கதிர் MCA முடித்துவிட்டு சென்னைக்கு வேலை தேடி வந்து நண்பர்களோடு தங்கியிருந்தான். அவனுக்கு ஒரு கம்பெனியில் வேலையும் கிடைத்துவிட்டது. நாற்பதாயிரம் சம்பளம். வருடத்திற்கு ஒரு முறை அவன் திறமையைப் பார்த்துச் சம்பளத்தை உயர்த்தித் தருவதாகச் சொல்லியிருந்தார்கள்.
கதிருக்கு வேலை கிடைத்த விஷயம் கேட்டு, அவன் தந்தை மிகவும் சந்தோஷப்பட்டார். கிராமத்தில் விவசாயம் செய்யும் அவர் கையில் மொத்தமாக அவ்வளவு பணம் நிற்பது எல்லாம் சாத்தியமில்லை.
விவசாயத்தில் இருந்து வரும் பணத்தை திரும்ப, அதில் செலவு செய்யும்படி தான் இருக்கும். நிறையக் கடைகள், வீடுகள் கட்டி வாடகைக்கு விடுவதால். ஓரளவு அவர்கள் வசதியாக இருந்தனர். அதுவும் எப்போதும் பணமாகக் கையில் வைத்திருக்க மாட்டார்கள். கதிரின் அப்பாவும், சித்தப்பாவும் சேர்ந்து அவர்கள் இருவரின் பேரில் எதாவது சொத்து வாங்கிவிடுவார்கள்.
கதிருக்கு வேலை கிடைத்த சந்தோஷத்தோடு, சந்தியா பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் மாநிலத்தில் மூன்றாவது இடம் பிடித்த சந்தோஷமும் சேர்ந்துகொள்ள, அந்த வருட திருவிழாவை மிகவும் சிறப்பாகக் கொண்டாடினார்கள்.
சந்தியா அந்தத் திருவிழாவின் போது தான் முதல் முறையாகப் புடவை அணிந்து இருந்தாள். குங்கும நிறத்தில் தங்க நிற பார்டர் வைத்த புடவையில், கை நிறைய தங்க வளையல்கள் சலசலக்க, கழுத்தில் நிறைய நகை போட்டு, தலை நிறையப் பூ வைத்து பார்க்க கல்யாணப்பெண் போல இருந்தாள்.
கோவிலில் வைத்து சந்தியாவைப் பார்த்த கதிருக்கு பார்வையை வேறு பக்கம் திருப்பவே முடியவில்லை. தனக்கும், சந்தியாவுக்கும் இன்றைக்கே திருமணம் செய்து வைத்திட கூடாதா என்று கூட நினைத்தான்.
கதிரை பார்த்த சந்தியாவுக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. ‘இது நம்ம மாமாவா, இதுக்கு இந்த மாதிரியெல்லாம் பார்க்கக் கூடத் தெரியுமா…’ என்று தான் முதலில் நினைத்தாள்.
எதுக்கு இப்படி ஆள முழுங்குற மாதிரி பார்க்குது என்று நினைத்தவள், அவளும் அடிக்கடி ஆசையாக கதிரை பார்த்துக் கொண்டு தான் இருந்தாள். இருவரின் விழிகளும் காதல் நாடகத்தை நடத்தி கொண்டிருந்த நேரம், கதிரின் அருகில் நின்று கொண்டிருந்த அவனின் அப்பா அவனிடம் எதோ சொல்ல, கதிரின் கவனமெல்லாம் சந்தியாவின் மீது இருந்ததால், அவன் அவர் சொல்வதைக் கவனிக்கவில்லை.
சந்தியா தான் ஜாடையில் அவன் அப்பாவை காட்டி எதோ சொன்னாள். பிறகு தான் கதிர் திரும்பி தன் தந்தையைப் கவனித்தான். அவரும் கதிரை தான் பார்த்துக்கொண்டிருந்தார். கதிருக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. தன் அப்பா கவனிக்கும்படி தான் நடந்து கொண்டோமே என்று நினைத்து வருத்தப்பட்டவன், வேகமாக அங்கிருந்து சென்றான். அதன் பிறகு சந்தியாவின் பக்கம் திரும்பவில்லை.
கதிரை கவனித்த சந்தியா, ‘ஹப்பா! இப்பதான் நம்ம மாமா போல இருக்கு. திடீர்னு ஒரு நிமிஷம் சந்தேகமே வந்துடுச்சு. இது வேற யாருமோன்னு…’ என்று மனதிற்குள் கதிரை கிண்டலடித்தாள்.
சந்தியாவை எப்போதுமே எல்லோரும் தலையில் வைத்து கொண்டாடுவார்கள். அதுவும் அவள் மாநிலத்தில் மூன்றாவதாக வந்ததும், இன்னும் எல்லோரும் அதிகம் தாங்கினர். துரைக்குப் பெருமை பிடிபடவில்லை. எல்லோரும் உன் மகளை மேற்கொண்டு என்ன படிக்க வைக்கப் போற என்று கேட்டதற்கு, அவ தான் முடிவு செய்யணும் என்று சொல்லிவிட்டார்.
தெரிந்தவர் ஒருவர் கதிரின் தந்தை பெரியசாமியிடமும் ‘உங்களோட மருமக மாநிலத்திலேயே மூனாவது ரேங்க் எடுத்துப் பாஸ் பண்ணியிருக்காமுல. நம்ம கதிருக்கத் தான் அந்தப் பிள்ளைய செய்யப் போறீங்க…’ என்று கேட்ட போது,
பெரியசாமி திரும்பி தன் மகனை பார்த்தவர், அவன் முகத்தில் தெரிந்த ஆர்வத்தைக் கண்டு “ஆமாம். கதிருக்கு என்னோட தங்கச்சி மகளைத் தான் செய்யப் போறோம்…” என்றார் உறுதியாக.
அதைக் கேட்ட கதிரின் முகம் புன்னகையில் மலர்ந்தது. தன் மகனின் சந்தோஷத்தை பார்த்தும், பார்க்காத மாதிரி இருந்தார் பெரிசாமி. மகனின் மனதை புரிந்துகொண்டவர், மகளின் மனதை புரிந்துகொள்ளத் தவறினார்.
அதனால் நடந்த விபரிதம் ஏராளம்.
கல்லூரியில் இருந்து ஹாஸ்டல் திரும்பிய சந்தியாவிற்கு இன்று கதிர் தன்னை இனி பார்க்க வராதே என்று சொன்னதே காதில் கேட்டு கொண்டிருந்தது. தன் படுக்கையில் சென்று விழுந்தவள், இந்த நிலைக்கு காரணமான நாளை நினைத்து பார்த்தாள்.
திருவிழா முடிந்து கதிர் வேலையில் சென்று சேர்ந்துவிட்டான். கதிர் சந்தியாவை மருத்துவக் கல்லூரியில் தான் சேர சொன்னான். அவள் தான் தன்னால் வெளி ஊருக்கு எல்லாம் சென்று படிக்க முடியாது என்றாள்.
அதே போல் அவள் அம்மாவும், அப்பத்தாவும் அவளை விட்டு பிரிந்து இருக்க விரும்பவில்லை. துரைக்குத் தன் மகள் டாக்டருக்கு படிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. அவள் பள்ளி ஆசிரியர்களும் அதையே விரும்பினர்.
சந்தியா தான் உறுதியாக எந்த முடிவையும் எடுக்காமல் குழப்பிக் கொண்டிருந்தாள். எதற்கும் இருக்கட்டும் என்று மருத்துவம் படிக்க விண்ணப்பித்தும் இருந்தாள்.
சந்தியாவும், சித்ராவும் விருதுநகரில் இருந்த கல்லூரியில் இளங்கலை படிப்புக்கும் விண்ணப்பம் கொடுக்கச் சென்றனர். கல்லூரியில் சென்று விண்ணப்பம் கொடுத்துவிட்டு திரும்பும் வழியில். அந்த ஊரில் இருந்த ஐஸ்கிரீம் பார்லரை பார்த்தனர்.
வட்ட மேஜைகள் வைத்து, சுற்றி நாற்காலிகள் போடப்பட்டு வண்ணமையமாக இருந்த கடையைப் பார்த்ததும், இருவருக்கும் அங்கே சென்று ஐஸ்கிரீம் சாப்பிட ஆசையாக இருந்தது. அவர்கள் ஊரில் இது போல் ஐஸ்கிரீம் சாப்பிட என்று தனியாகக் கடைகள் இல்லை.
இருவரும் சென்று ஒரு மேஜையில் அமர்ந்ததும், சர்வர் வந்து மெனு கார்ட் கொடுக்க. இருவரும் எதைச் சாப்பிடுவது என்று தீவிரமாக ஆராய்ந்து, முதலில் ஆளுக்கு ஒரு கார்னெட்டோ வரவழைத்து சாப்பிட்டனர்.
அவர்களுக்கு ஐஸ்கிரீம் சாப்பிட்ட மாதிரியே இல்லை. திரும்ப ஆளுக்கு ஒரு சாக்லேட் ஐஸ்கிரீம் வித் நட்ஸ் வாங்கி உள்ளே தள்ளிவிட்டு, அதிலும் திருப்தி அடையாமல் கடைசியில் ஆளுக்கு ஒரு குச்சி ஐஸ் வாங்கிச் சாப்பிட்டனர். நிறையப் புது விதமான ஐஸ்கிரீம்கள் வந்திருந்தாலும், குச்சி ஐஸ்ஸில் இருக்கும் சுவை வேறெதிலும் இருப்பதில்லை.
இதுவரை இருவரும் இப்படித் தனியாக வெளி ஊருக்கு எல்லாம் வந்தது இல்லை. முதல் முறையாக இப்படித் தனியே வந்ததும், சந்தோஷத்தில் என்ன செய்வது என்று தெரியாமல். தாங்கள் முதல் முறை தனியாக வெளியே வந்ததை, மூன்று ரவுண்டு ஐஸ்கிரீம் சாப்பிட்டு கொண்டாடி கொண்டிருந்தனர்.
சந்தியா ஐஸ்கிரீம் சாப்பிட்டு முடிக்கும் நேரத்தில் தான், சற்று ஒதுக்கு புறமாக இருந்த இருக்கையில் யாரோ ஒரு வாலிபனோடு அமர்ந்திருந்த காவேரியை பார்த்தாள்.
அந்த வாலிபன் உயரமாக, சற்றுக் கருமை நிறத்தில், கலையான முகத்தோடு பார்க்க லட்சணமாக இருந்தான். இருவரும் அருகருகே அமர்ந்து எதோ பேசி சிரித்தபடி ஐஸ்கிரீம் சாப்பிட்டு கொண்டிருந்தனர்.
சந்தியா உறுகி வழியும் ஐஸ்கிரீமை கையில் வைத்துக் கொண்டு வேறு எங்கோ பார்த்துக்கொண்டிருப்பதைப் பார்த்த சித்ரா, இவ ஏன் இப்படி அரண்டு போய் இருக்கா என்று நினைத்தபடி தன் பார்வையைச் சுழற்றியவள், காவேரியை ஒருவனுடன் பார்த்துவிட்டு அவளும் அதிர்ச்சி அடைந்தாள்.
“ஏய் புள்ள! அது கதிர் அண்ணனோட தங்கச்சி தான. இங்க என்ன பண்றாங்க? கூட இருக்கிற ஆளு யாரு?” என்று சித்ரா கேள்விகளாக அடுக்க,
“நானும் உன்னோட தான இருக்கேன், எனக்கு மட்டும் எப்படி தெரியும்?” என்று எரிந்து விழுந்த சந்தியா எழுந்து சென்று தன் கையில் இருந்த குச்சியை குப்பை தொட்டியில் எறிந்தவள், தன் கையைக் கழுவிக்கொண்டு நேராக காவேரியின் எதிரே சென்று நின்றாள்.
சந்தியாவை அந்த இடத்தில் எதிர்பார்த்திராத காவேரி அதிர்ச்சியில் எழுந்தே நின்றுவிட்டாள். சந்தியாவோடு வேறு யாரும் வந்திருக்கிறார்களா என்று பயந்து கொண்டே பார்த்தவள், அவள் சித்ராவோடு வந்திருப்பதைப் பார்த்து நிம்மதி அடைந்தாள்.
காவேரி அருகில் அமர்ந்திருந்த சுபாஷ், எந்த அதிர்ச்சியையும் முகத்தில் காட்டவில்லை. சந்தியாவைப் பார்த்து முகம் மலர புன்னகைத்தவன் “ஹாய் சந்தியா. எப்படி இருக்க?” என்று ரொம்ப நாள் பழகியவன் போல் விசாரிக்க. சந்தியா இன்னும் அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டு தான் இருந்தாள்.
“என்ன இப்படியே நிற்க போறியா. உட்காரு…” என்றவன் சித்ராவை பார்த்து தலை அசைத்து அங்கே அழைக்க, சித்ராவும் வந்து அவர்கள் எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்தவள், சந்தியாவையும் பிடித்து உட்கார வைத்து “அப்படி என்ன தான் சொல்றாங்கன்னு கேட்போம்…” என்று அவள் காதில் முனு முனுத்தாள்.
சந்தியாவின் முகம் கலவரமாக இருந்தது. ‘அத்தை பெண்ணோட பேசவே நூறு தடவை யோசிக்கும் கதிர் மாமாவுக்கு இப்படி ஒரு தங்கச்சியா. நான் சித்ராவோட ஐஸ்கிரீம் பார்லர் வந்தது தெரிஞ்சாலே வீட்ல உதை விழும். ஆனா. இந்தக் காவேரி மதினி பாரு எவ்வளவு தைரியமா ஒரு ஆம்பளையோட ஐஸ்கிரீம் சாப்பிட வந்திருக்கு…’ என்று மனதிற்குள் புலம்பியபடி சித்ராவின் அருகே அமர்ந்தாள்.
எப்படி ஆரம்பிப்பது என்ற எண்ணத்தில் எல்லோரும் சிறிது நேரம் மெளனமாக இருக்க. “இவங்க யாரு?” என்று சுபாஷை காட்டி சந்தியா. காவேரியிடம் கேட்க.
“என்னோட ஃபரண்ட்…” என்று காவேரி தயங்கி கொண்டே சொல்ல.
“நீ லேடீஸ் காலேஜ் தான் படிக்கிற…” என்று சந்தியா அடுத்த கட்ட விசாரணையை ஆரம்பிக்க, காவேரி முழித்தாள்.
“ஹா… ஹா…” என்று சத்தமாகச் சிரித்த சுபாஷ்
“இதுக்குத் தான் பொய் சொல்ல கூடாது. பாரு மாட்டிக்கிட்ட…” என்றவன் “அதுவும் ஒரு ஸ்டேட் டாப்பர்கிட்ட பொய் சொல்லி ஏமாத்த முடியுமா….” என்றான் சந்தியாவை பார்த்துக்கொண்டே.
சந்தியா “நீ என்ன ஐஸ் வச்சாலும். நான் மசிய மாட்டேன்…” என்று காட்டுவது போல் இறுக்கமாகவே அமர்ந்திருந்தாள்.
சந்தியாவை பார்த்து “நீ நினைக்கிறது உண்மை தான் சந்தியா. நாங்க ரெண்டு பேரும், ரெண்டு வருஷமா காதலிக்கிறோம். நான் காவேரி படிக்கிற காலேஜ்ல தான் லெக்சுரரா இருக்கேன்…” என்றான் சுபாஷ் புன்னகையுடன்.
சுபாஷ் சொன்னதைக் கேட்ட சந்தியாவுக்கு அவன் மேல் சிறிது நம்பிக்கை ஏற்பட்டது. அவன் கண்களில் களவானித்தனம் இல்லை. அவன் முதலில் இருந்தே அவளைப் பார்த்து பயப்படவில்லை. தைரியமாகத் தான் பேசினான். அதோடு கல்லூரியில் வேறு வேலை பார்க்கிறான். காவேரி ஒன்றும் ஊர், பேர் தெரியாதவனை விரும்பவில்லை என்பது அவளுக்குச் சற்று நிம்மதியாகவும் இருந்தது.
நன்றாகப் படித்திருக்கிறான், நல்ல வேலையில் இருக்கிறான் அதனால் அவனுக்கு கண்டிப்பாக காவேரியை திருமணம் செய்ய வீட்டில் ஒத்துக்கொள்வார்கள் என்று நினைத்தவளின் முகம் கலவரத்தில் இருந்து அமைதிக்கு மாற. அதைக் கவனித்துக் கொண்டிருந்த காவேரியின் முகமும் மலர்ந்தது.
“நான் உங்க வீட்ல வந்து காவேரிய பெண் கேட்கிறேன்…” என்று சுபாஷ் உறுதியாகச் சொல்ல, சந்தியாவும் சரி என்று தலை ஆட்டினாள்.
அப்போது அவளுக்கு தெரியவில்லை சுபாஷும், காவேரியும் சேர்ந்து தங்கள் காதலுக்கு அவளைப் பிரச்சனையில் மாட்டி விடப்போவதை.
“ஐஸ்கிரீம் சாப்பிடுறியா சந்தியா…” என்ற சுபாஷ் சர்வரை அழைக்க, “வேண்டாம் ஏற்கனவே மூணு சாப்பிட்டோம். நாங்க கிளம்புறோம்…” என்ற சந்தியா எழுந்துகொள்ள.
சுபாஷுக்கு அவள் சொன்னதைக் கேட்டுச் சிரிப்பு வந்தது. அதை அடக்கிக்கொண்டு சரி என்பதாக தலை அசைத்தான். காவேரியும் அவர்களோடு கிளம்பினாள்.
மூவரும் சென்று பஸ்சில் ஏற, சந்தியா அமைதியாக இருந்தாள். அவளுக்கு இதெல்லாம் சரியாக வருமா என்று குழப்பமாக இருந்தது. அவளையே பார்த்துக் கொண்டிருந்த காவேரிக்கு மனதில் பயம் எழுந்தது. எங்கே சந்தியா தன்னை வீட்டில் காட்டி கொடுத்து விடுவாளோ என்று பயந்தவள் “சந்தியா வீட்ல நானே நேரம் பார்த்துச் சொல்லிக்கிறேன். அதானால நீ யார்கிட்டயும், கதிர் அண்ணன்கிட்ட, கூடச் சொல்லமாட்டேன்னு சத்தியம் பண்ணு…” என்று தன் கையை நீட்டி சத்தியம் கேட்க.
சந்தியாவும் கதிரை காதலிக்கிறாள். அதே போல் தானேகாவேரியும் என்று நினைத்தாள். அதனால் சொல்லமாட்டேன் என்று சத்தியம் செய்தாள். மறுவாரம் ஊருக்கு வந்த கதிரின் முகத்தைப் பார்க்கவே சந்தியாவுக்கு தயக்கமாக இருந்தது. எப்போதும் அவன் வீட்டுக்கு வந்தால், அவன் செல்லும் வரை அவனையே எதோ வேலை இருப்பது போல் சுற்றுபவள், இந்த முறை வாங்க என்று கேட்டதோடு சரி. அதன் பின் ஆளையே காணோம். அவளது அறையின் உள்ளேயே இருந்து கொண்டாள்.
என்ன ஆச்சு? உடம்பு எதுவும் சரியில்லையா என்று நினைத்த கதிருக்கு அவளைப் பார்க்காமல் செல்ல மனம் இல்லை. அதனால் அவன் அத்தையிடம் “சந்தியா என்ன அத்தை முடிவு எடுத்திருக்கா? மெடிக்கல் காலேஜ்ல சேர போறாளா இல்லையா…?” என்று அவரிடம் விசாரிக்க,
“இன்னும் ஒன்னும் சரியா சொல்ல மாட்டேங்கிறா கதிர். நான் கூட முதல்ல அவளை அவ்வளவு தூரம் அனுப்பனுமான்னு நினைச்சேன். ஆனா, உங்க மாமாவுக்கு அவ டாக்டருக்கு படிக்கனுன்னு ஆசை இருக்கு. இந்தக் கழுதை இன்னும் சோறை நறுக்குன்னு அள்ளி திங்காது. பாதி நேரம் நான் தான் ஊட்டி விடுறேன். இந்த லட்சணத்துல இது மத்தவங்களுக்கு வைத்தியம் பார்க்க போகுதா….” என்று வேதவல்லி சந்தியாவைத் திட்டுவது போல் பேசினாலும், அவர் குரலில் மகளைக் குறித்து நிறையப் பெருமை இருந்தது.
“என்ன முடிவு எடுத்திருக்கான்னு நீயே அவக்கிட்ட கேளு…” என்றவர் “சந்தியா உன்னை கதிர் மாமா கூப்பிடுறாங்க பாரு….” என்றபடி எழுந்து அடுப்படிக்கு செல்ல,
இவர்கள் பேசுவதை எல்லாம் உள் அறையில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த சந்தியா. தயக்கத்துடன் வெளியே வந்தவள், நேராகச் சென்று கதிரின் எதிரே அமர்ந்தாள்.
“இல்ல மாமா நல்லா தான் இருக்கேன்….” என்றாள் சந்தியா அவன் முகத்தைப் பார்க்காமல்.
“சந்தியா முதல்ல நிமிர்ந்து என்னைப் பாரு. இப்ப என்ன உனக்குப் பிரச்சனை? உனக்கு சென்னைக்குப் போய் மெடிக்கல் படிக்க விருப்பம் இல்லைய உனக்கு இஷ்டம் இல்லைன்னா வேண்டாம். ஆனா, மெடிக்கல் படிக்கச் சீட் கிடைக்கிறது ஒன்னும் சாதாரண விஷயம் இல்லை. நானும் அங்க தான் சந்தியா இருக்கேன், நான் உன்னைப் பார்த்துக்க மாட்டேனா….” என்று பெற்றவர்களை விட்டுவிட்டு அவள் வேறு ஊர் செல்ல தயங்குகிறாள் என்று நினைத்து கதிர் பேச,
சந்தியா அமைதியாக இருப்பதற்குக் காரணம் காவேரியை பற்றி வீட்டில் சொல்லாமல் இருக்கும் குற்ற உணர்ச்சி என்று அவனுக்குத் தெரியவில்லை. சந்தியாவுக்கு காவேரியின் காதலை கதிரிடம் சொல்லவும் தைரியம் இல்லை. சொல்லாமல் மறைப்பதும் கஷ்டமாக இருந்தது.
அன்று ஒரு நாள் அவள் யாரோ தோழியுடன் ரொம்ப நேரம் செல்லில் பேசியதற்கே எப்படித் திட்டினான். இவனிடம் அவள் காதலிப்பதை சொன்னால், என்ன ஆகுமோ என்று பயந்தாள். ஒரு வேளை சந்தியா கதிரிடம் சொல்லியிருந்தால், பிரச்சனை இவ்வளவு பெரியதாக ஆகியிருக்காதோ.