கடிதம் இரண்டாம் பக்கம்
இப்போ என் வாழ்க்கை பாதைல மறுபடியும் ஒரு மாற்றம்……வினோ….விநோதன்! சின்ன வயசிலிருந்தே எனக்கு அவனை தெரியும். நல்லா சிரிக்க சிரிக்க பேசுவான். அவ்ளோ தான்…..அவனை பத்தி வேற ஒரு அபிப்ராயமும் எனக்கு இருந்ததில்லை……ஆனால் அவன் என்னை காதலிச்சானாம்…..அதுவும் சின்ன வயசிலிருந்து…..
மனோவுக்கும் எனக்கும் கல்யாணம் பேசுனப்போ, அவன் விலகிக்கலாம்னு நினைச்சானாம்! ஆனால் அப்புறம் மனோவும், நீயும் கல்யாணம் பண்ணினப்போ அவன் காதல் மறுபடியும் உயிர் பெற்றுடுச்சுனு அவனுக்கு தோணிச்சாம்…..
மனோ என்னை பத்தின உண்மையை, அவன் கிட்ட சொல்லிட்டான் போல….என்னை பார்க்கும் போதே அவனுக்கு கண்ணு கலங்குது…..ஆனால் அதை மறைச்சுகிட்டு, என்னனவோ பேசி என்னை சிரிக்க வைக்கிறான்…..
என்னால விநோதனோட காதலை புரிஞ்சிக்க முடியுது! ஆனால் ஏத்துக்க முடியலை….
காதலிக்கிறேனு சொல்லி…..அவங்க கூட சேர்ந்து வாழ்ந்தா மட்டும் காதல் இல்லை…..நீ எனக்கு குடுத்தா தான், நான் உனக்கு தருவேன்னு சொல்றதும் காதல் இல்லை……உண்மையான காதல் எந்த எதிர்பார்ப்பும் இல்லாம காத்திருக்கும்…..
அந்த காதலை நான் ஏற்கனவே மனோவுக்கு குடுத்துட்டேன். அது திரும்பி வந்தாலும், வராட்டாலும், அது அவனோடது மட்டும் தான்! திரும்ப வேற ஒருத்தருக்கு அதை என்னால குடுக்க முடியாது…..
ஆனால் என்ன ஒரு அதிசயம்…..விநோதனும் இதையே தான் சொல்றான். அவன் காதல் உண்மையானதாம்….என் கிட்ட அவன் அதை எதிர்பார்க்கலையாம்…..
நான் வாழ போற இந்த கொஞ்ச நாள், அவன் காதலை எனக்கு அள்ளி அள்ளி குடுத்துட்டே, என் பக்கத்துல இருந்தா மட்டும் போதுமாம்….
நான் யோசிச்சு பார்த்தேன். என்னால அவனை ஒரு நல்ல நண்பனா ஏத்துக்க முடியும்! அதோட நான் விலகினா, என் மனோவும் சந்தோஷமா இருப்பான். எனக்கு அது போதும். அதான் இந்த முடிவுக்கு வந்தோம்…..
இந்த லெட்டரை கிட்டதட்ட நான் ஒரு மாசமா எழுதுறேன்…..ஏன்னா எழுதிட்டு இருக்கும்போதே எனக்கு பாதி விஷயம் மறந்து போய்டும்…..இதை யாருக்கு எழுதுறோம்….எதுக்கு எழுதுறோம்…..ஒண்ணுமே புரியாது! ஆனால் மறுநாள், மறுபடியும் முதல்லேர்ந்து ஆரம்பிப்பேன். இப்படி பல முயற்சிக்கு அப்புறம் தான் இந்த லெட்டரை நான் முடிச்சேன்…..
இது உன் கையுல கிடைக்கும்போது, நானும் வினோவும், உங்க எல்லாரையும், என் மனோவையும் விட்டு ரொம்ப தூரம் போயிருப்போம். மனோ ரொம்ப நல்லவன். அவன் காதலை ஏத்துக்கோ….உன்னோட காதலை அளவில்லாம அவனுக்கு குடு….வாழ்க்கை அழகா இருக்கும்…..ஏன்னா வாழ்க்கையில மாறாதது மாற்றம் மட்டுமில்லை, காதல் கூட தான்…….
இப்படிக்கு
மனோவின் நித்யா…
———————————————————————————————————————————————படித்து முடித்த மதிவதனியின் கண்களில் இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் கூட வரவில்லை. உறைந்து போய் நின்றுக் கொண்டிருந்தாள். எப்பொழுதும் இம்மென்றால் கண்ணீர் பொழியும் அவள் கண்கள், ஏனோ இன்று வரண்டு போயிருந்தன.
அவள் பக்கத்தில் நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்த மனோரஞ்சன் மதிவதனியை கூப்பிட்டான். அவள் திரும்பவில்லை. மறுபடியும் கூப்பிட்டும் திரும்பாததால் அவள் கையை பிடித்தான். அப்பொழுதும் சிலை போலவே நின்றாள்.
அவள் தோள்களை பிடித்து உலுக்கினான். அப்பொழுதும் அந்த சிலைக்கு உயிர் வரவில்லை. கடைசியாக அவள் எலும்புகள் நொறுங்கும் அளவுக்கு அவளை உலுக்கிய பிறகு தான் அந்த சிலை உயிர் பெற்றது.
“என்னாச்சு மது? லெட்டர்ல நித்யா என்ன எழுதியிருக்கா?”
ஒரு நிமிடம் அவன் கண்களை உற்று பார்த்தவள், அடுத்த நிமிடம் உடைந்தாள். வாய்விட்டு ஹோவென்று கதறிக்கொண்டே அவன் மார்பில் சாய்ந்து உயிர் உருகுமாறு அழுதாள்.
அவள் அழுகைக்கு ஒரு முடிவே இல்லாதது போல் கதறி அழுதாள். மனோரஞ்சன் எவ்வளவு சமாதானப்படுத்தியும் அவள் அழுகை அடங்கவில்லை. அழுது அழுது மயங்கியே விட்டாள்.
மனோரஞ்சன் அவளுக்கு தண்ணீர் குடுத்து அவளை உட்கார வைத்தான்.
“மது! ப்ளீஸ் மது! இப்படி நீ அழுகுறத பார்க்கும்போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. என்ன விஷயம்னு சொல்லுமா. ப்ளீஸ்!”
அவள் எதுவும் சொல்லாமல் அந்த லெட்டரை நீட்டினாள்.
அவன் அந்த லெட்டரை வாங்கி படிக்க ஆரம்பித்தான்.படிக்க படிக்க அவன் கண்களில் கண்ணீர் வழிந்துக் கொண்டிருந்தது. வழிந்த கண்ணீரை துடைக்க கூட தோன்றாமல் மேலும் படித்துக் கொண்டிருந்தான்.
லெட்டரை படித்து முடிக்கும் சமயம் அவன் போன் ஒலித்தது. அதை எடுக்க தோன்றாமல் வழிந்த கண்ணீரோடு அமர்ந்திருந்தான். ரிதுநந்தன் தான் அவன் போனை எடுத்து பார்த்தான். போனில் தெரிந்த நம்பரை பார்த்ததும் அவன் பரபரவென்று மனோரஞ்சன் அருகில் வந்தான்.
“வினோ…வினோ அண்ணா தான் கூப்பிடுறாங்கண்ணா”
அவன் வேகமாக அவனிடமிருந்து போனை வாங்கி பேசினான். பேசும்போதே அவன் குரல் உடைந்தது.
“டேய்! வினோ, ராஸ்கல்….எங்க டா இருக்க?”
“மச்சான்……நான் போறேன் டா!”
“டேய்! டேய்! டேய், ப்ளீஸ் டா அப்படி சொல்லாத டா….” அவன் உடைந்து அழுதான்.
“இல்லை மச்சான். இந்த முடிவு தான் எல்லாருக்கும் நல்லது. முக்கியமா நித்யாவுக்கு நல்லது”
“டேய்! ரெண்டு பேரும் தனியா போய் என்னடா பண்ணுவீங்க? இங்கேயே இருங்கடா! நான் பாத்துக்கிறேன்டா. அமெரிக்க,லண்டன் எங்கேயாவது கூட்டிட்டு போய் டிரீட்மன்ட் பண்ணலாம். நித்யாவுக்கு சரி ஆயிடும் டா.டேய், மச்சான் ப்ளீஸ் போகாத டா”
“இல்ல மச்சான்! இப்போ நித்யாவுக்கு தேவை டிரீட்மன்ட் இல்லை.ஒரு அமைதியான வாழ்க்கை! எப்பவுமே கவலையும்,சோகமும் அப்பி கிடக்குற ஒரு முகத்தை கூட இனிமே அவ பாக்க கூடாது. எப்ப என்ன ஆகுமோன்னு கவலைபட்டுட்டு இருக்கிற ஒரு உலகம் அவளுக்கு வேண்டாம்”
“இனிமேல் அவ வாழ போற உலகத்திலே, சந்தோஷம் மட்டுமே நிறைஞ்சிருக்கனும், வாழற ஒவ்வொரு நிமிஷமும்.நொடியும் அனுபவிச்சு ரசிச்சு, சிரிச்சு வாழனும். அப்படிப்பட்ட வாழ்க்கையை என்னால கண்டிப்பா அவளுக்கு குடுக்க முடியும். அதனால எங்கள தடுக்காத டா!”
“டேய்! இப்ப நீ……இப்ப நீ எங்க இருக்க?”
“பெங்களூர் ஏர்போர்ட் டா. இன்னும் ஒரு மணி நேரத்துல ஃபிளைட். தயவுசெஞ்சு எங்களை தேடி வராத. வந்தா அடுத்து வேற எங்கேயாவது தூரமா போய்டுவோம். மதி தங்கச்சி ரொம்ப நல்ல பொண்ணு டா. அவளை நல்ல பார்த்துக்கோ. அம்மா, அப்பாவையும் பாத்துக்கோடா.அவங்களுக்கு வேற யாரும் இல்லை மச்சி…..சாரி பார் எவரிதிங் மச்சி”அவன் அழுதுக்கொண்டே போனை வைத்து விட்டான்.
மனோரஞ்சன் கையில் இருந்த போனை எறிந்துவிட்டு தரையில் மண்டியிட்டு கதறி அழுதான். இவ்வளவு நேரம் தன் கண்ணீரை அடக்கும் வழி தெரியாமல் திணறிய மதிவதனி, இப்பொழுது கதறி அழும் அவன் கண்ணீரை அடக்கும் வழி வகை தெரியாமல் திகைத்தாள்.
அவனை அவள் மடி சாய்த்து, தலை கோதினாள். அவள் மடி சாய்ந்த அவனோ மேலும் அழுதான்! ஆண்பிள்ளைகள் அழ மாட்டார்கள் என்று யார் சொன்னது. அவள் மடி சாய்த்து அழுதுக் கொண்டிருக்கும் அவனுக்கு அழுகை மட்டுமே ஆறுதலாய் இருந்தது! ரித்து, தாமரை, நிலா நிலைமையும் அதுவே!
சிலமணி நேரமோ, பல மணி நேரமோ ஐவரின் அழுகையும் சற்று குறைந்து உணர்வுக்கு வந்தார்கள். சிறிது நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தனர்.
மனோரஞ்சன் முதலில் மௌனத்தை உடைத்தான்.”நான் சரியான கோழை! என் மேல தான் எல்லா தப்பும்! அன்னைக்கு, நித்யாவை கல்யாணம் பண்ணிகிறியானு எங்க மாமா என் கிட்ட கேட்டப்பவே, நான் முடியாதுனு சொல்லியிருக்கணும். ஆனால் எங்க மாமா இதை நான் ஒரு கோரிக்கையா கேக்கல, ஒரு பிச்சையா கேக்குறேன்னு சொன்னப்போ, என்னால மறுக்கவே முடியல!”
“அவ மனசுல ஆசைய வளர்த்து, அவளை ஏத்துக்கவும் முடியாம, விலகவும் முடியாம தவிச்சப்போ தான் நீ வந்தே! உன்னை காரணம் காட்டியே, இந்த கல்யாணத்திலிருந்து தப்பிக்க ஒரு வாய்ப்பா பயன்படுத்திகிட்டேன்”
“ஆனால் ஏதோ தப்பு பண்ற மாதிரி என் மனசு ரொம்ப உறுத்தும். எத்தனை நாள் நித்யாவை நினைச்சு நான் தூங்காம இருந்திருக்கேன் தெரியுமா!”
“இதே நிலைமைல வேற யாரோ ஒரு பொண்ணு இருந்து, அந்த பொன்னை நான் கல்யாணம் பண்ணிக்கிடனும்ங்கிற நிலைமை வந்திருந்தா, அப்போ நான் சரின்னு தான் சொல்லிருப்பேன்”
“ஆனால் சின்ன வயசிலிருந்தே தங்கச்சி மாதிரி பழகுன ஒரு பொன்னை, திடீருன்னு என் மனைவியா ஏத்துக்கவும் முடியாம, அவளுக்கு ஒரு நல்லது செய்ய முடியலையே, நம்மால அவ வாழ்க்கையே கெட்டு போச்சோனு நினைக்கும் போதும், என் மனசையே கசக்கி பிழிஞ்ச மாதிரி இருக்கும்”
“இதுக்கிடையில வினோதன் வேற நித்யாவை காதலிக்கிறதா சொல்லிட்டு வந்து நின்னான்! அவளை காதலிச்சா அவன் வாழ்க்கையுல சந்தோஷம் தொலைஞ்சு போய்டும், ஆனால் நித்யாவோட வாழ்க்கைக்கு இது ஒரு நல்ல மாற்றம்! வினோ சைடும் நிக்க முடியாம, நித்யா சைடும் நிக்க முடியாம ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்!”
அவன் திக்கி திணறி கூறினான். அவன் கை, கால், முகம். அவன் மொத்த உடம்புமே விறைத்து போயிருந்தது. அவன் எவ்வளவு கஷ்ட்டப்பட்டிருப்பான் என்று அவளால் யூகிக்க முடிந்தது!
அவளால் முடிந்தால் அவன் மனதிற்குள் கை விட்டு அவன் துன்பத்தை வெளியே தூக்கி எறிந்திருப்பாள், அது முடியாததால் வெறுமனே அவன் தலை முடியை கோதிக் கொண்டும், அவன் தோளை தடவியும், அவன் கைகளை பிடித்துக் கொண்டும் அமர்ந்திருந்தாள்.
வீட்டு பெரியவர்கள் வந்து என்னவாயிற்று என்று கேட்கும் வரைக்கும் அவர்கள் ஐவரும் அப்படியே அமர்ந்திருந்தனர். தாமரை தான் ஒருவாறு நடந்த அனைத்தையும் எல்லாரிடமும் கூறினாள்.
யாருக்குமே அடுத்து என்ன செய்வது என்று புரியவில்லை! கண்ணீரும் புலம்பலுமாக நேரம் கழிய, எல்லாரும் கிளம்பி சென்னைக்கு செல்வது என்று முடிவாயிற்று. இப்படிபட்ட சூழ்நிலையில் சகுந்தலா, விஸ்வநாதன் பக்கத்தில் இருப்பது மிகவும் அவசியம் என்று சூரியநாராயணன் நினைத்தார்.
கிளம்பி வரும்போது இருந்த சந்தோஷம் அனைத்தும் வடிந்துவிட, கனத்த மனதுடன் சென்னை கிளம்பினர். எப்படியாவது நித்யாவை தேடி கண்டுபிடித்துவிடலாம் என்ற நம்பினர். அவர்கள் வாழ்வில் இனிமேல் நித்யா என்ற ஜீவன் இருக்கபோவதேயில்லை என்பதை அறியாதவர்களாய்……