நிச்சயப் புடவை எடுக்க இன்னும் ஐந்து நாட்களே இருக்கையில் யாழனின் முழு முதற்கவனமும் தங்கையின் ஒவ்வொரு அசைவிலும் உருப்பெருக்கியுடன் பதிந்தது. அவனின் கூறுபோடும் பார்வை அவளை எரிச்சல் படுத்த, அவனிடம் அவ்வப்போது மல்லுக்கு நின்றாள். இன்றும் அது போன்றதொரு நாள்தான்.
“கால் ஹிஸ்டரி, சோஷியல் மீடியா மெசேஜஸ் எல்லாம் பாத்தாச்சா? என் மேல நம்பிக்கையே இல்லையா உனக்கு?” என்று யாழன் கையிலிருந்த தன் அலைபேசியை பிடுங்கியவள் கோபத்தை வெளிப்படுத்த, அசராத அண்ணன்,
“ஆமா பாத்தேன். நான் கண்டுபிடிக்க கூடாதுனு டெலிட் பண்ணிட்டியா எல்லாத்தையும்?” என்று குற்றம் சாட,
அனுமதியின்றி தன்னுடைய அலைபேசியை சோதித்ததோடு மட்டுமில்லாமல் குற்றம் சுமத்தவும் கடுப்பானவள், “இங்க இருக்கு எல்லாம்…” என்று நெற்றியை சுட்டிக்காட்டி, “நீ நினைச்ச உடனே எல்லாம் டெலிட் பண்ண முடியாது.” என்று பல்லைக் கடித்தாள்.
“என்ன நினைச்சிட்டு இருக்க? அவன் யாருனு சொல்ல மாட்டேங்குற. உன் போன்லையும் ஒன்னும் இல்லை… மண்டை காய விடுற நீ…” அன்று இருளில் யாழினியுடன் பேசிய மணியின் முதுகை மட்டுமே யாழன் பார்த்தமையால் அவனால் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை.
“நான்தான் சொல்றேன்னு வாக்கு கொடுத்திருக்கேனே… கண்டிப்பா சொல்லுவேன். அதுவரைக்கும் உன்னால பொறுமையா இருக்க முடியாதா?” என்பதே யாழியின் பதிலாய் இருக்க, தங்கை பாதை மாறுகிறாள் என்று தெரிந்தும் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது அண்ணனாய் அவன் தன்மானத்தை சீண்டிப் பார்த்தது.
“நீ சொல்ற வரைக்கும் எல்லாம் அமைதியா இருக்க முடியாது. எவ்ளோ பெரிய விஷயம் பண்ணிட்டு கமுக்கமா இருக்க. வீட்டுல தெரிஞ்சா என்னாகும்னு கொஞ்சமாச்சும் யோசிச்சு பார்த்தியா?” யாழினியை நினைத்து இந்த ஐந்து நாளாய் உறக்கமில்லை அவனுக்கு.
பத்து நாட்களில் முடிவு சொல்கிறேன் என்ற பின்பு இவன் கவனித்தவரை சந்தேகம் கொள்ளும் அளவிற்கு எதுவும் செய்யவில்லை அவள். முன்பு போல் அலுவலகம் விட்டால் வீடு என்று நேரத்திற்கு வீடு வந்து சேர்ந்தாள். பெரிதாய் அலைபேசி கூட உபயோகப்படுத்தவில்லை என்கவும் அவனுக்கு மண்டை காய்ந்தது. இவள் என்ன நினைப்பில் இருக்கிறாள் என்று அலைபேசியை சோதித்து பார்த்தாகிற்று. யாருக்கும் தொடர்ந்து அழைப்பு விடுத்து பேசவுமில்லை பேசிய அழைப்புகளும் ஐந்து நிமிடங்களுக்கு மேல் நீட்டித்திருக்கவில்லை. எல்லா பாதையும் அடைத்தது போலிருக்க அவளே வாயை திறந்து சொன்னால் தான் ஏதாவது செய்ய முடியும் என்ற நிலைமையில் யாழன் கைகட்டப்பட்டது போல் உணர்ந்தான்.
“மண்டை காயுது யாழி. உன் விருப்பத்துக்கு விடணும்னு தான் உன்னை வற்புறுத்தாம இவ்வளவு பொறுமையா கேட்டுட்டு இருக்கேன்.” என்றான் அண்ணன்காரன் நிதானத்தை கடினப்பட்டு இழுத்து பிடித்துக்கொண்டு.
“என் விருப்பத்துக்கு மதிப்பு கொடுக்குறதா இருந்தா நீங்க யாரும் இப்படி எனக்கு பிடிக்காத வாழ்க்கைக்கு தள்ள இவ்வளவு வேகம் காட்ட மாட்டீங்க.”
“என்ன வேகமா? உனக்கு 26 வயசாகுது யாழி. இதுதான் சரியான நேரம்.”
“உனக்கும்தான் 29 வயசாகுது நீ ஏன் இன்னும் சிங்கிளாவே இருக்க.” என்று யாழி எதிர்க்க, நெத்தியில் அடித்துக்கொண்டான் அண்ணன்.
“இந்த கிரகத்துலதான வாழுற நீ? எந்த வீட்டுல தங்கச்சிக்கு முன்னாடி அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி இருக்காங்க. நீ அறியாமைல பேசுறியா இல்லை வீம்புக்கு பேசுறியான்னு தெரியல யாழி. இந்த கல்யாண பேச்சு எடுத்ததுலேந்து உன்னை புரிஞ்சிக்கவே முடியல.”
அண்ணனின் பேச்சில் தங்கையின் முகம் கூம்பிவிட, “எனக்கு எதுவும் தெரியலைனு ஏன் எல்லாரும் நினைக்கறீங்க? காலங்காலமா கடைபிடிக்குற எல்லாத்தையும் கேள்வி கேட்காம ஒத்துக்கிட்டா அவள் உலக நடப்பு புரிஞ்ச பொண்ணு. அதுவே கேள்வி கேட்டு வழக்கத்தை மாத்த நினைக்குற பொண்ணு உலகம் புரியாத பொண்ணா?” என்று வாதிட்டாள்.
நீண்டதொரு மூச்சை இழுத்து தன்னை ஆசுவாசப்படுத்திய யாழன் தொடர்ந்து, “நான் அப்படி சொல்லல. மாப்பிள்ளை வீட்டுல உன் விருப்பத்துக்கு ஓகே சொல்லும் போது நல்ல குடும்பத்தை தட்டிக்கழிக்க, ஏன் இப்படி வீம்புக்கு பிரெண்டு அதுஇதுனு புதுசா இழுத்துவிடுற? மாப்பிள்ளைக்கிட்ட நல்லா பேசி பழகு உனக்கே எல்லாம் பிடுச்சிரும்.” என்று அவளை சமாதானம் செய்யும் நோக்கில் பொறுமையாய் பேச, பிடிவாதக்காரிக்கு ஏது பொறுமை?
“எனக்கு பிடிக்காத வாழ்க்கையை ஏத்துக்கோ ஏத்துக்கோன்னு இப்படி மாத்தி மாத்தி சொல்ல உறுத்தலையா உனக்கு? நாளைக்கு நான் பிடிக்காத வாழ்க்கையில புழுங்கி சாகுறதை பார்க்கத்தான் இதெல்லாம் பிடிவாதமா ஏற்பாடு பண்றீங்களா?” என்று எதிர்த்து எதிர்த்து பேச, பொறுமையை இழந்தவன் கைஉயர்த்தி இருந்தான்.
அவளின் அதிர்ந்த முகம் கண்டு அடிக்க ஓங்கிய கையை சட்டென கீழ் இறக்கிய யாழன், “என்னையே கை ஓங்க வச்சிடீல்ல… போடி… என்னமாச்சும் பண்ணிட்டு போ.”
யாழன் அடிக்க கை உயர்த்தியதில் விதிர்விதிர்த்து நின்றவள், தொண்டைக் கமற இரண்டடி பின்வைத்து சுவரில் மோதி சரிந்தமர்ந்தாள். நெஞ்சு படபடவென அடிக்க, வியர்வை முத்துக்கள் ஒன்றின் பின் ஒன்றாய் துளிர்க்க, முதல்முறையாய் ஐயம் வந்து ஒட்டிக்கொண்டது வாழ்க்கையை நினைத்து.
எல்லாரையும் எதிர்த்துக் கொண்டு என்ன செய்யா போகிறாய்?
வீட்டினரை எதிர்த்து நிற்கும் அளவிற்கு மணிகண்டன் முக்கியமானவனா என்ன?
அனைவரையும் எதிர்த்துக்கொண்டு அவனை ஏற்க முடியுமா?
ஏற்க தகுதியானவனா?
ஏற்க அவனே தடையாய் இருக்கும் போது,
ஏற்றால் வண்ணம் பூசுவானா? வன்மை புகுத்துவானா?
உளம் கேள்விக் களமாய் மாறி வினாக்களை மட்டுமே மாற்றி மாற்றி எழுப்ப, ஐந்து நாட்களாய் மணி தான் வேண்டும் என்று பிடித்து வைத்திருந்த பிடிவாதத்தில் மெல்லிய விரிசல் விட்டது.
இங்கு இவள் இப்படி இருக்க அவளுக்கு பின்னே அவன் வீட்டுச் சுவரில் சாய்ந்திருந்த மணியின் முகம் மலர்ந்திருந்தது. கையில் அலைபேசி. அதில் ‘யாழி’ என்று பதிந்து வைத்திருந்த அவள் எண்ணை, அவள் பெயரை கண்ணிமைக்காமல் அவளே இருப்பது போல் பாவித்து இமைகொட்டாது பார்த்தான்.
‘எனக்கு எட்டாத தூரத்துல இருந்த ஆகாயம் சரிஞ்சு என்கிட்ட வந்திருக்கு.’ என்றபடி அலைபேசியில் இருக்கும் அவள் பெயரை நுனிவிரல் கொண்டு தீண்டியவன், ‘அதுல விண்மீன் இருந்தாதான் அழகு. அந்த விண்மீன் ஜொலிச்சா தான் அதுக்கு மதிப்பு. சீக்கிரம் ஜொலிக்கும்.’ என்று மீண்டும் அவள் பெயரை தீண்ட, தொடுதிரை அலைபேசி அவளுக்கு அழைப்பை விடுத்தது.
அழைப்பு போகவும் பதறி அடித்து துண்டித்தவன் நிம்மதி மூச்சுவிடும் நேரம் அழைப்பு வந்தது யாழியிடமிருந்து. எடுக்கவா வேண்டாமா என்ற சிந்தையில் போராட்டம் ஒருபுறம் எடுத்து பேசு என்று உளம் மறுபுறம் குடைச்சல் கொடுக்க, உளம் வென்று அழைப்பை ஏற்றான்.
“கால் பண்ணி இருந்தீங்க.” கேள்வியாய் இல்லாது மொட்டையாய் அவள் பேச,
“தெரியாம கைபட்டு வந்துருச்சு.” என்று பதில் கூறினான் மணிகண்டன்.
மறுகணமே, “ஓகே. பை.” என்று அவள் அழைப்பை துண்டித்துவிட,
‘என்ன வச்சிட்டா?’ என்று முழித்தான் மணி, ‘இப்படி அமைதியா போற ஆள் இல்லையே. என்னாச்சு இவளுக்கு?’ என்று இவன் மீண்டும் அழைப்பு விடுக்க, அழைப்பு முதல் ஓசையிலேயே எடுக்கப்பட்டது.
“என்னாச்சு? ஏதாச்சு பிரச்சனையா?” என்று மணி கேட்க மறுபுறம் எந்த ஓசையும் இல்லை.
“யாழி லைன்ல இருக்கியா? என்னாச்சு? ஏதாவது பிரச்சனையா?” என்று மணி மீண்டும் கேட்க,
“நீ கேட்டில்ல அன்னைக்கு ‘என்னை பத்தி என்ன தெரியும் உனக்கு? எந்த தைரியத்துல நீ என்கிட்ட இப்படியெல்லாம் வந்து பேசிட்டு இருக்கனு?’ இப்போ நான் அமைதியா இருக்கவும் எனக்கு ஏதோ பிரச்சனைன்னு பதறி அடிச்சு போன் போட்டு பேசுற பாரு. இதுதான் எனக்கு வேணும். எனக்கு ஒன்னுன்னா நீ உடனே வர… என்னை புரிஞ்சிக்குற. இதைவிட என்ன வேணும்னு எனக்கு தோணுச்சு. ஆனா…” என்று அவள் இழுக்க,
இவனது இரத்த நாளங்களில் குருதி வேகத்தை கூட்டி பாய்ந்தது, “என்ன ஆனா?”
“எனக்கு தம் பிரியாணி, RO தண்ணியைத் தவிர வேற எந்த தண்ணியும் தம்மும் சுத்தமா பிடிக்காது. அந்த பழக்கம் உள்ளவங்க என் பிரெண்டா அண்ணனா யாரா இருந்தாலும் அவங்களை எனக்கு பிடிக்காது.” என்றாள் அழுத்தி நிதானமாய்.
இப்போது நிசப்தமானது அவன் புறம்.
“பேச்சையே காணோம்?” யாழினி பேச்சை முன்னெடுக்க,
“இப்போ அந்த பழக்கமெல்லாம் இல்லை.” உள் சென்ற குரலில் வந்தது பதில்.
“ஓ… அப்போ முன்னாடி இருந்துச்சு?” என்று கறார் பிடித்தாள் பெண்.
“வேலை இல்லாத காலத்துல ஆரம்பத்துல அம்மா திட்டும் போது என்ன செய்றதுன்னு தெரியாம ஸ்ட்ரெஸ்ல தப்பு செஞ்ச காலங்கள் அதெல்லாம்…” என்றான் பழைய நினைவுகளை கலைத்து வசவுகளை நினைவுகூர்ந்து.
ம் கொட்டி இடைவெளி விட்டவள் இயல்பாய், “அப்போ உங்களை பிடிச்சவங்க லிஸ்ட்ல சேத்துடவா?” என்று கேட்கையில் ஜிவ்வென்று சிலிர்த்தது மணிக்கு.
“சொல்லுங்க MK சேத்துடவா?” என்றாள் மீண்டும்.
அவள் மீண்டுமொருமுறை கேட்க, தொண்டை செறுமியவன், “நாளைக்கு புது வேலையில ஜாயின் பண்றேன்.” என்று தன் மலர்விற்கான காரணத்தை அவளிடம் பகிர்ந்தான்.
“என்ன வேலை? முன்ன மாதிரி சர்வரா எல்லாம் போகாத MK.” கரிசனம் கொட்டிக்கிடந்தது யாழினியின் பேச்சில்.
“இல்லை அந்த மாதிரி எல்லாம் இல்லை. ஸ்கூல் கார்பரேட் ஆபீஸ்ல கிளெர்க். அண்ணனுக்கு தெரிஞ்சவங்க மூலமா கிடைச்சுது.” மாநகரின் முக்கிய பள்ளி ஒன்றில் வேலை கிடைத்திருப்பதை மகிழ்ச்சியாய் பகிர, யாழியிடத்திலும் உவகை தொற்றிக்கொண்டது.
“சூப்பர் MK.”
“போக போக ஒர்க் பர்பார்மென்ஸ் பார்த்து ப்ரோமோஷன் வாங்கித்தரேனு சொல்லி இருக்காங்க.”
அவன் பகிர்ந்த தகவலில் உற்சாகம் ஊற்றெடுக்க, “சீக்கிரம் எல்லாம் செட் ஆகிடும் MK. இனி டாப் கியர்ல போகப்போகுது உன் லைஃப்…” என்று அவனுக்காய் மலர்ந்தது அவள் மனமும் முகமும்.
அவள் குரலிலேயே அவள் மகிழ்வை உணர்ந்தவன் தயக்கத்துடன், “உன் லைஃப்? எப்படி போகுது?” என்று வினவ, அப்படியே அடங்கி மெளனியானாள் யாழினி.
“என்ன யாழினி ஒன்னும் சொல்ல மாட்டேங்குற?”
“இன்னும் அஞ்சு நாள்ல நிச்சயபுடவை எடுக்கப்போறோம்.” என்று அவள் நடக்கவுள்ளதை சொல்ல, காற்றை பிடுங்கிவிட்ட பலூன் போலானது மணியின் அகம்.
துக்கம் மெல்லச் சூழ, “ஓ… எப்போ நிச்சயம்?” என்ற வினா மட்டுமே மணியிடம்.
அவன் அகம் திறப்பான் என்று எதிர்பார்த்த யாழியோ அவனின் சாதாரணமான பேச்சில் உண்டான ஏமாற்றத்தை மறைத்து நிச்சயித்த தேதியை சொல்ல இவனும் அமைதியாய் கேட்டுக்கொண்டு,
அழைப்பு துண்டிக்கப்பட்டதும் நிராசையுடன் அலைபேசியை பார்த்த மணி அப்படியே தரையில் சரிந்து குறுகி படுத்தான்.
‘என்றும் நீ எட்டாக்கனி தானா?’ வேதனை வீறிட்டு கிளம்ப, விழி நீரும் நான் இருக்கிறேன் உனக்கு என்று வழிந்தது.
நேரெதிராய் மறுபுறம் யாழினி அலைபேசியை மெத்தையில் தூக்கி எரிந்தாள், ‘லூசு மாக்கான்… ஆல் தி பெஸ்ட்டாம்! இவன் பெஸ்ட்ட யாரு கேட்டா இப்போ? மனசுல இருக்குறதை வாயை திறந்து சொல்றானா பாரு. வேண்டாம்னா வேண்டாம்னு சொல்லிட்டு போயிட்டே இருக்க வேண்டியதுதானே? எதுக்கு இப்படி விளக்கம் கொடுத்து என் கூட பேசணும்? அவனுக்கும் மனசுல இருக்கு ஆனா சொல்ல மாட்டேங்குறான் பக்கி. நீயும் சேர்ந்து என்னை படுத்துறியே MK. நேர்ல பாக்கும் போது உனக்கு இருக்குடா கச்சேரி.’ என்று சபதம் பூண்டவள் அப்போதே அவனை பழிதீர்க்கவென வாட்ஸ்ஆப்பில் புகைப்படம் ஒன்றை அனுப்பினாள்.
அடுத்த நொடியே அதை மணி பார்க்கவும் செய்ய, அவள் நினைத்தது போலவே அப்படம் அவனை குத்திக் கிழித்தது. தொண்டை அடைத்து கண்ணீர் ஊற்றெடுத்து கழுத்து வரை வழிய நாசியும் நீரை இறைத்தது.