அன்று ‘உனக்கே என்னை புரியுமே கண்டுபிடி’ என்று அதிர்துடியன் கூறிவிட்டு சென்ற பின்னர் அடுத்த இருவாரங்களுக்கு அவன் வெளியூர் சென்றுவிட்டதால் அவனை பிடிக்க முடியாது போனது யாழிக்கு..!!
அன்று யாழி அறையை சுத்தபடுத்திட அவள் பின்னே அதிர்துடியன் அறைக்கு மாப் போட்டு கொண்டு இருந்தான்.., முதலில் சமையல் தவிர்த்து மற்ற வேலைகளுக்கு சம்மதிக்காத கணவனிடம் அடம் பிடித்து இதற்கு சம்மதிக்க வைத்திருந்தாள் யாழி.
பின்னே அதிர்துடியன் வீட்டில் இருக்கும் பெரும்பான்மையான சமயத்தில் தோட்டத்தை அல்லது அறையை சுத்தபடுத்துவது ஞாயிறு சமைப்பது என்று தொடங்கி விடுவான் அப்போது எல்லாம் அவனோடு நேரம் கழிக்க முடியாது போனவள் யோசித்து கண்டுபிடித்து தான் இது..
ஆம் இருவரும் சேர்ந்து ஒரு வேலையை செய்யும் போது அவர்களுக்கான நேரம் அதிகரித்து இருவரும் ஒன்றாக சேர்ந்திருக்கவும், பேசவும் வாய்ப்பு கிடைக்கிறதல்லவா அதை எப்படி நழுவ விடுவாள்.
ஜன்னலின் திரைசீலைகளை மாற்றி கொண்டே இருந்தவளுக்கு இன்று என்றில்லை அன்று அவனிடம் தன்னை பற்றி எல்லாமே கூறிய பிறகும் அவனால் எப்படி எப்போதும் போல இயல்பாகவே அவளோடு இருக்க முடிகிறது என்ற எண்ணம் மனதை அரித்து கொண்டே இருந்தது இன்று அதை கேட்டுவிட முடிவு செய்தவள்,
‘என்னங்க உங்களுக்கு பொய் சொன்னா பிடிக்காது ஆனா நான் ஒரு உண்மையை மறைச்சிருக்கேன் என் மேல உங்களுக்கு கோபம் இல்லாம ..’ என்று அவள் ஆரம்பிக்க,
‘கோபம் இல்லைன்னு யார் சொன்னா…??
‘அப்போ கோபம் இரு…’ என்று வாக்கியத்தை முடிக்காத யாழியின் முகம் நிறமிழந்து போனது.
‘ஆமா முதல்ல கோபம் வந்தது நிஜம்’ என்று கூற யாழியோ என்ன சொல்லி அவனை சமாதானபடுத்துவது என்று புரியாமல் கலங்கிய மனதுடன் அவனை பார்க்க,
“அது எப்படி நீ லிவிங்ன்னு சொன்னா நான் அதை உடனே ஏத்துப்பேன்னு நெனச்சன்னு முதல்ல கோபம் வந்தது ஆனா அப்புறம் தான் நீ வளரகூடிய சூழல், பார்க்கிற விஷயங்கள், சந்திக்கிற செலன்ஜஸ்..” என்றவனிடம் யாழி பெரும் தவிப்புடன்,
‘ப்ளீஸ்.. சாரிங்க.. நான் அப்…’ என்று மேலும் தொடரபோனவளை இடையிட்டவன்,
“இதெல்லாம் புரியவும் என் கோபம் கொஞ்சம் கண்ட்ரோல் ஆச்சு ஆனா என்னை பிரியவே கூடாதுன்னு எனக்காக தான் அந்த முடிவு எடுத்திருக்கன்னு புரிஞ்சதும் என்மேல உனக்கு இருக்க காதலுக்கு முன்னாடி என்னோட கோபம் வந்த சுவடே தெரியாம போயிடுச்சிடி‘ என்று அவன் புன்னகைக்க,
‘நிஜமாவா..?? உங்களுக்கு என்.. (Lorazepam) என்னோட காதல் அப்பவே புரிஞ்சதா..?’ என்று கண்கள் மின்ன எதிர்பார்போடு அவனை பார்க்க,
அவனும் ஏமாற்றாமல் ‘ஆமாடி’ என்றவனின் குரல் இப்போது அவளருகே ஒலித்தது..,
‘பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்த்து நன்மை பயக்கும் எனின்’ திருக்குறள்ல எனக்கு நம்பிக்கை உண்டு…, அதனால பொய் சொன்னாலே பிடிக்காதுன்னு இல்லை அது எந்த இடத்துல யாருக்காக, என்ன நோக்கத்துக்காக சொல்லப்பட்டது என்பதை பொறுத்து இருக்கு என்றவன் தொடர்ந்து,
‘அப்படி பார்த்தா நீ மட்டுமில்ல நானும் தான் உண்மையை மறைச்சிருக்கேன்’ என்று கூற,
‘நீங்களா..??’ என்று ஆச்சர்யமாக யாழி அவனை பார்த்திட,
‘ஆமா’
‘யார்கிட்ட..??’
‘உன்கிட்ட தான்’
‘என்கிட்டயா..?? என்னது..??’
‘நம்ம கல்யாணத்துக்கு முன்னாடியே உங்க அப்பா நீ பேசின எல்லாமே எனக்கு சொல்லிட்டார் அதாவது நீ கல்யாணம் வேண்டாம் சொன்னதுல இருந்து லிவிங் இன் முதற்கொண்டு எல்லாமே…’ என்று கூற யாழி முகத்தில் உட்சபட்ச அதிர்ச்சி
‘என்ன சொல்றீங்க..?? உங்களுக்கு எல்லாமே தெரியுமா..? அப்… அப்போ நீங்க ..’ என்று திகைப்போடு அவனை பார்த்தவளுக்கு கடந்த சில நாட்களாகவே சமூக மாற்றம் குறித்த தேடலுடன் தன்னிடம் நிகழ்ந்துள்ள மாற்றமும் மெல்ல புரிபட எப்படி இது சாத்தியம் என்று அதன் காரணத்தை கண்டறியும் முயற்சியில் இறங்கியவளின் தேடல் முற்றுபெற்றது என்னவோ அவள் கணவனிடமே…!!
இப்போது நிபந்தனையற்ற அவன் காதலை உணர்ந்ததில் அதற்கு மேல் வார்த்தை எழவில்லை பெண்ணவளுக்கு..,
மனமெங்கும் ஆனந்தத்தில் திளைத்து கொண்டிருந்து..,
இருக்காதா பின்னே !! தன் மீதான காதல் மட்டுமே அவனை, அவளை அவள் தவறுகளை மன்னிக்க செய்து ஏற்க வைத்திருக்கிறது என்பது யாழிக்கு புரிபட மறுநொடியே கண்கள் கசிய ஓடி சென்று அவனை கட்டிக்கொண்டாள்.
மனைவியின் முதல் அணைப்பை எதிர்பாராது இனிதாக அதிர்ந்து நின்ற அதிர்துடியனின் மார்பை அவள் கண்ணீர் சுடவும் சுயம் மீண்டவன், ‘யாழி ஸ்டாப் க்ரையிங்’ என்றவாறு அவள் முகம் நிமிர்த்த அவளோ ‘முடியாது’ என்பது போல இன்னுமும் இறுக்கமாக அவனை கட்டிக்கொண்டாள்.
அவள் தலையை வருடி கொடுத்தவன் இன்னும் அவள் அழுகை குறையாதிருப்பதை கண்டு, ‘ப்ச் வருங்கால கலெக்டர் இவ்ளோ எமோஷனல் ஆகலாமா..??’ என்று கேட்க,
‘கலெக்டர் பத்தி எனக்கு தெரியாது ஆனா உங்க பொண்டாட்டி இப்படி தான், அன்னைக்கு சாருக்கா நீங்க லக்கின்னு சொன்னாங்க ஆனா யாருக்கும் தெரியாது இங்க நான் தான் ரொம்ப லக்கி ‘ என்றவள் முகத்தை அவன் மார்பில் புதைக்க,
‘ஏய் என்னடி பண்ற..?? அடுத்த மாசம் ப்ரிலிம்ஸ் இருக்கு’ என்று அவளை விலக்க முற்ப்பட,
‘ஆமா அதுக்கென்ன..??’
‘இப்படியே இருந்தா எப்படி..?? படிக்க வேண்டாமா..??’
‘அதெல்லாம் ஏற்கனவே படிச்சி முடிச்சிட்டேன்’ என்றால் இன்னுமே அவனை விட்டு விலகாமல்…,
*****************************************
அன்று இரவு இருவருக்குமான பாலோடு அறைக்கு வந்தவளிடம், ‘யாழி இன்னும் நான் உனக்கு ஐ லவ் யூ சொல்லவே இல்லையே அப்புறம் எப்படி நீ லக்கின்னு சொல்ற..??’ என்று கேட்க,
“ஐ லவ் யூ சொன்னா தான் காதலாங்க..?” என்று அவனையே திருப்பி கேட்க,
‘இல்லயா பின்னே..??’
‘இல்ல’
‘ஏன்..??’
“நிஜமா காதலிக்கிறவன் யாரும் தினமும் ஐ லவ் யு சொல்லிட்டு சர்ப்ரைஸ் கொடுத்துட்டு இருக்க மாட்டான்.. எப்பவும் எந்த சூழலிலும் உன்னை விட்டு கொடுக்காம உனக்காக நான் இருக்கேங்கிற நம்பிக்கையை கொடுப்பாங்க.. ஆனா அதை புரிஞ்சிக்காம இந்த பொண்ணுங்க அலங்கார வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து நிஜமான காதலை இனம் காணாம கோட்டை விட்டுடுறாங்க…”
அதிர்துடியன் ஆச்சர்யமாக அவளை பார்க்க,
அவன் பார்வை புரிந்தவலும், ‘ஆமாங்க ப்ரோக்ராம் செய்யப்பட்ட ரோபோட் மாதிரி எல்லாரும் காதலை ஒரே மாதிரி வெளிபடுத்தனும்ன்னு எந்த அவசியமும் இல்லை, அதிலும் சர்ப்ரைஸ் எல்லாம்.. ப்ச் இது என்ன திரைப்படமா திட்டமிட்டு நடத்த..?? அவரவருக்கு தெரிந்த வகையில் இணைக்கு தன் காதலை புரிய வைக்க முயல்வதில் தவறொன்றும் இல்லையே..
‘அதோட அவங்கவங்களுக்குன்னு ஒரு ரசனை இருக்கும் அதன் படி காதலை தெரிவிக்கனுமே தவிர மத்தவங்களை பார்த்து இல்லை’
‘அப்படியா..?? அப்போ நான் எப்படி பண்ணட்டும் நீயே சொல்லு..??’ என்றான்.
‘எதுக்கு சொல்லணும்..??’
‘ஏன்டி அப்போ உனக்கு ஐ லவ் யூ வேண்டாமா..??’
‘வேண்டாம்’ என்பதாக தலை அசைத்தவள் ‘இப்போ என் மேல எத்தனை குறை இருந்தும் எதையும் யாருக்கும் வெளிச்சம் போட்டு காட்டாம எனக்கே தெரியாம என்னை மாத்தி வாழ்க்கையை புரியவச்சி இருக்கிற உங்க காதல் கொடுத்த நம்பிக்கையை விடவா ஐ லவ் யூ என்ற வார்த்தை கொடுத்துட முடியும்’ என்றவள் பாலை ஆற்றி அவன் கையில் கொடுத்தாள்.
பாலை பாதி குடித்தவன் மீதியை அவளிடம் கொடுத்து, ‘அவ்ளோ நம்பிக்கையா என் மேலே..??’ என்று வாஞ்சையுடன் அவளை பார்க்க,
மீதி பாலை குடித்து முடித்தவள், “நிச்சயமா..!! கல்யாணம் ஆனதும் தனி குடித்தனம் போகணும், எதுக்கு சமைக்கணும், அத்தை மாமாக்கு ஏன் செய்யணும்ன்னு எவ்வளவோ முட்டாள்தனமான கொள்கைகள் சிந்தனைகள்ன்னு என் பக்கம் இல்லாத குறைகளே இல்லை ஒருவேளை இதெல்லாம் கல்யாணம் ஆனதும் அவங்களுக்கு தெரிஞ்சிருந்தா என் மேல இப்போ இருக்க நம்பிக்கையும், மதிப்பும் நிச்சயம் இல்லாம போயிருக்கும் என்னோட தகுதியை நானே இழந்திருப்பேன். ஆனா இப்போ என் மருமகள் போல உண்டான்னு என்னை அவங்க கொண்டாட்டிட்டு இருக்காங்க இதுக்கு காரணம் நீங்க மட்டுமே..!! ” என்று அவனை நன்றியுடன் பார்க்க,
“யாழி இது நீ பெருசா பார்க்கிற அளவு ஒண்ணுமில்லை ஏன்னா இது நான் தேர்ந்தெடுத்த வாழ்க்கை., உன்னை பத்தி உங்கப்பா எல்லாமே சொன்ன பிறகும் நீ தான்னு முடிவு பண்ணினவன் நான்..!! நம்மோட வாழ்க்கை துணை இப்படி தான் என்ற புரிதலோட ஏத்துக்கும் போது சின்ன சின்ன குறைகளை எடுத்து சொல்லி திருத்தி வாழ்க்கையை முன்னெடுத்து செல்லணுமே தவிர உன்னோட குறைகளை சுட்டி காட்டி பெருசு பண்ணி உன்னை மத்தவங்க கிட்ட விட்டு கொடுத்து வாழ்க்கையை சிக்கல் ஆக்கிகறது முட்டாள் தனம் அதோட உன்னை விட்டு கொடுத்தா அங்க என்னையே நான் விட்டு கொடுத்த மாதிரிடி அதை எப்படி நான் செய்ய முடியும்..?? இங்க என் மேல இருக்க உன் காதல் மட்டுமே உன்னை மாற வச்சி இருக்கு அதை மறந்துடாத..” என்று அவள் உச்சியில் முத்தமிட,
‘அதாங்க அதே தான் இப்படி ஆத்மார்த்தமா ஒருத்தர் காதலை ஒருத்தர் புரிஞ்சிக்கனும், உணரனும் ஆனா சமூக வலைத்தளம் எல்லாம் சர்ப்ரைஸ், கிப்ட் , பாட்டு, டான்ஸ், கவிதை , ரோசஸ் அது இதுன்னு இப்படி ரொமாண்டிக்கா ப்ரொபோஸ் பண்றது தான் காதல்ன்னு அதையும் வியாபாரம் ஆக்கிட்டு இருக்காங்க இது புரியாம எத்தனையோ பேர் கனவுலகில் சஞ்சரிச்சு நிஜ வாழ்க்கையை கோட்டை விடறாங்க, ஆனா நானும் அப்படி தானே இருந்தேன் உங்ககிட்ட அதை எதிர்பார்த்தேன் நினைக்கிறப்போ என்னாலேயே என்னை மன்னிக்க முடியலை ‘ என்று அவள் வேதனையில் உழன்றிட,
‘ப்ச் என்னடி இது..?? அதெல்லாம் முடிஞ்சது திரும்ப ஏன் பேசுற..??’ என்று அவளை அணைத்து ஆறுதல் படுத்திட முனைந்தான்.
“இல்லைங்க ஒருத்தி இந்த அளவா முட்டாளா இருக்கிறது.., நமக்கு ஆறாம் அறிவு இருக்கிறதே பகுத்தறிந்து ஒரு விஷயத்தை செய்ய தான் ஆனா மூளையே உபயோகிக்காம அடுத்தவங்க செய்யற ஒரு விஷயத்தை செய்து நானும் ரேஸ்ல இருக்கேன்னு நிருப்பிக்க பார்த்த என்னோட முட்டாள்தனத்தை நானே அடியோட வெறுக்குறேன்”
‘யாழி இப்போதான் நல்லது கெட்டது உனக்கே புரியுதே..’
‘புரியுதுங்க இல்லைன்னு சொல்லலை ஆனா இந்த புரிதல் உங்களால எனக்கு கிடைச்சது ஒருவேளை என் லைப்ல நீங்க இல்லாம போயிருந்தா இப்போ பாதிக்கப்பட்டு இருக்கும் எத்தனையோ பெண்களில் நானும் ஒருத்தியா இருந்திருப்பேன்.. இதை யாராலையும் மறுக்க முடியாதுங்க ‘ என்று அவள் ஆதங்கத்தோடு அவனை பார்க்க,
‘போதும் யாழி டோன்ட் கெட் எமோஷனல், திங்க் ப்ராக்டிக்கல் !! ப்ரிலிம்ஸ் இருக்கு எதை பத்தியும் யோசிக்காம அதை மட்டும் பாரு’ என்றவன் விளக்கணைத்து விட்டு வந்து படுக்க யாழி எப்போதும் போல அவனை நெருங்கி அவன் கைவளைவில் தஞ்சம் புகுந்திட அதிர்துடியனால் என்றும் போல இன்று இலகுவாக அவள் நெருக்கத்தை ஏற்க முடியாமல் சற்று நகர்ந்து படுத்தான்.
ஆனால் யாழியோ விடாமல் அவனை மேலும் நெருங்கி கட்டிக்கொண்டு அவன் மார்பில் சாய்ந்தவள் அறையின் மெல்லிய வெளிச்சத்திலும் அவனை இமைக்காமல் பார்த்து கொண்டிருக்க அவன் மனமோ, ‘நான் சொல்லலை இவ கண்ணுலேயே குடித்தனம் பண்ணுவான்னு’ என்று அதிரை கேலி பேச,
இதழ்கள் துடிக்க ‘ஷ்ஷ்’ என்று அதை அதட்டியவன் அவளிடம் , ‘என்னடி பார்க்கிற..??’ என்றான்.
அவளோ பதிலின்றி அவனையே பார்த்திருக்க அவள் வலக்கரமோ மெல்ல உயர்ந்து அவன் இடது புற தழும்பை வருடி,
“உங்களுக்கு எப்படி இந்த தழும்பு வந்தது..??” என்றாள்..
‘ஏன் கேட்கிற..??’
‘இல்ல இது உங்களுக்கு ரொம்ப அழகா இருக்கு… எனக்கு பிடி.. பிடிக்கும்’
‘பிடிக்குமா..??’
‘ஆமாம்’ என்று சற்று மேலே நகர்ந்து அவன் தழும்பில் முத்தமிட்டவள்
‘நீங்க சொல்லுங்க எப்படி வந்தது’ என்று கேட்க,
அதிர்துடியனோ மூச்சை ஆழ்ந்து எடுத்துவிட்டு பின் அவளிடம், ‘ஒரு குழந்தையை காப்பாற்ற போய் வந்த தழும்புடி’
‘எப்படி..??’
‘செல்பி எடுக்குறேன்னு பெத்தவங்க குழந்தையை வண்டியிலேயே விட்டுட்டு போக அப்போ எதிரே வந்த வண்டி கண்ட்ரோல் இழந்து அது மீது மோத வந்தது அதை கவனிச்சு நான் அந்த குழந்தையை மீட்கும் போது பட்ட அடி இது… ஆழமா கீறி தையல் போட வேண்டியாகி போச்சு’ என்றவனின் தழும்பை வருடியவளின் மனமோ மானுட போக்கை எண்ணி விரக்தியுடன் புன்னகைத்து கொண்டது.
‘இப்போலாம் செல்பி முக்கியமாகிடுச்சி இல்லைங்க’ என்று அவள் மீண்டும் தன் ஆதங்கத்தை ஆரம்பிக்க,
‘ஏய் போதும்டி விட்டா இதே நாள் முழுக்க பேசிட்டு இருப்ப போல’
‘போங்க நீங்க, எனக்கு இதெல்லாம் பார்க்கிறப்போ அவ்ளோ கோபம் வருது தெரியுமா..?? ஏதாவது செய்து எல்லாமே மாத்தனும்ன்னு இருக்கு’ என்றவளிடம்
‘அது தான் அதிகாரத்துல இருக்க போறியே அதை வச்சு என்ன செய்யலாம்ன்னு யோசி இப்போ தூங்கு’ என்றவன் அவளை தட்டி கொடுத்தான்.
ஆனால் யாழியோ என்றும் இல்லாத வகையில் இன்று அவனை இறுக்கமாக கட்டிக்கொண்டு கதைகள் பேசியவாறு அவன் அணைப்பில் சுகமாக கண்ணயர்ந்து விட்டாள் ஆனால் ஒற்றை அணைப்பில் அடங்கி விட கூடியதா என்ன ஆடவனின் தவிப்புகள்..??
இன்று எதிர்பாராத மனைவியின் அதீத நெருக்கத்தில் மெல்ல அவனுள் கனன்று கொண்டிருந்த மோகத்தீ விரைவாக பரவி அவனை பற்றும் முன் சுதாரித்துஉறங்கி விட்டிருந்தவளை சட்டெனதன்னிடம் இருந்து பிரித்து படுக்க வைத்தவன் உடனே அறையில் இருந்து வெளியேறி இருந்தான்.
மேலும் இரு வாரங்கள் கழிந்த நிலையில் யாழியை அவள் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான் அதிர்துடியன்.
சுகமதி இருவருக்கும் காலை உணவு பரிமாற முடித்து கொண்டு அதிர்துடியன் அவளிடம் ஏதோ கூற , ‘இல்லைங்க இது எனக்கு கம்பைன் பண்ணி படிச்சா கொஞ்சம் ஈசியா இருக்கும் அதனால நம்ம வீட்டுக்கு வந்து பார்த்துக்குறேன் இன்னைக்கு இது முடிக்கிறேன்’ என்று அவளால் தனியாக எளிதாக முடிக்க கூடிய பாடத்தை சுட்டி காண்பிக்க, அவனோ புன்னகையுடன் அவளை பார்த்து கொண்டிருந்தான்.
ஆம் தன் தேவை எது என்று உணர்ந்து அவள் முடிவுகளை தெளிவாக அவளே எடுக்க கூடிய பக்குவத்திற்கு வந்திருக்கும் மனைவியை கண்டு முகிழ்த்த புன்னகை அது.
யாழியிடம் சொல்லிக்கொண்டு வெளியில் வந்தவனிடம் மகேஷ்வரன், ‘மாப்பிள்ளை யாழியோட பிரெண்ட்ஸ் அந்த பொண்ணுங்க ஏற்கனவே யாழியை பலமுறை கேட்டுட்டு இருந்தாங்க.., இப்போ இங்க வந்தா எப்படி ..??’ என்றிட,
‘வரட்டுமே..!! நல்லது தானே மாமா’ என்று அதிர்துடியன் கூற மறுபுறம் இருந்தவரோ இப்போது தான் சரியாகி வரும் பெண்ணின் வாழ்வு மீண்டும் பாதிக்க பட்டுவிடுமோ என்று அதிர்வோடு அவனை பார்த்தவர்,
‘இல்ல மாப்பிள்ளை அந்த பொண்ணுங்க திரும்ப யாழியை..’ என்றவரை இடையிட்டவன்,
‘மாமா படிப்போட அருமை தெரிஞ்ச என் பொண்டாட்டியையும் உழைப்போட அருமை தெரிஞ்ச என் மச்சானையும் இனி யாரும் இன்ப்ளுயன்ஸ் பண்ண முடியாது நீங்க கவலை விடுங்க…’
‘ஆனா யாழியால சமாளிக்க முடியுமா..?? ஒருவேளை நீங்க சொன்ன மாதிரி பியர் ப்ரெஷரால…’
‘மாமா எல்லாம் தெரிஞ்சு தான் என் பொண்டாட்டியை இங்க விட்டுட்டு கிளம்புறேன்… என்னைக்கு இருந்தாலும் அவ பேஸ் பண்ண வேண்டியது தானே மாமா..?? யாழி அவங்களை சமாளிப்பா நீங்க பயப்படுற மாதிரி ஒன்னும் நடக்காது கவலை விடுங்க’ என்று கூறி கிளம்பி இருந்தான்.