மதிவதனி அவள் அத்தையை பார்த்ததிலிருந்து மிகுந்த சந்தோஷத்தில் இருந்தாள். அவள் சந்தோஷத்துக்கு வேறு ஒரு காரணமும் இருந்தது. காரைக்குடியில் வைத்து மனோரஞ்சன் அவளிடம் கூறியது அவளுக்கு நினைவுக்கு வந்தது.’உன் கண்ணை இறுக மூடிக்கிட்டு உன் மேல யாரும் பாசம் வைக்கலைன்னு நினைச்சுக்கிற. ஆனால் அது உண்மை கிடையாது.கண்ணை திறந்து பாரு மதி….’
அப்படியென்றால் அவன் கூற வந்தது என்ன? மனோரஞ்சனும் அவள் மேல் பாசம் வைத்திருப்பதாகவும், அதை தான் புரியாமல் இருப்பதாகவும் கூறுகிறானா?!’
காரைக்குடியில் அவள் பயந்து நின்ற போது அவளுக்கு துணை நின்று அவளை அனைத்து ஆறுதல் கூறியது, அவள் மனதை புரிந்துக் கொண்டு அவள் அத்தையை இங்கே வரவழைத்தது, அடிக்கடி அவள் தலையை நேசமாக வருடுவது, இதெல்லாம் வெறும் ஃப்ரண்ட்ஷிப் தானா? அதையும் தாண்டி இதில் காதல் உள்ளதா?!. இப்படி நினைக்கும் போதே அவள் உடல் சிலிர்த்தது. கண்ணங்களில் ரோஜாக்கள் குடி ஏறியது.
அவள் நினைவுகளை கலைத்து ஒரு குரல் கேட்டது.”என்ன அண்ணி?! தனியா சிரிச்சுட்டு இருக்கீங்க. ஏதாவது பகல் கனவா?”
“ச்சு…எப்போ பாரு, என்ன கிண்டல் பண்ணிகிட்டே இரு. ஆமா கனவு தான். அதுவும் உன் அண்ணனை பத்தி தான் கனவு. போதுமா?”
“ஹ்ம்ம்..நீங்க இங்க அண்ணனை நினைச்சு கனவு கண்டுட்டு இருக்கீங்க. அங்க என்னடானா ரித்து, தாமரை வர போவதை நினைச்சு கனவு கண்டுட்டு இருக்கான்…ஹ்ம்ம்…நடத்துங்க…நடத்துங்க…”
“என்ன? தாமரை இங்க வராங்களா?”
“இங்கனா, இங்க இல்ல. சென்னைக்கு வரா. அவளுக்கு இங்க ஒரு கம்பெனில வேலை கிடைச்சுருக்கு. முதல மாமா முடியாதுனு மறுத்தார் போல. தாமரை யாரு? அவ என்னை மாதிரி ஆச்சே! சாப்பிடாம உண்ணாவிரதம் இருந்து, பிடிவாதம் பிடிச்சு, சம்மதம் வாங்கிட்டா. இங்க ஒரு விமன்ஸ் ஹாஸ்டல்ல தங்கி வேலை பார்க்க போறா. அது தான் ரித்து சந்தோஷமா இருக்கிறதுக்கு காரணம். இப்போ சொல்லுங்க, உங்க சந்தோஷத்துக்கு காரணம் என்ன?”
“ஹ்ம்ம்…என்னனு சரியா சொல்ல தெரியல, ஆனால் உங்க அண்ணனை இப்பவே பார்க்கணும் போல இருக்கு”
“அப்போ எதுக்கு இன்னும் வெய்ட்டிங். போங்க, போய் அண்ணாவ பாருங்க.”
மதிவதனி மனோரஞ்சனை தேடி சென்றாள். அவனை வீட்டில் எங்கேயும் காணவில்லை. ஏதோ முக்கியமான வேலை வந்ததால் கம்பெனிக்கு சென்றிருப்பதாக பாட்டி பார்வதி கூறினார்.
மதிவதனி யோசிக்காமல் கம்பெனிக்கு கிளம்பி விட்டாள்.
கம்பெனிக்கு சென்றதும் அசோக் அவளெதிரில் வந்தார்,”குட் மார்னிங் மேடம்! என்ன மேடம் தீடிருன்னு. இன்னைக்கு கிளைன்ட் எதுவுமே டிசைன் பண்ண சொல்லலியே?!”
“இல்லை சார். நான் வேலை விஷயமா வரல. உங்க எம்.டி பார்க்க வந்தேன்.”
“ஓ…”அவன் பெரிதாக யோசித்துவிட்டு,”கொஞ்ச நேரம் வெயிட் பண்ண முடியுமா மேடம். சார் ஒரு மீட்டிங்ல இருக்காரு”
மதிவதனிக்கு அவனை உடனே பார்க்க வேண்டுமென்று பரபரவென்று வந்தது,”அப்படியா?…..பரவாயில்லை அசோக் சார், நான் அவர் ரூம்ல போய் வெய்ட் பண்ணி பேசிக்கிறேன்” அவன் பதில் கூறும் முன் அவள் விரைந்து சென்று மனோரஞ்சன் அறைக் கதவை திறந்தாள்.
திறந்தவள் அப்படியே தலையில் இடி விழுந்ததை போல நின்று விட்டாள்.
உள்ளே மனோரஞ்சன் மேல் சாய்ந்துக் கொண்டு நித்யா நின்று கொண்டிருந்தாள். மனோரஞ்சனும் அவள் தலையை தடவியபடி ஏதோ கூறிக் கொண்டிருந்தான். மதிவதனி வந்ததை கூட அவர்கள் கவனிக்கவில்லை.
அவர்கள் பார்க்காதவண்ணம் கதவை மெதுவாக சாத்தி விட்டு அங்கிருந்து சென்றாள். வீட்டுக்கு அவள் எப்படி சென்றாள் என்று அவளுக்கே தெரியாது. வீட்டை அடைந்தபின் தன் அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டு உயிரே உருகுமாறு அழுது தீர்த்தாள்.
‘ஏன்?ஏன் நமக்கு மட்டும் இப்படி நடக்குது?இவர் என்னை பத்தி என்ன நினைச்சுட்டு இருக்கார்?என் கூடவும் நல்லா பழகுறாரு?அதே சமயம் நித்யாவையும் விட மாட்டிக்கிறார்?என்னை பத்தி கொஞ்சம் கூட யோசிச்சு பார்க்க மாட்டாரா?என் மனசு மட்டும் என்ன கல்லால செஞ்சதா?இல்லை….இல்லை…இது கொஞ்சம் கூட சரி இல்லை.என்னை…என் மனசை புரிஞ்சிக்காதவரை நான் மட்டும் எதுக்கு நினைச்சு நினைச்சு ஏங்கிக் கிடக்கணும்?’
‘இதுக்கு மேலும் என்னால இதை பொறுத்துக்க முடியாது.இனிமேல் அவராவே வந்து என் கிட்ட பேசுனாலும், நான் பேச போறதில்லை.இந்த மதியை பத்தி என்ன நினைச்சார்.அவர் என்ன பண்ணினாலும் அதை சகிச்சுகிட்டு கணவனே கண் கண்ட தெய்வம்னு சீரியல் ஹீரோயின் மாதிரி பேசிகிட்டு அவர் காலடியில் விழுந்து கிடப்பேனா?அது ஒரு நாளும் நடக்காது.இனிமேல் அவர் இருக்கிற பக்கம் கூட தலை வச்சி படுக்க மாட்டேன்’மனதில் ஒரு உறுதியுடன் கண்களை துடைத்துக் கொண்டு சென்றாள்.
ஆனால் அவள் எடுத்த முடிவை தகர்பதற்கென்று மறுநாள் ஒரு விருந்தாளி அவர்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.
“ஹேய்….கோலி சோடாவே….கறி குழம்பே…..உன் குட்டி பப்பி நானு…..ரவுடி பேபி….”மகிழ்ச்சியாக பாடிக்கொண்டே வந்த நிலா, மதிவதனி மேல் இடித்துக் கொண்டாள்.
“ஆ…சாரி அண்ணி”
“என்ன நிலா? இன்னைக்கு நீ ரொம்ப சந்தோஷமா இருக்கிற மாதிரி இருக்கு? என்ன விசேஷம்?”
“அது இன்னைக்கு நம்ம வீட்டுக்கு ஒரு விருந்தாளி வர போறாங்க. அதான் என் ஹாப்பினஸ்க்கு காரணம்.”
“விருந்தாளியா? யார் அது?”
“அது சஸ்பென்ஸ். சொல்ல மாட்டேனே”
“இன்னிக்கு காலைலிருந்து இதை தான் சொல்லிட்டு இருக்க. ஆனா யாருன்னு சொல்ல மாட்டிக்கிற. சஸ்பென்ஸ்னு சொல்லிட்டு ஏதாவது மொக்கை போட்டேனா அடி வாங்குவ பாத்துக்கோ” என்று சொல்லிக் கொண்டே அங்கு வந்த மனோரஞ்சன் அவளை பொய்க் கோபத்துடன் முறைத்தான்.
“கொஞ்ச நேரம் வெய்டீஸ், இப்போ வந்துடுவாங்க” அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அழைப்பு மணி ஒலித்தது.
நிலா ஓடிச் சென்று கதவை திறக்க அங்கே ரிதுநந்தன் நின்றுக் கொண்டிருந்தான்.
“ஏண்டி….ரித்து தான் விருந்தாளியா? உன்னை கொல்ல போறேன்”
“அண்ணா….கொஞ்சம் அங்கே பாருணா” அவள் சொல்லவும் ரிதுநந்தனின் பின்னால் இருந்து மெதுவாக தாமரை எட்டி பார்த்தாள்.
தாமரையை அங்கு யாரும் எதிர்பார்காததால் எல்லோரும் ஆனந்த அதிர்ச்சி அடைந்தனர்.ஆளாளுக்கு அவளைக் கட்டி பிடித்து அவளை வரவேற்று நலம் விசாரித்துக் கொண்டிருந்தனர். சூரியநாராயனன் மருமகளை பார்த்து கண் கலங்கிக் கொண்டிருந்தார்.
“எவ்ளோ நாள் ஆச்சு மா, உன் கிட்ட பேசி. ஊருக்கு வந்தபோ கூட, உன் கிட்ட சரியவே பேச முடியல மா. ரொம்ப சந்தோசம் நீ வந்தது. ஆமா நீ எப்படி இங்கே?”
“மாமா. எனக்கு இங்கேயே ஒரு கம்பெனில வேலை கிடைச்சிருக்கு மாமா. ஒரு லேடீஸ் ஹாஸ்டல்ல தங்கியிருக்கேன் மாமா.”
“ஹ்ம்ம்…நம்ம வீடே இருக்கு. ஆனா உன்னால இங்க தங்க முடியாம போச்சே மா.”
“எல்லாம் சீக்கிரம் சரி ஆயிடும் மாமா. கவலைப்படாதீங்க.”தாமரை அவளை தேற்றினாள்.
“ஏய்…..வாலு……உனக்கு இது ஏற்கனவே தெரியுமா? இதெல்லாம் உன் பிளான் தானா?”மனோரஞ்சன் நிலாவின் காதை பிடித்துத் திருகினான்.
“ஹலோ….இதுல நான் சைடு தான். மெயின் கல்ப்ரிட் அங்க நிக்குறான் பாரு அவன் தான்.”நிலா ரிதுநந்தனை கைக் காட்டினாள்.
ரிதுநந்தன் என்ன சொல்வதென்று தெரியாமல் திரு திருவென்று முழித்தான்.
“அடப்பாவி…பாரு செய்யுறதெல்லாம் செஞ்சுட்டு திருவிழாவுல காணாம போன கொழந்தை மாதிரியே முழிக்கிறத.”
“உண்மை தான் நிலா. இந்த பூனையும் பால் குடிக்குமாங்கிற மாதிரி அமைதியா இருந்துட்டே, பல வேலை பாத்துருக்கான் போல.”
“ஆமாணா. அது மட்டும் இல்லை. நாம எல்லோரும் தாமரை கிட்ட பேசியே எவ்ளோ வருஷம் ஆச்சு. சொல்ல போனா அவ போன் நம்பர் கூடத் தெரியாது. ஆனால் இவன் மட்டும் இவ்ளோ வருஷம் அவ கூட பேசிக்கிட்டு தான் இருந்திருக்கான்!”
“ஏய்….லூசு…..கொஞ்சம் நிறுத்துடி…அப்பா இருக்காரு…”ரித்துநந்தன் அடிக்குரலில் சீறினான்.
சூரியநாராயணன் இதையெல்லாம் கவனித்தாலும் கவனிக்காத மாதிரியே நின்றுக் கொண்டிருந்தார்.
“மாமா….நான் போய் தாத்தா, பாட்டிய பார்த்துட்டு வரேன்” அவள் உள்ளே செல்லவும் மதிவதனி அவளுக்கு ஏதாவது ஸ்பெஷல் சமையல் செய்வதற்கு சென்றாள்.
அன்றைய பொழுது இனிமையாக கழிந்தது. நிலா, தாமரை இருவரும் சேர்ந்து அந்த இடத்தையே கலகலப்பாக மாற்றிக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் விநோதனும் அவர்களுடன் சேர்ந்து விட அந்த இடமே களைக் கட்டியது. மனோரஞ்சனுக்கு வேலை இருந்ததால், நேரம் கிடைக்கும் போது நடுநடுவே வந்து சேர்ந்துக் கொண்டான். அவன் வந்த நேரத்தில் எல்லாம் ஏதோ வேலை இருப்பதாகக் கூறி மதிவதனி, அந்த இடத்தை விட்டு அகன்றாள்.
தாமரை இதை கவனித்து விட்டு, நிலாவிடம் என்னவென்று கண் காட்டினாள். அவளும் சொல்றேன் என்பது போல தலை அசைத்தாள். சிறிது நேரம் கழித்து தோழிகள் இருவரும் சந்தித்துக் கொண்டபோது அங்கு நடக்கும் கதை அனைத்தையும் பகிர்ந்து கொண்டாள் நிலா. பின்பு இருவரும் சேர்ந்து சில திட்டம் தீட்டினர்…..
புலரும்