சமூக வலைத்தளங்களில் பெண்களை பகடையாய் கொண்டு பணம் பறித்து அவர்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி உள்ளார் சென்னையை சேர்ந்த கேகே என்கிற கரிகாலன்
*** தொலைகாட்சி அலுவலகத்தில் முகமறியா நபர் ஒருவரால் சேர்பிக்கப்பட்ட கரிகாலனின் மடிக்கணினியில் பல திடுக்கிடும் தகவல்கள் கண்டறியப்பட்டது.
இன்ஸ்டாகிராம் தளத்தில் தன்னை ஒரு மாடலாக சித்தரித்து பெண்களின் கவனத்தை கவரும் கரிகாலன் ஆசை வார்த்தைகளால் அவர்களை அடிமையாக்கி பாலியல் தொந்தரவு கொடுப்பதும் பணம் கேட்டு மிரட்டுவதும் இவரின் வழக்கமாக இருந்துள்ளது.
மடிக்கணினியில் இருந்த ஆபாச வீடியோக்களும் பெண்களை வன்கொடுமை செய்யும் ஆதாரங்களும் கரிகாலன் எத்தகைய கொடூரன் என்பதனை பறைச்சாற்ற 80க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.
இதனை அடுத்து திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த ஜூன் இரண்டாம் தேதி சைபர் க்ரைம் போலீஸால் கைது செய்யப்பட்டார்.
மடிக்கணினியில் கிடைக்கபட்ட ஆதாரங்களின் அடிப்படையில் சென்னை மாவட்ட ஆணையர் ‘பாதிக்கப்பட்ட பெண்கள் கரிகாலன் மீது முன் வந்து புகார் அளிக்க வேண்டிய அறிக்கையை தொடர்ந்து குண்டாஸ், போக்சோ உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
மேலும் கரிகாலன் பின்னணியை கண்டறிய போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.”
கடந்த ஒரு வாரமாய் அனைத்து செய்தி தொலைக்காட்சிகளிலும் சமூக வலைத்தளங்களிலும் இதனை மட்டுமே வெவ்வேறு கோணல்களில் அலசி வருகின்றனர்.
கரிகாலன் என்ற கொடூரனை மக்கள் ஆக்ரோஷமாய் கிழித்து எறிந்தனர். அவனுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பின. ஆனால் எத்தனை நாட்கள் ‘கரிகாலன்’ என்ற பெயரும் அவனின் தாக்கமும் நிலைக்கும் என்பது சந்தேகமே..!
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செய்தியை தான் பார்த்து இருந்தார் சுந்தரமூர்த்தி. நிமிடத்திற்கு ஒரு முறை காட்டப்படும் கரிகாலன் முகத்தை பார்க்க பார்க்க அவரின் இரத்தம் கொதித்தது.
கைது செய்து இழுத்து செல்லும்போதும் கொஞ்சமும் அசராமல் அலட்சியமாய் நடந்து செல்கிறான் என்றால் எத்தனை பயங்கரமான ஆளாக இருப்பான்.. இவனிடம் மாட்டி தன் மகள் என்னவாகி இருப்பாள்.. அவளை போன்ற எத்தனை பெண்களை கொடுமை படுத்தி இருப்பான்..’
முதலில் போலீஸ் வேண்டாம் என தன் பெண்ணை மட்டும் காப்பாற்றி விலகி செல்ல நினைத்து இருந்தவருக்கு இப்போது யோசிக்கும்போது அவனை கொன்றால் தான் ஆத்திரம் தீரும் என தோன்றியது.
“அண்ணா எத்தனை தடவை இதையே பார்ப்ப.. தலைவலிக்குது.. முடிஞ்சு போச்சு அடுத்து என்ன செய்யிறது பார் அண்ணா.. எல்லாம் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்ல முடியல.. நம்மை இப்படி ஒரு நிலைல நிறுத்திட்டா அனு..”
என்ற சித்ராவின் முகத்தில் தெரிந்த எரிச்சல் சுந்தரமூர்த்தியை சற்றும் பாதிக்கவில்லை. இந்த ஒரு வாரத்தில் இது போல் நிறைய மாற்றங்களை தன் சொந்தங்களிடமே பார்த்தாகிற்று.
பொதுவாக மக்களுக்கு புகார் அளித்த பெண் யாரென தெரியாமல் இருந்தாலும் அவளை சார்ந்தவர்களிடம் மறைக்க முடியவில்லை. விஷயம் தெரிந்து அனைவரும் துக்கம் விசாரிக்க சுந்தரமூர்த்தி வீட்டினை படையெடுப்பதும் அலைபேசியில் விசாரிப்பதும் நிகழ்ந்துக் கொண்டு தான் இருக்கிறது.
அவர்கள் பேசும் பேச்சுகளை கேட்டு
கமலினி சண்டைக்கு கிளம்ப தாத்தா தான்,
“எல்லார் வாயையும் அடைக்க முடியாது கமலி..!! அதுவும் நீ பேசினால் இன்னும் இன்னும் தான் பேசுவாங்க.. நாங்க பெரியவங்க பார்த்துக்க மாட்டோமா.. நீ இதில் தலையிடாத..”
என்று அவளை தடுத்து வைத்து இருந்தார்.
மற்றவர்களை காட்டிலும் தன் தங்கையும் அண்ணன் குடும்பமும் கூட தங்களை புரிந்துக் கொள்ளாதது தான் வேதனையாக இருந்தது.
இதோ இன்றும் சித்ரா, ஆதவன் அன்னை பாக்கியம், முகிலன் என அனைவரும் அங்கே தான் குழுமி இருந்தனர். எப்போதும் மகிழ்ச்சியை அள்ளிக் கொடுக்கும் இத்தகைய சந்திப்பு இப்போதோ பெரும் தலை வலியை தான் தந்தது.
“உனக்கென்ன தான் பிரச்சனை சித்ரா..”
“என்ன பிரச்சனையா..?? போலீஸ் எல்லாம் போய் ஏன் நம்ம குடும்ப மானத்தை கப்பல் ஏத்துறீங்க..!! நான் தான் அவன் காதலிச்சு ஏமாத்திய பொண்ணுன்னு ஊருக்கே சொல்லவா..?? இந்த வயசில் வக்கீல், கேஸ்ன்னு ஸ்டேஷன் படியேற விட்டு இருக்க..!! இதில் அவளை சொன்னால் கிழிச்சுக் கிட்டு வரா கமலி..!!! என் அண்ணா பொண்ணுங்களை என்னவோ நினைச்சு இருந்தேன்..”
என தாம்தூமென்று குதிக்க,
“சித்ரா.. வாயை மூடு…”
என அமிர்தம் அதட்டியது எல்லாம் அவரை தடுக்கவில்லை.
“என் வாயை மூட பார்க்காத ம்மா.. வயசில் மூத்தவங்களா இதெல்லாம் நீங்க தான் பேசி இருக்கணும்.. ஆனா நீங்களே எல்லாத்துக்கும் உடந்தையா இருக்கீங்க..”
“அத்தை சொல்றது சரி தான்.. ஏன் தாத்தா அன்னைக்கு நைட் வரைக்கும் எங்க கூடவே இருந்தீங்க.. அனு சூசைட் பண்ணிய விஷயம் தெரிஞ்சு தானே உடனே கிளம்பினீங்க.. அதை எங்க கிட்ட அப்படியே மறைசுட்டீங்க இல்ல.. ஊருக்கே விஷயம் பரவினதும் தான் எங்களுக்கும் தெரியுது.. இவ்வளவு பெரிய விஷயம் நடந்தும் எங்க கிட்ட எல்லாம் கலந்துக்காம நீங்களா முடிவு பண்ணலாமா..??”
“உன் தாத்தாக்கு எப்பவும் இந்த பேத்தீங்க மேல மட்டும் தான் அக்கறை முகிலா.. நம்மை பத்தி யோசிக்கவே மாட்டாங்க..
இப்ப பார் என் மாமியார் வீட்டில் எல்லாம் கேட்டு அசிங்கமா இருக்கு..!! சங்கவி அப்பா என்னான சங்கவி வைஷ்ணவியை இனி அனன்யா கூட சேர விடாதன்னு சொல்றார்..!!”
“நேத்தி பழனி மாமா கூட எனக்கு கால் பண்ணி சொல்றார்..!! கமலினி நல்ல பொண்ணுன்னு தான் அழகு, படிப்பு எதுவும் பார்க்காம மகேஷுக்கு கேட்டோம்.. இப்போ அடித்தளமே ஆட்டம் காணுது.. எந்த நம்பிக்கையில் பொண்ணு எடுக்கிறது.. உங்க கிட்ட நேரடியாக சொல்ல முடியாதுன்னு என்கிட்ட சொல்றார்..!! இந்த அனுவால கமலினி வாழ்க்கையும் வீணா போகுது சித்தப்பா..”
இவை அனைத்தும் அறையில் இருந்த அனன்யா காதிலும் விழுக உயிருள்ள ஜடமாக தான் அமர்ந்து இருந்தாள். அழுது அழுது கண்ணீர் எதுவும் மிஞ்சவில்லை. வாழ்க்கையே வெறுத்த மனநிலையில் தான் இருந்தாள்.
தன் செயலின் பாதிப்பு எந்தளவு தன் குடும்பத்தை பாதிக்கும் என்ற நிதர்சன உண்மையை ஒவ்வொரு நொடியும் உணர்ந்து வருகிறாள்.
அனன்யாவை அறிந்து ஆறுதலாய் அனுசரிக்க அவளின் குடும்பம் இருக்கலாம்.. ஆனால் மற்றவர்களிடமும் அதையே எதிர்பார்ப்பது பேராசை அல்லவா..?
‘விக்டிம் பிளெமிங்’ நம் மக்களின் இரத்தத்தில் ஊன்றி போன ஒன்றாகி விட்டதே..!!
‘கெடுத்தவனுக்கே கட்டிக் கொடுக்க வேண்டும்’ என்ற கருத்தே இப்போது தான் நம்மில் மறைந்து உள்ளது. இன்னும் சமூகத்தில் நாம் எதிர்பார்க்கும் மாற்றங்கள் வர எத்தனை யுகங்கள் கடக்குமோ..?!
அதுவரை,
‘அவள் ஏன் பேசினாள்..? அவள் ஏன் போனாள்..? அவளுக்கு அங்கென்ன வேலை..? அவளால் நடத்தையில் தான் சந்தேகம்..’ போன்ற பேச்சுக்கள் தொடர்ந்துக் கொண்டே தான் இருக்கும்..!!
‘எனக்கு முழு விபரம் தெரியாம என்னானு டா சொல்ல சொல்ற..!! உனக்கும் சந்தியாக்கும் ஒரு முறை பிரச்சனை விவாகரத்து வரை போச்சே அதை பத்தி இப்ப வரை வேற யாருக்கும் நான் சொன்னது கிடையாது.. என்ன தான் என் பிள்ளைங்களா இருந்தாலும் எல்லா விஷயமும் எல்லார்கிட்டயும் சொல்லனும்னு எனக்கு அவசியம் கிடையாது..”
என்று தாத்தா சொல்லிவிட அதில் முகிலன் வாய் அடைப்பட்டது.
அவர்கள் பேச்சு எல்லையை கடக்க,
“இத்தோட நிறுத்துங்க.. என் பொண்ணு விஷயத்தில் என்ன செய்யணும்னு எனக்கு தெரியும்.. உங்களுக்கு அவ்வளவு அவமானமா இருந்தால் கேட்கிறவங்க கிட்ட
உங்களும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல.. உறவும் இல்லைன்னு தாராளமா சொல்லிக்கோங்க… இதுக்காக பயந்து அந்த அயோக்கியன் கிட்ட என் பொண்ணை பணயம் வைக்க முடியாது..!!”
என்று தீர்க்கமாக சுந்தரமூர்த்தி சொல்லவும் திகைத்த சித்ரா,
“பாருங்க ப்பா.. அண்ணா என்ன சொல்லுதுன்னு.. என் வருத்தத்தை நான் சொல்ல கூடாதா..? அதுக்கு கூட எனக்கு உரிமை இல்லையா..”
என சிவசுப்ரமணியத்திடம் திரும்பினாள்.
“நீ அனுவை பேசினால் அவன் கேட்டுட்டு இருப்பானா..? உன் இஷ்டம் போல வார்த்தை விட்டால் அவன் அப்படி தான் சொல்வான்.. நான் இதில் என்ன செய்யனும் எதிர்பார்க்கிற..”
“ஹோ.. ரொம்ப நல்லா இருக்கு அப்பா.. உங்க ரெண்டு பேருக்கும் சண்டை வந்தால் மத்தஸம் பண்ண மட்டும் நாங்க வேண்டும்.. அதே மத்த விஷயத்தில் நாங்க பேசக்கூடாதுன்னு ஒதுக்கிடுவீங்க..”
என ஆற்றாமையோடு சொல்லிய சித்ரா,
“என்ன அண்ணி… அண்ணனை பேச விட்டு வேடிக்கை பார்க்கறீங்களா..”
என்று அம்பிகாவையும் விட்டு வைக்கவில்லை. சுந்தரமூர்த்தி உறவு இல்லை என சொல்லிக் கொள் என்று சொன்ன வார்த்தையை அவரால் தாளவே முடியவில்லை. ஆனால் அதற்கும் முன் தான் பேசிய பேச்சுகள் மட்டும் காற்றோடு மறைந்து விட்டது.
“ஏற்கெனவே நாங்க மனசு நொந்து போய் இருக்கோம் சித்ரா.. நீ வேற இப்படி எல்லாம் பேசாத..!! அனு சரியா சாப்பிடுறது கூட இல்ல.. என் பிள்ளை இதில் இருந்து நல்லபடியா மீண்டு வரணும்ன்னு நினைக்கிறேன்.. பேசி பேசி பிரச்சனை ஆக்காதீங்க..”
“நாங்க பிரச்சனை ஆக்குறோமா அம்பிகா…? அப்போ அனு செஞ்சது தப்பில்லையா..?? நீங்க இப்படி அவளை பொத்தி பொத்தி வைச்சு தான் இன்னைக்கு இந்த நிலைமையில் நிறுத்தி இருக்கா..!! இன்னமும் அவளை கண்டிக்க தோணலல..”
என்று பாக்கியமும் பேச ஆக மொத்தம் அனைவரும் கட்டம் கட்டி அடிப்பது போல் இருந்தது.
“எல்லாருக்கும் பொதுவா ஒன்னு சொல்றேன்.. அனன்யா செஞ்சது தப்பு தான்.. அவ தப்பை எப்படி திருத்தமும்ன்னு தாய் தகப்பன் எங்களுக்கு தெரியும்.. உங்களுக்கு அந்த கவலை வேண்டாம்..!
இன்னைக்கு இத்தனை பொண்ணுங்களுக்கு நியாயம் கிடைக்க போகுதுன்னா அதுக்கு அனு எடுத்து வைச்ச முதல் அடி தான் காரணம்.. எந்த பொண்ணுக்கும் இல்லாத தைரியத்தை நான் என் பொண்ணுக்கு கொடுத்து இருக்கேன்.. அந்த வகையில் எனக்கு பெருமை தான்..”
என்றவர்,
“இனி இந்த வீட்டில் இதை பத்தி யாரும் பேசவே கூடாது..” என கட்டளையாக சொல்லி முகிலனை பார்த்தவர்,
“பழனி அத்தான் கிட்ட சொல்லு.. அப்பா அன்னைக்கு வேண்டாம்ன்னு சொன்னதோட மகேஷுக்கு கமலினியை கல்யாணம் செய்யணும் என்ற எண்ணத்தை நான் விட்டாச்சு..
அவருக்கு அப்படி ஒரு எண்ணம் இருந்தாலும் அதை மறந்திட சொல்லு.. ஏன்னா கமலி அழகுக்கும் திறமைக்கும் மகேஷ் தான் பொருத்தம் இல்லாதவன்…”
என அழுத்தமாய் முடித்தார். இத்தனை பேச்சுக்களுக்கு பின் அங்கே நிற்கவே பிரியப்படாமல் எல்லாரும் கிளம்பிவிட சுந்தரமூர்த்தி தளர்ந்து அமர்ந்துவிட்டார்.
“எல்லாம் ஒருநாள் மாறும் சுந்தரம்.. ஏதோ இந்த நேர ஆத்தாமையில் பேசுறா.. அப்புறம் தப்பை உணர்ந்து தானே வருவா டா… நீ மனசைப் போட்டுக் குழப்பிக்காத..”
“எனக்கும் தெரியும் ப்பா..!! ஆனா விட்ட வார்த்தையை எடுக்க முடியுமா சொல்லுங்க.. பிள்ளைங்க இந்த மாதிரி பேச்சை கேட்டால் பாசம் இல்லாம போயிடும் தானே..!! நாளைக்கு உணர்ந்து அவங்க வரலாம்.. ஆனா பசங்க பழையபடி அத்தை, அண்ணான்னு பாசமா இருப்பாங்களா..?? நல்ல வேளை இப்ப கமலினி இல்ல… இல்லைன்னா அவளை கட்டுப்படுத்தி இருக்கவே முடியாது… ஏதாவது பேசிவிட்டு இருப்பா..!”
என நெற்றியை நீவிக் கொண்டு சொல்ல எல்லாருக்கும் அதுவும் சரி தான் என தோன்றியது. வீட்டில் யாராவது வந்து பேசினால் கமலினி சண்டைக்கு கிளம்புகிறாள் என்பதால் தான் அவளை கடைக்கு அனுப்பி இருந்தார்.
“விடு சுந்தரம்…. கொஞ்ச நாள் போகட்டும்… நா அவங்க கிட்ட பேசுறேன்..” என்ற அமிர்தம்,
“அவனுக்கு ஏதாவது குடிக்க குடு.. போ..” என அம்பிகாவிடம் சொல்லிவிட்டு,
“நீங்க என்னமோ புக்கு காணும்ன்னு சொல்லிட்டு இருந்தீங்கல்ல.. வாங்க தேடி தரேன்.. இத்தனை நாள் ஹாயா இருந்துட்டு இப்ப வந்து அதை காணும்.. இதை காணும்ன்னு புலம்ப வேண்டியது..”
என்றபடி சூழநிலையை சற்று இயல்பாக்கினார்.
அதே சமயம் தங்கள் கடையில் அமர்ந்திருந்த கமலினிக்கும் எப்போதும் இருக்கும் ஆர்வம் இல்லாமல் கடமையே என வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்.
கரிகாலன் கைதாகி விட்டாலும் அவளுக்கு என்னவோ உறுத்தலாகவே
இருந்தது. தினம் ஒரு புது தகவலாய் கரிகாலன் வழக்கு தொடர்பாக வந்துக் கொண்டே இருந்தாலும் இதன் முடிவு தான் என்ன என்று யோசிக்க வைத்தது.
அவன் பயந்து இருந்தால்.. வெட்கி அவமானமாய் தலை குனிந்து இருந்தால்.. ஏன் வெறியில் கோபம் கொண்டிருந்தால் கூட அவனை வீழ்த்திவிட்ட திருப்தி கிடைத்து இருக்கும்..!!
ஆனால் கரிகாலனின் அலட்சியம் எங்கே தண்டனையில் இருந்து தப்பி விடுவானோ என்ற கவலையை கொடுத்தது.
அனன்யாவை சுக்கு நூறாக உடைத்து போட்டவன்..!! அவள் போன்ற பெண்களின் வாழ்க்கையை சூரையாடியவன்..!! எத்தனை வலிகள்..!! எத்தனை உயிர் இழப்புகள்..!!
அந்த வலியை அவன் அனுபவித்தால் ஒழிய அத்தனை பெண்களின் மனவலியும் குறைய போவது இல்லை.
ஆனால் சட்டமும் நீதியும் அவனுக்கு அதனை பெற்று தருமா..??
பல கேள்விகளும் கவலைகளும் கமலினியை சுற்றிவர யோசனையில் மூழ்கி இருந்தவளை சட்டென்று கேட்ட சொடுக்கு சத்தம் கலைக்க திரும்பி பார்த்தவள் வாசலில் தினகரன் நிற்பதை கண்டதும்,