“யோவ் வண்டியை நிறுத்துயா…” என்ற குரலில் சட்டெனத் திரும்பி பெண்ணின் முகம் பார்த்தான் கலை.
“அங்க என்ன பார்வை… இங்க பாரு, ஒரு பொண்ணு பக்கத்துல இருந்தா போதுமே கண்ணாபின்னான்னு வண்டியை ஓட்ட வேண்டியது. கையை நீட்டி நிறுத்துன்னா நிறுத்தறது இல்லை அந்தளவுக்கு தெனாவட்டு, திம்மறத்துல ஆடற நீ…” எனக் கத்தியக் குரலில் தன் பக்கம் திரும்பினான் ஏகலைவன்.
ஒரு பெண் போலீசாரும் ,மூன்று ஆண் போலீசாரும் நின்றுக் கொண்டிருந்தனர். தற்பொழுது வரை தங்களின் வாகனத்தைத் தான் பின் தொடர்ந்து வந்து இருக்கிறார்கள் என்பது அவர்களின் கடுக்கடுத்த முகமேக் கூறியது.
மனதில் திக்கென்றாலும் அதை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் “சொல்லுங்க மேடம்…” எனக் கேட்டான்.
பெண் காவலருக்கு அருகில் நின்ற காவலரோ “என்ன சொல்லுங்க மேடம்ம்ம்ம்… வண்டியை நிறுத்த சொல்றோம். அதை துளிக் கூட மதிக்காம அந்த வேகத்துல வர, உங்க மேல எங்களுக்கு சந்தேகமா இருக்கு, வண்டியில என்ன இருக்கு? என்ன வைச்சு இருக்கீங்க? சார் வண்டியை செக் பண்ணுங்க சார்…”இவனிடம் கத்திவிட்டு அருகிலிருந்த மற்றொரு காவலரிடம் கூறினார் அந்த காவலர்.
“ஐயோ சார்! நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் எதுவுமில்லை. இவ நான் கட்டிக்க போற பொண்ணு. இவளுக்கு ரொம்ப ஃபீவரா இருந்துச்சு சார் அதான் வேகமாக போக வேண்டியதா போச்சு…” என்றது மட்டுமில்லாமல் மங்கையின் நெற்றியில் கை வைத்து கூறினான்.
அக்கணம் அவனது உள்ளங்கையில் உணர்ந்த குளிர்ச்சியில் கலையின் விழிகள் ஏகத்திற்கும் விரிந்தது.கலையின் விழி விரிப்பைப் பார்த்தவளுக்கு குப்பென்று சிரிப்பு வரப் பார்த்தது அடக்கிக் கொண்டாள்.
ஏகலைவனின் பேச்சை உள் வாங்கிக் கொண்டே அவனுக்கு பக்கவாட்டில் அமர்ந்திருந்த அனிச்சம் பூவைப் பார்த்தார் காவலர். சுரிகுழலின் சோர்ந்த முகமே அவன் கூறுவது உண்மையென்று கூறியது.
அதே கணம் இவர்களின் வாகனத்தைப் பரிசோதித்த மற்றொரு காவலர் “இதுல ஒன்னுமில்லை சார்…” என்றார்.
அவரிடம் சரியேன்று தலையாட்டி விட்டு “இப்படியெல்லாம் உங்க இஷ்டத்துக்கு வேகமாக போக கூடாது மிஸ்டர்…” என்று ஆரம்பித்து சிலபல கண்டிப்புப் பேச்சோடு மட்டுமல்லாமல் குறிப்பிட்ட தொகையை ஃபைன் போட்டு ஆன்லைனில் கட்ட வைத்துவிட்டு தான் அங்கிருந்து நகர்ந்தனர் காவலர்கள்.
“ஊப்…”என்று காற்றை வெளியிட்டவன் “இந்த மூவில, நாவல்ல வர ஹீரோ, ஹீரோயின்னெல்லாம் ஸ்பீடா போனா ஒரு போலீஸும் கண்டுக்கறது இல்லை, நம்ம கொஞ்சம் கொஞ்சமே ஸ்பீடா போனாலும் பின்னாடியே வந்து மிரட்டறது மட்டுமல்லாமல் ஃபைன் போட்டு காசை புடுங்கிட்டு போறானுங்க, ச்ச நேரமே சரியில்லை…” எனத் தலைக்குள்ளையே முணுமுணுத்துக் கொண்டே தன் அருகில் குறும்பு புன்னகையோடு அமர்ந்திருந்தவளைப் பார்த்தான்.
‘இவ பக்கத்துல இருக்கும் போதா இப்படியெல்லாம் நடக்கணும்…’ மனம் வேறு ஒருபக்கம் புலம்பியது.
மங்கையின் குறும்பு சிரிப்பைக் குறுகுறுவெனப் பார்த்தவனுக்குக் கூட சிரிப்பு தான் வந்தது. மெல்லிய புன்னகையுடன் ‘என்ன…’ என்பதைப் போல் புருவத்தை உயர்த்திக் கேட்டான். ஒன்னுமில்லை என்பதை போல் தோள் குலுக்கி ஜன்னல் புறம் திரும்பிக் கொண்டாள்.
அப்போது தான் நினைவு வந்தவனாய் “ஆமாங்க, ஆஃபீஸ்ல அந்தளவுக்கு காய்ச்சல் கொதிச்சது. இப்ப என்ன இவ்வளவு ஜில்லுன்னு இருக்கீங்க…”என்று கேட்டான்.
எப்போதும் போல ஆரியிடம் பதில் இல்லை அவளின் அமைதியில் ‘ஸ்…’ என்று தலையில் தட்டிக் கொண்டவன் பாவையின் கையை பற்றி தன்னைப் பார்க்க செய்து மீண்டும் அதே கேள்வியைக் கேட்டான். அவனை ஆழ்ந்து பார்த்தாள் பெண்.
அந்த பார்வை அவனுக்கு துளியும் புரியாமல் போக “என்னமா? என்ன பண்ணுது…” எனக் கேட்டு பெண்ணின் கழுத்திற்கு அடியில் தொட்டுப் பார்த்தான்.
சாதாரண உடல் சூடு தான் இருந்தது அலுவலகத்தில் இருந்தது போலில்லை. அது ஏனென்று?அவளிடமே கேட்டான். பதில் சொல்லாமல் புருவத்தை உயர்த்தி, கன்னக்கதுப்புகளை கடித்தப்படி முறைத்தாள்.
பாவையின் முறைப்பில் ‘ஐய்யோ முறைக்கிறாளே, ஒருவேளை காய்ச்சல் இல்லையோ? நம்ம தான் தப்பா நினைச்சுட்டு கூட்டிட்டு வந்துட்டமோ? மொத்தமா சொதப்பிட்டியே டா ஏகா, சரி சமாளிப்போம்…’ என நினைத்தவன்
“இல்லைங்க இப்ப நிஜமாவே காய்ச்சல் இருக்கிறது போல தெரியலைங்க, ஆனா ஆபீஸ்ல பார்க்கும் போது காய்ச்சல் இருந்தது. உங்க முகம் வேற ரொம்ப சோர்ந்து இருந்தது. அதான் என்ன ஏதுன்னு கூட உங்ககிட்ட கேட்காமக் கூட்டிட்டு வந்தேன். சொல்லப்போனால் இப்பவும் நீங்க சோர்ந்து தான் இருக்கீங்க, எதுக்கும் ஒரு இன்ஜெக்சன் போட்டுட்டு வந்துடலாமாங்க ?…” எனக் கேட்டான்.
அவனையே இமைக்காது பார்த்தவளின் விழிகள் முழுவதும் ஆடவனின் கண்களில் மட்டுமே நிலைத்தது. கலையின் விழிகள் அவளை, அவனுள் மொத்தமாய் சுருட்டிக் கொள்ளப் பார்த்தது.
பார்வையை திருப்பிக் கொள்ளுவோமா என நினைத்த கணம் அவளின் முன் கையசைத்து “என்னமா போலாம் தானே..” எனக் கேட்டான் ஏகலைவன்.
அவனது கையசைவில் தன் நினைவிற்கு வந்தவள் ஆடவன் கூறுவதை முழுவதும் உள்வாங்கிவிட்டப் பின்னரே வேண்டாமெனத் தலையாட்டினாள்.
“ஏன் வேண்டாம்…” எனக் கேட்டவன் ஏதோ யோசித்தவனாய் மெல்லிய குரலில் தயங்கியபடி “ப்ரியட்ஸ்ஸா..” எனக் கேட்டான். ஆரியிடம் பதிலில்லை, ஆடவனை ஆழ்ந்துப் பார்ப்பதையும் விடவில்லை…
அவளது பார்வையில் ‘கொஞ்சம் அதிகமா தான் போயிட்டோமோ…’ என நினைத்தவன் அதற்கு மேல் எதுவும் துருவாது “சரி ஆஃபீஸ் போலாமா?…” எனக் கேட்டான். இப்போதும் வேண்டாமென தலையசைப்பு மட்டுமே பதிலாகக் கொடுத்தாள்.
‘அனைத்திற்கும் வேண்டாம் வேண்டாமென தலையாட்டினால் என்ன தான் செய்வது..’ என்பதை போல் பார்த்தான். அவனுக்கு பதில் பார்வை பார்த்தாள் பாவை.
அவளது பார்வையில் உள் கன்னத்தை நிமிட்டிக் கொண்டே “அப்பறம்? என்னோட மாமனார் வீட்டுக்கு போவோமா?…” எனக் கண்ணடித்து குறும்பு புன்னகையோடு கேட்டான்.
‘ என்ன…’ என்பதை போல் ஒரு கோபப் பார்வை அவளிடத்தில் வருமென எதிர் பார்த்தான். ஆனால் அவளோ “என் மாமனார், மாமியார் வீட்டுக்கு கூட்டிட்டு போறீங்களா? கலைவாணன்,…” எனக் கேட்டதும் கண்களை அகல விரித்து “என்ன…” என்பதைப் போல் பார்த்தான்.
அவனது அதிர்ந்த முகத்தைப் பார்த்தவள்”ஏன்? என்னாச்சு? என்னோட மாமனார், மாமியார் கோபில தானே இருக்காங்க…” எனக் கேட்க,பதில் பேசவே வரவில்லை அவனுக்கு. ஒரு மனம் ஆர்ப்பரித்தது. மறுமனம் அதனை ஏற்கவும் மறுத்தது. “நிஜமாகவே அவளுக்கு தன்னை பிடித்து இருக்கிறதா?..” என்ற கேள்வியை எழுப்பியது.
அந்நொடி “இதை நீ கார்ல வைச்சு கிஸ் பண்ண போதும், மாடில கட்டிப் பிடிக்கும் போதும்,இதோ ஆபீஸ்ன்னு கூட பார்க்காம இறுக்கமா கட்டிப் பிடிக்க தோணுதுன்னு சொல்லும் போதும் யோசிச்சு இருக்கணும்…” என்றது மற்றொரு மனம்.
உண்மை தானே, ஏனோ மனம் நெருடலாக இருந்தது. கேஷத்தை அழுத்திக் கோதிக் கொண்டவன் மலர்விழியாளை பார்த்தான். ஆரியும் இதழ்களில் தவழ்ந்த மெல்லிய புன்னகையுடன் கலையை பார்த்தாள்.
அவள் தன் கவிதையை இன்றளவும் வைத்திருந்தது, தன் குரலைக் கேட்க நினைத்தது,இதோ சற்று முன் அலுவலகத்தில் அவன் பேசியதற்கு கிண்டலடித்தது என்று எவ்வித மொக்க காரணங்களை வைத்து தன் மீது அவளுக்கு காதல் வந்திருக்குமென்று அவனால் துளியும் எண்ண முடியவில்லை.
அதே சமயம் கோவிலில் நடந்த நிகழ்வுகளை வைத்து அவளுக்கு தன் மீது காதல் வந்திருக்க கூடும் என்று நினைக்க தோன்றவில்லை. எப்படி நினைக்க தோன்றும் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் மாடர்ன் சொர்ணாக்காவாக மாறி அவனை மிரட்டி இருந்தாளே.
அப்படியிருக்க திடீரென்று அவளது பேச்சு இவனுக்கு அதிர்ச்சியையும், கேள்வியையும் எழுப்பியது. அலுவகத்தில் மனதில் எழுந்த அதிர்ச்சியையும், கேள்வியையும் மறைக்காது அவளிடமே கேட்டு விட்டான். அதற்கு அவளிடம் முறைப்பு மட்டுமே பதிலாக வந்தது.
“இல்லைங்க, அது வந்து..,” ஆரியின் அழுத்தமான பார்வையில் மேலும் பேசாது வாகனத்தைக் கிளப்பினான்.
அவனது கேள்வி இன்னுமின்னும் புன்னகையை கொடுத்தது ப்பூவைக்கு. மாயோனின் கவிதையின் மேல் பெரிய ஈர்ப்பை வைத்திருந்தது உண்மை தான். அவ்வரிகளுக்கு சொந்தமானவனை காண வேண்டுமென்று பேராவலே இருந்தது. அதே சமயம் கலையின் மீது காதல் இருக்கிறதா? என்று இரண்டு நாட்களுக்கு முன்பு கேட்டிருந்தால் நிச்சியம் அவளிடம் கலை எதிர்பார்த்த கோபப்பார்வை தான் பதிலாக கிடைத்து இருக்கும்.
ஆனால் இப்பொழுது??
நிமிடங்கள் மெளனமாக கழிய அதனை ஆரியே களைத்தாள். அவனது கேள்விக்குப் பதில் சொல்லும் விதமாக தன் பேச்சை ஆரம்பித்தாள்.
” எப்ப இருந்து இப்படியான எண்ணம் வந்ததுன்னு எனக்கே தெரியல கலைவாணன். எதிர்பாராத நேரத்தில மொத்தமா எல்லாத்தையும் இழந்துட்டு நிக்கும் போது உங்க வரிகள் சொல்ல முடியாத ஆறுதலை எனக்கு கொடுத்ததே அப்பவா? இல்லை அந்த வரிகளுக்கு சொந்தக்காரரான உங்களை முதன் முதலா நேரில் பார்த்தப் போதா?.. இல்லை உங்க குரல் எனக்கு கேட்காதுன்னு தெரிஞ்சும் அதைக் கேட்க நினைச்சனே அப்பவா? இல்லை உங்க குறும்பை, உங்க பேச்சை, உங்க செயலை எனக்கே தெரியாம கவனிக்க ஆரம்பிச்சனே அப்பவா?…”
” இல்லை என்னை ஒருத்தன் தப்பா சொன்னதும் அவனை அடிக்க போனீங்களே அப்பவா? இல்லை என்னையும் மீறி உங்கிட்ட ஆறுதல தேடினேனே அப்பவா? இல்லை கோவில்ல எனக்காக நின்னிங்களே அப்பவா? இல்லை உங்க முத்தம் என் மொத்த காயத்துக்கும் மருந்தா ஆறுதலா இருக்கிறதை உணர்ந்தனே அப்பவா? இல்லை என் வீட்டுக்கே வந்து எனக்கே சாவல் விட்டுட்டு போனீங்களே அப்பவா?…’ எனக்கே தெரியல கலைவாணன் எப்படி உங்க மேல இப்படியொரு ஈர்ப்பு வந்துச்சுன்னு…” பூவையவள் பேச பேச , அறுத்து விட்ட ஹைட்ரஜன் பலூனை போல் மேலே பறந்து கொண்டிருந்தவனின் மனம் அவளது ஈர்ப்பு என்ற வார்த்தையில் நான்கு நாட்களாகி வாடி வதங்கி போன காற்றடைத்த பலூன் போலானது… அவனது முகத்தையும், படபடக்கும் இமைகளை பார்த்துக் கொண்டே
“கண்டதும் காதல் கிடையாதுன்னு நம்பற ஆள் நான். உங்களை பார்த்ததும் எனக்கு லவ் வந்துருச்சின்னு சொல்ல மாட்டேன் அதே சமயம் ஈர்ப்பு இல்லைன்னும் சொல்ல மாட்டேன். உண்மையை சொல்லப்போனால் ஆரம்பித்துல உங்க மேல இருந்த ஈர்ப்புனால தான் உங்களை என் பக்கத்துலயே அனுமதிச்சன். நீங்க என் பக்கம் வர வர உங்க மூலமா என் குடும்பத்தை உணர்ந்தேன். சில சமயம் உங்ககிட்ட என் அப்பாவை உணர்ந்து இருக்கேன். பல சமயம் என் அம்மாவை உணர்ந்து இருக்கேன்…” என்றவள் நொடி நேர அமைதிக்கு பிறகு
“ஒவ்வொரு முறையும் என் தலையில அழுத்தம் கொடுத்து நீங்க வருடிவிடும் போது என் மொத்த குடும்பத்தையும் உங்ககிட்ட உணர்ந்த்திருக்கேன் ஏகலைவன். சொல்லப்போனால் இரண்டு நாளைக்கு முன்னாடி வரைக்கும் அந்த உணர்வு கூட வெறும் ஈர்ப்பு த்தான்னு நம்பிட்டு இருந்தேன்…” என்றவள் கண்களை இறுக மூடித் திறந்து…
‘நேத்து அம்மா, ப்பா, நினைவு நாள். எப்பவும் தனிமையை தேடி ஓடற நான் இந்த முறை உங்களை நான் தேடினேன் ஏகலைவன். உங்க கைக்குள்ள, உங்க கையணைப்புல நான் இருக்கணும். அந்த கையோட இதத்துல என் மொத்த குடும்பத்தையும் உங்க கிட்ட உணரணும்னு தோணுச்சு. உங்க கிட்ட மட்டுமே தோன்ற இந்த உணர்வுக்கு பேர் காதல்ன்னா எஸ் ஐ ஃபால் இன் லவ் வித் யூ…” என்றதும்
வாகனத்தின் விசையை அதீத வேகத்தோடு அழுத்தி வாகனத்தை நிறுத்தி இருந்தான் ஏகலைவன்…