உணவு இடைவேளை வரையிலும் நிமிர கூட நேரம் இல்லாமல் வேலை நெட்டி முறித்தது.
இத்தனை நாட்களின் விடுப்புகளுக்கு ஈடாய் வேலைகள் அணிவகுத்து நிற்க அவற்றில் மூழ்கி போன உதயாவிற்கு ஃபுட் கோர்ட் வந்தபோது தான் கணவனின் நினைவு வந்தது.
மதியம் சாம்பாரும் உடன் ஒரு பொரியலும் செய்து வைத்துவிட்டு தனக்கும் எடுத்துக் கொண்டு வந்துவிட்டாள்.இத்தனை நாட்கள் அத்தை,அண்ணியின் சமையலே ஓடியிருக்க திருமணம் முடிந்து முதன்முறையாய் இன்று தான் சமைதிருக்கிறாள்.
“அவசரமா சமைச்சது..நல்லா இருந்ததா தெரியலையே..சாப்பிட்டு இருப்பாங்களா..ஏதோ மீட்டிங் இருக்குன்னு சொன்னாங்களே..கிளம்பி இருப்பாங்களோ…என்ன பண்ணிட்டு இருப்பாங்க..”
தன் போக்கில் அவள் மனதில் சிந்தனை ஓட எதிரே அமர்ந்திருந்த கல்பனா எட்டி அவள் பாக்ஸை பார்த்துவிட்டு,
“நீயே செஞ்சதா உதயா..நம்பி வாயில் வைக்கலாமா..” என்று சந்தேகமாய் கேட்க அவள் எதிர்பாராத நேரத்தில் ஒரு வாய் எடுத்து ஊட்டியவள்,
“எப்படி..” என்று புருவம் உயர்த்த மென்று விழுங்கிய கல்பனா,
“ம்ம்ம்..பொய் காச்சும் சுமார்னு சொல்ல நினைச்சாலும் நாக்கு ஒத்துக்க மாட்டேங்குதே..சாம்பார்கூட இவ்வளவு டேஸ்ட்டா செய்ய முடியுமா என்ன..ப்பாஆஆ..செம்ம போ..இத்தனை வருஷத்துல ஒருநாள் எனக்கு செஞ்சு கொடுத்திருக்கியாடி..”
என்று இரசித்து சொல்ல முகம் மலர்ந்த உதயாவிற்கு உதய் என்ன சொல்வான் என்று அறிந்துக் கொள்ளும் ஆர்வம் பிறக்க எதையும் யோசிக்காமல் பட்டென்று கையில் இருந்த போனில் அழைப்பு விடுத்துவிட்டாள்.
சில ரிங்களுக்கு பிறகு,
“சொல்லு உதயா..”
என்று ஆளுமை நிறைந்த அவன் குரல் செவிப்பறையை தீண்டியபோது கேட்கவந்தது மறந்து போக,
“ஆங்..ஹலோ..”
என்றாள் மெல்லிய குரலில்..
“ம்ம் சொல்லு உதயா..”
என்று அவன் கேட்கவும் என்ன சொல்ல என்று முழித்து,
“என்ன பண்றீங்க உதய்…”
அவள் கேட்க,
“ஏன்..என்னாச்சு..”
என்று அப்பொழுதும் விசாரணை பாவனையிலே கேட்பவனின் தலையிலே ஒன்னு வைக்கலாம் போல் இருந்தது.
“சும்மா தான் கேட்டேன்..அதுக்கு ஏன் பரபரக்குறீங்க..”
“அது சரி..நீ வேலை நேரத்தில் கால் பண்ணி பேசினால் நான் என்ன ஏதுன்னு நினைக்க கூடாதா..??” என்றவன் “மேடம் அங்க பொழுது போகாமல் என்னுட்ட கால் பண்ணி டைம் பாஸ் பண்றீங்களோ..”
என்று வம்பிழுக்க அவளுக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வந்தது.
“நான் ஒன்னும் வெட்டியா இல்ல..இப்ப தான் சாப்பிட வந்தேன்..வீட்டில் இருக்காரே..சாப்பிட்டு இருப்பாரான்னு கேட்க நினைத்தேன் பார் என்னை சொல்லணும்..”
என்று வெடுக்கென கூறி அழைப்பை துண்டிக்க போக,
“ஹே..வைச்சிடாதடி..”
என்று அவசரமாய் சொன்னவன்
“ஹப்பா..கோபத்திற்கு மட்டும் குறைவில்ல..”
என்று சிரிக்க,
“ஏன்..வேற எதுல குறையாம்..”
என்று கோபமாய் கேட்க நினைத்தாலும் சிணுங்களாய் தான் வந்தது.
உதட்டை சுளித்து சிணுங்கும் அவள் முகம் இங்கே கண்ணாடி முன் நின்ற உதய்யின் மனக்கண்ணில் விரிந்து இம்சித்தது.
மொபைலை கழுத்தடியில் இடுக்கி சட்டை பொத்தானை மாட்டிக் கொண்டிருந்தவன்,
“ம்ஹூம்..சொன்னால் மட்டும்..” என்று ஆழ்ந்த குரலில் நிறுத்தி பெரூமூச்சுவிட்டதன் வெம்மை அவளை தீண்டியதுபோல் உடல் சிலிர்த்தாள் உதயா.
அவன் என்ன சொல்ல வருகிறான் என்று புரியாத குழந்தை இல்லையே அவள்..மனம் படபடக்க பதில் சொல்ல அவள் வார்த்தைகளை தேடிக் கொண்டிருந்த நிலையில் அவனே,
“நான் வெளியே கிளம்பிட்டு இருக்கேன் உதயா..ஈவினிங் பார்ப்போம்..பை..”
என்று கூறி வைத்தபின்பு தான் கால் பண்ணதற்கான விசயத்தை கேட்கவில்லையே என்று அவளுக்கு உரைக்க சிரிப்புடன் தலையில் தட்டிக் கொண்டவள் தன்னை வினோதமாய் பார்க்கும் கல்பனாவை கண்டதாகவே தெரியவில்லை.
அதன்பின் வேலை முடிந்து அவள் கிளம்பும் முன் அவனுக்கு அழைக்க அவள் எண்ணும்போதே அவனிடம் இருந்து குறுஞ்செய்தி வந்தது.தான் வர தாமதமாகும் என்றும் அவளையே வீட்டிற்கு போய்விடுமாறும் அவன் அனுப்பியிருக்க ‘அவனோடான பைக் ரையிட் மிஸ்ஸாகிடுச்சே..’ என்று சின்னதாய் ஒரு ஏமாற்றம் எழுந்தாலும் அதனை தவிர்த்து கேப்பிலே வீடு வந்து சேர்ந்தாள்.
இன்னும் அந்த அப்பார்ட்மெண்டில் அவளுக்கு யாருடனும் பழக்கம் இல்லை.
எனவே எதிர்ப்பட்ட யாரையும் கண்டுக் கொள்ளாது தங்கள் வீட்டில் நுழைய போனவளை,
“ஹே பொண்ணே..இங்க பாரும்மா..”
என்று யாரோ அழைக்க சுற்றும் முற்றும் பார்த்தாள் பின்னால் ஒரு பெண்மணி தான் நின்றிருந்தார்.
“கூப்டீங்களா ஆண்ட்டி..”
“ஆமாம்மா..நான் உங்க வீட்டுக்கு எதிர்த்த வீடு தான்..நீங்க குடி வந்து ஒரு வாரம் ஆகிடுச்சே அக்கம் பக்கம் இருக்கோம்..அறிமுக ஆகிக்கலாம்னு பார்த்தால் கண்லே படமாட்டேங்கிறீங்களே..”
அவர் சரளமாய் பேச, ‘இந்த ஆண்ட்டி நமக்கும் மேல பேசுவாங்க போலையே..’
என்று எண்ணியவளாய்,
“அதுக்கென்ன ஆண்ட்டி…இப்ப இண்ட்ரோ ஆகிக்கலாம்..என் பேரு உதயா..”
என்று புன்னகையோடு சொல்லவும் அவரும் தன் பெயர் பத்மா என்றவர் தன் கணவர்,குழந்தைகள் என்று குட்டி அறிமுகப்படலத்தை அரங்கேற்றி,
“புதுசா கல்யாணம் ஆனவங்களா…பார்க்க சின்ன பொண்ணா தெரியுற..எதாவது உதவி வேணும்னா தயங்காம கேளும்மா..”
என்று அவர் மனதார கூறியதே அவளுக்கு சந்தோஷத்தை கொடுக்க, “தேங்க்ஸ் ஆண்ட்டி..” என்று சிரிப்புடன் விடைப்பெற்று தங்கள் வீட்டிற்கு வந்துவிட்டாள்.
நேரம் ஓடினாலும் உதய் இன்னும் வராமல் இருக்கவும் அவள் அன்பேக் செய்யாமல் இருந்த பொருட்களை எல்லாம் அடுக்கி வைத்துபடி பொழுதை போக்க இரவு ஒன்பது மணிபோல் வீடு திரும்பினான்.
கதவு திறந்தவளை நிமிர்ந்தும் பார்க்காது முகத்திலும் உடலிலும் சோர்வும் எரிச்சலும் போட்டிப்போட சோபாவில் சென்று பொத்தென்று விழுந்தவனை கண்டு,
“என்ன உதய்..”
என்று கரிசனமாய் கேட்க, “ம்ச்..” என்று உச்சுக் கொட்டியவன்,
“ஒன்னுமில்ல..ஒரு கப் காஃபி கொடேன்..”
என்று கேட்க,
“இந்நேரத்தில் காஃபியா..?? வேணாம்..நான் சப்பாத்திக்கு எல்லாம் ரெடி பண்ணிட்டேன்..ஒரு ஃபை மினிட்ஸ்ல போட்டு தரேன்..”
என்று சொல்ல, “கேட்டா கேட்டதை கொடு போதும்..”
என்றான் பட்டென்று.. மற்ற நேரமாக இருந்திருந்தால், ‘இதென்ன ஹோட்டலா..’ என்று பதிலுக்கு நின்றிருப்பாள்.ஆனால் அவன் சோர்வை உணர்ந்து அமைதியாய் காஃபி கலக்க கிட்சன் செல்ல சில நிமிடங்களில் தன் தவற்றை உணர்ந்த உதய்,
“ச்சே..இது என்னடா புது பழக்கம்..வெளி டென்ஷனை வீட்டில் காட்டுவது..”
என்று தன்னையே கடிந்துக் கொண்டான்.
அதற்குள் காஃபியோடு வந்தவள் அமைதியாய் நீட்ட அதனை அவன் வாங்கி கொண்டதும் திரும்ப எத்தனித்தவளை மறுக்கையால் பிடித்து நிறுத்தினான் கண்களை சுருக்கி
“சாரி..” என்ற வார்த்தையோடு..
அதில் அவள் முகம் மென்மையுற, “குடிங்க..” என்று கப்பை கண்களால் காட்டியவள் அவன் அருகில் அமர்ந்து,
“இன்னைக்கு போன வேலை சரியா முடியலையா..”
என்க நெற்றியை பிடித்துவிட்டபடி,
“முடியலை என்கிறதவிட போன இடத்தில் ரொம்ப கடுப்பேத்திட்டானுங்க..அதான்…”
என்று எரிச்சலாய் சொல்ல அவள் ‘என்னாச்சு’ என்று கேட்கவும்,
“விடும்மா..அதை திருப்பி யோசிக்கவே பிடிக்கல..” என்று கூறி காஃபியை வாயில் சரித்தான்.சூடான பானம் தொண்டையில் இறங்கியதுமே ஒரு ஆசுவாச உணர்வை தந்தது.
அவன் தலையை பிடித்து கொண்டதை கண்டு,
“தலை வலிக்கிதா..” என்றவள் தானே எழுந்து சென்று மஸாஜ் செய்தாள்.
அவளது வெண்பஞ்சு விரல்கள் நெற்றியை பிடித்துவிட்டு முடிகற்றைக்குள் நுழைந்து ஜாலம் செய்யவும் சுகமானதொரு உணர்வு தாக்க,
“உதயா..ரிலாக்ஸா இருக்குடா..”
என்றான் மெல்லிய குரலில்..அவன் குரலின் வேறுப்பாட்டை உணராமல் கர்ம சிரத்தையாய் தன் வேலையை தொடர,
“உதயா..அப்படியே கழுத்தையும் பிடிச்சு விடேன்..அங்கேயும் வலிக்குது..”
என்று விளையாட்டாய் கூறி தலையை சாய்க்க சற்று தயங்கினாலும் அவன் சொன்னதை அவள் செய்யவும் அவனுக்கு ஏக குஷி..!!
‘மவனே பாவம் பார்த்து மசாஜ் செய்யுறா..உன் கள்ளத்தனம் தெரிஞ்சிது..கழுத்த நெறிச்சிடுவாடோய்..” என்று அவன் மனம் எச்சரித்ததை பொருட்படுத்தாது வாகாய் சாய்த்துக் கொண்டவன் உணர்ச்சி வேகத்தில் அவள் கையை பற்றி இதழில் ஒற்றி எடுக்க அப்பொழுது தான் அவனை கண்டுக் கொண்டாள்.
“அடப்பாவி..” என்று தோளிலே பட்டென்று ஒன்று வைத்து அங்கிருந்து செல்ல பின்னணியில் அவன் சிரிப்பு அவளை தொடர்ந்தது.
அவன் ரெஃப்ரெஸாக உள்ளே சென்றதும் உதயா சப்பாத்தி தேய்க்க கிட்சனுள் நுழைந்துக் கொண்டாள்.
என்ன முயன்றும் அவன் இதழின் குறுகுறுப்பு அவள் கைகள் உணர பெண்ணவள் மனம் நூதன உணர்வுகளால் தடுமாறியது.
“உதயா..ம்ஹூம்..ஒரு முத்ததுக்கே இப்படியா..நோ நோ நீ ரொம்ப ஸ்ட்ராங்..ஸ்ட்ராங்கா இரு..ஸ்ட்ராங்கா இரு”
என்று அவள் விடாமல் முணுமுணுக்க,
“ஸ்ட்ராங்கா இருந்தால் சப்பாத்தியை சாப்பிட முடியாது செல்லம்..”
என்று காதருகில் கேட்க குரலில் திடுக்கிட்டு திரும்ப வெகு அருகில் அவளின் அவன்..
அவளை சீண்ட மட்டுமே அருகில் வந்தவனுக்கும் அவள் முகத்தின் பாவனை தடுமாற செய்ய ரெண்டடி பின்னால் நகர்ந்து,
“நான் டிஸ்டர்ப் செய்யல..” என்று கைக்கட்டி நிற்க அவன் பார்வையே அவளை பெரிதும் டிஸ்டர்ப் பண்ணியது.
“இன்னைக்கு என்ன இப்படி படுத்துறான்..” என்று எண்ணியவளாய் தன்னை கட்டுப்படுத்தி, முயன்று கவனத்தை சப்பாத்தியின் மீது வைக்க பார்வையாளனாய் நின்றவனால் அதற்கும்மேல் வேடிக்கை மட்டுமே பார்க்க முடியாமல் அவள் பின்னோடு இறுக அணைத்துக் கொள்ள,
“உதய்..” என்றாள் அதிர்ச்சியாய்..
“இனிமேலும் என்னால நல்லவனா இருக்க முடியும்னு தோனல உதயா..நானும் எவ்வளவு நாள் தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது..” என்ற அதரங்கள் கழுத்தடியில் புதைந்து போக கைகளோ அத்துமீற மனதில் நிறைந்தவனை தடுக்கவும் முடியாமல் தவித்தவளுக்கு, “அவனை காதல் சொல்ல வைக்கிறேன் பார்..” என்று எடுத்த சபதம் எல்லாம் நினைவடுக்கில் காணாமலே போனது.
“உ..உதய்..” என்று அவளுக்கே கேட்காத குரலில் முணுமுணுக்க அதனைவிடவும் ஆழமாய் கிறக்கமாய்,
“ப்ளீஸ் உதயா..” என்று காதுக்குள் ஒலித்த குரலில் பாகாய் உருகி அவனிடமே அவள் கரைய அதன்பின் அங்கே பேச்சுக்களுக்கு வேலை இன்றி காதலின் அழகிய அரிச்சுவடி நாடகமொன்று அரங்கேறியது.
மூன்றாம் ஜாமத்தில் தூங்காமல் தங்கள் அறையில் இருவரும் ஒருவர் மற்றவர் அணைப்பில் கட்டுண்டு இருக்க,
“உதயா…பசிக்குதுடி..”
என்று அவன் கிசுகிசுப்பாய் சொல்லவும் அவன் கையை வலிக்க கிள்ளியவள்,
“நல்லா பசிக்குமே…ஃபராடு..ஃபராடு..”
என்று முறைக்க வாய்விட்டு சிரித்தவன்,
“சரிடி..சாப்பிட்டு வந்து அப்புறம் தெம்பா கிள்ளுவ..இப்ப வா..”
என்று சொல்லி அவளை குண்டுக்கட்டாய் தூக்கிவிட, “அய்யோ..” என்று அலறியவள்,
“எதாவது செய்யும் முன்னாடி சொல்லிட்டு செய்யா..”
என்க, “ஹாஹா உத்தரவு மகாராணி..” என்றவன்,
“இப்ப இந்த பட்டர்பாக்ஸ் கன்னத்தில் முத்தம் கொடுக்க போறேன்..”
என்று ஆரம்பித்து சொல்லி சொல்லி அவன் செய்த அட்டூழியங்களில் இருந்து தப்பிப்பதற்குள் போதும் போதும் என்றானது.
கிட்சனில் வாயிலில் இறக்கிவிடவும்,
“நேத்து அரிசி மூட்டைன்னு சொன்னீங்கள்ல..இன்னைக்கு எப்படி தூக்குனீங்களாம்..”
என்ற நொடிப்போடு அவள் உள்ளே போக சிரிப்புடன் பின் தொடர்ந்தவன்,
“இனி அல்லாத்துக்கும் பழகிக்க வேண்டியது தானுங்க அம்மணி..”
என்றான் போலி பவ்வியத்தோடு..
பாதி தேய்த்தும் தேய்க்காமல் இருந்த மாவை மறுபடியும் உருட்டி அவள் செய்ய அருகில் கிட்சன் மேடையில் ஏறியமர்ந்தான் உதய்.
செய்து வைத்திருந்த சன்னா மசாலாவை சுட வைத்தவள் சில நிமிடங்களில் சப்பாத்தியை கல்லில் போட்டு அவனுக்கு சுடசுடப் பறிமாற அதனை இரசித்து உண்டவன்,
“ஆனாலும் உதயா..உன் கையில் ஒரு நளனே கூடியிருக்கான்..என்ன டேஸ்ட்டா சமைக்கிற நீ..”
என்று அவன் சொல்ல அழகாய் புன்னகைத்தாள் அவள்.
“பட்..எப்படி வீட்டு வேலை எல்லாத்தையும் மேனேஜ் பண்றது..என்னாலையும் எப்போ போவேன் வருவேன்னு சொல்ல முடியாது..பேசாமல் வேலைக்கு ஆள் வைச்சுப்போமா..”
“ம்ம்ம்..எனக்கும் அதான் சரின்னு படுதுங்க..அப்போ நான் பத்மா ஆண்ட்டிட்ட கேட்கறேன்..”
“அது யாரு புது ஆண்ட்டி..”
என்று அவன் கேட்கவும் மாலை நடந்ததை சொன்னவள்,
“அவங்க வீட்டுக்கு வரவங்களையே இங்கயும் வர சொல்லுவோம்..” என்று சொல்ல அவன் சரி என்பதாய் தலையசைத்தான்.
அவன் சாப்பிட்டதும் இறங்கி,
“நீ சாப்பிடு..நான் செய்றேன்..” என்று தான் அமர்ந்திருந்த இடத்தில் அவளை அமர வைத்தவன் மிச்சதை அவளுக்கு சுட்டுக் கொடுக்க இனிமையான அத்தருணம் நீண்டுக் கொண்டே இருக்காதா என்று அவர்கள் மனம் ஏங்கியது.
“இன்னைக்கு நாள் ரொம்ப மோசம்னு நினைச்சேன்..எவ்வளவு கடுப்புல இருந்தேன் தெரியுமா..ஆனால் இவ்வளவு அழகாய் முடியும்னு நினைச்சே பார்க்கலை…அப்படியே பறக்கிறா மாதிரி இருக்கு..”
என்று அவன் ஆழ்ந்து சொல்ல,
“பார்த்து எங்கயாவது முட்டிக்காமல் கீழ வாங்க..”
சாப்பாத்தியை வாயில் அதக்கியபடி அவள் இடக்காய் கூறவும்,
“ம்ம்ம் கொழுப்புடி..” என்றவன் பின் அவள் தலையை கலைத்துவிட்டு,
“நான் ரொம்ப லக்கி தெரியுமா..” என்றான் சிரிப்புடன்.
“ஏனாம்..”
“உன் லவ் எனக்கு கிடைச்சதுக்கு..”
“சும்மா சொல்லாதீங்க…லவ் சொன்னப்ப எல்லாம் கால் காசுக்கு மதிக்கல..இப்ப லக்கியாமாம்..”
“அது சும்மா வெளியே பந்தாவா காட்டிக்கிட்டது.நீ என்னையே சுத்தி வந்தப்போ ஐஸ் மழை பொழியுறா மாதிரி ஜிலுஜிலுன்னு தான் இருக்கும்..இதெல்லாம் சாத்தியம் இல்லைன்னு ஒதுங்கிபோனாலும் உன் காதலை நான் இரசிக்காமல் இருந்தது இல்ல தெரியுமா..அப்படி என்னுட்ட என்னடா இவ கண்டானு என்னை நானே பலவாட்டி கேட்டிருக்கேன்..அதுவும் நீ சொன்ன பாத்தியா ‘யு ஆர் மை ட்ரஷர்னு..’ அந்த வரி கடந்த ரெண்டு வருஷமா என்னை விடாம தொறத்துச்சு..ரியலீ..
என்னை ரொம்பவே ஸ்பெஷலா ஃபீல் பண்ண வைச்சிருக்க உதயா…நம்ம முதல் சந்திப்பில் இருந்தே..!! எனக்கு தெரிஞ்சு என்னை சைட் அடிச்ச ஒரே பொண்ணு நீ தான்..”
என்று சிரித்தவன் தோளில் ஒன்று வைத்தவள் கன்னங்கள் அந்தி வானின் நிறத்தைப் பூசிக்கொண்டது.
அதன் பின்னான நாட்கள் எல்லாம் தங்களிற்கென்றே ஆன தனி வானில் சிறகடித்து பறந்தது அந்த இளம் ஜோடி புறாக்கள்…
வெளியுலகில் தகிக்கும் சூரியனாய் ஏமாற்றங்களும் வெறுமையும் சுட்டெறித்த பொழுதெல்லாம் அவனை அணைத்து ஆறுதல் படுத்தும் வெண்மதியாய் உதயா இருந்தாள் என்பதை அவளே அறியவில்லை.
அவளையும் கலவரப்படுத்த வேண்டாம் என்பதால் அவன் பிரச்சனைகளை அவளோடு பகிராமல் தன்னுள்ளே புதைத்துக் கொண்டான்.நீருக்குள் பொத்தி வைக்கும் பூவைப்போல அது தன்னுள்ளேயே மறைக்க முடியாது என்பதனை அறியாமல்..
இங்கு வெண்பா இத்தனை வருட பிரிவை மறப்பதுபோல் தன் தாய் வீட்டோடு சீராடி மகிழ்ந்தாள்.அதிலும் அவள் திறமையை காட்ட கிடைத்த வாய்ப்பு அவளை தன் வாழ்வில் அடுத்தக்கட்டத்திற்கு இழுத்து சென்றதாய் தோன்ற கொண்டவனின் துணையோடு அயராது உழைத்தாள். அதன்பலன் அந்த மாத இறுதியில் கீதாஞ்சலி அர்கனைஸ் செய்த ஃபேஷன் ஷோவில் பிரதிபலித்து பலரின் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் பெற்று தர மொத்தக் குடும்பமும் அவள் வெற்றியை கொண்டாடியது.
உதய் – உதயா வார இறுதிகளில் கோவையில் ஒருவாரமும் திருப்பூரில் ஒருவாரம் என்றும் மாறி மாறி விடுமுறை நாட்களை கழித்தனர்.திருப்பூர் வரும் சமயங்களில் அவளை மட்டும் வந்து விட்டுவிட்டு தான் வீட்டு சென்றுவிடுவான்.உதயா எவ்வளவு வற்புறுத்தினாலும் அங்கே தங்க மாட்டான்.அவளும் அவனை ஒரு அளவிற்கு மேல் கட்டாயப்படுத்த முடியாமல் விட்டுவிடுவாள்.
இப்படியாக நாட்கள் செல்கையில் ஒருநாள் வழக்கத்தைவிட தாமதமாக வீடு திரும்பிய உதய் கையில் வைத்திருந்த கோப்புகளை சுவற்றில் வீசி எரிந்தவன் அதில் சிதறிய காகிதங்களை போல் அவன் பொறுமையை மொத்தமாய் சிதறவிட்டு நின்ற தோற்றம் உதயாவை அச்சுருத்த திகைத்து நின்றாள்.