திடீரென்று எதிர்பாராமல் கதிரை பார்த்ததும் சந்தியா அப்படியே நின்றாள. முகம் சிவக்க கண்களில் கண்ணீரோடு நின்றவளை பார்த்த கதிர் “காரை ஷெட்ல விட்டுட்டு வர்றதுக்குள்ள எதுக்குடி இங்க ஒரு அலப்பரைய ஆரம்பிச்சு வச்சிருக்க. உங்க அப்பா என்னைக் கூப்பிடலைன்னு உனக்குத் தெரியுமா. தெரியாம எதுக்குப் பேசுற?” என்று அவன் சந்தியாவைத் திட்ட,
தன் மகள் திட்டு வாங்குவதைப் பொறுக்க முடியாத துரை “அதுக்குத் தெரியாது இல்ல… நீங்க இங்க இல்லைன்னதும், என்னமோ ஏதோன்னு நினைச்சுடுச்சு. நீங்க கை கழுவிட்டு சாப்பிட வாங்க மாப்பிள்ளை…” என்று கதிரை மரியாதையாக அழைக்க, கதிரும் உள்ளே சென்றான்.
கதிரும் துரையும் ஒன்றாகச் சாப்பிட அமர, அப்பத்தா அவர்களுக்குப் பரிமாறினார். துரை தன் மருமகனை விழுந்து விழுந்து உபசரித்தார்.எல்லாம் சந்தியாவுக்குப் பயந்து கொண்டு தான் என்று கதிருக்கு தெரியும். அவன் வந்த சிரிப்பை அடக்கியபடி உணவருந்த, இவங்க ரெண்டு பேருக்கும் மனசுல ரஜினி, தனுஷுன்னு நினைப்பு என்று மனதிற்குள் நொடித்த சந்தியா, இருவரையும் முறைத்து பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
அவர்கள் சாப்பிட்டதும் வீட்டுப் பெண்கள் சேர்ந்து சாப்பிட்டனர். வேதவல்லி கீழே இருந்த ஒரு அறையிலேயே படுத்துக்கொண்டார். அது கிராமம் என்பதால், யாரவது வேதவல்லியை வந்து பார்த்தபடி இருந்தனர். வந்தவர்களுக்குக் குளிர்பானம் கொடுப்பது, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்வது என்று சந்தியா பிஸியாக இருந்தாள்.
சந்தியா பிஸியாக இருப்பதைப் பார்த்த கதிர், தன் அம்மாவுடன் அவர்கள் வீட்டிற்குச் சென்று விட்டான். வேதவல்லியின் அம்மா அதாவது கதிரின் அப்பத்தா வந்ததும் “நான் பார்த்துக்கிறேன், நீ கொஞ்ச நேரம் தூங்கு…” என்றதும் சந்தியாவும் சரி என்று சிறிது நேரம் தூங்கி எழுந்தாள்.
மாலை அவள் அம்மாவுக்குப் பாத்ரூம் செல்ல, முகம் கழுவ உதவி செய்த சந்தியா, அவரைக் கட்டிலில் உட்கார வைத்து தலைவாரி விட “நீயும் முகம் கழுவி எதாவது புடவை கட்டு சந்தியா… பெரிய மாமா சின்ன மாமா எல்லாம் வருவாங்க… இப்படிச் சுடிதார் போட்டுட்டு சுத்தாத….” என்றார்.
சந்தியா அவள் அறைக்குச் சென்று குளித்து, ஒரு காட்டன் சேலை அணிந்து வர, அப்போது சித்ராவும் வேதவல்லியை பார்க்க வந்திருந்தாள். அவளுக்குக் குழந்தை பிறந்து சில மாதங்களே ஆகியிருந்தது. அதனால் குழந்தையை வீட்டில் அவள் அம்மாவிடம் விட்டுவிட்டு வந்த காரணத்தால் உடனே கிளம்பினாள்.
“என்ன சித்ரா அதுக்குள்ள போற? இன்னும் கொஞ்சம் நேரம் இருடி.”
“குழந்தை திடீர்னு அழுதா அம்மாவால சமாளிக்க முடியாது. நீ இன்னொரு நாள் எங்க வீட்டுக்கு வா.. அப்ப பொறுமையா பேசலாம்.” என்று வாசல் வரை சென்ற சித்ரா திரும்பி வந்தவள்,
“உனக்குத் தெரியுமா சந்தியா. நந்தினிக்கு மாப்பிள்ளை பார்த்திருக்காங்க. அவரும் நம்ம கதிர் அண்ணன் பார்க்கிறது போல வேலை தான் பார்க்கிறாரு. எந்த ஊர் தெரியுமா.. பெங்களூர்ல. நீயும், நந்தினியும் ஒரே ஊர்ல தான் இருக்கப் போறீங்க.” என்று சொல்லிவிட்டு செல்ல, சந்தியாவிற்கு உடலெங்கும் மிளகாயை தடவியது போல் எரிந்தது.
அவள் நந்தினியை பற்றி நினைக்கக் கூட விரும்பவில்லை. ‘அவளே யாரோன்னு ஆகிடுச்சு. இனி அவ எங்க இருந்தா எனக்கு என்ன…’ என்று நினைத்தவள் வீட்டிற்குள் சென்றாள்.
பெரியசாமியும் பாண்டியனும் தன் சகோதிரியை பார்க்க வந்திருந்தனர். வீட்டில் ஒரே சொந்த பந்த கூட்டம். சந்தியா தன் அம்மா அதிகம் பேசாமல் பார்த்துக்கொண்டாள்.அனைவரும் சென்றதும் வேதவல்லி மிகவும் களைப்பாக உணர்ந்தார். அதனால் இரவு எட்டு மணிக்கே சாப்பிட்டு விட்டுப் படுத்துவிட்டார்.
அதன்பிறகு கதிர் வந்தான். கதிர் வந்ததும் அவனைச் சந்தியா சாப்பிட அழைக்க “அதுக்குள்ளவா நான் பிறகு அந்த வீட்ல சாப்பிட்டுக்கிறேன்.” என்றதும் சந்தியா திரும்பி துரையைப் பார்க்க, அவர் பாவம் அமைதியாக உட்கார்ந்திருந்தார்.
திரும்பச் சந்தியா தன் மாமனாரை வறுக்க ஆரம்பத்துவிடுவாளோ என்று பயந்த கதிர், வேகமாகச் சாப்பிட அமர்ந்தான். அது அந்தப் பயம் இருக்கட்டும் என்று நினைத்த சந்தியா அவனுக்கு உணவு பரிமாறினாள்.இரவு உணவு முடிந்ததும் ஒன்பது மணிக்கே சந்தியாவின் அப்பத்தா மற்றும் கதிரின் அப்பத்தா இருவரும் சேர்ந்து கதிரையும், சந்தியாவையும் தூங்க செல்ல சொல்லி விரட்டினர்.
தயங்கிய சந்தியாவிடம் “நாங்க உங்க அம்மா நடுவுல எழுந்தா பார்த்துக்கிறோம். ப்ளாஸ்க்ல ஹார்லிக்ஸ் போட்டு ரெடியா தான் வச்சிருக்கோம். நீங்க போய் மேல படுங்க…” என்று அவர்களை விரட்டுவதிலேயே குறியாக இருக்க, கதிர் சொல்ல வருவதை அவர்கள் இருவரும் கேட்பதாகவே இல்லை.
இதுங்க இம்சை தாங்க முடியலையே என்று நொந்தபடி கதிர் மாடிக்கு செல்ல, சந்தியா குடிக்கத் தண்ணீர் எடுத்துக்கொண்டு அறைக்குள் வந்தவள், அதை டேபிளில் வைத்துவிட்டு கதவை சாற்ற சென்றாள்.
“சந்தியா இரு கதவை மூடாத. நான் இன்னைக்குப் பெங்களூர் கிளம்புறேன். அதைச் சொல்லிட்டுப் போகத்தான் வந்தேன். என்னைப் பேசவே விடாம ரெண்டு பெரிசுகளும் சேர்ந்து மாடிக்கு அனுப்பிட்டாங்க….” என்று கதிர் பாவமாகச் சொல்ல,அவன் சொன்னது காதில் விழாதது போல் சந்தியா சென்று கதவை சாற்றி விட்டு வந்தவள், நேராகக் கதிரிடம் செல்ல, இவள் என்ன செய்யப்போகிறாள் என்பது போல் கதிர் பார்க்க., சந்தியா ஒரு நொடி கூடத் தாமதிக்காமல் அவனை இறுக்க அணைத்திருந்தாள்.
அவளின் இறுகிய அணைப்பில், காலையில் இருந்து தான் பட்ட துன்பங்கள் விலக, அவளைத் தானும் அனைத்து, அவள் தோள் வளைவில் முகம் புதைத்தான்.கதிரும் சந்தியாவும் விலகாமல் ஒருவரின் அருகாமையை மற்றவர் ரசித்தபடி இருக்க, சிறிது நேரம் சென்று “சந்தியா நான் ஊருக்கு கிளம்பனும் விடுடி…” என்று கதிர் அவள் காதில் சொல்ல,
கதிரின் மார்பிலிருந்து தன் முகத்தை மட்டும் நிமிர்த்திய சந்தியா “நீங்க ஊருக்கு போய்ட்டா என்னை யாரு தூங்க வைப்பா..?” என்று கண் சிமிட்டி கேட்க,
“ஹே! நான் என்ன உனக்குத் தூக்க மாத்திரையா…” என்று அவள் காதை பிடித்துத் திருகியவன் “நேத்து நைட் என்ன சந்தியா நடந்துச்சு?” என்று ஆர்வமாக அவள் முகம் பார்க்க,
“எனக்குத் தெரியாதுப்பா…. நான் தூங்கிட்டேன்.” என்றாள் சந்தியா அப்பாவியாக.
“ஒருத்தன் உசுர கொடுத்து உழைச்சா. நீ தூங்குற…. இன்னைக்கு நீ எப்படித் தூங்குறேன்னு நானும் பார்க்கிறேன்.” என்ற கதிர் சந்தியாவைக் கைகளில் அள்ளிக்கொண்டு கட்டிலுக்குச் சென்றான்.
கதிர் அவன் சொன்ன சொல்லை காப்பாற்றும் விதமாகச் சந்தியாவை இரவு முழுவதும் தூங்கவிடாமல் அன்புத்தொல்லை செய்தவன், தான் இன்று ஊருக்கு செல்ல வேண்டும் என்பதையே மறந்திருந்தான்.
விடியும் நேரம் தான் தூங்கியதால், இருவரும் விழித்த போது நேரம் நன்பகல். இப்ப எப்படிக் கீழப் போய் எல்லாரையும் பார்க்கிறது என்று இருவரும் தயங்கியே மேலும் நேரத்தை கடத்தினர்.
“ரெண்டு பேரும் தனித்தனியா குளிச்சா இன்னும் லேட் ஆகும். வா… சேர்ந்து குளிப்போம்.” என்ற கதிர் சந்தியாவையும் இழுத்துக்கொண்டு குளியல் அறையில் புகுந்துகொள்ள,
இத்தனை நாள் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று இருந்த தன் மாமன், ஒரே நாளில் காதல் மன்னன்னாக மாறிய விந்தை புரியாமல் சந்தியா திகைத்தாள்.அவர்கள் இருவரும் கீழே வந்த போது அங்கே யாரும் இல்லை. சந்தியா சென்று வேதவல்லி இருந்த அறையை எட்டி பார்க்க, அவர் கட்டிலில் படுத்திருந்தார்.
மகளைப் பார்த்ததும் வேதவல்லி எழுந்திருக்க முயற்சி செய்ய, சந்தியா வேகமாகத் தன் அம்மாவின் அருகில் சென்று அவர் உட்கார உதவி செய்தாள்.
“சாரி மா லேட் ஆகிடுச்சு. சாப்பிட்டீங்களா…” என்று சந்தியா குற்ற உணர்வுடன் கேட்க, தன் மகள் தலை குளித்து மலர்ந்த பூ போல் இருப்பதைப் பார்த்து மகிழ்ந்தவர், சந்தியாவின் தலை வருடி “அதெல்லாம் ஆச்சு… இங்க என்ன ஆளுகளுக்கா பஞ்சம். ஆளுக்கொரு வேலை பார்க்கிறாங்க நீ போய் உன் மாமனை கவனி கதிருக்கு பசிக்கும். டிபன் வேணாம் நேரா சாப்பாடே வை…” என்றார் புன்னகையுடன்.
கதிர் சாப்பிட அமர, சந்தியா சூடான உணவை அவனுக்குப் பரிமாறா… அவன் ரசித்துச் சாப்பிட்டான். உணவு உண்டதும் கதிர் சென்று தன் அத்தையை நலம் விசாரிக்கவும் மறக்கவில்லை.
“எப்படி இருக்கீங்க அத்தை? நல்லா சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க. உடம்பு நல்லா குணம் ஆகாம வேலை செய்யுறேன்னு கிளம்பிடாதீங்க. பிறகு நான் இன்னைக்குப் பெங்களூர் கிளம்புறேன். ஆபீஸ் போகணும்…” என்று கதிர் சொன்னதும், சந்தியாவைத் திரும்பி பார்த்த வேதவல்லி “நீயும் காலேஜ்க்கு போகணும் இல்லை. அதனால நீயும் இன்னைக்குக் கிளம்பு…” என்றார்.
சந்தியாவின் விழிகளில் நீர் திரண்டது “உங்களை இப்படி விட்டுட்டு… நான் எப்படிமா போறது? என்னால அங்க போய் நிம்மதியாவே இருக்க முடியாது…” என்று சந்தியா அழுகையுடன் சொல்ல,
“இது என்ன சிட்டியா நான் தனியா இருக்கேன்னு கவலைப்பட. இங்க நிறையப் பேர் இருக்காங்க. நம்ம தெருக் காரங்களே வந்து பேசிட்டு ஆளுக்கொரு வேலை பார்த்திட்டு போறாங்க. நான் சும்மா படுத்து தான் கிடக்கேன். இதுல நீ இருந்து என்ன செய்யப்போற. போய் நல்லபடியா படிப்பை முடிச்சிட்டு வா…” என்று வேதவல்லி நல்லவிதமாகவே தன் மகளுக்கு எடுத்து சொல்ல, ஆனால் சந்தியா தான் அதைக் கேட்கும் நிலையில் இல்லை.
சந்தியாவின் நிலை உணர்ந்த கதிர் “அவ இந்த வாரம் மட்டும் இருக்கட்டும் அத்தை. நீங்க நல்லா உடம்பை பார்த்துக்கோங்க. நான் கிளம்புறேன்…” என்று விடைபெற்றான்.
சந்தியாவும் கதிரும் வெளியே வர, அங்கே அவர்களின் இரு அப்பத்தாக்களும் உட்கார்ந்து கதை பேசியபடிவேலை பார்த்துக்கொண்டிருந்தனர்.இவர்கள் இருவரையும் பார்த்தவர்கள் “சாப்பிட்டீங்களா… எங்க அதுக்குள்ள கிளம்பிட்டீங்க? ரொம்ப வெயிலா இருக்கே… இன்னும் செத்த நேரம் படுக்கலாம்ல….” என்று அக்கறையாக விசாரிக்க,
“நாமே மதியம் தான் எழுந்து வந்திருக்கோம். இதுல இன்னும் தூங்கவாம்… இவங்க லொள்ள பார்த்தியா….” என்று சந்தியாவிற்கு மட்டும் கேட்கும்படி கதிர் கேலி செய்ய, சந்தியா சிரிப்பை அடக்கியபடி நின்றாள்.
கதிரின் கிண்டல் பேச்செல்லாம் சந்தியாவிடம் மட்டும் தான். மற்றவர்களிடம் அவன் என்றுமே மரியாதையாகத் தான் நடந்து கொள்வான். இன்றும் அதே போல் பெரியவர்களிடம் மரியாதையாகப் பேச, இவன் தான் மாடியில் பார்த்த கதிரா என்று சந்தியா அதிசயப்பட்டாள்.
“ஊருக்கு போறதுக்கு முன்னாடி இங்க வந்துட்டு போவீங்கள்ள….” என்று சந்தியா கேட்க
“எதுக்கு உன்னைத் தூங்க வைக்கவா? ஆள விடுமா தாயே. நான் அங்கிருந்தே கிளம்புறேன்…” என்று கதிர் கண் சிமிட்டி சொல்ல, சந்தியா புன்னகையுடன் அவனை வழி அனுப்பினாள்.