மனோவின் மதுவுக்கு,
ஒரு கடிதத்தை ஆரம்பிக்கறதுக்கு எழுதாத விதி, அன்புள்ள, நேசமுள்ளனு ஆரம்பிக்கணும்னு யாரோ சொல்லி நான் கேட்டுருக்கேன். ஆனால் வெறும் ஒரு கடிதத்துக்காக மட்டுமே என்னால அப்படி பொய் சொல்ல முடியாது! அதனால் தான் மனோவின் மதுனு ஆரம்பிச்சிருக்கேன். இது ரொம்ப பொருத்தமா இருக்கும்னு நினைக்கிறேன்………
வாழ்க்கையை சந்தோஷமா வாழ்றதுக்கு பணம் மட்டுமே தேவை இல்லை தானே! ஆனால் அது மட்டும் தான் தேவைனு, சொல்லி சொல்லியே வளர்க்கப்பட்டவ நானு……..
ஏன் அப்படின்னு எனக்கு புரியல?! ஒருவேளை……ஒருவேளை……என் அம்மாவுக்கு சின்ன வயசிலிருந்தே, பணம் ஒரு எட்டாக்காயா இருந்ததுனால, அது எட்டினதும், அதுவே வாழ்க்கைனு ஆயிடுச்சோ?!
அப்போ நாங்க,ஹ்ம்ம்……அது எந்த ஊரு……ஆங்……காரைக்குடி……அங்க இருந்தோம்! சின்ன வயசுல ஒரு நாள் மனோ,ரித்து,நிலா,தாமரை எல்லாரும் மழையில கப்பல் விட்டப்போ, எனக்கும் விடனும்னு ஆசையா இருந்துச்சு.
ஆனா எங்க அம்மா, நாம அடுத்த வாரம் நிஜ கப்பல்ல போக போறோம்னு சொல்லிட்டாங்க. அது ஏதோ ஒரு ஊரு…….ஹ்ம்ம்……பேரு எனக்கு ஞயாபகம் இல்ல…..அந்த ஊருக்கு கப்பல்ல போனோம்……
அவங்க எல்லாரும் வெளிய ஓடி பிடிச்சு விளையாண்டப்போ, வெயில்ல விளையாண்டா கருத்துறுவேனு சொல்லி, எங்க அம்மா எனக்கு ரொம்ப காஸ்ட்லியான கேமிங் யூனிட் வாங்கி தந்தாங்க!
நான் ஆசைப்பட்டதை எப்பவுமே, அவங்க எனக்கு வாங்கித் தந்ததே இல்லை, அதுக்கும் மேல தான் வாங்கி தருவாங்க! எங்க அப்பாவும் அம்மாகிட்ட சண்டை போட்டு, சண்டை போட்டு ஓஞ்சு போய்ட்டாங்க……..
கடைசி நான், நானா இல்லாம, நான் அவங்களா மாற ஆரம்பிச்சேன்….
ஆனாலும் மனோ,ரித்து,நிலாவை பார்க்கும்போது ஏக்கமா இருக்கும்! அவங்க கூட சேர்ந்து விளையாடனும்னு நினைப்பேன்.ரித்துவும், நிலாவும் என்னை கண்டுக்கவே மாட்டாங்க……..
மனோ மட்டும் தான் என் பக்கத்துல வந்து பேசுவான். ஒரு நாள் அவங்க எல்லாரும் விளையாண்டுட்டு இருந்தப்போ, எங்க அம்மா என்னை விளையாட விடலை……ஏன்னு……ஏன்னு தெரியல…..மறந்து போச்சு….
அப்போ மனோ என் பக்கத்துல வந்து என்னை விளையாட கூப்பிட்டான்.எங்க அம்மா விட மாட்டாங்கன்னு சொன்னப்போ, எங்க அம்மா கூட சண்டை போட்டு என்னை விளையாட கூட்டிட்டு போனான்…..
எனக்கு ஏதோ ஒரு சப்ஜக்ட், அது என்ன சப்ஜக்ட்னு…….தெரியல…….அது சரியாவே புரியலைனு அம்மா,அப்பாகிட்ட கேட்டப்போ, அவங்களுக்குச் சொல்லிக் குடுக்க நேரமில்லைனு என்னை டியுஷன் சேர்த்து விடுறதா சொன்னாங்க……..
உடனே மனோ, டியுஷன் வேண்டாம், நானே அவளுக்கு சொல்லிக் குடுக்குறேன்னு சொன்னான்! நான் தினம் இரண்டு மணி நேரம் அவன் கூட படிப்பேன். அந்த நேரம் எனக்கு ரொம்ப பிடிக்கும். கொஞ்சம் நேரம் படிப்போம். மீதி நேரம் என் மனோ என் கூட சேர்ந்து விளையாடுவான். என்ன விளையாண்டோம்? அதெல்லாம் ஞயாபகம் இல்லை…..
அவன் கூட இருக்கும்போது மட்டும் தான், நான் நானா இருந்தேன்…….
நிலாவுக்கும், ரித்துவுக்கும் என்னை பிடிக்காததால ஏதாவது சொல்லிட்டே இருப்பாங்க. மனோ தான் அவங்களை அப்படி பேசக் கூடாதுன்னு சொல்லி தடுப்பான்……..
மனோ தான் எனக்கு எல்லாம்னு ஆனான்! எனக்காக பல தடவை எங்க அம்மா கூட சண்டை போட்டிருக்கான். எனக்கு பிடிச்ச விளையாட்டை விளையாட, எனக்கு பிடிச்ச ட்ரெஸ் போட, எனக்கு பிடிச்ச படிப்பை படிக்க, இப்படி வாழ்க்கையோட பல கால கட்டங்கள்ல எனக்காக என் கூட நின்னுருக்கான்……..
சின்ன வயசுல நல்ல தோழனா தெரிஞ்ச அவன், வளர்ந்ததும் வேற மாதிரி தெரிஞ்சான்.அவனோட அருகாமை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு. ரொம்பவும் விரும்பினேன்……
எப்பவுமே இது தான் நம்ம வாழ்க்கை, இது தான் நமக்கான பாதைனு நினைக்கிறப்போ, வாழ்க்கை நம்மள வேற பாதைல போக வைக்கும் போல…….
அப்படி தான் என் வாழ்க்கையும் திசை மாறுச்சு……
நான் ஸ்கூல் படிச்சிட்டுருந்தப்போ ஒரு நாள்…….வழக்கம் போல ஸ்கூல் விட்டு வெளிய வந்தேன்…….அடுத்து…..அடுத்து…….என்ன?! எனக்கு ஒன்னுமே புரியலை……
நாம இப்ப எப்படி வீட்டுக்கு போகணும்?தினம் நான் எப்படி வீட்டுக்கு போவேன்?அதுவே எனக்கு தெரியலை……அப்போ……அப்போ…….ஒருத்தர் என் பக்கத்துல வந்து, என்ன பாப்பா யோசிச்சிட்டு இருக்கீங்க?வாங்க வந்து கார்ல ஏறுங்க. லேட்டா போனா அம்மா திட்டுவாங்கனு சொன்னாரு……
அப்போ தான், அட! நாம் தினமும் கார்ல தானே வீட்டுக்கு போவோம்னு ஞயாபகம் வந்துச்சு……
அப்புறம்……அப்புறம்……ஒரு நாள் சாப்பிடுறதுக்கு என் ரூமிலிருந்து இறங்கி வந்தேன்.ஆனால் வந்தபுறம்……..இப்போ எதுக்கு இங்க வந்தோம்?…….என்ன செய்ய போறோம்?……..ஒன்னுமே புரியலை……
ரொம்ப நேரமா அப்படியே நின்னுட்டு இருந்தேன்! அம்மா வந்து,”ஏண்டி இப்படி நின்னுட்டு இருக்க?ஸ்சூலுக்கு லேட் ஆகுது! சீக்கிரம் போய் சாப்பிடு’னு சொன்னதும் தான் சாப்பிட வந்தோம்னு நினைவுக்கு வந்துச்சு…….
இப்படி நிறைய நடந்துச்சு. ஸ்கூல்ல எங்க மேடம், சார் எல்லார்கிட்டயும் திட்டு வாங்கினேன். படிச்ச எதுவும் ஞயாபகம் இல்லை. நான் ஓரளவுக்கு நல்லா தான் படிப்பேன். ஆனால் ஏன்? ஏன் இப்படி எல்லாமே மறக்குது? எனக்கு புரியவேயில்லை?…….
இதெல்லாம் மனோவை தவிர நான் வேற யாருக்கும் சொல்லலை. மனோ எனக்கு தொடர்ந்து சப்போர்ட் பண்ணிட்டே இருந்தான். மறதி எல்லாம் ஒரு விஷயமே இல்லை, முயற்சி பண்ணினா அதிலிருந்து வெளிய வந்துடலாம்னு சொல்லிட்டே இருப்பான். அவனோட உதவியால மட்டும் தான் என்னால என் ஸ்கூல் எக்ஸாம்ஸ் பாஸ் பண்ண முடிஞ்சுது………
ஆனால் இது ஒரு சின்ன பிரச்சனை இல்லைனு, எனக்கும் மனோவுக்கும், நான் காலேஜ் படிக்கும்போது தான் புரிஞ்சிது!
ஒரு நாள் என் ஃப்ரெண்டை பார்க்க, அவ வீட்டுக்கு போயிருந்தேன். பார்த்துட்டு திரும்ப வரும்போது பாதி வழியிலே…..
அப்படியே….அப்படியே……நின்னுட்டேன்! வழி தெரியல……எப்படி வீட்டுக்கு போறது? தெரியல….ஒரு ஆயிரம் தடவை வந்து போன இடம் தான்…..ஆனால் வழி தெரியல….என்ன செய்ய?
ஆங்….போன்….அப்பா, அம்மாவுக்கு போன் பண்ணலாமே….ஆனால் பேக்ல போன் இல்லை! அதையும் மறந்து எங்கேயோ வச்சிட்டேன் போல….ஆமா மறந்து வச்சிட்டேன்……
ஒரு போன் பூத் போனேன்! டயல் பண்ண கையை எடுத்தேன்….அம்மா நம்பர்….தெரியல…..ஞயாபகம் இல்லை….அப்பா நம்பர்….ஞயாபகம் இல்லை….மனோ நம்பர்…..ஞயாபகம் இல்லை….எதுவுமே ஞயாபகம் இல்லை….போனை வச்சிட்டு திரும்ப நடந்தேன்…
அந்த கடைகாரர், ஏன்மா போன் பேசலை?போன் நல்ல தானே வேலை செய்யுதுன்னு? கேட்டாரு. அவர் கிட்ட ஞயாபகம் இல்லைன்னு சொன்னா சிரிப்பாரோ?!
அப்படியே நடந்துட்டே இருந்தேன்……எங்கே போறேன்னு தெரியாது? எப்படி வீட்டுக்கு போக போறேன்னு தெரியாது.? என் கால் போன திசைல நடந்தேன்……நடந்துட்டே இருந்தேன்……மழை வேற பெய்ய ஆரம்பிச்சது…..நான் நடந்துட்டே இருந்தேன்……பக்கத்துல பஸ் ஸ்டாண்ட் இருந்துச்சு……
அங்கே போய் ஒரு இடத்துல உட்கார்ந்துட்டேன்…..எவ்ளோ நேரம் உட்கார்ந்தேன்னு எனக்கே தெரியாது…..திடீருன்னு என் பக்கத்துல யாரோ வந்து என்னை நித்யா, நித்யானு கூப்பிட்டாங்க……பார்த்தேன்……என் அப்பாவும், என் மனோவும் நின்னாங்க…..
ரெண்டு பெரும் ஏதேதோ பேசுனாங்க! எனக்கு எதுவுமே புரியல?! என் கண்ணிலேர்ந்து கண்ணீர் வந்துட்டே இருந்துச்சு. நல்லவேளை என் கண்ணீர் என் மனோவுக்கு தெரியாது. இந்த மழை நல்ல நேரத்துல வந்து என்னை காப்பாத்துச்சு……
கார்ல திரும்ப போகும்போது எங்க அப்பா அழுதுட்டே வந்தாரு. எந்த டாக்டரை போய் பார்கலாம்னு ரெண்டு பேரும் பேசிட்டே வந்தாங்க. மனோ அவர் கிட்ட, இதுக்கு முன்னாடி நடந்ததெல்லாம் சொல்லிட்டான் போல……
அடுத்த நாள், என்னை ஒரு டாக்டர் கிட்ட கூட்டிட்டு போனாங்க. எங்க அம்மாவுக்கு இது எதுவும் தெரிய கூடாதுன்னு எங்க அப்பா சொன்னாரு.ஏன் அப்படி சொன்னாருனு தெரியல? அந்த டாக்டர் எனக்கு என்னலாமோ டெஸ்ட் எடுத்தாங்க……எனக்கு சரியா ஞயாபகம் இல்லை….
ஏதோ கேள்வியா கேட்டுட்டே இருந்தாரு……கடைசியா என்னை வெளிய அனுப்பிட்டு, அவங்க ரெண்டு பேர் கிட்டயும் ஏதோ சொன்னாரு.மறுபடியும் என்னை உள்ள கூப்பிட்டாங்க. மனோ…..அப்பா…..ரெண்டு பேரும் கண்கலங்கி நின்னுட்டு இருந்தாங்க……
அப்பா டாக்டர் கிட்ட, இதெல்லாம் என் கிட்ட சொல்ல வேணாம்னு சொன்னாரு! ஆனால் சொல்றது தான் நல்லதுனு டாக்டர் சொன்னாரு….
எனக்கு…..எனக்கு…….ஏதோ ஞயாபக மறதி நோயாம்….பேரு ஏதோ….ஏதோ….ஆங்…அல்சமைர்….நான் கொஞ்ச கொஞ்சமா……கொஞ்ச கொஞ்சமா…..எல்லாத்தையும் மறந்துடுவேனாம்.நான் யாரு…..என் பேரு….என் ஊரு…..என்னை சுத்தி இருக்கிறவங்க….என் அப்பா….அம்மா….என் மனோ…..
ஹ்ம்ம்…..என் மனோவை நான் மறந்துடுவேனா என்ன?அந்த டாக்டர் தெரியாம சொல்றாரு……என்னால என் மனோவை மறக்கவும் முடியாது…….நினைக்காம இருக்கவும் முடியாது…..
என்ன சொல்லிட்டு இருந்தேன்…ஆங்…எல்லாத்தையும் மறந்துடுவேனாம்…..கடைசியா…..கடைசியா…..செத்து……….
ஹாஸ்பிடல் போயிட்டு வீட்டுக்கு வந்தோம்.அப்பா, அம்மாகிட்ட எல்லாத்தையும் சொன்னாங்க. அம்மா அழுதுட்டே இருந்தாங்க. என் பொண்ணு வாழ்க்கை போச்சே,வாழ்க்கை போச்சேனு புலம்புனாங்க. அப்பா இடிஞ்சு போய் உட்கார்ந்திருந்தாரு. மனோ தான் எல்லாருக்கும் ஆறுதல் சொல்லிட்டு இருந்தான்……
அத்தையும், மாமாவும் வந்தாங்க. வேற யாருக்கும் இந்த விஷயம் தெரிய வேண்டாம்னு சொன்னாங்க. எங்க அம்மா எனக்கு இருக்கிறது ஒரே பொண்ணு, அவளுக்கும் இப்படியா ஆகணும்? இவளை நல்லா படிக்க வச்சு நல்ல இடத்துல கல்யாணம் செஞ்சு குடுக்க ஆசைப்பட்டேனேனு புலம்புனாங்க……
அம்மா,அப்பா,அத்தை,மாமா எல்லாரும் ரொம்ப நேரம் ஏதேதோ பேசிட்டு இருந்தாங்க….
கடைசியா மனோ கிட்ட வந்து, நித்யாவை கல்யாணம் பண்ணிகிறியானு எங்க அப்பா கேட்டாரு…….அவன்……அவன் சரின்னு சொல்லிட்டான்…..ஒரு நோயால கூட இவ்ளோ சந்தோஷம் குடுக்க முடியுமா…..முடியுதே……
ஆனால்…ஆனால்….அவன் கண்ணு…..அவன் கண்ணு…..அதுல தெரியுறது என்ன? கண்டிப்பா அது காதல் இல்லை……அதுக்குமேல என்ன நடந்துச்சு? ஒன்னும் ஞயாபகம் இல்லை….
அப்புறம் நாங்க எல்லாரும் கிளம்பி சென்னை வந்துட்டோம்…….என்னோட சித்தி,சித்தப்பா, அதான் தாமரையோட அப்பா,அம்மா கூட ஏதோ பிரச்சனைனு சொன்னாங்க…….அது என்னனு எனக்கு மறந்துடுச்சு……..
நான் வெளிய எங்கேயும் போகாம வீட்லயே இருந்தேன். எங்க அம்மா தினம் என் கிட்ட ஏதாவது புலம்பிட்டே இருப்பாங்க. எனக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். அப்புறம் ஒரு நாள் மனோ தான் சொன்னான், பேசாம காலேஜ் சேர்ந்து ஏதாவது ஹாஸ்டல்ல தங்கி படிக்கச் சொல்லி……
அப்பா,மாமாவுக்கு தெரிஞ்ச காலேஜ்ல சேர்ந்தேன்.ஹாஸ்டல் போனேன்.என்னை பார்த்துக்க அங்கேயே எல்லா ஏற்பாடும் பண்ணினாங்க.அம்மா கிட்டேர்ந்து தள்ளி இருந்தாலே போதும்னு தோணிச்சு…..
மனோ என் கிட்ட சரியா முகம் குடுத்து பேசுறதே இல்லை. ஏதோ கடமைக்கு பேசினான். நான் அவன் கிட்ட கேட்டுட்டே இருந்தேன். விடவே இல்லை.மறுபடியும்……மறுபடியும் கேட்டபின்னாலே சொன்னான்…….
என்னை சின்ன வயசிலிருந்தே, நிலா மாதிரி நினைச்சு தான் பழகுனானாம்! தங்கை மாதிரி நினைச்ச பொன்னை எப்படி மனைவியா நினைக்கிறதுன்னு தெரியலயாம்……சொல்லும்போதே அவன் கண்ணு கலங்கிருச்சு…….
என் மனோவை நான் எப்படி கஷ்டபடுத்த முடியும்……..இப்போ என்ன பண்றது….கல்யாணத்தை நிறுத்த சொல்லி அப்பா கிட்ட பேசவா? ஒன்னும் புரியல……
ஒரு நாள் அம்மா எனக்கு போன் பண்ணி……போன் பண்ணி….மனோவுக்கு….என் மனோவுக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு சொன்னாங்க. ஒரு நிமிஷம் மனசு சுக்கு நூறா உடைஞ்ச மாதிரி இருந்துச்சு. ஆனால் ஒரு பக்கம் சந்தோஷமாவும் இருந்துச்சு அட்லீஸ்ட் என் மனோவாவது இனி சந்தோஷமா இருப்பானே……
ஆனால் நான் ஒன்னும் அவ்ளோ பெரிய தியாகியெல்லாம் இல்லை. அன்னைக்கு முதல் தடவை மனோவையும், உன்னையும்…..உன் பேரு என்ன? இப்போ மறந்துடுச்சு……சரி விடு, உங்க ரெண்டு பேரையும் ஒன்னா பார்க்கும்போது…….
என்னால……என்னால……தாங்கிக்கவே முடியல….நமக்கு ரொம்ப பிடிச்ச ஒருத்தர் கூட சேரவும் முடியாம, விட்டு குடுக்கவும் முடியாம படுற கஷ்டம் இருக்கே, அதை வார்த்தையால சொல்ல முடியாது……
இதுக்கிடையில என் மறதி வியாதி ஜாஸ்தியாயிட்டே போச்சு! ஒரு நாள் ஒரு பொண்ணு வந்து என் கிட்ட அவ என் ஃப்ரெண்டுனு சொன்னா. ஆனால் அவ யாருனே எனக்கு தெரியல…..
எனக்கு பயங்கர கோபம் வந்துடுச்சு! காலேஜ்ல எல்லார் முன்னாடியும் வச்சு ரொம்ப கத்திட்டேன். எல்லாரும் என்னை ஒரு லூசு மாதிரி பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க! யாருமே என் கூட பேசுறதில்லை. எங்க அப்பா ஏற்பாடு பண்ணிருந்த என் ரூம்மேட்டும், வார்டனும் மட்டும் தான் என் கூட பேசினாங்க…….
காலேஜ் போகாம நிறுத்திடலாமானு யோசிச்சேன். ஆனால் வீட்ல இருக்கிறது அதை விட வேதனை. தினம் எங்க அப்பாவும்,அம்மாவும் என் சாவை எதிர்நோக்கியே என்னை பார்க்கும் போது, என்னால தாங்கிக்கவே முடியல……
அவங்களோடவே இருந்துட்டு, தீடிருன்னு ஒரு நாள், நான் அவங்களையே யாருன்னு கேட்டுட்டா? அப்போ அவங்க, என்னை ஒரு பார்வை பார்பாங்களே? அந்த பார்வையை தாங்குற சக்தி எனக்கு இல்லை! அதுக்கு இந்த ஹாஸ்டல் எவ்வளவோ பரவாயில்லை…..
கொஞ்ச நாள் முன்னாடி நிலா என்னை பார்க்க வந்தா. நான் அவளோட அண்ணன்,அண்ணி சந்தோஷத்துக்கு தடையா இருக்கேனாம். மனோவை விட்டு விலகனுமாம்….
அவளுக்கு என்ன தெரியும்,பாவம் சின்ன பொண்ணு! மனோ வேற, நான் வேற இல்லையே! எனக்குள்ள மனோ இருக்கான். அவனை விட்டு விலகனும்னா, என் உயிர் இந்த உடம்பை விட்டு விலகனும். அப்பவும் கூட என் நினைவுகள்ல அவன் இருப்பான். அதை யாராலும் விலக்க முடியாதே…..
மனோவை பத்தி இப்படியெல்லாம் உன் கிட்ட சொல்றதுக்கு எனக்கு கொஞ்சம் கூட தயக்கம் கிடையாது.எல்லாரும் உங்க ரெண்டு பேருக்கு நடுவுல நான் வரதா நினைச்சு என் மேல கோபப்படுறாங்க. உண்மை அது இல்லை.எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல தான் நீ வந்த…..
ஆனால் பல தடவை……பல இடங்களல……உங்க ரெண்டு பேரையும் நான் பாத்துருக்கேன்…..உன் கூட சிரிச்சு பேசுற மனோ……உன் கூட சண்டை போடுற மனோ……உன் மேல அக்கறையா இருக்கிற மனோ……இப்படி பல சமயங்களில் நான் மனோவை கவனிச்சு பார்த்துருக்கேன்…..
அந்த சமயங்களில் எல்லாம், மனோ கண்ணுல ஒரு காதல் தெரியும்…..என்னை கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி எங்க அப்பா கேட்டாங்களே? அப்போ அவன் கண்கள்ல நான் தேடுன ஒரு உணர்ச்சி! அந்த உணர்ச்சி உன்னை பார்த்தாலே அவனுக்கு வந்துடுது…..
அவன் சந்தோஷமா இருக்கான்….என் மனோ சந்தோஷமா இருக்கான்…..எனக்கு அது போதும்…..
அடுத்த பக்கம் பார்க்கவும்