கோபமும் கேள்விகளும் பூசிய முகத்தோடு வீட்டினுள் வேகமாய் நுழைந்த ஜென்சியை எதிர்க்கொண்ட ரெமிஜியஸ்,
“அம்மாடி.. என்னாச்சு..”
என்று பதட்டமாய் அருகில் வரவும் தான் கிட்டதட்ட காரில் இருந்து இறங்கி ஓடி வந்துள்ளோம் என்பது அவளுக்கு புரிந்தது.
சற்று நிதானித்தவள்,
“ஒன்னும் இல்லையே தாத்தா..” என சாதாரணமாய் கூறினாள்.
“போன வேலை நல்ல படியா முடிஞ்சுது தானே..”
“ஆங்… ஆமா தாத்தா..” என்று தலையசைக்க அவள் முகத்தில் தெளிவின்மையை உணர்ந்த பெரியவர்,
“என்ன ஜென்சி.. மறுபடியும் ஜோஷோட ஏதும் பிரச்சனையா..? காலைல ரெண்டு பேரும் சேர்ந்து கிளம்பவும் இராசியாகிட்டீங்கன்னு நினைச்சேனே..”
என்று சொன்னவரிடம் கவலை தெரிந்தது.
“என்ன செய்றது தாத்தா.. என்னை டென்ஷன் படுத்தி பார்க்கலேனா உங்க பேரனால நிம்மதியா இருக்க முடியாதே..” என்று தன்னையும் மீறி முணுமுணுத்தவள் மூச்சை இழுத்து விட்டு,
“அதை விடுங்க… கவலை படுற அளவு பெருசா எதுவும் இல்ல..”
என்று இலகுவாய் கூறி,
“ இதோ வந்திடுறேன்..” என நகர்ந்து உள்ளே சென்றுவிட சில நிமிடங்களில் வீட்டினுள் வந்த ஜோஷ்வாவின் புன்னகை முகத்தை கண்டு இன்னும் குழம்பி தான் போனார்.
இவரை கண்டதும்,
“ஸ்கூலில் இருப்பீங்கன்னு நினைசேன்.. வீட்ல தான் இருக்கீங்களா..”
என்று கேட்டு கொண்டே அருகில் வந்தான்.
“நான் இப்ப தான் வந்தேன்.. அது இருக்கட்டும்.. ஏன் ஜென்சி கோபமா போறா.. நீ எதாவது சொன்னீயா..”
அவள் அறை பக்கம் பார்வையை திருப்பி மீண்டும் புன்னகைத்த ஜோஷ்,
“பெருசா ஒன்னும் இல்ல தாத்தா.. சின்ன லடாய்.. தானா சரியாகிடும் விடுங்க..” என்று அவளை போலவே தட்டி கழிக்கவும்,
‘என்னடா இந்த பசங்க..’ என்று இருந்தாலும் இருவருமே வளர்ந்த முதிர்ந்த பிள்ளைகள் என்பதால் அதற்கும் மேல் அவர் எதுவும் கேட்கவில்லை.
“என்னவோ போங்க.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. நான் போறேன்..”
“தாத்தா இருங்க.. ஒரு நிமிஷம்..”
“என்ன ஜோஷ்வா..”
“இல்ல.. ஃபங்க்ஷன் முடிஞ்சு மறுநாளே ஜென்சி மும்பை கிளம்பிடுவா தானே.. இங்க இருக்க போறது இன்னும் இரண்டு நாள் தான்.. நம்ம ஊருக்கு முதல் முறை வந்திருக்கா.. சுத்தி பார்க்க எவ்வளவு அழகான இடமெல்லாம் இருக்கு.. அதெல்லாம் அவள் பார்க்க வேண்டாமா..”
“ஆமால.. அதுவும் சரிதான்.. நாளைக்கு என்னோட ஸ்கூல் வரேன்னு சொல்லி இருந்தாள்.. அப்படியே மத்த இடமும் நான் அழைச்சுட்டு போறேன்.. கண்டிப்பா ஜென்சிக்கு பிடிக்கும்..”
“யாரு.. நீங்க கூட்டிட்டு போய் காட்ட போறீங்களா.. ஊர் சுத்துற வயசா தாத்தா உனக்கு…”
“டேய்..”
“இல்ல தாத்தா… நீ ஏன் கஷட்ப்படுற..நான் இருக்கேன்.. நான் அழைச்சுட்டு போறேன்.. என்னோட வர சொல்லி மட்டும் சொல்லு..”
என்றவனை முறைத்த ரெமி,
“பிச்சு புடுவேன்.. யாரை பார்த்து என்ன வேலை பார்க்க சொல்ற.. அந்த பொண்ணை என்னை நம்பி அனுப்பி வைச்சு இருக்காங்க..”
என்றார் சீற்றமாய்,
“தப்பாவே யோசிக்க கூடாது மிஸ்டர்.ரெமிஜியஸ்.. எந்த உள்நோக்கமும் இல்ல.. எனக்கு ஜென்சி பத்தி தெரியும்.. மும்பை வந்ததும் டோட்டலீ வேலை.. வேலை.. வேலைனு மாறிடுவா.. அவளுக்கு நிற்க கூட நேரம் இருக்காது.. ஆபிஸ் வேலையும் அவள் ஸ்டார்ட் பண்ணபோற கம்பெனிகான வேலையும் சைமண்டெனியஸா பார்க்கணும்.. அதனால இங்க இருக்க வரையும் அவள் எஞ்சாய் பண்ணனும்னு நினைச்சேன்… அவ்வளவு தான்.. நீங்க சொல்லலேனா விடுங்க.. நான் பார்த்துகிறேன்..”
என்று இயல்பாய் பேசிக் கொண்டே போனவனை குறுகுறுவென அவர் பார்க்க,
“அதான் நான் பார்த்துகிறேன்னு சொன்னேனே.. அப்புறமும் அப்படி பார்த்தால் என்ன அர்த்தம்..” என்று கேட்டான்.
“இங்க ஒரு பெரிய மனுஷன் இருந்தான்… அவனுக்கு அவன் தொழிலை தவிர எதுவும் தேவையில்லைனு என்னை கூட தள்ளி வைச்சான்.. அவனை இங்க வரவைக்கவே பெரியபாடாய் இருந்தது.. வேண்டா வெறுப்பா வந்த அந்த மனுஷன் எங்க போனானு தான் யோசிச்சுட்டு இருந்தேன்…”
அவர் பார்வை அவன் முகத்தை ஆராய மறையாத புன்னகையோடு பார்வையை எங்கோ பதித்து மீண்டது.
“ஆமா தாத்தா.. அந்த அவன் எங்கேனு எனக்கும் தெரியல.. இடைல ஒரு பதினைஞ்சு வருஷம் மறைஞ்சு போன மாதிரியும்.. மறுபடியும் டீன்னேஜ் பையனா மாறுனா மாதிரியும் இருக்கு… இப்படியே இருந்திருக்க கூடாதானு இருக்கு..”
என்று ஆழ்ந்த குரலில் கூறியவன் முகம் சிரிப்பில் இருந்து நெகிழ்ச்சியாய் மாறியது.
இருவருக்கும் இடையில் இந்த சில வருடங்கள் இருந்த மனகசப்பை குறித்து பேசவே இல்லை. குன்னூர் வந்தபின்பு இயல்பாய் பேசிக் கொண்டாலும் இருவரின் உள்ளத்திலும் அதன் தாக்கம் இல்லாமல் இல்லை. இன்று எங்கோ தொடங்கிய பேச்சு அத்திசையில் சென்றது.
“அப்பவும் சரி இப்பவும் சரி… நீங்க அப்படியே தான் இருக்கீங்க… நான் தான் தவறிட்டேன்.. யாரை வேணாம்னு சொல்லியிருந்தாலும் உங்களையும் அப்படி நடத்தி இருக்க கூடாது.. என்னை நீங்க தேடி வந்தப்ப கூட உங்களை உதாசீனம் தானே படுத்துனேன்… தெரியல.. நிஜமாவே நான் மூர்க்கனா மாறிட்டேனோ என்னவோ..?
நீங்க கடைசியா என்னுட்ட கோபமா பேசிட்டு கிளம்பி வந்தது என்னை ரொம்ப பாதிச்சுது தாத்தா.. தப்பு பண்ணிட்டேனோனு தோணுச்சு.. அதனால் தான் கிளம்பி வந்தேன்.. ஆனால் இங்க வந்த அப்புறம் என்னோட சின்ன வயசு ஞாபகம் வரும்போது ரொம்ப ரொம்ப கில்டியா இருக்கு.. எனக்குன்னு நீங்க எப்பவும் இருந்திருக்கீங்க தாத்தா.. அப்பாவை விட அம்மாவைவிட நீங்க தான் இருந்திருக்கீங்க.. நானும் உங்களுக்கு லாயலா இருந்திருக்கணும்..”
மனதின் உணர்வுகளை கொட்டிய ஜோஷ்வாவின் கண்கள் லேசாய் கலங்கிட அவரை, “சாரி தாத்தா..” என சட்டென்று அணைத்து கொள்ளவும் திகைத்து தான் போனார் பெரியவர்.
தன் கேள்விக்கு கிண்டலாகவோ விளையாட்டாகவோ ஏதெனும் சொல்லுவான் என்று நினைத்திருந்தவருக்கு அவன் உணர்ச்சிகரமாய் பேசியதில் அவருக்கும் தடுமாற்றம் தான்.இப்படி எல்லாம் வருந்தி பேச கூடியவன் இல்லையே தன் பேரன்.
வெளிபடையாய் காட்டவில்லை என்றாலும் அவனின் உதாசீனத்தால் மனதில் ஓரத்தில் காயப்பட்டு இறுகியிருந்த உள்ளம் பனியாய் உருகியது.
தொண்டையை செருமி தன்னை சமன்படுத்தி மெல்ல அவன் தோளில் தட்டிக் கொடுத்த ரெமி,
“ஏன்டா.. என்னனென்னமோ பேசுற… பதினைச்சு வயசு குறைஞ்சா மாதிரி நீ நினைச்சால் உண்மையாவே குறைஞ்சுடுமா..? உனக்கு வயசு முப்பத்தி ரெண்டு தொட போகுது.. மறந்துடாத..”
என சற்று கேலியாய் பேச இமைகளை கொட்டி கலங்கிய விழிகளை மறைத்து உதடுகளை இழுத்து அக்மார்க் புன்னகையோடு அவரிடம் இருந்து பிரிந்தான்.
“அய்யோ தாத்தா.. வயசெல்லாம் சத்தமா சொல்லாத.. லேட் ட்வெண்டீஸ்ல இருந்தா தான் ஹீரோன்னு ஒத்துக்குவாங்க.. இல்லைன்னா அங்கிள் ஆகிடுவாங்க.. எனக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகல..”
என்றான் அவனும் தன்னை மீட்டவனாய்.. சத்தமாய் சிரித்த ரெமி அவனுக்கு வலிக்காமல் ஒரு அடி வைத்து,
“பண்றது எல்லாம் வில்லதனம்.. இதுல ஹீரோவாமாம்..”
என்றவர் பின் மீண்டும் சீரியஸாய்,
“நான் மட்டும்னு ஏன் சொல்ற ஜோஷ்வா.. உன் அம்மா உன்மேல எவ்வளவு பாசம் வைச்சு இருக்கா தெரியுமா..? ஜோசஃப் கல்யாணம் அப்போ உன்னை நினைச்சு தான் அவளுக்கு அவ்வளவு வருத்தம்.. நீ மட்டும் சரியா இருந்திருந்தால் ரெண்டு பேருக்கும் ஒரே சமயத்தில் கல்யாணம் முடிச்சு இருப்பேன்.. இப்ப சும்மா பேசவே வழியில்ல.. இதுல எங்க கல்யாணம் பேசுறதுனு ஒரே புலம்பல் தான்.. இப்ப கூட அவ என்னுட்ட சண்டை போடலேனா நான் உன்னை தேடி மும்பை வந்திருப்பேனா..? உன் அம்மாவை புரிஞ்சுக்கோ ஜோஷ்..” என தன் மகளுக்காய் பேரனிடம் வாதாடினார்.
“உங்களுட்ட சண்டை போட்ட நேரம்.. அவங்க புருஷனுட்ட சண்டையிட்டு எனக்காக பேசி இருந்தால் சந்தோஷப்பட்டு இருப்பேன் தாத்தா..”
என்று அவன் சுருக்கமாய் கூறினான். அதன் உள்ளே தான் எத்தனை அர்த்தங்கள்..!
அவர் எதுவும் சொல்லும்முன் அவன் அலைபேசி சிணுங்க ராமகிருஷ்ணனின் அழைப்பு என்றதும் அதனை ஏற்று மீண்டும் வெளியேவே சென்றுவிட்டான்.
“எப்படிடா இருக்க.. ஊருக்கு போன அப்புறம் ஒரு மெசேஜ் கூட இல்ல.. உன் லயனஸோடைய மலரும் நினைவுகளில் மூழ்கியாச்சா..??”
அழைப்பை ஏற்றதும் உற்சாகமாய் ராம் தொடங்க பதிலுக்கு சிரித்து,
“அதைவிட மாட்டியா நீ..” என்றவன்,
“என்ன விஷயமா போன் பண்ணினே.. அதை முதலில் சொல்லு ராம்..” என்று பேச்சை திருப்பினான்.
“எல்லாம் நமக்கு சாதகமான மேட்டர் தான்.. எஸ்.கே க்ரூப்ஸ் தானா இறங்கி வந்து நாம கொடுத்த ஆப்ஷனையே ஏத்துகிறேன்னு சொல்லிட்டாங்க..”
“க்ரேட்..” புன்னகை விரிய கூறியவன்
“என்னவாம் திடீர்னு..” என கேட்டான் ஒருவித நக்கலாய்.. இது தான் நடக்கும் என எதிர்பார்த்திருந்தது தானே..!
“சேனிட்டரி நேப்க்கின் பிஸ்னெஸைவிட அவங்களோட லெதர் இம்போர்ட் & எக்ஸ்போர்ட் பிஸ்னெஸ் ரொம்ப முக்கியம் இல்லையா..! அதுல நீ கைவைக்க போறன்னு சொல்லியிருந்த… இன்னையோட நாம கொடுத்த கெடு முடியபோகுது எனவும் அவங்களுக்கே லேசா பயம் வந்திருக்கும் போல… எங்க ப்ராடெக்ட்டுக்கு ஃபாரின் லைசன்ஸ் கேன்சல் ஆகிடுமோனு நினைச்சு இருப்பாங்க..” என சிரித்தான் ராம்.
“ஆனால் ஒரு கோரிக்கை மட்டும் வைச்சாங்க ஜோஷ்…”
“என்னானு..”
“கேஸ் நடத்த வேணாம்.. அதனால பேரு கெட்டு போயிடும்.. அது மத்த பிஸ்னெஸை பாதிக்கும்.. அதுக்கு பதிலா ‘சீவ்சாஃப்ட்’ கம்பெனி முழுசும் நீங்க சொல்ற ரேட்ல உங்களுட்டையே வித்துட்டுறோம்… அப்படினு ரொம்ப ரெக்வெஸ்ட் பண்ணி கேட்டாங்கடா.. என்ன செய்ய போற..?”
ராம் கூறியதனை கேட்டு,
“சீவ்சாஃப்ட்..’ ப்ராண்ட் மக்களிடையே நல்ல பேரில் தான் இருக்கு.. அதை நல்லதாவே மாத்திடலாம் இல்லையா..” என யோசனையாய் இழுத்தான்.
“ஆமாடா… நல்லா விசாரிச்சிட்டேன்.. லீகலாகவும் அதில் எந்த இஸூவும் இல்ல..”
என்று சொல்ல அதற்குள் தன் மனதில் வகுத்த யோசனைபடி ஜோஷ்,
“ஓகே ராம்.. கோர்ட்ல கேஸ்ஸை ப்ரோசீட் பண்ண வேண்டாம்… கம்பெனியை அவங்க விற்கட்டும்.. ஆனால் ஃபீனிக்ஸிற்கு வேண்டாம்.. நான் வேற ஏற்பாடு பண்ணிடுறேன்..”
என்று முடிவாய் கூற அதனை ராமும் ஏற்றுக் கொண்டான்.
“ஒவ்வொரு தடவையும் நாம எடுத்த ப்ராஜெக்ட் முடிக்கும்போது எவ்வளவு திருப்தியா இருக்கு தெரியுமா ஜோஷ்… முதலில் கூட அடிதடி ப்ளாக்மெய்ல் மாதிரி பண்றோமேனு ஃபீல் ஆச்சு.. ஆனால் அதன் நலனை பார்க்கும்போது முழுக்க முழுக்க ஹேப்பி தான்..” என்றவன்,
“இனி அடுத்து என்ன…” என்று உற்சாகமாய் கேட்க சில நொடிகள் மௌனித்த ஜோஷ்வா,
“இது தான் கடைசி ராம்..” என்று தீர்க்கமாய் சொல்ல மறுமுனையில் ராமகிருஷணன் திகைத்தான்.
“என்னடா சொல்ற.. ஏன் என்னாச்சு..”
“பிரச்சனை எதுவும் இல்ல.. ‘சீவ்சாஃப்ட்..’ தான் கடைசினு இந்த ப்ராஜெக்டை கையில் எடுக்கும்போதே நான் முடிவோட தான் இருந்தேன்..”
“ஆனால்.. இது.. இது இத்தோட முடிய கூடிய விஷயம் இல்லையே ஜோஷ்..”
“கண்டிப்பா இல்லை தான்.. ஆனால் உன்னோட பாதையோ என்னோட பாதையோ இது இல்ல ராம்.. நான் பிஸ்னெஸ் வந்தது இதுக்காக இல்லைனு உனக்கு தெரியும்.. எதிர்பாராமல் திடீரென உதித்த யோசனையும் மாறிய வழியும் தான் இது… ஆனால் இதையே தொடர்கதையாக்க முடியாது ராம்… நான் வந்த நோக்கம் என்னவோ அது நிறைவேறும் நாள் ரொம்ப கிட்ட நெருங்கிடுச்சு.. என் திட்டப்படி அத்தோட எல்லாத்தையும் முடிச்சுக்கணும்னு முடிவு பண்ணிட்டேன்.. அதன் பொருட்டுதான் இப்ப சீவ்சாப்ட் கூட வேணாம்னு சொன்னது..”
என்று அவன் விளக்கியதில் உட்பொருளை ராமகிருஷ்ணனிற்கும் உணர்ந்தான்.
“எனக்கு புரியுது ஜோஷ்.. ஆனால் இப்படி பாதியிலே விடுறோமேன்னு தான் ஒரு மாதிரி இருக்கு..”
என்று அவன் வருந்தவும்,
“உனக்கு ஒரு விஷயத்தை ஞாபகப்படுத்துறேன் ராம்..
வியாபாத்தில் கலப்படமும் தரமின்மையும் மட்டும் இல்ல லஞ்சம்,ப்ளாக் மணி,ரேசிசம் இப்படி சில விஷயங்களை ஒன்னு ரெண்டு பேர் மட்டும் நினைச்சு மொத்தமா அழிச்சிட முடியாது.. அது சமூக மாற்றம்.. ஒவ்வொருத்தன் மனசிலும் அந்த எண்ணம் வந்தால் மட்டும் தான் அது சாத்தியபடும்… மொத்தமா அழிச்சுட்டு தான் ஓய்வோம்னு நினைச்சால் நம்ம ஆயுசுக்கும் அது முடியாதுடா… இவன் போனால் இன்னொருத்தன்னு வந்துட்டே தான் இருப்பான்… நம்மால முடிஞ்ச அளவு களை எடுத்தோம்.. அட்லீஸ்ட் பேராசை வைச்சு அப்படி செய்ய நினைகிறவன் கூட ‘எங்க நம்ம கம்பெனியையும் இதே மாதிரி ஒன்னும் இல்லாம ஆகிடுவாங்களோ..’நு கண்டிப்பா பயப்படுவான்… அந்த பயமே நமக்கு கிடைச்ச சின்ன வெற்றி தான்.. அது போதுனு நினைக்கிறேன் ராம்..”
ஜோஷ்வா நிதானமாய் கொடுத்த விளக்கமும் நூறு சதவிதம் உண்மை தான் என்று அவனுக்கும் புரிய குழம்பிய மனமும் தெளிவுற்றது.
“ம்ஹூம்.. இனி என்ன செய்வேன் நான்..”
என்று சலிப்பு போல் விளையாட்டாய் ராம் கேட்க பதிலுக்கு சிரித்தவன்,
“யப்பா லாயரே.. உன் க்ளைன்ஸ் மேலையும் கொஞ்சம் கருணை காட்டுப்பா… உன் ஜூனியர்ஸூம் பாவம்… தூங்கிட்டு இருக்க கேஸ்கட் எல்லாத்தையும் தூசி தட்டு போ..” என்று சொல்லி அழைப்பை வைத்தான்.
மிகவும் நிறைவான மனநிலையில் இருந்தான்.
முதலில் தன்னை பற்றி ஜென்சி அடுக்கிய விஷயங்களை பார்க்கும்போது பல நாளாகவே தன்னை பற்றி அவள் தேடியுள்ளாள் என்பது புரிய அவள் தன்னை ஒரு ஆளாகவே மதிக்கவில்லை என்று வருந்தியிருந்த மனதிற்கு மயிலிறகால் வருடியதுபோல் இருந்தது. அடுத்து தாத்தாவிடம் மனம்விட்டு மன்னிப்பு கேட்டதும், தற்போது ராம் உடனான உரையாடல் என எல்லாமே அவனுக்கு முழு நிறைவை கொடுத்தது. ஜென்சி கோபித்து கொண்டு போனது மட்டும் உறுத்தலாய் இருக்க,
‘வழக்கம் போல விளையாட்டாய் சீண்ட நினைச்சேன்.. உண்மையாவே செம்ம காண்டாகிட்டா… எப்படி சமாதானப்படுத்துறது.. இன்னும் சாப்பிட வேற இல்ல.. என்மேல இருக்க கோபத்தில் சாப்பிட வரலைனா..’
தன் போக்கில் சிந்தித்து கொண்டிருந்தவனுக்கு சட்டென்று தோன்றியது.
‘நாமே சமைத்தால் என்ன..?? யெஸ்.. ரொம்ப நாள் ஆகிடுச்சு… இன்னைக்கு இருக்க ஹேப்பி மூட்ல சமைச்சால் ரொம்ப நல்லா இருக்கும்..’
மணிக்கட்டை திருப்பி நேரம் பார்த்தவன் உற்சாகம் குமிழிட உள்ளே வந்தான்.
தன் அறைக்கு சென்று குளித்து வேறு உடைக்கு மாறியவன் கிட்சன் சென்று அங்கே என்னென்ன இருக்கு.. என்ன செயலாம் என்ற ஆராய்ந்து வேலை தொடங்கினான்.
தன் எஸ்டேட் மேலாளரிடம் போனில் வேலை தொடர்பாக பேசி கொண்டிருந்த ரெமிஜியஸ் இவன் செயல்களை கவனித்தபின் அதனை துண்டித்துவிட்டு,
“என்னடா கிட்சன்ல உருட்டுற.. சொல்ல மறந்துட்டேன்.. ராஜம்மாக்கு உடம்பு சரியில்லைனு இன்னைக்கு வர முடியலனு சொன்னுச்சு.. நீங்க வெளியே சாப்பிட்டு இருப்பீங்கன்னு நினைச்சேன்.. இன்னும் இல்லையா.. வெளியே ஆர்டர் பண்ணிக்கலாம் விடு..” என்று ஜோஷை அணுகி படபடத்தார்.
“ஆர்டர்லாம் பண்ண வேண்டாம்.. நானே செஞ்சிடுவேன்.. நீங்க உங்க வேலையை முடிச்சுட்டு வாங்க..”
என்று அவரை அனுப்பிவிட, “உனக்கு சமைக்க தெரியுமா..?? இல்லை எங்களை வைச்சு டெஸ்ட் பண்ண பார்க்கறீயா..” என்றார் அவர்.
“யாரை பார்த்து என்ன கேட்டீங்க தாத்தா.. குக்கிங் எனக்கு ஹாப்பி & ஸ்ரெஸ்பஸ்டர்… சாப்பிட்டு பார்த்துட்டு பேசுங்க.. இப்ப இடைத்தை காலி பண்ணுங்க..”
“ரொம்ப பண்றடா டேய்..”
என்றபடி கிட்சனை விட்டு வெளியேறினார்.
அப்பொழுது தான் ப்ரெஷ்னப் அகி வந்த ஜென்சி, புலம்பியபடி வந்து டைனிங் டேபிள் அமர்ந்த ரெமியிடம் என்னவென்று விசாரித்தாள்.
“இன்னைக்கு ஜோஷ் தான் சமைக்க போறானாம்.. தீயா வேலை செய்யிறான்.. பார்க்கிற எனக்கு தான் பக்குனு இருக்கு…”
என்று அவர் புலம்ப வாய்விட்டு சிரித்தவள்
“பயப்படாதீங்க தாத்தா.. ஜோஷ் அருமையா சமைப்பான்…”
என்று உறுதி கொடுக்கவும்,
“அப்படியா.. எப்படி சொல்ற..”
என ஆச்சரியமாய் பார்த்தார்.
“உண்மை தான் தாத்தா.. அவன் செஞ்சு கொடுத்த ஷவர்மா சாப்பிட்டு என் தங்கச்சி அவன் ஃபேன் ஆகிட்டானா பார்த்துகோங்க..”
“ஹோ..!! இன்னும் என்னவெல்லாம் இந்த பையன் தனக்குள்ள வைச்சு இருக்கான் தெரியலையே..”
என ஆர்வமாய் சொன்னவர் பின் நினைவு வந்தவராய், “இப்ப வரை எல்லாம் நல்லா தான் போயிட்டு இருக்கு.. நாளைக்கும் இதே மாறி சந்தோஷமா போகுமா.. இல்ல ரணகளமா போகுமா தெரியலையே..”
என்று கிட்சனில் ஒரு பார்வை வைத்து பெருமூச்சோடு சொல்ல,
“ஏன்.. நாளைக்கு என்ன தாத்தா..”
என விழித்தாள் ஜென்சி.
“ப்ரியா, மாப்ள,ஜோசஃப்,அனீ எல்லாரும் இங்க வராங்க… ஸ்கூல் ஃபங்ஷன்காக..”
‘ஆமால..’
ஜோசஃப் ஏற்கெனவே சொல்லி இருந்தான் தான்… அவளுக்கு தான் மறந்துவிட்டது.
“ஜோஷ் வீட்டை விட்டு போனதுக்கு அப்புறம் அப்பாவும் மகனும் இப்ப தான் நேருக்கு நேர் பார்த்துக்க போறாங்க… நான் சொல்லலேனாலும் அவங்க வருவாங்கனு ஜோஷ் யூகிச்சு இருப்பான் தான்.. ஆனால் மாப்ளைக்கு ஜோஷ்வா இங்க இருக்கிறது தெரியவே தெரியாது…” சற்று கவலை தெரிந்தது அவர் குரலில்..
“எதாவது பெரிய பிரச்சனையாகும்னு நினைக்கிறீங்களா..?”
“இல்ல ம்மா… இந்த சந்திப்பு நிகழனும்னு தான் நினைச்சேன்.. எப்படியாவது ரெண்டு பேருக்கும் உள்ள மனஸ்தாபம் சரியாகணும்.. அதுக்கு முதல் அடியா இருக்கும்னு நினைச்சேன்.. ஆனால் இவன் கொஞ்ச நேரம் முன்னாடி என்கிட்ட சொன்னதை வைச்சு பார்த்தால் இவனே பெரிய பிரச்சனை பண்ணுவான் போல… இரண்டு நாள் ஒரே வீட்ல இருக்க போறாங்க.. அதான் என்ன நடக்க போகுதோன்னு பதட்டமா இருக்கு..”
ஜென்சிக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அவர் சொல்வதும் உண்மை தானே..!! அவன் அன்னையிடம் பேசும் முறையை அவளே பார்த்து இருக்கிறாளே..!!
மேலும் அவரே தொடர்ந்தார்,
“என்னால தான் ஜோஷ் இப்படி மாறிட்டானு மாப்பிள்ளைக்கு ஒரு கோபம்.. அவரிடமே இருந்திருந்தா அவனை வழிக்கு கொண்டு வந்து இருப்பாராம்.. என்னிடம் விட்டதும் தான் அவன் தான்தோன்றியா இப்படி ஆக காரணம்னு நினைக்கிறார்..
ஆனால் என்னை பொறுத்தவரை ஜோஷ்வா வித்தியாசமானவன் தான்.. ஆனால் தப்பானவன் இல்ல ஜென்சி.. அதனால எப்பவுமே அவன் செயல்களுக்கு நான் முட்டுகட்டையா இருந்தது இல்ல.. அப்படி நான் விட்டதுனால தான் இப்ப இவன் யார் பேச்சையும் கேட்காத நிலைல இருக்கானோ என்னவோ.. எப்படியாவது அவங்களுக்குள்ள இருக்க வெறுப்பு மறைஞ்சு ரெண்டு பேரும் சேர்ந்திடனும் அது தான் இப்போதைக்கு என் ஒரே ஆசை ஜென்சி..”
என்று சொன்னவரிடம் அது நடக்க வேண்டுமே என்ற தவிப்பு நிரம்பவே இருந்தது.
“நல்லதே நடக்கும் தாத்தா..”
என்று அவள் ஆறுதலாய் புன்னகைக்கவும் அச்சமயம்,
“என்ன நடக்கணும்…”
என கேட்டபடி கிட்சன் வாயிலில் கைகட்டி நின்றான் ஜோஷ்வா.