மாயாவி 22 ::
உந்தன் இறுக்கம்!
உந்தன் வருத்தம்!
உந்தன் வலிகள்!
உந்தன் தனிமை!
என்று எல்லாவற்றையும்…
துடைத்தெறிந்து உன்னை…
தூக்கி கொண்டு நமக்கென்று
வேறு ஒரு தேசம் செல்ல…
எண்ண வைக்கிறாயே!
என்னடி மாயாவி நீ !
ஒரு வாரமாக மூளையை தட்டி யோசித்தும் தட்டாமல் யோசித்தும் என்று அதனுடன் அத்தனை போரிட்டும் அவளுக்கு தேவையான பதில் அதனிடமிருந்து வராமல் போக எந்நேரமும் ஏதோ யோசனையோடே சுத்திக் கொண்டிருந்தாள்.
அன்று அவன் உணவோடு வந்து எழுப்பும் போது தான் வேலை விஷயத்தில் அவனை நம்பாமல் தனியே சரஸ்வதியை வைத்து செய்து கொண்டிருந்ததற்கு அவனிடம் மன்னிப்பு கேட்ட வரை ஞாபகம் இருந்தது.
“சாரி எழில்!” என்றவளை அவன் கேள்வியாக பார்க்க,
“யார் நம்பலைன்னாலும் நான் உங்களை நம்பி இருக்கணும்ல… உங்களை நம்பாம நான் தனியா ஒரு பிளான் போட்டுட்டு இருக்கேன்…” என்று அவள் சொன்னதும் அவன் மனம் கனத்தது.
தான் செய்ததில் பிழை இருக்குமோ என்று தான் நினைத்திருந்தான் ஆனால் அவளுக்கு இன்னமும் தன் மேல் நம்பிக்கை இல்லை என்று அவள் வார்த்தை மூலமே அறிந்தவனுக்கு வலித்தது.
தந்தைக்கும் தான் நம்பிக்கை கொடுக்கவில்லை தாரத்திற்கும் நம்பிக்கையை கொடுக்கவில்லை என்று உணர்ந்தவன் தன்னையே நொந்துக் கொண்டு உணவளிக்க அவளை எழுப்பினான்.
எழுந்து சாப்பிடும் அளவிற்கு அவள் உடல் ஒத்துழைக்க மறுக்க அவளை கைத்தாங்கலாக எழுப்பி தன் தோளில் சாய்த்தவாறு உணவை ஊட்ட ஆரம்பித்தான்.
அவன் ஊட்ட ஆரம்பிக்கும் போது தான் ஏதோ சொன்னதும் அதற்கு அவன் பதில் ஏதும் சொல்லாமல் இருந்ததும் நினைவு வருகிறது, தங்களின் உறவை பற்றி ஏதோ பேசியிருப்பது மட்டுமே புரிந்தது. ஆனால் என்ன பேசினோம் என்று நினைவில்லை.
தன் உடல்நிலை சரியாகும் வரை உடன் இருந்து பார்த்துக் கொண்டிருந்த அமுதன் அதன்பின் முன் போல கவி இல்லம் சென்று விட்டதை ஏமாற்றமாக உணர்ந்தாள்.
ஒரு வாரம் சென்ற நிலையில், கவி மீட்டிங் ரூமிற்கு எல்லோரையும் அழைத்திருக்க, ஏன் என்று காரணம் புரியாமல் நின்றிருந்தனர். திடீரென ஆர்ப்பாட்டமாக உள்ளே வந்தவன்,
“உங்க எல்லோருக்கும் இரண்டு குட் நியூஸ் சொல்ல போறேன்… அதுக்கு தான் இந்த மீட்டிங்… என்னன்னு உங்களால எதுவும் யோசிக்க முடியுதா?” என்று அவன் கேட்டதும்,
“சார் உங்களுக்கு கல்யாணமா? பேச்சுலர் பார்ட்டியா சார்…” என்று கூட்டத்தில் ஒருவன் கேட்க மற்றவர்கள் ஆர்வமாக அவனை பார்த்ததும் கவி சிரித்தான்.
“உனக்கு பார்ட்டி கொடுக்க எல்லாம் நான் கல்யாணம் பண்ணிக்க முடியாதுடா…” என்றவன்,
“இது நம்ம எல்லோரும் சம்மந்தப்பட்ட விஷயம் அதுக்கு தான் உங்க எல்லோரையும் கூப்பிட்டு இருக்கேன்…” என்றவாறே குழலி பக்கம் திரும்பினான்.
குழலி, அமுதன், அவர்கள் யோசனையிலேயே மூழ்கி இருக்க சரஸ்வதியோ தனக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பது போல அமைதியாக இருந்தாள்.
“காரு காரு!” என்று அவன் இரு முறை அழைத்ததும் அவள் தெளிய அமுதனும் சுற்றம் உணர்ந்தான்.
“ஹான்! சொல்லு கவி!”
“நான் குட் நியூஸ் சொல்ல வந்திருக்கேன்…. நீ என்ன யோசிச்சுட்டு இருக்க?” என்று கேட்டவனின் பார்வை அதே கேள்வியை தாங்கி அமுதனை பார்த்தது.
“ஒண்ணுமில்லை நீ என்ன விஷயம்னு சொல்லு…” என்றவளின் முகம் சிறு தெளிவை காட்ட, கவியும் தொடர்ந்தான்.
“நம்ம முதல் முதலா இறங்கின கவர்ன்மெண்ட் ப்ராஜெக்ட் டெண்டர் நமக்கே கிடைச்சிருக்கு… இன்னும் இரண்டு வாரத்தில அதற்கான வேலையில இறங்க போறோம்…” என்று அவன் சொன்னதும் அங்கு ஒரே ஆர்ப்பாட்டம்.
“இருங்க இருங்க…. இதுக்கு எல்லாத்துக்கும் முக்கிய காரணம் இவர் தான்… நம்மோட முதல் முயற்சியே வெற்றியடைய காரணம் இவர் கொடுத்த பிளானும் டெண்டரும் தான்… அதனால மொத்த கிரெடிட்டும் இவருக்கு தான்…” என்று அவன் சொன்னதும், அனைவரும் அமுதனை சூழ்ந்தனர்.
அவனை எல்லோரும் பாராட்டி வாழ்த்து சொல்ல, குழலிக்கு அவனின் வெற்றி பெருமையாக இருந்தாலும் தான் நம்பாமல் போனது வருத்தமாக இருக்க, அமைதியாக நின்றாள்.
“ப்ரோ ! நான் சொன்ன மாதிரி நீங்க தீயா வேலை செஞ்சு இந்த கம்பெனியை காப்பாத்தி இருக்கீங்க… வாழ்த்துக்கள்…” என்று சரஸ்வதியும் பாராட்ட, கவி அவளை முறைத்தான்.
அவர்களின் ஆர்ப்பாட்டம் சற்று ஓய்ந்ததும், “இரண்டாவது குட் நியூஸ் என்னன்னு சொல்லுங்க…” என்று ஒருவன் கேட்க,
“பாஸ்! நீங்க பேச்சுலர் பார்ட்டி தரணும்னு இல்ல ஆனால் எங்களுக்கு இதுக்கு கண்டிப்பா பார்ட்டி வேணும்…” என்று இன்னொருவன் கேட்க,
“பார்ட்டி தானே வேணும் கொடுத்துட்டா போச்சு… இங்க வேணுமா இல்ல வெளிய லாங் போகலாமா….” என்று அவன் கேட்டதும் அங்கே சந்தோஷத்தின் கொண்டாட்டம்…
“நம்ம வருஷா வருஷம் எங்காவது அவுட்டிங் ஒரு நாள் போவோம்ல… இந்த வெற்றியை கொண்டாடற போல இந்த முறை ஒரு மூணு நாள் போக போறோம்… அது தான் இரண்டாவது குட் நியூஸ்…”
“ஏன்னா நம்ம எடுத்திருக்கற ப்ராஜெக்ட் முடிய நேரம் ஆகும் அப்ப நமக்கு வெளிய போக நேரம் இருக்காது… அதான் இப்பவே போயிட்டு வந்துட்டு வேலையில இறங்கலாம்…”
“எல்லாம் நல்லபடியா முடிஞ்சதும் இன்னொரு ட்ரிப் பிளான் பண்ணுவோம்… இப்ப எங்க போறோம் என்னன்னு சீக்கிரம் சொல்றேன்….” என்று அவன் சொல்லி முடித்ததும் சிறிது நேரம் எல்லோரும் அதை பற்றி பேசி விட்டு அவர்கள் இடத்திற்கு செல்ல, பேசி முடித்து திரும்பிய கவியின் அருகில் அமுதன் மட்டுமே நின்றிருந்தான்.
“காரு எங்க அமுதன்?” என்று கவி கேட்டதும், பார்வையாலே அவள் கேபினை சுட்டி காட்டியவன்,
“நான் இந்த ட்ரிப்க்கு வரல…” என்றான்.
அவன் பதிலில் அதிர்ந்தவன், “ஏன்?” என்று கேட்க,
“இல்லை நான் வரல…” என்றவனை முறைத்தவன்,
“அது எப்படி புருஷனும் பொண்டாட்டியும் இந்த விஷயத்துல ஒரே மாதிரி இருக்கீங்க?” என்று கவி சொல்ல குழப்பமாக பார்த்தான்.
“இந்த கம்பெனி ஆரம்பிச்சு நாலு வருஷம் ஆக போகுது ஒவ்வொரு வருஷமும் எம்ப்லாய்ஸ் எல்லோரோடவும் சேர்ந்து எங்காவது வெளிய போவோம்… லீவு நாளில் என்னைக்காவது ஒரு நாள் முழுக்க இங்க பக்கத்திலே எங்காவது போவோம்…”
“ஆனா ஒரு முறை கூட இந்த காரு வரமாட்டா… எவ்வளவோ கட்டாயப்படுத்தியும் கூட அவ வந்ததில்லை… இப்ப நீங்களும் அப்படியே சொல்றீங்க… நானே இந்த முறை எப்படியாவது உங்களை வைச்சு தான் அவளை கூட்டிட்டு போகலாம்னு இருந்தேன்… நீங்க என்னடான்னா இப்படி சொல்றீங்க?” என்று சோகம் போல கவி கூற, அமுதனோ யோசனையானான். அவன் யோசனையை தனக்கு சாதகமாக்கியவன்,
“ப்ளீஸ் அமுதன்… இந்த வெற்றி உங்களால… நீங்க இல்லாம போக முடியாது… அதே சமயம் நீங்க தான் எப்படியாவது காரு கிட்டயேயும் பேசி அவளையும் வர வைக்கணும்… உங்களை நம்பி தான் இருக்கேன்… ப்ளீஸ்….” என்று அவன் கெஞ்சலாக கேட்டான்.
“நான் எப்படி அவகிட்ட பேசி சம்மதிக்க வைக்க முடியும்… நீங்க பேசுங்க…” என்று அமுதன் தயங்கினான். அவனிடம் என்னென்னவோ பேசி குழலி அறைக்குள் அனுப்பி வைத்திருந்தான் கவி.
அவன் உள்ளே வந்தது கூட அறியாமல் யோசனையில் இருந்தவளை “குழல்!” என்று அவன் அழைத்த பிறகே அவனை கவனித்தாள்.
“ஹான் சொல்லுங்க…”
“ஒன்னுமில்லை! கவி ஏதோ ட்ரிப் ஏற்பாடு பண்றான்… நான் வரலைன்னு சொன்னா கேட்க மாட்டேங்குறான்… என்னை ரொம்ப கட்டாயப்படுத்தறான்… நீ எனக்காக அவன்கிட்ட பேசேன்… ப்ளீஸ்…” என்று அமுதன் சொன்னதும்,
“ஏன் ? ஏன் ? நீங்க போகல? நீங்க போயிட்டு வாங்க… இது உங்களுக்காக தான்… நீங்க கண்டிப்பா போகணும்…” என்று வேகமாக சொன்னாள்.
“எனக்கு போக விருப்பம் தான் குழல்… ஆனால் இங்க நான் புதுசுல அவ்வளவா யார் கூடவும் பழக்கம் இல்ல… கவியும் மத்த பசங்க கூட இருப்பான்… நீயும் வரமாட்டன்னு கவி சொன்னான்… நான் மட்டும் அங்க தனியா இருக்கற மாதிரி இருக்கும்… அது தான்… நீ பேசு…” என்றவன் அவளை கூர்ந்து கவனித்தான்.
“இல்ல… நீங்க கண்டிப்பா போகணும்… நான் கவி கிட்ட சொல்லி அவனை உங்ககூட இருக்க சொல்றேன்…” என்றவளை இடைமறித்து,
“அதெல்லாம் சரி வராது… என்னால அவங்க சந்தோசம் தடையாக கூடாது… நான் சட்டுன்னு எல்லார்கூடவும் பழக மாட்டேன்… அதான்… கூட யாருமில்லாம நீயும் இல்லாம நான் எப்படி தனியா போக முடியும்… அதுக்கு நான் இங்கயே இருந்துக்கிறேன்…” என்றவன்,
“இல்ல நீ வர்றன்னா சொல்லு நானும் வரேன்…” என்று சோகம் போல கூறியவன் அவள் யோசிக்க நேரம் கொடுத்தான்.
“சரி விடு! விருப்பம் இல்லாம எனக்காக நீ வரணும்னு அவசியம் இல்லை… நான் வரல அதை மட்டும் கவிகிட்ட சொல்லிடு…” என்றவன் வெளியேற போக,
“இல்ல இல்ல… நம்ம போகலாம்… நான் வரேன்…” என்றாள் வேகமாக…
“உண்மையாவா… தேங்க்ஸ் தேங்க்ஸ் குழல்…” என்றவன் சிரிப்போடு வெளியேறினான்.
அடுத்த வாரத்தில் கூர்க் செல்லலாம் என்று முடிவாகி இருக்க, சரஸ்வதி வரவில்லை என்று அறிந்ததும் குழலியும் அமுதனும் அவளை சம்மதிக்க வைக்க முயற்சி எடுத்தனர்.
அவளோ பிடிவாதமாக மறுக்க, அதன்பின்னே கவி அவளை திட்டியதும் இருவரின் விலகலும் குழலிக்கு தெரிய வர கவியை அழைத்தாள் குழலி.
“டேய் ஏன்டா? அவளை திட்டின… என்னோட விஷயத்துல எதுக்கு இவளை ஏன் திட்ற? கொஞ்சம் கூட பொறுமையே இல்ல… பாரு உன்னால அவ ட்ரிப்க்கு வரலைன்னு சொல்றா…” என்று அவனை கடிய, கவியோ சரஸ்வதியை முறைத்தான்.
“அப்பாடா ! நானும் இங்க ஆபீஸ்ல காவலுக்கு யாரையும் விட்டுட்டு போக முடியலைன்னு நினைச்சேன்… அப்ப இங்க இருந்து பார்த்துக்கட்டும்…” என்றவனை அமுதனோடு சேர்ந்து எல்லோரும் முறைக்க,
“அப்ப நானும் கூட சேர்ந்து பார்த்துக்கறேன்… நீங்க போய்ட்டு வாங்க…” என்றாள் குழலி.
“நீ எப்ப வர்றேன்னு சொன்ன?” என்று கவி முறைத்ததும்,
“ஓஓ ! அப்ப நானும் வரலைன்னா பரவாயில்லையா?” என்று காரமாக கேட்டாள்.
“அவ வர்றதுக்கு சம்மதம் சொல்லிட்டா…” என்று கவியின் காதோரம் அமுதன் கிசுகிசுக்க,
“என்ன்னது?” என்று அதிர்ச்சியில் கத்தியவனை பார்த்து,
“இங்க பாரு நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ தெரியாது சரஸ்வதி இப்ப வரணும் இல்லைன்னா நானும் வரமாட்டேன்…” என்று இருவரையும் முறைத்தவாறு வெளியேறினாள்.
“எனக்கும் தெரியாது நீ சொல்லி தான் நானும் குழல் கிட்ட பேசி சம்மதிக்க வைச்சேன்… இப்ப அவளும் வரலைன்னா நானும் வரல…” என்று கவியிடம் முணுமுணுத்துவிட்டு அமுதனும் சென்று விட இவன் சரஸ்வதியை முறைத்து கொண்டு நின்றான்.
“இப்ப எதுக்கு ஓவரா பண்ணிட்டு இருக்க? உன் கிட்ட எல்லோரும் வந்து கெஞ்சணுமா? முன்னாடியே சொல்லி இருக்கேன் அவங்க இரண்டு பேருக்காகவும் தான் உன்னை வேலைக்கு எடுத்தேன்னு… இத்தனை வருஷத்துல இப்ப தான் காரு ட்ரிப்க்கு வர்றேன்னு சொல்லி இருக்கா… இந்த ட்ரிப்பே அவங்களுக்காக தான்…”
“இப்ப போய் நீ இப்படி பண்ற… அவங்க இரண்டு பேருக்காகவாது வா ப்ளீஸ்…” என்று கையெடுத்து கும்மிட்டவனை பார்த்து திகைத்தவள் வேகமாக கண்ணீரோடு அவன் கையை கீழிறக்கி விட்டு தான் வருவதாக சம்மதம் சொல்லி வெளியேறினாள்.
இதோ அவள் சம்மதம் சொன்னதும் அடுத்த வாரத்தில் எல்லோரும் பேருந்தில் கூர்க் கிளம்பினர்… இந்த பயணம் அவர்களின் வாழ்க்கை பயணத்தில் ஏதேனும் மாறுதல் தருமா? பார்க்கலாம்….