நிலா அவள் அறையில் உட்கார்ந்து, நித்யாவுடன் பேசியதை நினைத்துக் கொண்டிருந்தாள். சின்ன வயதிலிருந்தே அவளுக்கு நித்யாவை பிடிக்காது. நித்யாவுக்கு தான் அழகாய் இருக்கிறோம், பணக்காரி என்ற திமிர் அதிகமாக இருப்பதாக நிலா நினைத்தாள். அதனால் நிலா நித்யாவிடம் அளவாக தான் பேசுவாள்.
மனோரஞ்சனுக்கு கல்யாணம் முடிந்ததும் நிலா, மதிவதனி தனக்கு அண்ணியாக வந்தது குறித்து மிகவும் சந்தோஷம் அடைந்தாள். ஆனால் நித்யாவால் அந்த சந்தோஷம் கெட்டு, தன் அன்பு அண்ணனின் சந்தோஷமும் கெட்டு விடுமோ என்று பயந்தாள் அதனால் தான் அவளே இதற்கு ஒரு முடிவு கட்டுவதற்கு நித்யாவை பார்க்க போனாள்.
நித்யாவை பார்த்து பேசியபின், அவளுக்கு நித்யாவை பற்றிய மனப்பான்மை மாறியது. இந்த பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்று யோசித்து மண்டையை உடைத்துக் கொண்டிருந்தாள். அப்பொழுது கீழே யாரோ சத்தமாக பேசும் குரல் கேட்க, என்ன என்று எட்டி பார்த்தாள். அங்கே மனோரஞ்சனும், ரிதுநந்தனும் பேசி கொண்டிருந்தனர்.
“டேய்!ரித்து நில்லு டா. நான் உன் கிட்ட தான் பேசிட்டிருக்கேன்”
“என்னணா?சொல்லு.”
“தாமரை கிட்ட ஏதாவது சண்டை போட்டியா?”
“உங்களுக்கு யாரு சொன்னது? தாமரையா?”
“தாமரை சொல்லல. நிலா தான் சொன்னா. என்ன பிரச்சனை உங்களுக்குள்ள?”
“ஆமா பின்ன, மாமா அவளுக்கு மாப்பிளை பார்த்து வச்சிருக்காங்க, அதை பத்தி அவ என் கிட்ட ஒன்னுமே சொல்லல. கோபம் வர தானே செய்யும்!”
“டேய்! அதுக்காக இப்படி தான் பப்ளிக் ப்லேஸ்ல கத்துவியா? காபி ஷாப்ல வச்சு கத்தினியாம்! தாமரையை நீ சந்தேகப்படுறியா? உனக்கு தெரியாதாடா அவளை பத்தி? நீ….” அவன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே ரிதுநந்தன் நிறுத்தும்படி கை காட்டினான்.
“நிறுத்துங்க அண்ணா. நீங்க பேசும்போது எதிர்த்து பேசக் கூடாதுன்னு நினைச்சேன். ஆனால் நீங்க பேசிட்டே இருக்கீங்க. என்னை சொல்றீங்களே, நீங்க மட்டும் என்னவாம்? முதல எங்க யார்கிட்டயும் கன்சல்ட் பண்ணாம கல்யாணம் பண்ணிக்கிடீங்க. ஆனால் அதுக்கபுறமும் நீங்க அண்ணி கூட சேர்ந்து வாழலை. அப்புறம் ஏன் என்னை கேக்குறீங்க?”
மனோரஞ்சன் வாயை திறந்து ஏதோ சொல்ல ஆரம்பிப்பதற்குள் மதிவதனி, “ரித்து என்ன….” அவள் ஏதோ சொல்ல வரவும்,அவளையும் தடுத்தான் ரிதுநந்தன்.
“அண்ணி. நான் அண்ணாகிட்ட பேசிட்டு இருக்கேன். தயவு செஞ்சு இதுல நீங்க தலையிடாதீங்க.”
“டேய் ரித்து! என்ன பேச்சுடா பேசுற நீ! அவ உன் அண்ணி.மரியாதை இல்லாம பேசுற?” சூரியநாராயனன் கடும்கோபத்துடன் ரிதுநந்தனை பார்த்து கேட்டார்,
“அப்பா எனக்கு அண்ணி மேல நிறைய மரியாதை இருக்கு. நான் இப்போ பேசுறது அவங்களுக்காக தான்.நான் கேக்குறதுக்கு முதல அண்ணன் பதில் சொல்லட்டும்”
“என்னடா பதில் சொல்லணும்? கேளு சொல்றேன்” மனோரஞ்சன் கண்ணை மூடி மூச்சை உள்ளிழுத்துக் கொண்டு கேட்டான்.
“கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி நித்யாவை உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறதா இருந்துச்சு. ஆனால் நீங்க மதி அண்ணியை கல்யாணம் பண்ணிக்கிடீங்க. அந்த கல்யாணம் எப்படி நடந்துச்சுன்னு நான் பேச வரலை. ஆனால் இப்போ அவங்க தான் உங்க வைஃப்”
“நீங்க அவங்க கூட சந்தோஷமா வாழுறீங்களா? இன்னுமும் நித்யா கூட நீங்க அடிக்கடி தனியா பேசுறீங்களே ஏன்? நித்யாவை நீங்க காதலிக்கிறீங்களா? விநோதன் அண்ணா நித்யாவை விரும்புறாங்கனு எனக்கு தெரியும். அதனால தானே நீங்க வினோ அண்ணா கூட பேசாம இருக்கீங்க? இதுக்கெல்லாம் முதல பதில் சொல்லுங்க”
அங்கே கனத்த அமைதி நிலவியது. ஒரு குண்டூசி போட்டால் கூட கேட்கும் அமைதி.இதெல்லாம் அந்த வீட்டில் எல்லோருக்கும் தெரிந்த உண்மை தான்.ஆனால் யாரும் தெரியாத மாதிரி காட்டிக் கொண்டிருந்தனர்.இப்பொழுது எல்லார் முன்னிலையிலும் ரிதுநந்தன், இதை போட்டு உடைத்தும் எதுவும் பேச முடியாமல் வாயடைத்து போய் நின்றனர்.
ரிதுநந்தனே தொடர்ந்தான்,”உங்களால இதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. நான் இன்னிக்கு தாமரை கூட சண்டை போட்டிருக்கேன் தான்.ஆனால் நாளைக்கே போய் அவ கிட்ட பேசிடுவேன்.ஒரு நாளும் அவளை விட்டுற மாட்டேன். நான் ஒன்னும் அவளை சந்தேக படலை. என்னை நம்பறதை விட அவளை அதிகமா நம்புறேன்.” சொல்லிவிட்டு வேகவேகமாக உள்ளே சென்று விட்டான்.
மனோரஞ்சன் நின்ற இடத்திலேயே வேரூன்றி நின்று விட்டான். அவன் முகம் வெளுத்து போயிற்று. சூரியநாராயனன், நிலா, ராஜேஸ்வரி எல்லோரும் அவனை சமாதான படுத்த விரைந்தனர். ஆனால் அங்கே மற்றொரு இதயம் அதே அளவு காயம் பட்டு நிற்பதை யாரும் கவனிக்கவில்லை.
‘இன்னுமும் நித்யா கூட நீங்க அடிக்கடி தனியா பேசுறீங்களே ஏன்? நித்யாவை நீங்க காதலிக்கிறீங்களா? விநோதன் அண்ணா நித்யாவை விரும்புறாங்கனு எனக்கு தெரியும். அதனால தானே நீங்க வினோ அண்ணா கூட பேசாம இருக்கீங்க?’ என்ற ரிதுநந்தனின் வார்த்தைகள் மதிவதனியின் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது.
அந்த வார்த்தைகளில் உள்ள அர்த்தத்தை அவளால் புறக்கனிக்கவே முடியவில்லை. அவள் மனம் மீண்டும், மீண்டும் நடந்ததை நினைத்து மருகிக் கொண்டிருந்தது.
நிலா மட்டுமே அவள் பக்கத்தில் வந்து,”அண்ணி, உங்க மனசு எவ்ளோ கஷ்டபடுதுன்னு என்னால புரிஞ்சிக்க முடியுது. ஆனால் ரித்து பேசுனது எல்லாத்தையும் மனசுல வச்சிக்காதீங்க.உங்கள எப்படி சமாதானப்படுதுறதுனு தெரிலய. ஆனால் அவன் பேசுன அளவுக்கு மனோ அண்ணா மோசம் இல்லை. நீங்க சீக்கிரமே அதை புரிஞ்சிப்பீங்க”
“ஹ்ம்ம்…நீயாவது என்னை பத்தி கவலைப்படுவேனு நினைச்சேன்.ஆனால் நீயும் உங்க அண்ணனனுக்கு தானே சப்போர்ட் பண்ற”
”அய்யோ!அண்ணி,அது அப்படி இல்லை.நித்யா….அது….அண்ணாவும்…நித்யாவும்….”அவள் சொல்வதா வேண்டாமா என்று திணறிக் கொண்டிருந்தாள்.
அதற்குள்,”நிலா” என்ற மனோரஞ்சனின் குரல் கேட்டு இருவரும் திரும்பி பார்த்தனர்.
“உன் ரூமுக்கு போ”
“இல்லேணா….அண்ணி….”
“போனு சொன்னேன்”
அவள் சென்றதும் மனோரஞ்சன் மதிவதனியிடம் திரும்பி,
“ரித்து பேசுனதை நினைச்சு ஏதாவது கவலைப்படுறியா?”
கவலைப்படாம அப்புறம் ஜாலியா டான்ஸ் ஆடுவாங்களாக்கும்,கேக்குற கேள்வியை பாரு என்று மனதிற்குள் நினைத்தவள், அவனிடம்,”ச்சே,ச்சே!எனக்கு என்ன கவலை?அதெல்லாம் ஒன்னும் இல்லை”
மனோரஞ்சன் முகம் ஒரு ரகசிய சிரிப்பை உள்ளடக்கியது.”ஹ்ம்ம்…நிஜமாவே கவலை எதுவும் இல்லையே?
“இல்லேன்னு சொல்றேன்ல!ஏன் உங்களுக்கு ஏதாவது கவலையா?”
“எனக்கா?இல்லையே!ஏனா,அவன் சொன்னது உண்மை தானே!”என்று சொல்லிவிட்டு அவள் முகத்தை உற்று பார்த்துக் கொண்டிருந்தான்.
மதிவதனி அவள் கண்ணீரை மறைப்பதற்கு பெரும்பாடு பட்டுக் கொண்டிருந்தாள்.’ரித்து சொன்னது உண்மையா? அப்படியென்றால் இவர் நித்யாவை காதலிப்பது உண்மைன்னு ஒத்துகிறாரா?’
மனோரஞ்சன் இன்னும் அவளை உற்று பார்த்துக் கொண்டிருந்தான். அவனிடமிருந்து தன் மனதை மறைப்பதற்கு முயன்று முடியாமல் போகவே, ஏதோ வேலை இருப்பதாக சொல்லிட்டு அங்கிருந்து வேகமாக சென்று விட்டாள்.
அவள் அறைக்குச் சென்று கதவை சாத்திக் கொண்டு அப்படியே உறைந்து போய் உட்கார்ந்து விட்டாள். இரவு சாப்பிடக் கூட போகாமல் படுத்து விட்டாள். மனோரஞ்சன் அவளை சாப்பிட அழைப்பதற்கு வந்தான், ஆனால் அவள் அயர்ந்து உறங்குவதை பார்த்து விட்டுச் சென்று விட்டான்.
மதிவதனி ஒரு கல்யாண நிகழ்ச்சியில் நின்றுக் கொண்டிருந்தாள். அது ஒரு பெரிய மண்டபம். மிக அழகாக அலங்கரிக்க பட்டிருந்தது. மதிவதனி அந்த அலங்காரங்களை ரசித்துக் கொண்டிருந்தாள்.
உற்றார், உறவினர்கள் எல்லாரும் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தனர். சூரியநாராயணன், ராஜேஸ்வரி, நிலா, ரிதுநந்தன் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக தெரிந்தனர். அவர்களை பார்த்து மதிவதனிக்கும் சந்தோஷமாக இருந்தது.
அவள் மனமேடை பக்கம் திரும்பி மணமகன், மணமகள் யாரென்று பார்த்தாள். அங்கே….மனோரஞ்சனும், நித்யாவும் நின்று கொண்டிருந்தனர். அதை பார்த்து மதிவதனி அதிர்ச்சி அடைந்தாள்.அவள் கண்கள் கண்ணீரால் நிறைந்தது.அவள் திரும்பி போக நினைத்தாள். அப்பொழுது யாரோ அவள் பெயரை சொல்லி கூப்பிட்டார்கள்.
“இல்லை. நான் திரும்ப மாட்டேன். இல்ல….இல்லை…இல்லை…..”
“மது….”
“என்னை தனியா விடுங்க.ப்ளீஸ்…….”
யாரோ அவளை உலுக்கினர்.
“என்னை விடுங்க….ஏன் என்னை இப்படி டார்ச்சர் பண்றீங்க? என்னை விடுங்க”
“மது…..நான் தான். மது…..எழுந்திரு மது……” மனோரஞ்சன் அவளை எழுப்பிக் கொண்டிருந்தான்.
மதிவதனி கண்விழித்து பார்த்து கனவு கண்டிருக்கிறோம் என்று புரிந்து கொண்டாள். அவள் உடலெங்கும் வேர்த்திருந்தது.
“என்னாச்சு மது? ஏதாவது கனவு கன்டியா?”
“ஹ்ம்ம்.ஆமா”
“என்ன கனவு? உனக்கு எப்போதும் வருமே தண்ணில மூழ்கிற மாதிரி அந்த கனவா?”
“இல்ல, அது இல்ல. இது வேற ஏதோ கனவு. சரியா ஞாபகம் இல்லை” ஒரு பொய்யை சொல்லி சமாளித்தாள்.
“சரி விடு. எழுந்து கொஞ்சம் தண்ணி குடி, சரி ஆயிடும்.”
“இப்போ டைம் என்ன? எதுக்கு என்னை எழுப்புனீங்க?”
“வெளியே வா சொல்றேன்”அவள் கை பிடித்து அழைத்துச் சென்றான்.
வெளியே இருட்டிக் கிடந்தது.இந்நேரம் இவர் எங்க கூட்டிட்டு போறார்? என்று யோசித்துக்கொண்டே வந்தவள், திடீரென்று பிரகாசமாக ஒளிர்ந்த வெளிச்சத்தில் கண்களை மூடிக் கொண்டாள்.
கண்களை திறந்து பார்த்தவள் பிரமித்து நின்று விட்டாள்.
ஹால் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டிருந்தது.பலூன்கள் பறந்து கொண்டிருந்தன.சுற்றி சூரியநாராயணன்,ராஜேஸ்வரி,பார்வதி,தாத்தா,ரிதுநந்தன்,நிலா,தாமரை அனைவரும் நின்றுக் கொண்டிருந்தனர்.
“ஹாப்பி பர்த்டே”
அனைவரும் கத்த, மதிவதனி மகிழ்ச்சியில் திக்குமுக்காடி விட்டாள்.
அடுத்து நடந்த எல்லாமே அவளுக்கு கனவில் நடப்பது போலவே இருந்தது. தன் கைகளை கிள்ளி பார்த்துக் கொண்டாள்.
கேக்கை வெட்டிய பிறகு அனைவரும் அவளுக்கு பரிசளித்தனர். தாத்தாவும்,பாட்டியும் சேர்ந்து அவளுக்கு ஒரு அழகிய வெள்ளி குங்கும சிமிழை அளித்தனர்.சூரியநாரயணனும்,ராஜேஸ்வரியும் அவளுக்கு தங்க நெக்லஸ் பரிசளித்தனர்,ரிதுநந்தன் ஒரு வாட்ச்சும்,நிலாவும்,தாமரையும் அவர்கள் கைப்பட வரைந்த மதிவதனியின் உருவ படத்தையும் பரிசளித்தனர்.
கடைசியாக அவள், மனோரஞ்சன் என்ன பரிசளிக்க போகிறான் என்று ஆவலுடன் அவன் பக்கம் திரும்பினாள். அவனோ வெறுமனே கையை நீட்டி ‘ஹாப்பி பர்த்டே’ என்று மட்டும் கூறினான்.மதிவதனிக்கு பொசுக்கென்று இருந்தது.
’ச்சே! எத்தனை தடவை பட்டாலும் நமக்கு புத்தியே வராது!அவர் நித்யாவை விரும்பறது தெளிவா தெரியுதே,அப்புறம் எனக்கு எதுக்கு கிப்ட் வாங்கி தர போறார்?நான் ஒரு லூசு’
“சரி,சரி!நேராயிடுச்சு எல்லாரும் போய் படுங்க”தாத்தா சொல்லவும்,மனோரஞ்சன் தன் ரூமை நோக்கி நகர்ந்தான். மதிவதனிக்கு இருந்த கவலையில், அங்கிருந்து அனைவரும் ஒரு ரகசிய சிரிப்புடன் நகர்வதை கவனிக்கவில்லை……
புலரும்