யார் மீதோ மோத யாரென்று நிமிர்ந்து பார்த்த தாமரை, அங்கே கண்களில் கோபம் கொப்பளிக்க நின்றுக் கொண்டிருந்த தன் தந்தையை பார்த்து பயத்தில் விழி பிதுங்கி நின்றாள்.
அவள் பின்னாலே ஓடி வந்த ரிதுநந்தன், தன் மாமாவை அங்கே எதிர்பார்க்காததால், அதிர்ந்து போய் நின்றான்.
வேகமாக அவன் அருகில் வந்தவர், அவன் சட்டையை பிடித்து அவன் கன்னத்தை பதம் பார்த்தார்.அதோடு நில்லாமல் அவர் மேலும் அடிக்க ஆரம்பிக்கவே, தாமரை அவரை தடுக்க ஓடி வந்தாள், ஆனால் அடி வாங்குபவனோ, ஒரு சிறு சலனம் கூட இல்லாமல் அவர் அடிகளை வாங்கிக் கொண்டிருந்தான்.
அதற்குள் சத்தம் கேட்டு வீட்டிலிருந்த மற்றவர்களும் அங்கு வந்து சேர, ஒருவருக்குமே சற்று நேரம் என்ன நடக்கிறது என்பது பிடிபடவில்லை. எல்லோரும் தாமரையின் தந்தை லக்ஷ்மணனை அங்கே பார்த்த அதிர்ச்சியில் இருந்தனர்.
முதலில் உணர்வு பெற்றது தாத்தா நாராயணன் தான். ஓடி வந்து லக்ஷ்மணனை தள்ளி விட்டவர்,”எடுறா கையை! என் பேரன் மேல கை வைக்க நீ யாருடா?” என்று கத்தினார்.
“மாமா, நீங்க இதுல தலையிடாதீங்க. அவன் பண்ணின காரியத்துக்கு அவனை கொல்லாம விட்டதே பெருசு”
“அப்படி என்னடா பண்ணினான் அவன்?”
“பின்ன என் பொண்ணு பின்னாடி சுத்துனா, என்னை பார்த்துட்டு சும்மா இருக்க சொல்றீங்களா?”
“டேய்! தாமரை அவனுக்கு அத்தை பொண்ணுடா. அவனுக்கு எல்லா உரிமையும் இருக்கு”
“என்னது அத்தை பொண்ணா?! இந்த மாதிரி ஏதாவது உறவு முறை சொல்லிட்டு, யாராவது என் வீட்டு பக்கம் வந்தீங்க வெட்டி பொலி போட்டுடுவேன். பச்ச துரோகியோட புள்ளைக்கு என் பொண்ணு கேக்குதாக்கும்”
இதுவரை எதுவும் பேசாமல் மௌனமாக நின்றுக் கொண்டிருந்த சூரியநாராயணன் முதல் முறையாக வாயை திறந்தார்,”லக்ஷ்மணா, நீ யாரு கிட்ட பேசிட்டு இருக்கேனு தெரிஞ்சு தான் பேசுறியா? அவரை உன் மாமாவா மதிக்காட்டி கூட பரவாயில்லை, அவரு வயசுக்காவது மரியாதையை தரலாமில்லே?”
லக்ஷ்மணன் இதற்கு பதில் ஏதும் கூறாமல், தாமரையிடம் திரும்பி, “ஏய்! எல்லாம் உன்னால வந்தது. உன்னைய நம்பி சென்னைக்கு அனுப்பி வச்சேன் பாரு. என்னை சொல்லணும்! இன்னைக்கு, யார் முகத்தில முழிக்க கூடாதுன்னு இருந்தேனோ, அவங்க பேச்செல்லாம் கேட்க வேண்டி இருக்கு” என அவளுக்கு இரண்டு அடிகளை வழங்கி, தடுக்க வந்து ரிதுநந்தனை பிடித்து தள்ளிவிட்டு, தாமரையை தர தரவென்று இழுத்துக் கொண்டுச் சென்று விட்டார்,
அவர் சென்றதும் புயல் அடித்து ஓய்ந்தது போல இருந்தது வீடு. ஆளுக்கு ஒரு மூலையில் அமர்ந்துக் கொண்டு நடந்ததை நினைத்து வருந்திக் கொண்டிருக்க, இரவு வெகு நேரம் கழித்து தான் மனோரஞ்சன் வீடு திரும்பினான்.
தோட்டத்து உஞ்சலில் தன் தந்தை அமர்ந்திருப்பதை பார்த்து அதிசயப்பட்டவன், அவர் அருகில் சென்று அமர்ந்தான்,”என்ன பிரச்சனை பா?”
“பிரச்சனையா? உனக்கா? என்ன பிரச்சனை மனோ?”
“பேச்சை மாத்தாதீங்க. உங்களுக்கு ஏதாவது மனசு சரியில்லேனா தான், உஞ்சல்ல வந்து உட்காருவீங்க. எனக்கு தெரியாதா பா, உங்களை பத்தி?”
“என்னை விடு மனோ! கொஞ்ச நாளாவே நீ ரொம்ப டயர்ட்டா தெரியுறியே?”
மனோரஞ்சன் எதுவும் கூறாமல் சில நிமிடம் மௌனம் காத்தான். அவனாக கூறட்டும் என்று அவரும் காத்துக் கொண்டிருந்தார்,
“எல்லாம் நம்ம நித்யா விஷயம் தான்பா.என்ன செய்யுறதுனே தெரியாம ரொம்ப குழம்பி போய் இருக்கேன்.அப்படியே எங்கேயாவது ஓடி போய்டலாம்னு இருக்கு”
“மனோ! என்ன பேசுற நீ?எதுக்கு இப்போ இப்படி கோழை மாதிரி பேசுற? உன்னை நான் அப்படி தான் வளர்த்திருக்கேனா?”
“என்னால முடியல பா. ரொம்ப கஷ்டமா இருக்கு” சொல்லும்போதே அவன் கண்கள் கலங்கியது.
“மனோ! நான் சொல்றேன்னு கோபப்படாத! வினோ….”
“அப்பா! அதை பத்தி எதுவும் பேச வேணாம். வினோதன் விஷயத்துல நான் எடுத்த முடிவுல எந்த மாற்றமும் இல்லை.”
“சரி விடு. இதனால தான் தினமும் வீட்டுக்கு லேட்டா வரியா?”
“இல்லை பா. அது வேற ஒரு விஷயம். ஒரு முக்கியமான வேலையா அலைஞ்சுட்டு இருக்கேன். அது மட்டும் சக்சஸ் ஆச்சுனா நாம எல்லோருமே ரொம்ப சந்தோஷப்படுவோம்”
“என்ன மனோ? ஏதோ பொடி வச்சு பேசுற? என்ன விஷயம்?”
“சொல்றேன், சீக்கிரமே சொல்றேன் பா.சரி அதை விடுங்க, அப்படியே பேச்சை மாத்திட்டீங்க பாத்தீங்களா? உங்களுக்கு என்ன பிரச்சனைனு சொல்லுங்க”
“இன்னைக்கு……மாமா நம்ம வீட்டுக்கு வந்தாரு பா”
“யாரு? நித்யாவோட அப்பாவா? அதுக்கென்ன பா?”
“விஸ்வநாதன் இல்ல, நான் சொல்றது லக்ஷ்மணன், தாமரையோட அப்பா”
மனோரஞ்சன் சரேலென்று திரும்பி தந்தையை நம்ப முடியாமல் பார்த்தான்.
“என்னப்பா சொல்றீங்க?”
“ஆமாடா! வந்து ஒரே சண்டை. ரித்துவை புடிச்சி அடி அடினு அடிச்சிட்டான். அப்பாவை வேற மரியாதை இல்லாம பேசிட்டான்”
“என்னது ரித்துவை அடிச்சாரா? தாத்தாவை மரியாதை இல்லாம பேசுற வரைக்கும் நீங்க ஏன்பா பார்த்துட்டு இருந்தீங்க?”
“வேற என்ன பண்ண சொல்ற மனோ?”
“இல்லபா . இதை இப்படியே விடக் கூடாது, இதுக்கு நாளைக்கே ஒரு முடிவு கட்ட போறேன்”
சிறிது நேரம் யோசித்தவன் பின்பு தன் தந்தையை பார்த்து,”அப்பா! தயவுசெஞ்சு எனக்காக, அன்னைக்கு போட்டி நடக்குறப்போ, என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க பா? ப்ளீஸ்!”
“அதை சொல்லி என்ன ஆக போகுது மனோ? நடந்தது நடந்தது தானே?!”
“அப்பா ப்ளீஸ்! நான் ஒரு வேலையா அலைஞ்சுட்டு இருக்கேன்னு சொன்னேனே, அது இது தான். நீங்க சொல்ற பதில் எனக்கு கொஞ்சம் உதவியா இருக்கும். ப்ளீஸ் சொல்லுங்க”
அவர் சிறிது நேரம் வெறித்து பார்த்துவிட்டு சொன்னார்,”’இந்தியா ஸ்கில்ஸ்’ ஒரு ஸ்டேட் லெவல் டிசைனிங் காம்படிஷன். இந்தியா அளவுல எல்லா ஸ்டேட்லேர்ந்தும் கலந்துக்குவாங்க. அதுல கலந்துக்கிட்டா நல்ல பேர் கிடைக்கும். எனக்கும் லக்ஷ்மணனுக்கும் இந்த போட்டியில கலந்துக்கனும்கிறது வாழ்நாள் ஆசை”
“ரொம்ப கஷ்டப்பட்டு டிசைன் பண்ணி முடிச்சோம். நாம டிசைன் பண்ணின டிரெஸ்ஸை மாடல்ஸ் போட்டுட்டு பிரசன்ட் பண்ணுவாங்க. அதை வச்சு யாரோடது நல்லா இருக்குனு ஜட்ஜஸ் முடிவுக்கு வருவாங்க”
“என்னை விட லக்ஷ்மணன் நல்லாவே பண்ணிருந்தான். எனக்கு அப்பவே தோணிச்சு, அவனுக்கு தான் பரிசு கிடைக்கும்னு. அதுக்காக ரொம்ப சந்தோஷப்பட்டேன். போட்டி நடக்குற அன்னைக்கு லக்ஷ்மணன் தான் போட்டி நடுக்குற இடத்துக்கு முதல்ல போனான். நான் கொஞ்சம் லேட்டா தான் போனேன். அன்னைக்கு நல்ல ட்ராபிக்ல வேற மாட்டிக்கிட்டேன். நான் போய் சேரும்போது பிரசன்டேஷேன் முடிஞ்சு பரிசு யாருக்குன்னு சொல்லிட்டாங்க”
“நடேசன்னு ஒருத்தனுக்கு முதல் பரிசுனு சொன்னாங்க. நான், சரி நம்ம தமிழ்நாட்டுகாரரு பரிசு வாங்கியிருக்காரே பாராட்டுவோம்னு, பொதுவா அவரை போய் பாராட்டி, கை குலுக்கிட்டிருந்தேன். பார்த்தா அந்த ஆளு நம்ம லக்ஷ்மணன் டிசைன் பண்ணின அதே டிரெஸ்ஸை பிரசன்ட் பண்ணி, அதுக்கு அவனுக்கு பரிசும் கிடைச்சுருக்கு. லக்ஷ்மணனோடாது டூப்ளிகேட்னு சொல்லி ரிஜக்ட் பண்ணிட்டாங்க”
“இது எதுவுமே எனக்கு தெரியாதே! நான் அந்த ஆளு கிட்ட பேசிட்டு இருந்ததை பார்த்ததும் லக்ஷமணன், நான் தான் அந்த டிசைன்ன அவனுக்கு திருட்டுத்தனமா வித்ததா நினைச்சுக்கிட்டான். உனக்கு தான் அவனை பத்தி தெரியுமே?! சரியான முன் கோபக்காரன். அங்க வச்சே ஒரே சண்டை! அப்புறம் கோர்ட், கேஸ்னு சண்டை பெருசாகி, நம்ம வீட்டை ரெண்டா பிரிக்கணும்னு வந்து நின்னான்”
“அவன் வேணும்னா என்னை தப்ப நினைச்சுக்கலாம், ஆனால் எனக்கு அவன் எப்பவுமே ஃப்ரெண்டு தான். அதான் நாம எல்லாரும் குடும்பத்தோட கிளம்பி சென்னை வந்துட்டோம். அவன் பண்ணின காரியத்தால அதிகமா பாதிக்கப்படுறது என் தங்கச்சி குந்தவையும், தாமரையும் தான்.”
“எங்க அப்பா, குந்தவை நாச்சியார் மாதிரி தன் பொண்ணு தைரியமா இருக்கணும்னு தான் அந்த பேர் வச்சாரு. ஆனால் அது ஒரு புள்ள பூச்சி. புருஷன் சொல்றத கேட்டுட்டு தலை ஆட்டிட்டு போய்ட்டா”
“ஹ்ம்ம்…..இதை பத்தியெல்லாம் பேசி என்ன பிரயோஜனம்?! இப்ப ரித்துவை நினைச்சா தான் கவலையா இருக்கு. அவன் தாமரையை விரும்புறானு தெரிஞ்சப்போ கொஞ்சம் சந்தோஷப்பட்டேன். இது மூலமாவது பிரிஞ்ச உறவு ஒட்டாதானு நினைச்சேன். ஆனால் லக்ஷ்மணன் மாற மாட்டான் போல இருக்கே! இப்போ என்ன மனோ பண்றது?”
“அப்பா! இந்த பிரச்சனை எல்லாம் முடியுற நாள் வந்துடிச்சு. நீங்க சொன்னீங்களே அந்த ஆளு, நடேசன் அவன் எந்த ஊருனு தெரியுமா பா?”
“ஏதோ திருச்சியோ,தஞ்சாவூரோ? எனக்கு சரியா ஞாபகம் இல்லை”
“சரி பா. நாளைக்கு நாம எல்லாரும் மாமாவை பார்க்க போறோம்”
“அய்யயோ! சண்டை எல்லாம் ஒன்னும் வேணாம் மனோ”
“சண்டை போட போகலை பா. ஒரு சில விஷயத்தை தெளிவு பண்ணிக்க போறோம். அதுக்கப்புறம் மாமா என்ன சொல்றாருன்னு பார்போம்”
“என்னவோ பேசுற? எனக்கு ஒன்னும் புரியல? ஆனால் அவன் மாறுவான்னு எனக்கு தோனலை மனோ!” சொல்லிவிட்டு கவலையுடன் அவர் செல்வதை பார்த்த மனோ, பார்க்க தான போறீங்க நாளைக்கு என்ன நடக்க போகுதுன்னு என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டான்.
மறுநாள் மனோரஞ்சன், ரிதுநந்தன் , சூரியநாராயனன், நிலா, நால்வரும் தாமரையும் அவள் தந்தையும் தங்கி இருந்த ஹோட்டலுக்குச் சென்றனர்.தாத்தா, பாட்டிக்கு துனையாக வீட்டிலேயே இருப்பதாகக் கூறினாள் மதிவதனி. மனோரஞ்சனின் தாய் ராஜேஸ்வரியும் வர மறுத்து விட்டார்.
இவர்கள் நால்வரையும் பார்த்ததும் கோபம் கொண்ட லக்ஷ்மணன் அவர்களை திட்ட ஆரம்பித்தார். மனோரஞ்சன் அவரை கை உயர்த்தி தடுத்தான்.
“மாமா! முதல்ல நான் சொல்ல வரத கவனிங்க. எங்கக் கூட கிளம்பி வாங்க. உங்களுக்கு ஒரு முக்கியமான உண்மையை புரிய வைக்கணும்”
“நான் ஏன் வரணும்?என்னால எங்கேயும் வர முடியாது? அவன் பையன் தானே நீ, என்ன கதை கட்டி விடுவியோ?”
“மாமா! ப்ளீஸ், எங்க கூட வாங்க. அட்லீஸ்ட் அத்தைக்காகவும், தாமரைக்காகவும் வாங்க. இவ்வளோ வருஷத்துல அத்தை சந்தோஷமா இருந்திருப்பாங்கனு நினைக்கிறீங்களா?! கூட பிறந்த அண்ணனை பார்த்து பேச முடியாம, எவ்ளோ தவிச்சிருப்பாங்க. உங்களுக்காக தானே அவங்க சொந்த ரத்தத்தை விட்டுட்டு இருக்காங்க. அவங்களுக்காகவாது வாங்க ப்ளீஸ்”
ஒரு நிமிடம் மௌனமாக நின்றவர் பின் அவர்களுடன் கிளம்பினார். தாமரையும் கூடவே கிளம்பினாள்.
மனோரஞ்சனை தவிர அங்கிருந்தவர்கள் யாருக்கும் எங்கே செல்கிறோம் என்று தெரியாது.
கார் வடபழனியில் ஒரு வீட்டின் முன்பு சென்று நின்றது.வீட்டின் கதவை மனோரஞ்சன் தட்ட கதவை திறந்தவரை பார்த்து அங்கிருந்தவர் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்…..
புலரும்