Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

நேசிக்க நியதி அழைக்கிறதா 05

நேசம் 05

அனுராதா அன்புவின் மூத்த தங்கை. இருவருக்கும் ஒருவருடம் மட்டுமே வித்தியாசம் இருக்க, அவனிடம் எந்தவித பயமுமின்றி பேசக் கூடியவள்.



Advertisement

அன்புவை போல் அமைதியெல்லாம் அனு இல்லை. எதிலும் ஒருவித அடாவடித்தனம் அவளிடம் இருக்கும். எதையும் மனதில் வைத்து கொண்டு எல்லாம் இருக்க மாட்டாள். மனதில் நினைத்ததை நினைத்த நேரத்தில் பேசுபவள். வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்பதுபோல் தான் அவள் வாழ்க்கை.

மொத்தத்தில் அன்புவின் குணத்திற்கு எதிர்மாறான குணம் கொண்டவள் அனுராதா.

Advertisement

Advertisement

கணவன் முகுந்தன் வீட்டு சொந்தத்தில் ஒரு திருமணத்திற்கு  அழைத்திருக்க, அதற்காக தான் சென்னை வருவதே.

அதுமட்டும் தான் காரணமா என்றால் கிடையாது. கிட்டத்தட்ட அன்புவை அவள் பார்த்து வருடங்கள் ஆகிவிட்டன.

Advertisement

அவள் அழைத்தாலும் ஓரிரு வார்த்தைகள் பேசி வைத்து விடுபவன்,சில நேரங்களில் வேலையை காட்டி தவிர்த்தும் இருக்கிறான்.

சீதா தான் மகனின் இந்த மாற்றத்தை மகளிடம் புலம்பி தள்ளுவார்.

“அனு, எனக்கு பயமா இருக்கு டி. வர வர அவனோட நடவடிக்கைகள் எதுவும் சரியில்லை. எனக்கு என்ன பண்றதுன்னே தெர்ல. வீட்ல அவன் இருந்துமே இருக்கானா இல்லையான்னு தெரியமாட்டேங்கிது. இதெல்லாம் எங்க போய் முடிய போகுதுன்னு தெர்ல” என்று ஒரு அன்னையாய் அவர் கவலைகளை எல்லாம் கொட்டி தீர்க்க,

அன்னையின் அந்த கவலை அனுராதாவை கொதிக்க வைத்தது.

ஊருக்கு சென்றதும் முதல் வேலையாக அவனிடம் பேச முடிவெடுத்தாள். அவன் தனிப்பட்ட வாழ்க்கை என்று தலையிடாமல் இருந்ததில் வரம்பு மீறி அவன் சென்றுகொண்டிருப்பது புரிய, அண்ணனின் மீது கோபமாக வந்தது.

இரவு வண்டி ஏறியதுமே தந்தைக்கு அழைத்து சொல்லிவிட்டாள்.

“அப்பா, பஸ் ஏறிட்டோம். அவனை வந்து பிக் பண்ணிக்க சொல்லுங்க” என்றாள்.

“சொல்லிடுறேன் அனு. பக்கத்துல வந்ததும் அவனுக்கு நீயே கூப்பிட்டு சொல்லிடு. வந்து உன்னை கூப்பிட்டுப்பான்” என்க,

“ஏது நான் கூப்பிட்டதும் உங்க மகன் எடுத்திட்டு தான் மறுவேலையே பாப்பான். போங்க ப்பா” என்றவளுக்கு சலிப்பு தட்டியது.

“நான் அவன்கிட்ட சொல்றேன். நீ கூப்பிடு ” என்று அழைப்பை வைத்தார்.

பேருந்தில் ஏறிய சில மணிநேரத்திலே,” ம்மா, பிஸ்கட் வேணும்” மகன் அடம்பிடிக்க துவங்க,

“நைட் ஆகிடுச்சு இப்ப என்ன பிஸ்கட் உனக்கு. அதெல்லாம் கிடையாது” அவள் மறுத்து பேச,

“மம்மி, டூ பிஸ்கெட் மட்டும்” கைகள் விரித்து விஷ்ணு கேட்க, வலிக்காது கையிலே ஒன்று போட்டாள்.

“ப்ளிஸ் ம்மா… ஜஸ்ட் டூ பிஸ்கெட்ஸ்”

“நீ நான் சொன்னா எல்லாம் கேக்க மாட்ட. இரு உங்க அப்பாவுக்கு ஃபோன் பண்ணி தரேன் அவரு சொன்னா தான் கேப்ப” என்றவள் கணவனுக்கு அழைப்பு விடுத்தாள்.

விஷ்ணுவோ சைகையில் ‘வேணாம்’ என்றான்.

சற்று நேரம் கழித்தே முகுந்தன் அழைப்பை ஏற்க,”என்ன அனு தூங்கலையா?” என்றான் எடுத்தவுடனே.

“இப்ப தான் அப்பாக்கிட்ட பேசினேன். அதான் வீட்டுக்கு போய்ட்டீங்களான்னு கேக்க கூப்பிட்டேன்?”

“இப்போ தான் வீட்டுக்குள்ள வரேன்” என்றவன்,

“பையன் என்ன பண்றான்? தூங்கிட்டானா?” முகுந்தன் விசாரிக்க,

“உங்க பையன் தானே எப்பவோ தூங்கிட்டான். அதுவும் பிஸ்கட்ஸ் எதுவும் கேக்கலாம் இல்ல” என அவள் மகனை தந்தையிடம் லாவாக போட்டு கொடுத்தாள்.

“இன்னும் தூங்காம என்ன பண்றான்? அவன் கிட்ட ஃபோனை குடு?” என்றதும் மகனிடம் ஃபோனை கொடுத்தாள் அனு.

“விச்சு…”என்றதும் அதுவரையிலும் செய்த லூட்டிகள் யாவும் எங்கோ சென்றது.

“ப்பா..”

“அம்மாவ தொந்தரவு பண்ண கூடாது. சீக்கிரமா தூங்குன்னா தான் எழுந்துக்க முடியும். அங்க போய் எந்த சேட்டையும் செய்ய கூடாது புரியுதா?”

“ம்ம்ம் பா” என்றான் சத்தமே வராத குரலில்.

கேட்டிருந்த அனுவிற்கு சிரிப்பு வந்தது மகனின் செய்கையில்.

“அம்மாட்ட குடு” என்றான் முகுந்தன்.

அனுவிடம் மொபைல் மாறியதுமே அன்னையை கட்டிக்கொண்டான் விஷ்ணு.

“பார்த்துப் போங்க. போனதும் ஃபோன் பண்ணு” என்று வைத்தான் முகுந்தன்.

மகன் தூங்கும் வரையிலும் அவனிற்கு தட்டிக் கொடுத்தவள், அப்படியே உறங்கியும் போனாள்.

காலை எட்டு மணியளவில் வந்து இறங்கியவள் அன்புவிற்கு அழைக்கலாம் என்று நினைக்கையிலே விஷ்ணு மாமா என கூச்சலிட்டான்.

“விச்சு…” சத்தமாக அன்புவும் அழைக்க, மாமாவை கண்டதும் பையன் அவனிடம் ஓடினான்.

“டேய், பார்த்து” பதிறப்போனாள் மகனின் ஓட்டத்தில்.

மருமகனை அலேக்காக தூக்கியவன்,” எப்படி டா இருக்க?” நலம் விசாரிக்க,

“சூப்பாரா இருக்கேன் மாமா” என்றான் உற்சாக குரலில்.

அதற்குள் அனுவும் வரவும்,”வா அனு” என்று அவளை வரவேற்றவன் அவள் எடுத்து வந்த பையினை வாங்கிக் கொண்டான்.

பின்னர் இருவரையும் வீட்டிற்கு அழைத்து வந்தவன், தன் வேலை முடிந்தது போல் கிளம்ப பார்க்க விஷ்ணு அவனின் கால்களை விடாது பிடித்துக் கொண்டான்.

“விஷ்ணு, மாமாவை விடு. அவன் வேலைக்கு போகணும் பாரு” சொல்ல, மெல்ல தலையை நிமிர்த்தி தன் மாமனை கண்டான்.

பின் என்ன நினைத்தானோ அன்புவை விட்டு விலகி தன் தாத்தாவிடம் சென்று நின்று கொண்டான்.

பார்த்த அன்புவிற்கு கஷ்டமாகி போனது. ஆனால் இன்று அலுவகத்தில் ஒரு முக்கியமான மீட்டீங் ஒன்று இருந்ததால் அவன் கண்டிப்பாக அங்கே செல்ல வேண்டிய கட்டாய நிலை. இல்லையெனில் மருமகனிற்காக விடுமுறை எடுத்திருப்பான்.

அனுவின் வருகை அந்த குடும்பத்தில் புதுவிதமான நம்பிக்கையை எழுப்பியது.

சீதா மகளின் வருகையால் மகிழ்ந்தாலும், மகனின் மௌன நிலைமை மீண்டும் அவரை கவலைக்கொள்ள வைத்தது. வீட்டில் அனைவரும் மகிழ்ச்சியுடன் உரையாடினாலும், அன்பு எதற்கும் செவி சாய்க்கவில்லை.

அன்றைய பொழுது அனு தன் குடும்பத்தோடு நேரத்தை செலவழித்தாள்.

அன்று இரவு அன்பு வேலை முடித்து வந்ததுமே அவனுக்காகவே காத்திருந்தது போல் அனு அவனை தேடி அவனது அறைக்கே சென்றாள்.

அவனின் அறைக் கதவை தட்டி, “உள்ள வரலாமா!” என்க,

“வா அனு” என்றான் அவனும்.

“உன்கிட்ட கொஞ்சம் பேசணும். டைம் கிடைக்குமா?”

“சொல்லு அனு. ஏதாவது வேணுமா என்ன?” என்றான் அவளின் வருகைக்கான காரணம் அறியாது.

“நான் இதைப் பத்தி பேசக்கூடாதுன்னு தான் இருந்தேன். ஆனா அப்படியே இருக்க முடியல அன்பு. உன்னோட நடவடிக்கையால வீட்ல உள்ள எல்லாரும் கஷ்டப்படுறாங்க” சொன்னவளின் வார்த்தைகள் புயலாக அன்புவின் மனதை உருக்கியது.

அன்புவிற்கு புரிந்தது எதைப்பற்றி பேச வருகிறாள் என்று.‌ தானாக மனம் ஒருவித இறுக்கத்திற்கு மாறியது. வெளியில் அமைதியாக நின்றாலும் உள்ளுக்குள் அடக்கமுடியாத கலக்கம் அவனுள்!

தங்கை கேட்டால் என்னவென்று சொல்வது? அவனுக்குள் அவனே போராடிக் கொண்டிருக்க, அனுவின் வார்த்தைகள் ரணத்திற்கு மேலும் ரணம் சேர்த்தது.

“உனக்கு என்ன தான் பிரச்சினை அன்பு? எதுனாலும் எங்ககிட்ட சொல்லு எல்லாரும் சேர்ந்து உன்னோட பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணலாம். ஆனா இப்படி நீ அமைதியா இருக்காத” என்றவள் மேலும் அவளே தொடர்ந்தாள்.

“அம்மா தினமும் உன்ன பத்தி நினைச்சே கவலைப்படுறாங்க. ஏன் அப்பா கூட வெளில சொல்றதில்ல தவிர அவருக்குமே நிம்மதி இல்ல. உன்ன பத்தி நினைக்கிறவங்களை பத்தி நீயும் கொஞ்சம் யோசிக்கலாம் இல்லையா?”அனுராதாவின் வார்த்தைகள் அன்புவை கடுமையாக தாக்கின.

அவன் தான் உள்ளுக்குள் புதைந்து போன உணர்வுகளை வெளிக்கொணர முடியாமல், விழிகளைத் தாழ்த்தி நின்றான்.

“ஏதாவது பேசு அன்பு” என்க, அவனோ அமைதியாய் கற்சிலைப்போல் நின்றிருந்தான்.

அனுவிற்கு அன்புவின் செயல்பாடுகள் கோபத்தை கொடுத்தாலும் அமைதிக்காத்தவள், “சரி விடு. நான் இப்ப எதுவும் கேக்கல. ஆனா இப்படியே உன்ன விட்டுவேன்னு நினைக்காத அன்பு. உன்ன மாத்திக்க பாரு இல்லன்னா நீ ரொம்பவே கஷ்டப்படுவ” என்று எச்சரிக்கை விடுத்தவள் அந்த அறையை விட்டு வெளியேறினாள்.

அனு சென்ற பின் அந்த அறையில் அவன் மட்டுமே இருக்க, மிதமான வெளிச்சம் அந்த அறையில் பரவியிருந்தாலும், அவனின் நினைவுகளால் இருளாய் மாறின.

அவளின் ஒவ்வொரு சொல்லிலும் உண்மை இருந்தது. ஆனால் அவன் சொல்ல முடியாத கதையை யாருக்கு சொல்லுவது? தன் மனக்கசப்பை வெளிப்படுத்த முடியாத இக்கட்டான நிலை அவனை மேலும் வலியூட்டியது.

அவன் நிமிர்ந்து தனது மேசையில் இருந்த புகைப்படத்தை பார்த்தான். அந்த புகைப்படத்தில் இருந்தது அவளது முகம்! அந்த புன்னகை! அது மட்டும் போதுமென்று நினைத்திருந்தான். ஆனால் இல்லை! அந்த புன்னகை இப்போது அவனை மேலும் மேலும் அழுத்தி அவனை கொல்லாமல் கொன்றது.

அடுத்த நாள் விடியிலில் அனுவும் சீதாவும் திருமணத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்தனர்.

நந்தினி அக்கா மகனுக்கு உணவூட்டி கொண்டிருந்தாள்.

“சித்தி, போதும். எனக்கு பசிக்கல” என்று நந்தினியிடம் உணவை வேண்டாம் என அவன் மறுத்து கொண்டிருக்க,

“கொஞ்சமா சாப்பிடு டா. அப்புறம் உங்க அம்மா என்னைய தான் திட்டுவா” என கெஞ்சிக் கொஞ்சி அவனுக்கு உணவை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தாள்.

“போ சித்தி நீ ரொம்ப மோசம். நான் உன்கூட டூ” என்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டான்.

அப்போது கீழே வந்த அன்பு இவர்கள் இருவரின் சம்பாஷணைகளை பார்த்தவனின் முகத்தில் சிறு புன்னகை.

“நந்து…” என தங்கையை அழைக்க, அவள் முகத்தில் அவன் தன்னை தான் அழைத்தானா என்றதொரு கேள்வி?

“மண்டு சித்தி… உன்னை தான் மாமா கூப்பிடுறாங்க” என்றான் அவளின் கையை பிடித்து ஆட்டியப்படி.

“என்ன தான் கூப்பிட்டியா னா?” நம்ப முடியாத நிலையில் கேட்டாள்.

“ம்ம்ம்… அனுவும் அம்மாவும் கிளம்பிருந்தா வரச்சொல்லு. நானே அவங்களை மண்டபத்துல கொண்டு போய் விட்டறேன்” சொல்ல, உடனே சென்றாள் இதனை கூறுவதற்காகவே.

மகன் தங்களை அழைத்துச் செல்லவிருக்கிறான் என்றதும் அன்னையின் முகம் பல நாட்களுக்கு பிறகு புன்னகையால் மலர்ந்தது.

பின், இருவரையும் மண்டபத்தில் விட்டவன் ஒரு ஐந்து நிமிடம் அங்கே சம்பிரதாயம் பொருட்டு இருந்தவன் அதற்குமேல் முடியாமல் அங்கிருந்து கிளம்பிருந்தான்.

********

காலையிலே வீட்டை இரண்டாக்கி கொண்டிருந்தாள் மங்கை.

இன்று அவள் தோழி ஒருத்திக்கு திருமணம். அதற்கு தான் கிளம்புகிறேன் என்ற பேர்வழி யாரையும் அவர்களது வேலையை செய்ய விடாமல் செய்து கொண்டிருந்தாள்.

அவள் அறையில் இருந்து அமர்ந்த நிலையில் எந்த உடை அணியலாம் என்று தீவிர சிந்தனைகள் அவளுள் ‌.

எந்த உடையும் அவளுக்கு இப்போது நன்றாக இருக்கும் என்று தோன்றவில்லை.

“ம்மா… கொஞ்சம் இங்க வாங்களேன்” அன்னையை கத்தி அழைக்க, அவரோ திட்டிக் கொண்டே உள்ளே வந்தார்.

“என்னடி உன் பிரச்சினை? இப்படி காலையிலே கூப்பாடு போட்டுட்டு இருக்க?” என்று அறைக்குள் நுழைந்தவர் அறை இருந்த கோலத்தை கண்டு அதிர்ந்தார்.

அறை முழுவதும் அவள் உடைகளை பரப்பி வைத்திருக்க, அவளோ கட்டிலில் ஹாயாக அமர்ந்திருந்தாள்.

“என்னடி இது, ரூம்மை இப்படி வச்சிருக்க?”

“ம்மா, அதை விடுங்க. நீங்க சொல்லுங்க எந்த ட்ரெஸ் போடலாம்னு?” என்றாள் தீவிர குரலில்.

செண்பகத்திற்கு கடுப்பாய் வந்தது மகளின் இந்த செயலில்.

“எதையாவது ஒன்னை போட வேண்டியது தானே டி. அதுக்கு எதுக்கு இப்படி ரூம் முழுக்க ட்ரெஸை அள்ளி பரப்பி வச்சிருக்க”

“ம்மா, நான் ஒரு செலப்ரிட்டி! என்கிட்ட ஃபேஷன் சென்ஸ் இருக்கணும், ப்ரஸனாலிட்டி இருக்கணும், எல்லாம் ஒன்னா செட் ஆகணும்!” என அவள் அடுக்கிக்கொண்டே செல்ல, செண்பகம் பெருமூச்சு விட்டார் மகளின் செயல்பாட்டில்.

“மங்கை எதையாவது ஒன்னை போட்டுட்டு கிளம்பி வா. உனக்காக தான் அங்க ரெட் கார்பெட் போட்டுட்டு காத்திட்டு இருக்காங்களாம்” அவர் கடுப்புடன் கூற,

“ஹாஹா! நல்ல ஐடியா மம்மி! ‘ரெட் கார்பெட் வாகிங்’ ன்னு ஒரு வீடியோ போட்டுட வேண்டியது தான். என்ன சொல்றீங்க” என்று செண்பகத்தை அவள் மேலும் கடுபடித்தாள்.

“அடியேய் இப்ப கிளம்பப் போறியா இல்லையா நீ?” என சற்று செண்பகம் குரல் உயர்த்தவும் அமைதியானவள்,

“கிளம்புறேன். ஒரு அரைமணி நேரத்துல வந்தறேன்”என்றாள்.

சொன்னது போலவே அரைமணி நேரத்தில் அழகு தேவதையாய் வெளிவந்தாள்.

பார்த்த செண்பகம் மகளின் அழகில் மெய்சிலிர்த்தார்.

மயில் பச்சை மற்றும் கடல் நீலம் கலந்த புடவையில் அதற்கு ஏற்றாற்போல் காதில் ஜிமிக்கி கழுத்தில் சின்ன ஆரம் கையில் சில வளையல்கள் அவ்வளவே. எளிமையான அணிகலன்களே அவளின் அழகை மேலும் மெருகேற்றி அழகாய் காட்டியது.

“என் கண்ணே பட்டுடும் டி”என்றவர் அவளுக்கு நெட்டி எடுத்தார்.

“போலாம்… போலாம் நேரமாச்சு” சொன்னவள் அன்னையை அழைத்துக் கொண்டு திருமண மண்டபத்திற்கு விரைந்தாள்.

மண்டபத்திற்குள் மங்கை நுழைந்ததில் இருந்து அனைவரின் கவனமும் அவள் மீது தான்.

கோதுமை நிறமே என்றாலும் அனைவரையும் எளிதில் கவரக்கூடிய பெண். அதிலும் இன்று அழகு தேவதையாய் சுற்றி திறிந்தவளின் மீது இளசுகளின் கண் அவள் மீதே இருக்க, அதை எதையும் கண்டுக்கொள்ளாது தன் அன்னையுடன் அமர்ந்திருந்தாள்.

“மம்மி, வாங்க போய் கிஃப்ட் கொடுத்துட்டு கிளம்பலாம். ப்ரோ வெயிட் பண்ணுவான் போகணும்” என்று அன்னையின் காதில் கிசுகிசுத்தவள் அவரின் முறைப்பினை பரிசாகப் அவளுமே பெற்றாள்.

கூட்டம் சற்று குறையவுமே மங்கை அன்னையோடு மேடைக்கு சென்று பரிசினை கொடுத்து வாழ்த்தியவள், கீழே இறங்கும் சமயம் ஒரு வயதானவர் மேடை ஏற சிரமபடுவதை கண்டு அவருக்கு உதவி கரம் புரிந்தாள் மங்கையர்க்கரசி.

இவளின் செய்கையை கீழே இரண்டாம் வரிசையில் அமர்ந்திருந்த அனு பார்க்க, அன்னையிடமும் அவளை காட்டி எதையோ சொன்னாள்.

“இந்த மாதிரி பொண்ணு தான் மா நம்ம அன்புவுக்கு மனைவியா வரணும். அப்போ தான் அவன் வாழ்க்கை நல்ல விதமா போகும்” என அனு மனதில் பட்டதை சொல்ல, சீதா பெயர் அறியாத அந்த பெண்ணை கண்டார்.

“நல்ல பொண்ணா தான் தெரியுறா” என்றவரின் பார்வை மங்கையை சுற்றியே வட்டமடித்தது.

அனு என்னவோ சாதாரணமாக சொல்லிவிட்டு அவள் வேடிக்கை பார்க்க, சீதாவின் மனதில் அது பதிந்து போனது. வார்த்தைகள் மட்டுமல்லாது மங்கையும் சேர்த்தே பதிந்து போனாள்.

அடுத்த ஒருவாரத்திலே அன்பும் மங்கையும் சந்திக்க நேர மீண்டுமொரு முறை சிங்கமும் சிறுத்தையுமாக சீறிக்கொண்டு நின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!