கதிர் மருத்துவமனை அருகில் இருந்த ஹோட்டலில் ஒரு அறை எடுக்க, அதில் அவனும் துரையும் இரவு தங்கிக்கொண்டனர். மற்றவர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். அப்படி வருபவர்கள் வீட்டில் இருந்து உணவு கொண்டு வருவார்கள்.மூன்று நாட்கள் சென்ற பிறகுதான் வேதவல்லியால் எழுந்து உட்கார முடிந்தது. அவருக்கு அடிவயிற்றில் தையல் போட்டிருந்ததால், ரொம்பவும் வலி இருந்தது. அவர் வலியில் துடிக்கும் போது எல்லாம் சந்தியாவும் அழுவாள்.
ஐந்து நாட்கள் ஆனதும் வேதவல்லிக்கு வலி குறைந்தது. இந்த ஐந்து நாட்களும் தூங்கும் போது தன் அம்மாவுக்கு எதாவது ஆகி விடுமோ என்ற பயத்திலேயே சந்தியா உறங்கவில்லை.வேதவல்லியை பார்க்க வந்த லக்ஷ்மி சந்தியாவைப் பார்த்து அரண்டு விட்டார்.
“என்ன சந்தியா இது?!இப்படி இருக்க? உங்க அம்மாவுக்கு உடம்பு முடியலையா. இல்லை உனக்கா? உன்னைப் பார்த்தாதான் உடம்பு முடியாதவப் போலிருக்கு…” என்று வருத்தப்பட,
“நல்லா சொல்லுங்கம்மா… மனசை போட்டு குழப்பிக்கிட்டு நைட் எல்லாம் தூங்கவே மாட்டேங்கிறா…” என்றான் கதிர்.
“நான் இன்னைக்கு நைட் இங்க இருக்கேன். நீயும் கதிரும் நம்ம வீட்டுக்கு போங்க. நல்லா துங்கி எழுந்து நாளைக்குக் காலையில வாங்க.” என்று லக்ஷ்மி சொன்னதற்கு முடியாது என்று சந்தியா மறுக்க,
“எனக்கு ஒன்னும் இல்லை. இப்ப சரி ஆகிடுச்சு. நான் நல்லா இருக்கேன். நீ போயிட்டு வா…” என்று வேதவல்லியும் சொல்ல,
“ஆமாம் நீங்க சொல்றத நம்பிட்டாலும். உடம்பு இவ்வளவு முடியாம போற வரை சொல்லலை. இப்ப மட்டும் இவங்க சொல்றதை நம்பனுமாம்…” என்று சந்தியா முனங்க,
“நானும் இப்படி ஆகும்னு நினைக்கலைடா. உங்க எல்லாரையும் ரொம்பக் கஷ்டப்படுத்திட்டேன்…” என்று வேதவல்லி வருந்த, அவர் வருந்துவது பிடிக்காமல் சந்தியா கதிருடன் சென்றாள்.
வீட்டிற்கு வந்தவர்கள் குளித்துக் கதிரின் அப்பத்தா சமைத்து வைத்திருந்த உணவை சாப்பிட்டனர். சந்தியா கொறிக்க, கதிர் விட்டு விளாசினான்.அவர்கள் அறைக்கு வந்ததும் கதிர் தலையணையை எடுத்து தரையில் போட்டு படுத்தவன் படுத்தும் உறங்கி விட, கட்டிலில் படுத்திருந்த சந்தியா உறங்காமல் விழித்திருந்தாள்.
சந்தியாவும் உறங்கத்தான் நினைத்தாள். ஆனால் அவளுக்கு ஏனோ உறக்கம் வரவில்லை. உறங்காமல் கண்டதையும் நினைத்து மனம் தவிக்க, கதிரோடு படுத்தாலாவது உறக்கம் வருமோ என்ற ஆசையில், கட்டிலிலிருந்து எழுந்தவள், கதிரின் பக்கத்தில் படுத்து அவனை அணைத்துக்கொண்டு கண்களை மூடி தூங்க முயன்றாள்.
சந்தியா அணைத்ததும் தூக்கத்தில் இருந்து விழித்த கதிர், கண் திறந்த போது, கண்களை இறுக்கமாக மூடி இருந்த சந்தியாவின் முகம்தான் தெரிந்தது.அவள் தூங்க முடியாமல் தவிக்கிறாள் என்று புரிந்து கொண்டவன், அவள் முதுகை வருடி விட, அப்போதும் சந்தியா தூங்கவில்லை.
தனக்கு இனி உறக்கமே வராதோ என்று சந்தியா நினைக்க இவளை எப்படித் தூங்க வைப்பது என்று யோசித்த கதிர், அவள் மனம் முதலில் அவள் அம்மாவின் நினைவில் இருந்து வெளியே வரவேண்டும் என்று நினைத்தவன், அவள் மனதை மாற்றுவதற்காக முத்தமிட, விலகுவாள் என்று நினைத்த சந்தியா அவனுடன் மேலும் ஒன்றினாள்.
மனம் சந்தோஷமாக இருக்கும் நேரத்தை விட, துக்கமாக இருக்கும் போதுதான் தன் துணையை அதிகமாகத் தேடும். சந்தியாவும் இப்போது அந்த நிலையில்தான் இருந்தாள்.சந்தியாவிடம் எதிர்ப்பின்றிப் போனதும், கதிரின் இதழ்களும், விரல்களும் அவள் உடல் எங்கும் சுதந்திரமாக ஊர்வலம் சென்றது. சிறிது நேரம் சென்று விலகிய கதிர் சந்தியாவைத் தூக்கி கொண்டு கட்டிலை நோக்கி சென்றான்.அவளைக் கட்டிலில் விட்டவன் ஒரு நொடி தயங்க… எங்கே அவன் தன்னை விட்டு சென்று விடுவனோ என்று பயந்த சந்தியாவின் முகத்தில் கலக்கம் சுழ்வதைப் பார்த்தவன், மேலும் தாமதிக்காமல் அவளுடன் சேர்ந்தான்.
திருமணமாகியும் மனைவியை விட்டு அதிக நாள் பிரிந்திருந்ததாலோ என்னவோ, கதிரிடம் அதிக வேகம் இருந்தது. சந்தியா எல்லாவற்றையும் மறந்து கதிரை மட்டுமே நினைத்தாள். அவனின் வேகத்தால் அவளைத் திணறடித்தவன், சங்கமம் முடிந்து விலகிய போது வியர்வையில் தொப்பலாக நனைந்து இருந்தான். கதிர் அவளிடம் இருந்து விலகிய நொடி சந்தியா ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றிருந்தாள்.
கண்களை மூடி படுத்திருந்த கதிர் தன் மூச்சு சீரானதும், சந்தியாவின் ஆடைகளைச் சரி செய்தவன், அவளை அணைத்தபடி உறங்கினான்.எத்தனையோ போராட்டத்திற்குப் பிறகு தாம்பத்தியத்தில் இணைந்த இருவரையும் நித்திரை தேவி வாரி அணைத்துக்கொண்டாள்.காலையில் முதலில் கண் விழித்த கதிர், அசந்து உறங்கும் சந்தியாவையே ஆசையாகப் பார்த்திருந்தான். இரவில் நடந்த கூடலை நினைத்ததும், அவனின் உடலும் உள்ளமும் மீண்டும் சந்தியாவிடம் சேர துடிக்க
அவள் அம்மா மருத்துவமனையில் இருக்கும் போது நேற்றிரவு நடந்து கொண்டதற்கே சந்தியா என்ன நினைத்தாளோ? அவளின் சூழ்நிலையை எனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டதாக நினைப்பாளோ, சந்தியா மட்டும் அப்படி எதாவது நினைத்து விட்டால் தன்னால்அதை தாங்கவே முடியாது என்று நினைத்தவன், மேலும் அங்கே இருக்க முடியாமல் எழுந்து குளியல் அறைக்குள் புகுந்து கொண்டான்.
கதிர் குளித்து முடித்து வெளியே வந்து தன் உடைகளை அணிந்து தயார் ஆன பிறகு கூடச் சந்தியா விழிக்கவில்லை. அப்போதே மணி எட்டு. இனியும் தாமதித்தால் மருத்துவமனை செல்ல நேரமாகி விடும் என்பதை உணர்ந்தவன், சந்தியாவைத் தட்டி எழுப்பினான்.
சந்தியா சிரமப்பட்டுக் கண் திறக்க, அவள் சரியாக விழிக்கும் முன்பே “ஹாஸ்பிடல் போகணும் சந்தியா. சீக்கிரம் எந்திரி….” என்ற கதிரின் குரலை கேட்டவள், விழுந்து அடித்துக்கொண்டு எழுந்தாள்.
சந்தியாவுக்கு அப்போது வேறு எதுவும் நினைவு இல்லை. தன் அம்மா மருத்துவமனையில் இருப்பது மட்டுமே நியாபகத்தில் இருந்ததால், கையில் கிடைத்த உடையுடன் குளியல் அறைக்குள் சென்றாள்.தலைக்குக் குளிக்க ஷவரை திறந்தவளின் உடலில் நீர் பட்டதும், அங்கங்கே வலிக்க, அப்போது தான் நேற்றிரவு நடந்தது நினைவுக்கு வந்தது.
ஐயோ! இதை எப்படி மறந்தோம் என்று நினைத்தவளுக்கு வெட்கமாக இருக்க, தன் கைகளால் முகத்தை மூடிக்கொண்டு அப்படியே நீருக்கு அடியில் நின்றாள்.சிறிது நேரம் சென்று சந்தியா முகத்தில் புன்னகையுடன், ஒரு பாடலை பாடியவாறு நேற்று நடந்ததை நினைத்தபடி மெதுவாகச் சோப்புப் போட,
சந்தியா சென்று ரொம்ப நேரம் ஆகியும் வராததால் “சந்தியா எவ்வளவு நேரம் குளிப்ப, ஹாஸ்பிடல் போகணும் சீக்கிரம் வா…” என்று கதிரின் குரலில் மயக்கம் தெளிந்த சந்தியா வேகமாகக் குளித்துவிட்டு வெளியே வந்தாள்.
கதிரின் முகத்தை எப்படிப் பார்ப்பது என்று நினைத்துக்கொண்டு சந்தியா வெளியே வர, கதிர் அங்கே அறையில் இல்லாதது சற்று ஏமாற்றமாகவும், அதே சமயம் நல்லவேளை இல்லை என்றும் இரு வேறு எண்ணங்களில் தவித்தவள், தயாராகிக் கீழே சென்றாள்.கதிரின் அப்பத்தா செய்துவைத்த உணவை சாப்பிட்ட இருவரும் காரில் மதுரைக்குச் சென்றனர். காரில் ஓட்டுனர் இருந்ததால் இருவரும் பேசிக்கொள்ள முடியவில்லை.
மருத்துமனைக்கு இருவரும் சென்ற நேரம் சரியாக மருத்துவரும் வேதவல்லியை பார்க்க வந்திருந்தார். வேதவல்லியை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர் “இவங்களை இன்னைக்கே நீங்க வீட்டுக்கு கூட்டிட்டுப் போகலாம். ஆனா இன்னும் ஒரு மாசம் கவனமா பார்த்துக்கணும்…”
“பத்து நாள் கழிச்சு திரும்ப இங்க செக்கப் கூட்டிட்டு வாங்க.” என்று சொல்ல, அதைக் கேட்ட அனைவரும் மகிழ்ந்தனர். மருத்துவர் கொடுக்க வேண்டிய மருந்துக்களின் விவரத்தை சந்தியாவிடம் சொல்ல, அவள் கவனமாகக் கேட்டுக்கொண்டாள்.
கதிரும், துரையும் சென்று மருத்துவமனைக்குக் கட்ட வேண்டிய மீதி பணத்தைக் கட்டிவிட்டு வர, சந்தியா தன் அம்மாவை காலை உணவு சாப்பிட வைக், லக்ஷ்மி அவர்களின் பொருட்களை எடுத்துத்தயாராக வைத்திருந்தார்.
அனைவருக்கும் காரில் இடம் இல்லாததால், ஓட்டுனரை பேருந்தில் வர சொல்லிவிட்டு கதிரே காரை எடுத்தான். அவர்கள் மெதுவாக வீடு வந்து சேர மதியம் ஆகிவிட்டது. வேதவல்லியின் மாமியார் அவர்கள் வருவது தெரிந்து வாசலிலேயே காத்திருந்தார். நல்லபடியாகப் பிழைத்து வீட்டுக்கு வந்த மருமகளை வாசலில் நிற்கவைத்து ஆரத்தி எடுத்து திருஷ்டி கழித்தே வீட்டுக்குள் செல்ல விட்டார்.
தன் அம்மா வீட்டுக்கு வந்த மகிழ்ச்சியில் சந்தியா கதிரை கவனிக்கவில்லை. அதனால் கதிர் வீட்டுக்குள் வராதது அவளுக்குத் தெரியவில்லை.வேதவல்லி வீட்டுக்கு வந்தது தெரிந்து அக்கம் பக்கத்தினர் வேறு அவரைப் பார்த்து விசாரிக்க வந்துவிட்டனர். சந்தியா அதில் பிஸியாகி விட்டாள்.
அக்கம் பக்கத்தினர் சென்றதும் தான் சந்தியா கதிரை தேடினாள். கதிர் அங்கே இல்லாததை உணர்ந்தவள், லக்ஷ்மியிடம் “எங்க அத்தை உங்க மகனை காணோம்?” என்று விசாரிக்க,
“அவன் அப்பவே போயிட்டனே சந்தியா…” என்று லக்ஷ்மி சொன்ன பதிலை கேட்டவள் திடுகிட்டாள்.
“ரொம்பத் தான் ரோஷம்.” என்றவளின் விழிகள் கண்ணீரால் நிரம்ப, வேதவல்லியின் அருகே சென்று உட்கார்ந்து கொண்டாள். தன் அப்பா அழைக்காததால் தான் கதிர் சென்று விட்டான் என்றே சந்தியா நினைத்தாள்.
உணவே மருந்து என்று தெரிந்து வைத்திருக்கும் கிராமத்து மனிதர்கள் என்பதால், வேதவல்லிக்கு பத்திய உணவு தயாராக இருந்தது. அவர் மாமியார் பரிமாற வேதவல்லி சாப்பிட்டார்.அவர் சாப்பிடும் போதே லக்ஷ்மியையும், சந்தியாவையும் சாப்பிடச் சொல்ல, லக்ஷ்மி சந்தியாவைப் பார்க்க, அவள் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு இருந்தாள்.
இருக்கும் நிலை தெரியாமல் துரை “சாப்பிடு பாப்பா… முகமே வாடி இருக்கு.” என்று வாய்விட,
“உங்களுக்கு ரொம்பத் தான் அக்கறை…” என்று சந்தியா முனங்க,
துரை எதற்குக் கோபம் என்று புரியாமல் நின்றவர் “இப்ப என்ன ஆச்சு?” என்று கேட்டது தான் தாமதம், சந்தியா பொங்கி விட்டாள்.
“நீங்க தெரிஞ்சு பண்றீங்களா தெரியாம பண்றீங்களான்னு எனக்குச் சுத்தமா புரியலை. அவர் வீட்டுக்குள்ள கூட வராம போயிட்டார். எத்தனை மருமகன்பா மாமியார் ஆஸ்பத்திரியில இருக்கும் போது கூடவே இருந்து பார்த்துக்கிறாங்க. என் புருஷனை நீங்க மதிக்கவே மாட்டீங்களாப்பா.
அவர் அமைதியா எல்லத்தையும் பொறுத்து போறதுனால உங்களுக்கு அவரைப் பார்த்தா இளக்காரமா இருக்கா…. அவரை மதிக்காத வீட்டில நான் மட்டும் எதுக்கு இருக்கணும்?” என்ற சந்தியா விடுவிடுவென்று வாசலை நோக்கி செல்ல, அங்கே கதிர் வாசல் கதவில் சாய்ந்தபடி நின்றிருந்தான்.