அந்த மகளிர் விடுதியின் ஓர் மேல்தள அறையில் தனது உடைமைகளை எல்லாம் சேகரித்துக்கொண்டிருந்தாள் கௌசி.
கிட்டத்தட்ட அத்தனையும் எடுத்து வைத்துவிட்ட பிறகும் எதையோ விட்டு செல்வதை போன்றதொரு உணர்வு அவளுள். ஏனெனில், நான்கு வருட பொறியியல் படிப்பை அவள் முடிக்கும் வரை இதே விடுதி வாசம் தான். அவள் விருப்பு, வெறுப்பு, சோகம், ஏக்கம் அத்தனையும் அந்த நான்கு சுவர்களுக்குள்ளே முடிந்திருக்கும்.
இடையே விடுமுறை எனில் உள்ளூரில் இருக்கும் அவள் அத்தை வந்து தன் வீட்டிற்கு அழைத்து சென்றுவிடுவார். இப்போது இறுதிபரிட்சை முடித்துவிட்டு மொத்தமாய் அவ்விடம் விட்டு பெயர்ந்து நான்கு வருடங்களுக்கு பின்னே தன் சொந்த ஊருக்கு பிரயாணமாக இருக்கிறாள்.
ஆனால், அதற்கான மகிழ்வோ, உற்சாகமோ அவளிடம் இருப்பதற்கான அடையாளம் தான் இல்லை.
“மேடம், ஜாலியா ஊருக்கு கிளம்பிட்டீங்க போலருக்கே?” அறை வாசலில் வந்து நின்றாள் மீனா. இவள் ஓரளவு நெருங்கி பேசி சிரிக்கும் ஒரே ஜீவன்.
திரும்பி அவளை பார்த்த கௌசி எப்போதும் வீசும் மிதமான புன்னகையுடன், “நீ இன்னும் கிளம்பலையா?” என்றாள் அவளிடம்.
“கிளம்பிட்டேன்… அப்பா வெளில நிக்குறாரு! உன்கிட்ட சொல்லிட்டு போகலாம்ன்னு தான் வந்தேன்!” என்றவள் அவளை நெருங்கி பின்னோடு ஆதரவாய் கட்டிக்கொள்ள, அந்த மெல்லிய அணைப்பு சொன்னது அவளின் பிரிதுயரை.
தன் வயிற்றின் மீது படிந்திருந்த அவள் கரத்தை அழுத்திப்பிடித்த கௌசி, “நேரமாச்சு பாரு! கிளம்பு” என்றாள்.
லேசான கடுப்பு எழ, தன் தலை கொண்டு அவள் முதுகில் இடித்த மீனா, “சரியான ஜடம்டி நீ! நாலு வருஷம் கூடவே இருந்தவளை பிரியுறோமேன்னு எதாவது வருத்தம் இருக்கா? போ, போ’ன்னு விரட்டுற?!” என சடைத்துக்கொண்டாள் உரிமையாய்.
அதற்கும் அதே மெல்லிய புன்னகையே!!!
இவள் இப்படிதான் என அறிந்தவள் தானே மீனா!
அதற்குமேல் அப்பேச்சை நீட்டிக்காது, “உன் அத்தை வந்தாச்சா? எத்தனை மணிக்கு ட்ரெயின்?” என்றாள்.
“ட்ரெயின் எட்டு மணிக்கு! ஆனா, அத்தை வரல! ஏதோ பெரிய காரியம்ன்னு போயிருக்காங்க!” தோள்ப்பையை எடுத்து மாட்டிக்கொண்டவள், ஒரு கையில் ட்ராலி பேகை தள்ளிக்கொண்டும் மறுகையில் மற்றொரு பையை எடுத்துக்கொண்டும் வெளியே வர,
“அப்போ நீ எப்டி போவ தனியா? லக்கேஜ் வேற இருக்கே?” என கேட்ட மீனா, கௌசி பதில் சொல்லும் முன்னே, “நீ என்னோடவே வா! உன்னை ரயில்வே ஸ்டேஷன்ல விட்டுட்டு நாங்க அப்புறம் கிளம்புறோம்!” என்றாள்.
“அதெல்லாம் வேண்டாம்! நீங்க நேரமே கிளம்புங்க! அப்போதான் இருட்டும் முன்ன வீட்டுக்கு போகலாம்!” என்ற கௌசி அறையை பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு கீழ் தளம் நோக்கி செல்ல,
“ம்ச்… ஒழுங்கா வாடி என்னோட!” என்றபடி அவளிடம் இருந்த ஒரு பையை தன் கையில் வாங்கிக்கொண்டாள் மீனா.
“ட்ரெயினுக்கு இன்னும் ரொம்ப நேரம் இருக்கு மீனா! நான் ஆட்டோ’ல போனா சரியா இருக்கும்! சொன்னா கேளு” கௌசி பேசிக்கொண்டே கீழே வந்திருக்க, எதிர்ப்பட்ட வார்டன்,
“கௌசி பொண்ணே! ஊருக்கு கிளம்பிட்டியா?” என கேட்டபடி அவள் நீட்டிய சாவியை பெற்றுக்கொண்டார்.
கௌசியிடமிருந்து அவருக்கும் அதே மிதமான புன்னகையே பதிலாய்!!!
ப்ரோசீஜர் எல்லாம் முடித்து அவளிடம் கையெழுத்து வாங்கியவர், “விஷ் யூ ஆல் தி பெஸ்ட் ஃபார் யுவர் ஃப்யூசர் கௌசல்யா! அலுமினி மீட்டிங் வைக்கும்போது கண்டிப்பா நீங்க வரணும்!” என்றார் மீனாவையும் சேர்த்து.
இருவரும் விடைபெற்று வெளியே வருகையில் மீனாவின் தந்தை நின்றுக்கொண்டிருந்தார்.
புன்னகையுடன் அவரை நோக்கி சென்ற கௌசி, “நல்லா இருக்கீங்களா அங்கிள்?” என பேச, சில பல பேச்சுகளுக்கு பின்னே, கௌசி தனியே செல்லப்போவதை பற்றி தந்தையிடம் சொன்னாள் மீனா.
“எங்களோட வாயேன்ம்மா! ஏன் தனியா போகணும்?” என்றார் அவரும்.
மீனாவிடம் சொன்ன அதே காரணத்தை சொல்லி அவரிடமும் தன்மையாய் மறுத்த கௌசி, “நீங்க கிளம்புங்க! நான் போய்க்குவேன்” என்றுவிட்டாள்.
வேறு வழியின்றி காரில் கிளம்பிய மீனா, “பிடிவாதக்காரி!” என வார்த்தையை கடித்துத்துப்ப, இப்போது கௌசியின் முகத்தில் மென்னகை நீண்டு குறுநகையானது.
கார் கிளம்பியப்பின்னும் ஜன்னல் வழியே தலையை நீட்டி, “ஊருக்கு போனதும் என்னை மறந்துடாதடி! அப்ப அப்ப போன் பண்ணு! கீப் இன் டச்!” மீனா கண்ணைவிட்டு மறையும் வரை கத்திக்கொண்டே போக, அதைப்பார்த்த கௌசிக்கு சிரிப்பு தான் வந்தது.
கௌசி கல்லூரியில் சேர்ந்த புதிதில் யாரிடமும் பேசாமல் தானுண்டு தன் வேலையுண்டு என இருந்தபோது, தானாய் வந்து பேசி, சிரித்து, முறைத்து நட்பாகி அவளுக்கு உறுதுணையாய் நின்றவள் தான் மீனா.
நிறைய பேர் கௌசியின் தோற்ற பொலிவில் மயங்கியும், அவள் வாங்கும் மதிப்பெண்களை கண்டு வியந்தும் நட்புப்பாராட்ட வந்து, இறுதியில் ‘ச்சீ ச்சீ இந்த பழம் புளிக்கும்’ என விலகி சென்றிருக்கின்றனர்.
ஆனால், இவள் ஒருத்தி தான்… நீ பேசாவிட்டால் என்ன? நான் பேசுகிறேன் நீ கேள்! என வம்படியாய் வந்து நின்றது.
ஏனோ அவளுக்கு கௌசியை பிடித்துப்போனது.
அவள் மட்டும் இல்லை என்றால், இந்த நான்கு வருடம்?
கௌசிக்கு நினைத்துப்பார்க்கவே மலைப்பாய் இருந்தது.
மீனாவை அனுப்பிவைத்ததற்காக கடவுளிடம் மானசீகமாய் நன்றி கூட சொல்லிக்கொண்டாள்.
எதிர்ப்பட்ட ஆட்டோவை கை காட்டி நிறுத்தி ஏறினாள்.
இருபது நிமிட பயணம்…
மனம் மீண்டும் மீனாவிடம் வந்தது.
எப்போதும் துருதுருவென இறக்கை இல்லாத பட்டாம்பூச்சி போல துள்ளித்திரியும் குணம் மீனாவுக்கு. வாய்மூடாமல் பேசிக்கொண்டே இருக்கும் இயல்பு. பல் வரிசை தெரிய எந்த விகல்ப்பமும் அன்றி அவள் வெள்ளையாய் சிரிக்கும்போது எதிரே இருப்பவர் தன்னியல்பாய் புன்னகித்து விடுவர்.
யாரிடமும் பேசபிடிக்காமல் ஒதுங்கி இருந்தபோது, இவளிடம் மட்டும் தன்னை பேசத்தூண்டியது கூட அவளது அந்த துருதுரு குணம் தானோ?!
எண்ணிக்கொண்டாள்…
ஒருவேளை நான்கு வருடம் முன்பு வரை தானும் இப்படி இருந்ததால், தன்னைப்போல் ஒரு ஜீவனை கண்டதும் தன் மனம் ஒன்றி விட்டதோ?!
இருக்கும்!!!!
இதழ்கள் கசப்பாய் சுழிந்தன.
மனம் விட்டு சிரித்து தான் எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது!?
நினைத்தவளுக்கு தன்னைப்போல பெருமூச்சு வந்தது.
ஆட்டோ சடாரென பிரேக்’கடித்து நிற்க, “என்னாச்சு?” என்றாள்.
“கரண்ட்டு கம்பி அறுந்து கடக்கு பாப்பா! வெளில மழை வேற கொட்டுது! எதுக்கு வம்பு? அதான் சுத்தி போலாம்ன்னு வண்டியை திருப்புறேன்!”
அவர் சொன்ன பிறகு தான் வெளியே பார்த்தாள்.
மழை பெய்துக்கொண்டிருந்தது.
மழை!!!
மழையை கண்டதும் அவள் மனதின் ஆழத்தில் ஆணியென பதிந்து போயிந்தவை எல்லாம் நீரிலிட்ட பந்து போல நொடிக்குள் மேலெழும்பி வந்து நிற்க, மனம் கணமாகிப்போனது நொடிக்குள்.
இந்த மழை… மழை நாட்கள்…. அவள் வாழ்வில் எத்தனை காயங்களை கொடுத்துவிட்டு சென்றிருக்கிறது.
மீண்டும் ஆட்டோ நின்றது.
நிமிர்ந்துப்பார்த்தாள்…
ரயில்நிலையம் வந்துவிட்டிருந்தது.
பணத்தை கொடுத்துவிட்டு, தனது உடைமைகளுடன் குறித்த பிளாட்பார்முக்கு வந்து நின்றாள்.
எத்தனை பதுங்கி வந்தும் மழை அவளை பாதிக்கு மேல் நனைத்துவிட்டிருந்தது.
ரயில் வர இன்னும் நேரம் இருக்க, ஒரு நாற்காலியில் சென்று அமர்ந்தவள், நனைந்த சுடிதாரின் முன்பக்கத்தை முறுக்கிப்பிழிந்தாள்.
கைக்குட்டைக்கொண்டு முகத்தை அழுந்த துடைத்தவள், திரும்பியபோது சற்று தள்ளி ஒரு இளைஞன் இவளையே பார்ப்பதை போன்று தோன்றியது.
அது வக்கிரமான பார்வையோ, துகிலுரிக்கும் பார்வையோ அல்ல.
ஒரு அழகான பெண்ணை கண்டால் ஆர்வத்தில் தன்னை மீறி அவளை ரசிக்கும் சில யோக்கியமான ஆண்களின் இயல்பான பார்வை.
இருபத்தி இரண்டு வயதில் ஒரு ஆண் தன்னை ஆர்வமாய் பார்ப்பதை கண்டதும், லேசான படபடப்போ, அல்லது கர்வமோ தோன்றுவதற்கு பதில், கௌசிக்கு திடுமென கை கால்கள் எல்லாம் நடுங்க ஆரம்பித்து இருந்தது.
கொட்டும் மழையின் குளிரிலும் அவளுக்கு வியர்த்துக்கொட்ட, சொல்லொண்ணா பயம் வந்து நெஞ்சை அடைக்க மூச்சுவிட கூட சிரமம் என்பது போல ஆனது அவளுக்கு.
இது இப்போது என்று இல்லை… இந்த நான்கு வருடமாகவே இப்படிதான்! எந்த ஆணின் பார்வை அவள் மீது விழுந்தாலும் அடிவயிற்றில் பயபந்து உருள ஆரம்பித்து விடுகிறது.
அங்கிருந்து எழுந்து சென்றுவிடலாம் என ஆயத்தமானபோது அவளுக்கான தொடர்வண்டி ஆடி அசைந்து வந்து நின்றது.
பாதுகாப்பு வளையத்தை கண்டுவிட்டவள் போல வேகவேகமாய் சென்று அவளுக்கான பெட்டியை தேடி அவள் சீட்டில் சென்று அமர்ந்துக்கொண்டாள்.
வெளியே எட்டிப்பார்க்க அவளை பார்த்துக்கொண்டிருந்தவன் அவள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை காண கிடைக்கவில்லை.
இழுத்து பிடித்த மூச்சு அக்கணம்தான் சீராக வெளிவந்தது.
நிம்மதியாய் சாய்ந்து அமர்ந்தவள் அப்போது தான் அருகே இருந்தவர்களை பார்வையிட்டாள்.
அவளுடன் சேர்த்து அறுவருமே பெண்கள்…!
வெகு நிம்மதியாய் மூச்சு விட்டாள்.
லேசான குலுங்கலுடன் ரயில் தண்டவாளத்தில் நகர ஆரம்பித்தது.
மழை சாரல் ஜன்னலோரம் இருந்த அவள் முகத்தில் பட்டு தெறிக்க, அந்த குளுமையில் மனம் இதமாக, கண் மூடி அமர்ந்திருந்ததாள்.
சில நிமிடங்களில் அவள் அலைபேசி சிணுங்கியது. அவள் அன்னை தான் அழைத்திருந்தார்.
“சொல்லுங்கம்மா!” என்றாள்.
மறுமுனையில், புவனேஸ்வரி, “ரயில் கிளம்பிடுச்சா?” என்றார்.
“ம்ம்ம்”
“உன் அத்தை கடைசி நேரத்துல சொந்தத்துல எழவு… போயே ஆகணும்ன்னு சொன்னதால தான் உன்னை தனியா வர வச்சுருக்கோம்! ராத்திரி நேரம்… பாத்து பத்திரமா இருந்துக்கோ! புரிஞ்சுதா?”
பாசமா? கடமையா? கடுப்பா?
எல்லாம் கலந்து ஒலித்தது அவர் குரல்.
“சரிம்மா!” என்றாள் ஒற்றை வார்த்தையில்.
“ட்ரெயினு விட்டு இறங்குனதும் எங்கயும் அலையாத! மனோகர் வந்து கூட்டிகிட்டு போவான்! என்ன?”
அன்னை சொல்ல… அந்த பெயரை கேட்டதுமே வார்த்தைகள் தொண்டைகுழியில் சிக்கி நின்றுவிட்டது அவளுக்கு.
“என்னடி காதுல விழுகுதா?” அன்னையின் குரல் மிரட்டலாய் மாற, அவசரமாய், “சரி!” என்று அழைப்பை துண்டித்தாள் கௌசல்யா.
அவன் பெயரை கேட்ட பிறகு அவனே அருகே வந்து நிற்ப்பதை போல தோன்றியது அவளுக்கு.
பார்த்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டது.
என்னிடம் பேச வேண்டும் என்றுக்கூட தோன்றவில்லையா? எப்போதும் அவளுக்குள் எழும் விடைதெரியா கேள்வி இது!
இந்த நான்கு வருடத்தில் அவளுக்கு தேவைப்பட்டதெல்லாம் அவன் மூலமாக தான் அவளுக்கு வந்து சேர்ந்திருக்கிறது. ஆனால், ஒருமுறை கூட நேர்க்கொண்டு அவனை பார்க்க முடிந்ததில்லை.
வேண்டுமென்றே தவிர்க்கிறாரோ?
அப்படியாகத்தான் இருக்கும்!
பின்னே, இப்படி ஒருத்தியை யாருக்கு தான் பிடிக்கும்!? அவளே நினைத்துக்கொண்டாள்.
வேகமாய் அடித்த சாரல் மழை சலேரென அவள் முகத்தில் அடிக்க சிலிர்த்தது அவளுக்கு.
இதே போன்றதொரு மழை நாளில் தானே அவரை முதன்முதலில் பார்த்தேன்!!!
மனம் பின்னோக்கி ஓடியது.
கௌசல்யாவின் வீட்டு வாசலில் கொட்டும் மழையில் நனைந்தபடி கட்டிய கைகளுடன் நின்றிருந்தான் பதினாறு வயது மனோகர்.
அவனை உள்ளே வரக்கூட விடாது புவனேஸ்வரி ஆடிக்கொண்டிருந்தார்.
“இதென்ன வீடா இல்ல தர்மசத்திரமா? வரவன் போறவன் எல்லாம் தங்கிட்டு போக! ரெண்டொருனாளுன்னா கூட தொலையுது சனியன்னு திண்ணையில இடம் குடுக்கலாம்! இது என்னவோ இங்கேயே டேரா போடல்ல வந்து நிக்குது!!!”
வராண்டா நாற்காலியில் மிகுந்த யோசனையுடன் அமர்ந்திருந்த அன்பழகன் கூட மனைவியின் இந்த பேச்சை தடுக்கவுமில்லை, கொட்டும் மழையில் வாட்டும் பசி முகத்தில் தெரிய கதியற்று நிற்பவனை வீட்டுக்குள் அழைக்கவும் இல்லை.
“என்னங்க இன்னமும் யோசிச்சுட்டு நிக்குறீங்க? எங்கயாச்சும் போக சொல்லுங்க அவனை” என்றார் புவனேஸ்வரி.
அன்பழகனுக்கு அப்படி பட்டென சொல்லிவிட வார்த்தை வரவில்லை.
திருமணம் முடிந்த ஒரே வருடத்தில் மனைவி இறந்துவிட்ட போதும் அவர்மீது அலாதி அன்பு உண்டு அவருக்கு.
மனைவி போன பின்னே வாரிசு இல்லாமல் போய்விட கூடாது என அவர் பெற்றோர் சொல்கேட்டு அவசரமாய் இரண்டாவதாக மனம் முடித்தவர் தான் புவனேஸ்வரி.
அத்தோடு மூத்த தாரத்தின் வீட்டோடு உறவு அற்று போயிந்தது. அற்று போக வைத்திருந்தார் புவனேஸ்வரி.
இப்போது திடீரென பதிமூன்று வருடம் சென்று தாய் தந்தையை இழந்து, இங்கே ‘சொந்தம்’ என சொல்லிக்கொண்டு வந்து நிற்கிறான் இவன்.
சட்டென, ‘போ’ என சொல்லமுடியாது அவர் தயங்க காரணம் அவர் மூத்த மனைவி!!!
அவருக்கு தன் தம்பியின் மீது அத்தனை பிரியம்! திருமணம் முடித்த பின்னே அன்னை தந்தையை பிரிய அவர் வருந்தியதை விட தம்பியை பிரிய வருந்தியது தான் அநேகம்!
அவருடன் வாழ்ந்த ஒரு வருடத்தில் அவர் ஆசையாய் ஏக்கமாய் ஆர்வமாய் பேசியதில் முக்கால் பங்கு அவர் தம்பியை பற்றியதாக தான் இருந்தது.
அப்படிப்பட்டவன், இப்போது ஆதரவு இன்றி வந்து நிற்கும்போது விரட்டியடித்தால், தன் முதல் மனைவியின் சாபம் தன்னை சும்மா விட்டுவிடாது என்று திடமாய் எண்ணினார்.
புவனேஸ்வரி இன்னமும் தன் கத்தலை நிறுத்தவில்லை.
அவனும் கட்டிய கையுடன் குனிந்த தலை நிமிராமலே நின்றிருந்தான்.
“ஏங்க நான் சொல்லிட்டே இருக்கேன்ல!? அவனை வெளில போக சொல்லுங்க!!!” என புவனேஸ்வரி கத்த,
ஒரு முடிவுக்கு வந்தவராய் நாற்காலியில் இருந்து எழுந்து நின்ற அன்பழகன்,
“உள்ள வா!” என்ற வார்த்தையுடன் எழுந்து சென்றுவிட,
“என்னங்க என்ன பேசுறீங்க நீங்க? கண்டவனுக்கும் இடம் குடுக்க இதென்ன பரதேசி மடமா?” வீட்டிற்குள் செல்லும் அவரோடு கத்திக்கொண்டே பின்னால் ஓடிக்கொண்டிருந்தார் புவனேஸ்வரி.
இருவர் தலையும் மறைந்த மறுநொடி வேகமாய் வெளியே வந்தார் தனபாக்கியம். அன்பழகனின் அன்னை.
வாசலில் நின்றிருந்தவனின் கரம் பிடித்து உள்ளே இழுத்தவர், “பாதகத்தி! இரக்கமே இல்லாம எவ்ளோ நேரம் மழைல நிக்க வச்சுட்டா பாரு!!!” என்ற புலம்பலோடு தன் சேலை முந்தானையில் அவனது ஈரசிகையை துவட்ட, தொப்பலாய் நனைந்து போனது அவர் புடவை.
“வாரிசு வேணுமேன்னு ஆசைப்பட்டு இந்த ராங்கியை என் மவனுக்கு கட்டிவச்சு தினம் தினம் வீடே சந்தக்கடையா தான் இருக்கு! உன் அக்கா மவராசி ஆயுசோட இருந்து பொழைச்சுருக்கக்கூடாதா?” ஆதங்கம் மேலிட சின்ன குரலில் புலம்பிக்கொண்டே மேலும் அவனுக்கு துவட்டிக்கொண்டிருந்தார்.
சத்தம் சற்று அதிகமாய் போனாலும் ஆடி தீர்த்து விடுவார் புவனேஸ்வரி. அவர் மருமகளாய் வந்த பின்னே அவ்வீட்டில் தனபாக்கியத்தின் ஆதிக்கம் சிறிது சிறிதாய் குறைந்து குறைந்து இறுதியில் இல்லாமலே போய்விட்டது.
தன் வீட்டிலேயே தன்னை ஒன்றும் இல்லாதவளாய் ஆக்கிவிட்டு ராணியென வலம் வரும் புவனேஸ்வரி மீது அதிக காண்டு அவருக்கு.
துவட்டி துவட்டி அவர் முந்தானை முழுக்க ஈரம் சொட்ட, வேறு துணிக்காக திரும்பி பார்த்தார்.
கதவிடுக்கில் இடப்பக்க ஜடை மட்டும் தாராளமாய் தெரிய, ஒற்றை கண்ணை கொண்டு புதியாய் வந்திருப்பவனையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் பத்து வயது கௌசல்யா.
குடுகுடுவென ஓடிசென்று துண்டை கொண்டு வந்து நீட்டினாள் கௌசி.
பார்வை புதியவனையே சுற்றியது.
அவனோ குனிந்த தலை இன்னமும் நிமிர்ந்திருக்கவில்லை. கண்கள் வழியும் நீரோடு தரையை மட்டுமே பார்த்திருந்தது.
துண்டை கொண்டு ஓரளவு அவனுக்கு துவட்டியவர், “நீ நல்லா துடைச்சுக்கோ! நான் உனக்கு சூடா குடிக்க எதாவது கொண்டு வர சொல்றேன்!” என்ற தனபாக்கியம், வேலைக்காரரிடம் அதை சொல்ல வீட்டிற்குள் சென்றார்.
“நீ ஏன் அழற?”
அவனிடம் முதன்முதலாய் பேசினாள் கௌசி.
அவன் திரும்பிக்கூட பார்க்கவில்லை அவளை.
“எனக்கு மழைல நனையனும்ன்னு ரொம்ப ஆசை தெரியுமா? என் அம்மா தான் விடவே மாட்டாங்க! எல்லாத்துக்கும் திட்டுவாங்க” என்றாள்.
அவன் அப்படியே நிற்க, “உன் பேர் என்ன?” என்றாள்.
அதற்குள் தனப்பாக்கியம் வந்திருந்தார். கையில் கருப்பட்டி காப்பி இருந்தது.
“இதை குடிச்சுக்கோ தம்பி! கொஞ்சம் தெம்பா இருக்கும்! அப்பறமா குளிச்சுட்டு ஒரு பாராசிட்டமால் போட்டுடு இல்லனா ஜன்னி கண்டுடும்!” என்றார்.
கண்ணீர் வேகமாய் வழிய அந்த காப்பி குவளையை பெற்றுக்கொண்டான்.
“நீ குடி! நான் சுடுதண்ணி போட சொல்லிட்டு வரேன்!” என நகர்கையில்,
“ஆத்தா, இவன் இனி இங்க தான் இருப்பானா? ஏன் பேச மாட்டேங்குறான்?” என்றாள் கௌசி.
“அடிச்சேன்னு வையேன் கழுதை! உன்னைவிட வயசுல பெரிய புள்ளைய அவன் இவன்னு பேசுவியா?” என அதட்டினார் தனபாக்கியம்.
அவள் அண்ணனிடம் சரிக்கு சரி வாய் பேசி பழகி அப்படியே பேச வந்தது அவளுக்கு.
“வேற எப்படி பேசணும்? நான் கேட்டா பதிலே சொல்ல மாட்டேங்குதே!” என அவனை கைக்காட்டினாள் கௌசி.
“உனக்கு தாய்மாமன் முறை டி அவன்! மரியாதையா ‘மாமா’ன்னு பேசி பழகு! இல்லனா அவன் கோச்சுக்கிட்டு அழுதுட்டே இருப்பான்!!!” என்று சொல்லிவிட்டு சென்றுவிட,
நெருங்கி சென்று அவன் கரத்தை தொட்டு, “மாமா….!!!!” என்று விளித்தாள் கௌசி.
கண்களில் தேங்கிய நீரோடு அவன் அவளை முதன்முறையாய் ஏறிட்டு பார்க்க, “நான் இனிமே மரியாதையா பேசுறேன்! நீங்க அழாதீங்க மாமா!!!” என்றாள் கௌசி! பாட்டி சொன்னதுமே சட்டென தன் பேச்சை திருத்திக்கொண்டுவிட்டாள்.
அவன் பார்த்தது பார்த்தபடி நிற்க, “என்கிட்ட பேச மாட்டீங்களா மாமா?” என்றாள் இவள்.
“கொஞ்சம் நகர்ந்துண்டியானா நான் சித்த நாழி இங்க உட்காந்துப்பேன்!” மத்திய வயதுடைய ஒரு பெண்மணி அவள் ஜன்னல் இருக்கைக்கு பங்கு கேட்டார்.
மௌனமாய் வழி விட்டாள் கௌசி.
வாய் முனுமுனுக்க எதையோ சொல்லிய அந்த பெண், கழுத்தில் இருந்த திருமாங்கல்யத்தை எடுத்து ஓடும் ரயிலில் ஜன்னலுக்கு வெளியே நீட்டிக்காட்ட, சுருங்கிய புருவங்களுடன் பார்த்துக்கொண்டிருந்தாள் கௌசி.
இன்னும் பல முனுமுனுப்புகளுக்கு பிறகு, “என்னடிம்மா பாக்குற? மூணாம் பிறை பாக்குறது ரொம்ப நல்லது. அப்போ நம்ம தாலிக்கொடியை கையிலெடுத்து நிலாவாண்ட காட்டி வழிபட்டா ஆத்துக்காரர் ஷேமமா இருப்பார்ன்னு ஒரு ஐதீகம்… அதான்!!!” என்றவர் அவள் ஜன்னல் இருக்கையை அவளுக்கே மீண்டும் கொடுத்துவிட்டார்.
அவர் சொன்னதையே மனதில் அசைப்போட்டுக்கொண்டிருந்தவளுக்கு கை தன்னியல்பாய் கழுத்தை தொட்டு அங்கிருந்த மெல்லிய சங்கிலியை எடுத்து ஜன்னல் வழி காட்டியது.
அதைக்கண்ட பெண்மணி, “நோக்கு கல்யாணம் ஆகிடுத்தா? பார்த்தா காலேஜ் புள்ளையாட்டம் இருக்கியே?!” என்று ஆச்சர்யமாய் கேட்ட பிறகே தன் கரத்தில் இருந்த தாலிக்கொடியை திகைப்புடன் கண்டு அவசரமாய் உடைக்குள் மறைத்தாள் கௌசி.