இதை கேட்டு வெண்மதி பொறுமையாக
“இப்ப நீ ஏன் இந்த சின்ன விஷயத்துக்கு டென்ஷன் ஆகுற? நானே கூலா இருக்கேன்.”
“அதான் எப்படின்னு கேட்கிறேன்?”
“நான் அவனை ஏற்கனவே பார்த்திருக்கிறேன்.”
“என்னடி சொல்ற மதி?”
“ஆமாம் கவி. பஸ்ஸ்டாப்பில் தண்ணீர் பாட்டில் வாங்க போன நான் ஒருத்தன் மேல இடிச்சுட்டு சாரி கேட்காம வந்துட்டே ன்னு சொன்னேன் இல்ல.”
“ஆமாம் மதி”
“அது இவன் தா கவி.”
“ஓ! சரி அதுக்காக இப்படியா சொல்றது?”
“அது இல்லடி கவி நான் இடிச்சதுல அவன் கைல இருந்த பென்டிரைவ் சேத்துல விழுந்துடுச்சு. அந்த பென் டிரைவ் வீணா போயிடுச்சா. அதனால அவனுக்கு லாஸ் ஆயிடுச்சா. அதனாலதான் அவன் என்கிட்ட கோபமா பேசினான்.”
“சரி மதி அப்படியே நீ செஞ்சது தப்பா இருந்தாலும் அது நீ தெரியாம செஞ்ச தப்பு. அதுக்காக இப்படியா பண்றது?”
“சரி பரவாயில்லை. விடு டி. நானே இந்த கல்யாணம் வேண்டாம்னு தான் நினைச்சுட்டு இருந்தேன். எப்படி நிறுத்துவது என யோசிச்சிட்டு இருந்தேன். அந்த வேலையை இவன் ஈஸியா பண்ணிட்டான். எனக்கு வசதியா போச்சு. தெரியாம பண்ணினா என்ன தெரிஞ்சு பண்ணினாஎன்ன தப்பு தப்பு தான். எனக்கு அவன் மேல ஒரு துளி கோபம் கூட இல்லை. தெரியாம அவனோட கஷ்டத்துக்கு நான் காரணமா இருந்ததை நினைச்சு எனக்கு வருத்தமா தான் இருக்கு. ஆனா அவன் அதுல இருந்து வெளியே வந்ததா சொன்னான். அது எனக்கு நிம்மதியா இருந்துச்சு. ஏமாற்றமும் தோல்வியும் தரும் வலி எனக்கு தெரியும்.” என்று எங்கோ பார்த்தபடி கூறினாள் வெண்மதி.
அவளின் முகத்தை பார்த்த கவிதா பேச்சை மாற்றினாள்
“என்ன மதி வேலைக்கு அப்ளை பண்ணிக்கிட்டு இருக்கியா? என்று கேட்டாள்”
“ஆமாண்டி நிறைய கம்பெனியில் அப்ளை பண்ணியிருக்கேன். கண்டிப்பா எங்கேயாவது வேலை கிடைக்கும். எனக்கு நம்பிக்கை இருக்கு.” என்று தெளிவாகவும் நம்பிக்கையுடனும் பேசும் தோழியை பார்த்த கவிதாவுக்கு வெண்மதியை பற்றிய கவலை மறைந்தது.
“என்னைப்பற்றிய கேட்கிறியே உன் ஜாப், உனக்கு பிடிச்சிருக்கா கவி?”
“கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு. பரவாயில்லை சமாளிக்கலாம். எந்த வேலையா இருந்தாலும் முதல் ஆறு மாசம் கஷ்டமாதான் இருக்கும்.” “அதுக்கப்புறம்?” என்று கவி கேட்டாள்.
“அந்த கஷ்டமே பழகிடும்.” என்று கூறிவிட்டு சிரித்தாள் வெண்மதி. நெடுநாளைக்கு பிறகு வெண்மதியின் முகத்தில் சிரிப்பை பார்த்த கவிதாவுக்கு நிம்மதியாக இருந்தது. வெண்மதிக்கு வந்த ஏமாற்றம் அவள் வாழ்க்கை மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இழக்க செய்து விடுமோ என்று கவிதாவுக்கு பயமும் கவலையும் ஆக இருந்தது. ஆனால் இப்பொழுது அவள் தெளிவாக இருந்தாள். இனி இவளை பற்றி கவலைப்பட வேண்டாம் என்று நிம்மதி கொண்டாள் கவிதா.
“அப்புறம் உங்க வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா? உன்னோட தங்கை கலைவாணி எப்படி இருக்கா?”
“அவளுக்கு என்ன விதவிதமா சாப்பிட்டுகிட்டு லைஃபை என்ஜாய் பண்ணிட்டு இருக்கா. இந்த வயசுதான் லைஃபை என்ஜாய் பண்ற வயசு. என்ஜாய் பண்ணட்டும்.”
“ஜாப் அப்ளை பண்ணி பண்ணியே இன்டர்வியூக்கு கால் வந்துச்சா?”
“வந்தது கவி. நான் கூட போய் அட்டண்ட் பண்ணிட்டு வந்தேன். ஆனா இன்னும் ரிப்ளை வரல.”
“எவ்வளவு நாள் இருக்கும்?”
“ரெண்டு மூணு வாரம் இருக்கும்.”
“இவங்களுக்கும் என்னைவிட பெட்டர் கேண்டிடேட் கிடைச்சிருக்கும். அதனால இன்னும் ஜாப் கிடைக்கல.”
“இப்ப எல்லாம் சும்மா கண்துடைப்பு இன்டர்வியூ கண்டக்ட் பண்றாங்க. ஏற்கனவே ஸ்டாப் செலக்ஷன் முடிஞ்சிருக்கும்.”
“பாப்போம் இன்னும் நிறைய கம்பெனியில அப்ளை பண்ணி இருக்கேன்.
கூடிய சீக்கிரம் வேலை கிடைக்கும்.” என்று வெண்மதி நம்பிக்கையோடு தெளிவாக கூற
“இந்த மாதிரி நீ யோசிக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் உன்னை யாரும் அசைச்சிக்க முடியாது அசைச்சிக்க முடியாது அசைச்சிக்க முடியாது” என்று விவேக் பாணியில் கூறி சிரித்தாள் கவிதா. வெண்மதியும் கவிதாவின் சிரிப்பில் கலந்து கொண்டாள்.
ஓரிடத்தில் தோல்வியை அடைந்த போதும் அடுத்தது என்ன செய்யலாம் என்று யோசிக்கும் மனப்பக்குவத்தை தன்னுடைய உயிர்த்தோழி பெற்றுவிட்டாள் என்று நினைக்கும் பொழுது கவிதாவுக்கு ஆறுதலாக நிம்மதியாக இருந்தது.
இதனை அதே பூங்காவில் ஜாகிங் செய்துகொண்டிருந்த வசந்த் கேட்டான். தன்மீது இடித்து அவன் கையில் இருந்த முக்கியமான பென்டிரைவை சேற்றில் தள்ளி விட்டு சென்ற பெண் மீது கோபம் வந்தது. சேற்றில் விழுந்த பென்டிரைவை தேடி எடுத்தவன் அவளை திரும்பி பார்த்தான். அவள் ஓடி சென்று பேருந்தில் ஏறிக் கொண்டிருந்தாள். அந்த பென் டிரைவ் வீணாக போனதால் அவனால் அன்று அந்த கிளையன்ட் மீட்டிங்கில் அவனுடைய பிரசெண்டேஷனை சரிவர செய்ய முடியாமல் போக அவன் எதிர்பார்த்திருந்த அந்த வியாபாரம் அவனுக்கு கிடைக்காமல் போனது. அதனால் அவள் மீது இன்னும் கோபம் அதிகரித்தது. அதற்குப் பிறகு அவன் அவளை பார்க்கவே இல்லை. ஆனால் பெண் பார்க்க சென்ற இடத்தில் அவன் அவளை பார்த்தான். ஆனால் அவள் அவனை நிமிர்ந்துகூட பார்க்கவில்லை அதில் இன்னும் கோபமானான். தனியறையில் அவனை அவள் பார்த்திருக்கிறாளா என்று கேட்டதும் அவள் இல்லை என்று கூறியதும் அவள் மீது இருந்த கோபத்தை மொத்தமும் கொட்டினான். அவன் அன்று பென்டிரைவ் இல்லாமல் எல்லோர் முன்பும் தடுமாறி அவமானப்பட்டது போல இவளையும் எல்லோர் முன்பும் நோகடிக்க வேண்டும் என்று முடிவெடுத்த அவன் அவ்வாறு பேசினால்d. ஆனால் அவள் இப்பொழுது பேசியதை கேட்டதும் அவன் மனம் இளகியது. தன்னை எல்லோர் முன்பும் நோகடித்து விட்டு சென்ற அவனுக்காகப் பரிந்து பேசுகிறாள். அவனுடைய நியாயத்தை பேசுகிறாள். முதன்முறையாக அவள் மீது அவனுக்கு மதிப்பு வந்தது.
தவறான முடிவு எடுத்து விட்டோமோ? என்று முதன்முறையாக யோசித்தான். அப்படி பேசியது தவறு என்று புரிந்தது
எனினும் அவளுடைய பேச்சின் பிற்பகுதி அவனை குழப்பியது. இந்த திருமணத்தில் அவளுக்கு விருப்பமில்லை என்று அவள் தோழியிடம் பேசியது குழப்பமாக இருந்தது. ஏன் இவளுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று யோசித்தான்.
அன்று வழக்கம்போல ஈமெயில் செக் பண்ணிக் கொண்டிருந்த வெண்மதி சென்னையில் ஒரு பெரிய கம்பெனியில் இருந்து அவளுக்கு இறுதி சுற்று
இன்டர்வியூ கால் வந்ததை பார்த்தாள். பார்த்ததும் உற்சாகமானாள் மகிழ்ச்சியோடு தாயிடம் வந்து
“அம்மா சென்னையில் ஒரு பெரிய கம்பெனியில் நான் இன்டர்வியூ அட்டென்ட் பண்ணி இருந்தேன். ஞாபகம் இருக்கா?”
“ஆமாம் மதி.”
“அந்த கம்பெனியில் இருந்து எனக்கு பைனல் ரவுண்ட் இன்டர்வியூ கால் வந்திருக்கு. நாலு பேரை தான் செலக்ட் பண்ணி இருக்காங்க. மூணு வேலை காலியா இருக்கு. எனக்கு எப்படியும் இந்த வேலை கிடைச்சிடும் அம்மா.” “அப்படியா ரொம்ப சந்தோஷம் மதி. நீ ஆசைப்படுற மாதிரி நடக்கட்டும்.”
“சரிமா. நாளைக்கு கவிதா சென்னைக்கு கிளம்பும் போது நானும் அவகூட கிளம்பி போறேன்.”
“இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணிட்டு திரும்பி வந்திடுறேன். என்னம்மா சொல்றீங்க?”
“சரிமா அப்படியே செய். நான் இன்னைக்கி அப்பா கிட்ட சொல்றேன்.”
“ஓகே மா” என்று அடுத்த நாள் சென்னை கிளம்புவதற்கு தேவையானவற்றை எடுத்துவைத்து கொண்டாள்.
கவிதாவுக்கு போன் செய்து விபரத்தைக் கூறினாள். அவளுக்கு மிகுந்த சந்தோஷம். 2 :00 மணிக்கு எழுந்து கிளம்பி கவிதாவின் வீட்டிற்கு சென்றாள் வெண்மதி.
அங்கு அவள் தயாராக இருக்க இருவரும் சேர்ந்து 3 மணி பஸ்ஸில் ஏறி சென்னை நோக்கி பயணித்தனர். 7 மணி அளவில் சென்னையை அடைந்தனர்.
கவிதா ஹாஸ்டலுக்கு செல்ல வெண்மதி தன் கைப்பையை எடுத்துக்கொண்டு அந்த கம்பெனி முகவரியை வைத்துக்கொண்டு அங்கிருந்த ஒரு ஆட்டோகாரனிடம்
“அண்ணா இந்த அட்ரஸ்க்கு எப்படி போறது?”
“இங்க இருந்து ஒரு மணி நேரம் ஆகும். ஆட்டோ எதுவும் அங்கு வராது. நீங்க அந்த பஸ் ஸ்டாப்ல வெயிட் பண்ணுங்க. பஸ் வரும்.” என்று அங்கு இருந்த ஒரு பேருந்து நிலையத்தை கை காட்டினான்.
அவள் தன் பையை எடுத்துக்கொண்டு அந்தப் பேருந்து நிலையத்துக்கு சென்று காத்திருந்தாள். அப்போது அவளுடைய செல்போன் ஒலித்தது. எடுத்ததும் “நான் ஏ. ஆர். ஹாஸ்பிடல்ல இருந்து கால் பண்றேன். உங்க அப்பாவுக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு. நான் அவரை இந்த ஏ. ஆர். ஹாஸ்பிட்டலில் அட்மிட் பண்ணியிருக்கேன். நீங்க சீக்கிரமா வாங்க. ஐ. சி. யு ல இருக்கிறார். இவரோட மொபைலில் இருந்த இந்த நம்பருக்கு கால் பண்றேன். சீக்கிரம் வாங்க.” என்று சொன்னதோடு போன் அணைந்தது.
வெண்மதிக்கு சிறிது நேரம் என்ன செய்வது என்று ஒன்றுமே புரியவில்லை. பின் சமாளித்துக் கொண்டு விழுப்புரத்திற்கு திரும்ப முடிவு செய்தாள். விழுப்புரம் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தாள்.
வெண்மதி செல்போனிலிருந்து தாய்க்கு போன் செய்தாள். அந்த போன் அணைந்து போயிருந்தது. கோவிந்தன், லட்சுமி இருவரும் பழைய மாடல் போன் ஒன்றினை உபயோகப் படுத்திக் கொண்டிருந்தனர். தாய் அவருடைய செல்போனை எப்பொழுதாவது தான் உபயோகப்படுத்துவார்கள். எனவே அது பெரும்பாலும் சார்ஜ் இல்லாமல் அணைந்து போயிருக்கும். எனவே அவள் லலிதா எண்ணிற்கு தொடர்பு கொண்டாள் செல்போன் மணி அடித்தது. ஆனால் லலிதா எடுக்கவில்லை.
பின்பு கார்த்திகேயனுக்கு போன் செய்தாள். ஆனால் அவன் எடுக்கவில்லை. அவன் இந்த நேரத்தில் கல்லூரியில் இருப்பான். கல்லூரியில் இருக்கும் பொழுது செல்போனை சைலன்ட் மோடில் போடவேண்டும். எனவே கார்த்திகேயனும் போனை எடுக்கவில்லை. வீட்டு தொலைபேசிக்கு தொடர்பு கொள்ள முயற்சி செய்தாள். ஆனால் கிடைக்கவில்லை. அப்பொழுதுதான், முன்தினம் மாலை வீட்டு தொலைபேசி வேலை செய்யவில்லை என்று கார்த்திகேயன் கதிர்வேலனிடம் கூறியது ஞாபகம் வந்தது. எனவே அந்த முயற்சியை கைவிட்ட வெண்மதி பெரியப்பாவுக்கு போன் செய்தாள். அவரும் போனை எடுக்கவில்லை. முக்கியமான வேலை அலுவலகத்தில் செய்யும்பொழுது அவர் போனை சைலன்ட் மோடில் போடுவது வழக்கம். கடைசியாக கதிர்வேலனக்கு போன் செய்தாள். அவனும் போனை எடுக்கவில்லை. இப்படி எல்லோருக்கும் மாற்றி மாற்றி போன் செய்து எந்த பலனும் இல்லாமல் சோர்ந்து போனாள்.