“ஏண்டி நாச்சியா, நீயெல்லாம் இவனுகளுக்கு ஆத்தாவாடி.. குடிச்சுபுட்டு அட்டகாசம் பண்ணிட்டு வந்துருக்கானுவ, அதை கேட்டு ரசிச்சு நீயும் கூத்தடிச்சிட்டு இருக்க கூறுகெட்டவளே” பேரனுக்கு என்னானதோ ஏதானதோவென பயந்து, கோதையம்மாள், ஊன்று கோல் உதவியோடு அங்கே வர, வந்தவருக்கோ இவர்களது கேலியும் கலகலப்பும் எரிச்சலை கிளப்ப, தன் திருவாயை திறந்தார் மிக சத்தமாய்.
“தாய்கிழவி வந்துருச்சுடா” என பாண்டிகளும், “ஆத்தி, இங்கேயும் வந்திருச்சா, என் மாமியா” என நாச்சியும் ஒரே கனத்தில் நினைக்க
“நீ இன்னும் சாகலையா கிழவி, ஆவி ஆகியிருப்பன்னு வந்தா, பாவி மாதிரி உலாத்திட்டு இருக்குற” விக்ரா ஆரம்பிக்க
அவன் தோளை தட்டிய செல்லபாண்டியோ “பாவம் பண்ணிட்டடா பன்னி பயலே.. நேத்து நைட் உன் வாயில் ஊத்தினதை தாய்கிழவி வாயில ஊத்தியிருந்தா, இன்னைக்கு காலையில் சங்கே ஊதி இருக்கலாம்” என நக்கலடித்தான்.
“ஏலே படுபாவிகளா.. பேரன் பேரன்னு உசுற கொடுத்து வளர்த்ததுக்கு, என் சாவுலையே குறியா இருக்கீங்களேடா”
“பின்ன இருக்காதா.. நீ மட்டும் 14 வயசுலயே கல்யாணம் பண்ணி அடுத்தடுத்த வருஷத்துல மஜாவா தாத்தா கூட ‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’ னு குதுரை வண்டி ஓட்டுட்டு, ரெஸ்ட் எடுக்குற ஒவ்வொரு ஸ்டாப்புலயும் ஒவ்வொரு குழந்தையா பெத்து போட்டுட்டு குஜாலா வாழ்ந்திருக்க..
இவனுகளை விடு, இதோ மூத்தவன் வீரா, வயசு 27 ஆச்சு.. எனக்கு 26 கல்யாணம் பண்ணி வைக்க தோணுச்சா..
நீ தான் பண்ணி வைக்க மாட்டுற, நாங்களே பண்ணிக்கலாம்னு பார்த்தா, ஏதாவது நல்லது கெட்டதுல, வந்து இறங்குற அத்த மகள, மாமன் மகள சைட் அடிக்க விடுறியா..?
அத வாங்கிட்டு வா.. இத வாங்கிட்டு வான்னு அவளுக பக்கத்துல இருக்க விடுறதே இல்லை.
இவ்வளவு ஏன் அவளுக முகத்தை கூட பார்க்க விடறது கிடையாது.. மீறி பார்த்தா.. வயசு பொண்ணுக இருக்குற இடத்துல உனக்கென்ன வேலை.. உங்கொப்பனுக்கு என்ன வேலைன்னு, இந்தா இந்த தடியை தூக்கிட்டு வந்திருவ” விக்ரா உக்ரமாய் முறைத்தான்.
“அப்படி கேளுடா..” கன்னம் வழித்து கொஞ்சிய செல்லம் “அதையே தான் நாங்களும் கேட்குறோம் கிழவி.. வயசு பொண்ணுக இருக்குற இடத்துல எங்களுக்கு என்ன வேலைனு விரட்டுதல்ல.. உனக்கு மட்டும் என்ன வேலையாம்? கால காலத்துல எமன்கிட்ட போகமா.. எங்ககிட்ட வம்பிழுத்துட்டு கிடக்குற நீ” எகிறினான்.
“எம்டன் மகன் படம் பார்த்துருக்கியா..” விக்ரா கேட்க
“ஆமா..” நியாபகம் இல்லாத போதும் இவன்களிடம் வாங்கி கட்ட முடியாதென ‘தெரியும்’ என தலையசைக்க
“அதுல வர்ற மாதிரி, இங்க ஒரு சாவு விழனும், இருக்குற பூரா அத்த மகளுகளும் வரிச கட்டி வந்து நிக்கனும்” சட்டமாய் பேச
அதை புரிந்து கொண்ட கோதையோ “அட எடுபட்ட பயலுகளா.. ஏண்டா நீங்கெல்லாம் போற போக்க பார்த்தால் சாவு வீட்டுல சுயம் வரம் நடத்துவீக போல. ஆனா பாரு இங்க சாவுக்கு வர உன் அத்த மகளுக, மாமன் மகளுக எல்லாம் உங்களை பார்த்தவுடனே மயங்கி தாலி கட்டிகிட காத்து கிடக்காளுக பாரு, உங்க லட்சனமயிறுக்கு கிழவிக தான் வரப்போறாளுக பாரு” கோதை சீண்ட
“ஏய் கிழவி நாங்க இருக்குற உசறதுக்கும், கலருக்கும், கம்பீரத்துக்கும் வரிசையா மயங்கி விழுவ தான் போராளுக, நீ பார்க்க தான் போற”
“நீங்க அம்மனமா போன கூட ஒருத்தியும் சீண்ட மாட்டாளுகடா.. ஏலே பாண்டிகளா.. என்னையவா சாவ சொல்லுதீக.. இந்த ஜென்மத்துல உங்களுக்கெல்லாம் கல்யாணமே நடக்காதுடா.. நல்லா இருந்த என் புள்ளைக்கு கல்யாணம் பண்ணி இவகிட்ட மாட்டி சீரழியுறான் என் மகன். அவ பெத்தவனுக தானே நீங்களும்.. எந்த புள்ளை வாழ்க்கையையும் கெடுக்க விட்ருவேனா.. கோதையம்மா டா நானு” அவர்கள் முகத்திற்கு நேராய் ஊன்று கோலை ஒரு சுழற்று சுழற்றிபோட்டுவிட்டு, ஊன்று கோலே இல்லாமல் சிங்க நடையிட்டு சென்றார் கோதையம்மாள்.
செல்லும் கோதையம்மாளை அத்தனை பேரும் விழிவிரித்து பார்த்திருக்க
“ஆத்தாடி ஆத்தி.. இந்த சீரியல் வில்லிகளையெல்லாம் தூக்கி தின்னுடும்டா உங்கப்பத்தா.. இதுவா சாவும்.. என்னையும் உங்களையும் அனுப்பி வச்சுட்டு மெதுவா தாண்டா போய் சேரும்.. சின்ன வயசுல என்னத்த தின்னுச்சோ.. கல்லு குண்டு கணக்கா கிடக்கு.. எனக்கு இந்த முரவாசலை தொளிச்சு தூக்குறதுக்குல்ல.. கழன்டுடுது இடுப்பு” நாச்சி புலம்பி தள்ள
“விடுமா.. தாய்கிழவி இருக்குற வரை என்ஜாய் பண்ணட்டும், எவ்வளவு நாளைக்கு இருக்க போகுது” விக்ரா கூற
எப்போவும் போல எனக்கும் கிழவிக்கும் வாக்குவாதம். என்னைக்குமில்லாமல் கோவிச்சிகிட்டு வீட்டு விட்டு போயாச்சு. நான் இங்கன தான் எங்கையாவது போய் இருக்கும்னு அசால்ட்டா விட்டுட்டேன். சாயங்காலம் வரை வரலை. உங்கப்பன்கிட்ட சொன்னா, இம்புட்டு நேரம் புடுங்குனியான்னு கிழிச்சு தள்ளிட்டார்.
அழுகை ஒரு பக்கம், கிழவிக்கு என்னாச்சோ ஏதாச்சோன்னு பதட்டம் வேறல..
ராத்திரி ஒன்பது மணிவரைக்கும் ஊரூரா சுத்தி அலைஞ்சோம், இதோ இந்த பயலுகளும் அலையாத இடமில்லை”
“பெறவு” விக்ரா அதிர்ந்து பார்க்க.
“காலையில் போலீஸ்டேஷன் போலாம்னு முடிவு பண்ணி வீட்டுக்கு வந்தா, நடுவீட்டுக்குள்ள உக்கார்ந்திருக்கு”
அடங்கொப்பத்தா.. டேய்…” விக்ரா கத்த..
சொச்சத்தையும் கேளுடா என அதட்டியவர்.. “ஏத்தை, கோபம்னா வீட்டுக்குள்ள இருந்து காட்டு இதென்ன புது பழக்கம், உங்களை காணோம்னு தேடாத இடம் கிடையாது இம்புட்டு நேரம் எங்க போனீக..” னு நான் கேட்க, சொல்லுச்சே ஒரு பதிலு..’ நாச்சியா நிறுத்த
‘கந்தர்வ கோட்டை சமஸ்தானமே ஆடிப்போச்சுல்ல’ செல்லம் விழுந்து விழுந்து சிரிக்க, வீராவும் சேர்ந்து சிரித்தான்.
விக்ராவிற்கு சுவாரஸ்யம் மேலோங்கியது..
“போக்கிடம் இல்லாம தானே என்ன ஏசிட்டேகிடக்க, நான் எங்கன போக போறேன்..
உன்னை நிம்மதியா இருக்கவிட்டு நான் போய்டுவேன்னு கனவுல கூட நினைக்காதடி..”
“பின்ன எங்க போனீக?”
“பொம்பளைகளுக்கு இலவசமா பஸ் வுட்ருகாகல.. அதான் காத்தாட போய்ட்டு வந்தேன், ஒரு தடவை போய்ட்டு வந்துடலாம்னு தான் பார்த்தேன்.. என் புருஷன்கூட கடைசியா பஸ்ல போனது, அந்த நியாபகத்துல ஐஞ்சாறு தடவை போய்ட்டு வந்துட்டேன். என்ன இந்த கன்டக்கடர் கடன்காரப்பய முறைக்குதான், அவன் பொண்டாட்டி வீட்டு சொத்து மாதிரி, ஊரான் வீட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையேன்னானாம்’ னு சொல்லுதுடா.. கட்டையில போற வயசுல காத்தாட போச்சாம்.. அதுவும் அஞ்சாறு தடவையாம், இதுல சொலவடை வேற.. கேட்டியா..” என்ற நொடி விக்ராவிற்கு வெடித்து கிளம்பியது சிரிப்பு சத்தம்.
“இவ்வளவு அழிச்சாட்டியம் பண்ணுதாமா இந்த கிழவி” சிரிப்பினூடே இவன் கேட்க
ஏதோ சொல்ல வாயெடுத்த நாச்சியை தடுத்து “ஏண்டி நாச்சியா.. புள்ள அடிபட்டு கிடக்கு நீ பேசிட்டே இருக்குத, இந்தா பச்சலை.. போட்டு விடு புள்ளைக்கு” வெங்கல கிண்ணத்தில் இலையரைத்து எடுத்து வந்திருந்தார் ரமணியம்மாள் (நாச்சியின் அன்னை)
“அய்யோ ஆமாம்மா மறந்தே போய்ட்டேன் குடு குடு” என வேகமாய் வாங்கி, “ஏலே விக்ரா.. வாவே இங்க” விக்ரா மறுக்க மறுக்க, இழுத்து வந்து ஸ்டூல் அமர வைத்து, அவன் கத்த கத்த இலையை வீங்கி, இரத்தம் கன்றிய இடங்கள் முழுதும் போட்டுவிட்டு தான் நிமிர்ந்தார். மருந்திடும் போது தான் அத்தனை பேரும் கவனித்தனர் காயம் சற்று அதிகம் தான் என. படர்ந்திருந்த சிரிப்பு உறைந்து போக
“ம்மா பசிக்குது.. சோத்த போடுவியா மாட்டியா?” வீரபாண்டி அவரை திசை திருப்ப..
“இதே பத்தே நிமிசம்யா.. ம்மா குடிக்க புள்ளைகளுக்கு குடிக்க காபிதண்ணி குடும்மா.. அதுக்குள்ள சமையலை முடுச்சடுவேன்” ரமணியம்மாவிடம் சொல்லி கொண்டே இவர் வீட்டுக்கு நடையை கட்டினார் நாச்சியார். .
விக்ராவின் கவலை தோய்ந்த முகத்தை பார்த்த வீரா.. “இப்போ கவலை பட்டு என்ன பிரயோஜனம்? பாயுறதுக்கு முன்னாடி அதையெல்லாம் யோசிச்சு இருக்கனும்” நய்யாண்டி பேச
“பின்ன கவலை இருக்காதா? ஏதாவது கசமுசா ஆகி, அதுக்கு பிறகு அடி வாங்கி இருந்தா கூட கவலை பட மாட்டேன்டா.. ஆனால் எதுவுமே நடக்காமல் அடி வாங்கினது தான் கஷ்டமா இருக்கு” விக்ரா முகம் சுருக்க, கடுப்பானான் வீரா.
“ம்க்கும் அதான பார்த்தேன்.. நீயாவது கவலைபடுறதாவது? நீ பாய்ஞ்ச பாய்ச்சலுக்கு இந்த அடிலாம் கம்மிடா தம்பி, இன்னும் நாலு சேர்த்து வச்சிருக்கனும்” வீரா எகிற
“அதெல்லாம் விடு, நேத்து பேய்னு நினைச்சு பதறியடிச்சு நாங்க ஓட, நீ மட்டும் அது பொண்ணுன்னு எப்படிவே கண்டுபுடிச்ச?” செல்லம் ராகம் போட்டு இழுக்க
‘ஹ்ம்ம்.. ஹாஆஆ’ மூச்சிழுத்து வாய் திறந்து “ஸ்மெல் பண்ணேன்” விக்ரா கண்ணடிக்க
“எப்புட்றா? பொண்ணுகளை மட்டும் மோப்பம் பிடிக்குற” வீரா அதிசயிக்க
“பிகாஸ் ஐ லவ் கேர்ள்ல்ஸ்” மீண்டும் இவன் கண்ணடிக்க
“ஆரம்பிச்சுட்டாண்டா.. இவன் இங்கிலீஷை” செல்லம் தலையடித்துகொள்ள
“ஐ லவ் எ கேர்ள்னு சொல்லு.. அதென்ன கேர்ள்ல்ஸ், பன்மைல வருது” வீரா பொங்க
“பல பொண்ணுகளை பார்த்தா பன்மைல தான் வரும்” இன்னுமே கண்ணடிக்க
“டேய் என்னடா சொல்ற.. அப்படி எத்தனை பேரைடா லவ் பண்ற?” செல்லத்திற்கு புகைச்சலே கிளம்பியது.
“அது சஸ்பன்ஸ்..” ஒற்றைவிரலை வாயில் வைத்து ‘’ஸ்ஸ்ஸூ” என சொல்ல..
“நீ சொல்றதையெல்லாம் பார்த்தாக்க..” என பேசிக்கொண்டிருந்த வீராவை தடுத்து “எங்கடா சங்கரை காணோம்?” விக்ரா கேட்கும் போதே
“ஓ.. திசை திருப்புறீகளோ.. இதுக்கு மேல ஏதாவது கேட்டா செருப்பால அடி” நேரடியாகவே கேட்டு குட்டு வைத்தவன்
“அவன், நேத்து நடந்ததுக்கே, அலறி பயந்து போய் கிடக்கான். கருப்பசாமி கோவிலுக்கு கூட்டிப்போய் பேய் ஓட்டனும் பேலருக்கு! நேத்து நைட் போய் ரூமூக்குள்ள அடஞ்சவன், வெளிய வர மாட்றான்டா..”
நிஜமாய் கவலை கொண்டான். “ஓ..” என நெற்றி சுருக்கியவன் “வா.. போய் ஒரு எட்டு பார்த்துட்டு வரலாம்” என ரமணி கொடுத்த டீயை பல்துலக்காமலே குடித்துவிட்டு, தங்கள் வீட்டிற்கு நடையை கட்டினர் மூவரும்.
வாசலில் கிடந்த ஸ்கூபி பாண்டிகளை பார்த்து பாய்ந்து வந்து பாசத்தை காட்ட, அதனுடன் இரண்டொரு நிமிடம் மல்லுகட்டிவிட்டு வீட்டிற்குள் புகுந்தனர்.
பாண்டிகள் நால்வரும் ஒன்றாக இருக்கும் இடம் சமரசு வீட்டில் தான். அந்த கால முற்றத்து வீடு. வாசலை கடந்தால் பெரிய முற்றம், நாலாபுறமும் இரண்டு இரண்டு அறைகளாக எட்டு அறைகள் இதில் ஆறு படுக்கை அறை, ஒரு சமையலறை, தனித்து ஒரு அறை.
பாண்டிகளுக்கு தனிதனியாக அறை இருந்தாலும் ஏதாவது ஒரு அறையில் தான் நால்வருமே உருண்டு கிடப்பர். சில சமயம் வேலை பார்த்த களைப்பில், சில சமயம் குடித்துவிட்டு மட்டையாகி கவிழ்கையில், சில சமயம் சண்டை போட்டுவிட்டு சமாதானம் செய்கிறேன் பேர்வழி என ஒருவர் மேல் ஒருவர் என உருண்டு கொண்டு கிடப்பர்.
இப்போதும் சங்கரை தேடிக்கொண்டு மூவருமே வந்தனர், ஒவ்வொரு அறையாய் திறந்து, அவனில்லை என்றதும் இருக்கும் ஒரே ஒரு கடைசி அறைக்கு வந்தனர் அங்கு தான் இருக்க கேண்டுமென.. கதவை லேசாய் தள்ள, திறந்த கதவினூடே, இவர்களின் விழிகள் நுழைந்து நாலாப்புறமும் பாய்ந்தது. கயிற்று கட்டிலின் ஒரு மூலையில் குவிந்து கிடந்த தலையணைகளுக்குள் சுருண்டு கிடந்தான் சங்கரபாண்டி.
அதை கண்டு மூவரின் விழிகளும் மின்ன, பூனைநடையிட்டு நெருங்கியவர்கள், நொடியில் திட்டமிட்டு, காதிற்குள் கிசுகிசுத்து, பின் பெரிதாய் விரிந்த சிரிப்பை அடக்கி, அலுங்காமல் குலுங்காமல் கட்டிலோடு தூக்கி கொண்டு லொங்கு லொங்கென பின்பக்க கதவை தாண்டி தோட்டபகுதிக்குள் நுழைந்தனர்.
அடர்ந்துயர்ந்த தென்னை, சவுக்கு மரங்களுக்கு இடையில் இருந்த மண்பாதையில் சத்தமே இல்லாது கொண்டு சென்றவர்கள், தரையொட்டிகிடந்த கிணற்றை எட்டியும் பாராமல், கட்டிலில் கிடந்தவனின் கைகளையும் கால்களையும் பிடித்து தூக்கி கிணற்றின் அருகில் சென்று, அவனை தொட்டிலாய் ஆட்ட, விழிப்பு லேசாய் தட்டியது சங்கருக்கு.
முழுதாய் விழிக்கும் முன் ‘ஒன்’ ‘டூ’ ‘த்திர்ரி’ என சங்கரை பந்தாய் வீசியெறிய, ‘யம்மே பேய்.. பேய்…’ மிகப்பெரும் அலறலோடு. கிணற்றினுள் பாய்ந்தான் சங்கர்.
அதில் மூவருமே சிரித்த சிரிப்பில் அந்த இடமே கிடுகிடுத்தது. அதே சிரிப்போடு அடுத்தடுத்து மூவருமே, குவிந்த கைகளோடு, நீட்டிய கால்களுமாய் விர் விர்ரென மீனாய் பாய்ந்தனர் கிணற்றினுள்.
தூக்க கலக்கத்தில் இருந்த சங்கரபாண்டி, கனவுலகத்தில் இருந்து நினைவுலகம் திரும்ப சிறிது நேரம் பிடித்து, பின் தண்ணீரில் கிடப்பதை உணர்ந்து, நீச்சல் தெரியும் என்பதையும் மறந்து கை,கால்களை திக்குக்கொன்றாய் தபதபவென அடித்து எப்படியோ கிணற்று படிகளில் ஏறியமர்ந்து தஸ்புஸ்ஸென இளைப்பாற துவங்கினான்.
நேற்று இரவே உயிரை கையில் பிடித்து ஓடியவனுக்கு மினி ஹார்ட் அட்டாக்கே வந்தது என்றால், அந்த பேய் தான் தூக்கி வந்து கிணற்றில் போட்டுவிட்டது நினைத்தவனுக்கோ தற்போது பெரிய சைஸ் ஹார்ட் அட்டாக்கே வந்தது.
ஆனால் தான் கிணற்றில் விழுந்ததற்கான காரணம் பேயல்ல, தன்னுடன் பிறந்த பிசாசுகள் என தெரிய, கொலைவெறியோடு வெறித்தான் அவர்களை.
கோபித்து கொண்டு விரைத்தமர்ந்திருந்த சங்கரை மூவரும் சூழ்ந்து, கெஞ்சி கொஞ்சி சமாதானம் செய்ய, அதற்கு மடியாது வீம்பு பிடித்தவனை மீண்டும் நீரினில் இழுத்து ஒரே அமுக்காய் அமுக்கி மீண்டும் எமலோக வாசலை தட்ட செய்து பீதியை கிளப்பி, ‘விட்டுடுங்கடா’ என்னைய என கையெடுத்து கும்பிட்டு பேசிய பிறகே விட்டனர்.
பாண்டிகள் நால்வரும், வீட்டாட்கள் எல்லோருக்குமே செல்லகுட்டிகள் தான், சேட்டை செய்கையில் இன்னுமே வெல்லகட்டிகள் தான்.
விக்ரா இளங்கலைபடிப்போடு, ACS முடித்த கையோடு, பெரம்பலூரிலேயே தனியார் நிறுவனமொன்றில், கம்பெனி செகரட்டரியாக, கைநிறைய சம்பளத்தோடு வேலை பார்த்து கொண்டிருக்கிறான்.
உள் மற்றும் வெளிமாநிலங்களில் இருக்கும் பல்வேறு கம்பெனிகளுக்கு தேவைபடும் நேரத்தில் தகுந்த நிதி மற்றும் சட்ட ஆலோசகராக சென்று வருவான். அப்படி சென்ற இடம் தான் ஹைதராபாத்.. அங்கே புது யூனிட் ஒன்று தொடங்கவே, இவனது தயவு தேவையாகிவிட இதோ ஆறு மாதங்களுக்கும் மேல் ஹைதராபாத்தில் தான். இனியும் எத்தனை நாளோ, மாதமோ என தெரியவில்லை.
சமரசபாண்டி- நாச்சியாரின் மூத்த புதல்வன் விக்ரவாண்டி, இரண்டாமவன் செல்லபாண்டி அவனும் விவசாயத்தில் இளங்கலையை தற்போது தான் முடித்து, உரம் மற்றும் நாட்டுவிதைகளை தயாரித்து விற்கும் சிறிய தொழிலை கைவசம் வைத்திருந்தான்.
அடுத்ததாய் வீரபாண்டி, சங்கரபாண்டி இருவரும் சமரசுவின் அண்ணன் புதல்வர்கள் சமரசுவின் அண்ணனும், அண்ணியும் ஒரு விபத்தில் இறந்துபோய்விட, அவர்களின் புதல்வர்கள், வீரபாண்டி, சங்கரபாண்டி நிரந்தரமாகவே சமரசு-நாச்சியாவின் பிள்ளைகளாயினர்.
அன்று முதல் இன்று வரை நால்வரையும் பிரித்து பார்த்ததில்லை , அப்படி ஒரு பந்தம் அவர்களுள். தாய் தந்தை இறக்கும் பொழுதில் பத்தாம் வகுப்பில் இருந்தான் வீரபாண்டி, இருவரின் இறப்பும் அவனை அதிகமாய் பாதித்திட விளைவு வீரபாண்டிக்கு படிப்பில் கோட்டை விட்டான். அதன் காரணத்தால், சமரசு “S.N.V” ஜவுளி கடை ஒன்றை சிறிய அளவில் வைத்து கொடுக்க, அடுத்து ஏழு வருடங்களில் பெரிதாக்கி நற்பெயரை ஈட்ட, அதன் பொருட்டு அவர்களது தொழில் வட்டாரத்தில் பெரிதும் பெயர் பெற்றிருந்தான்.
சங்கரபாண்டி போன வருடம் தான் முதுகலை படிப்பை முடித்துவிட்டு வேலைக்காக அலைந்து கொண்டிருக்கிறான். நால்வருக்குமே, ஒருவயது இருவயது மட்டுமே வித்யாசம். தவிர சமரசுவிற்கு இரண்டு அக்காக்காள், அவர்களுக்கு திருமணம் முடிந்து ஆளுக்கு இரண்டு இரண்டு பெண் குழந்தைகளோடு, ஒருவர் உசிலம்பட்டியிலும், மற்றொருவர் திண்டுகலிலும் வசித்து வருகின்றனர்.
அது போக சமரசுவின் தாய் கோதையம்மாள், கணவர் இறந்த பிறகு மகனுடனும், பேரன்களுடனும் மீதி காலத்தை கழித்துவருகிறார்.
தவிர நாச்சியாரின் தாய் ரமணியம்மாள், கூட பிறந்தவர்கள் பார்க்கமறுக்க “நான் இருக்கேன்மா” என தைரியாமாய் தன்னுடன் அழைத்து வந்துவிட்டார்.
ஆனால் ரமணிக்கும், கோதைக்கும் ஆகாது என்பதால், இரண்டு வீடு தள்ளி இருந்த அவர்களது பூர்வீக வீட்டிலேயே தனியாய் வைக்கப்பட்டார். தனி என்பது பெயருக்காக மட்டும் தான்.
பகலில் வேலைகளை முடித்துகொண்டு, ரமணி வீட்டிற்கு சாப்பாட்டு கூடையோடு வந்தார் எனில், விஜய் டிவி, ஜீ தமிழ் இரண்டிலும் ஓடும் அத்தனை சீரியல்களையும் பார்த்து ரசிப்பது ஒரு வகை என்றால்
“நாசமா போறவ.. குடும்பத்தை கெடுக்கன்னே சீரியலுக்கு ஒருத்தி இருக்கா
“ம்.. என்ன ஆட்டம் போட்ட.. வேணுடி உனக்கு”
“ஆத்தி இந்த மகராசிக்கு ஒரு விடிவுகாலமே வராதா அவ மாமியாகிட்ட இருந்து..”
இப்படி பகல் கழிந்தால், மாலையில் பாண்டிகள் அடிக்கும் கொட்டம் அங்கே தான். உணவு , உறக்கத்திற்கு மட்டுமே சமரசு வீடு. அவ்வளவு தான் இந்த பாண்டி குடும்பம். —————-
அவள் லாவன்யா..
சிகப்பு நிற ஸ்லீவ்ஸ்ஸ் பிளவுஸ், பளபளவென கருப்பில் பளபளத்து, லோ கிப்பில் நழுவ வா வேண்டாமா? என கிறங்கி போய் கிடக்கும் புடவை.
கேட்டாலே இரத்தம், நாடி நரம்பெல்லாம் முறுக்கேறி நிற்கும் வகையில் இசை எனும் அரசன் சவுண்ட் சிஸ்டமின் உதவியால் அந்த அறையையே அலற வைத்து அரசாண்டு கொண்டிருக்க
அள்ளி முடிந்திருந்த கூந்தலுக்கு விடுதலை கொடுத்து அலையென காற்றில் பறக்கவிட்டு,
காற்றில் பறந்து கொண்டிருந்த புடவை முந்தானையை அள்ளி சொருகினாள் இடைக்குள்.
ஏற்கனவே லோ கிப்.. இதில் அள்ளி சொருக, வர்ணிக்கவும் வேண்டுமோ..அவளின் அழகை.
“வேலி கட்டி வெச்சாலும் வெள்ளை தொல்லை பாத்துபுட்டா கடக்க துடிக்குதடா காலு
மங்கியில இருந்து ஒரு மனுச பையன் வந்தாலும் இன்னும் போகலையே வாலு
ஓடும் தண்ணியில பாசியில்லையே உணர்ச்சி கொட்டி புட்டா நோயும் இல்லையே வாழ்க்கை வாழ்வதற்கே ஜெமினி எடுத்த படம் அத நான் உனக்கு மட்டும் காட்ட போறேன்டா டொடா டொன்டன்டன்ய்… டொடா டொன்டன்டன்ய்… டொடா டொன்டன்டன்ய்… டொட்டொன்ய்….”
பின்னனியில் ஹச்டியில் ஒலித்த பாடலுக்கும், அதற்கேற்ற அவளது நளினம் சேர்ந்த நடனத்திற்கும், ஒடிந்தாடிய இடைக்கும் யாராவது பார்த்திருந்தால் நிச்சயம் விசிறியாகி இருப்பார்கள்.
யாரும் பார்க்காவிட்டால் என்ன? உலகமே தனக்குள் தான் என மார்தட்டிய ஆன்ட்ராய்ட் மொபைலில் அத்தனையும் ரெக்கார்ட் ஆகி இருந்தது.
மூன்று நிமிடங்களும் இருபது நொடிகளும் கடந்து ஆடி முடித்து பெருமூச்சுகளை அள்ளி தெளித்தபடி, போனில் ரெக்கார்ட் செய்த வீடியோவை மீண்டும் கண்ணாற கண்டுகளித்து “அழகிடீ நீ.. நீ ஒரு லேடி பிரபு தேவாடி” என நொட்டி முறித்து பத்தோடு பதினொன்றாக போனில் சேமித்து வைத்தாள் அந்த அழகி.
சிறு வயதில் இருந்தே, இசைக்கு தாளமிடும் கால்கள், நாளாக நாளாக டிவியை பார்த்து முறையாய் ஆட கற்றாள், அதன்பின் கல்லூரியில் தோழிகள் சேர, துணைக்கு ஆள் சேர்ந்த குதூகலத்தில் இன்னும் மெருகேறி நளினமும் சேர்ந்தது அவளது நடனத்தில்.
முன்பு ஏதோ ஆசையில் செய்தது. இப்போதெல்லாம் சோசியல் மீடியாவில் உலாவரும் டான்ஸ் ரீல்ஸ்கள் இவளுக்கும் ஆசையை தூண்டியது.
அதன் பொருட்டு தனியாக, தோழிகளுடன் என ஆட்டம் போட்டு அதை மொபைலில் சேகரித்தும் கொள்வாள்.
ஆனால் இதுவரை சோஷியல் மீடியாவில் பதிவேற்றும் எண்ணம் வரவில்லை அதற்கெல்லாம் ஒரே ஒரு ஆள் தான்.
இவள் அன்னையை பற்றி தெரியாத ஆரம்பகாலத்தில் “நீயே செம பிகரு, இதுல உன் டான்ஸூம் சேருறப்ப சும்மா அள்ளிக்கும்.. அத்தனையும் போனில் போட்டு வச்சிருக்கியே.. இன்ஸ்டாகிராம்ல, யூடிப்புல போட்டன்னு வச்சுக்க, சும்மா காசு பணம் துட்டு மணி மணி தான்” தோழி மகா கூற..
“போடலாம்டி, ஆனால் அந்த காசு பணத்தையெல்லாம் கைநீட்டி வாங்க நான் உயிரோட இருக்கனும்ல” புருவம் உயர கேட்டவளை, வியப்புடன் பார்த்து
“அப்படி யாருக்குடி நீ பயந்து சாகுற?” மகா கேட்க
“மீனாக்கு தான்” என லாவன்யா சிரிக்க
“அது யாரு மீனா?” முகம் சுளித்தாள் மகா.
“எங்கம்மா..” என சொல்லி அவளை அதிர வைத்தவள்..
“உனக்கு எங்கம்மாவை பத்தி தெரியாது.. சொல்றேன் கேளு.. காலையில ஆறு மணிக்கு எழுனும்.. குளிச்சிட்டு தான் அடுப்படிக்கு போகனும், தண்ணியை ‘ஆ’ னு வாயை பொளந்து லபக்னு ஊத்தி தான் குடிக்கனும். சாப்பாட வேஸ்ட் பண்ணகூடாது, மீறி வச்சா அடுத்த வேளை சாப்பாடு கட், இது பிடிக்கலை அது பிடிக்கலன்னு சொல்ல கூடாது. தட்டுல வச்சதை சாப்பிடனும்.. கேட்டா பசிக்கு தான் சாப்பாடு ருசிக்கு இல்லைன்னு உருட்டும். செவ்வாய் வெள்ளி தலை குளிக்கனும், கோவில் போகனும், விளக்கு ஏத்தனும், நோ நான் வெஜ், மீறி திண்ணா.. எனக்கு கும்பிபாகம் தான். வீட்டுல இருந்து ‘அம்மா ஆபிஸ் போறேன்னு சொல்லிட்டு தான் போகனும்’ ஆபிஸ் போனதும் ‘ஆபிஸ் வந்துட்டேன்மான்னு’ நான் சொன்னா கேட்காது, என் ஆபிஸ் ஸ்டாப் விட்டு பேச விடனும். பஸ்ல தான் போகனும், அதுவும் பாஸ்ல தான் போகனும். ஆட்டோ நோ வே.. ஷேர் ஆட்டோ டபுள் நோ வே.. கேட்டால் அழகா இருக்கனாம் கடத்திட்டு போய் கெடுத்துருவான்களாம். அவசரம்னா தான் போனு.. மத்த நேரம் கையில் பார்த்துச்சோ, அடுத்து கரி கட்டைக்கு பதிலா என் போன் தான் விறகு அடுப்புல கிடக்கும். இதுவரை மூனு போனுக்கு போஸ்மாட்டர்ம் பண்ணிருக்கு மீனா.. சரி டீவி பார்க்கலாம்னு போனா,
சீரியல் பார்த்தா – போற வீட்டுல வில்லியாகிடாதன்னு சாபம் வரும்
படம் பார்த்தா – இதெல்லாம் ஒரு படமா, அந்தகாலத்துல வந்தது படம்.. இப்ப வறது எல்லாம் படமா? ன்னு டைரக்டர் மாதிரி பேசும்
சாங் பார்த்தா – வாய கடிக்கிற நேரத்தில நீ வைப்பியா, இல்லை நீ இந்த சேனலை வைக்கிறப்போ அவன் அவளோட வாயை கடிக்கிறானா?ன்னு என்னைய பச்சபுள்ள, இவளுக்கொன்னும் தெரியாதுன்னு எகிரும்..
அப்புறம்..” என மூச்சு விடாது பேசிக்கொண்டிருந்தவளின் வாயை இறுகபொத்தி, அவள் முன் வாட்டர் பாட்டிலின் மூடியை திறந்து வைத்து
“மூச்சு விடாமல் பேசுற.. செத்துகித்து போய்டாத.. முதல்ல இந்த தண்ணிய குடி” என மகா, அவளுக்கு பதிலாக புசுபுசுவென மூச்சுவிட
“இப்போ சொல்லு.. இன்ஸ்டால ரீல்ஸ் போட்டா..?”
“கன்பார்ம் உனக்கு சுடுகாடு தான், அதுவும் எலக்க்டிரிக் சுடுகாடு, சாம்பல் கூட மிஞ்சாது”
“அது..” என சிரித்தவள்,
“கடவுள் தப்பு பண்ணிட்டான் மகா.. எங்க வீட்டில நீயும், உன் வீட்டில் நானும் பிறந்திருக்கனும். எங்கம்மா எதிர்பார்க்குற அத்தனை குணமும் உனக்கிருக்கு, நான் எதிர்பார்க்குற சுதந்திரம் உங்கவீட்டில் இருக்கு.
இவ்வளவு ப்ரீடம் இருந்தும் நீ அச்சம், மடம், நாணம், பயிர்ப்புனு இருக்க நீ எங்கே..
மொள்ளமாரி, முடிச்சவிக்கி, பொறம்போக்குன்னு இருக்குற நான் எங்க.. ம்ஹ்ம்…” பெருமூச்சை விட்டாள் லாவான்யா..
லாவன்யாவிற்கு அப்படியே எதிர்பதம் மகா.. ஆம் பெண் என்பவளுக்கு இலக்கணம் மகா.. அழகும், அரவாரமில்லாத அடக்கமும், அன்பெனும் ஆயுதத்தால் எவரையும் அடக்கி ஆளும் வல்லமை கொண்டவள்.
இவ்விருவரும் தான் விக்ராவின் வாழ்வை சுழற்றி அடிக்க போகும் தென்றலும், சூறாவளியும்….