அப்போது கதவை தட்டினார் மோகன். கதவை திறந்தாள் நந்தினி.
தன்னுடைய வீட்டில் தான் வந்தவுடன் நந்தினி வந்து கதவை திறப்பதை எதுவோ கனவு போல பார்த்து கொண்டிருந்தார் மோகன்.
அவர் பார்வைக்கு பதில் பார்வை கொடுக்க முடியாமல் நகர பார்த்த நந்தினியை அவர் குரல் தடுத்து நிறுத்தியது.
“இங்க நீ வருவேன்னு நான் நினைக்கவே இல்லை. தேங்க்ஸ் நந்தினி. உன்னை இங்க பாக்குறது எனக்கு சந்தோசமா இருக்கு”
“பொய் சொல்லாதீங்க. நான் வந்தது உங்களுக்கு எப்படி பிடிக்கும்? பிடிச்சிருக்காது. மித்ராவுக்காக தான அமைதியா இருக்கீங்க?”, என்று சோகம் கலந்த குரலில் சொன்னாள் நந்தினி.
“அப்படி எல்லாம் இல்லை நந்தினி. நீ எதுக்கு இப்படி நினைக்கிற?”
“பின்ன ஊருக்கு வந்ததில் இருந்து இப்ப வரைக்கும், என்கிட்ட எப்படி இருக்க அப்படினு ஒரு வார்த்தை கேட்டீங்களா?”
“எப்படி கேக்க முடியும் நந்தினி? எப்படி இருக்காங்கனு தெரியாதவங்க கிட்ட அப்படி கேக்கலாம். ஆனா என்னால வாழ்க்கையை தொலைச்சிட்டு நிக்குற உன்கிட்ட எப்படி இருக்கேன்னு கேட்டா அது பாவம் மா”
“இப்ப எதுக்கு பழசை எல்லாம் பேசிகிட்டு?”
“ஹ்ம்ம் இந்தா, இதுல சாப்பாடு இருக்கு. நீயும், மித்ராவும் சாப்பிடுங்க”
அதை வாங்கி கொண்ட நந்தினி “குளிச்சிட்டு வாங்க. சேந்து சாப்பிடலாம்”, என்று சொல்லி விட்டு அடுப்படிக்கு சென்றாள்.
அதை பிரமிப்பான ஒரு பார்வை பார்த்து விட்டு தன்னுடைய அறைக்குள் சென்றார் மோகன்.
மூன்று பேரும் சேர்ந்து அமர்ந்து சாப்பிட்டது மூவருக்குமே மனதுக்கு இதமாக இருந்தது.
மித்ரா அவர்களை அமைதியாக இருக்க விடாமல், அவளும் அப்பாவும் இருக்கும் போது நடந்த விஷயங்களை எதாவது நினைவு படுத்தி சிரிப்பை உண்டாக்கினாள்.
அடுத்து அங்கு எல்லா வேலையும் நடந்தது. ஒரு வாரம் விற்பனையை பார்க்காததால் கடைக்கு செல்ல ஆரம்பித்தார் மோகன்.
“புது பொருள் எல்லாம் இப்ப வாங்க வேண்டாம் பா. கல்யாணம் முடிஞ்ச அப்புறம் எல்லாம் புது சரக்கு இறக்கிக்கலாம்”, என்று சொல்லி விட்டாள் மித்ரா.
அடுத்து மித்ரா, நந்தினி, கீதா மூவரும் போய் தேவையான பொருள் எல்லாம் வாங்கினார்கள்.
பத்திரிகை அடித்து ஊருக்கு அனுப்பி விட்டு இங்க இருக்கும் கொஞ்சம் தெரிஞ்சவங்களுக்கும் கொடுத்தார் மோகன்.
கல்யாணத்துக்கு மூன்று நாள்கள் இருக்கும் போது கீதாவை கல்யாணத்துக்கு வர சொல்லி விட்டு மூவரும் ஊருக்கு கிளம்பினார்கள்.
போகும் போது யாருக்கும் தெரியாமல் அந்த பொருளை எடுத்து மித்ரா கையில் கொடுத்தாள் கீதா. அதை யாருக்கும் தெரியாமல் தன்னுடைய உடைக்கு அடியில் மறைத்து வைத்தாள் மித்ரா.
ஊரில் கல்யாணம் களை கட்டியது. மிகவும் சந்தோசத்துடன் அனைவரும் எதிர் பார்த்த கல்யாண நாளும் வந்தது,
கம்பீரமாக, அழகான ஆண்மகனாக மணமேடையில் அமர்ந்திருந்தான் பார்த்திபன். அவனுடைய நண்பர்கள் அருகில் இருந்து அவனை ஓட்டி கொண்டிருந்தார்கள். மகேந்திரனும், மோகனும் பட்டு வேட்டி சட்டையில், சந்தோசமாக பேசி கொண்டிருந்தார்கள். நந்தினி, மித்ராவை அலங்கரித்து கொண்டிருந்தாள்.
பட்டு புடவை அணிந்து “இன்னைக்கு என்ன நடக்கும்?”, கண்களில் எதிர்பார்ப்புடன் மேடையவே பார்த்து கொண்டிருந்தாள் செண்பக வள்ளி பாட்டி.
அங்கும் இங்கும் அலைந்து வேலை செய்து கொண்டிருந்தாள் பார்வதி.
அலங்காரம் முடிந்து மித்ராவுக்கு திஷ்டி கழித்த நந்தினி “அழகா இருக்க டா மித்ரா. பார்த்தி கொடுத்து வச்சவன்”, என்றாள்.
அழகாக புன்னகைத்தாள் மித்ரா.
“சரி இரு. ஐயர் கூப்பிட்ட பிறகு போகலாம்”, என்று சொல்லி விட்டு நந்தினி வெளியே போன பின்னர் அவள் பையில் இருந்த அந்த பொருளை எடுத்து தன் இடுப்பில் சொருகி கொண்டாள் மித்ரா.
மணமேடைக்கு அழகு சிலை போல அழைத்து வர பட்டாள் மித்ரா.
இத்தனை நாள் சுடிதார், டீஷர்ட் என்ற அணிந்து சுற்றிக் கொண்டிருந்தவள் முதல் முதலில் புடவை அணிந்து கண் முன் வர மெய் மறந்து அவளை பார்த்தான் பார்த்திபன்.
“பழி வாங்க கல்யாணம் பண்றேன்னு சொன்னவனோட பார்வையை பாருங்க டா”, என்று சிரித்தான் ராசு குட்டி.
மணமேடையில் அமர்ந்து ஐயர் சொல் படி அனைவரையும் கும்பிட்டவள் நேராக அமர்ந்திருந்த வள்ளி பாட்டியை பார்த்து கண்களை மூடி திறந்தாள்.
கண்களில் ஆனந்த கண்ணீர் துளிர்த்தது வள்ளி பாட்டிக்கு.
பட்டு புடவையில் கம்பீரமாக இருந்த நந்தினியை பார்த்த மோகன் “அவளை பாக்காதே”, என்று தனக்குள்ளே சொல்லி கொண்டு பார்வையை விலக்கினார்.
தாலி ஆசீர்வாதம் வாங்க கொடுக்க பட்ட போது, “இப்ப நான் கல்யாணம் வேண்டாம்னு சொல்ல போறேன். நான் சொல்ற எல்லாத்துக்கும் நீங்க ஆமா சொல்லணும்”, என்று தலையை திருப்பாமல் பார்த்திபனிடம் சொன்னாள் மித்ரா.
திடீரென்று அவள் பேசியதால் புரியாமல் அவளை திரும்பி பார்த்தான்.
அவனை திரும்பி பார்த்தவள் மறுபடியும் தலையை திருப்பி விட்டு “இப்ப கல்யாணம் வேண்டாம்னு சொல்ல போறேன். கோப படாம நான் சொல்றதுக்கு ஆமான்னு மண்டையை ஆட்டுங்கன்னு சொன்னேன்”, என்று மறுபடியும் சொன்னாள்.
அதிர்ச்சியில் உறைந்தான் பார்த்திபன். அவன் என்ன என்று யோசிக்கும் முன்னே தாலியை அவன் கையில் ஐயர் கொடுக்கும் போது, “எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்”, என்று சொல்லி கொண்டே எழுந்து நின்றாள் மித்ரா.
அடுத்த நிமிடம் மேளம் எல்லாம் நிறுத்தப்பட்டு, கூட்டத்திடையே சல சலப்பு கேட்டது.
“என்ன ஆச்சு மித்ரா?”, என்ற பதறிய படியே அவள் அருகில் சென்றாள் பார்வதி.
“எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்னு சொன்னேன் அத்தை”
அடுத்த நொடி அவள் கன்னத்தில் ஒரு அடி வைத்தாள் பார்வதி.
வந்த எரிச்சலை அடக்கி கொண்டு எழுந்து நின்றான் பார்த்திபன்.
“அம்மாடி மித்ரா என்ன ஆச்சு டா?”, என்று கேட்டு கொண்டே அவள் அருகில் வந்தார்கள் மோகனும், மகேந்திரனும்.
“எல்லாரும் கேட்டுக்கோங்க. எனக்கும், அத்தானுக்கும் கல்யாணம் வேண்டாம்”, என்று மறுபடியும் சொன்னாள்.
“இவ என்ன என்னையும் கூட்டு சேக்குறா?”, என்று நினைத்து கொண்டு குழப்பமாய் அவளை பார்த்தான்.
“புரியுற மாதிரி சொல்லு மித்ரா. நீ விருப்ப பட்டு தான கல்யாணத்துக்கு சம்மதம் சொன்ன? அப்புறம் என்ன மா? உனக்கு பார்த்திபனை பிடிக்கலையா?”, என்று கேட்டார் மகேந்திரன்.
இந்த நிமிடத்தை வாழ்க்கையின் அவமானமாக உணர்ந்தான் பார்த்திபன்.
“எனக்கு அத்தானை பிடிக்காதுன்னு நான் எப்ப சொன்னேன்? எனக்கு அவரை தான் பிடிக்கும். அவருக்கும் என்னை தான் பிடிக்கும். நாங்க ரெண்டு பேரும் வேற யாரையுமே கல்யாணம் செய்ய மாட்டோம்”, என்று சொன்னாள் மித்ரா.
இப்போது அவனே விழித்தான். “இவ என்ன தான் செய்றா? இப்படி பேசுறவ எதுக்கு கல்யாணம் வேண்டாம்னு சொல்றா. இதுல என்னை தவிர யாரையும் கல்யாணம் செய்ய மாட்டேன்னு உருக வேற செய்றா? ஒரு வேளை நான் இவளை பழி வாங்க தான் கல்யாணம் செய்றேன்னு தெரிஞ்சிருக்குமோ?”, என்று நினைத்து கொண்டு அவளை பார்த்தான்.
எல்லாருக்குமே அதே குழப்பம் தான். “அவனை பிடிச்சிருக்குன்னு சொன்னவ எதுக்கு கல்யாணம் வேண்டாம்னு சொல்றா?”, என்று நினைத்து அவள் முகத்தை அனைவரும் பார்த்தார்கள்.
“என்ன மித்ரா சொல்ற? ஏன் இப்படி பண்ற? ரெண்டு பேருக்கும் பிடிச்சிருக்கு தான? அப்புறம் ஏன் இப்படி பிரச்சனை பண்ணிட்டு இருக்க? என்ன டா பார்த்தி இது? நீயே அவ கிட்ட கேளு டா”, என்று சொன்னாள் பார்வதி.
“அத்தான் கிட்ட ஏன் கேக்குறீங்க அத்தை? அதை நானே சொல்றேன். இப்ப இந்த கல்யாணம் நடக்கணும்னா, இப்ப இந்த நிமிஷம் நந்தினி அம்மாவுக்கும், எங்க அப்பாவுக்கும் கல்யாணம் நடக்குனும்”, என்றாள் மித்ரா.
அடுத்த நிமிடம் மோகன் மற்றும் நந்தினி முகம் இருண்டது. அதே நேரம் பாட்டி, பார்வதி, மகேந்திரன் மற்றும் பார்த்திபன் முகம் ஒளிர்ந்தது.
“இவ இதுக்கு தான் இப்படி சொன்னாளா? இது ஏன் எனக்கு தோணலை”, என்று நினைத்து கொண்டு மித்ராவை பார்த்து காதல் பார்வை வீசினான் பார்த்திபன்.
“மித்ரா உனக்கு செல்லம் கொடுத்து வளத்தது தப்பா போச்சு. அடிச்சு வளத்துருக்கணும். எவ்வளவு தைரியம் இருந்தா அடுத்தவங்க மனசு புரியாம பேசுவ?”, என்று கேட்டு ஒரு அடி வைத்தார் மோகன்.
“அவளை எதுக்கு மாமா அடிக்கிறீங்க? என்னோட முடிவும் இது தான். உங்க கல்யாணம் நடந்தா தான் எங்க கல்யாணம் நடக்கும்”, என்றான் பார்த்திபன்.
முதல் முறை தன்னுடைய மகனை நினைத்து பெருமையாக மீசையை முறுக்கினார் மகேந்திரன். அதை அவன் காதில் சொல்லவும் செய்தார்.
“என் வாழ்க்கைல உன்னை பெத்ததுக்கு வருத்த பட்டுட்டு இருந்தேன் டா பார்த்தி. ஆனா இன்னைக்கு உன்னை என் மகன்னு சொல்றதுக்கு எனக்கு பெருமையா இருக்கு”, என்று அவன் காதில் சொன்னார் மகேந்திரன்.
தன் அப்பாவிடம் நல்ல பெயர் வாங்கி கொடுத்த அவளை காதலுடன் பார்த்தான் பார்த்திபன்.
பார்வதி கண்களில் ஆனந்த கண்ணீர் வந்தது. தலையை திருப்பி தன் அத்தையை பார்த்தாள்.
அவள் பார்வையை உணர்ந்து சிரித்தார் வள்ளி பாட்டி.
“பார்த்தி இப்படி எல்லாம் விளையாடாத பார்த்தி”, என்று அழுது கொண்டே சொன்னாள் நந்தினி.
“இல்லை அத்தை எங்க முடிவு இது தான்”, என்று மித்ராவுடன் கூட்டு சேர்ந்து கொண்டான் பார்த்திபன்.
“என்ன பார்த்தி நீயும் அவ கூட சேந்துக்கிட்டு. என்னோட பொண்ணுக்கு கல்யாணம். இந்த வயசுல எனக்கு கல்யாணம்னு சொல்ற? என்னை விரும்பிட்டு இங்க இருக்குற ஊரு ஜனங்க முன்னாடி நந்தினியை கல்யாண பொண்ணா நிக்க வச்சிட்டு, இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டு அவ வாழ்க்கையை கெடுத்தவன் நான். இப்ப போய் ரெண்டு பேரும் இப்படி பேசுனா நந்தினி மனசு என்ன பாடு படும்னு யோசிச்சீங்களா?”, என்று கேட்டார் மோகன்.
“அப்பா உங்களுக்கு நாங்க கல்யாணம் பண்ணி வைக்க நினைக்கிறது எந்த தப்பும் இல்லை. இங்க இருக்குறவங்க எல்லாருக்கும் உங்க ரெண்டு பேரோட கதை தெரியும். இப்ப நீங்க கடைசி காலத்துல இருக்கீங்க. அம்மாவும் இறந்து போய்ட்டாங்க. எனக்கு நீங்க நந்தினி அம்மாவை விரும்புன விஷயம் முன்னாடியே தெரிஞ்சிருந்தா நான் முன்னாடியே சேத்து வச்சிருப்பேன். ஆனா எனக்கு இப்ப தான் தெரிஞ்சது. உங்க ரெண்டு பேரையும் சேத்து வைக்க தான் நான் இந்த ஊருக்கே வந்தேன்”, என்றாள் மித்ரா.
“இப்படி எல்லாம் பேசாத மித்ரா. எல்லாரும் எங்களை அசிங்கமா நினைப்பாங்க. இந்த வயசுல கல்யாணம் செய்றது அதுவும் பொண்ணோட கல்யாணம் அன்னைக்கு அப்பாவுக்கு கல்யாணம்னா?”
“அப்பா அசிங்கமா நினைக்க என்ன இருக்கு? இந்த வயசுல ஒருத்தொருக்கொருத்தர் துணையா இருக்கணும்னு தான் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைக்கிறேன். அசிங்கமா நினைக்க என்ன இருக்கு? பெத்தவங்க பிள்ளைங்களுக்கு அறுபதாம் கல்யாணம் பண்ணி வைப்பாங்க. நாங்க அம்பதாவது கல்யாணம் பண்ணி வைக்கிறோம்னு நினைச்சுக்கோங்க. அப்புறம் நம்ம சொந்தம் என்ன நினைப்பாங்கன்னு தான? இருங்க இப்ப அவங்க கிட்டயே கேக்குறேன்”, என்று சொல்லி மேடையில் இருந்து இறங்கி கீழே அமர்ந்திருந்த சொந்தங்கள் முன்பு சென்றாள் மித்ரா.
“எங்க அப்பாவும், நந்தினி அம்மாவும் விரும்புனது, அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் வரைக்கும் வந்து, நின்னு அப்புறம் அம்மா அவரையே நினைச்சு கல்யாணம் வேண்டாம்னு இருந்தது உங்க எல்லாருக்கும் தெரியும். எங்க அப்பாவும், நந்தினி அம்மாவை வேணும்னு ஏமாத்தல. என்னோட நிஜ அம்மாவை காப்பாத்த தான் கல்யாணம் செஞ்சாங்க. ஆனா எனக்கு பத்து வயசு இருக்கும் போதே எங்க அம்மா இறந்துட்டாங்க. ஆனா எங்க அப்பா மனசுலயும், நந்தினி அம்மா மனசுலயும் இருக்குற அந்த அன்பு இன்னும் அப்படியே இருக்கு. எங்களோட சொந்தகாரங்க நீங்க தான். நான் அவங்களுக்கு கல்யாணம் செஞ்சு வைக்கணும்னு நினைக்கிறேன். அவங்களை நீங்க தப்பா நினைப்பீங்களா? உண்மையான அன்பு இருக்குற அவங்க ரெண்டு பேரும் இன்னும் இருக்குற மீதி காலத்துல ஒருத்தொருக்கொருத்தர் துணையா இருக்கட்டுமேனு நினைக்கிறேன். இதுக்கான முடிவை நீங்களே சொல்லுங்க”, என்றாள்.
அந்த கூட்டத்தில் இருந்த ஒரு பாட்டி “நீ சொல்றது தான் மா சரி. நீ எடுத்துருக்குற முடிவு தான் சரி மா. உன்னை மகளா பெத்ததுக்கு உன் அப்பன் புண்ணியம் செஞ்சிருக்கணும்”, என்று சொன்னாள்.
இன்னொரு அம்மாவும் “விரும்புறவனை இழந்து நந்தினி இத்தனை வருஷம் தனிமைல வாழ்ந்துட்டு இருந்தா. அவளை பாக்கும் போது எல்லாம் நாங்க ரொம்ப வருத்த பட்டு பேசிருக்கோம். இப்ப அவளுக்கு ஒரு நல்லதுன்னா நாங்க ஏன் மா தப்பா நினைக்க போறோம். இந்த கல்யாணம் நடக்கணும் மா”, என்று சொன்னாள்.
இன்னும் பலரும் அதையே தான் சொன்னார்கள்.
“பாத்தீங்களா அப்பா? நல்லது நடந்தா யாருமே தப்பா பேச மாட்டாங்க பா. அது நல்லதா கெட்டதான்னு நாம புரிய வைக்கிறதுல தான் இருக்கு. சரின்னு சொல்லுங்க பா. அம்மா நீங்களும் சரின்னு சொல்லுங்க மா”
சிறிது நேரத்தில் “நந்தினிக்கு சம்மதம்னா எனக்கு சம்மதம்”, என்று சொன்னார் மோகன்.
“அம்மா, அப்பா சரின்னு சொல்லிட்டார். நீங்களும் சொல்லுங்க மா”
“சரி மித்ரா. எனக்கும் சம்மதம். ஆனா இப்ப உங்க கல்யாணம் முடியட்டும். கொஞ்ச நாள் கழிச்சு எங்க கல்யாணம் நடக்கட்டும். எனக்கும் சம்மதம்”, என்றாள் நந்தினி.
“ஆமா மித்ரா. நந்தினி சொல்றது தான் சரி. இப்ப நீ மணமேடையில் உக்காரு. அப்புறம் எங்களை பத்தி பேசிக்கலாம்”, என்றார் மோகன்.
“அதெல்லாம் கிடையாது. எனக்கு நான் நினைச்சது நடக்கணும். என்னை பத்தி உங்களுக்கு தெரியும்ல? இப்பவே நடக்கணும்”
“இல்லை மா. இப்ப தாலி எல்லாம் எங்க வாங்குவ?”
“நான் முன்னாடியே வாங்கி வச்சிட்டேன் பா”, என்று சொல்லி கொண்டே இடுப்பில் இருந்து தாலியை எடுத்தாள் மித்ரா.
எல்லாரும் அதிர்ச்சியாக பார்த்தார்கள்.
வேறு வழியில்லாமல் மோகனும், நந்தினியும் மண மேடையில் அமர்ந்தார்கள்.
கண்குளிர அனைவரும் பார்த்தார்கள். வள்ளி பாட்டி மற்றும் பார்வதி கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் அருவியாக ஓடியது.
காதல் தொடரும்….