு ஆசைப்படறயே வெட்கமா இல்லை உனக்கு…” என்ற வார்த்தைகள் ரீங்காரமாய் காதில் ஒலித்தது… மற்ற அனைத்தும் விட’ உன் குடும்பம் அனாதையா போன மாதிரி…’ என்ற வார்த்தை காதில் ஒலித்து கொண்டே இருந்தது… எப்போதும் போல கண்களைச் சூழ்ந்து நீரை அடக்கிக் கொண்டவள் தன் அப்பா, அம்மாவின் அறைக்குள் நுழைந்தாள். சுற்றிலும் அனைவரும் பேசிய பேச்சுகள் ஏராளம் அதைக் கேட்க முடியவில்லையே அவர்களுக்குப் பதில் கூற முடியவில்லை என்ற ஆதங்கம் அதிகமாக இருந்தது…அந்த ஆதங்கம் மன அழுத்தமாக மாறி அவளை முழுவதும் தாக்குவதற்குள் கதவைத் திறந்து கொண்டு கலை உள்ளே நுழைந்தான்.