Skip to content
Post Views: 4,177
சுள்ளென முகத்தில் அடித்த சூரிய கதிரின் ஒளியில் கண் விழித்து பார்த்தவன் நாசியில் உணவின் நறுமணம் தீண்ட புத்துணர்வாய் எழுந்தான். எழுந்த உடனே மனைவியின் தரிசனம்.
சற்று தள்ளி நின்று துவைத்த துணிகளை கொடியில் விரித்துக்கொண்டிருந்தாள்.
ராகமாக விசிலடித்தவனின் ஓசையில் திரும்பி பார்த்த மனைவியிடம் ஒற்றை கண்ணடிக்க செம்பருத்தி பூவாய் சிவந்து மலர்ந்தாள் இலக்கியா. அதில் இன்னும் அழகு கூடியது அவனின் நாள்.
“இங்க க்ரீன் டீ இல்ல. வேற ஏதாவது போடவா? பிரஷ் பேஸ்ட் டவல் எல்லாம் அங்கையே வச்சிருக்கேன்”
Advertisement
வேலையை பாதியிலேயே விட்டு வந்த மனைவியிடம், “முடிச்சிட்டு வா” அனுப்பி வைத்தவன் சிகையை கைகளால் சரி செய்து, பல் துலக்கி முகம் கழுவியபடியே மீண்டும் அதே இடத்தில் வந்து அமர்ந்தான்.
அவளும் விட்ட வேலையை தொடர, இவனுக்கு மனைவியின் அழகு தரிசனம் தான்.
அவன் துணிகளை கையிலே துவைத்ததினால் கழுத்து, முதுகு பகுதியில் வியர்வை துளிகள் அங்கொன்றும் இங்கொன்றும் முத்துகளாய் மாறியிருக்க, அவளை நோக்கி நடந்தவன் பார்வை சுற்றி எங்கும் பரவியது.
Advertisement
அதிகம் இவர்கள் இருந்த உயரத்தில் தான் கட்டிடங்கள் இருந்தது. ஆட்களும் கண்களுக்கு எட்டிய தூரம் இல்லாததால், மருத்துவன் நடை தின்னகமாக தான் இருந்தது.
Advertisement
“குளிச்சிட்டியோ?” அவன் குரல் பின்னே கேட்டாலும் திரும்பாமல் வேலையை அவள் செய்ய, அவனை உருத்திய முத்துகளை துண்டை வைத்து அருகில் நின்று துடைக்க மின்சாரம் தாக்கியது போல் தூக்கி வாரி போட்டது இலக்கியாவுக்கு.
“சார்…” குரல் எழுப்பாமல் அலறியவளை திரும்ப விடாமல் அவள் இடை பிடித்து நிறுத்தியிருந்தான்.
“சார் சொல்லாத சொன்னேன்” மொத்தமாக துடைக்காமல் ஒவ்வொரு துளியாக இவன் நிதானமாக துடைக்க சங்கடமாக இருந்தது இலக்கியாவிற்கு.
Advertisement
அவன் எல்லை மீறவில்லை, அதிகம் நெருக்கத்தையும் காட்டவில்லை இருந்தும் இயல்பாகவும் இருக்க முடியாத நிலை.
“என்னங்க பண்றீங்க, மாடில நிக்கிறோம் நாம”
“என் பொண்டாட்டிக்கு வேற்குது துடைச்சு விடுறேன்”
“அதுக்குன்னு இப்படியா?” அவனிடமிருந்து விடுபட்டு திரும்ப முயல, முடியவில்லை அர்ஜுனின் பலத்தின் முன்பு.
“துள்ளாத இலக்கியா. அப்றம் டவல் பண்ற வேலைய என் லிப்ஸ் பாக்க வேண்டி வரும்” மின்சாரம் தடைபட்ட விளக்காக அப்படியே நின்றுவிட்டாள்.
அர்ஜுனுக்கு கூறியதை செய்துவிடுவோமா என்கிற எண்ணம் தோன்ற செயல்படுத்த இறங்க நினைத்த நொடியில், “இலக்கியா இது போதுமா பாரு”
தந்தையின் குரல் கேட்க கணவனை சட்டென உதறியவள் பதறி அர்ஜுனை விட்டு இரண்டடி தள்ளி நின்றுவிட்டாள். நிம்மதி ஒன்று, தந்தை இவர்களை கவனிக்கவில்லை.
“வெட்ட வெளில என்னங்க இது” அதிர்ப்பித்தியாய் அவனிடம் மெல்ல கூறியவள் முறைத்துவிட்டு தந்தையிடம் சென்றாள்.
“போதும் ப்பா. உங்க மாப்பிள்ளை இவ்ளோ எல்லாம் சாப்பிட மாட்டாரு” சிரிப்போடு அவள் தந்தையிடம் கூறியதன் காரணம் அவர் வாங்கி வந்திருந்த முட்டையின் அளவில் தான்.
குறைந்தது பத்து பதினைந்து முட்டையாவது வாங்கி வந்திருப்பார். இது கடைசி முறை தான். இதற்கு முன்பு மாமிசம், இலை, வெங்காயம், தக்காளி என உற்சாகத்தில் அத்தனை முறை கடைக்கும் வீட்டிற்கும் அலைந்து வந்துவிட்டார்.
இருந்தும் கொஞ்சமும் சோர்வு தட்டவில்லை அவருக்கு. பல நாள் மருமகனுக்காக இப்படி ஓடி ஓடி வகை வகையாக சமைத்து விருந்து வைக்க வேண்டும் என ஆசை.
இன்று அது நிறைவேறியிருக்க, காலையில் மகளின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி அவரை இன்னும் வேகமாக ஓட வைத்தது. கையில் இருந்த பணத்திற்கு அதிகமாகவே வகை வகையாக வாங்கி வைத்துவிட்டார். என்ன மகள் மேல் சிறு கோவம் அர்ஜுன் வெளியே படுத்திருப்பதை பார்த்து.
“அவர் வெளிய படுக்கணும்னு ஆசைப்பட்டார் ப்பா” சொல்லி பார்த்தாள், கேட்கவில்லை அவர். கொசு தொல்லை இருந்திருக்குமென வருத்தம் அவருக்கு.
“இது என்ன ப்பா?” இன்னொரு பெரிய பையை கண்டவள் அதனை பிரித்து பார்க்க, “கொசு வலை ம்மா. சும்மா இந்த சீட் இருக்குற இடத்துக்கு மட்டும் போடலாம்னு நினைச்சேன்”
“அப்பா”
“நீ சும்மா இரும்மா. அவருக்கு உள்ள புழுக்கமா இருக்கோ என்னவோ. இங்கையே படுக்கட்டும், கொசு கடிக்காம இருந்தாலாவது என் மனசுக்கு நிம்மதியா இருக்கும்” அவளை பேச விடாமல் செய்துவிட்டார்.
இவற்றை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அர்ஜுன் அமைதியாக நிற்க, “உக்காருங்க மாப்பிள்ளை, டீ காபி குடிச்சீங்களா?”
“அதுக்கு தான் மாமா, அவ பின்னாடியே சுத்திட்டு இருக்கேன். போட மாட்டேன்னு நிக்கிறா”
மணிகண்டன் மகளை சிறு முறைப்போடு பார்த்தார், “என்ன ம்மா நீ. இருங்க மாப்பிள்ளை நான் போடுறேன்”
அவரே எழ, “இருக்கட்டும் மாமா” என்றான் நல்ல பிள்ளை போல்.
“நல்லா தான் மாப்பிள்ளை போடுவேன். இருங்க வந்துர்றேன்” அவர் உள்ளே செல்லவும் தன்னை முறைத்து நிற்கும் மனைவி கையை பிடித்து இழுத்தவன் அவளின் கன்னம் பற்றி அழுத்தமாய் ஒரு முத்தம் வைத்தான்.
“குட் மார்னிங்டி பொண்டாட்டி, காலைல இருந்து இதை சொல்ல தான் பின்னாடியே சுத்துனேன்” அவளை விட மனமே இல்லாமல் அர்ஜுன் அவளை இன்னும் தன்னுடைய கைகளில் வைத்திருக்க, அவனுடைய காலை வேலையை இன்னும் அழகாக்க நினைத்தாள் போல பெண்.
உள்ளே தந்தையை எட்டி பார்த்துவிட்டு வேகமாக அர்ஜுன் கன்னத்தில் முத்தம் வைக்க, பளிச்சென சிரித்தான்.
“குட் மார்னிங்” புன்சிரிப்போடு கூறி மீண்டும் அவனை நோக்கி முன்னேறியவளிடம் முத்தத்தை எதிர்பார்த்து அர்ஜுன் தானே முன் வர அவன் கன்னத்தை கடித்து வைத்திருந்தாள்.
“ஷ் ஆஆ… என்னடி பண்ற?”
“பொய் சொல்ல கூடாது டாக்டர் சார். சொன்னா தண்டனை தான்” அர்ஜுன் கையை கிள்ளி வைத்து அவள் உள்ளே ஓடிவிட, கன்னத்தை தேய்த்து சிரித்துக்கொண்டான்.
ஐந்து நிமிடத்தில் மணிகண்டன் மருமகனுக்கு தேநீரை கொடுக்க அதன் ருசியில் அவரை அருகில் அமர்த்தி பாராட்டி தள்ளிவிட்டான்.
காலை உணவு உண்ணும் பொழுதும் அர்ஜுனுக்கு பலகை எடுத்து போட மாமனாரோடு அவர் அருகில் தரையிலே அமர்ந்துவிட்டான். கூறவும் வேண்டுமா அவர் நிலை, மகளை விட இவர் தான் காற்றில் பறந்தார்.
அளவாய் உணவை எடுத்த மாப்பிள்ளையிடம், “நீங்க இதெல்லாம் காலைல சாப்பிட மாட்டீங்கனு இலக்கியா சொல்லுச்சு. இன்னைக்கு ஒரு நாள் சாப்பிடுங்களேன்” அவருக்காகவே சற்று அதிகம் உண்டான்.
முதலில் இரண்டு இட்லி அதற்கு பச்சைமிளகாய் கோழி குழம்பு, பிறகு ஒரு முட்டை தோசை வைத்து சின்ன வெங்காயம், மிளகு வைத்து செய்திருந்த நுரைஈரல் பொரியல், ஆட்டு குழம்பு என அவன் எப்பொழுதும் எடுக்கும் அளவை விட மனைவியின் பக்குவதிலும், மாமனாரின் வார்த்தையிலும் அதிகம் உண்டு எழுந்தான்.
அடுத்த இரண்டு மணி நேரம் அர்ஜுனுக்கு அவள் தந்தையோடு நேரம் கழிந்தது.
“இதுல என்ன கலர் இல்ல சொன்ன இலக்கியா?” சங்கு பூவில் விடுபட்டிருக்கும் ஒரு நிறத்தை கேட்க, “ஊதா நிறத்துலையே இன்னொரு ப்ளூ கலர் மாப்பிள்ளை”
“வர்றீங்களா மாமா வாங்கிட்டு வரலாம்?” அவர் நம்ப முடியாமல் மகளை பார்த்தார்.
இலக்கியாவிற்கும் அதே ஆச்சிரியம் தான் போல, அர்ஜுனை நம்பாமல் பார்க்க, “உனக்கு ஏதாவது வாங்கணுமா இலக்கியா? நம்ம வீட்டுல வைக்கலாம்” புருவம் உயர்த்தி அர்ஜுன் கேட்க வேகமாக தலை ஆட்டி சட்டை மாற்ற சென்றார்.
மனைவியை கடைக்கண்ணால் பார்த்தவாறே மாமனாரோடு அர்ஜுன் வெளியே சென்று வந்த பொழுது அத்தனை செடிகள் இவர் கைகளிலும்.
“இலக்கியா வா மா, இங்க பாரேன்” மணிகண்டன் மகளை அழைத்து இத்தனை நாள் விடுபட்டிருந்த பூக்களை எல்லாம் வாங்கி வந்துவிட்டார். அனைத்தும் மகளின் கையாலே அந்த மாடி தோட்டத்தை அலங்கரித்தது.
“பிரியாணி ஸ்மெல் வருது”
“ஆமா எனக்கும் அப்பாக்கும் பிரியாணி, இறால் தொக்கு. உங்களுக்கு பண்ணீர் செஞ்சிருக்கேன்”
மணிகண்டன், “என்னம்மா மாப்பிள்ளைக்கு விருந்து வைக்க சொன்னா இப்டி சைவம் வக்கிர?”
இலக்கியா, “அவங்களுக்கு என்ன அசைவம் வச்சாலும் பண்ணீர் தான்ப்பா விரும்பி சாப்பிடுவாங்க. என்னங்க?”
அர்ஜுன், “ஆமாங்க” சிரிப்போடு பல்லை கடித்து ஆமோதிக்க, “சாப்பிட வாங்க ப்பா”
கணவனை பார்த்தவாறே இவள் உணவை எடுத்து வைக்க ஆண்கள் இருவரும் வந்து அமர்ந்தனர். மீண்டும் வாழையிலை விரித்து மணிகண்டன் இலையில் வரிசையாக படையல் வைத்தாள்.
முதலில் இனிப்புக்கு கேசரி. அது இருவருக்கும் கிடைத்தது. பள்ளிபாளையம் சிக்கன், மட்டன் கோலாஉருண்டை, மட்டன் ரோகன் ஜோஷ், வஞ்சர வறுவல், அவித்த முட்டை, சீராக சம்பா வான்கோழி பிரியாணி, வெள்ளை சாதம், ரசம் என இலையே நிறைந்தது.
அடுத்து அர்ஜுனிடம் வந்தவள் சாதம் வைத்து பண்ணீர் தவா ப்ரை வைத்து, “ரசம் ஆர் தயிர்ங்க?”
“இலக்கியா என்னம்மா?” இப்படி வகை வகையாக தான் உண்டு வீட்டிற்கு வந்த மருமகனுக்கு ஒரு வகை உணவோடு விடுவதா தயங்கினார்.
“நான் டயட்ல இருக்கேன் மாமா. என்ன ம்மா அதான?” மனைவியை போலவே அவளிடமே கேட்டவன், “தயிர் போடு ம்மா” என்றான் மீண்டும்.
சிரித்துக்கொண்டே அர்ஜுன் அருகில் அமர்ந்தவள் தந்தைக்கு உணவை பரிமாற அர்ஜுன் வைத்த உணவோடு போதும் என்றுவிட்டான்.
எப்படி இறங்கும், இரண்டு வாய் உண்டாலும் மாமனார் இலையிலிருந்து உணவின் மனம் வயிற்றை நிறைத்துவிட்டது.
error: Content is protected !!