கண் மூடி சாய்ந்த ஜோஷ்வாவிற்கு சில நிமிடங்கள் கூட அந்நிலையில் நீடிக்க முடியவில்லை. ஜென்சி அமர்ந்த நொடியில் இருந்து நினைவெல்லாம் அவளை சுற்றியே வட்டமடிக்க மெல்ல அவளிடம் திரும்பினான்.
அவள் கவனம் இங்கில்லை. முகமோ ஏதோ சிந்தனையில் இருப்பதனை உணர்த்த,
“அதானே.. இவளாவது நம்மள கண்டுக்கிறதாவது.. பேசாதன்னு சொன்னதும் விட்டது தொல்லைனு நினைச்சு இருப்பா..”
என்ற சலிப்போடு திரும்பியவன் பார்வையோ சுவற்றில் மோதிய பந்து போல் மீண்டும் அவளிடம் தான் வந்தது.
“பட்.. ஷீ நெவர் ஃபைல்ஸ் டூ சர்ப்ரைஸ் மீ.. நான் எதிர்பார்க்காத நேரத்தில் என் முன்னால வந்து நிற்க தான் பிடிக்கும்போல…! எதிர்பார்த்தால் வரமாட்டாங்க…”
என எண்ணியபோது அவனை அறியாமலே பெருமூச்சு எழுந்தது. அதே சமயம்,
“இது தற்செயலான சந்திப்பு தானா..? இல்ல….” என குழம்பி,
“ச்சே.. ச்சே.. கற்பனை பண்ணாத… கோய்ம்புத்தூருக்கு அவள் வேலை விஷயமா வராளா இருக்கும்.. உனக்காக வந்தவ தான் இப்படி யாரோ எவரோ மாதிரி உட்கார்ந்து இருப்பாளா..? உன்னோட ப்ரெஸன்ஸ் அவளை எப்பவும் பாதிச்சதே இல்ல.. நீ தான் அவளை பார்த்துட்டால் உலகம் மறந்து போற.. இப்ப கூட அவள் மேல நீ கொண்ட கோபம் எங்க போச்சு.. பேச வேணாம்னு சொல்லிட்டு நீ தான் அவளை பத்தியே யோசிச்சுட்டு இருக்க..”
என மனம் மானக்கேடாய் முறைக்கவும் அவளிடம் இருந்து பார்வையை நகர்த்தியவன் அத்தோடு தன் எண்ணவோட்டத்தையும் நிறுத்திக் கொண்டான்.
ஆனாலும் தன் அருகில் அவள் இருக்கிறாள் என்பதை உணர்த்தும் அவளின் மெல்லிய பர்ஃயூம் மணம் அவன் நாசியில் ஏறி மனமெங்கும் பரவி இதமளிக்க எதனால் என்று ஆராய விரும்பாமல் அப்படியே ஏற்று கண்மூடி கொண்டான். இத்தனை ஓட்டங்களுக்கும் அவன் முகம் சலனமற்று இருந்தது தான் ஆச்சரியம்..!!
அவரவர் சிந்தனைகளில் இரண்டு மணிநேரமும் அமைதியாகவே கடந்தது.
விமானம் தரையிறங்கி பயணிகள் வெளியேற தொடங்க இருக்கையில் இருந்து எழுந்த ஜென்சி அவனை ஒரு பார்வை மட்டும் பார்த்துவிட்டு முன்னேறி நடக்க அவளை கைபிடித்து நிறுத்த எழுந்த வேகத்தை கட்டுபடுத்தி அவள் கண்ணை விட்டு மறையும் வரை அமைதி காத்தவன் மனமோ மேலும் இறுகியது.
செக்கிங் முடிந்து சுரதேயின்றி வந்த ஜோஷ்வா மீண்டும் அவள் எங்கும் தென்படுகிறாளா என்று பார்வையால் துலாவ கிடைக்கவில்லை.
ஏதோ ஒன்று தன்னில் குறைவது போல் மனம் பிசைய அதனை பொருட்படுத்தாது தாத்தா கொடுத்த ஓட்டுநர் எண்ணுக்கு அழைக்க நினைத்தவன் தூரத்தில் ரெமிஜியஸே நிற்பதனை கண்டு வியந்தான்.
முழுவதும் நரைத்துவிட்ட கேசமும் சுருங்கிய தோளும் மட்டும் இல்லையெனில் அவர் முதியவர் என்று நம்புவது நமக்கு கடினம் தான்..!!
அத்தகைய கட்டுகோப்பான உடல்வாகும் புத்துணர்ச்சியான சிரிப்பும் கொண்ட அவர் இவன் திசையில் கையசைக்க பதிலுக்கு கை தூக்கி காட்டி அவரை நெருங்கிய ஜோஷ்,
“ட்ரைவர் தானே அனுப்புறேன்னு சொன்னீங்க தாத்தா.. நீங்க ஏன் வந்தீங்க..” என்று கேட்க,
“நீ மட்டும்னா வந்திருக்க மாட்டேன்.. ஆனா இன்னோர் கெஸ்டும் வராங்களே.. அதான்..”
என்று சொல்லி அவனை தாண்டி பின்னால் யாரையோ பார்த்து அவர் சிரிக்க அவன் இதயதுடிப்பு சட்டென்று வேகமெடுத்ததோ…?? தான் நினைப்பது சரிதானா என்ற படபடப்பை உள்ளே மறைத்துவிட்டு கேஷ்வலாய் திரும்பிய ஜோஷ்வா சரிதான் என்பது போல் முதுகில் சுமந்த பேக் பேக்கின் கைபிடியை இருக்கையிலும் பிடித்து கொண்டு அவரை நோக்கி புன்னகையோடு வந்த ஜென்சியை கண்டு திகைத்தான்.
“வெல்கம்… வெல்கம் ஜென்சி டியர்…”
உற்சாகமாய் ரெமிஜியஸ் வரவேற்க அவரின் மலர்ந்த சிரிப்பு அவளையும் தொற்றிக் கொண்டது.
“ஹாய் தாத்தா.. எப்படி இருக்கீங்க.. வெரி க்லேட் டூ மீட் யூ..”
“ரொம்ப நல்லா இருக்கேன்டா.. ஐம் ஆல்ஸோ க்லேட்…”
என அவர்கள் மாறி மாறி பேசி நிற்க தன் திகைப்பில் இருந்து விலகி புருவங்கள் முடிச்சிட,
“எக்ஸ்க்யூஸ் மீ… என்ன நடக்குதுனு கொஞ்சம் எனக்கும் சொல்றீங்களா..”
கைகட்டி அவன் கேட்டபோது தான் இருவருமே அவனை கவனிப்பது போல் திரும்பினர்.
“நான் சொன்னேன்ல கெஸ்ட்.. அது இவங்க தான் ஜென்சி.. ஜென்சி… இவன் என் பேரன்.. ஜோஷ்வா…”
என்று ரெமிஜியஸ் அவனுக்கே அறிமுகம் படுத்தவும் அவன் முகம் போன போக்கில் அவளுக்கு சிரிப்பு வந்தது.
“தெரியும் தாத்தா..” என்று அவள் மென்னகையோடு சொல்ல அவனோ அவரை முறைத்துவிட்டு ஜென்சியை தீர்க்கமாய் பார்த்தான். அதில் ‘நீ விளக்கம் கொடுக்க வேண்டும்..’ என்ற செய்தி இருந்தது.
“நான் கம்பெனி புதுசா தொடங்கிறது ரிலேட்டடா ஒருத்தரை மீட் பண்ண வந்தேன்.. இங்க கோவைல.. அப்படியே தாத்தாவும் சில்வர் ஜுபிலி ஃபங்ஷனுக்கு இன்வைட் பண்ணியிருந்தாங்க.. ஸோ..”
தோள் குலுக்கி அவள் எதார்த்தமாய் சொல்ல அவனின் பார்வையில் சந்தேகம் தீரவில்லை.
“அப்போ ஏன் ஃப்ளைட்ல இதை பத்தி சொல்லாம மறைச்ச..”
“மறைச்சேனா… ஹலோ… நீ தான் பேசாதனு சொன்ன.. அதான் பேசல..”
என கூறிய ஜென்சியின் கண்களில் கள்ளமோ பதட்டமோ இல்லை. மாறாக ‘அதுக்கு என்ன இப்போ..’ என்பது போல் அசால்ட்டாய் நின்றாள். ஆகையால் அவள் உடல்மொழியில் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை.
“தாத்தாவ எப்படி தெரியும் உனக்கு..”
“அடடடா.. ஜோஷ்.. என்ன இது… ஜென்சி என் கெஸ்ட்.. நீ என்ன இத்தனை குறுக்கு கேள்வி கேட்கிற…? இங்க ஏர்போட்லே நின்னு எல்லாத்தையும் பேசிடனுமா.. வாங்க போலாம்..”
ரெமிஜியஸ் குறுக்கிட்டு பேச்சை நிறுத்த உர்ரென்று முகத்தோடு இவர்களுக்கு முன்னால் ஜோஷ்வா சென்றுவிட்டான்.
“தேங்க்ஸ் தாத்தா.. பட் சாரி.. என்னால ஏர்போர்ட் வந்து உங்களுக்கும் அலைச்சல்..”
மெல்லிய குரலில் சங்கடமாய் ஜென்சி கூற அதே குரலில்,
“அலைச்சல் எல்லாம் ஒன்னும் இல்ல ஜென்சி.. ஜோசஃப் சொன்னதில் இருந்து ரொம்ப ஈகரா வெய்ட் பண்ணிட்டு இருந்தேன்.. அதான் நானே வந்துட்டேன்.. வந்ததும் நல்லதா போச்சு..” என கூறி சிரித்தார் ரெமி.
காரை அடைந்ததும் இருவர் பேக்கையும் வைத்தபின் ஓட்டுநர் இருக்கை அருகில் ஜோஷ்வா அமர்ந்துவிட பின்னால் ஜென்சியும் ரெமிஜியஸூம் ஏறிக் கொள்ளவும் வண்டி புறப்பட்டது.
ஜென்சி தங்களோடு தான் வருகிறாள் என்பதை நம்ப முடியாமல் இன்னமும் கற்பனையோ என தத்தளித்தது ஜோஷ்வாவின் மனம். அவ்வளவு எளிதில் யாருடனும் பழகும் ஆள் அவள் இல்லை என்பது அவன் அறிந்த ஒன்றே..!! அப்படி இருக்கையில் தாத்தாவை எப்படி தெரியும்.. அதுவும் குன்னூர் வந்து தங்குவது எல்லாம் அவனால் நம்பவே முடியவில்லை.
இதற்கு பின்னால் என்ன காரணம் இருக்க கூடும் என்று அவன் மூளை நாலா திசையிலும் அலசி ஆராய்ந்தது. ஆனால் பதில் தான் ஒன்று கிட்டவில்லை.
அதன் நடுவில் தன்னில் ஒரு ஓரத்தில் குமிழிட்ட உற்சாக அலையை அவன் ஆராயவில்லை. ஒருவேளை அறிந்தும் அறியாதது போல் இருக்கிறானோ..? அது அவனுக்கே வெளிச்சம்..!
ஜென்சியும் பெரிதாக அவனிடம் பேச முயலவில்லை. ரெமி தாத்தாவோடு பேசிக் கொண்டும் அவ்வூரின் அழகை இரசித்து கொண்டும் வந்தாள்.
கார் கோவையை தாண்டி குன்னூர் மலை பாதையில் ஏற தொடங்க மும்பையின் நிற்காமல் ஓடும் பரபரப்பிலே பழகியிருந்த ஜென்சிக்கு அந்த பச்சை தோள் போற்றிய மலை தேவதைகளை காண காண தெவிட்டவில்லை.
ஜோஷ்வாவுக்கும் இத்தனை வருடம் சென்று மீண்டும் தான் வளர்ந்த ஊருக்கு வந்ததில் இயல்பாய் மகிழ்ச்சி பொங்க தன் கேள்விகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு சிறுவயதில் தான் சலிக்காமல் சுற்றி திரிந்த இடங்களை லயிப்புடன் பார்த்திருந்தான்.