“நீங்க கால் பண்ணுவீங்கன்னு நான் எதிர்பார்க்கல. சில நாள் நீங்க கால் பண்ணுவீங்க. சில நாள் நீங்க கால் பண்ண மாட்டீங்க. வேற யாராவது கால் பண்ணி என்னை டிஸ்டர்ப் பண்ண போறாங்கன்னு சைலன்ட் மோடில் போட்டேன் அவ்வளவுதான். சரி எதுக்கு கால் பண்ணிங்க இன்னும் நீங்க அதை என்கிட்ட சொல்லவே இல்ல.”
“உனக்கு நான் கால் பண்றதுக்கு ஏதாவது காரணம் வேணுமா என்ன? சும்மா உன்கிட்ட பேசனும் போல இருந்துச்சு. அதனால கால் பண்ணினேன்.”
“சரி பேசுங்க.” என்று இவள் சொல்ல.
“எனக்கு உன்னை பார்க்கணும் போல இருக்கு. நான் உன்னோட காலேஜுக்கு வரட்டுமா?”
“நாம ரெண்டு பேரும் பாத்துக்க வேண்டாம்னு முடிவு பண்ணி இருக்கோம். மறந்துட்டீங்களா?”
“அதெல்லாம் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. அது நான் எடுத்த முடிவு இல்ல நீ எடுத்த முடிவு.”
“சரி யாரோ எடுத்த முடிவு. ஆனா நீங்க அதுக்கு ஒத்துக்கொண்டு சரி சொன்னீங்க தானே?” என்று அவள் மடக்க
“உன்கிட்ட பேசி என்னால ஜெயிக்க முடியாது. நான் உன்னை பாக்கணும் அதுவும் நாளைக்கு பாக்கணும்”
“ஒரு நாள் காலேஜ் கட் அடிச்சிட்டு என்கூட வா.”
“நாளைக்கு எங்க காலேஜில் முக்கியமான கிளாஸ் இருக்கு. நாளைக்கு முடியாது.”
“எங்க காலேஜில கூட தான் தினமும் முக்கியமான கிளாஸ் நடக்குது. நான் கட் அடிக்கல?”
“அதுதான் எனக்கு தெரியுமே கட் அடிச்சு கட் அடிச்சு காலேஜ் போய் தான் இப்படி அரியர் வச்சுட்டு இருக்கீங்க.” என்று வெண்மதி விளையாட்டாக கூற அந்தப்பக்கம் ஒரு அமைதி நிலவியது.
“என்ன பேச்சையே காணோம்?” மீண்டும் அமைதி நிலவியது அவனது மன ஓட்டத்தை புரிந்து கொண்ட வெண்மதி
“விஜய் தப்பா எடுத்துக்காதீங்க. நான் சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன். இன்னொரு நாள் பார்க்கலாம்.”
“கண்டிப்பா பாக்கலாமா?”
“பார்க்கலாம்.” என்று அவள் கூற
“சரி மணி 12 ஆயிடுச்சு. தூக்கமா வருது. போன வைக்கட்டுமா?”
“சரி சரி குட் நைட்.” என்று கூறி போனை வைத்தான் விஜய்.
அடுத்த நாள் காலை கல்லூரிக்கு சென்ற வெண்மதி அன்றைய முக்கியமான வகுப்புகளை முடித்துவிட்டு மதிய உணவு இடைவேளையின் பொழுது வெண்மதி, கவிதா, சதீஷ், சந்துரு ஆகிய நால்வரும் மீண்டும் கூடி ஆண்டு விழாவை பற்றி ஆலோசித்தனர்.
“ சதீஷ் இன்னைக்கு நாம சீக்கிரமா காலேஜில் இருந்து கிளம்பி போய் டாக்டர் டேவிட்டை நம்ம பங்ஷனுக்கு கூப்பிட வேண்டியிருக்கு. நாம நாலு பேரும் அங்க போயிடுவோம். அசிஸ்டன்ட் பிரின்ஸ்பல் அங்கு வந்துடுவார்.” என்றான் சந்துரு.
“ஓகே சந்துரு.” என்று வெண்மதியும் கவிதாவும் கூற
“சாரி டா. இன்னைக்கு சாயந்திரம் எங்க அம்மாவை ஒரு பங்ஷனுக்கு கூப்பிட்டு கொண்டு போக வேண்டி இருக்கு. அதனால என்னால வர முடியாது.”
“சரிடா. நாங்க பாத்துக்குறோம்.” என்று சந்துரு கூறினான். சொன்னபடியே அன்றுமாலை அனைவரும் கல்லூரி நேரம் முடிவதற்கு சில மணி நேரம் முன்னரே அனுமதி வாங்கிக்கொண்டு டாக்டர் டேவிட்டை அழைப்பதற்கு அவர்கள் வீட்டுக்கு கிளம்பினர்.
அவர் வீட்டுக்கு அருகில் சென்ற சந்துரு அசிஸ்டன்ட் பிரின்ஸ்பல் ராம்குமாருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினான். “ஹலோ சார். நாங்க இங்க வந்துட்டோம். அவர் வீட்டுக்கு பக்கத்துல இருக்குற ஒரு பார்க் முன்னாடி வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கிறோம்.”
“ஐ ஆம் ஆன் தி வே. நீங்க அந்த பார்க்கல வெயிட் பண்ணுங்க. நான் டென் மினிட்ஸ்ல வந்துடறேன்.” என்று கூறிவிட்டு போனை வைத்தார். இவர்கள் மூவரும் அந்த பூங்காவினுள் நுழைந்தனர். அங்கு இருந்த ஒரு பெரிய நாற்காலியில் உட்கார்ந்தனர்.
அப்பொழுது கவிதா “மதி நான் ரெஸ்ட் ரூம் போயிட்டு வரேன்.” என்று எழுந்து சென்றாள். அப்பொழுது சந்துரு தன் மொபைலில் ஏதோ மெசேஜ் வர அதனை திறந்து பார்த்தான். பார்த்தவன் சிரித்தான்.
“என்ன சந்துரு நீ மட்டும் தனியா சிரிச்சிட்டு இருக்க பாக்குறவங்க உன்னை வேற மாதிரி நினைக்க போறாங்க.” என்று கிண்டல் அடித்தாள் வெண்மதி .
“செந்தில் கவுண்டமணி காமெடி வீடியோ எனக்கு பார்வேர்ட் பண்ணி இருக்கான் என்னோட ஃப்ரெண்ட். அதைப் பார்த்துதான் சிரிச்சேன் என்று அவளிடம் அதனை காண்பித்தான். “பெட்ரமாஸ் லைட்டேதான் வேணுமா என கவுண்டமணி கேட்க” அதனை அவன் அருகில் சென்று பார்த்தவள் அவனுடன் சேர்ந்து கொண்டு இருவரும் குலுங்கி குலுங்கி சிரித்தனர்.
அப்போது அங்கு ஒரு நண்பனை பார்க்க வந்திருந்த விஜயின் கண்ணில் இவர்கள் தென்பட்டார்கள்.
கவிதா வந்துவிட்டாளா என்று தேடிய வெண்மதி விஜய்யை பார்த்தாள். அவனைப் பார்த்தவள் எழுந்து அவனிடம் சென்றாள். அவன் அவளை முறைத்தான்.
“நான் உன்னை வெளியே கூப்பிட்டபோது நீ என் கூட வரல. இப்போ இங்கே இவன் கூட என்ன பண்ணிக்கிட்டு இருக்க? இப்ப மட்டும் உனக்கு காலேஜ் கட் பண்ணா பரவாயில்லையா?”
“விஜய் கொஞ்சம் நிதானமா பேசுங்க. நாங்க இங்க காலேஜ் பங்ஷனுக்கு டாக்டர் டேவிட்டை இன்வைட் பண்ண வந்திருக்கிறோம். கவிதா என்கூட வந்திருக்கிறா.” என்று கூறிக்கொண்டிருக்கும் போதே கவிதா அங்கு வந்தாள். இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போதே கவிதாவும் சந்துருவும் அவர்களிடம் வந்தார்கள்.
“யார் இவர்?” என்று விசாரித்த சந்துருவிடம்
“நானும் கவிதாவும் ப்ராஜெக்ட் பண்ண கம்பெனியில இவரை மீட் பண்ணினேன். இவர் பெயர் விஜய். இவரும் பைனல் இயர் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கிறார்.”
“ஓ அப்படியா. ஐ அம் சந்துரு. நாங்க எல்லோரும் ஒரு காலேஜ்ல படிக்கிறோம்.” என்று தன்னைத்தானே அறிமுகப்படுத்திக் கொண்டான்.
“ஹாய்” என்று சம்பிரதாயமாக கூறினான் விஜய்.
அதேநேரம் அசிஸ்டன்ட் பிரின்ஸ்பல் அங்கு வந்துவிட சந்துரு
“சார் வந்துட்டாரு. போகலாமா” என்று கேட்டான்.
வெண்மதி விஜயை பார்த்தாள். அவன் எதுவும் பதில் கூறாமல் அமைதியாக இருக்கவும் “வீட்டுக்கு போயிட்டு நான் உங்களுக்கு கால் பண்றேன்.” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டாள். நால்வரும் சேர்ந்து டாக்டர் டேவிட்டை அழைத்துவிட்டு அவரவர் வீடு திரும்பினர்.
வீட்டில் பெரியம்மா எங்கோ தயாராகி கொண்டிருப்பது தெரிந்தது.
“வெண்மதி சீக்கிரம் கிளம்பு. நாம ஒரு பங்ஷனுக்கு போகணும். என்ன பங்க்ஷன் பெரியம்மா? சுமங்கலி பூஜை. சீக்கிரம் போய் பாவாடை தாவணி எடுத்து போட்டுக்கிட்டு வா என் கூட. உங்க அம்மா ரெடியாயிட்டீங்களா போய் பாரு.” என்று அவளை விரட்டினார். பெற்றோர்களின் அறைக்குள் நுழைந்த வெண்மதி தாய் தயாராகி கொண்டிருப்பதைப் பார்த்தாள்.
“ரெடியாயிட்டீங்களா? பெரியம்மா உங்களை கேட்டுக்கிட்டு இருக்காங்க.”
“சீக்கிரம் நீயும் கிளம்பு. சுமங்கலி பூஜைக்கு வயசு பொண்ணுங்க போறது ரொம்ப நல்லது. சீக்கிரம் கெளம்பு .” என்று அவசரப்படுத்தினார் லட்சுமி.
“சரி மா. நானும் கிளம்பி வரேன்.” என்று கூறிவிட்டு முகத்தை கழுவி பொட்டு வைத்து பாவாடை தாவணி எடுத்து கட்டிக்கொண்டு தயாராகி சுமங்கலி பூஜைக்கு சென்றாள்.
அது ஒரு பெரிய அழகான வீடு. வீட்டு வாசலை அடைந்ததும் அன்று வீட்டில் பார்த்த அந்தப் பெண்மணி வாசலுக்கே வந்து இவர்களை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார். அங்கு வரிசையாக 15 குத்துவிளக்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அந்த பெரிய வராண்டாவின் நடுவில் அழகாக அலங்கரிக்கப்பட்ட அம்மன் சிலை ஒன்று இருந்தது. அதன் பக்கத்தில் புரோகிதர் இருந்தார். இவர்கள் மூவரையும் மூன்று குத்துவிளக்கு பக்கத்தில் அமரச் செய்தார். பிறகு குங்குமத்தை எடுத்து குத்துவிளக்கு பூஜை செய்ய ஆரம்பித்தனர். தீபாராதனை செய்த பிறகு எல்லோருக்கும் புடவை வழங்கினார் அந்தப் பெண்மணி. அந்தப் பெண்மணியுடன் ஒரு அழகான பெண் இருந்தாள். அந்தப் பெண் அந்த பெண்மணியின் ஜாடையில் இருந்தாள். அந்த பெண்மணியின் மகளாக இருக்கக்கூடும் என்று நினைத்தாள் வெண்மதி. அந்த பெண்மணி இவளுக்கும் ஒரு புடவை ஒரு தாம்பாளத்தில் வைத்து கொடுத்தார்.
“எங்க அம்மாவுக்கு கொடுத்ததே போதும்.” என்று இவள் கூற பெரியம்மா “வாங்கிக்கோ” என்று அதிகாரமாக கூறவும் வேறுவழியின்றி வாங்கிக்கொண்டாள்.
வாங்கிக்கொண்டு வீடு திரும்பினர். வந்தவள் உடையை மாற்றிக்கொண்டு மொபைலை எடுத்து விஜய் எண்ணிற்கு தொடர்பு கொண்டாள்.
அந்த பக்கம் அவன் “ஹலோ” என இவளும் “ஹலோ விஜய்” என்றாள் பதிலுக்கு
“என்ன என் கிட்ட பேசுறதுக்கு உனக்கு நேரம் கடிச்சிருச்சா?” என்று மீண்டும் குத்தலாக ஆரம்பித்தான் விஜய்.
“என்ன விஜய் இப்படி புரிஞ்சுக்காம பேசுறீங்க? எங்க காலேஜ் ஃபங்ஷனுக்காக நாங்க அலைந்து கொண்டிருக்கிறோம். அதனாலதான் உங்க கிட்ட பேச முடியல. இப்ப கூட என்னோட போன்ல பேட்டரி கம்மியா இருக்கு. எந்த நேரத்துலயும் ஆஃப் ஆகிவிடும்.” என்று கூறிக் கொண்டிருக்கும் போதே அவளுடைய செல்போன் அணைந்தது. எடுத்து சார்ஜ் போட்டு பத்து நிமிடம் கழித்து பேசலாம் என்று நினைத்தவள் அசதியில் உறங்கி விட்டாள்.
பிறகு அடுத்து வந்த இரண்டு வாரமும் கல்லூரி விழாவிற்காக நால்வரும் அலைந்து கொண்டிருந்தனர். வெண்மதி வீடு திரும்ப தினமும் நேரமானது. அதனால் அவளால் விஜய்யிடம் பேசமுடியவில்லை. விஜய்யும் இவளுக்கு போன் செய்யவில்லை. அன்று ஆண்டு விழா, வெண்மதி அழகிய பட்டு புடவை ஒன்றை எடுத்து கட்டிக்கொண்டு விழாவிற்கு சென்றாள். கவிதா, வெண்மதி இருவரும் சொல்லி வைத்துக்கொண்டு பச்சை நிற பட்டுப் புடவையில் வந்திருந்தார்கள். இருவருமே தேவதைகள் போல அழகாக இருந்தனர்.
பார்த்தவர்கள் “இன்னைக்கு ரெண்டு பேருமே ரொம்ப அழகா வந்திருக்கீங்க.” என்று வெளிப்படையாகவே பாராட்டினர். இருவரும் விதவிதமாக செல்பி எடுத்தனர். ஆண்டு விழா சிறப்பாக நடந்தது. மாணவ-மாணவியர்கள் மேடையில் தங்கள் திறமைகளை காட்டினர். இவர்கள் வகுப்பிலிருந்து ஒரு கிராமிய குழு நடனம் ஆடினர். இவர்களுடைய நடனத்தை பார்த்த அனைவரும் கரகோஷம் எழுப்பினர். “ஒன்ஸ்மோர்” என்று கூட சிலர் கேட்டனர்.
அன்றைய பொழுது உற்சாகமாக இருந்தது. விழா முடிந்ததும் களைத்து வீடு திரும்பியபின் வெண்மதி சோர்வின் காரணமாக சீக்கிரமே உறங்கி விட்டாள். அடுத்து வந்த நாட்களில் விஜய் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேச முயற்சித்தாள். ஆனால் அவன் போனை எடுக்கவில்லை. ஒருவேளை இவனுக்கு பொறுப்பு வந்து படிக்க ஆரம்பித்து விட்டானோ? என்று நினைத்துக்கொண்டாள்.
அப்போதுதான் அந்த செய்தி அவள் காதை எட்டியது.